துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.5.20

மீனாட்சியின் கிளி



Meenakshi’s Parrot
Poem By Lakshmi Kannan
மீனாட்சியின் கிளி, என் தமிழ் மொழியாக்கம்..

ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் காணொலியாய்..
( கவிதை மீதான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்)
நான் புதுதில்லியில் ஏழாண்டுக்காலம் (2006-2013) வசித்த காலகட்டத்தில் என் இலக்கியத்தோழியாகிப் பின்பு உற்ற தோழியும் ஆனவர் காவேரி என்ற புனைபெயரில் தமிழிலும், லட்சுமி கண்ணன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் எழுதும் இருமொழி எழுத்தாளர் ‘ காவேரி’ லட்சுமி கண்ணன். அவரது புகழ் பெற்ற நாவலாகிய ‘ஆத்துக்குப் போகணும்’,பிறந்த வீட்டின் சொத்துரிமை பெண்ணுக்கும் உண்டென்பதை நுட்பமாய்ச்சொல்வது. அண்மையில் க்ளாஸிக் வரிசையில் காலச்சுவடு வெளியீடாகவும் அந்நாவல் வெளிவந்துள்ளது. கணையாழி இதழின் தொடக்க காலகட்டத்திலிருந்து எழுதி வரும் அவரது தமிழ்ச் சிறுகதைகள் காவேரி கதைகள் என்ற தலைப்பில் இரண்டு தொகுப்புக்களாக - எஸ் பொவின் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கின்றன.குறிப்பிட்ட அவரது பத்துச் சிறுகதைகள் அமிர்தாவால் ‘முத்துக்கள் பத்து’ என்னும் தொகுப்பாகவும் வந்திருக்கின்றன.( விக்கிபீடியா குறிப்பில் அவர் குறித்து மேலும் காணலாம்).
ஆங்கிலத்தில் அவர் எழுதியிருக்கும் Meenakshi’s Parrot (Sipping the Jasmine Moon, Poems by Lakshmi Kannan) என்ற கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு அண்மையில் என்னிடம் உரிமையோடு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழிலும் எழுதும் திறன் பெற்றவர் அவர் என்பதால் சிறிது தயக்கத்தோடுதான் அதை ஏற்றுக்கொண்டேன். அதே வேளையில் ஒரு சவாலை எதிர்கொள்ளும் ஆர்வத்தோடும்தான்...காரணம் நாவல்,சிறுகதைகளை மொழிபெயர்த்திருந்தாலும் இது என் முதல் கவிதைப்பெயர்ப்பு. தற்போது ஆங்கிலம்,தமிழில் என் பெயர்ப்பு இரண்டிலும் காவேரி அவர்களை வாசிக்கச்செய்து காணொலியாகத் தந்திருக்கிறது Nyogi books - presentation - Poems by midnight.
காணொலியை ரசிப்பதோடு மூலம்,பெயர்ப்பு இரண்டையும் வாசிக்க விரும்புவோருக்காக இப்பகிர்வு.
MEENAKSHI’S PARROT*
Lakshmi Kannan
Perched on her shoulder in stone, silver, bronze, panchloh, copper or wood the parrot was worshipped too for literally rubbing shoulders with the goddess Meenakshi.
In her quest for divinity, the parrot, frozen in stone, silver, bronze, panchaloh, copper or wood slowly forgot to fly. She stayed on Meenakshi’s shoulder.
For she always kept her place, trusted bird.
The legendary best friend of the Nayika, the parrot now perched on the dancer’s mudra, sees kohl-lined eyes and gleaming lips from a jewelled face pleading, asking her to fly across dense forests, over heaving rivers, past the stern sentinels of palaces, to carry a message for a secret lover.
The parrot carries the message, trusted bird.
In a home, the parrot dangled on a tiny swing inside a cage and watched the woman, her keeper, getting pickled along with the sliced mangoes marinating in the sun.
‘Mittoo, Mittoo!’ the woman called out the parrot’s cloying, syrupy name unchanged over the years in homes, novels and films. The parrot nodded her smooth head and kept her place, trusted bird.
‘Want some fresh fruit, Mittoo? Or you prefer a red chilli perhaps?’ asked the woman. ‘Chilli, chilli!’ replied Mittoo.
‘Can you keep Mummy’s sad secret? My man has another woman, I know.’
The parrot kept the secret, trusted bird.
On her page, the poet brushed the bird with vivid parrot-green and flame orange colours. She also gave her some words. But the parrot refused to speak the tutored words. She turned into a thrush instead, sang her own tune, and then flew off the page.
---------------------
Acknowledgment: Sipping the Jasmine Moon, Poems by Lakshmi Kannan
மீனாட்சியின் கிளி
மொழியாக்கம்: எம் ஏ சுசீலா
அவள் தோளில்
தொற்றிக்கொண்டிருக்கிறது
அது..
கல்லோ..வெள்ளியோ..
வெண்கலமோ..பஞ்சலோகமோ..
தாமிரமோ..மரமோ……
ஏதோ ஒன்றாலானபடி !
அன்னை மீனாட்சி தோளில்
அமர்ந்திருக்கும் காரணத்தால்
தனக்குமே வாய்த்து விட்ட
வழிபாட்டுத் தகுதி
தந்த
தெய்வபத மயக்கத்தில்
பறத்தலை மறந்தபடி..
கல்..வெள்ளி…
வெண்கலம்..பஞ்சலோகம்
தாமிரம்…மரம்……என்னும்
இவற்றில் உறைந்தபடி….
மீனாட்சி தோளிலேயே
தங்கியும் விடுகிறது அது..!
தங்குமிடத்தை மட்டும்
ஒருபோதும் மறக்காத
விசுவாசப் பறவைதான் அது!
காவிய நாயகியர்க்கு
உடன் பிரியா நட்பாகி
நாட்டிய முத்திரைகளில்
குடியிருக்கிறது கிளி!
அஞ்சன விழிகளோடும்
சாயம் மின்னும் இதழ்களோடும்
தகதகக்கும்
தங்க முகநாட்டியப்பெண்
மன்றாடுகிறாள் அதனிடம்
அடர் காடுகள்…
பிரவாக ஆறுகள்…
கட்டுக்காவல் அரண்மனைகள்
பல கடந்து பறந்தபடி..
தன் நாயகனிடம்
காதல்தூது போவதற்காய்..
அதுவும்..
தட்டாமல்
தூது போகிறது..
விசுவாசப் பறவைதான் அது
மென் சங்கிலி பிணைத்த
கூண்டுக்கிளியாய்
வீடொன்றில்..
தன் எசமானி
உப்பிலிட்டுப் போடும்
ஊறுகாய் மாங்காய் பார்த்தபடி..
‘’மிட்டூ..மிட்டூ…’’
கதைகளும் படங்களும்
வீடுகளும்
காலங்காலமாய்ச் சொன்ன
அதே பெயர்..!
திகட்டிப்போன இனிப்பாய்ச்
சலித்துப்போன
அதே பெயரில்…..
அவளும் அழைக்கிறாள்….!
மென் தலையை மெள்ள ஆட்டி
இருக்கும் இடத்துக்கு
விசுவாசம் காட்டுகிறது
அது
‘’மிட்டூவுக்குப் பழம் வேணுமா..
சிவப்பு மிளகாய் வேணுமா..?’’
அவள் கேட்க..
‘’மிளகாய் மிளகாய்..’’
குரல் தருகிறது கிளி!
“அம்மாவின் ரகசியத்தைக்
அயலார் அறிந்திடாமல்
காப்பாய்தானே நீ...
என்னவர் வாழ்க்கையிலே
இன்னொரு பெண்ணுமுண்டு
தெரியும்
எனக்கும் அது..”
அதுவும்
ரகசியத்தைத் தட்டாமல் காக்கிறது
விசுவாசப்பறவைதான் அது
கவிதாயினி ஒருத்தி
தன்
விஸ்தார வருணிப்பால்
கிளிப்பச்சை வண்ணமும்
தீச்சுவாலை நிறமும்
தந்து
தாள்களில் கிளி ஒன்றை
ஓவியமாய்த் தீட்டுகிறாள்
வார்த்தைகள் சிலவும் கூடக்
கற்றுத் தருகிறாள்..
சொல்லித் தந்த
வார்த்தைகளைப்
பேச மறுத்துவிட்டுப்
பாடும் பறவையாகிச்
சொந்த ராகம் இசைத்தபடி
அவள் தாளிலிருந்து
விடுபட்டுப்
பறக்கிறது கிளி..


