துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.9.20

‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’ -கனலி இதழ்க்கட்டுரை,நேர்மைத் திருடன்



என் ‘தஸ்தயெவ்ஸ்கி குறுங்கதைகள்’ மொழியாக்கம் பற்றி கனலி இதழில் வெளியான இரா சசிகலாதேவியின் கட்டுரையைப் பகிர்வதோடு

http://kanali.in/dostoevsky-kathaigal-review/



அவர்கள் குறிப்பிட்டிருக்கும் தொகுப்பிலுள்ள ’நேர்மைத் திருடன்’ கதையும் வாசிப்புக்கு..

.(’மெல்லிய ஜீவன்’ கதையை நூலில் வாசித்துக்கொள்ளலாம்)

’நேர்மைத் திருடன்'
ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி
I

ஒரு நாள் காலையில் நான் அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது எனது சமையற்காரியும், துணி துவைப்பவளும்,  வீட்டைப் பராமரிப்பவளுமான அக்ரஃபேனா என் அறைக்கு வந்தாள்; எனக்கு ஆச்சரியத்தைத் தரும் முறையில்  என்னோடு பேசவும் தொடங்கி விட்டாள். மிக மிக எளிமையான - சாமானியமான பெண்ணான அவள், இன்று காலை இந்த நேரம் வரை என்னோடு அதிகம் பேசியதே இல்லை.கடந்த ஆறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் என் இரவு உணவைப்பற்றி ஒரு சிலவார்த்தைகள் பேசியதைத் தவிர வேறு எதையுமே என்னிடம் அவள் பேசியதில்லை..அவள் வேறு எதையாவது  பற்றிப் பேசி நான் கேட்டதும் இல்லை.

‘’
உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் ஐயா’’
என்றபடி திடீரென்று பேச்சைத் தொடங்கினாள் அவள்.
‘’
அந்தச்சிறிய அறையை நீங்கள் ஏன் வாடகைக்குவிடக்கூடாது?’’என்றாள்.

‘’
எந்தச் சிறிய அறை?’’

‘’
என்ன ஐயா இது,ஒன்றும் தெரியாதது போலக்கேட்கிறீர்களே? அதுதான்...அந்தச்சமையல் அறையை ஒட்டினாற்போல இருக்கிறதே அந்த அறைதான்’’

‘’
எதற்காக விட வேண்டும்’’

‘’
எதற்காகவா.....? ஏதோ உங்களுக்கு எதுவுமே தெரியாதது மாதிரி கேட்கிறீர்களே...? மற்ற எல்லாரும் தங்கள் அறைகளை வாடகைக்கு விட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்’’

‘’
ஆனால்...அந்த அறையைப் போய் யார் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்’’

‘’
யார் எடுத்துக்கொள்வார்களா..? என்ன ஐயா இது ? உங்களுக்குத் தெரியாதா என்ன....? யாருக்கு வாடகைக்கு வீடு தேவையோ அவன்தான் அதை எடுத்துக்கொள்வான்’’

‘’
அதெல்லாம் இருக்கட்டும் பெண்ணே...! ஆனால் அந்த மாதிரி ஒரு எலிப்பொந்தில் இருக்க யார்தான் ஆசைப்படுவார்கள்? அதுவோ பெட்டிமாதிரி இருக்கிற ஒரு அறை. அங்கே ஒரு படுக்கையைப்போடக்கூட முடியுமா என்பது எனக்கு சந்தேகம்தான்.அப்படியே ஒரு வேளைஅதைப்போட்டு விட்டாலும் அப்புறம் அதற்குள் நடமாடத் துளிக்கூட இடம் இருக்காது’’.

''
ஐயா....அங்கே  வசிக்க வேண்டுமென்ற விருப்பமெல்லாம் யாருக்கும் இல்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் படுத்துத் தூங்க ஒரு இடம் மட்டும்தான்.ஜன்னல் திண்ணையில் கூட அவன் குடியிருந்து விடுவான்’’

‘’
எந்த ஜன்னல் திண்ணை?’’

‘’
என்ன ஐயா இது ? மறுபடியும் எதுவுமே தெரியாதது போலக்கேட்கிறீர்களே.? அந்த வழிநடையில் இருக்கிறதே அந்தத் திண்ணைதான்.அவன் அங்கே உட்கார்ந்து கொள்வான்; தையல் வேலை செய்வான்;இன்னும் என்னென்ன விருப்பமோ அதையெல்லாம் செய்வான்.அவன் விரும்பினால் ஒரு நாற்காலியில் கூட உட்கார்ந்து கொள்ளட்டும்.அவனிடம் ஒரு மேஜையும் நாற்காலியும் கூட இருக்கின்றன.அவன் எல்லாமே வைத்திருக்கிறான் ஐயா’’

‘’
அதெல்லாம் சரி...யார் அவன்’’

‘’
ஐயா...அவன் ஒரு நல்லமனிதன்! தன் வாழ்நாளில் நிறைய அனுபவங்களைப்பெற்றிருப்பவன். அவன் தங்கிக்கொள்வதற்கும் சாப்பாட்டுக்குமாகச்சேர்த்து மாதம் பத்து ரூபிள் மட்டுமே வாங்குவதாக இருக்கிறேன்.’’

என் பொறுமை அளவு கடந்து சோதிக்கப்பட்ட பிறகு - யாரோ ஒரு வயதான மனிதன் அக்ரஃபேனாவின் சாப்பாட்டுக்கு வாடிக்கையாளாராக வருவதற்கு எப்படியோ அவளைத் தூண்டி அனுமதியும் பெற்றுவிட்டான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

