துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.12.15

’சங்கவை’க்கு விருது


கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை  ஒவ்வொரு ஆண்டும் சிறந்ததமிழ் நாவல்களுக்கு திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் பரிசு வழங்கி சிறப்பித்து வருகிறது.

2015ஆம் ஆண்டுக்கான பரிசு எழுத்தாளரும் சென்னை லயோலா கல்லூரித்  தமிழ்ப்பேராசிரியருமான இ ஜோ ஜெயசாந்தி அவர்களின் ‘சங்கவை’நாவலுக்குக்கிடைத்திருக்கிறது.
[விருட்சம் வெளியீடு]


 900க்கு மேற்பட்டபக்கங்களைக்கொண்ட அந்த நாவல் உள்ளடக்கத்திலும் மிக வலுவானது. உயர் கல்விக்கூடங்களில் மாணவ நிலையிலும் ,ஆய்வுப்பணி மற்றும் ஆசிரியப்பணி மேற்கொண்டிருக்கும் நிலையிலும் பல தரப்பட்ட பல்வேறு வயதுடைய பெண்கள் ஆண்களின் ஆதிக்க அதிகார வெறிக்கும் பாலியல் சுரண்டல்களுக்கும் ஆளாகும் அவலங்களை மிக விரிவாக,நடப்பியல் போக்கில் நாவலுக்குரிய அழகியல் குன்றாமல் எடுத்து வைக்கும் படைப்பு அது,

இவ்வாண்டு தொடக்கத்தில் சங்கவை நாவலின் வெளியீட்டு விழா சென்னையில் நிகழ்ந்தபோது எழுத்தாளர் இமையம் அவர்கள் நாவலைவெளியிட்டு வாழ்த்துரை வழங்க,நாவலை முழுமையாக மதிப்புரை செய்து சொற்பொழிவாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதே இந்த நாவலுக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் காத்திருக்கிறது என்று எனக்குப்பட்டது.அதற்கேற்ப கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை இந்த நாவலைப்பரிசுக்குத் தேர்ந்திருப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.


1983 முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதற்கு முன் பெற்றுள்ள சில எழுத்தாளர்கள் ரசு நல்லபெருமாள்,இ பா., பிரபஞ்சன், நாஞ்சில் நாடன்,நீல பத்மநாபன் போன்றோர். அந்தப்பட்டியலில் சிவசங்கரிக்குப்பின்பு இந்த விருதைப்பெறும் பெண் எழுத்தாளர்  ஜெயசாந்தி என்பதும் ஒரு சிறப்பு.

சகோதரி  ஜெயசாந்தி அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
பரிசளிப்பு
நூலுக்குப் பரிசளித்து உரையாற்றும்
கவிஞர் சிற்பி



ஏற்புரை-ஜெயசாந்தி

17.12.15

’’வைகை பெருகி வர......’’

70களின் இறுதியில் மதுரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நான் எழுதிய ’’வைகை பெருகி வர......’’என்ற இந்தச்சிறுகதை இன்றைய சென்னைச் சூழலில் குடிசைவாசிகள் முதல் கோடீசுவரர் வரை அனைவருக்குமே பொருத்தமாக இருக்கிறது.

அதை இங்கே மறு பிரசுரம் செய்திருக்கிறேன்.

‘’ புள்ளே நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா..? வைகை அணையிலே தண்ணியைத் தொறந்து விடப்போறாங்க…சாயந்திரத்துக்குள்ளே ஊருக்குள்ளே தண்ணி வந்திடும்னு எத்தினி வாட்டி தமுக்கடிச்சு சொல்லிட்டுப் போறாங்க…நீ பாட்டுக்குக் குந்திக்கிட்டிருக்கே..’’
‘’இப்ப என்னை என்னய்யா செய்யணும்ங்கிறே..’’-அவள் கண்களின் தீனமான பார்வை அவனை ஒருகணம் நெகிழ்த்தி விட,கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.