16.12.15

பேராழிக்கன்று

நான் தமிழ்ப்பேராசிரியராகப்பணியாற்றிய காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தை முதன்மைப்பாடமாகக்கொண்ட மாணவிகளைப்போலவே-சிலவேளைகளில் அதற்கும் கூடுதலான ஆர்வத்துடன் பொதுத்தமிழ் வகுப்புக்களை நேசித்த ஆங்கிலம்,வேதியியல்,இயற்பியல்,மனையியல்,சமூகவியல் ஆகிய பிற துறை மாணவிகள் -பலரைக்கண்டிருக்கிறேன்.அவர்களில்  உள்ளார்ந்த தாகத்துடன் மரபுத் தமிழையும் நவீனத் தமிழையும் தேடித் தேடி வாசித்தவர்களும் பலர் உண்டு;பின்னாளில் தமிழ்ப்படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிட்ட முத்திரைகளையும் சிலர் பதித்திருக்கிறார்கள்.
‘70களில் ஆங்கில இலக்கிய இளங்கலை மாணவியாக எனக்கு அறிமுகமான  ரங்கநாயகி,ஆங்கிலப்பேராசிரியராக மட்டுமன்றித் தன் தமிழ் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டபடி,  தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவராகவும் உருவானவர். ’சிநேகவனம்’என்னும் தனது அவரது முதல் கவிதைத் தொகுப்பை அடுத்து,
பேராழிக்கன்று’ என்னும் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இப்போது காவ்யா வெளியீடாக வந்திருக்கிறது.கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தமிழ்ப்பேராசிரியராகப் பழக்கமான என்னைத் தன் நினைவில் இருத்தித்  தன் நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு  பணித்த ரெங்கநாயகியின் அன்புக்கு நன்றி.

இன்னும் பல சிறந்த கவிதை நூல்கள் அவரிடமிருந்து வெளிப்பட வேண்டும் என்று என் மாணவி ரங்காவை அன்போடு வாழ்த்துகிறேன்.
பேராழிக்கன்று கவிதை நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை கீழே;



‘மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனியாய்’’….
[அணிந்துரை]
எம் ஏ சுசீலா

மானுட வாழ்வின் புறப்போராட்டங்கள், சமுதாயச்சிக்கல்கள் ஆகியவற்றைப் 

பதிவு செய்யும் புற உலகு சார்ந்த கவிதைகளின் உருவ உள்ளடக்கங்களும் 

அவற்றின் பயன்பாடும்  ஒரு வகைப்பாட்டைச் சேர்ந்தவை என்றால், தனிமனித 

உணர்வுக்கொந்தளிப்புகளை,,,, அக உளைச்சல்களை….., தன்னுள் தானே 

அமிழ்ந்தபடி நிகழும் மனிதத்தேடல்களைப் பொருளாகக் கொண்டமையும் 

தன்னுணர்வுக்கவிதைகள் முற்றிலும் வேறொரு தளத்திலானவை. 

முதல்வகைக்கவிதைகளின் இலக்குகள் வேறென்பதால் அவற்றைக் குறை கூற 

இயலாது என்றபோதும், கவிதை என்றொரு மகா அனுபவத்துக்குள் நம்மை 

ஆழ்த்தி, அனுபூதி நிலைக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடிய தகுதி படைத்தவை 

அகமுகக் கவிதைகள் மட்டுமே. ’’அவரவர் தம தம அறி அறி வகை ‘’என்று 

நம்மாழ்வார் குறிப்பிடுவது போல அவரவரின் வாசிப்புக்கும் உணர்வு 

நிலைக்கும் ஏற்றபடி வெவ்வேறான அனுபவங்களையும் தரிசனங்களையும் 

வழங்குபவை இத்தகைய கவிதைகள். கவிதை வாசிப்பை இலகுவான ஒரு 

பொழுதுபோக்காகக் கொள்ளாமல் அதைத் தீவிரமான ஒரு பயிற்சியாக சாதகம் 

செய்வோருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியவை இத் தரிசனங்கள். 

ஊன்றிப் படிப்பதற்கே உழைப்பைக்கோரும் இத்தகைய 

அகநோக்குக்கவிதைகளை உருவாக்குவதென்பது ஒரு வேள்வி ! ‘’வைகல் எண் 

தேர் செய்யும் தச்சன்’’’,  மாதம் முழுவதும் முயன்று உருவாக்கும் ஒரே ஒரு 

தேர்க்காலைப்போல மனமென்னும் தறியில் ஒவ்வொரு இழையாக நெய்வதில் 

தொல்லை இன்பத்து இறுதி காண்போர்க்கே கைவரும் கலை அது. 

அந்தக்கலையில் தேர்ந்திருக்கும் கவிஞர் ரங்கநாயகியின் முழுப்பரிமாணமும் 

வீரியத்தோடு கூடிய எழிலான சொல்வீச்சுக்களோடு அவரது ‘பேராழிக்கன்று’ 

என்ற இந்தத் தொகுப்பின் கவிதைகள் அனைத்திலும் சிறப்பாகப் 

பதிவாகியிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடும், வாசிப்பும், படைப்பிலக்கியப்பயிற்சியும் 

கொண்டிருப்பவர்களுக்கு ஆங்கில இலக்கியப்பின்னணியும் கூடச்சேரும்போது 

அவர்களின் படைப்புக்களில் கூடுதல் ஆழமும் செறிவும் கூடிவிடுவதைப் பல 

படைப்பாளிடமும் காணமுடியும். ரங்கநாயகிக்கும் அந்த வாய்ப்பு 

கிட்டியிருக்கிறது. ஆழ்வார்களின் பிரபந்தத் தமிழிலும் அவர் தோய்ந்து 

கலந்திருப்பதால் அவற்றில் கொழிக்கும் அழகையெல்லாமும் கூட நவீன 

வாசகர்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன அவரது கவிதைகள். 

இந்தத் தொகுப்பின் தலைப்பான ’பேராழிக்கன்று’ என்ற மாறுபட்ட 

சொல்லாட்சியே அதை உறுதி செய்கிறது.

