துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.1.15

’’யாதுமாகி’’ பற்றி தேவராஜ் விட்டலன்

’’யாதுமாகி’’ பற்றி தேவராஜ் விட்டலன் எழுதிஅனுப்பிய பதிவு




வாழ்க்கையில் பலதரப்பட்ட எண்ணங்களை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் . தனிமனிதன் என யாரும் இல்லை, அனைவரும் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் பினைந்துதான் உள்ளோம்.

ஏமாற்றங்கள், பெருந்துயரங்கள் , சந்தோசங்கள் என காலம் மாறி மாறி அனைவரின் வாழ்விலும் இனிப்பையும் கசப்பையும் தந்து கொண்டுதான் உ:ள்ளது. பலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வை சுருக்கி கொள்கின்றனர். சிலர் பிரச்சனைகளில் இருந்து மீண்டு புதிய தடத்தை பதிக்கின்றனர்.

யாதுமாகி நாவலில் வரும் தேவி கதாபாத்திரம் (தேவிதான் நாவலின் மையம் தேவியை சுற்றிதான் முழு நாவலும் வளர்கிறது) சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை அதுவும் பெண்களுக்கு சமுதாயத்தில் பல கொடுமைகள் நடந்த கால கட்டம், பெண் உரிமைகள் மறுக்கப்பட்ட கால கட்டம் . அத்தகைய சூழலில் பல கட்டுப்பாடுகள் கொண்ட பிராமண சமுதாயத்தில் பிறந்து, நல்ல மனிதர்கள் சிலர் உதவியால் தன் வாழ்க்கையை தனி மனுசியாக நின்று பிரச்சனைகளை எதிர் கொண்டு மாற்றி அமைக்கிறார். நாவல் முன்னும் பின்னும் நகர்ந்து செல்கிறது  சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் உள்ள காலங்களை படம் பிடித்து காட்டுகிறது.

  நைட்குவீன் பூக்களின் வாசம் நாவல் எங்கும் விரைந்து கிடக்கிறது. நாவலில் பல இடங்களில் நம்மை உருகச் செய்துவிடுகிறார் ஆசிரியர். ஏழை மாணவியான செல்லி பள்ளிக்கு வராததால் எதேச்சயாய் பார்க்கும் தேவி அம்மா செல்லியை அழைத்துப் பேசி அவள் குறை கேட்டு , உணவுதான் பிரச்சனை எனக் கண்டறிந்து அதை தீர்த்து வைப்பதும். ( ப. எண் 78,79)

வீடு கட்டும் தறுணத்தில் காண்ட்ராக்டர் சின்னையா பணத்தோடு தலைமறைவானபோது அந்த வேதனையில் கல்யாணிப் பாட்டி புலம்பும் போது “ சரி சரி விடுங்கோ மாமி ஏழெட்டுக் கொழந்தைகள் அவனுக்கு.. பெரிய சம்சாரி .. போய்த் தொலையறான் .. போங்கோ இனிமே நடக்க வேண்டியதைப் பாப்போம் எனக் கூறி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு , அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறார் தேவி அம்மா.. (ப எண் – 172) தனக்கு துரோகம் செய்தவனையும் மண்ணித்து விடுகிறார் தேவியம்மா.

“முழு நிலவின் ஒளியில் வெள்ளிநுரைகளோடு பளபளக்கும் கடல் கண்ணுக்குத் தெரிகிறது கூடவே அதன் ஆரவாரக் குமுறலும்! இடைவெளியே இல்லாதபடி தொடர்ந்து மறிந்து மகிழும் அந்தக்கடல் அலைகள் எழுப்பும் ஓசை… கம்பீரமான அந்த முழக்கம், பழகிப்போன ஒரு நட்பைப்போல அவளோடு ஒட்டிக் கொண்டு இப்போது இந்த ராணி மேரி கல்லூரி விடுதி வரை வந்திருக்கிறது” என ஆசிரியர் குறிப்பிடுகிறார். கடல் தேவியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய ஒன்று. குழந்தை இயற்கைக்கே அந்த பால்ய விவாகம் பிடிக்கவில்லை போல, அதுவும் அறிவுக் குழந்தையாக இருக்கும் தேவிக்கு நடந்ததை கடல் பொறுக்க முடியாமல்தானோ அந்த சிறுவனை தேவியின் வாழ்க்கையில் இருந்து பிரித்துவிடுகிறதோ. கடல் தேவிக்கு வலியை தந்தாலும், தேவி இயற்கையை நேசிக்கிறார்.

 சாருவின் நினைவோடையின் வழியாய் உயிர்க்கும் இந்நாவல் வைகையில் தொடங்கி மலைச்சிகரங்களிலிருந்து சமவெளி நோக்கி ஆறாத காதலுடன் பாய்ந்து வந்து கொண்டிருக்கு ரிஷிகேசத்து கங்கையில், திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் முடிவது சிறப்பான அம்சமாகும். நாவல் முன்னும் பின்னும் பயணித்தாலும் படிக்கும் போது அந்த கால கட்டத்திற்கே கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

  தாயாகி, தந்தையாகி, குருவாகி, ஏதுமற்ற ஏழைப் பிள்ளைகளையும் படிக்க வழி செய்து நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களையும் மண்ணித்து, தேவி கதாபாத்திரம் , தன் வாழ்வில் ஏற்பட்ட கஷ்ட்ட காலங்களில் மனதுடைந்து வாழ்க்கையை சுருக்கி கொள்ளாமல் தனது சுடர்மிகுந்த அறிவை பயன்படுத்தி எல்லா வேளையிலும் முன்னோக்கி பாயும் கங்கையைப் போலே வாழ்வில் பயணம் செய்கிறார், தேவி அம்மா போல் வாழ்வது  எளிதான காரியம் அல்ல. ஆனால் இந் நாவலை படித்த பிறகு அனைவரின் மனதிலும் தேவியம்மா யாதுமாகி நின்று மனபலம் அளிப்பார் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை.

26.1.15

’’யாதுமாகி’’பற்றி திண்ணை இதழில்

’’யாதுமாகி’’பற்றி திண்ணை இணைய இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை

                                     சுசீலாம்மாவின் ’’யாதுமாகி’’

                                     தேனம்மை லெக்ஷ்மணன்


குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது.

முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் இன்றியமையாமையும் பெண்களின் நிலமையையும் ஏன் ஆண்களின் கட்டுப்பெட்டித்தனமான நிலைமையையும் விவரிக்கும் இக்கதை அங்கங்கே நம்மை உறைய வைக்கிறது.

மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்று அவர்களின் உணர்வுகளும் கூட மட்டுறுத்தப்பட்ட வாக்கியங்களுக்குள் வந்தாலும் திடீரென்று எதிர்பாராமல் ஏற்படும்கீறல்கள் போல சில உரையாடல்கள் நம்மை ஸ்தம்பிக்கச் செய்கின்றன.

நார்மடி உடுத்தி தலை மழித்த பெண்களை நான் சிறுவயதில் தஞ்சை மாவட்டத்தில் படிக்கும்போது கண்டிருக்கிறேன். துறவிகளின் வாழ்வை ஒத்தது ஒரு பால்ய விதவையின் வாழ்வும். மடி ஆசாரம் என்ற போர்வைகளுக்குள் தங்களைப் புதைத்துக்கொண்டு அவர்கள் தங்களை ஒரு ஆளண்டாப் பட்சிபோலக் காத்து வாழ்ந்து முடிவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காலட்டத்திலிருந்து ஒரு நூற்றாண்டு காலப் பெண்மையின் வாழ்வை வரைந்து செல்கிறது நாவல். அதில் தேவி, சாரு நீனா என்று மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையைச் சொன்னாலும் தேவியின் வாழ்க்கைதான் மிகத் திருப்பங்கள் நிறைந்தது. அவர் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகளே சாருவும் தன் வாழ்க்கையின் துணிகர முடிவுகள் எடுக்கக் கை கொடுக்கிறது. இவர்கள் இருவரும் எதிர்கொண்ட எந்தப் பிரச்சனையுமில்லாமல் இன்றையக் காலகட்ட உற்சாகப் பெண்ணாக நீனாவும் அவளைப் புரிந்துகொண்ட அன்புக் கணவராக கிருஷ்ணா அழகான படிமங்கள். பாரதியின் வரிகள் ஒவ்வொரு அத்யாயத்தையும் உயிர்ப்பிக்கின்றன.


1900 களில் பெண் வேலைக்குச் செல்வது என்பது குறித்து சொல்லப்படும் கருத்துகள் ஜெயமோகனின் தளத்தில் அறிய நேர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவை எல்லாவற்றையும் எதிர்த்து தன் மகளைப் படிக்க வைக்கிறார் சாம்பசிவம். அப்போது அங்கே அவரின் மகள் போன்று பலருக்கும்  வாழ்வளிக்கும் கைம்பெண்களுக்கான ஹாஸ்டலை சிஸ்டர் சுப்புலெட்சுமி நடத்தி வருவதும் அவர்களின் பௌர்ணமி உற்சாகங்களும் நமக்கும் சந்தோஷமளிக்கின்றன.

ஒருவாறு கல்விதான் தன்னுடைய உய்வு என்று முடிவு செய்த தேவி படித்து வேலைக்குச் செல்கிறார். வாழ்வில் தனக்களிக்கப்படாத தான் கண்டுணராத கண்டுணர முடியாது என்று நினைக்கிற பல இன்பங்கள் மறுக்கப்பட்டுவிட துறவறம் பூண நினைக்கும்போது அந்தத் துறவு எண்ணத்தின் போதாமையை பட்டென்று வெளிப்படுத்தும் சிஸ்டர், தாங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்று கூறியதோடு மட்டுமல்ல தேவியைத் தன் வாழ்வைத் திருத்தியமைத்துக்கொள்ளச் சொல்கிறார். அதற்கேற்றாற்போல உறவினர் கிட்டுவும் நல்ல மாப்பிள்ளையைக் கொணர திருமணம் முடிந்து சாருவுக்குத் தாயாகிறார் தேவி.

தந்தையை விடத் தாயிடம் தேவிக்கு நெருக்கம் அதிகம். சாட்சாத் தேவி ப்ரத்யட்சமாவது போல தன் தாயின் பூஜை முறைகளையும் அதையே செட்டியாரும் சாஸ்த்ரிகளின் வாய்மொழியாக வெளிப்படுத்துவது தாயின்மேல் மீளாக் காதல் கொண்ட ஒரு பாசக்கார மகளை அடையாளம் காட்டுகிறது. இருந்தும் தாய் ( தந்தையின் மறைவுக்குப் பின் ) பூரணமாக பூஜைகள் செய்தும் அதை ஆத்மார்த்தமாக செய்கிறார்களா என்ற எண்ணம் ஏற்பட்டு அதை உடனே நீக்கிக் கொள்வதும் தாயை எடைபோடத் தான் யார் என்று சொல்லிக்கொள்வதும் அழகு,

வெவ்வேறு காலகட்டங்களில் அம்மாவுடனான உறவையும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லும்போது தாய் மகளிடையேயான உரையாடல் ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்குமான உரையாடலைப் போல முடிவுறுகிறது. நெகிழ்ச்சி இருந்தாலும் அதை முழுமையாக இருவருமே காண்பித்துக்கொள்வதில்லை. ஒரு தேர்ந்த ஞானத் தெளிவுள்ள இரு தோழியர் சேர்ந்து வாழ்வதைப் போலத் தாயும் மகளும் வாழ்கிறார்கள்.

தோளுக்கு மேலே வளர்ந்தால் தோழன் என்பதைப் போலத் தோளுக்கு மேல் வளர்ந்த தோழியாக மகள் மாறினாலும் மகளின் திருமண விஷயத்தில் இருவரும் குழப்பமுற்றுத் தவறான தேர்வைச் செய்துவிடுவதும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளும் கசப்பானவை. அந்த நிகழ்வு தன் வாழ்வில் எந்தச் சுவடையும் ஏற்படுத்தி விடக்கூடாதுஎன்று சாருவும் அவரின் அம்மா தேவியும் அதன் பின் தெளிந்து நடப்பது “Life must go on “ என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.

