15.2.24

'சிறுமைகளும் அவமதிப்புகளும்'-வாசகக் கடிதம்

 

அன்புள்ள அம்மைக்கு,

இப்போதுதான் 'சிறுமைகளும் அவமதிப்புகளும்' படித்து முடித்தேன். தஸ்தயெவ்ஸ்கி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிறப்பு உண்மையிலேயே இந்த நாவலில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

பாவப்பட்டவர்கள், வெண்ணிற இரவுகள் போன்ற ஆக்கங்களால் அவர் முன்னரே புகழ்வெளிச்சம் அடைந்திருந்தாலும், பிற்காலத்தில் அவர் இயற்றிய பெரும்படைப்புகள் அனைத்திற்கும் மூலமாக விளங்குகிறது இந்த 'சிறுமைகளும் அவமதிப்புகளும்'.

இந்நாவலில் வரும் வால்காவ்ஸ்கிதான் கரமசோவ் சகோதரர்களில் வரும் தந்தை கரமசோவாக மறுபிறப்பெடுக்கிறான். இந்நாவலில் வரும் அல்யோஷாதான் அசடனில் வரும் மிஷ்கினாக உருமாறுகிறான். இந்நாவலில் வரும் நடாஷாதான் குற்றமும் தண்டனையும் புதினத்தில் வரும் சோனியாவாக மிளிர்கிறாள்.

ஒரு பெருங்காடே மிகச்சிறிய ஒற்றைவிதையால் உருவாவது போல, அவருடைய பெரும்படைப்புகள் அனைத்தும் இந்நாவலில் நுண்வடிவங்களாக திகழ்கின்றன.

சினத்தில் 70 கோபெக்குகளை நெல்லியை நோக்கி வீசியெறிந்துவிட்டு கதவைச் சாத்தும் ஸ்மித், இருட்டில் அதை பொறுக்க அவள் சிரமப்படுவாளே என்று வேதனைப்பட்டு,
பின்னர் கதவை திறந்துகொண்டு கையில் விளக்குடன் வெளிவரும் இடம், மிகவும் அழகு. விளக்கோடு வந்தது மட்டுமல்லாமல் சிறிது நேரம்கழித்து கூடவே தானும் அவளுடன் சேர்ந்து நாணயங்களை பொறுக்குவதெல்லாம், கவிதை.

இதற்காகத்தான் நான் எப்போதும் தஸ்தயெவ்ஸ்கியை விரும்பிப் படிக்கிறேன். அத்தனை கசப்புகளுக்கு இடையிலும்  எட்டிப்பார்க்கும் அந்த மனிதம்... அதுதான் தஸ்தயெவ்ஸ்கி.

நெல்லியும் எளிய சிறுமியல்ல. தூக்கியெறியப்பட்ட 70 கோபெக்குகளை தன் அன்னையின் மருத்துவச் செலவுக்காக அப்போது பொறுக்கியெடுத்துக் கொண்டு போனாலும், அடுத்த நாளே பிச்சை எடுத்து சம்பாதித்து, அதே போல் 70 கோபெக்குகளை ஸ்மித்தின் வீட்டுவாசலில் எறிந்துவிட்டு ஓடுகிறாள்.

உணவு விடுதியில் வால்காவ்ஸ்கி, தான் உண்மையில் எப்படிப்பட்ட மனிதன் என்பதை வான்யாவுக்கு உணர்த்தும் இடம், சாத்தானே நேரில் வந்து வாக்குமூலம் அளிப்பதை போல் இருந்தது.

வீட்டைவிட்டு ஓடிப்போன தன் மகளுக்கு அன்போடு கடிதம் எழுதத் தொடங்கிய நிகோலாய் செர்கிச், தான் அதுவரை எழுதிய அன்பார்ந்த வரிகளைப் படித்துவிட்டு, தன்னுடைய மெல்லுணர்வுகளால் தானே கசப்படைத்து, மகளை சபித்து எழுதி கடிதத்தை முடிக்கும் போது நான் மிகவும் வியப்படைந்தேன். ஒரு மனினுக்குள்தான் எத்தனை எத்தனை மனிதர்கள்.

உங்களுடைய மொழியாக்கம் எப்போதும் போல் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

//நன்கு சாப்பிட வசதி படைத்தவர்களால் பசித்தவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியாது என்று பொதுவாகச் சொல்வதுண்டு. பசித்தவர்களாலும் கூட பசித்தவர்களைப் புரிந்துகொள்ள முடியாது என்று சேர்த்துக் கொள்கிறேன் நான்.//

இந்த வரிகளில்தான் எவ்வளவு உண்மை.

இறுதிவரை நெல்லி வால்காவ்ஸ்கியை மன்னிக்கவே இல்லை என்று நாவல் முடிகிறது. எப்படி மன்னிக்க முடியும்?...அகத்துள் நுழையும் விழிநீரின் ஈரம்தான் எப்போதும் காய்வதே இல்லையே.

- மணிமாறன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக