துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.10.16

தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில் - 6

நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரையின் ஆறாவது பகுதி
சூரியனின் கதிர்கள் தங்களை மிக மிகத் தாமதமாகவே சுருக்கிக் கொள்ளும் கோடைகால பீட்டர்ஸ்பர்க் இரவுகள்...,  'வெண்ணிற இரவு’களாய்க் கொண்டாடப்படுவதே செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் தனித்துவம். பொதுவாக அடர் கறுப்பு நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும் இரவுப் பொழுதுகள்..., நிலவொளியை விடவும் கூடுதல் பிரகாசமான சூரிய வெண்மையில் குளிக்கும் போது அவற்றுக்கு 'வெண்ணிற இரவுகள்'  [WHITE NIGHTS] என்று நகைமுரணாகப் பெயர் சூட்டி மகிழும் அந்த நகரத்து மக்களின் உள்ளம் தான் எவ்வளவு ரசனை மிக்கது?  ஆண்டின் பெரும்பாலான நாட்கள்துளிகளாகவும், வில்லைகளாகவும், கட்டிகளாகவும் விடாமல் பெய்துவரும் பனிப்பொழிவை மட்டுமே கண்டு அதற்காகவே  வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளும் பீட்டர்ஸ்பர்க் வாசிகள்  உல்லாசமாக வெளியுலகில் சஞ்சரிக்க வழியமைத்துத் தருபவை இந்த வெண்ணிற இரவுகள்...!  குறிப்பாகக் காதல் வயப்பட்டவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்தப் பருவ காலத்தில், கருவுறும் பெண்களின் எண்ணிக்கையும் கூட மிகுதியாக இருக்கும் என்று பீட்டர்ஸ்பர்க் நகரின் வழிகாட்டியாக நேற்று எங்களோடு இணைந்து கொண்ட கேத்தரீனா கூறியதை நினைத்துக் கொண்டே உறங்கிப் போன நான் கண் விழித்தபோது,  மணி விடியற்காலை நான்கைக் கூடத் தொட்டிருக்கவில்லை.  அதற்குள் புலரியின் பொன்னொளிச் சாயல் அறைக்குள் படரத் தொடங்கி விட... அதற்கு மேல் உறக்கம் பிடிக்காதவளாக… பீட்டர்ஸ்பர்க் நகரத்தைப் பற்றி நான் குறித்துக் கொண்டு வந்திருந்த தகவல்களின் மீது கண்களை ஓட்டத் தொடங்கினேன்.

தாமரை மொட்டுப் போன்ற கோயில்.., அதைச் சுற்றியுள்ள அடுக்கடுக்கான இதழ்களைப் போன்ற சதுரம் சதுரமான வீதிகள் என அழகுற அமைந்திருக்கும் என் தென்மதுரையைப் போலவே இந்த பீட்டர்ஸ்பர்க் நகரமும் மிகுந்த சிரத்தையோடு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.   ரஷ்ய நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும். உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாகவும் திகழும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்சக்கரவர்த்தி மகாபீட்டர்  கண்ட மகத்தான ஒரு கனவின் எழிலார்ந்த புறவடிவம். மாஸ்கோவை விடவும் கூட இந்நகருக்கே முதன்மை தர எண்ணிய மகா பீட்டர். அங்குள்ள கட்டுமானப் பொருட்களையும் பணியாளர்களையும் இங்கே வருவித்து அழகான பல கட்டிட அமைப்புக்களை அசுர வேகத்தில் உருவாக்க முனைந்ததில் பிறந்ததே ரஷ்யநாட்டுக் கலாசாரத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்நகரம். 

இங்கிருந்து இரண்டரை மணி நேரத்துக்குள் கடல் வழியாக ஐரோப்பாவின் பின்லாந்து நாட்டுக்குச் சென்று விட முடியுமென்பதால்  இது ஒரு வகையில் ஐரோப்பாவின் நுழைவாயிலாகவும் சொல்லப்படுகிறது.   நேவா ஆறு, பால்டிக் கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் பீட்டர்ஸ்பர்க் நகரில் ,  நகரக் கட்டுமானத்தோடு ரஷ்ய நாட்டின் கப்பற்படைத் தலைமை அலுவலகமும் (அட்மிரேலிடி) அப்போது முதலே உருவாக்கப்பட்டு இங்கே இயங்கி வருவதும் அதுபற்றியே. .

2003ஆம் ஆண்டில் தனது முந்நூறாவது ஆண்டுநிறைவைக் கொண்டாடிய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்,  ரஷ்யநாட்டு நகரங்களிலேயே  பெரிதும் ஐரோப்பியத் தன்மை கொண்ட ஒன்றாக-அந்தப்பாணியில் அமைந்திருக்கிறது. 1713 – 1728, மற்றும் 1732 -1918 ஆகிய இரு காலகட்டங்களிலும் மன்னராட்சிக்கால ரஷ்யாவின் தலைநகராக விளங்கிய பெருமையும் இதற்கு உண்டு. 1918ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரம் மீண்டும் இங்கிருந்து மாஸ்கோவுக்கே மாற்றப்பட்டு அரசு அலுவலகங்களும் அங்கிருந்தே செயல்படத் தொடங்கின.
காலப்போக்கில் இந்த நகரத்தின் பெயர்கள், சில மாற்றங்களுக்கு உள்ளானதும் உண்டு.  1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரின் போது  பெட்ரோகிராட் என்றும். 1924 இல் தலைவர்  விளாடிமிர் லெனின் காலமான போது அவர் நினைவாக  லெனின் கிராட் என்றும் அழைக்கப்பட்டாலும் 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற தொன்மையான பெயரே இன்றளவும்  இந்நகருக்கு நின்று நிலைத்து  வழங்கி வருகிறது.

ஓவியம், இசைநடனம் (பாலே) முதலிய நுண்கலைகளின் இருப்பிடமாகவும். அலெக்ஸாண்டர் புஷ்கின். தஸ்தயெவ்ஸ்கி போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த இடமாகவும் விளங்கிய இந்த நகரம். மிகச் சிறந்த பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுடன் கல்வி வளர்ச்சிக்கும் கணிசமான பங்கை ஆற்றி வருகிறது. இந்தியாவில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வசதியற்ற மாணவர்கள், குறைவான கட்டணத்தில் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளரஷ்ய நாட்டின்-  குறிப்பாக பீட்டர்ஸ்பர்கின் மருத்துவக் கல்லூரிகள் வழி அமைத்துத் தருவதாலேயே அவ்வாறு பயின்று வரும் தமிழக மாணவர்களைப் பகுதி நேரப் பணியாளர்களாக நேற்றைய சுற்றுலாவின் போது நாங்கள் உணவு விடுதியில் சந்திக்க நேர்ந்தது.
               
செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நாங்கள் தங்கியிருந்த பார்க் இன் விடுதி. மாஸ்கோவின்  அஸிமுட் விடுதியைப் போல அத்தனை விசாலமான அறைகளுடன் இல்லையென்றாலும். தேவைக்கேற்ற வசதிகளுடனும், கச்சிதமான ஒழுங்குடனுமே இருந்தது.  அது அமைந்திருந்த இடம். தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் வருணிக்கப்படும் வாஸிலெவ்ஸ்கி தீவு என்பதால், அந்த இடத்தின் மீதான ஒட்டுதல்  சற்றுக் கூடுதலாகவே  என்னைக் கிளர்ச்சியுறச் செய்து கொண்டிருந்தது.   ஆறுகள் கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிகளில் அவ்வாறான குட்டித் தீவுகளை மிகுதியாகக் காண முடிவதும் கூட இரசனைக்குரிய ஒரு காட்சிதான்!

சிற்றுண்டியை முடித்துக் கொண்டு காலை பத்து மணி அளவில் நகர் உலாவுக்குச்செல்ல ஆயத்தமானோம்.  ரஷ்யாவின் அரசியல் தலைநகராகக் கம்பீர மிடுக்குடன் – ஸ்டாலினிய பாணிக்கட்டிடங்களோடு தோற்றம் தந்த மாஸ்கோவுக்கு மாறாகப்  பன்முக எழில் உருவ அமைப்புக்கள் பலவற்றோடு  எங்களை  வரவேற்றது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்.  இங்கும் கூட மாஸ்கோ போலவே அடுக்குமாடிக் குடியிருப்புக்களும், அலுவலகங்களும், வணிக வளாகங்களும் நிறைந்து கிடந்தாலும். மக்கள் நடமாட்டம்  கொஞ்சம் அதிகமான உயிர்ப்போடு இருந்ததைக்காண முடிந்தது. சாலைகளின் ஒட்டத்திலேயே  இடையிடையில் குறுக்கிடும் பசுமையும், தூய்மையுமான பூங்காக்கள்....! அங்கே  உள்ள இருக்கைகளில் , புல் தரைகளில் ஓய்வாக, உல்லாசமாகப்  பொழுதுபோக்கும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள்!


விடுதியிலிருந்து கிளம்பிய எங்கள் பேருந்து, செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மையமாகக் கருதப்படும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட் என்னும் மிகப் பெரிய விசாலமான வீதி வழியே சென்று கொண்டிருந்தது. உலகின் மிகப்பெரிய தெருக்களில் ஒன்றான நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்ட், தேவலாயங்கள் உள்ளிட்ட எழிலார்ந்த பல கட்டிட அமைப்புக்களைக் கொண்டிருப்பது

அங்காடிகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் ஆகிய பலவற்றோடு அமைந்திருக்கும் இந்தத்தெரு. ’இரவு வாழ்க்கை’க்கும் பெயர் பெற்றிருப்பது..
நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் ஜுர வேகமான வாழ்க்கை ஓட்டத்தை, அந்தத் தலைப்பிலேயே புனைகதையாக்கித் தந்திருக்கிறார் , ரஷ்ய எழுத்தாளர் நிகோலாய்  கோகோல்.  ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவலானகுற்றமும்தண்டனையும்’. மற்றும் 'பீட்டர்ஸ்பர்க் கவிதை' [ST PEETARSBARG POEM]  என்ற மாற்றுப் பெயர் கொண்ட அவரதுஇரட்டையர்’ [THE DOUBLE] நாவல் ஆகியவை பெரும்பாலும் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டை  நிலைக்களனாக வைத்து  நிகழும் சம்பங்களையே மிகுதியாகக் கொண்டிருக்கின்றன.

அரைவட்ட வடிவம் கொண்டதும், நிறையத் தூண்களோடு கூடியதுமான  ஐசக் தேவாலயம், கம்பீரமான மேற்கூரையோடு பீட்டர்ஸ்பர்கின் தனித்த முத்திரையாகவே காட்சி தரும் கஸான் தேவாலயம் ஆகியவை, தங்கள்  கட்டிடக் கலை நுணுக்கங்களால் நெவ்ஸ்கி ப்ராஸ்பெக்டின் அழகுக்கு அழகு சேர்ப்பவை. .

தொடக்க காலகட்டத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய முதன்மையான தேவாலயமாக விளங்கியிருந்த  ஐசக் பேராலயம் 1818-1858 களில் ஃபிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. தங்க நிறத்தில் தகதகக்கும் இதன் மேற்கூரையே இன்றளவும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின்   வானளாவிய சிகரத்தைப்போன்ற அடையாளச்சின்னமாக  விளங்கி வருகிறது.

ரோமாபுரியின் வத்திகான் நகரில்  இருக்கும் செயிண்ட் பீட்டர் பசிலிக்கா பேராலயத்தின்  வடிவமைப்பால் தூண்டுதல் பெற்று,  அதை இன்னொரு பிரதி எடுத்ததைப்போலக் காட்சி தரும் கசான்மாதாவுக்கான (LADY OF KAZAN) தேவாலயம் கட்டிடக் கலையின் அற்புதமாய்ப் பொலிந்து கொண்டிருப்பதும் இங்கேதான்..ரஷ்ய ஆசார மரபை ஒட்டிய  தேவாலயங்களில் முக்கியமானதாக எண்ணப்படும்  இந்த ஆலயம் , 1812 ஆம் ஆண்டு, நெப்போலியனோடு நிகழ்ந்த போரில் - அவன் தோற்கடிக்கப்பட்ட பிறகு  இந்த நாட்டின் வெற்றிச் சின்னமாகவே கருதப்படலாயிற்று- அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் திறன் படைத்தகஸான் மாதா’வின் பெயரால் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திற்குள்ளேதான்  நெப்போலியனுடனான போரைத் தலைமையேற்று நடத்திய படைத்தலைவர் மிக்கேல் குடுசோவின் கல்லறையும் அமைந்திருக்கிறது. 1932 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவின் சமயம் சார்ந்த வரலாற்றையும், அதன் நாத்திக வாதக் கோட்பாடுகளையும் கூட வெளிக்காட்டும் காட்சியகம் இதனுள் உருவாக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு நிறுத்தப்பட்டு விட்ட பூசனைகள்  அண்மைக்காலமாக  மீண்டும் நிகழத் தொடங்கியிருந்தாலும் ஆத்திக, நாத்திகக் காட்சியகம் இன்னும் கூட இங்கே இயங்கி வருகிறது. பிரம்மாண்டமான வெண்கலக் கதவுகளும், அரண்மனை போன்ற எடுப்பான தோற்றப் பொலிவும் கொண்ட இந்த ஆலயத்தை நேவா ஆற்றின் பின்னணியில் பொருத்திக் காண்பது சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சி.


இளநீலப் பணிவண்ணத்தில் தங்க மயமான ஐந்து மேற்கூரைகளுடன் ஜொலிக்கும் மற்றொரு கட்டிடம் செயிண்ட் நிக்கோலஸ் தேவாலயம், கடற்படை வீரர்களுக்கும், மாலுமிகளுக்கும், பயணிகளுக்கும் வழிகாட்டிப் பாதுகாப்புத் தரும் செயிண்ட் நிக்கோலஸ் என்ற தெய்வத்தின் ஆலயமாகப் போற்றப்படும் இந்த ஆலயத்தின்  நுட்பமான வேலைப்பாடுகளும்... கண்ணுக்கினிய வண்ணச் சேர்க்கையும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு மேன்மேலும் அழகூட்டுபவை.

