துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.7.11

’தேவந்தி’யின் கணம்...


திரு ஒய்.எஸ்.ராஜன்,சி.டி.சனத்குமார்,தமிழ்ச்சங்கத் தலைவர் 
ஆகியோருடன் மேதகு அப்துல் கலாம்

வாழ்வின் சில கணங்கள் ..என்றென்றும் நினைவுகூரத்தக்க அபூர்வமான வினாடிகளாக வாய்த்து மனதுக்குள் நிலைத்து விடுகின்றன.
அவ்வாறான ஒரு தருணம்...வெள்ளி( 29/7/11) மாலை மேதகு அப்துல் கலாம் அவர்கள் ‘தேவந்தி’ நூலை வெளியிட்ட கணம்...!


சுப்புடு நினைவாய் வடக்கு வாசல் நிகழ்த்திய இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விமரிசகர் சுப்புடு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திரு அப்துல் கலாம் அவர்கள்,அதே அரங்கில் வடக்கு வாசல் பதிப்பக நூல்களை வெளியிட்டதோடு ஒவ்வொரு நூல் குறித்தும் சில குறிப்புக்களைத் தன் உரையில் சேர்த்துப் பேசியது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிட்ட நபர்களைக் கௌரவிக்க வேண்டும் என எண்ணும் அந்த அந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.


எனது ‘தேவந்தி’தொகுப்பை வெளியிட்ட அவரிடம் அருகில் சென்று பிரதியைப் பெற்றபோது...
‘இராமனைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா...’
என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்..
தேவந்தி நூல் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் திரு அப்துல் கலாம் .
அருகில் வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்


தொகுப்பில் இரு கதைகள் இராமன் சார்ந்தவை என்பதால் எந்தக் கதை பற்றி அவர் குறிப்பிடுகிறார் என்பதில் எனக்கு ஏற்பட்ட குழப்பம்,
அவர் உரை நிகழ்த்தியபோதுதான் தீர்ந்தது..
அரச பதவி கையில் இருந்தும் சமூகச்சமநீதி வழங்க அதைப் பயன்படுத்தத் தவறிய இராமனைக் குறித்து 
‘சாத்திரம் அன்று சதி!’’(செம்மலர் இதழில் வெளிவந்த சிறுகதை)
என்ற கதையில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்..
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த திரு கலாம் குறிப்பாக அதை மேற்கோள் காட்டிச் சற்று விரிவாகவே பேசியபோது...
’அந்தத் தொகுப்பில் எத்தனையோ கதைகள் இருக்கும்போது மிகச் சரியாக அந்தக் குறிப்பிட்ட கதை அவர் கண்ணில் பட்டது எப்படி ’என்ற வியப்பு என்னில் ஒட்டிக் கொண்டது.
மனம் எந்த திசையில் செல்கிறதோ..அதை ஒட்டிய பார்வைதானே முதன்மை பெற முடியும்!
அவரது கவனம் நாட்டு நலன்..சமூக மேன்மை...!
அதைச் சார்ந்த கதைக்கு அவர் சிறப்பிடம் தந்து பேசியது நான் பெற்ற பெரும்பேறு.
(விரைவில் அந்தக் கதையை வலையேற்றம் செய்கிறேன்)