ஏதாவது ஒன்றைச்செய்யவேண்டும் என்பது அக்ரஃபேனாவின் மண்டைக்குள் ஏறிவிட்டால் அதை உடனே செய்து முடிக்காமல் அவள் என்னை நிம்மதியாக விட மாட்டாள் என்பதையும் இப்போது நான் நன்றாக விளங்கிக்கொண்டேன்.தன் விருப்பத்துக்கு மாறாக ஏதாவது இருந்து விட்டால் போதும்,உடனே அவள் உற்சாகம் குன்றிப்போய் விடுவாள். ஏதோ மோசமான ஒரு துயரத்தின் பிடியில் அகப்பட்டவள் போல இருப்பாள்;அது இரண்டு மூன்று வாரம் கூட நீடிக்கும்.அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் என் இரவு உணவு வாயில் வைக்க முடியாதபடி இருக்கும்; என் தரை சுத்தம் செய்யப்பட்டிருக்காது;குளியலறையில் எனக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்கள் கூட எங்கோ மாயமாய்ப்போயிருக்கும்.சுருக்கமாகச் சொன்னால் துரதிருஷ்டமான விபத்துக்கள் பலவும் நிறைந்த நீண்டதொரு அத்தியாயமாக என் வாழ்க்கை அப்போது மாறி விட்டிருக்கும். வாயில்லாப்பூச்சியான இந்தப்பெண்  சுயசிந்தனை இல்லாதவளாக - எதைப்பற்றியுமே சிந்திக்க அறியாதவளாக இருப்பதைப்  பலகாலமாக நான் பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் தப்பித்தவறி ஏதாவது ஒரு யோசனையோ திட்டமோ அவளது சின்ன மூளையில் உதித்து விட்டால் போதும், அதை உடனடியாகச்செயல்படுத்தி விட வேண்டுமென்றுஅவள் துடிப்பதைத்தடுப்பது, சிலகாலம் அவளை ஜீவிக்க விடாமல் செய்வது எத்தனை கடினமோ அவ்வளவு கடினமானது.

 

நிலைமை அப்படி இருந்ததாலும், இந்த உலகத்திலுள்ள வேறு எதை விடவும் என் மன நிம்மதியை மட்டுமே நான் பெரிதும் விரும்பியதாலும் குடித்தனக்காரனுக்கு இடம் தர வேண்டுமென்ற அக்ரஃபேனாவின் கோரிக்கைக்கு  உடனே ஒப்புதல் தந்தேன்.


‘’சரி...இப்போது இதைச்சொல்.அவனிடம் சான்று ஆவணம் ஏதாவது இருக்கிறதா..? பாஸ்போர்ட்டோ....அல்லது அந்த மாதிரி வேறு ஏதாவதோ...’’

‘’
இருக்கும் ஐயா இருக்கும். நிச்சயமாக அவனிடம் இருக்கும். நான் உங்களிடம் ஏற்கனவே சொன்னதைப்போல அவன் ஒரு நல்ல மனிதன்,அனுபவசாலி,மாதம் பத்து ரூபிள் தருவதாய் வாக்குக்கொடுத்திருக்கிறான்.’’

அதற்கு மறுநாளே என் எளிய பிரம்மச்சாரிக்குடியிருப்பில் தங்க வந்து விட்டான் அந்தக் குடித்தனக்காரன்.அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது; நேர்மாறாக என் அடி நெஞ்சில் கொஞ்சம் திருப்தியாகக்கூட இருந்தது.  சொல்லப்போனால் நான் மிகவும் தனிமையான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். துறவியைப்போன்ற ஒரு வாழ்க்கை!                                     

 எனக்குப்பேச்சுத்துணைக்கென்று யாரும் இல்லை; நான் வெளியே செல்வதும் அபூர்வம்தான். உலகத்திலிருந்து என்னை முழுமையாகத் துண்டித்துக்கொண்டபடி பத்து ஆண்டுகள் வாழ்ந்தபிறகு தனியாக இருப்பதென்பது எனக்கு இயல்பாகவே பழகிப்போய் விட்டிருந்தது.

ஆனாலும் இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுக்காலமோ அதற்கும் மேலாகவோ....இதே போல ஒர் தனிமையான வாழ்வை - இதே அக்ரஃபேனாவின் துணையுடன் இதே பிரம்மச்சாரிக்குடியிருப்பில் நடத்துவதென்பது எனக்கு வரவேற்கத்தக்கதாகத் தோன்றவில்லை.அதனால்....இப்படி ஒரு சூழ்நிலையில்...இன்னொரு மனிதனின் - அதிலும் அமைதியான நடத்தை கொண்ட இன்னொருவனின் வரவு எனக்கு உண்மையிலேயே ஒரு வரமாகப்பட்டது.

அக்ரஃபேனா என்னை ஏமாற்றிவிடவில்லை; என்னிடம் வாடகைக்கு வந்தவன் நிறைய உலக அனுபவம் கொண்டவனாகவே இருந்தான்.அவனிடமிருந்த பாஸ்போர்ட் அவன் ஒரு முன்னாள் ராணுவ வீரன் என்பதைத் தெளிவுபடுத்தியது;ஆனாலும் அதைப்பிரித்துப்பார்ப்பதற்கு முன்பே நான் அதைத் தெரிந்து கொண்டு விட்டேன். ஒரு மனிதனைப்பற்றி ஒரு பார்வையிலேயே தெரிந்து கொண்டு விடலாம்.

என்னிடம் குடி வந்த அஸ்தாஃபி இவானோவிச் ஒரு முன்னாள் ராணுவ வீரனுக்கு ஏற்ற நேர்த்தியான குணங்களோடு இருந்தான்; இங்கே அவன் வந்து சேர்ந்தது என் அதிருஷ்டம்தான். எனக்கு அவனிடம் ரொம்பவும் பிடித்தது அவ்வப்போது அவன் சொல்லும் கதைகள்தான்..! உண்மையிலேயே மிக நல்ல கதைகள், பெரும்பாலும் அவனுடைய சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த  அனுபவங்களாகவே அவை இருக்கும். அலுப்பும் சலிப்புமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அப்படிப்பட்ட கதைசொல்லி கிடைத்தது, உண்மையிலேயே ஒரு புதையலைக்கண்டது போலத்தான் இருந்தது.

அவன் சொன்ன கதைகளில் என் உள்ளத்தில் மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று உண்டு.

தொடர்ந்து வரும் ஒரு சூழ்நிலையில்தான் அந்தக்கதையாடல் நிகழ்ந்தது.