இதில் குறிப்பிட்டுச் சில மனிதர்களின் சுயநலம், வார்த்தைப் பிரயோகங்கள் சொல்லவேண்டும். பால்ய விதவையான சகோதரிக்கு, மகளுக்கு ஒரு வாழ்வு வேண்டும் என எண்ணாத குடும்பத்தார் அவளை தியாக தீபமாக உபயோகித்துக்கொள்ள எண்ணுவது, மேலும் வாழ்வை இழந்தவள் படித்து என்ன செய்யப்போகிறாள் நெருப்பிட்டது போலக் கேட்கும் ( இந்தக் கம்மனாட்டிப் பொண்ணு என்ன கலெக்டராகவா போறாள் ) எனக் கேட்கும் மனிதர்கள்.  மேலும் அதிகம் ( உமா ) படிக்க வைத்தால் அதைவிடப் பெரிய படிப்புப் படித்த மாப்பிள்ளை பார்க்கவேண்டும் அல்லது அவளுக்கும் இதே நிகழும் என வீட்டிலுள்ளோர் சொல்கிறார்கள் என்று சொல்லும் மாமா போன்ற பலரையும் கடந்து தேவி தன்னுடைய முயற்சியால் நன்கு படித்துப் பலரும் மதிக்கும் பெரிய உத்யோகத்தில் இருந்து விகசிக்கிறார்.

அப்போதும் அவரைக்காணவரும் உறவினர்கள் பசப்பலாகப் பேசி அவரிடமே கடன்பெற்று பட்டுப்புடவை வாங்கிச் சென்று விட்டுத் திருப்பியும் கொடுக்காமல் தம் தகுதிக்கு அதெல்லாமே ஒன்றுமில்லை எனப் புரட்டுவது என ஒவ்வொருவரின் சுயமுகத்தையும் உரித்திருக்கிறார் சாரு.

செட்டி நாட்டின் அழகையும் மனிதர்களையும் சொல்லும்போது படிப்பின் முக்கியத்துவத்தையும் அந்தப் பள்ளிக்கு பெண் தலைமை ஆசிரியையும் மற்ற பெண் ஆசிரியர்களும் வந்தால்தான் பெண்கள் கல்வி பெற வருவார்கள் என்று செட்டியார் முடிவு செய்து அழைத்ததையும் அந்தக் காலகட்டத்திய பெண்கள் வாழ்வில் ஒரு திருப்பமாகச் சொல்லலாம்.

லயன் வீட்டு வாழ்க்கையும் அதிலும் பெண்சிங்கமாக அம்மா வீட்டிலும் பள்ளியிலும் திகழ்ந்ததையும் முடிவிலும் கம்பீரமாகவே இருப்பதைக் காண்பிப்பதிலும் சாருவின் பார்வையில் தாய்தேவி எவ்வளவு மதிப்பிற்குரிய ஸ்தானத்தில் இருந்திருக்கிறார் என்று நெகிழ வைத்தது.

தாயின் சரித்திரத்தை விளக்க முற்படுகையில் ஒரு கடலைப்போல என்றும் அதன் அலைகள் போல எண்ணம் ஆக்கிரமிக்கத் தூங்கும் சாரு, அவர் கல்வி கற்கும் பருவத்தில் தாய் அன்னத்தின் கண்களில் அடக்கப்படும் காவேரி வாய்க்காலாகக் கிளை மாறிப் பாய்வதும், பின் முடிவில் மகள் சாருவின் பார்வையில் தூய்மையான கங்கையாக உருப்பெற்று மனிதர்களின் அழுக்குகளை, கீழ்மைகளை பொய்மைகளை வலுக்கட்டாயமாகக் கொட்டப்பட்ட கயமைகளை எல்லாம் சுத்தப்படுத்திச் செல்லும் புனித கங்கையாகத் தோன்றுவது ரசிக்க வைத்தது.

சில்வியா தேவியின் உரையாடலும், தந்தைக்காக தாய் ஓடியாடிச் செய்வதை தேவி பகிர்வதும் அதே போல அண்டை அயலார் குழந்தைகளை தாய் நேசத்தோடு கையாள்வதை நெகிழ்ச்சி கலந்த பொறாமையற்ற பார்வையோடு மகள் பகிர்ந்து கொள்வதும் நன்றாக வடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொழி ஆளுமை செய்கிறது பல இடங்களில், ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்றாற்போல ஊர்களும் வருடங்களும் குறிப்பிடப்பட்டு கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களோடு அந்த ஊரில், உறவினர்களோடு , நண்பர்களோடு என்று பேசப்படும் விதம் விதமான உரையாடல்கள் சாருவுக்குக் கை வருகிறது.

பொதுவாக தாய் தந்தையரின் சரித்திரத்தை எந்தப் பிள்ளையாலும் முழுமையாக எழுதமுடியாது. அவ்வப்போது தாயே கேட்டுக்கொண்டாலும் தவிர்த்து வரும் சாரு முடிவில் தாய்க்கு முழுமையான நம்பிக்கையான தோழியாக இருந்த சில்வியாசித்தியைச் சந்தித்ததும் மூடிக்கிடந்த ரகசியங்கள் தெளிவுறப் பெற்று தாயைப் பற்றி எழுத வேண்டும் என எண்ணுகிறாள்.தன் தாய் ஆசிரியையாய்க் கூடுபாய்வதையும் அவளின் உள்மனக் காயங்களையும் உணர்ந்து ஒற்றியெடுப்பதும் , வேலைக்குச் செல்லும் தன்னைக் கணவன் , வேலையைத் தானே கல்யாணம் பண்ணிண்டிருக்கா “ என்று முடக்கிப்போட முயற்சிக்கும்போது விழித்துக்கொள்வதும், தன் தாயைக் கழுவிலேற்றும்போது பொம்மைக் கல்யாணம் முடிந்தது முறிந்தது என்று விட்டுவிட்டு வரும் துணிவும் சாருவை மிக மேன்மையானவளாக்குகின்றன. எந்தச் சமயத்திலும் மட்டுறுத்தப்பட்ட உணர்ச்சிகளோடு தரம்தாழ்ந்து பேசிவிடாமலே இருக்கும் பெண்கள் மூவரும் தங்கள் மேன்மையைப் பறைசாற்றுகிறார்கள்.