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்யக் கலைப்பாணிக்குச் கட்டியம் கூறும் செயிண்ட் நிக்கோலஸ் ஆலயத்தை உருவாக்கும் கனவு, பீட்டர் பேரரசரின் உள்ளத்தில் உதித்த போதும் அவரது மகள் எலிசபெத்தால் தொடங்கப்பட்ட பணி, பின்னர் இரண்டாம் காதரினின் காலகட்டத்திலேயே நிறைவு பெற்றிருக்கிறது.  ஆலயத்தின் நேர் எதிரில் இருக்கும் அழகான மணிதாங்கிய கோபுரம் (BELL TOWER) இதன் எழிலை மேலும் எடுப்பாக்கிக் காட்டுகிறது.


விதம் விதமான கட்டிடக் கலை அமைப்புக்களுடன் கூடிய பேரலாயங்களின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு தவற விடாமல் பார்த்தாக வேண்டிய முக்கியமான ஓர் இடமாக எங்கள் வழிகாட்டி எங்களை அழைத்துச் சென்ற இடம்... 'சிதறிய இரத்தத்துளிகளின் மீதான மீட்பரின் ஆலயம்’! (The Church of the Savior on Spilled Blood) அந்தப் பெயருக்குள்ளேயே அரிதான ஒரு கதையும் கூட ஒளிந்து கிடந்ததை இனம் கண்டு கொண்டவளாய்…அதை அறியும் ஆர்வத் துடிப்பில் இருந்தேன் நான்….!

15.10.16

ரஷ்யப்பயணம்- தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்-5

நான் எழுதி வரும் ரஷ்யப்பயணக்கட்டுரையின் ஐந்தாம் பகுதி
ரஷ்யப்பயணத்தின் மூன்றாம் நாளான அன்றுதான் [ஜூலை 25] மாஸ்கோவில் நாங்கள் செலவழிக்கும் கடைசி நாளும் கூட. மிகக்குறைவான அந்தக் காலகட்டத்திற்குள் மாபெரும் தேசம் ஒன்றின்  புகழ் வாய்ந்த தலைநகரில் இன்றியமையாத ஒரு சில இடங்களை முடிந்த வரை பார்க்க முடிந்ததோடு அந்நகரத்தின் உயிர்ப்பான ஜீவனையும் உள்வாங்கிக்கொள்ள முடிந்ததில் நிறைவு கொண்டிருந்தேன் நான்.

அன்றைய முற்பகல் முழுவதும் மாஸ்கோ மெட்ரோவில் பயணம் செய்வதும் மெட்ரோ நிலையங்கள் பலவற்றைக் காண்பதும் எங்கள் பயணத் திட்டமாக வகுக்கப்பட்டிருந்தது. மாஸ்கோ மெட்ரோவின் வினோதமான தனித்துவம் என்னவென்று அதுவரை அறிந்திராததால்  அன்றைய சுற்றுலாத் திட்டம் எனக்கு வியப்பையே அளித்தது. புதுதில்லியில் கழித்த ஏழாண்டுக்காலத்தில் மெட்ரோவில் பலமுறை பயணம் செய்திருந்ததாலும் தற்போது சென்னை மெட்ரோவிலும் கூடச் சென்றிருந்ததாலும், அப்படிக்குறிப்பாக  மெட்ரோ நிலையங்களை  மட்டுமே பார்க்க என்ன இருக்கப்போகிறது என்றே என் சிந்தனை சென்று கொண்டிருந்தது. .

டேன்யா [வழிகாட்டி] எங்களைப் படிப்படியாக வழி நடத்திக்கொண்டு கிட்டத்தட்ட இருபது வண்டிகள் மாறிமாறிச்சென்றபடி… தரைத் தளத்துக்குக் கீழே மட்டுமே அமைந்திருந்த மெட்ரோ பாதையில் பல  நிலையங்களைக் காட்டியபோதுதான்…அவை வெறும் போக்குவரத்துக்கானவை மட்டுமல்ல…சுரங்கத்துக்குள் இருப்பதைப் போன்ற அள்ள அள்ளக் குறையாத காட்சிகளும், ஆழமான பல  தகவல்களும் கூட அவற்றில் பொதிந்து கிடக்கின்றன என்பதை நான் புரிந்து கொண்டேன்.
உண்மையைச் சொல்லப்போனால் பரபரப்பான மாஸ்கோ வீதிகளுக்கு அடியில் மிகப்பிரம்மாண்டமும் அதிசயமுமான அருங்கலை வேலைப்பாடுகளும் வேறு பல இரகசியங்களும் நிரம்பிய இன்னொரு உலகமே மறைந்து கிடக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம்…