அப்போது என் குடியிருப்பில் நான் மட்டுமே இருந்தேன்; அக்ரஃபேனாவும் அஸ்தாஃபியும் தங்கள் வேலை நிமித்தமாக வெளியே போயிருந்தார்கள்.திடீரென்று யாரோ உள்ளே வருவது போல சத்தம் கேட்டது. யாராவது வெளிஆளாக இருக்கலாம் என்று எண்ணிய நான் அது யாரென்று பார்க்க அறையை விட்டு வெளியே வந்தேன். நிஜமாகவே அது அறிமுகமில்லாத ஒரு ஆள்தான்; குட்டையாக இருந்த அவன், மிகவும் குளிரான அந்த இலையுதிர் நாளிலும் கூடமேல்கோட்டு அணிந்து கொள்ளாமல் இருந்தான்.
‘’
உனக்கு என்ன வேண்டும்’’
‘’
அலெக்ஸாண்ட்ரோவ் என்ற பெயரில் யாராவது ஒரு அரசு ஊழியர் இங்கே வசிக்கிறாரா’’
‘’
இல்லையே அந்தப்பெயருடன் இங்கு யாரும் இல்லை’’ என்று பதில் சொன்னபடி சட்டென்று அவனை அனுப்பி வைக்க முனைந்தேன்.
‘’
அதிசயமாகத்தான் இருக்கிறது..’’என்று சொன்னபடியே கதவருகே கவனமாகப்பின் வாங்கிச்சென்ற அவன்,
‘’
ஆனால் அவன் இங்கேதான் இருப்பதாக இந்த வீட்டைப்பராமரிப்பவர் என்னிடம் சொன்னாரே’’
‘’
முதலில் போ வெளியே...ம்... போகிறாயா இல்லையா?’’என்று அவனை விரட்டியடித்துவிட்டேன்.

மறுநாள் இரவு உணவுக்குப்பிறகு என் கோட்டை சற்று சரிப்படுத்தித் தைத்துக்கொண்டிருந்தான் அஸ்தாஃபி .அப்போது வழிநடையில் யாரோ நிற்பதைப்பார்த்து நான் இலேசாகக்கதவைத் திறந்தேன். நேற்று வந்த அதே ஆள் சடாரென்று உள்ளே நுழைந்து கோட்ஸ்டாண்டில் தொங்கிக்கொண்டிருந்த என் சிறிய குளிர்காலக் கோட்டை என் கண் முன்பாகவே உருவியெடுத்துத் தன் தோள்பட்டைக்கடியில் வைத்துக்கொண்டபடி என் குடியிருப்பை விட்டுச் சிட்டாக மறைந்து விட்டான்.


அக்ரஃபேனா ஆச்சரியத்தில் ஊமையாகி விட்டிருந்தாள்; அவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்ததைத்தவிர என் பொருளைக்காப்பாற்ற அவள் தன் சுண்டுவிரலைக்கூட உயர்த்தவில்லை. திருடனை விரட்டிக்கொண்டு ஓடிய அஸ்தாஃபி இவானோவிச் பத்து நிமிடம் கழித்து மூச்சுவாங்கியபடி வெறும் கையோடு திரும்பி வந்தான். அந்த ஆள் அதற்குள் எங்கோ காற்றாய்ப்பறந்திருந்தான்.

‘’ ஒரு சின்ன நஷ்டத்தோடு தொலைந்தது அஸ்தாஃபி இவானோவிச்’’என்றேன் நான்.
‘’
நல்ல வேளை....குளிர்காலத்தில் அணிந்து கொள்ளும் மேலங்கி என்னிடம் இருக்கிறது...இல்லாவிட்டால் அந்த வில்லன் என்னை முழுமையாக உரித்தெடுத்திருப்பான்’’

ஆனால் நடந்து முடிந்த அந்த விஷயத்தால் அஸ்தாஃபி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான்; அவனோடு  ஒப்புநோக்கும்போது எனக்கேற்பட்ட நஷ்டத்தையே நான்மறந்துவிட்டேனென்றுதான் சொல்ல வேண்டும்,ஆனால் அவனால் அதிலிருந்து வெளியேவரவே முடியவில்லை. தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை நிமிடத்துக்கொரு தரம் தூக்கிப்போட்டுவிட்டு அந்தச்சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றிப் பேச ஆரம்பித்து விடுவான் அவன். அந்த ஆளிடமிருந்து சில அடி தொலைவிலேயே தான் நின்றுகொண்டிருந்தபோதும் அவன் தன் கண்ணுக்கு முன்னாலேயே அந்தக்கோட்டைப் பறித்தது பற்றியும் தன்னால் அவனைப்பிடிக்கமுடியாமல் போனதைப்பற்றியும் அவன் அங்கலாய்த்துக்கொண்டிருப்பான். பிறகு மறுபடியும் தன் வேலையில் உட்காருவான்...ஆனால் ஒரே ஒரு நிமிடம்தான்....பிறகு அதை விட்டு விட்டுக் கீழே இறங்கிச் செல்பவன் அங்கிருக்கும் காவலாளியிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லுவான்;அப்படிப்பட்ட காரியம் அந்த வீட்டில் நடக்க இடம் தந்ததற்காக அவனிடம் சண்டை பிடிப்பான். அங்கிருந்து திரும்பி வந்து அக்ரஃபேனாவிடம் அது குறித்து சொற்பொழிவாற்ற ஆரம்பித்து விடுவான். கடைசியில் ஒரு வழியாகத் தன் வேலையில் உட்கார்ந்த பிறகும் அதெல்லாம் எப்படி நடந்தது என்பதை வெகு நேரம் தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டிருப்பான்.


அந்தத் திருடனிடமிருந்து  சில அடி தொலைவிலேயே நானும் அவனும் இருந்தது.... , கண்ணுக்கு முன்னாலேயே அவன் அந்தக்கோட்டைப் பறித்தது ...., இன்னும் .....இன்னும் என்னென்னவோ சொல்லிப்புலம்பிக்கொண்டிருப்பான். அஸ்தாஃபி  தன் சொந்த வேலையில் கெட்டிக்காரன்தான்; ஆனால் இப்படி ஏதாவது நடந்து விட்டால் போதும்..,பயங்கரமாய் சோர்ந்து போய் விடுவான்; பொழுதெல்லாம் அதைப்பற்றியே அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பான்.