‘’இத பாரு..நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்….சாமான்,சட்டி எல்லாத்தையும் நான் ஒரு சாக்குப்பையிலே தச்சு நம்ம வாத்தியார் வீட்டிலே போட்டுட்டு வந்திட்டேன்.மேலத் தெருப்பள்ளிக்கூடத்திலே தங்கவும்,சாப்பிடவும் வசதி செஞ்சு கொடுக்கிறாங்களாம்….பேசாம புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு’’
‘’அப்ப..வீட்டை அப்படியே விட்டுட்டுப் போயிடறதா..’’
‘’ஆமாம்..பெரிய வீடு….செமெண்ட்டும் தேக்கும் எளச்சு நீ கட்டின பங்களா பாழாப்போகுதாக்கும்..பாத்துப்பாத்துக் கட்டி வச்சவங்க எல்லாருமே இன்னிக்கு உசிர் பொளச்சாப் போறும்னு ஆலாப்பறக்கிறாங்க..நீ என்னடான்னா இந்த மண்குச்சை நெனச்சு மூக்கைச் சிதிக்கிட்டுக் கெடக்கே..’’


மறு வார்த்தை பேசாமல் முத்தம்மா எழுந்து கொள்கிறாள். தந்தையின் தோளில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து கொள்கிறான் மூத்த பயல் ரங்கன். மாற்றுப்புடவையும்,குழந்தை துணிமணிகளும் அடங்கிய ஒரு கித்தான் பையைத் தூக்கிக் கொண்டு,இடுப்பில் கடைக்குட்டி செல்வியை இடுக்கியபடி அவள் புறப்படுகிறாள்.கிளம்புமுன்,தனக்கு இத்தனை நாள் புகலிடம் கொடுத்து அரவணைத்துக் காத்த அந்த மண்குடிசையை அன்போடு,ஆசையோடு..ஏக்கத்தோடு ஒரு முறை பார்க்கிறாள்.
அவளைப்பொறுத்தவரை வெறும் மண்குச்சு மட்டும்தானா அது….? 

அவள் கனவுகளின் சொர்க்கமாய்..சில நனவுகளின் நிஜமுமாய்..அவளுக்கென்று அமைந்த அந்தரங்கமான ஒரு அந்தப்புரமாய்..அவளே தனியொரு ராணியாய் அரசோச்சிய மாளிகையாய்…எல்லாமாய் இருந்த ஒன்றல்லவா அது…..?


கனக்கும் தலைச்சுமையுடன் கழுத்தளவு,இடுப்பளவு நீரில் நனைந்தபடி நிவாரணமுகாமை நோக்கி நடக்கும் கூட்டத்துடன் அவர்களும் சங்கமித்துப் போகிறார்கள்.கால்கள் இயந்திர கதியில் நடந்தாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஒன்றை வலுக்கட்டாயமாகப் பிய்த்தெறிந்து விட்ட சோகம்..திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு வெறிச்சோடிப்போன மனத்தோடு திரும்பும் கையாலாகாத நிர்க்கதித்தன்மை இவையெல்லாம் நிரந்தரமாக அவளைத் தொடர்ந்து வருகின்றன.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’வாடி மருமவளே…வலது காலை எடுத்து வச்சு உள்ளாற வா..’’-புதுப்பொலிவோடு புது மருமகளாய் அவன் கரம் பற்றி அந்த வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த அந்த நாள் நினைவுகளில் அமிழ்ந்து போகிறாள்.
‘’அய்த்தே….நீங்க கொடுத்து வச்சவுகதான்…புது வீட்டுக்குக் குடி போன முகூர்த்தம் வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு மருமவளையும் கொண்டாந்திட்டீங்களே..’’
‘’மாத்திச் சொல்லாதேடி கூறு கெட்டவளே…! எல்லாம் என் மருமவளை நிச்சயம் பண்ணின வேளைதான்….பொறம்போக்கு நெலத்திலே ஒரு குடிசையாவது போட்டுக்க முடிஞ்சது…அததுக்கு நேரம் காலம் வரணுமில்லே..’’


முத்தம்மா புகுந்த வேளை பொன்னாய்ப்பொழியா விட்டாலும் பொங்கித் தின்னச் சோறும் தங்கியிருக்க நிழலுமாவது நிரந்தரமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஏழைக்குடும்பம் நிறைவு காண்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ந்தா இந்த ரொட்டியை சாப்பிட்டுப் படுத்துக்க..அப்பறமா கனாக்காணலாம்’’
‘’எனக்கு வேணாம்’’
‘’என்னடா இது பெரிய ரோதனையாப்போச்சு…புள்ளைங்க,நான் எல்லாரும் பக்கத்திலேயே இருக்கோம்.அவங்கவங்க சொந்த ஜனங்களை சாமானங்களப் பறி கொடுத்திட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்காங்க.நமக்கு அந்தக்கவலையும் இல்லை….இதிலே உனக்கு என்ன எளக்காரமாப்போச்சுன்னு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கே நீ..’’
’’ஏன்யா மெய்யாலுமே சொல்லு…அத்தை மட்டும் உசிரோட இருந்தா அந்த வீட்டை முளுக விட்டுட்டு நாம மட்டும் வர்றதுக்கு சம்மதிச்சிருக்குமா..’’