தமிழை எழுதப் படிக்கத் தொடங்கிய நாள் தொடங்கி என் கதைகளை முதன்முதலாகப் படித்து ,விமரித்து,விவாதித்து அதை மேலும் செழுமையாக்க-செம்மையாக்க ஆலோசனைகளைத் தந்து ஊக்குவித்து வரும் வரும் முதல் வாசகியான என் மகள் மீனு பிரமோதுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஆனால்...தற்செயலாக விழாவன்று காலையில் வடக்கு வாசல் ஆசிரியர் என்னைத் தொலைபேசியில் அழைத்து என் நூலின் முதல் பிரதியைத் 
திரு அப்துல் கலாமின் கரங்களிலிருந்து என் மகளே பெற வேண்டும் எனக் கூறியபோது இன்னுமொரு இனிய அதிர்ச்சி..மகிழ்ச்சி..
நூலின் முதல் பிரதியைப் பெறும் என் மகள் மீனு பிரமோத்
புதுதில்லியின் வலைப் பதிவர்களில் ஒருவரும்,கவிதை,கதை,கட்டுரை முதலிய ஆக்கங்களை உருவாக்கும் ஆர்வத் தேடலும் செயல்துடிப்பும் கொண்டவரும்,என்னிடத்தில் ஒரு மகனைப் போன்ற பிரியம் கொண்டிருப்பவருமான திரு தேவராஜ் விட்டலன் என் தொகுப்பின் இன்னொரு பிரதியைத் திரு கலாம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது மற்றுமொரு மகிழ்வான கணம்..
நூலின் பிரதியைப் பெறும் திரு தேவராஜ் விட்டலன்
‘70 களில் மதுரை பாத்திமாக் கல்லூரியில் என்னிடம் பயின்று,தற்போது தில்லியில் வசிக்கும் என் அன்பு மாணவி மீனாஷி இந் நிகழ்வுகளைப் புகைப்படமாக்கி உடன் எனக்கு அஞ்சலிட்டது ..அதுவும் ஒரு பேரின்பம்..
(என் மாணவி மீனாஷி அனுப்பி வைத்த புகைப்படம்)
இத்தனை மகிழ்வான கணங்களை ஒருசேர அளித்து வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளைத் தந்த வடக்கு வாசலுக்கும் அதன் ஆசிரியருக்கும் என் வந்தனம்.







28.7.11

’தேவந்தி’சிறுகதைத் தொகுப்பு வெளியீடு...

1979ஆம் ஆண்டு முதல் 2009 வரை நான் எழுதிப் பல இதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 36 சிறுகதைகளின் தொகுப்பான
                                                 ‘தேவந்தி’
இன்று- வெள்ளிக்கிழமை 29.7.11 மாலை வெளியாகவிருக்கிறது.




27.7.11

கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்(தேவந்தி நூலின் அணிந்துரை )

(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் பாவண்ணன் எழுதியுள்ள அணிந்துரை..)
பாவண்ணன்
’’இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்களின் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி. இப்படிமத்தைக் கண்டெடுத்தது சுசிலாவின் மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்’’-பாவண்ணன்

கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்
குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது.  என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது. 

26.7.11

கட்டியம்


(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு  வடக்கு வாசல் இலக்கிய இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா கி.பென்னேஸ்வரன் அவர்கள் எழுதிய பதிப்புரை)

கட்டியம்
சுசீலாம்மா என்று இங்கு எங்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.ஏ.சுசீலா, தன்னை முனைவர் என்று அழைக்கப்படுவதையும் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று விளிப்பதையும் அறவே தவிர்க்க விழைபவர்.   தலைநகர் வாழ்க்கையில் அவருக்குக் கிட்டும் மிகக் குறைந்த அவகாசத்தில்,  தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்கள், யோகக் கலை, தியானம், தீவிர வாசிப்பு, வலைத்தளத்தில் எழுதுதல் எனப் பல்வேறு பணிகளில் தீவிரத்துடன் இயங்கி வருகின்றவர்.  நம்மை அயரவைக்கும் உழைப்பு அவருடையது.

25.7.11

மொழியெனும் தேவதை(என்னுரை)


(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் என்னுரை)
மொழியெனும் தேவதை


சிறுவயது முதல் என்னை வசீகரித்த ஒரு வடிவம், சிறுகதை .
.
ஏதாவது ஒரு கதைப் புத்தகத்தை வாசித்தபடியே நகர்ந்த நாட்களும்,  குழந்தைத்தனம் மாறாத பேதமையுடன் கதை எழுதப் போவதாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு , வீட்டின் ஏதோ ஒரு மூலையில் பதுங்கியபடி புத்தம் புதிய டைரிகளின் பக்கங்களில் எதையாவது கிறுக்கிக் கொண்டிருந்த தருணங்களும் மட்டுமே பாலிய பருவத்தின் நினைவுகளாக என்னுள் பசுமையாகப் பதிந்திருப்பவை.

24.7.11

வடக்கு வாசலும், நானும்....

’’மொழி சார்ந்து எழுப்பப்படும் வெற்றுக் கோஷங்களை விட இவ்வாறான தனி மனிதத் தியாகங்களும் - முனைப்பான செயல்பாடுகளுமே தமிழைத் தூக்கி நிறுத்த இன்று தேவையானவை.’’