கலைக்காட்சியகம் போலத் திகழும் இந்த மெட்ரோ நிலைய எழிற்களஞ்சியத்தை முதன்முதலாகப் படமெடுக்க அனுமதிக்கப்பட்டவர் கட்டிடக் கலைஞராக இருந்து பிறகு புகைப்பட நிபுணராகவும் பரிமாணம் பெற்ற கனடாவைச் சேர்ந்த டேவிட் பர்ட்னி என்பவர். மக்களின் போக்குவரத்து வசதிகளுக்கு இடையூறாக இருக்கலாகாது என்பதால் இரவு நேரங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட பிறகே அவருக்கும் அதற்கான அனுமதி கிடைத்தது.. மாஸ்கோ மெட்ரோவில் புதைந்து கிடக்கும் இரகசியமான அதிசய உலகம் உலகத்தின் பார்வைக்கு முன்  வைக்கப்பட்டது அப்போதுதான்.

தலைநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 1875 ஆம் ஆண்டிலேயே முன் மொழியப்பட்டு  1902 இல் விவாதிக்கப்பட்ட  இந்தத் திட்டம் அப்போதைய நகராட்சியால் நிராகரிக்கப்பட்டுவிட, சோவியத் யூனியன் உருவான பின் -1931ஆம் ஆண்டுக்குப்பிறகு - இதன் உருவாக்கம் தொடங்கிப் படிப்படியாக முழுமை பெறத் தொடங்கியது.

உலகின் பல நாடுகளில் பாதாள ரயில்கள் குறித்த சிந்தனைகள் கூட அரும்பியிராத ஒரு காலகட்டத்தில் மெட்ரோ வழி பற்றியும், அதன் நுணுக்கங்களையும் சிந்தித்துச் செயல்படுத்தியதோடு அதை ஒரு கலைக்கூடமாகவும் மாற்றிய பெருமை ரஷ்ய நாட்டின் தலைவர்களுக்கே உரியது. மாஸ்கோ மெட்ரோவைத் தனித் தன்மை பெற்றதாக - ஏனைய தரையடிப் போக்குவரத்து ரயில் அமைப்புக்களிலிருந்து மாறுபட்டதாக ஆக்குவது அதன் இந்த அம்சமே.. உலகிலேயே மிக மிக எழிலார்ந்ததாக எண்ணப்படும் இந்த மெட்ரோவைச் சேர்ந்த நாற்பத்து நான்கு நிலையங்கள்  உலகின்  பெருமை மிகு கலாச்சாரச்சின்னங்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்துக்கான சராசரி இரயில் நிலையங்களாக மட்டுமே சொல்ல முடியாதவையாக - சோஷலிஸ யதார்த்தவாதக் கொள்கையைச் சித்திரிக்கும் கலைக்கூடங்களாகவும் சோவியத் நாட்டின் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யும் அரங்கங்களாகவுமே இந்நிலையங்கள் திகழ்கின்றன. மிகப்பிரம்மாண்டமான மிக விரிவானவேலைப்பாடுகளுடன் கூடியதாகப்  பொலியும் இவை சோவியத் மண்ணின் ஒளி மிகுந்த எதிர்காலத்தை - ஸ்வெத்-ஒளி; ஸ்வெல்டோ புதுஷ்ஷே-பிரகாசமான வருங்காலம் [“svet” (light) and “sveltloe budushchee” (bright future).] என தேசத்தின் அடிப்படை நோக்கங்களை முன் நிறுத்துவனவாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.  

மாஸ்கோ மெட்ரோவின் வலைப்பின்னலில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட நிலையங்களில் நகரத்தின் அடி ஆழத்தில் தெருக்களுக்கு அடியே புதைமட்டத்தில் எழுபது நிலையங்களும் அதற்குச்சற்று மேல்மட்டத்தில் எண்பத்தேழு நிலையங்களும் தரை மட்டத்திலும் அதற்கு மேல் சற்று உயரத்தில் ஒரு சில நிலையங்களும் அமைந்திருக்கின்றன

இவற்றுள்  எண்பத்து நான்கு மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் பார்க் பொபெடி[Park Pobedy] என்னும் நிலையமே அதிகபட்ச ஆழத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையம்.
பல நிலையங்களில் பலப்பல  ரயில்களில் மாறி மாறிப் பயணம் செல்லச் செல்ல நாங்கள் பல மட்டங்களிலும் இருக்கும் பல தளங்களையும் பார்த்து அதிசயத்திலும் பிரமிப்பிலும் ஆழ்ந்து போயிருந்தோம்...

விளாடிமிர் லெனின் அவர்களின் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்த - அவர்நினைவாக அர்ப்பணிக்கப்பட்டிருந்த  தளம்..., 

ரஷ்யப்புரட்சியை சித்திரிக்கும் பிரம்மாண்டமான சுவரோவியத்தைக் கொண்டிருக்கும் தளம்,  


இரு பெரும் உலகப் போர்க்கொடுமைகளால்  பட்ட அவலங்களிலிருந்து விட்டு விடுதலையாகிஇந்த உலகம் முழுவதும் சமாதான சக வாழ்வில் திளைக்கட்டும்என்ற செய்தியை ரஷ்ய மொழி வாசகங்களுடன் எடுத்துக்காட்டும் வண்ணச் சித்திரம் கொண்ட தளம்., 

 இன்றும் கூடச் செயல்படும் நூலகமாக விளங்கிக்கொண்டிருக்கும்  குர்ஸ்கயா  மெட்ரோ நிலையம் [The Kurskaya metro station] என்று பலவற்றையும் ஆர்வத்துடன் பார்வையிட்டுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேசென்று கொண்டிருந்த எங்களைக்  கண்ணைக்கட்டி  நிறுத்தும் பளிங்கு மற்றும் மேற்கூரை வேலைப்பாடுகள் நிறைந்த  மாயாகோவ்ஸ்கயா [Mayakovskaya ] ரயில் நிலையம் பெரு வியப்பில் ஆழ்த்தியது, அதிலிருந்த பளிங்குச்சுவர்களையும் விதானங்களையும்  எத்தனை முறை எத்தனை கோணங்களில் படங்கள் எடுத்தாலும்  எங்கள் ஆவல் தீராமல் பெருகிக்கொண்டேசென்றது.

மாயாகோவ்ஸ்கயா  ரயில் நிலையத்துக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. 1941ஆம் ஆண்டு அக் 6ஆம் தேதி -  ரஷ்யப்புரட்சியின் ஆண்டு விழா நாளன்று  ஃபாஸிஸத்தின் வீழ்ச்சியைப் பிரகடனம் செய்தபடி அரசியல்வாதிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் இங்குள்ள அரங்கத்தில் இருந்தபடிதான்  உரையாற்றியிருக்கிறார்  ரஷ்யாவின்  மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஜோசஃப் ஸ்டாலின்.
மாஸ்கோ  மெட்ரோ  குறித்து  நாங்கள்  அறிந்து கொண்டதில் மிகவும் முக்கியமானதும்  சுவாரசியமானதுமான  மற்றொரு தகவலும் உண்டு.  இரண்டாவது  உலகப்போர்  நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - வான் வழித் தாக்குதல்கள் மிக அதிகமாக இருந்தபோது இந்தநிலையங்களில் இருந்த அரங்கங்கள், கூடங்கள் மற்றும் நடைமேடைகள் ஆகியவை,  வெடிகுண்டு வீச்சுக்களிலிருந்து பொது மக்களைக் காப்பாற்றும் புகலிடங்களாகப் பயன்பட்டிருக்கின்றன என்பதே அந்தச்செய்தி.  இரவு வேளைகளில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் வண்டிகளில் பெண்களும் குழந்தைகளும் பெருவாரியாக அடைக்கலம்  புகுந்திருக்கின்றனர். ஜெர்மானியர்கள் நடத்திய வான் தாக்குதல்கள் மிகுதியாக இருந்தபோது அந்த இடத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் தொகை மிகுதியானதால் அவர்களின் தேவையை  நிறைவு செய்வதற்காகவே பலபொருள் அங்காடிகளும் முடி திருத்தகங்களும் கூட அங்கே  அப்போது  செயல்பட்டிருந்திருக்கின்றன.

பிற நாடுகளின்  வெடிகுண்டுவீச்சுத் தாக்குதலிலிருந்து காக்கும் புகலிடமாக அமைந்ததோடு  ரஷ்யாவின் ஆயுதசேமிப்புக்கிடங்காகவும் கூட இந்த நிலையங்கள் பயன்பட்டிருக்கின்றன. இரும்புக்கோட்டை போன்ற ஒன்றை  இரு வீரர்கள்  காவல் புரிந்து கொண்டிருப்பதைப்போன்ற அமைப்பு ஒன்றைக்காண முடிந்தது. அதுவே இந்நாட்டின் ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளை சேமிக்கும் கிடங்காகப்  பயன்பட்டிருத்தல் கூடும்.