’’இத பாரு முத்தம்மா சும்மா அதயே பெனாத்திக்கிட்டுத் திரியாதே.. ஒரு வகையிலே அந்த வீடு இடிஞ்சு போனாக் கூட நமக்கு லாபந்தான்…இந்தக் குச்சுக்கு நாம செலவளிச்சதை விட சாஸ்தியான பணத்தை சர்க்காரு கிட்டேயிருந்து ஈட்டுப்பணமா வாங்கிடலாம்.அதை வச்சு வேற இடத்திலே இன்னும் வசதியா ஒரு வீடு கட்டிக்கலாம்….அதையே நெனச்சு மறுகாம செத்தே படு’’
‘’மச்சான் நீ கூடவா இப்படிப்பேசறே…நம்ம குடும்பத்தோட ஒண்ணா ஒரு கொளந்தை மாதிரி பாத்துப் பாத்து நாம வளத்த அந்த வீட்டை விட இன்னிக்கு வரப்போற ஈட்டுப்பணம் பெரிசாப்போயிடிச்சா உனக்கு..’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வனும் அவளுமாய் வியர்வை நீரூற்றித்தான் அதை வளர்க்கிறார்கள்.அவள் வந்த புதிதில் நான்கு கம்புகளும் உயரமில்லாத தாழ்ந்த மண்சுவருமாய் இருந்த வீடு,அவர்கள் உழைப்பின் ஊக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கிறது.


வீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாக இருக்கும் வேளையில் அவள் மண் சுமந்து வந்து தர,அவனும் அவளுமாய் சுவரை உயர்த்துகிறார்கள்.ஒரு காற்றடித்தால் பறந்து போய்விடும் ஓலைகளை மாற்றி விட்டு ஓடு வேய்வதற்குத் தன் பிறந்த வீட்டில் போட்ட இரண்டு பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைக்கச் சொல்கிறாள் அவள்.
‘’மண்ணு வீட்டுக்கு ஓடு போடறதுக்குத் தங்கச் சங்கிலியை வைக்கறதா…ஒங்கிட்டே உள்ளதே இந்த ஒரு நகைதான் நீ போட்டுக்க ஆத்தா..வேண்டாம்’’
அத்தை அவள் செயலைத் தீவிரமாய் மறுக்கிறாள்.
‘’அத்தை நாம எப்படியும் சங்கிலியை மீட்டுக்காம இருக்கப்போறதில்லை….அட..அதுக்காகவாச்சும் இன்னும் கொஞ்சம் ஒடம்பு வணங்கி ஒளைச்சிட்டுப் போறோம்.ஆனா ஓடு போடறதுக்காக அப்படி ஒளைக்க வணங்குமா….இல்லே அப்படி சிறுக சிறுக சேத்து வச்சாதான் செலவளிக்காம ஊறுகா போட்டு வைக்க முடியுமா..’’
எப்படியோ மல்லுக்கு நின்று நினைத்ததைச் சாதித்து விடுகிறாள்.


‘’ஏன் மச்சான் பணக்காரங்க வீட்டுக்குப் பேர் வைக்கிற மாதிரி நாம கூட நம்ம வீட்டுக்குப் பேரு எதினாச்சும் வச்சா என்ன’’
‘’போடி பைத்தியக்காரி…அவங்க பேரு வைக்கிறது தங்களோட அந்தஸ்தைக் காட்டிக்க…நமக்கு அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டிக்கிற மாதிரி என்ன இருக்கு’’

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’ந்தா முத்தம்மா…செல்லி அளுவுது பாரு…அதுக்குப் பாலு கூடக் குடுக்காம என்ன ரோசனை ஒனக்கு’’
-மூலைவீட்டு முனியம்மா பாட்டி முத்தம்மாவைக்கடிந்து கொள்கிறாள்.