என் கல்லூரிப் பணி நிறைவு பெற்றதும் புது தில்லிக்குத்தான் வர வேண்டியிருக்கும் என்பது முடிவான அந்த மார்ச் 2006 இல்...எனக்கு முதன்முதலாக ‘வடக்கு வாசல்’ இலக்கிய -மாத இதழின் பெயரை அறிமுகம் செய்து வைத்தவர் என் மதிப்பிற்குரிய நண்பர்,பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள்(மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர்)......
திரு கி.பென்னேஸ்வரன்
அபாரமான வாசிப்பு ஞானமும்,தமிழ் சார்ந்த தகவல் கலைக்களஞ்சியம் என்று சொல்லக்கூடியவருமான பரமசிவன் அவர்கள்,நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றபோது என்னைத் தொடர்ந்து அதே கல்லூரியில் தமிழ் கற்றவர்.

நான் பணியாற்றிய பாத்திமா கல்லூரிப் பாடத் திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அவர்,நான் தில்லி செல்லவிருப்பதைத் தற்செயலாக அறிந்தவுடன் வடக்கு வாசலின் பெயரை ஓர் இலக்கியப்புகலாக என்னிடம் பரிந்துரைத்தார்.அப்போதைக்கு அவர் சொன்ன அந்தக் குறிப்பை என் நெஞ்சின் மூலையிலும்,குறிப்பேட்டிலும் பதிந்து கொண்டேன்..

தில்லி வந்து இந்தச் சூழலும் ஓரளவு பழகிப் போகத் தொடங்கிய பிறகே எனது அறிமுகம் வடக்கு வாசலுடனும் அதன் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் (ராகவன் தம்பி)அவர்களுடனும் நேர்ந்தது.

வடக்கு வாசல் இசை விழா,நூல் வெளியீடு

புது தில்லியிலிருந்து வெளியாகும் வடக்கு வாசல் இலக்கிய இதழ் சார்பில் எதிர்வரும் 29,30,31(ஜூலை) ஆகிய மூன்று நாட்களும் 
இசை விமரிசகர் அமரர் திரு சுப்புடு அவர்களின் நினைவாக மாபெரும் இசை விழா நிகழவிருக்கிறது.

முதல்நாள் 29.7.11.7.11-வெள்ளி மாலையன்று...
இசை விழாவின் தொடக்கத்தில் கீழ்க்காணும் ஐந்து நூல்கள்,முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்படவிருக்கின்றன.
எனது சிறுகதைத் தொகுப்பான ‘தேவந்தி’யும் அவற்றில் ஒன்று..
இதையே அழைப்பாக ஏற்று அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..

19.7.11

பாலாவின் குரூர அழகியல்

’’வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’


18.7.11

வலைச் சரத்தில்....

இலக்கியத் தமிழ் என்னும் தலைப்பில் ’வலைச்சர’த்துக்காகப் பேராசிரியர் இரா.குணசீலன் அவர்கள் எழுதியுள்ள பதிவில் இத் தளம் பற்றிய குறிப்பும் இடம் பெற்றிருக்கிறது.
திரு குணசீலனுக்கு நன்றி...

10.7.11

கார்த்திகேசு சிவத்தம்பி

பேராசிரியர்,முனைவர் திரு கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஈழத் தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
கலாநிதி கைலாசபதிஅவர்களும்,சிவத்தம்பி அவர்களும் முன் வைத்த விமரிசன, திறனாய்வு அணுகுமுறைகளை மார்க்ஸியப் பார்வையுடன் இணைந்தவை என்று மட்டும் வகைப்படுத்தி விட முடியாது. 
தமிழ்த் திறனாய்வுத் தளத்தில் மிகப் புதிதான மாற்றங்களும் , வேறுபட்ட நோக்குநிலைகளும் ஏற்படவும்,தமிழாய்வுகளுக்குப் புது இரத்தம் செலுத்தவும்

8.7.11

புதிய பிரவேசங்கள்:2

(புதிய பிரவேசங்கள் சிறுகதை பகுதி 1 இன் தொடர்ச்சி)
’’அயலான் ஊரில்...,அவன் அமைத்துக் கொடுத்த உல்லாசச் சோலையில் தன்னை மறந்து , தன் நிலையை மறந்து களித்திருந்தவளுக்குக் கணவனுடன் வாழ என்ன தகுதி இருக்கிறது? நீ இங்கே நடத்தியிருக்கிற வாழ்க்கைக்கு இப்போது நீ புனைந்துள்ள கோலமே சாட்சியம் கூறிக் கொண்டிருக்கிறதே?’’