மெட்ரோ ரயில்கள் பலவற்றில் பயணித்தபடி மதியம் வரை சுற்றிக்கொண்டிருந்தோம். ரயில்பயணத்தைப்பொறுத்தவரையில் பிற மெட்ரோக்களைப்போலத்தான் அதுவும்  அதில்  புதுமைகள்  ஏதும்  இல்லை என்றாலும் மிக அதிக பட்சமான மக்கள் -கோடிக்கணக்கில் இதில் பயணம் செய்கிறார்களென்பதும் நேரம் தவறாதபோக்கை மாஸ்கோ மெட்ரோ ரயில்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் ஒழுங்காய்க்கடைப்பிடிக்கின்றன என்பதும்  கருத்தில் கொள்ள வேண்டியசெய்திகள்,

பிற்பகல் ஒருமணி அளவில் மாஸ்கோ மெட்ரோவிலிருந்து விடை பெற்று ஒருவட இந்திய உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்ட பிறகு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது. மாஸ்கோ ரயில் நிலையம் சென்று பீட்டர்ஸ்பர்க் செல்லும் விரைவு ரயிலில் ஏறிக்கொண்டோம்...விரைவாகச்சென்றாலும் செல்வதே தெரியாதபடி- - மிகுந்த தூய்மையோடு இருந்த  அந்தரயிலில் விமானப்பயணம் போலச்சென்று கொண்டிருந்தபோது, ரஷ்யாவின் புறநகர்ப்பகுதி சார்ந்த காட்சிகள் எங்கள் கண்களுக்கு விருந்து படைத்துக்கொண்டிருந்தன

மாஸ்கோவில் அடுக்கு மாடிக்கட்டிடங்களைத் தவிரத் தனி வீடுகள் குடியிருப்புக்கள் என்று  எதையும் பார்க்காமலிருந்த நாங்கள் ரஷ்யநாட்டுச் சிற்றூர்களையும் கிராமங்களையும் கோதுமை வயல்களையும் சின்னச்சின்ன அழகான வீடுகளையும் பண்ணை வீடுகளையும் பார்க்க முடிந்ததது அப்போதுதான்....

கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் செல்வதே தெரியாமல் கழித்த அந்தப் பயண நினைவுகள் , வெகு சுவையும் இனிமையும் வாய்ந்தவை; பயணத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் அறிமுகமாகியிருந்த சகபயணிகளோடு மனம் விட்டுப்பேசியபடி பலவற்றைப்பகிர்ந்து கொள்ளமுடிவதற்கும் ஒருவரைப்பற்றி மற்றவர் அறிந்து கொள்ளவும் கூடநேரம் வாய்த்தது அப்போதுதான்....


செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் என்ற பெயரைக்கேட்டதுமே..-..அந்த நகரத்தில் கால் பதிக்கப்போகிறோமென்ற எண்ணம் எழுந்த மாத்திரத்திலேயே என் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்த்தபடி நான் பரவசத்தின் உச்சநிலையில் இருந்தேன்...நான் மொழி பெயர்த்திருக்கும் நாவலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின்  கதைக்களன்கள் பெரும்பாலும் மையம் கொண்டிருப்பதும் அவரது நினைவகம் அமைந்திருப்பதும்   அங்கேதான்....அதனாலேயே அங்கு சென்று கொண்டிருப்பது என்னை ஆனந்தச் சிலிர்ப்பில் ஆழ்த்தி இருந்தது...ரயிலை விடவும் விரைவாக அங்கே  சென்று விட என் மனம் முந்திக் கொண்டிருந்தது.

ரஷ்ய நாட்டின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த மகா பீட்டரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த  நகரம் அரசரின் பிரியத்துக்கு   உரியவராய் விளங்கிய  புனிதரான அப்போஸ்தலர் பீட்டரின் பெயரையே சூடிக்கொண்டிருக்கிறது. உலகின் மிக அழகானநகரங்களில் ஒன்றான இது., நேவா ஆறு  பால்டிக் கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்திருக்கிறது.
 “பீட்டரின் கைவண்ணமே, உனை நேசிக்கிறேன்! / உனது எளிமையை நேசிக்கிறேன், உனது சமச்சீர் வடிவை நேசிக்கிறேன்; / பளபளக்கும் கருங்கல் பாவிய உனது கப்பற்துறை மேடைகளிடையே / எத்தனை மௌனமாய், நளினமாய் நேவா நதி நெளிந்தோடுகிறாள்!”   என்று இந்நகரைத் தன் கவிதையில் வருணிக்கிறார் ரஷ்யக்கவிஞர் அலெக்ஸாண்டர் புஷ்கின்.
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை ஒட்டி  ரஷ்யா வளர்ச்சியடையாமல் பின்தங்கிப்போக... கடல்வழிப் போக்குவரத்து இல்லாதிருந்ததே அதற்குக் காரணம் எனக்கருதிய .ரஷ்ய இளம் சக்கரவர்த்தியான மகா பீட்டர் , ஒருகடல்  மார்க்கத்தை, - ரஷ்யாவுக்கான  “ஐரோப்பிய நுழைவாயில்” ஒன்றை  நிறுவ வேண்டுமென்பதைத் தன்  கனவாகக் கொண்டார்.  சுவீடன் வசமிருந்த பால்டிக் கடலோரப் பகுதியின் மீது அவரது பார்வை விழுந்தது..தன் கனவை நனவாக்க ஆகஸ்ட் 1700-இல், சுவீடன் மீது போர் தொடுத்தார் பீட்டர்,...பலப்பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக ஸ்வீடனை வெற்றி கொண்டு மே 16, 1703-இல், சுமார் 300 வருடங்களுக்கு முன், பீட்டர்-பால் கோட்டை என இன்று அழைக்கப்படும் கோட்டைக்கு மகா பீட்டர் அடிக்கல் நாட்டினார்.  செயிண்ட்பீட்டர்ஸ்பர்க்  நகரம், அதிகாரபூர்வமாக  நிறுவப்பட்ட நாளும் இதுவே..