சுய உணர்வு பெற்றவளாய்க் குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்க்கிறாள் அவள். எங்கும் முகங்கள்! வாடி இருந்தபோதிலும் உயிர் தப்பிய ஆறுதலைத் தெரிவிக்கிற முகங்கள் !வீட்டை விடத் திருப்தியாக ஒருவேளையாவது சாப்பிட முடிந்ததே என்ற அற்ப சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற சில பிஞ்சு முகங்கள்….நாளைய கவலையை ஒதுக்கி விட்டு இன்றைய இந்தப் பொழுதில் நிம்மதி காணும் முகங்களுக்கிடையே முத்தம்மா மட்டும் வேறுபட்டு நிற்கிறாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டு வேயப்பட்டு உயரமாய் நிற்கும் அந்த வீட்டைப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் அவள்.சுற்றிலும் வேலிக்காத்தான் செடிகள் மதிலாய் வளர்ந்திருக்க படல்கதவு ஒன்றையும் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.என்றைக்கோ அத்தை சப்பிப்போட்ட மாங்கொட்டை செடியாகி,மரமாகிப்பூக்க ஆரம்பித்திருக்கிறது.தவிர அவளே கொத்திப்போட்ட கீரைப்பாத்திகள்,கொய்யா மரம்,இன்னும் மல்லிகைப்பந்தல்!

’’சாமர்த்தியக்காரிதாண்டி நீ…தம்மாத்தூண்டுக் குச்சைக் கோபுரமாக்கினதோட தோட்டமெல்லாம் போட்டுத் தோப்புக்கணக்கா ஆக்கி வச்சிருக்கியே...ஹ்ம்…உங்க அத்தை இப்ப இல்லாத்தது ஒண்ணுதான் குறை…’’
‘’செங்கல் சுவரெடுத்துத் தளம் போடணும்னு பாக்கிறேன் முடியலியே ஆயா..’’
‘’தளம் போடாட்டி என்னாடி? அதுதான் சாணம் போட்டுபோட்டுச் சிமிட்டியாட்டம் மொளுகி வச்சிருக்கியே தரையை..’’-முனியம்மா பாட்டி மூக்கில் விரல் வைத்து வியக்கிறாள்.
ஆயாவின் தலை மறைந்ததும் முத்தம்மா ஆத்திரத்துடன் வெடிக்கிறாள்.
‘’மொதல்லே ஒரு பூசனிக்கா வாங்கிட்டு வந்து மூஞ்சி வரைஞ்சு தொங்க விடணும் மச்சான்…அந்தப்பொம்பளையோட பேச்சு ஒண்ணும் சரியில்லை..’’
‘’ஆமா…அவ கண்ணேறு பட்டுதான் ஒன்னோட வசந்த மாளிகை ஆட்டம் கண்டிடப்போகுதாக்கும்’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகாமுக்குள் சில பேர் வேகமாக ஓடி வருகிறார்கள்.அரைத் தூக்கத்திலிருந்த முத்தம்மாவின் கணவன் உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறான்.
‘’ஓடைப்பட்டிக் கம்மா ஒடைப்பெடுத்து வாய்க்காத் தண்ணி நம்ம குப்பத்தைச் சுத்திக்கிடிச்சு அண்ணே..நல்ல வேளை நீ பொளுதோட வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு வந்தே.....நம்ம குப்பன் பய வேலை முடிஞ்சு வாறதுக்குள்ளே வீட்டுக்குள்ளாற தண்ணி புகுந்திடிச்சு…சரித்தான்….உசிரு பொளச்ச மட்டிலே போறுமுன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு இங்கே ஓடியாந்துட்டான்’’
கண்மாய் வெள்ளம் தன் உயிரையே கொள்ளை கொண்டு போவது போன்ற மயக்கத்தில் சரிந்து விழுகிறாள் முத்தம்மா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யற்கையின் ஊழித்தாண்டவம் ஒருவழியாகக்கொஞ்சம் ஓய்ந்திருக்கும் அந்தக் காலைப்பொழுதில் ஒரு பிச்சியைப்போலத் தன் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா . நீர்ச் சுழிப்பில் ஒதுங்கிய தென்னை மட்டைகள்,இளநீர்க்குலைகள்,வாழைத்தார்கள் எல்லாவற்றையும் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறியவள்,அங்கே தன் கனவு மாளிகையின் அஸ்தமனக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
ஓடைத் தண்ணீர் அகழியைப்போல நாலு புறமும் சூழ்ந்திருக்க…நடுவே நான்கு மூங்கில் கழிகள்…,மேலே இன்னும் பறக்காமல் பலங்காட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் சில ஓடுகள்,மத்தியில் குவிந்து கிடக்கிற உடைந்து போன ஓட்டுத் துண்டுகள்,மரச்சட்டங்கள்!அப்பளமாய் நொறுங்கிப்போக் கிடக்கிற தன் சாம்ராச்சியத்தின் கோர முகம் கண்டு அருவருப்போ வெறுப்போ கொள்ளாமல் அந்த முழங்காலளவு நீரில் அவள் மெள்ள அடியெடுத்து வைத்து வருகிறாள்.சாணமிட்டு மெழுகி அவள் கோலமிடுகிற முற்றம்,பத்து வீடு கேட்கிறாற்போல ரங்கன் பயல் வாய்ப்பாட்டை உருப்போடுகிற அந்த உயரமான திண்ணை,அவள் கணவன் ஆசையோடு வாங்கிப்போட்ட நார்க்கட்டில் கிடக்கிற மூலை,வாய்க்கு ருசியாய் அவள் பலகாரம் சுட்டுப்போடுகிற சமையலறை ஓரம், அத்தை தன் இறுதி மூச்சை விட்ட வீட்டின் கீழண்டைக்கோடி,ரங்கனையும்,செல்லியையும் ஈன்ற களைப்பை ஆற்றிக் கொள்ள அவள் இளைப்பாறியிருந்த வீட்டின் தெற்குப்பார்த்த வாயில்புறம்……இன்னும்,இன்னும்..இன்னும் மறக்க முடியாதபடி அவள் நினைவுச்சுவட்டில் பதிவாகியிருந்த வாழ்வின் சில கணங்கள்,அவற்றோடு பிணைந்த அந்த வீட்டின் பகுதிகள் எல்லாம் அந்தக் கூளத்தினூடே அவள் கண்ணுக்கு மட்டும் தனித்தனியே எழுதி வைத்த ஓவியங்களாய்க்காட்சி தருகின்றன.
‘’வீடுங்கிறது வெறும் உயிரில்லாத ஒருபொருள் மட்டும்தானா..நாம வேணுமானா உயிரில்லாத பொருள்களால அதைக் கட்டியிருக்கலாம்….ஆனா..மனுஷ உணர்வுகளினாலே அதுக்கு உயிரூட்டின பிறகும் சீவனே இல்லாத ஒரு மரக்கட்டையா……மண்ணாலேயும் கல்லாலேயும் ஆன ஒரு வெறும் பொருளா அதைப்பாக்க மனுசங்களாலே எப்படி முடியுது?’
இப்படியெல்லாம் பேசப் படிக்காத முத்தம்மாவின் பாமர மனது ஊமையாய்க் கண்ணீர் வடிக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’முத்தம்மா! ஒன்னத்தான் புள்ளே ம்…..கெளம்பு கெளம்பு…வெள்ளம் வடிஞ்சாச்சு இன்னும் எத்தினி நாளைக்கு இங்கே வச்சு சோறு போடுவாங்க….வூட்டுக்குப் போகலாம்..பொறப்படு’’