புதிய பிரவேசங்கள்: 1


அன்று...இலங்கைப் பட்டினத்தில் அக்கினிப் பிரவேசம் அரங்கேறும் நாள் ! அன்றைய நிகழ்வுக்குத் தானும் ஒரு மௌன சாட்சியாய் இருக்கப் போவதை நினைந்ததாலோ என்னவோ..,கீழ்த்திசைக் கடலிலிருந்து முகம் காட்டத் தொடங்கியிருந்த ஆதவனின் செவ்வொளியிலும் கூடச் சில கருமையின் கீறல்கள் !

கடற்கரை ஓரமாய்க் கைகட்டி, விழிகளைத் தொலை தூரத்திலும், நெஞ்சினை அயோத்தியிலும் பதித்தபடிநின்றிருக்கும் இராமனின் முகம்,வழக்கமான அருளின்றி,இறுக்கம் கண்டிருக்கிறது. பகைவனுக்கும் அருள் சுரக்கும் அந்தப்பண்பாளனின் உள்ளம்,தன் பத்தினியைச் சொல் ஈட்டிகளால் வதைப்பதற்கு வார்த்தை தேடி,உள் மறுகி உலைந்து கொண்டிருக்கிறது.

4.7.11

நூல் வெளியீடுகள்

தஸ்தயெவ்ஸ்கி எழுதிய இடியட் நாவல் அசடன் என்ற பெயரில் என்னால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு அச்சாகிக் கொண்டிருக்கிறது.
(இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரவிருக்கும் அந்நூல் 700க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது)
மதுரை பாரதி பதிப்பகம் வெளியிடவிருக்கும் இந்நூலுக்கு
அசடனும் ஞானியும்’
என்ற தனது அற்புதமான ஆய்வுரையை முன்னுரையாக அளித்திருக்கிறார் எழுத்தாளர் திரு ஜெயமோகன்அவர்கள்.
4/7/11 தேதியிட்டு,அவரது இணைய தளத்திலும் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.
http://www.jeyamohan.in/?p=15045
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

1979 ஆம் ஆண்டு தொடங்கி நான் அவ்வப்போது எழுதி,இதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் ஒரு சிலவற்றை (36) மட்டும் தேர்ந்து தொகுத்து,
தேவந்தி
என்னும் தலைப்பில்,புது தில்லி ’வடக்கு வாசல்’ பதிப்பகம் ஜூலை 29ஆம் நாள் வெளியிடவிருக்கிறது.
‘வடக்கு வாசல்’இதழ் நடத்தவிருக்கும் இசை விழாவின்போது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் எனது நூலையும்,
வடக்கு வாசல் வெளியீடாக வரவிருக்கும் வேறு நான்கு நூல்களையும் வெளியிடவிருக்கிறார்.
எனது சிறுகதைத் தொகுப்புக்குத் தன் முன்னுரையால் எழுத்தாளர் திரு பாவண்ணன் அவர்களும்,தன் பதிப்புரையால் வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்களும் அணி செய்திருக்கின்றனர்.

திரு ஜெயமோகன்,பாவண்ணன்,பென்னேஸ்வரன் ஆகியோர்க்கு என் நன்றி!



2.7.11

காட்சியும்,மீட்சியும்...

சிறையிருந்தாள் ஏற்றம்- இது சுந்தர காண்டத்தின் மற்றொரு பெயர்.

சீதையின் துயரத்தின் இடையில் ஊடாடும் அவள் கற்பின் அழகே சுந்தர காண்டத்துக்கு அழகூட்டுவது.
சுந்தரன் எனப்படும் அனுமனின் செயல்திறனாலும் அழகு பெறுவது இக் காண்டம்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....