அவரின் மகள் நீனாவும் கரம்கொடுக்க விஸ்வரூபமெடுத்து யாதுமாகி நிற்கிறாள் தேவி. கல்வி, திருமண வாழ்வு மறுக்கப்பட்ட ஒரு பெண் திருமணம் செய்து தேவி போன்ற பன்முகத் திறமை வாய்ந்த ஒரு பெண்ணைப் பெற்றெடுப்பதும் கடமையே கண்ணாயினள் போல உத்யோகம் பார்த்து கடைசிவரை மகள் பேத்திக்குத் துணையாய்த் தோள்கொடுப்பதும் நம்பிக்கையையும் மன உறுதியையும் வாசிக்கும் அனைவருக்கும் கைகொள்ளச் செய்கிறது.

இத்தனை கஷ்டங்களையும் தாங்கிய தேவி ஒரு முறை கூட அழுவதில்லை. குழம்புவதில்லை. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாகத் தன் வாழ்வை அதன் சூறாவளியை எதிர்கொண்டு தன் மகள் சாருவையும் பேத்தி நீனாவையும் வழிநடத்துதலும் துன்பம் நேரும்போது சோரவிடாமல் தோள்கொடுப்பதும் சிறப்பு.

மூன்று காலகட்டத்துப் பெண்களின் வாழ்வையும் வரைந்து செல்கிறது யாதுமாகி நாவல். அந்தநாள் வாழ்வு பெண்ணுக்கு எதை எதையெல்லாம் மறுத்தது இன்று சுதந்திரம் என்ற பெயரில் எதெல்லாம் கிட்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவாவது அனைவரும் யாதுமாகியைப் படிக்கவேண்டும். ஆத்மாவுக்குப் பிடித்தமான ஒன்றைத் தள்ளிப்போடாமல் ருசிக்க முடிவெடுத்த சாரு அதை நம்மோடு பகிர்ந்து உண்ணும் விதம் உன்னதம். சாருவுக்கு யாதுமான தேவி படிக்கப் படிக்க நமக்குள்ளும் நிறைந்து யாதுமாகி விடுகிறாள்.

நூல் :- யாதுமாகி

ஆசிரியர் :- எம் ஏ சுசீலா

பதிப்பகம் :- வம்சி

விலை ரூ 180.

22.1.15

’யாதுமாகி’ பற்றி எழுத்தாளர் வாஸந்தி

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாஸந்தி

‘யாதுமாகி’ ஒரு பெண்ணின் அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை  இயல்பாக நகரும் நதியின் ஓட்டத்தை விவரிக்கும் எளிமையுடன் எழுதப்பட்ட படைப்பு. கோஷமில்லாமல்., பந்தா இல்லாமல் சென்ற நூற்றாண்டின் இறுக்கம் மிகுந்த சமூகச் சூழலை மீறி தன் சுயம் உணர்ந்து நிமிர்ந்து நின்று தன்னைச் சுற்றியிருந்த பெண்களையும் சுயம் உணரச் செய்த ஒரு மாதரசியின் சரிதம் ;  அந்த காலகட்டத்தின் சமூகக் கட்டமைப்பை மீறும் எண்ணமோ துணிச்சலோ பெண்களுக்கு இல்லாத நேரத்தில் , தனக்கு அரிதாக வாய்த்த சில  வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு  முன்னேறிய அந்தப்பெண்ணின் வாழ்க்கை நிஜமானது . எம்.ஏ.சுசீலா அவர்கள் அந்தப் பெண்ணின்  வாழ்க்கையை , அவளது ஆளுமைகளை உணர்வு பூர்வமாக அறிந்திருந்ததாலேயே அதைப் பதிவு செய்யும் அவசியத்தை உணர்ந்து அதைப் புதினமாக அருமையாக வழங்கியிருக்கிறார். அந்தப் பெண் தனது சாதனைகளைப் பெரிதாக நினைக்காமல் அடக்கி வாசித்ததற்கு ஏற்ற வகையில் சுசிலா அடக்கமான நடையில் யதார்த்த நிகழ்வுகளைப் பின்னிக்கொண்டு போவது வாசிப்பு சுகத்தையும்  நெகிழ்ச்சியும்  ஏற்படுத்துகிறது’’

தில்லியில் இருந்தபோது வாஸந்தியுடன்...

20.1.15

தினமலர் இதழில்....




பெண்ணிய சிறுகதைகளால், தமிழ் இலக்கிய வாசகர்களை கவர்ந்தவர் எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா. புகழ்பெற்ற உலக இலக்கியமாக விளங்கும், தாஸ்தயெவ்ஸ்கியின், 'கிரைம் அண்ட் பனிஷ்மென்ட்' மற்றும் 'இடியட்' ஆகிய இருநாவல்களையும், தமிழில் மொழிபெயர்த்தவர். தன் சுய படைப்பாக 10க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள், பல விருதுகளை பெற்றுள்ளன. மதுரை பாத்திமா கல்லுாரியின் தமிழ் பேராசிரியராகவும், துணைமுதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்று, தற்போது கோவையில் வசித்து வருகிறார்.



பெண்களின் படைப்பில் தாய்மையும், அன்பும் உச்சமாக வெளிப்பட வேண்டும் என விரும்பும் இவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

பாரதியின் கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கல்லுாரியில் படிக்கும் காலத்தில், சிறுகதைகள் நாவல் வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. ஜெயகாந்தனின் கதைகளை விரும்பி படித்தேன். இந்த வாசிப்பு பழக்கம் என்னையும் எழுத துாண்டியது.கடந்த, 1979ம் ஆண்டு, 'கல்கி' வார இதழ் நடத்திய சிறுகதை போட்டியில், 'ஒரு உயிர் விலை போகிறது' என்ற என் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அறிமுக எழுத்தாளர் என்ற வாசகத்துடன், அதை பிரசுரித்தனர். அதுதான் நான் எழுதிய முதல் கதை.