அஸ்தாஃபியுடன் சேர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்த மாலைப் பொழுதொன்றில்
‘’
நாம்தான் முட்டாளாகிப்போனோம் அஸ்தாஃபி’’என்றேன்....
கோட்டு திருட்டுப்போன கதையை மறுபடி ஒரு தரம் சொல்லுமாறு அவனைத்தூண்டி விடுவதன் மூலம் வழக்கமான சலிப்பைப்போக்கிக்கொண்டு ,கொஞ்சநேரம் சுவாரசியமாகக்கழிக்க நான் ஆசைப்பட்டேன். அவன் அதைத்திரும்பத் திரும்பச்சொல்லிக்கொண்டே இருந்ததாலும் , அவனது ஆதங்கம் உண்மையாக இருந்ததாலும் எனக்கு அந்தக்கதை மிகுந்த சுவாரசியம் அளிப்பதாக மாறி விட்டிருந்தது.

‘’
ஆமாம் சார்..உண்மைதான்...நாம் முட்டாளாகித்தான்போனோம் ’’என்றான் அஸ்தாஃபி இவானோவிச்.
‘’
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்...அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைதான்....ஆனாலும் என்னால் அதற்காக வருத்தப்படாமலிருக்க முடியவில்லை. திருட்டுப்போனது என்னுடைய கோட் இல்லைதான்...ஆனாலும் அதை நினைத்தால் என் ரத்தம் கொதிக்கிறது சார். என் புத்திக்கு எட்டிய வரை ஒரு திருடனை விட மோசமான வில்லன்  இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை. நம்மிடமுள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு போய் விட்டு  திருப்பியும் தராமல் விலையும் கொடுக்காமல் இருக்கும் மனிதர்களைப்பற்றி  எனக்குத் தெரியும்..ஆனால்....இந்தத் திருடன் இருக்கிறானே....அவன் நம் கைகளின் உழைப்பை , நம் நெற்றியிலிருந்து வடியும் வியர்வையை...ஏன்..அதற்காக நாம் செலவழித்திருக்கிற நேரத்தைக்கூடத் திருடுபவன்....அவன் ஒரு அருவருப்பான பிறவி  சார்...! அவனைப்பற்றிப்பேசினாலே ரத்தம் கொதிக்கிறது....அதிருக்கட்டும் சார்....உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், அது தவறானால் மன்னித்துக்கொள்ளுங்கள்...இப்போது தொலைந்து போயிருப்பதோ உங்களுடைய பொருள்..ஆனால் உங்களைப்பார்த்தால் அதைப்பற்றி அதிகம் கவலைப்படாதவரைப்போலத் தெரிகிறதே’’

’’
நீ சொன்னது சரிதான் அஸ்தாஃபி ! நம்மைக்குழப்பியடிக்கும் ஒரு தொந்தரவுதான் திருட்டு .! இப்படி திருட்டுக்கொடுப்பதை விட என் சாமான்களையெல்லாம் எரித்து விட்டால் கூடத் தேவலை போலிருக்கிறது’’

‘’
தொந்தரவு என்னவோ நிஜம்தான் சார்....ஆனாலும் இங்கே நிறையத் திருடர்கள் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு முறை நேர்மையான திருடன் ஒருவனைக்கூட நான் சந்தித்திருக்கிறேன்..அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது’’

‘’
என்னது நேர்மையான திருடனா...? ஒருவன் ஒரே நேரத்தில் நேர்மையானவனாகவும் திருடனாகவும் எப்படி இருக்க முடியும்?’’

‘’
நீங்கள் சொல்வது உண்மைதான் சார். நேர்மையான திருடர்கள் என்று யாரும் இல்லை, இதுவரை அப்படி யாரும் இருந்ததும் இல்லை. ஆனால் நான் குறிப்பிட்ட அந்த மனிதன் திருடினாலும் கூட ஓரளவு உண்மையானவனாகவும் இருந்தான் என்பதே நான் சொல்ல வருவது. சே....அவனைப்பற்றி யோசிக்கும்போதெல்லாம் என்னால் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை’’

’’என்ன நடந்தது  அஸ்தாஃபி’’

‘’
அது நடந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது சார். அந்த சமயம் கிட்டத்தட்ட ஒரு வருடம் போல நான் வேலை எதுவும் இல்லாமல் இருந்தேன்.என் வேலை போவதற்குக் கொஞ்சம் முன்னால் தற்செயலாக அந்த மனிதனை ஒரு மதுக்கடையில் சந்தித்தேன். நான் பார்த்தபோது நிலை தெரியாத அளவுக்குக் குடித்திருந்தான்அவன்.... பயங்கரமான குடிகாரனாகவும் பொறுக்கியாகவும் ஊர்சுற்றியாகவும் இருந்த அவன், அரசாங்க அலுவலகம் ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தவன். குடிப்பழக்கத்தின் காரணமாக வெகு நாட்களுக்கு முன்பே அவனை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள்.கடவுளே.....பார்ப்பதற்குத்தான் எத்தனை கோரமாக இருந்தான் அவன்..? கந்தல் ஆடைகளோடு சுற்றித் திரிந்து கொண்டிருப்பான்; கோட்டுக்குக் கீழே சட்டை போட்டுக்கொண்டிருந்தானா என்பது கூட எனக்கு சந்தேகம்தான்.கையில் ஏதாவது காசு கிடைத்தால் போதும்,உடனே குடித்துத் தீர்த்து விடுவான். ஆனால் குடி போதையில் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்யும் ரகத்தைச்சேர்ந்தவன் இல்லை அவன்.

 

‘’இல்லை  சார்...அவன் அந்த மாதிரியெல்லாம் இல்லை,மிகமிக அமைதியானவன், அன்பும்,நாகரிகமும் கொண்டவன், இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்டவன் என்பதால் தானாக யாரிடமும் போய் எதையும் கேட்க மாட்டான்.ஆனால் பாவப்பட்ட அந்த மனிதன் குடிப்பதற்காக எப்படித்தவித்துக்கொண்டிருந்தான் என்பது எனக்குத்தெரிந்திருந்ததால் நான் சற்று உதவினேன்.அதன் பிறகு நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம்.சொல்லப்போனால் அவன்தான் என்னிடம் அதிகமாக ஒட்டிக்கொண்டான். சரி...அது எப்படி இருந்தால்தான் என்ன...?அவன் எப்படி ஒரு வேடிக்கையான ஆள் தெரியுமா சார்…?