‘’இன்று தென்படும் நாளைகளின் 

நம்பிக்கைத் தொலைவுகள்

நாளைகளின் நாளைகளில் நீண்டபடி…’’

என மனித இருப்பின் சலிப்பான கணங்கள், அவற்றினூடே மாயம் காட்டும் 

உருவெளி பிரமைகள், வாழ்வின் முக்கிய கணங்களான பிறப்பும் இறப்பும் 

கிளர்த்தும் முடிவற்ற தேடல்கள் ஆகிய பலவற்றையும் இருப்பியல்வாத, 

சர்ரியலிச,நவீன-,பின் நவீனத்துவ பாணிகளில் கலைநயம் குன்றாமல் 

ரங்கநாயகியின் கவிதைகள் முன்வைத்துக்கொண்டே செல்கின்றன.

யாசித்துப்பெற விரும்பாத அன்பைப் 

‘’பொழிய மறுக்கும் மேகம் கண்டு நனைய மறுத்து முகம் திருப்பிக்கொள்ளும் 

நில’’மாகக் காட்டும் படிமம்,

சிலந்தி வலையைச் சிக்கலுக்குள் வலியச் சிக்கிக்கொள்ளும் மனித மனமாய்க் 

காட்டும் படிமம் என நவீன கவிதை வெளிக்கே உரித்தான வித்தியாசமான பல 

படிமங்கள் இவர் கவிதைகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

‘’மழைக்காலக் கதவிடுக்கில் சிக்கிய கைவிரலாய் நசுங்கிப்போகிறது மனம்’’, 

‘’பேராழி மூன்றும் திரும்பக்

பெற்றுக்கொண்டுவிடுவதான

அபாயத் தொங்கலாய்த் 

தென் இந்திய வரைபடம் போலத் தத்தளிக்கிறது’’

என இரசனைக்குரிய உவமைகளுக்கும் தொகுப்பில் குறைவில்லை.

சுனாமியின் பிணச்சூறாவளி பற்றிய பதிவுகள் குறும்,நெடும் கவிதைகளாகத் 

தொகுப்பில் மலிந்து கிடப்பது, இந்தக் குறிப்பிட்ட தொகுப்பின் மையத்தையே 

அந்த உள்ளடக்கம்தான் முடிவுசெய்திருக்கக்கூடுமோ என்று எண்ண 

வைக்கிறது. அந்த வரிசையில் ‘கன்னியாகுமரி கொண்டுபோய் விட்ட ஸதிக்கு’ 

ஒரு முக்கியமான கவிதை. ஊழிப்பெருவெள்ளத்தில் உலக ஓட்டமே ஓய்ந்து 

போகும் தருணத்தில் ஆலிலையில் மிதந்து வந்து அடுத்த யுகத்தை ஜனிக்க 

வைக்கும் திருமாலின் தொன்மத்தை நினைவூட்டுவது அதே வரிசையிலான 

’பேராழிக்கன்று’.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறிவதில்லை; அது போலத் தன் 

’’மீதேறி ஓடிப்பிடித்து

விளையாடும் அணிலிரண்டின்

உராய்தல்களில்

சலனமின்றி இருக்கிறது’’ 

ஜன்னல் வழி காட்சியாகும் தூங்குமூஞ்சி மரம். இது ஓர் அற்புதமான 

காட்சிப்படுத்தல்.

தன்னை விட்டு எப்போதைக்குமாய்ப் பிரிந்து போன ஒன்று இப்போது எந்த 

வடிவத்தில் எதுவாக இருக்கிறது..அல்லது அது எல்லா இடத்திலும் யாதுமாகி 

நிறைந்திருக்கிறதா என்று தவித்தபடி 

‘’எதுவாகிப்போனாய் நீ என்பதறிய

பதறுகிறது மனம்’’

என்று தேடும் ‘யாதுமாகி’. நாம் கற்பனை கூடச்செய்து பார்த்திராத 

’‘குளியலறை கரப்பான் விழிகளில்….சாம்பிராணி புகைக்கூண்டில், அரிவாள் 

மணைக்கூரிழை விளிம்பில்’’ என்று இவைகளிலெல்லாம் கூடத் தான் 

தொலைத்ததைக் கண்டடைய ஆதங்கம் கொள்கிறது . பிரிவின் துயரை 

மட்டுமன்றி அதன் பித்து நிலையினையும் அபாரமாகப் பதிவு செய்து இத் 

தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக நெஞ்சில் இடம் பிடிக்கிறது 

‘யாதுமாகி’ என்னும் இக்கவிதை.. 

தொகுப்பில் மேலோங்கித் தென்படும் நம்பிக்கை வறட்சிக்குரலுக்கு நடுவே

‘’நண்பகல் காக்கையின் அநாயாச ஒற்றைக்கூவல்…

 புரட்டும் விரல் புத்தக ஓசை

 எங்கோ தொட்டில் ஒன்றின் சிணுங்கல்’’

என ‘’அத்தனையும் இசையாய் இருக்கும்பிரதேச’’த்தையும் சொல்லும் 

‘கமகவெளி’ ஒரு சிறிய ஆறுதல். 

‘சிநேகவனம்’ என்ற முதல் தொகுப்புக்குப் பிறகு வரும் ரங்கநாயகியின் 

இரண்டாம் தொகுப்பு இது. 

‘’சுட்டிப்பெண் போல

மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனி போல’’

என இவர் கவிதைக்குச் சொல்லும் இலட்சணங்கள் பொருந்தி அமைந்து 

சொல்வளமும் அடர்த்தியும் எடுத்துரைப்புத் திறனும் கொண்ட கவிதைகள் 

பலவும் இத் தொகுப்பில் மெருகு கூடிப்பொலிகின்றன. படைப்பாக்கத் 

துறையில் ரங்கநாயகி அவர்கள் மேலும் பல முயற்சிகளை 

மேற்கொள்ளவேண்டுமென்றும், இருண்மையான கவிதைகள் நம் நலிவையும் 

சோர்வையுமே முன் வைப்பவை என்ற மாயையைத் தகர்த்து வாழ்க்கை 

நேசத்துக்குரியது, குதூகலத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியது, 

அனைத்துக்கும் மேலாக நம்பிக்கைக்கு உரியது என்ற உத்வேகமூட்டும் 

கலைப்படைப்புக்களும் இவரிடமிருந்து வெளிப்பட வேண்டுமென நான் 

அன்பின் உரிமையோடு கோருகிறேன்.

என் அன்புக்குரிய முன்னாள் மாணவியும் கவிஞரும் பேராசிரியருமான 

ரங்கநாயகிக்கு என் உச்சிமுகர்ந்த பாராட்டுக்கள். இத்தொகுப்பை அழகுற 

வெளியிட முன் வந்திருக்கும் காவ்யாபதிப்பகத்தார்க்கு என் நன்றி.

31.12.11

’’காக்கை குருவி..’’



’’காற்றடித்ததிலே மரங்கள்
        கணக்கிடத் தகுமோ
நாற்றினைப் போலே சிதறி
        நாடெங்கும் வீழ்ந்தனவே..’’

-பாரதியின் ’பிழைத்த தென்னந்தோப்பு’பாடலிலிருந்து....

’’நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே-இந்த
நேரமிருருந்தால் என் படுவோம்..’’

- பாரதியின்  ’புயற்காற்று'
புதுவையையும் புயலையும் பார்த்ததும்... கொஞ்சம் பாரதியின் ஞாபகம்...
பாரதி வாழ்ந்த காலத்தில் ஒரு முறை கடும்புயல் புதுவையைத் தாக்கத் தாங்க முடியாத உயிர்ச்சேதங்கள்.பொருட்சேதங்கள்....