இந்த உற்சாகத்தில், தொடர்ந்து எழுதினேன். பல பத்திரிகைகளில், என் கதைகள் வெளிவந்தன. பிறகு சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வந்தன. என் கதைகளில், பெரும்பாலும் பெண்ணியம், பெண்களின் வாழ்வியல் சிக்கல்கள் மைய கருவாக இடம் பெறும். கல்லுாரி பணியில் இருந்த காலத்தில் அதிகம் எழுத முடியவில்லை. ஓய்வுக்கு பிறகு நேரம் அதிகம் கிடைத்தது. அதனால், மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டேன்.தாஸ்தயெவ்ஸ்கியின், 'குற்றமும் தண்டனையும்' நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தேன். இந்நாவல் உலக அளவில் பல மொழிகளில் மொழியெர்க்கப்பட்டுள்ளன. இதை தமிழில் வாசித்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, சி.மோகன் போன்றவர்கள் என் மொழி பெயர்ப்பை பாராட்டினர். தமிழ் வாசகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து, தாஸ்தயெவ்ஸ்கியின், 'இடியட்' நாவலையும் 'அசடன்' என்ற பெயரில் மொழி பெயர்த்தேன். இதில், பிரெஞ்ச் மொழிக்கலப்பு அதிகம் இருந்ததால், மொழி பெயர்க்க சிரமமாக இருந்தது. அதனால், மொழிபெயர்த்து முடிக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகின. இந்த நாவலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது; மூன்று விருதுகளும் கிடைத்துள்ளன. பெண்கள் படைப்பாளர்களின் எழுத்து கலைத்தன்மையுடன், சமூகப்பயன்பாடுடன் இருக்க வேண்டும். கதை என்பது வாழ்க்கையின் தரிசனமாக இருக்கவேண்டும். அதில், தாய்மையும், அன்பும் உச்சமாக வெளிப்படவேண்டும். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் எழுத்துக்களில், அவை வெளிப்பட்டன. இன்றைய பெண் எழுத்தாளர்கள் தங்களின் சுயத்தையும், அக வெளிப்பாடுகளையும் எழுதுகின்றனர். அதில், பாலியல் தன்மையே அதிகம் வெளிப்படுகிறது. அதை தவிர்ப்பது நல்லது.





14.1.15

கருத்துச்சுதந்திரம்- ஒரு வன்மையான கண்டனம்

‘’எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான்’’என்று ஓர் எழுத்தாளனைச் சொல்ல வைத்தது எவரெனினும் -எந்தச்சூழல் எனினும் எந்த நபரோ / அமைப்போ எதுவாயினும் அதன் மீதான /அவர்கள் மீதான 
என் வன்மையான கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.பெருமாள்முருகன் தன் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியபடி, இதைத் துணிவோடு எதிர்கொண்டு எழுத்துக்களத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே என் ஆவல்;எதிர்பார்ப்பு. 

முகநூலில் வெளியாகியிருக்கும் திரு பெருமாள் முருகனின் அறிக்கை கீழே...

’’எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை
எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.
பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:
1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக’’

13.1.15

பதாகை இணைய இதழில் ஒரு நேர்முகம்

புத்தகக்கண்காட்சியை ஒட்டியும் என் ‘யாதுமாகி’நாவலை ஒட்டியும்
 பதாகை இணைய இதழில் வெளியாகி இருக்கும் என் நேர்முகம்


புத்தகக்கண்காட்சி – எம். ஏ. சுசீலாவுடன் ஒரு நேர்முகம்


[மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், செவ்வியல் மொழியாக்கம், பெண்ணிய ஆய்வு என்ற பல தளங்களில் இயங்கி வரும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களின் புதிய படைப்பாக ‘யாதுமாகி’ நாவல் இவ்வருடம் வம்சி வெளியீடாக வருகிறது. இவருடைய முந்தைய படைப்பான ‘அசடன்’ (தஸ்தெய்வ்ஸ்கியின் ‘இடியட்’டின் தமிழ் மொழியாக்கம்) பல விருதுகளை பெற்று பெருவாரியான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நூல் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சுசீலா அவர்களுடன் பதாகை நிகழ்த்திய உரையாடல் -]