‘’வூடா அது எங்கே இருக்கு?’’

‘’என்னா நீ..கம்மாத் தண்ணி சுத்திக்கிட்டிருக்குதுன்னு அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து பூட்டியா..?நல்ல காலம்..மதகுக்கு அப்பால நம்ம சந்து இருக்கிறதால அதிலே உள்ள நம்ம குடிசைங்க மட்டும் பொளைச்சிடிச்சு’’

‘’………………………………………’’

‘’என்னா புள்ளெ அப்படிப் பாக்கிறே….நான் சொல்றது நெசந்தான்..! நீ செஞ்ச புண்ணியம்….எங்க ஆத்தா ஆசை இதெல்லாம் வீணாப்போயிடுமா?’’
வியப்போடு கணவனைப் பார்க்கிற முத்தம்மா..,குழந்தைகளை ஆசையோடு நெஞ்சில் அழுத்தியபடி தன் மண்குச்சை நோக்கி…வெறி பிடித்தவளாய் மாளாத காதலோடு ஓடுகிறாள்.


அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அப்போதைக்கு வேறு இடத்தில் ஒதுங்கிக் கொண்டாலும் வெள்ளம் வடிந்ததும் முத்தம்மா ஓடி வருவது என்னவோ இந்தக் குடிசையை நோக்கித்தான்! அவளுடைய உலகம் ஸ்தாபிதமாகி இருக்கிற இந்த வீடு மீளாத துன்பத்தையே மீண்ண்டும் மீண்டும் தந்தாலும் அவளைப் பொறுத்த வரை அது ஒரு மீண்ட சொர்க்கம்தான்!