25.12.11

’பறவைகள் ஒலி கேட்டேன்...’

வடபத்ரசாயி ஆலயம்
மதுரைக்கு மிக அருகிலேயே வில்லிபுத்தூர் இருந்தாலும் ஆண்டாளை நான் சற்றுத் தாமதமாகத்தான் கண்டு கொண்டேன்...
இலக்கியத்தில் அல்ல.
அவளது சிலா வடிவத்தையும் அவள் பிறந்த பூமியையும் காண்பதில்தான்...

ஒரு புறம் ஓங்கி நிற்கும் பழமையான வடபத்ரசாயி ஆலயம்,மறுபுறம் பின்னாளில் உருவாக்கப்பட்ட ஆண்டாள் கோயில்..இரண்டுக்கும் இடையே அவள் ஜனித்த அல்லது கிடந்து கண்டெடுக்கப்பட்ட துளசிவனம்.என் ஆர்வம்...இடையிலிருந்த இடத்துக்குத்தான்...

11.12.11

வீரிய வாசகம்

இன்று பாரதியின் பிறந்த நாள்!
தமிழர்கள் எல்லோருக்குமே பாரதி செல்லப் பிள்ளை.
எனக்கும் அப்படித்தான்...
பாரதியின் கண்ணன் பாட்டில் குருவாகவும் சீடனாகவும்,ஆண்டானாகவும் சேவகனாகவும் ஒரே வேளையில் கண்ணன் மாறி மாறிப் பாரதிக்குத் தோற்றம் தருவதைப் போலவே எனக்கும்

11.9.11

’’படியாய்க் கிடந்து ..’’

’’வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.’’


குலசேகர ஆழ்வார் சேர மன்னராக இருந்தவர்.

அரச போகங்களிலும்,செல்வக் குவிப்பிலும் நாட்டம் செலுத்தாமல் 
திரு வேங்கட மலையில் (திருப்பதி)

செண்பக மரமாய்..
தம்பகமாய்...
காட்டாறாய்..
மலையேறும் படியாய்.
இப்படிப் பலவாக..
பலவற்றில் ஏதேனும் ஒன்றாகத் தான் இருக்க விரும்புவதாகச் சொல்லும் அவரது ‘ஊனேறு செல்வத்து ’என்னும் 
பெருமாள் திருமொழிப்பாசுரம் மிகவும் புகழ் பெற்றது;உருக்கமானது.

கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து   
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம் பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே’’
என்னும் பாடலும் அந்த வரிசையில் இடம் பெற்றிருப்பதே.


மதம் கொண்டதும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுமான யானையின் மேல் அமர்ந்து (கம்பம்; நடுக்கம்-இதற்குக் கட்டுத்தறி எனப் பொருள் கொள்வோரும் உண்டு)இன்ப நுகர்ச்சி தரும் செல்வத்தைத் துய்க்கும் பேறும்,இந்த மண்ணை ஆளும் அரசாட்சியும் எனக்கு வேண்டியதில்லை..
எம்பெருமானாகிய ஈசன் குடி கொண்டிருக்கும் எழிலார்ந்த திரு வேங்கட மலையில் கோயிலின் கொடிக்கம்பமாக -ஸ்தம்பித்து அசையாமல் நிற்பதால் தம்பகம்- நின்றால் போதும் என்கிறார் ஆழ்வார்...
(தம்பகம இந்தச் சொல்லைக் கொடிக்கம்பம் எனக் கொள்ளாமல் புதர் எனக் கொள்ளும் உரைகளும் உண்டு.)

குறிப்பிட்ட இந்தப் பாசுரப் பகுதியிலுள்ள 10 பாடல்களுக்கும் ஒரு தொடர்ச்சியை உரைகாரர்கள் சொல்வதுண்டு.
முதல் பாடலில் வேங்கட மலைத் தீர்த்தமாகிய கோனேரியில் வாழும் குருகாகப் பிறக்க வேண்டும் என்று கூறும் ஆழ்வார்,
அடுத்த பாடலிலேயே திருவேங்கடச் சுனையின் மீனாய்ப் பிறக்க வேண்டுகிறார்..காரணம்,பறவையாக இருந்தால் அங்கிருந்து பறந்து சென்றுவிட நேரலாம் என்பதால்.


அடுத்து ஏரி வற்றினால் மீன் இருக்க இடமில்லாது போகும் என்பதால், 
இறைவன் திருஉலா வந்து சொர்க்கவாசல் புகும்போது பொன் வட்டில் ஏந்துபவனாக இருந்தால் இன்னும் அண்மையில் அவனைப் பார்க்க முடியுமே என்கிறார்.


தொடர்ந்து,அம் மலையிலுள்ள செண்பகமாக இருந்தால் மலர் வடிவில் தினமும் அவன் பாதங்களில் அர்ச்சிக்கப்படலாமே என்கிறார்.
அதற்கும் பிறகு மேற்சொன்ன தம்பகமாய்-கொடிக் கம்பமாய் நின்றால் எப்போதும் இடையீடின்றி அவனது தரிசனத்தைக் கண்டுகொண்டே இருக்கலாமே என்கிறார்.


பிறகு அந்த மலையின் சிகரமாகவும்,
அதில் பாயும் காட்டாறாகவும் ஆகும் விழைவைப் புலப்படுத்துகிறார்.
காட்டாறும் வற்றிப்போகலாம்..
மலைச் சிகரம் தகர்க்கப்படலாம்..
எனவே மலைக்கு வரும் மக்கள் சஞ்சரிக்கும் பாதையாக-நெறியாக ஆக வேண்டுமென்கிறார்.
அதனினும் நெருக்கமாக-முற்றிலும் பணிவாக வேங்கடவன் கோயிலின்படியாகக் கிடந்து திருமாலின் பவள வாய் காண வேண்டும் என்கிறார்.
(இன்றும் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இறைவன் திரு முன் உள்ள படி- குலசேகரர் படி என்றே சொல்லப்படுகிறது.)

இறுதி முத்தாய்ப்பாக..
இவ்வாறு தேர்ந்தெடுக்கக் கூடத் தனக்கு உரிமையில்லை,அதை நிர்ணயம் செய்ய வேண்டியவனும் அவனே என நினைத்தவராய்..
’’எம் பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே’’
என்று சொல்லி முடிக்கிறார்.

தவற விடக் கூடாத ஆழ்வார் பாடல்களில் குலசேகரரின் இந்தப் பத்துப் பாடல்களுக்கும் தனி இடம் உண்டு.
வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.


சுவைப்பதற்காக..ஒரு சில மட்டும் கீழே
’’ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
  ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
  கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்
  கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’’
(உடம்பை வளர்க்கும் செல்வமும் அதைத் துய்க்கும் மனிதப் பிறவியும் எனக்கு வேண்டாதவை;நப்பின்னையை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்றவனும்,கூன் போல வளைந்த சங்கை இடப்புறம் ஏந்தியவனுமான திருமால் வாழும் வேங்கட மலையிலுள்ள கோனேரி என்னும் தீர்த்தத்தில் குருகாக நான் பிறக்க வேண்டும்)

‘’ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
  வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
  தேனார் பூஞ்சோலைத் திரு வேங்கடச் சுனையில்
  மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே’’
(ஆனாத செல்வம்-வற்றாத-குறையாத செல்வம்)

‘’செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
  படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே’’
சரணாகதியின் மகா உச்சத்தைத் தொடுவது இப் பாடல்..