செவ்வியல் இலக்கிய ஆக்கங்களில் ஆழ்ந்த புலமையும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை எடுத்துச் செல்லும் வழிகாட்டியான பொறுப்பும் அனுபவமும் கொண்ட நீங்கள், ஒரு புது நாவல் படைப்பிற்காக மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டியிருந்ததா? இலக்கிய வகுப்பெடுப்பதும், இலக்கிய உருவாக்கமும் முரணான மனநிலைகள் கொண்டு செயல்பட வேண்டியதாக இருக்கிறதா?
அப்படிப்பட்ட முரணான மனநிலைகள் எனக்கு ஒருபோதுமே ஏற்பட்டதில்லை. மிகச்சிறு வயதிலிருந்தே இலக்கிய உருவாக்கத்தின் மீது நான் மாளாத காதல் கொண்டிருந்தேன். அதுவே வேதியியலில் இளம் அறிவியல் படித்த என்னை இலக்கியக் கல்வியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.
நான் பெற்ற செவ்வியல் இலக்கியப்பயிற்சி என் மொழியை வளப்படுத்தியது. தமிழின் ஆழங்களையும் நுட்பங்களையும் அறிய வைத்தது. செவ்வியல் இலக்கிய ஆக்கங்களைப் படித்த காலகட்டம், அவற்றைப் பயிற்றுவித்த காலகட்டம் என இரண்டிலுமே சமகால இலக்கிய வாசிப்பை நான் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில் இல்லாதபோதும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஆர்வமுள்ள மாணவியருக்கு சமகாலத் தமிழ்ப்போக்குகளை இனம் காட்டிக் கொண்டிருந்தேன். சங்கத் தமிழும், காப்பியத் தமிழும், சமயத் தமிழும் இவை எதுவுமே படைப்பிலக்கிய உருவாக்கத்துக்கு இடையூறாக என் நடையையோ உள்ளடக்கத்தையோ பாதிக்கவில்லை; அவற்றை அடித்தளங்களாக மட்டுமே கொண்டு பண்டித நடையின் குறுக்கீடுகள் இன்றிக் கதைகளை எழுதிக்கொண்டு போவது ஒன்றும் இயலாத செயல் அல்ல; நான் செய்ததும் அதைத்தான். இளம் வயது முதல் நான் படித்த ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எனக்குத் துணையாக நின்றபடி – நான் பெற்ற இலக்கியக்கல்வியும் நான் போதிக்கும் இலக்கியமும் எந்த வகையிலும் என் படைப்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
1979 முதல் என் சிறுகதைகள் வரத் தொடங்கி விட்டதால் என்னை நான் மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவையே எனக்கு ஏற்படவில்லை. மேலும் முனைவர் பட்டத்துக்காக நான் தேர்ந்து கொண்டதும்கூட நவீன இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. என் நவீன இலக்கியச்சார்பு, சங்கத் தமிழைக்கூட நவீன இலக்கியப்பாணியில் கற்பிக்கும் கலையை எனக்கு சொல்லித் தந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
‘அசடன்’ மொழிபெயர்ப்புக்கும், யாதுமாகி நாவலாக்கத்திற்குமான பயணத்தை எப்படி அடையாளப்படுத்துகிறீர்கள்?
இரண்டும் இரு திசை நோக்கியபடி இருக்கும் வெவ்வேறு பயணங்கள். அவற்றை ஒப்பிட முயல்வதுகூட சரியாக இருக்காது. குற்றமும் தண்டனையும், அசடன் ஆகியவை தஸ்தாயெவ்ஸ்கியின் அனுபவமும் கற்பனையும் இணைந்ததாய் அந்த நாட்டுக் கலாச்சாரப் பின்புலத்தில் அமைந்திருப்பவை. மேலும் அவை இரண்டுமே இன்னொரு மொழியிலிருந்து நான் செய்த மொழிபெயர்ப்புகள்.
யாதுமாகி என் சொந்தப்படைப்பு, நான் பெற்ற அனுபவங்களை, நான் உருவாக்கிக்கொண்ட புனைவுகளை எனக்குத் தெரிந்த பின்புலத்தில் பொருத்தி எனக்கே உரிய மொழியில் முன் வைக்கும் சுதந்திரத்தை எனக்குத் தரும் ஆக்கம்.
முன்னரே பல சிறுகதைகள் எழுதி, தேவந்தி எனும் தலைப்பில் அவை தொகுக்கப்பட்டிருந்தாலும், மொழியாக்கம் வழியாகவே பரவலாக கவனம் பெற்றீர்கள். இப்போது மீண்டும் உங்கள் யாதுமாகி நாவல் வெளிவருகிறது. மொழிபெயர்ப்பாளர் – புனைவு எழுத்தாளர் இவ்விரு அடையாளங்களில் எது உங்களுக்கு நெருக்கமானதாக இருக்கிறது? சவுகரியமானதாக இருக்கிறது? எது சவாலாக இருக்கிறது?
1979இல் வெளிவந்த என் முதல் சிறுகதையே -(ஓர் உயிர் விலை போகிறது- அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி)- முதல் பரிசு பெற்று எனக்கு அங்கீகாரம் தேடித் தந்த படைப்புத்தான். அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் என் பல சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகிக் கவனம் பெற்றவைதான். ஆனால் அந்தத் துறையில் மட்டுமே தீவிரமாக இயங்க முடியாதபடி என் பணிச்சுமை, நான் மேற்கொண்ட ஆய்வு, மற்றும் குடும்பச்சூழல் முதலிய பல நெருக்குதல்கள் இருந்ததால் அவ்வப்போது மட்டுமே எழுதியபடி ஒரு சிலரால் மட்டுமே அறியப்பட்டவளாக நான் இருந்தேன். பணி ஓய்வுக்குப் பிறகு கிடைத்த நிதானமான சூழலில் மொழியாக்க வாய்ப்பு தற்செயலாக என்னைத் தேடி வந்தபோது அதை நான் தட்டாமல் ஏற்றுக் கொண்டேன். சிறுகதைகளை எழுதி அனுபவப்பட்டிருந்ததால் நாவலை மொழிபெயர்க்கும் வேலையை உரிய கதை ஓட்டத்தோடு தர என்னால் முடிந்தது; எனக்கு அது மிக மிக எளிதாகவே இருந்தது.
மொழியாக்கம் வழியாக நான் பரவலாக கவனம் பெற்றது, பணி ஓய்வு பெற்று 56 வயதுக்கு மேல் என் இரண்டாம் ஆட்டம் துவங்கியபோது அதுவே என்னைப்பற்றி அதிகம் தெரிந்திராத இளம் தலைமுறை வாசகர்களிடம்- உலக இலக்கிய வாசிப்பை நாடி வரும் புதிய வாசகர்களிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதற்காக மொழியாக்கப் பணிகளுக்கு நான் மெய்யாகவே பெரிதும் கடன்பட்டிருக்கிறேன்.
ஆனாலும்கூட நான் நேசிக்கும்- பெற ஆசைப்படும் அடையாளம் புனைவெழுத்தாளர் என்பதுதான்; எனக்கு சவாலானதாக இருந்தபோதும் என் நெஞ்சுக்கு நெருக்கமானது அதுதான்.
மொழிபெயர்ப்புக்களை என்னால் மிக விரைவாக, இலகுவாகச் செய்துவிட முடிகிறதென்றால் அதன் பின்னணி என்னுள் இருக்கும் கதைசொல்லி மட்டுமே.
மொழிபெயர்ப்புச் செய்வதை நான் விரும்பவில்லை என்பது பொருளில்லை; குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கி போன்ற மகத்தான உலக இலக்கியப் படைப்பாளிகளைப் பெயர்க்கும்போது நான் பெறும் தரிசனம் உன்னதமானது. அந்தப்பணி என் மொழியை இன்னும் கூர்தீட்டிக்கொள்ள உதவுகிறது. கதையமைப்பை காட்சியமைப்பை இன்னும்கூட எப்படியெல்லாம் செம்மையாக்க முடியும் என்று எனக்குக் கற்றுத் தருகிறது. நான் செய்யும் படைப்பிலக்கியங்களுக்கு அது துணையாக இருக்கிறது. மொழிபெயர்ப்பை இயல்பான ஓட்டத்துடன் சரளமாகச் செய்வதற்கு என் படைப்பனுபவம் கைகொடுக்கிறது.
இந்த இரண்டுமே என் தமிழையும் படைப்பையும் ஒன்றை ஒன்று நிரப்பியபடி – சமன்செய்தபடி இருப்பதாகக் கொள்ளலாம்.
புனைவெழுத்தின் எல்லாவித வடிவங்களும் அதற்குண்டான சவால்களுடனும், தேவைப்படும் பிரயாசைகளுடனும் கடினமானவையே. உங்கள் பார்வையில் தேவந்தி சிறுகதை தொகுப்பு மற்றும் யாதுமாகி நாவலில் எது அதிகமான நிறைவை தந்தது? அடுத்ததாக மற்றுமொரு நாவலை தொடங்கும் எண்ணம் உண்டா?