16.12.15

பேராழிக்கன்று

நான் தமிழ்ப்பேராசிரியராகப்பணியாற்றிய காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தை முதன்மைப்பாடமாகக்கொண்ட மாணவிகளைப்போலவே-சிலவேளைகளில் அதற்கும் கூடுதலான ஆர்வத்துடன் பொதுத்தமிழ் வகுப்புக்களை நேசித்த ஆங்கிலம்,வேதியியல்,இயற்பியல்,மனையியல்,சமூகவியல் ஆகிய பிற துறை மாணவிகள் -பலரைக்கண்டிருக்கிறேன்.அவர்களில்  உள்ளார்ந்த தாகத்துடன் மரபுத் தமிழையும் நவீனத் தமிழையும் தேடித் தேடி வாசித்தவர்களும் பலர் உண்டு;பின்னாளில் தமிழ்ப்படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிட்ட முத்திரைகளையும் சிலர் பதித்திருக்கிறார்கள்.
‘70களில் ஆங்கில இலக்கிய இளங்கலை மாணவியாக எனக்கு அறிமுகமான  ரங்கநாயகி,ஆங்கிலப்பேராசிரியராக மட்டுமன்றித் தன் தமிழ் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டபடி,  தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவராகவும் உருவானவர். ’சிநேகவனம்’என்னும் தனது அவரது முதல் கவிதைத் தொகுப்பை அடுத்து,
பேராழிக்கன்று’ என்னும் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இப்போது காவ்யா வெளியீடாக வந்திருக்கிறது.கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தமிழ்ப்பேராசிரியராகப் பழக்கமான என்னைத் தன் நினைவில் இருத்தித்  தன் நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு  பணித்த ரெங்கநாயகியின் அன்புக்கு நன்றி.

இன்னும் பல சிறந்த கவிதை நூல்கள் அவரிடமிருந்து வெளிப்பட வேண்டும் என்று என் மாணவி ரங்காவை அன்போடு வாழ்த்துகிறேன்.
பேராழிக்கன்று கவிதை நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை கீழே;



‘மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனியாய்’’….
[அணிந்துரை]
எம் ஏ சுசீலா

மானுட வாழ்வின் புறப்போராட்டங்கள், சமுதாயச்சிக்கல்கள் ஆகியவற்றைப் 

பதிவு செய்யும் புற உலகு சார்ந்த கவிதைகளின் உருவ உள்ளடக்கங்களும் 

அவற்றின் பயன்பாடும்  ஒரு வகைப்பாட்டைச் சேர்ந்தவை என்றால், தனிமனித 

உணர்வுக்கொந்தளிப்புகளை,,,, அக உளைச்சல்களை….., தன்னுள் தானே 

அமிழ்ந்தபடி நிகழும் மனிதத்தேடல்களைப் பொருளாகக் கொண்டமையும் 

தன்னுணர்வுக்கவிதைகள் முற்றிலும் வேறொரு தளத்திலானவை. 

முதல்வகைக்கவிதைகளின் இலக்குகள் வேறென்பதால் அவற்றைக் குறை கூற 

இயலாது என்றபோதும், கவிதை என்றொரு மகா அனுபவத்துக்குள் நம்மை 

ஆழ்த்தி, அனுபூதி நிலைக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடிய தகுதி படைத்தவை 

அகமுகக் கவிதைகள் மட்டுமே. ’’அவரவர் தம தம அறி அறி வகை ‘’என்று 

நம்மாழ்வார் குறிப்பிடுவது போல அவரவரின் வாசிப்புக்கும் உணர்வு 

நிலைக்கும் ஏற்றபடி வெவ்வேறான அனுபவங்களையும் தரிசனங்களையும் 

வழங்குபவை இத்தகைய கவிதைகள். கவிதை வாசிப்பை இலகுவான ஒரு 

பொழுதுபோக்காகக் கொள்ளாமல் அதைத் தீவிரமான ஒரு பயிற்சியாக சாதகம் 

செய்வோருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியவை இத் தரிசனங்கள். 