முழுவதும் படித்துப் பாருங்கள்.
சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் உருக்கமான குழைவுடன் இப் பாசுரத்தின் 4,5 பாடகள் மட்டும் குறுந்தகட்டிலும் கேசட்டிலும் உண்டு(திருமால் கீதங்கள் -ஆல்பம்)
முடிந்தவர்கள் இணையத்தில் யூ ட்யூபில் தேடித் தந்தால் மிக்க நன்றி...





1.9.11

பாரதியின் விநாயகர்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்-குடைவரைச் சிற்பம்

உலகின் தலையாய எழுத்தர்களில் ஒருவர் விநாயகர்.
வியாசபாரதத்தை வியாசர் சொல்லிக் கொண்டே போகத் தன் கொம்பின் முனை முறித்து அதை விநாயகர் எழுதியதான ஒரு தொன்மம் நம்மிடை வழங்கி வருகிறது.

விநாயகக் கடவுள் என்னும் உருவகத்துக்குள்
‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா!யெஹோவா!எனத் தொழுதன்புறும் தேவருந்தானாய் 

திருமகள் பாரதி உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்’’என அனைத்து சமயங்களின் அனைத்துக் கடவுளரையும் தரிசிக்கும் திறம் பெற்று விளங்கியவன் ஆன்மிக ஞானியாகிய பாரதி.

புதுவை மணக்குள விநாயகரை வழிபடும் வழக்கம் கொண்டிருந்த பாரதிக்கு விநாயக உருவம்...
வாய் திறவா மோன நிலைக்குள் செல்ல வைக்கும் ஓங்காரத்தின் உருவகம்;
அது அகக் கண்ணை விழிக்க வைத்து உள்ளொளியை , ஆக்க சக்தியை மேம்படுத்துவது;                                                                                                                             புறக் கவலைகளிலிருந்து விடுவித்து அச்சமற்ற நிலைக்குக் கொண்டு செல்வது;
சலனமில்லா மனநிலையை வசப்படுத்தித் தருவது.

’கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
   குணமதில் பலவாம்......
   உட்செவி திறக்கும்
   அகக்கண் ஒளி தரும்
   அக்கினி தோன்றும்
   ஆண்மை வலியுறும்
   திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்
   கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
   விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
   துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
   நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்
   அச்சம் தீரும்
   அமுதம் விளையும்
   வித்தை வளரும் 
   வேள்வி ஓங்கும்
   அமரத் தன்மை எய்தவும் 
   இங்கு நாம் பெறலாம்’’
என்கிறது பாரதியின் பாடல்..


‘’பக்தி உடையார் காரியத்தில்
   பதறார் மிகுந்த பொறுமையுடன்
   வித்து முளைக்கும் தன்மை போல்
   மெல்லச் செய்து பயன் அடைவார்
    சக்தி தொழிலே அனைத்துமெனில்
    சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
    வித்தைக்கு இறைவா கணநாதா
    மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
என்னும் பாரதியின் பொருள் பொதிந்த வேண்டுதலே நமது வேண்டுதலுமாகிறது...
’ஆழ்க உள்ளம் சலனமிலாது
   அகண்டவெளிக்கண் அன்பினையே
சூழ்க ! துயர்கள் தொலைந்திடுக!
   தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெலாம்!
   கிருத யுகம்தான் மேவுகவே’’
இணைப்பு;
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை



17.8.11

இரு பாடல்கள் ....



கம்பனின் அயோத்தியா காண்டத்தில் ஒரு உணர்ச்சிகரமான கட்டம்.
வனம் செல்லும் இராமனோடு இலக்குவனும் கிளம்பத் தயாராகிறான்.
இருவரும் இலக்குவனின் அன்னை சுமித்திரையிடம் விடை பெறச் செல்லுகையில் அவள் கூற்றாக வரும் இரு பாடல்கள் எப்போது படித்தாலும் உன்னதமான மனச் சிலிர்ப்பை ஏற்படுத்துபவை.

''  'ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம் இவ்வயோத்தி,
  மாகாதல் இராமன் நம் மன்னவன்,வையம் ஈந்தும்
  போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை,
  ஏகாய் ! இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் 'என்றாள்.’’

(இராமன் செல்லும் அந்தக் காடு உனக்கும் ஏற்றதே; அதுவே இனி உன் அயோத்தி;
இராமனே உன் அரசன்; 
தசரதன் வையக ஆட்சியை வேறொருவனுக்கு அளித்த பிறகும் கூட அதைத் தாங்கியபடி உயிர் துறக்காமல் இருக்கும் கொடிய உள்ளம் படைத்த நாங்கள் இனி உன் தாயர் அல்ல; 
இனிமேல், சீதையே உன் தாய்..
உடனே செல்! இனி ஒரு நொடி நேரம் நீ இங்கு நிற்பதும் தவறு)

இதனை அடுத்து வரும் பாடல் இன்னும் கூடப் பரவசம் ஏற்படுத்துவது.

‘’பின்னும் பகர்வாள் ‘மகனே இவன்பின் செல்; தம்பி
  என்னும்படியன்று; அடியாரின் ஏவல் செய்தி
  மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா அன்றேல்
  முன்னம் முடி’என்றாள் வார் விழி சோர நின்றாள்’’

(மகனே,இராமனைத் தொடர்ந்து செல்கையில் உன்னை ஒரு அரசகுமாரன் என்று நினைத்துக் கொண்டு செல்லாதே..;ஒரு அடியவனைப் போலக் குற்றேவல் செய்; இந்த அயோத்தி நகருக்கு அவனால் திரும்பி வர முடிந்தால் நீயும் வா..இல்லையென்றால் அவனுக்கு முன்பு நீ இறந்து போய் உன்னை முடித்துக் கொள்’’)

ஒரு தாய் இப்படிச் சொல்ல நேர்ந்து விட்டதே என்ற தவிப்பு,அதைத் தாங்கும் மன உரம்,தியாகம்,அதே வேளையில் தாய்மைப் பாசத்தால் தானாய்ப் பெருகும் கண்ணீர் என இந்த இரண்டு பாடல்களிலேயே நம் உள்ளத்துக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறாள் சுமித்திரை.

கம்பனில் நிறையப் பாட பேதங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததுதான்
இதிலுள்ள் இரண்டாவது பாடலிலும் ஒரு சுவையான பாட பேதம் உண்டு.
வார் விழி சோர நின்றாள்’என்ற தொடருக்குப் பதிலாகச் சில பதிப்புக்களில்
‘’பால்முலை சோர நின்றாள்’’
என்ற தொடர் இடம் பெற்றிருக்கும்.

 பெற்றுப் பல ஆண்டுக் காலமாகியும் மகனைப் பிரிய நேருகையில் பதட்டமும் பரிதவிப்பும் மேலிடப் பால்சுரக்கும் தாய் எனக் கூறும் 
அந்தத் தொடர்,தாய்மையின் தவிப்பை இன்னும் கூட அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று விடுகிறது.




2.7.11

காட்சியும்,மீட்சியும்...

சிறையிருந்தாள் ஏற்றம்- இது சுந்தர காண்டத்தின் மற்றொரு பெயர்.

