தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான எழுத்தாளர் ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்'. ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தாலும்,அவரது இலக்கிய ஆளுமையின் பால் விளைந்திருக்கும் ஈர்ப்புக் காரணமாகவும் எங்கெங்கோ பலப் பல ஊர்களிலும் நாடுகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த மனம் கொண்ட நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது.
இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நி கழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதோடு, பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக் கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் தனது இலக்காகக் கொண்டு-புற நெருக்குதல்கள் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் இந்த இலக்கிய அமைப்பு,ஒவ்வோர் ஆண்டும் திரு ஜெயமோகன் அவர்கள் அடையாளப்படுத்தும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை அளித்துச்சிறப்பித்து வருகிறது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு இவ் விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கும், 2012ஆம் ஆண்டுக்கான ’விருது’ கவிஞர் தேவதேவனுக்கும், 2013ஆம்ஆண்டுக்கான விருது தெளிவத்தை ஜோசஃப் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
2014ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது
நவீனகவிதை வெளியின் மூத்த கவிஞரான
திரு ஞானக்கூத்தனுக்கு வழங்கப்பட இருக்கிறது.
வரும்
28-12-2014 அன்று கோவையில் மணி மேல்நிலைப் பள்ளியிலுள்ள
நானி கலை அரங்கத்தில்
விருது விழா நிகழவிருக்கிறது.
விழாவின்போது விஷ்ணுபுரம் இலக்கிய
வட்டத்தைச்சேர்ந்த நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றித் தயாரித்திருக்கும் ’இலை மேல் எழுத்து’ என்ற ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்படுகிறது.
இயக்குநர் வசந்தபாலன்,மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் ,கவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, பாவண்ணன், கவிஞர் இசை ஆகியோர்
விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
விஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்துக் கூறுவதோடு கலை,இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்கவிருக்கும் இவ் விழாவுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.
பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்முகநூல்களிலும் வெளியிடவும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்.
1 கருத்து :
ப்லாக்ல போஸ்ட் பண்ணி இருக்கேம்மா.
வாழ்த்துகள் திரு ஞானக்கூத்தன் அவர்கட்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்கும்.
கருத்துரையிடுக