ஊன்றிப் படிப்பதற்கே உழைப்பைக்கோரும் இத்தகைய 

அகநோக்குக்கவிதைகளை உருவாக்குவதென்பது ஒரு வேள்வி ! ‘’வைகல் எண் 

தேர் செய்யும் தச்சன்’’’,  மாதம் முழுவதும் முயன்று உருவாக்கும் ஒரே ஒரு 

தேர்க்காலைப்போல மனமென்னும் தறியில் ஒவ்வொரு இழையாக நெய்வதில் 

தொல்லை இன்பத்து இறுதி காண்போர்க்கே கைவரும் கலை அது. 

அந்தக்கலையில் தேர்ந்திருக்கும் கவிஞர் ரங்கநாயகியின் முழுப்பரிமாணமும் 

வீரியத்தோடு கூடிய எழிலான சொல்வீச்சுக்களோடு அவரது ‘பேராழிக்கன்று’ 

என்ற இந்தத் தொகுப்பின் கவிதைகள் அனைத்திலும் சிறப்பாகப் 

பதிவாகியிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடும், வாசிப்பும், படைப்பிலக்கியப்பயிற்சியும் 

கொண்டிருப்பவர்களுக்கு ஆங்கில இலக்கியப்பின்னணியும் கூடச்சேரும்போது 

அவர்களின் படைப்புக்களில் கூடுதல் ஆழமும் செறிவும் கூடிவிடுவதைப் பல 

படைப்பாளிடமும் காணமுடியும். ரங்கநாயகிக்கும் அந்த வாய்ப்பு 

கிட்டியிருக்கிறது. ஆழ்வார்களின் பிரபந்தத் தமிழிலும் அவர் தோய்ந்து 

கலந்திருப்பதால் அவற்றில் கொழிக்கும் அழகையெல்லாமும் கூட நவீன 

வாசகர்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன அவரது கவிதைகள். 

இந்தத் தொகுப்பின் தலைப்பான ’பேராழிக்கன்று’ என்ற மாறுபட்ட 

சொல்லாட்சியே அதை உறுதி செய்கிறது.

‘’இன்று தென்படும் நாளைகளின் 

நம்பிக்கைத் தொலைவுகள்

நாளைகளின் நாளைகளில் நீண்டபடி…’’

என மனித இருப்பின் சலிப்பான கணங்கள், அவற்றினூடே மாயம் காட்டும் 

உருவெளி பிரமைகள், வாழ்வின் முக்கிய கணங்களான பிறப்பும் இறப்பும் 

கிளர்த்தும் முடிவற்ற தேடல்கள் ஆகிய பலவற்றையும் இருப்பியல்வாத, 

சர்ரியலிச,நவீன-,பின் நவீனத்துவ பாணிகளில் கலைநயம் குன்றாமல் 

ரங்கநாயகியின் கவிதைகள் முன்வைத்துக்கொண்டே செல்கின்றன.

யாசித்துப்பெற விரும்பாத அன்பைப் 

‘’பொழிய மறுக்கும் மேகம் கண்டு நனைய மறுத்து முகம் திருப்பிக்கொள்ளும் 

நில’’மாகக் காட்டும் படிமம்,

சிலந்தி வலையைச் சிக்கலுக்குள் வலியச் சிக்கிக்கொள்ளும் மனித மனமாய்க் 

காட்டும் படிமம் என நவீன கவிதை வெளிக்கே உரித்தான வித்தியாசமான பல 

படிமங்கள் இவர் கவிதைகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

‘’மழைக்காலக் கதவிடுக்கில் சிக்கிய கைவிரலாய் நசுங்கிப்போகிறது மனம்’’, 

‘’பேராழி மூன்றும் திரும்பக்

பெற்றுக்கொண்டுவிடுவதான

அபாயத் தொங்கலாய்த் 

தென் இந்திய வரைபடம் போலத் தத்தளிக்கிறது’’

என இரசனைக்குரிய உவமைகளுக்கும் தொகுப்பில் குறைவில்லை.