சீதையின் துயரத்தின் இடையில் ஊடாடும் அவள் கற்பின் அழகே சுந்தர காண்டத்துக்கு அழகூட்டுவது.
சுந்தரன் எனப்படும் அனுமனின் செயல்திறனாலும் அழகு பெறுவது இக் காண்டம்.




10.6.11

காதல்..நீர்..நெருப்பு...


நீரின் குளிர்ச்சி..தீயின் தகிப்பு ஆகிய இரண்டும் அவற்றை நாம் உணரும்போது மட்டுமே உறைக்கும்.
அவற்றிடமிருந்து நீங்கியதுமே அவ்வெம்மையும்,தண்மையும் நம்மிடமிருந்து விலகிப் போய்விடும்;அதுவே உலக இயற்கை.


8.6.11

கும்பகருணனும், ஒசாமாபின்லேடனும்..

ஒரு முன் குறிப்பு;
’’அறத்தின் குரலாய் ஒலித்து ஆழ்கடலில் மூழ்கிய கும்பகருணனுக்கும் ...
வன்முறையின் வடிவாய் வாழ்ந்து கடலுக்குள் ஆழ்த்தப்பட்ட பின்லேடனுக்கும் ..
கடலுக்குள் மூழ்கிப் போனவர்கள் என்பது தவிர....வேறு சம்பந்தம் எதுவுமில்லை’’

18.5.11

’’குழவி இறப்பினும்..’’



சங்கச் சமூகம்,போர் முதன்மைப்பட்ட சமூகம்.
போரில் புறப் புண் பட்டதற்கு நாணி வடக்கிருந்து(உண்ணாநோன்பு)உயிர் விடும் சமூகம்.

11.1.11

'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக....'


கண்ணதாசன் கவிதைகளின் மீது ஆயிரம் விமரிசனங்கள் இருந்தாலும்,'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக..'என்பது போன்ற சில தொடர்களுக்காக அவரைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு விடலாமோ என்று சில வேளைகளில் தோன்றுவதுண்டு.
அவர் குறிப்பிடும் விடிந்தும் விடியாத காலைப்பொழுதைச்
’‘சிற்றஞ்சிறு காலை’’யாகத் தன் திருப்பாவையில் - புலர்த்திக் காட்டிக் கண்ணனை மட்டுமன்றி... இளங்காலையின் அழகையும் ஒலி ஒளிக் காட்சியாய் அகக்கண்ணில் தரிசனப்படுத்துபவள் ஆண்டாள்.

அவளது பாவைப்பாடலில் ....
காலை என்ற வேளை...சின்னதாய் அரும்பு கட்டி..மெல்ல மெல்ல மொட்டாகிப் படிப்படியாய் இதழ் விரித்துப் பின் கதிர் பரப்பி விடிகிறது.

திரு வில்லிபுத்தூர் சென்றிருந்தால் அங்கே ஓங்கி உயர்ந்து நிற்கும் பழமையான வடபத்ரசாயி கோயிலுக்கும் 
(அந்தக் கோபுரமே தமிழக அரசின் அதிகார இலச்சினை)
 பின்பு புதிதாய்க் கட்டப்பட்ட ஆண்டாள் கோயிலுக்கும் இடையே ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதாய்ச்சொல்லப்படும் துளசிப் பாத்தியையும் நந்தவனத் தோட்டத்தையும் கண்டிருக்கலாம்;

ஒரு முறை அங்கே சென்றிருந்த மாலைப் பொழுதொன்றில்  கூடடையும் பறவைகளின் ஒலிக் கலவை கூட்டாய் எழுந்து மனதுக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சியும்,எழுச்சியும் இன்னும் கூட நெஞ்சுக்குள் மிச்சமிருக்கிறது.
என்றோ ஒரு நேரம் எழும் பறவைகளின் ஒலியே அத்தகைய மன எழுச்சியைத் தரக்கூடுமென்றால்...ஒவ்வொரு நாள் விடியலிலும் அந்தப் பறவைகளின் ஒசை கேட்டுத் துயில் கலையும் ஆண்டாளின் கவிமனம் அவற்றின் ஒலி பேதங்களை...எந்தெந்தப் பறவை எந்தெந்த நேரம் கண்விழித்து எவ்வாறு குரல் தரும் என்பதை எத்தனை நுணுக்கமாக உள்வாங்கிக் கொண்டிருக்கக்கூடும் என்பதை எளிதாக அனுமானித்து விடலாம்.

திருப்பாவையின் சிறு காலை..
புள் சிலம்பு’வதோடு தொடங்குகிறது. 
இது...பறவைகள் கண்விழித்து இலேசாகக் குரல் கொடுக்கும் முதல் நிலை.
அடுத்தது புள்ளுக்கே அரசனான கருடனை வாகனமாய்க் கொண்ட திருமாலின் கோயில் திறக்கப்பட்டு விட்டது என்பதன் அறிகுறியாக ஆலயத்தில் முழங்கும் வெள்ளை விளிச் சங்கின் பேரரவம்.
தொடர்ந்து அந்தத் திருமாலை மட்டுமே உள்ளத்தில் தாங்கி வாழும் முனிவர்களும் யோகியரும் தங்கள் அறிதுயிலை மெல்லக் கலைத்து
(உறக்கம் கலைந்து விழிப்பு நிலை வரும்போது தூக்கிவாரிப்போட்டதைப்போல அமைந்து விடாமல் நிதானமாக...படிப்படியாகவே அத் துயில் கலைதல் நிகழ வேண்டும் என்ற அறிவியல் உண்மையினையும் குறிப்பிட்ட இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள்)
அரி..அரி..’என்ற பெயரைப் பெருமுழக்கம் செய்யத் தொடங்கும் அரவம்..

காலை....இன்னும் சற்றுப் புலர ஆரம்பிக்கிறது.
அதன் அறிகுறியாக ‘ஆனைச் சாத்தன்’என்ற பறவையினம் தனக்குள் கலந்து பேசும் பேச்சரவம் கேட்கிறது.
முதலில் கேட்டது, பறவைகள் கண் விழித்ததும் எழுப்பிய மெல்லொலி;
இப்பொழுது கேட்பது, கரிக்குருவிகளாகிய ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் தமக்குள் கீச்சு மூச்சென்று ஆரவாரமிட்டுக் கொண்டு உரையாடும் சற்று உரத்த ஓசை.
ஆண்டாளின் நுண்ணிய கவிமனம்...அந்தக் குருவிகளின் இரைச்சலையும் கூட அவற்றுக்கிடையே நடக்கும் ஓர் உரையாடலாகப் பார்க்கிறது.
பறவைகள் எழுப்பிய பலதரப்பட்ட ஓசைகள் ஆய்ச்சியரைக் கண்விழிக்கச் செய்ய...அவர்கள் தங்கள் காலைப் பணியைத் தயிர் கடையும் ஒலியோடு துவங்குகிறார்கள்.
பெருமளவில் தயாரிக்கப்பட்டாலும் கூட் மத்தினால் தயிர் கடையும் ஒலி பேரோசையாக இருக்க வாய்ப்பில்லை ; அதனாலேயே அத் தொழிலில் அவர்கள் மேற்கொள்ளும் அசைவினால்,அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் குலுங்கிச் சத்தமிடுவதையும் கூடவே இணைத்தபடி.. 
.’காசும் பிறப்பும் கலகலப்ப’என்கிறாள் ஆண்டாள்.
ஆயர் குலப் பெண்கள் கழுத்தில் அணியும் அச்சுத் தாலியும்,ஆமைத்தாலியுமே காசு,பிறப்பு என்று குறிக்கப்படும் அணிகலன்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், நால்வகைப் பா இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய ஆண்டாள் வெண்பாவின் கூறுகளாகிய காசு,பிறப்பு ஆகியவற்றையும் உட் செரித்து உரிய இடத்தில் வெளிப்படுத்தும் நுட்பம் சிறப்பானது.