எல்லாப் புனைவுகளையுமே ‘எழுதிப் பார்க்கும் முயற்சிகள்’ என்று கருதியபடிதான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். சிறுகதையின் வடிவம், அதன் சூட்சுமம் எனக்கு மிகவும் உகப்பானது; குறுகத் தரித்த குறள் போல மிகப்பெரிய செய்திகளையும்கூடக் கோட்டுச்சித்திரங்களாகக் காட்டிக்கொண்டு போவது சிறுகதை. அதற்கான எழுச்சி மட்டும் பிறந்தால் போதும், என்னால் உடனே அதை முடித்து விட முடியும். அப்படி ஒரு கண நேர மன எழுச்சியால் பிறந்த பல சிறுகதைகள் அபாரமான மன நிறைவை எனக்கு அளித்திருக்கின்றன.
ஆனால் நாவல் அப்படிப்பட்டதல்ல. அதற்கான திட்டமிடல், நீண்ட உழைப்பு, அமைதியான சூழல் இத்தனையும் சேர்ந்து அமைவதென்பது, என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் கடினமானதுதான். ஆனாலும்கூட யாதுமாகி நாவலை முடித்த கணம் எனக்குத் தந்த நிறைவு அலாதியானது; ஒற்றை நிகழ்வாக மட்டுமே – சிறுகதையாக மட்டுமே புனைவுகளைச் செய்து கொண்டிருந்த என்னால் நீண்ட தொடர்ச்சியுடன் கூடிய கதைப்பின்னலைத் தர முடிந்திருக்கிறதே என்ற ஆனந்தத்தால் விளைந்த நிறைவு அது. இன்னுமொரு நாவல் எழுத ஆவல்தான். கருவும் இருக்கிறது… பின்னித் தொடுக்க வேண்டும்; தக்க சூழ்நிலை கைகூடும் வேளையில் அது சாத்தியமாகலாம்.
வரும் ஆண்டுகளில் வேறு மொழியாக்கங்கள் செய்யும் திட்டம் ஏதுமுண்டா?
தஸ்தாயெவ்ஸ்கியின் குறுநாவல்கள் சிலவற்றை நான் செய்து முடித்திருக்கிறேன்; அது, தொகுப்பாக -இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின்பொழுதே வெளிவர வாய்ப்பிருக்கிறது.
மூன்று தலைமுறை பெண்களை பற்றிய கதை இந்நாவல் என அறிகிறோம். நாவலில் வரும் அன்னம்மாவின் சித்திரம் வெகுவாக சிலாகிக்கப்படுகிறது. அது உங்கள் அம்மாவின் சித்திரம் என்று சொல்லப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் இந்நாவலை பற்றி பேசுகையில் ‘புத்தகத்தின் வழியாக அம்மாவிற்கு எழுப்பப்பட்ட’ நினைவுச்சின்னம் என கூறியிருக்கிறார். இந்நாவல் ஒரு அம்மாவின் நினைவு என்பதைத் தாண்டி ஒரு காலகட்டத்தின் சமூக சித்திரம் எனும் இடத்தை அடைவதால், அக்கால சமூக சூழல்கள் எத்தகையதாக இருந்தன என்பதை விவரிக்கிறதா?
இதை ஒரு நாவல் என்று சொல்வதை விடவும் புனைவுப் போக்கிலான ஓர் ஆளுமையின் வாழ்க்கைச் சரிதம் என்பதே பொருத்தமானது. ஒரு வாழ்க்கை வரலாற்றை அப்பட்டமாக….நேரடியாக- bluntஆகச் சொல்லாமல் ஒரு புனைவுப்போக்குடன் சொல்லப் பார்த்திருக்கிறேன்… அதனால் அந்த ஆளுமையின் வாழ்வும் அவரது பலவகைப் பரிமாணங்களும் மட்டுமே இதில் முதன்மைப் படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் சமூகப் பின்னணியும் பொருந்தி அமைவது இயல்பான ஒரு நடப்பு…
தன் வாழ்வின் பக்கங்களை – குறிப்பாகத் தன் படிப்பு பல முறை பல காரணங்களாலும் விட்டுவிட்டுத் தொடர்ந்ததை நான் பதிவு செய்ய வேண்டுமென்பது என் தாயின் ஆறாத‌ விருப்பம். அவள் காலம் முடிந்து என் காலத்துக்குள்ளாவது அதை முடிக்கும் ஆதங்கமும் அதனால் விளையும் ஆத்ம நிறைவுமே இதன் இலக்கு.
கதையில் மூன்று தலைமுறைப் பெண்கள் வந்தாலும் அவர்களைப் பற்றிய குறிப்பும் சித்தரிப்பும் தேவி பாத்திரத்தை மையப்படுத்தி அதற்கு வலுச்சேர்க்க மட்டுமே.
தாயாய்த் தந்தையாய் சகலமுமாய் இருந்த அன்னையின் ஆளுமை தன்னுள் விதைக்கும் தேடல்களின் தடம் பற்றிக் குறுக்கும் நெடுக்குமாய்க் காலத்தை ஊடறுத்தபடி அவள் வாழ்வுக்குள் அகமுகப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறாள் மகள் சாரு. அந்தப் பயணத்தில் தேவியின் வாழ்க்கை ஏடுகள் புதிரும் பிரமிப்புமாய் விரிந்தபடி அவளைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன. தடைகளும் சவால்களும் முட்களாய் விரவிக் கிடந்த ஒரு பாதையில் மனத்திண்மை என்ற ஒற்றை மந்திரத்தை மட்டுமே உறுதியாகப் பற்றிக்கொண்டு – தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அது பற்றிய முழுமையான தன்னுணர்வோடு பதித்தபடி- அரற்றல்களோ ஆவேசக்கூச்சல்களோ இல்லாத அனாயாசமான லாவகத்தோடு அவற்றைப் புறங்கண்டு வென்றிருக்கும் அவளது சாதுரியம் அடுத்த தலைமுறைப் பெண்ணான அவளுக்கு வியப்பூட்டுகிறது.
எவராலும் பொருட்படுத்தப்படாத…, யாராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத இருட்டறை மூலைகளில் கிடந்து புழுதி படர்ந்து பாசி பிடித்து வீணடிக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுமே மலிந்திருந்த ஒரு வாழ்க்கை; அதற்குள் புதையுண்டு போயிருக்க வேண்டிய ஞானம்; இவற்றை அரிதாக வாய்த்த ஒரு சில ஊன்றுகோல்களால் மீட்டெடுத்தபடி தனக்கென்று ஒரு தகுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட தாயின் வாழ்க்கை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்னும் எண்ணம் அவளுக்குள் பிறக்கிறது; அதன் செயல்வடிவமே அவள் வரையும் தாயின் வாழ்க்கைச் சரிதம்.
அம்மாவை பற்றிய நினைவுகள் இந்நாவலின் அடித்தளம் மட்டுமே; அறுபது சதம் உண்மையும் மீதம் என் கற்பனையும் விரவியதே யாதுமாகி. அதனால் நிச்சயம் நிஜ ஆளுமைக்கும் இதற்கும் மாறுபாடுகள் இருக்கலாம்.- பலப்பல நிகழ்ச்சிகள், இடங்கள் மாற்றத்துடனேயே தரப்பட்டிருக்கின்றன.
‘’’புத்தகத்தின் வழியாக அம்மாவிற்கு எழுப்பப்பட்ட’ நினைவுச்சின்னம் ;என்று ஜெ சொன்னது உண்மைதான்; ஆனால் இது என் அம்மாவுக்கு மட்டுமானது இல்லை; பலரையும் தங்கள் அன்புத் தாய்மாரை நினைவு கூர வைக்கும் ஒட்டுமொத்தத் தாய்மைக்கான நினைவுச் சின்னம்; அப்படிப் பொதுமைப்படுத்திப் பார்க்கும்போதுதான் இதற்கு கலைத்தகுதி கிடைக்கிறது. இதில் வரும் அன்னம்மா என் தாய் இல்லை.
உங்கள் பார்வையில் நீங்கள் பெண்ணியத்தை எப்படி வரையறை செய்கிறீர்கள்? அப்பெண்ணிய பார்வை இந்நாவலில் வெளிப்பட்டுள்ளதா? நீங்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது சில ஆண்டுகளுக்கு முன்னர் இதை எழுதி இருந்தால் சில காழ்ப்புகளும் கோபங்களும் வெளிப்பட்டிருக்கக்கூடும், ஆனால் இன்று அப்படியான கசப்புக்கள் ஏதுமில்லை என கூறியிருந்தீர்கள், இத்தகைய மனமாற்றம் எப்படி சாத்தியமானது?
இது உறுதியாக ஒரு பெண்ணியப் படைப்புத்தான். ஆனால் நான் எழுதிய பெண் சார்ந்த பல சிறுகதைகளில் ஆவேசமும் கோபமும் உரத்துச் சத்தம் போடும்; ஆனால்… இதில் அதையே அடக்கி வாசித்திருக்கிறேன் என்றால் அதற்கு வயது முதிர்ச்சியால் கைகூயிருக்கும் விவேகமும், கசப்புக்களாலும் காழ்ப்புக்களாலும் மட்டுமே எதையும் சாதிக்க முடியாது என்ற புரிதலும் எனக்கு ஏற்பட்டதும் காரணமாக இருக்கலாம்.
வரும் புத்தக கண்காட்சியில் யாருடைய படைப்புகளை அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்?
குறிப்பாக அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு எதுவும் இல்லை;நல்ல நூல்களை எதிர்பார்க்கிறேன், அவ்வளவுதான்…