 

‘’நான் அவனை சந்தித்தது ஒரே ஒரு தடவைதான், ஆனால் அதற்கப்புறம் ஒரு நாய்க்குட்டியைப்போல என்னோடு ஒட்டிக்கொண்டு நான் எங்கே போனாலும் என்னைத்தொடர்ந்தபடி பின்னாலேயே வந்து கொண்டிருந்தான்அவன்.அவனுக்கென்று தனிப்பட்ட எந்த குணமும் இல்லை,குப்பைகூளம் போன்ற ஒரு மனிதன் அவன்..!


முதலில் ஒரு இரவுப்பொழுது மட்டும் என்னோடு தங்கிக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டான்.நானும் சம்மதித்தேன். ஆனாலும் கூட அவன் வைத்திருந்த பாஸ்போர்ட்டை ஒரு பார்வை பார்த்தபிறகுதான்! அதில் தவறாக ஏதும் இல்லை. அவனைப்பற்றிய விஷயங்களெல்லாம் சரிதான்.மறுநாள் மீண்டும் என்னோடு தங்க விரும்புவதாகச்சொன்னான்.அதற்கு அடுத்த நாளும் என் வீட்டுக்கு வந்து பகல் நேரம் முழுவதையும் ஜன்னல்திட்டிலேயே கழித்தான்.அன்று இரவும் தங்கினான்.
கடவுளே...இனி என்ன செய்வேன்....இதற்கு மேல் அவனை வெளியேற்றவும் முடியாது....அவன் சாப்பிட..குடிக்க...படுக்க என்று எல்லாவற்றுக்கும் நான்தான் ஏற்பாடு செய்து தரவேண்டியிருக்கும் , அதற்கு என்ன செய்வதுஎன்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

ஒரு ஏழைக்கு வந்து வாய்த்த விதி சார் அது!  நான் சாப்பிடுவதற்கே ஏதுமில்லை....இப்போதோ முன்பின் தெரியாத எவனோ ஒருவன் என் முதுகின் மீது வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அறிமுகமே இல்லாத ஒருவனை அண்டியபடி வாழ்க்கை நடத்துவது அவனுக்கு இது முதல் முறை இல்லை.சாராயக்கடையில் என்னை எதிர்ப்படுவதற்கு முன்பு அவன் ஒரு குமாஸ்தாவுடன் காலம் கழித்து வந்தான். அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் சென்று குடிப்பதும் உண்டு.  எடுத்த உடனேயே மூச்சு முட்டக்குடித்து விடுவான் என்பதால் இந்தப்பாவப்பட்ட மனிதன் மட்டுமே ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்டான் போலிருக்கிறது.

சார்! ! நான் பேசிக்கொண்டிருக்கும் அந்த மனிதனின் பெயர் யெமிலியான் இலிச்.

அவனை என்ன .செய்வது என்பது தெரியாமல் நான் என் மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தேன்.அவனைக் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளவும் எனக்கு மனம் வரவில்லை. பரிதாபகரமான அந்தப்பிச்சைக்காரன் மீது எனக்கு மிகுந்த இரக்க உணர்வு ஏற்பட்டிருந்தது. அத்தனை மோசமான சீரழிவுக்கு ஆட்பட்ட ஒருமனிதனை நீங்கள் கற்பனையில் கூடப்பார்க்க முடியாது சார்....ஒரு வார்த்தை கூடப்பேசாமல்....என்ன வேண்டுமென்றும் வாய்திறந்து கேட்காமல்...ஒரு நாயைப்போல என் கண்களை மட்டுமே வெறித்துப்பார்த்தபடி அப்படியே உட்கார்ந்திருப்பான். குடிப்பழக்கம் என்பது ஒரு மனிதனை அப்படிஆக்கி விடுகிறது சார்..! அவனிடம் போய் என்ன சொல்வதென்று தெரியாமல் நானும் திகைத்துக்கொண்டிருந்தேன் .

இதோ பார் யெமிலியான் ...நீ  இங்கேயிருந்து போய்விடுவதுதான் நல்லது. இங்கே உனக்கு இடம் இல்லை.நீ தவறான ஒரு ஆளிடம் வந்து சேர்ந்திருக்கிறாய்.இன்னும் கொஞ்ச நாளான பிறகு எனக்குச்சாப்பிடவே எதுவும் இருக்காது. அந்த நிலையில் உன்னை  வைத்துப் பராமரிக்க வேண்டும் என்று நீ எப்படி என்னை எதிர்பார்க்க முடியும்..’- இப்படியெல்லாம் மனதுக்குள்நினைத்தாலும் அவனிடம் வெளிப்படையாகச்சொல்ல என்னால் முடியவில்லை.

 

அப்படி ஒருவேளை நான் அதைச்சொன்னாலும்  அவனால் என்ன செய்து விட முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

நான் அதைச் சொல்லியிருந்தாலும் அவன் என்ன செய்திருப்பான்...?முதலில்  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதே புரியாதது போல வெகுநேரம் என் முகத்தை வெறித்துக்கொண்டே உட்கார்ந்திருந்திருப்பான்; பிறகு ஒரு வழியாக நான் சொல்ல வருவது பிடிபட்ட பிறகு ஜன்னலிலிருந்து எழுந்து கொண்டு தன் சின்ன மூட்டையைத் தூக்கிக்கொள்வான்[இதோ..இப்போது கூட என்னால் அந்த மூட்டையைப்பார்க்க முடிகிறது சார்...!சிவப்பு நிறக்கட்டம் போட்ட அந்த மூட்டை, முழுக்கமுழுக்கப்பொத்தல்களோடுதான் இருக்கும்.எங்கே சென்றாலும் அதையும் கூடவே தூக்கிக்கொண்டுதான் அவன் போவான். தன் எல்லாக்குப்பை கூளங்களையும் அதற்குள்ளேதான் அவன் திணித்து வைத்திருந்தான் ]; கந்தலாகிக்கிழிந்து தொங்கும் தன் பழைய கோட்டை அதிலுள்ள பொத்தல்கள் தெரியாமல்....கொஞ்சம் பார்க்கும்படி நாகரிகமாகவும், தன்னைக் குளிரிலிருந்து பாதுகாக்கும்படியாகவும் சரி செய்துகொள்வான். தன் வெளித்தோற்றத்தில் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்பவன் அவன். பிறகு கதவைத்திறந்து கொண்டு கண்ணீரோடு வெளிவாசலுக்குப்போய் விடுவான்.