ஒரு புதிய நகரமாக உருவாகிய செயிண்ட்பீட்டர்ஸ்பர்கின் அழகுக்குக் கூடுதல்  அழகு சேர்ப்பவை அங்குள்ள  ஏராளமான வாய்க்கால்கள் மீதும், கால்வாய்கள் மீதும் கட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள். இது பற்றியே . பீட்டர்ஸ்பர்க் “வடக்கு வெனிஸ்” என்றும் வருணிக்கப்பட்டிருக்கிறது. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும், திறமைமிக்க ரஷ்ய கட்டிடக் கலைஞர்களின் கைவண்ணமும் சேர்ந்து பீட்டர்ஸ்பர்கை “ஐரோப்பாவிலுள்ள மிக அற்புதமான நகரங்களில் ஒன்றாகவும், நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரமாகவும்” உருவாக்கியிருக்கிறது.

தனது ‘இரட்டையர்’ [THE DOUBLE] நாவலுக்கு ’’பீட்டர்ஸ்பர்க் கவிதை’’  என்றே மாற்றுப்பெயர் தரும்அளவுக்கு தஸ்தயெவ்ஸ்கியின் மனம் கவர்ந்த அந்த அழகிய நகரத்தில் நாங்கள் நுழைந்தபோது மாலை ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தபோதும் அப்போது ’’வெண்ணிற இரவுகளின்’’ காலம் என்பதால் கதிரவனின் ஒளி மங்காமல் வீசிக்கொண்டிருந்தது....வெண்ணிற இரவுகள் என்பது தஸ்தயெவ்ஸ்கி  எழுதிய புகழ் பெற்றநாவல்....கோடை காலங்களில்  ஆறு மணி நேரம் மட்டுமே நீடிக்கும் இருட்டையும் பட்டப்பகல் போன்ற வெளிச்சமான  இனிய  இரவுப்பொழுதையும் குறிக்கும் சொல் அது...அதைச்சார்ந்த பல சுவாரசியமானசெய்திகளைக் கூறியபடியே  எங்களை மிக அழகான நேவா ஆற்றுப்பாலம் ஒன்றின் கரையில் அமைந்திருந்த தெருவுக்குக் கூட்டி வந்து சேர்த்தார்..பீட்டர்ஸ்பர்கின் வழிகாட்டி. காதரினா. .பீட்டர்ஸ்பர்க் நகரின் உயிர்ப்பான இடங்களனைத்தையும் ஒருசேரக்காணும் வண்ணம் அமைந்திருந்த அந்த அழகிய அகன்ற  தெருவில் ஒரு புத்தகக்கண்காட்சியும் கூட நடைபெற்றுக்கொண்டிருந்தது... உணவு விடுதிகளின் வெளியே வண்ணக்குடைகளின் கீழ் அமர்ந்தபடி உணவையும் நட்பையும் ஒரு சேர ரசித்து அனுபவித்துக்கொண்டிருந்த மனிதர்கள்..!!..அங்கேயுள்ள ஜெய்ஹிந்த் என்னும் இந்திய  உணவு விடுதிக்கு நாங்கள் சென்றோம்...இந்தியாவிலிருந்து - குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அங்கே மருத்துவக் கல்வி பயில வந்து பகுதி நேரமாக உணவகப்பணி செய்து கொண்டிருந்த தமிழ்மாணவர்கள் எங்களை அன்போடு வரவேற்றதிலேயே பாதி வயிறு நிறைந்து போக உணவு வேலையை முடித்துக்கொண்டு வாஸிலெவ்ஸ்கி தீவுப்பகுதியில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதிக்குச்சென்றோம்...இன்று நள்ளிரவாகி இருக்கவில்லை என்றாலும் கதிரவனின் ஒளி மறையும் வரை வெண்ணிற இரவுகளில் மனதை அலைய விட்டபடி  கண்களை உறக்கம் தழுவ மறுத்துக்கொண்டுதான் இருந்தது,,,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....