அடுத்த படிநிலையாகக் கீழ் வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது.
எருமைகள் பனி படர்ந்த புல்லில் மேய்வதற்காகச் சிறு தோட்டங்களை நாடி மென்னடை இடத் தொடங்குகின்றன.
 பரந்த மேய்ச்சல் வெளிகளுக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு முன்பு , அருகிலுள்ள சின்னத் தோட்டங்களில் கால்நடைகள் அப்போதைக்குச் சற்று மேய்ந்து திரிவதுண்டு ; இந்த நுணுக்கமான வேறுபாட்டையே உணர்த்திக் காட்டுகிறது ’சிறுவீடு மேய்வான்..’என்னும் தொடர்.

இறுதி நிலையாக வருவது....,வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும் அரிய வானியல் காட்சி.
புலரும் காலையில் வியாழக் கிரகம் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து கொள்வதும், சுக்கிரன் என்னும் விடி வெள்ளி பளிச்செனக் கண்ணில் படுவதும் இயற்கையோடு ஒன்றிக் கலந்து வாழ்பவர்களுக்கு அன்றாடம் அனுபவமாகியிருக்கும் ஒரு தினசரி நிகழ்வுதான் என்றாலும்..
‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’
என்ற பாவைப்பாட்டு வரிகள் அந்த அனுபத்தை அழியா ஓவியமாக்கி மனதில் நிலைநிறுத்தி விடுகின்றன.

காலையின் மற்றொரு அடையாளமாகச் செங்கழுநீர்ப்பூக்கள் வாய்நெகிழ்த்தி விரியத் தொடங்க...ஆம்பல்கள் வாயடைத்துக் கூம்புகின்றன.

மீண்டும்....உரத்த குரலுடன்...புட்களின் சிலம்பல்.
ஆலயச் சங்கின் முழக்கம்....

இயற்கையாக நிகழும் இத்தனை பின்னணி ஒலிகளொடு குள்ளக் குளிரக் குடைந்து நீராடிப் பாவை நோன்பியற்றும் பெண்கள் , தங்கள் தோழியர் வீட்டு முற்றத்தில் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடும் ஒலிகளும் இறுதியாகப் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.
காலை விடியலைக் காணாமல் ‘கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருண’னைப் போல உறங்கும் சக தோழிக்குக் காலையின் ஒலி,ஒளிக் காட்சிகள்,
ஆண்டாளின் வாய்மொழியில் விரியும் வரிசை இது......
‘’புள்ளும் சிலம்பின காண்’’

‘’புள்ளரையன் கோயில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம்’’

’’முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்’’

‘’கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
  பேசின பேச்சரவம்..’’

‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
   வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
   ஓசைப்படுத்த தயிரரவம்..’’

‘’கீழ் வானம் வெள்ளென்று..’’

‘’எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன’’

‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’

‘’புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின..’’
இறுதியாகப்
’ 'பாவைக்களம் புக்க பிள்ளைகள்’’,மனதுக்கினியானைப்பா’’டும் பாட்டொலிகள்..

பதட்டமும்.. நெருக்கடிகளுமாய்ப் பிற புலன் மயக்கங்கள் அதிகம் கூடிப் போயிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்திருக்கும் இன்பங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் அவற்றில் விடியலின் அழகைத் தவற விட்டிருப்பதும் தென்படக் கூடும்.
தற்செயலாகக் கண்ணில் தட்டுப்படுவதன்றி.
.’’நிலாப் பார்ப்பதற்கென்று நிலாப் பார்த்து நாளாயிற்று’’ என்கிறது கல்யாண்ஜி(வண்ணதாசன்)யின் ஒரு கவிதை.


விடியலின் அழகை நாம் வியந்து ரசித்த காலமும் கூடத் தொலைந்து கை நழுவிப் போய்க்கொண்டேதான் இருக்கிறது.
தொலைக்காட்சிகளும்...கணினிகளும்...பின்னிரவுப் பொழுதுபோக்குகளும் தின்று முடித்த இரவின் இன் துயிலைச் சூரியச் சூட்டின் எரிச்சலோடு கலைத்தபடி கண்விழிக்கிற தலைமுறைக்கு இளங்காலை இனிமைகளின் அருங்காட்சி சாலையாக....தொல் புராதனச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கப் போகும் திருப்பாவை.,.வெறும் விடிகாலை பஜனை மட்டுமல்ல.
சிற்றஞ்சிறு காலையை .....அது மெல்ல விடியும் பேரழகை , அந்த மோனப் பொழுதில் கேட்கும் பல்வகை ஒலிக் கூட்டுகளை அசை போட்டு ஆராதிக்க வைத்த ஒரு சிறுநடைப் பயணம்..அது



5.9.10

கவிதையின் தருணம்


வரகவிகளும், உலக மகா கவிகளும் கூடத் தங்களில் கவிதை நிகழப் போகும் அற்புதமான அந்தக் கணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்களே.
காரணம்...சொற்களை வெறுமே பிண்டம் பிடித்து வைத்து விடுவதால் மட்டும் கவிதை உருவாகி விடுவதில்லை என்ற சூட்சுமத்தை அவர்கள் புரிந்து வைத்திருப்பதுதான்.

கடும் கோடையில் புழுங்கித் தவிக்கையில் எங்கிருந்தோ ஒரு கணம் வந்து இதமாக முகத்திலறைந்து விட்டுப் போகும் குளிர் தென்றலைப் போல்.....,
பனிநீராகத் தெளிக்கும் மழையின் மிகச் சிறு திவலையைப் போல்....,
சற்றும் எதிர்பாராத ஒரு வேளையில்
எங்கோ தொலைதூரத்தில் மலர்ந்த ஏதோ ஒரு பூவின் மணம் நாசிக்குள் ஊடுருவிக் கொண்டு போவதைப் போல்
கவிதையும் ‘சட்’டென்று ஒருகணப்பிடிமானத்தில் சம்பவிக்கிறது.

15.8.10

சுதந்திரம்






சுதந்திரத்தின் மகத்துவம் பேசப்படுகிறது

குண்டு துளைக்காத 

கூண்டுகளிலிருந்து.......




2.8.09

ஆழியாறு தந்த அமுதம்


பொதுவான தளத்தில் ஆன்மீகம் என்பது தனிமனித அகமுகத் தேடலுக்கும்,மேம்பாட்டுக்கும் உரிய ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.இந்தப் பொதுப் போக்கை மாற்றி ஆன்மீகத் தேடல்களைச் சமூக நலனுக்கும்,வளத்திற்கும் உரியதாக மடை மாற்றம் செய்த ஞானியர் சிலரில் வேதாத்ரி மகரிஷி அவர்களும் ஒருவர்.

கூடுவாஞ்சேரி என்னும் சிற்றூரில் ,எளிய தறி நெசவுக் குடும்பத்தில் பிறந்து ,வறுமையின் கொடுமையை அணு அணுவாக நுகர்ந்து அதை மாற்றும் வழியை ஆன்மீகப் பாதையில் தேடியவர் அந்த மகான்.

வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்’என்று பரந்த உலகப் பொது நோக்கிலான தாரக மந்திரத்தை அளிப்பது அவருக்குச் சாத்தியமானது அதனால்தான்.

அரிதான யோகக் கலை, சாமானியர்களையும் எட்டும் வகையில் ,எளிய குண்டலினி யோகமுறையை(Simplified Kundalini Yoga)மனவளக்கலையாக வடித்துத் தந்து அறிவுத் திருக் கோயிலை ஆழியாறில் அமைத்தளித்த சிற்பி அவர்.

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’’ என்ற உயர் மரபின் தொடர்ச்சி அவர்.

மகரிஷி அவர்களின் ஜெயந்தி 14.08.09 கொண்டாடப்படுவதை ஒட்டி, அவர் நிறுவிய புதுதில்லி மனவளக்கலைமன்றத்தில் யோகம் பயிலும் பேற்றைப் பெற்றிருக்கும் நான் கீழ்வரும் சிறு கவிதையைக் குருகாணிக்கையாக்குகிறேன்.


என்னை அறியாமல்...
ஏதேதோ செய்திருந்தேன்
தன்னை அறியவில்லை
தன்னறியும் திறனுமில்லை

ஆசை வலைப்பட்டு
அகந்தையின் பிடியில் சிக்கி
மாயச் சுழலுக்குள்
மயங்கியே நான் கிடந்தேன்


சிற்றறிவில் சினம் கொண்டு
பேரறிவாம் பகுத்தறிவைச்
செயல்படுத்த அறிந்திடாமல்
செயலற்றுப் போய்க் கிடந்தேன்

மாயையெனும் பேய் பிடிக்க
மனிதத்தைத் துறந்துவிட்டு
ஆணவ அழுக்கு மூட்டை
அடுக்கடுக்காய்ச் சுமந்திருந்தேன்


உடம்பார் அழிந்துவிட்டால்
உயிராரும் போய்மடிவார்
திருமூலர் வாக்கு இது
திருத்தமான வாக்கு இது

உயிரார் உறைகின்ற
உன்னதமாம் கோயிலென
ஒருபோதும் என்னுடம்பை
உயர்வாய் எண்ணவில்லை


தூல உடல் பேணுகின்ற
சூக்குமம் விளங்கவில்லை
சூக்குமம் புரிந்தாலும்
சோம்பல் என்னை விடவில்லை

அன்றாடக் கவலைகளில்
அலைக்கழிந்து அலமந்து
இலக்குகளைத் தவறவிட்ட
தருணங்கள் ஏராளம்


சகமனிதம் சகித்திடாமல்
சாதனைகள் புரிந்தென்ன
பொறுமைதனைக் கொண்டிடாமல்
பெருமைகள்தான் சேர்ந்தாலென்ன

எண்ண அலை ஓயவில்லை
எதிலும் மனம் பதியவில்லை
ஓயாத உளைச்சலோடு
உழன்றபடி நானிருந்தேன்


வேதனையைத் தீர்க்க வந்த
வேதாத்ரி காணும் வரை
வேண்டாத பயங்களையே
கொண்டாடி வாழ்ந்திருந்தேன்

ஆழியாறு என்னுமொரு
அமுதத்தைக் காணுமட்டும்
அயர்ச்சியோடு சலித்தபடி
அன்றாடம் உளைந்திருந்தேன்



வளமுடன் வாழ்கவென்றே
வந்ததொரு மாமருந்து!
நலமுடனே சிறப்பதற்குக்
கண்கண்ட பெரு மருந்து!

கண் முற்றும் கெடுவதற்குள்
கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன்
காயகல்பக் கலை கொடுத்த
தவ யோகி கண்டுகொண்டேன்


ஆன்மீக வாழ்வென்றால்
அஞ்சியே ஓட வேண்டாம்
கற்றை முடிதரித்துக்
காட்டுக்குள் செல்ல வேண்டாம்
அவரவர் பணியினையே
அலுக்காமல் சளைக்காமல்
அன்புடனே ஆற்றிவந்தால்
அதுதான் தவமென்ற
தத்துவத்தைப் புரியவைத்துத்
தவம் செய்ய வைத்திட்ட
ஞான குரு நமக்கு வாய்த்தார்


உள்ளுக்குள் ஒடுங்கிப்போய்த்
தன்னிலை கண்டபோதும்
உலகப் பொது நன்மை
உன்னதமாய்ப் பேணுதற்காம்
கடப்பாடு நமக்கிருக்கும்
காரியத்தை எடுத்துக் காட்டி
வையகம் வாழ்கவென்ற
வாசகம் தன்னைத் தந்தார்


மனவளக்கலை தந்த
மாமருந்து ஏராளம்
சொல்லி முடியாது
சொல்லவும் நாள்போதாது


கைகளுக்கும் கால்களுக்கும்
கண்ணுக்கும் ஏற்றதுவாய்
மூச்சுப் பயிற்சிக்கும்
முதன்மைதரும் முறையினிலே
உடல்நலத்தைக் காப்பதற்காய்
உயர்ந்த பல பயிற்சிமுறை

வச்சிரம் மகரமென்று
வெவேறாய் ஆசனங்கள்


உடம்பென்ற கோயிலுக்குள்
உறைகின்ற ஆன்மாவைத்
தட்டியே எழுப்புதற்காய்த்
தனித்தனியே தியானமுறை

ஆக்கினையில் தொடங்குமது
துரியத்தில் தான் வளர்ந்து
துரியாதீதமென்றே
துரிதமாய் வளர்ந்துவரும்


ஒன்பதாம் கோள்களுமே
நல்வினையை நமக்களிக்க
நவக்கிரகத் தவமென்ற
நல்லதொரு தவமுமுண்டு

பஞ்ச பூதம் கண்டுநாமும்
அஞ்சியே வாழ்ந்திடாமல்
நிலம் வளி வான் காற்றோடு
நெருப்பான ஒன்றைச் சேர்த்து
ஐம்பூதம் மேல் செய்யும்
அரியதொரு தவமுமுண்டு
.

ஐந்தடக்கல் ஆற்றி நன்றாய்
ஐம்புலனைக் காப்பதற்கே
ஐம்பொறிமேல் நாம் செய்யும்
அழகான தவமுமுண்டு

அகத்தாய்வு பல அளித்து
அகத்தூய்மை பெறுவதற்கு
அருமையான வழிகாட்டும்
படிநிலைகள் பலவுண்டு
முத்தாய்ப்பாய்ப் பிரமஞானம்
முக்தி வேறு தேவையில்லை


இத்தனையும் தந்து வைத்த
சித்தராம் மகரிஷியை........

வளமுடன் வாழ்கவென்ற
வாசகத்தை வடிவமைத்து
வேதத்தின் சாரத்தை
வெகுலகுவாய் ஆக்கிவைத்த
வேதாத்ரி மகரிஷியின்
விருப்பத்தை நெஞ்சில் வைத்து
நாம் பெற்ற இன்பத்தை
வையமெல்லாம் பெற்றிடவே
வேண்டியதைச் செய்திடுவோம்


அற வாழ்வின் நாட்டத்தில்
பிறழாமல் பணிசெய்து
ஆழியாறு அளித்தவாக்கை
அகிலமெங்கும் பரப்பிடுவோம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....