ஆனால்.....அப்படி ஒரு மனிதனை அநாதரவாகவிடுவதற்கு என்னால் முடியவில்லை சார். நான் உண்மையிலேயேஅவனுக்காக வருத்தப்பட்டேன். ஆனால்...என்னுடைய வேலை போய் விட்டால் என் கதி என்ன ஆகும் என்ற எண்ணமும் அடுத்த கணமே என் மனதில் ஓடியது.
இரு இரு பார்த்துக்கொண்டே இரு...! என் அன்பு யெமிலியானே..இப்படி என்னுடைய செலவிலேயே நீ சாப்பிடுவதும் குடிப்பதும் சந்தோஷமாக இருப்பதும்....இதெல்லாம் இன்னும் ரொம்பநாள் முடியாதப்பா...சீக்கிரமே நான் நகர்ந்து போய் விடுவேன்...அப்புறம் நீ என்ன பாடுபட்டாலும் உன்னால் என்னைக்கண்டுபிடிக்கவே முடியாதுஎன்று எனக்குள்ளேயேசொல்லிக்கொண்டேன்.

அப்புறம் ஒரு நாள் ....அங்கிருந்து போயே விட்டேன்.

என் பழைய எஜமானர் அலெக்ஸாண்டர் ஃபிலிமோனோவிச் அப்போது இப்படிச்சொன்னார்.
[
இப்பொழுது அவர் உயிருடன் இல்லை,அவரது ஆன்மா கடவுளின் நிழலில் சாந்தி அடையட்டும்!]
‘’
அஸ்தாஃபி ! உன் வேலையில் எனக்குப் பூரண திருப்தி ....எங்களால் உன்னை ஒருபோதும் மறக்க முடியாது.நாங்கள் ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு  உன்னையே மறுபடியும் வேலைக்குக்கூப்பிட்டுக்கொள்கிறோம்’’என்றார்.


நான் பலவருடங்கள் அவரிடம் சமையல்காரனாக இருந்தேன்....ரொம்பப் பெரிய மனிதர் சார் அவர்.
அதன் பிறகு....சில மாதங்களுக்கப்புறம் அவர் இறந்து போய் விட்டார்.....சரி அது இருக்கட்டும்....!

அப்போது அந்த நேரம் அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு -தூக்கிச்செல்ல எளிதாக இருந்த என் உடைமைகள் சிலவற்றையும் என்னிடமிருந்த சிறிதளவு பணத்தையும் எடுத்துக்கொண்டேன்; முன்னரே எனக்கு அறிமுகமாகி இருந்த வயதான பெண்மணி ஒருத்தியின் வீட்டில் வசிக்கலாம் என்று போய்விட்டேன்.அவளுடைய குடியிருப்பில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன்.எனக்கு ஒதுக்குவதற்கு அந்த ஒரேஒரு சிறிய அறை மட்டும்தான் அவளிடம் இருந்தது.அவள் முன்பு மருத்துவத் தாதியாக  வேலை பார்த்து வந்தவள்;இப்போது அவள் தன் ஓய்வுப்பணத்தில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள்.

கிழவா...யெமிலியான்...! என் நல்ல காலம் ....நான் உனக்கு விடை கொடுத்து விட்டேன்...இனிமேல் நான் இருக்கும் இடத்தை உன்னால் கண்டுபிடிக்கவேமுடியாது
என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

சார்....அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று  நினைக்கிறீர்கள்? மாலையில் நான் திரும்பி வந்தபோது [தெரிந்தவர் ஒருவரைப்பார்க்க வெளியே போயிருந்தேன்] கந்தல் கோட்டோடுதன் கிழிசல் மூட்டையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டபடி என் பெட்டியின் மேல் உட்கார்ந்திருந்தான் யெமிலியான். பொழுது போக்குவதற்காக என் வீட்டுக்கார அம்மாளிடமிருந்து ஒரு புத்தகத்தை [பிரார்த்தனைப்புத்தகம்] வேறு கடன் வாங்கிக்கொண்டிருந்தான்.அதைத் தன் கைகளில் தலைகீழாகப் பிடித்துக்கொண்டிருந்தான்….அப்படி என்றால்….இவ்வளவுக்குப்பிறகும் அவன் என்னைக்கண்டுபிடித்து விட்டான். நான் என் தோல்வியை ஒத்துக்கொண்டேன்… ’இனிமேல் பிரயோசனமே இல்லை…. இனி... இதைத் தவிர்க்கவே முடியாது….முதலிலேயே அவனைக்கழற்றி விட்டிருக்க வேண்டும்என்று நினைத்துக்கொண்டேன்.


அவன் என்னோடு தங்குவதற்குத்தான் வந்திருக்கிறான் என்பது நன்றாகவே தெரிந்திருந்தும் ‘’யெமிலியான்….நீ என்ன உன் பாஸ்போர்ட் எதையும் மறந்து வைத்து விட்டாயா’’ என்று அவனிடம் சும்மா கேட்டேன்.
அவ்வளவுதான் சார்…! பிறகு நான் அமைதியாக உட்கார்ந்து அடுத்தபடி என்ன செய்வது என்பதை யோசிக்கத் தொடங்கி விட்டேன்.

போயும் போயும்வீடு வாசல் எதுவும் இல்லாத ஒரு ஊர்சுற்றி மனிதன் அப்படி எந்தத் துன்பத்தை எனக்குத் தந்துவிட முடியும் என்று எண்ணிப்பார்த்ததில் அவன் ஒன்றும் எனக்கு அப்படி ஒரு பெரிய துன்பத்தைத் தந்துவிட முடியாது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன். ‘கட்டாயமாக அவன் சாப்பிட ஏதாவது கொடுத்தே ஆக வேண்டியிருக்கும்; சரி...காலையில் ஒரு ரொட்டித்துண்டு தந்து விடலாம்,உணவுக்குக்கூடுதலாக ருசி சேர்க்க ஒன்றோ இரண்டோ வெங்காயமும் தரலாம். மதியத்துக்கு இன்னுமொரு ரொட்டித்துண்டு,வெங்காயம்...! இரவுச்சாப்பாட்டுக்கு சிறிது வெங்காயமும்க்வாஸும்[கறுப்பு ரொட்டியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பானம்].,ரொட்டி…! அவன் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம். தப்பித்தவறி எப்போதாவது முட்டைக்கோஸ் சூப்  கிடைத்தால் எங்களுக்கு...-எங்கள் இரண்டு பேருக்குமேதான் - அது ஒரு பெரிய விருந்தாகவே ஆகி விடும்..