சுனாமியின் பிணச்சூறாவளி பற்றிய பதிவுகள் குறும்,நெடும் கவிதைகளாகத் 

தொகுப்பில் மலிந்து கிடப்பது, இந்தக் குறிப்பிட்ட தொகுப்பின் மையத்தையே 

அந்த உள்ளடக்கம்தான் முடிவுசெய்திருக்கக்கூடுமோ என்று எண்ண 

வைக்கிறது. அந்த வரிசையில் ‘கன்னியாகுமரி கொண்டுபோய் விட்ட ஸதிக்கு’ 

ஒரு முக்கியமான கவிதை. ஊழிப்பெருவெள்ளத்தில் உலக ஓட்டமே ஓய்ந்து 

போகும் தருணத்தில் ஆலிலையில் மிதந்து வந்து அடுத்த யுகத்தை ஜனிக்க 

வைக்கும் திருமாலின் தொன்மத்தை நினைவூட்டுவது அதே வரிசையிலான 

’பேராழிக்கன்று’.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறிவதில்லை; அது போலத் தன் 

’’மீதேறி ஓடிப்பிடித்து

விளையாடும் அணிலிரண்டின்

உராய்தல்களில்

சலனமின்றி இருக்கிறது’’ 

ஜன்னல் வழி காட்சியாகும் தூங்குமூஞ்சி மரம். இது ஓர் அற்புதமான 

காட்சிப்படுத்தல்.

தன்னை விட்டு எப்போதைக்குமாய்ப் பிரிந்து போன ஒன்று இப்போது எந்த 

வடிவத்தில் எதுவாக இருக்கிறது..அல்லது அது எல்லா இடத்திலும் யாதுமாகி 

நிறைந்திருக்கிறதா என்று தவித்தபடி 

‘’எதுவாகிப்போனாய் நீ என்பதறிய

பதறுகிறது மனம்’’

என்று தேடும் ‘யாதுமாகி’. நாம் கற்பனை கூடச்செய்து பார்த்திராத 

’‘குளியலறை கரப்பான் விழிகளில்….சாம்பிராணி புகைக்கூண்டில், அரிவாள் 

மணைக்கூரிழை விளிம்பில்’’ என்று இவைகளிலெல்லாம் கூடத் தான் 

தொலைத்ததைக் கண்டடைய ஆதங்கம் கொள்கிறது . பிரிவின் துயரை 

மட்டுமன்றி அதன் பித்து நிலையினையும் அபாரமாகப் பதிவு செய்து இத் 

தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக நெஞ்சில் இடம் பிடிக்கிறது 

‘யாதுமாகி’ என்னும் இக்கவிதை.. 

தொகுப்பில் மேலோங்கித் தென்படும் நம்பிக்கை வறட்சிக்குரலுக்கு நடுவே

‘’நண்பகல் காக்கையின் அநாயாச ஒற்றைக்கூவல்…

 புரட்டும் விரல் புத்தக ஓசை

 எங்கோ தொட்டில் ஒன்றின் சிணுங்கல்’’

என ‘’அத்தனையும் இசையாய் இருக்கும்பிரதேச’’த்தையும் சொல்லும் 

‘கமகவெளி’ ஒரு சிறிய ஆறுதல். 

‘சிநேகவனம்’ என்ற முதல் தொகுப்புக்குப் பிறகு வரும் ரங்கநாயகியின் 

இரண்டாம் தொகுப்பு இது. 

‘’சுட்டிப்பெண் போல

மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனி போல’’

என இவர் கவிதைக்குச் சொல்லும் இலட்சணங்கள் பொருந்தி அமைந்து 

சொல்வளமும் அடர்த்தியும் எடுத்துரைப்புத் திறனும் கொண்ட கவிதைகள் 

பலவும் இத் தொகுப்பில் மெருகு கூடிப்பொலிகின்றன. படைப்பாக்கத் 

துறையில் ரங்கநாயகி அவர்கள் மேலும் பல முயற்சிகளை 

மேற்கொள்ளவேண்டுமென்றும், இருண்மையான கவிதைகள் நம் நலிவையும் 

சோர்வையுமே முன் வைப்பவை என்ற மாயையைத் தகர்த்து வாழ்க்கை 

நேசத்துக்குரியது, குதூகலத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியது, 

அனைத்துக்கும் மேலாக நம்பிக்கைக்கு உரியது என்ற உத்வேகமூட்டும் 

கலைப்படைப்புக்களும் இவரிடமிருந்து வெளிப்பட வேண்டுமென நான் 

அன்பின் உரிமையோடு கோருகிறேன்.

என் அன்புக்குரிய முன்னாள் மாணவியும் கவிஞரும் பேராசிரியருமான 

ரங்கநாயகிக்கு என் உச்சிமுகர்ந்த பாராட்டுக்கள். இத்தொகுப்பை அழகுற 

வெளியிட முன் வந்திருக்கும் காவ்யாபதிப்பகத்தார்க்கு என் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....