8.1.15

சென்னையில் ‘சங்கவை’

11.1.2015 மாலை 6மணி அளவில் பேராசிரியை ஜெயசாந்தி அவர்களின்
                                                                       ’சங்கவை’
நாவல்  வெளியீட்டு விழா நிகழவிருக்கிறது.

நாள்; 11/1/2015
இடம்;ஜீவன் ஜோதி சென்டர்[இக்சா]-எழும்பூர் மியூசியம் எதிரில்
நேரம்;மாலை 6 மணி

எழுத்தாளர் இமையம்,டாக்டர் சேது குமணன்,பேரா சரசுவதி,ஓவியர் செந்தில் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கும் இவ்வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்று சங்கவை நாவல் குறித்த மதிப்புரையையும் வாழ்த்துரையையும் ஆற்ற இருக்கிறேன்.

சென்னை வாழ் இலக்கிய ஆர்வலர்கள் விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன். 

1.1.15

'யாதுமாகி' நாவல் வெளியீட்டு விழா




கோவை : ''வாழ்க்கை என்பது மகத்தானது. அதில் கிடைக்கும் அனுபவம் அதை விட சிறப்பானது. எழுத்தாளர்கள் இந்த அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும்'' என, எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.
கோவையில் எழுத்தாளர் எம்.ஏ.சுசிலா எழுதிய 'யாதுமாகி' நாவல் வெளியீட்டு விழா ராஜஸ்தானி நிவாஸ் அரங்கில் நடந்தது. மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா தலைமை வகித்தார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்றார். நுாலை எழுத்தாளர் பாவண்ணன் வெளியிட, எழுத்தாளர் ஜெயமோகன் பெற்றுக்கொண்டு பேசியதாவது: வாழ்க்கை என்பது மகத்தானது. அதில் கிடைக்கும் அனுபவம் அதை விட சிறப்பானது. படைப்பாளர்கள் இந்த அனுபவங்களை தான் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்டி எழுப்பும் நினைவுச் சின்னங்கள் அழிந்து போக கூடியவை. எழுத்தில் பதிவு செய்வது எதுவும் அழியாது. அது இலக்கியமாகி காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.சுசிலாவின், 'யாதுமாகி' நாவல், ஜெயகாந்தனின் 'யுகசந்தி' நாவலை நினைவுப்படுத்துகிறது. ஒரு காலகட்டம் சென்று மறைந்து இன்னொரு காலகட்டம் உருவாகும் பொழுது, அதன் இடுக்கில் மட்டிக்கொண்ட மானுட உயிர்களின் வலி, யுகசந்தியில் சித்தரிக்கப்படுகிறது. அதே போல் இந்நாவலில் மூன்று தலைமுறைகள் வழியாக வாழ்க்கை அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, ஜெயமோகன் பேசினார்.

மத்திய கலால் வரித்துறை கூடுதல் கமிஷனர் மினுபிரமோத், மதுரை பாத்திமா கல்லுாரி முன்னாள் பேராசிரியர்கள் அனுராதா, பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....