 

என்னை அவ்வளவு பெரிய சாப்பாட்டுப்பிரியன் என்று சொல்லமுடியாது. குடிகாரர்கள் அதிகமாகச்சாப்பிட மாட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் வோட்கா....மற்றும் ஒரு துளி பிராந்தி இவைதான். ம்....அவன் தன்னுடைய குடிப்பழக்கத்தினாலேயே என் வாழ்க்கையைப்பாழடித்துவிடப்போகிறான்...’

 

இப்படியெல்லாம் ஏதேதோ நினைத்துக்கொண்டே போனபோது சட்டென்று எனக்குள் ஒரு பொறி தட்டியது; அது...என் மண்டைக்குள்ளிருந்து போக மறுத்துப்பிடிவாதமும் செய்தது.அப்புறம்தான் அது என்னவென்பது திடீரென்று எனக்கு உணர்வாயிற்று. யெமிலியானும் என்னை விட்டுப்போய்விட்டால் பிறகு வாழ்வதற்கான நோக்கம் என்று எதுவுமே எனக்கு எஞ்சியிருக்காது என்ற உண்மைதான் அது! ஆகவே அவனது ஒரே சம்ரட்சகனாகவும்,பாதுகாவலனாகவும்  நான் இருந்தே ஆக வேண்டும் என்று என் மனதை உடனடியாக அதற்கு ஆயத்தம் செய்து கொண்டேன். அவனைக்குடிப்பழக்கத்திலிருந்து மீட்டாக வேண்டும், ஒட்டுமொத்தமாக அவன் சீரழிந்து போய்விடாமல் அவனை நான் காப்பாற்றியே ஆக வேண்டும் என்றெல்லாம் உறுதி எடுத்துக் கொண்டேன்.


எல்லாம் சரிதான்....யெமிலியான்.. கிழவா....வேண்டுமானால் நீ இங்கேயே என் கூடவே இருந்து விட்டுப்போ....ஆனால் நீ ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்....ஆமாம் நான் சொன்னால் சொன்னதுதான்என்று எனக்குள்ளேயேசொல்லிக்கொண்டேன்.
முதல் காரியமாக யெமிலியானுக்கு ஏதாவது ஒரு வேலையைக்கற்றுக்கொடுத்து அதைத்தேடிக்கொள்ளும்படி செய்தாக வேண்டும் என்று நான் முடிவு செய்தேன் சார். உள்ளபடி பார்த்தால் அது ஒன்றும் அப்படி சுலபமாக...உடனடியாக நடந்து விடக்கூடியதில்லைதான்..! ‘சரி...கொஞ்சகாலம் அனுபவித்து விட்டுப் போ.... பிறகு உன்னிடம் தனிப்பட்ட திறமை என்று என்ன இருக்கிறது என்பதை நான் மெள்ள கவனித்துப்பார்த்து எந்த மாதிரி வேலையை உன்னால் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிக்கிறேன் யெமிலியான்என்று எண்ணிக்கொண்டேன்.

எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் அதில் ஈடுபட்டிருப்பவன் அந்தக்காரியத்தில் திறமை உடையவனாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல் தேவை;அதனால் நான் அவனை அமைதியாக கவனிக்கத் தொடங்கினேன். பாவப்பட்ட அந்தக்கிழட்டு மனிதன் யெமிலியான் மிகவும் அவலமான ஒரு நிலையில் இருப்பவன் என்பதைக்கண்டு கொள்ள எனக்கு அதிக நாளாகவில்லை. அவன் எதற்குமே லாயக்கற்றவனாக இருந்தான்.

 

அதனால் முதலில் அவனுக்கு ஒரு ஆலோசனை வழங்கினேன்.
‘’
இதோ பார் யெமிலியான்! ஒரு தடவை உன்னை நீயே கொஞ்சம் பார்த்துக்கொள்...கொஞ்சம் கௌரவமாக இருக்க முயற்சி செய். எவ்வளவு மோசமான கிழிசல் உடையுடன் நீ சுற்றிக்கொண்டிருக்கிறாய் என்பதை நீயே பார்....உன்னுடைய பழைய கோட் எப்படிக்கேவலமாக இருக்கிறது பார்...இப்படியெல்லாம் நான் பேசுவதற்காகக் கடவுள் என்னை மன்னிக்கட்டும்....ஆனால் நான் இதையெல்லாம் சொல்லுவது உன்னைப் பரிகாசம் செய்வதற்காக இல்லை....இப்படிச்சொன்னாலாவது ஏதாவது நல்லது ஏற்படாதா என்ற எண்ணத்தில் மட்டும்தான். பிறர் உன்னை அவமானப்படுத்துவதைப்பார்க்கும்போது சிறிதாவது கூச்சப்படு யெமிலியான். நீ உன் வாழ்க்கையில்புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க....மாற்றம் பெற்ற நல்லதொரு மனிதனாக உருவாக மிகச்சரியான நேரம் இதுதான்’’


ஆனால்....பாருங்கள் சார்...அந்தப் பாவப்பட்ட கிழட்டு யெமிலியான், நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு தலையைத் தொங்கப்போட்டபடி அப்படியே சும்மாவே உட்கார்ந்திருப்பான். பிறருடன் இயல்பாக உரையாடுவதைக் கூடக் குடிப்பழக்கம் அவனிடமிருந்து பறித்துக்கொண்டிருந்தது. உருப்படியாக ஒரு வார்த்தை...ஒரு வார்த்தை கூட அவனால் பேச முடியாது. அவனிடம் நீங்கள் வெள்ளரிக்காய் பற்றிப்பேசினால் அவன் கிட்னி பீன்ஸ் பற்றித் திருப்பிப் பேசுவான். ரொம்பநேரம் நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவன்....பிறகு சும்மா ஒருநெடிய பெருமூச்சு விட்டான்.


‘’எதற்காக இந்தப்பெருமூச்சு யெமிலியான்’’என்றேன்.


‘’...ஒன்றுமில்லை அஸ்தாஃபி........! நான் செய்வதிலெல்லாம் அப்படி பிரத்தியேகமாக கவனிக்கும்படி  எதுவும் இல்லை. அது இருக்கட்டும்....உங்களுக்குத் தெரியுமா....’என்றபடி அவன் தொடர்ந்தான்.


‘’அஸ்தாஃபி உங்களுக்கு விஷயம் தெரியுமா....? இன்று இரண்டு பெண்கள் தெருச்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்...அதை நான் பார்த்தேன். ஒருத்தியின் கூடையில் இருந்த கிரான்பெரிபழங்களை இன்னொருத்தி வேண்டுமென்றே சரித்துத் தள்ளி விட்டாள்.’’


‘’சரி....இப்போது அதற்கென்ன?’’


‘’அஸ்தாஃபி ....அப்புறம் அதற்காகவே அந்த இரண்டாவது பெண், முதல் பெண்ணின் கிரான்பெரி பழங்களைத் தள்ளி விட்டு விட்டு அவற்றைக்காலால் மிதிக்கவும் ஆரம்பித்து விட்டாள்.’’


‘’சரி இருக்கட்டும் யெமிலியான் ....அதற்கென்ன வந்தது?’’


‘’ஒன்றுமில்லை அஸ்தாஃபி......ஏதோ உங்களிடம் சொல்லவேண்டும் போலத் தோன்றியது..சொன்னேன்,அவ்வளவுதான்.’


சே....அவ்வளவுதானா....? ஐயோ யெமிலியான்’...நீ இப்படிஒரு மண்ணாங்கட்டியாக இருப்பதற்கு உன்னிடமுள்ள குடிப்பழக்கம்தான் காரணம்...ஆமாம் அதுவேதான் காரணம்என்று நினைத்துக்கொண்டேன்.


‘’அப்புறம்...இது உனக்குத் தெரியுமா அஸ்தாஃபி? கோரோகோவயா தெருவில்....இல்லை இல்லை...அது கோரோகோவயா தெரு இல்லை...சதோவயா தெரு. அங்கே நடந்து போய்க்கொண்டிருந்த ஒரு பெரிய மனிதர் தன்னிடமிருந்த பணநோட்டு ஒன்றை நடைபாதையில் நழுவவிட்டு விட்டார். அதை ஒரு கிரமப்புறத்தான் பார்த்து விட்டான்..’ஆஹா இன்று எனக்கு ஒரு அதிருஷ்டம்என்றான். அதற்குள் இன்னொரு கிராமத்தானும் அதைப்பார்த்து விட்டான். அவன்இல்லையில்லை இன்று எனக்குத்தான் அதிருஷ்டம்என்றான். ஆனால் நான்தான் அதை முதலில் பார்த்தேன்’’


‘’சரி..அப்புறம் யெமிலியான்?’’


‘’அப்புறம் அந்த இரண்டு கிராமவாசிகளுக்கு நடுவிலும் சண்டை மூண்டுவிட்டது. ஒரு காவல்காரர் வந்துசேர்ந்தார்.கீழே இருந்துஅந்த பணநோட்டை எடுத்து அதைத் தவற விட்ட மனிதரிடமே தந்து விட்டார்,பிறகு அந்த இரண்டு கிராமத்தார்களையும் காவல்நிலையத்துக்குக்கூட்டிக்கொண்டு செல்லப்போவதாக மிரட்டினார்’’


‘’அதில் என்ன இருக்கிறது யெமிலியான்...? இந்த விஷயத்தில் அப்படிக்குறிப்பிடும்படியாக என்ன இருக்கிறதென்று சொல்ல வருகிறாய்?’’


‘’இல்லை இல்லை...அதற்காக நான் சொல்லவில்லை...தெருவில் இருந்த ஜனங்கள்தான் அதைப்பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்’’


‘’ஐயோ யெமிலியான்! தெருவில் இருந்த ஜனங்கள் என்ன செய்தால் நமக்கென்ன? முதலில் நீ உன்னைப்பற்றி நினைத்துப்பார் யெமிலியான். ஒரு சிலசெப்புக்காசுகளுக்காக என்றென்றும் அழியாத உன் ஆத்மாவையே நீ விற்றுத் தொலைத்திருக்கிறாயே அதைப்பற்றி யோசித்துப்பார்..என்ன...நான் சொல்வது புரிகிறதா யெமிலியான்?’’


‘’என்ன அஸ்தாஃபி?’’


‘’நீ ஏன் ஒரு வேலை தேடிக்கொள்ளக்கூடாது? உனக்கு அது கட்டாயம் தேவை. உன்னிடம் இதை நூறாவது முறையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறென் யெமிலியான்! நீ முதலில் உன் மீது இரக்கம் காட்டு’’


‘’ஆனால் என்னை எந்த மாதிரியான வேலை தேடிக்கொள்ளச்சொல்கிறாய் அஸ்தாஃபி? என்னால் எந்த வேலை செய்ய முடியும் என்பது எனக்கே தெரியவில்லை...அதோடு...எனக்கு யாராவது எந்த வேலையாவது கொடுப்பார்கள் என்றும் தோன்றவில்லை’’


‘’குடிகாரப்பயலே....! நிச்சயம்...யாரும் உனக்கு எந்த வேலையும் தர மாட்டார்கள்தான்.உன்னை அரசாங்க வேலையிலிருந்து விரட்டி அடித்தார்களே அதற்கு வேறு என்ன காரணம் என்று நினைக்கிறாய்?’’


‘’அஸ்தாஃபி...உனக்கொரு விஷயம் தெரியுமா? அந்த வ்லாஸ் இருக்கிறானல்லவா....... அதுதான் அந்த சாராயக்கடையில் எடுபிடி வேலை செய்யும் பையன்...அவனை இன்று ஆஃபீஸுக்கு வரச்சொல்லியிருந்தார்கள்.’’


‘’எதற்காக?’’


‘’உண்மையாகவே அது எனக்குத் தெரியாது அஸ்தாஃபி. அவன் எதற்காகவாவது தேவைப்பட்டிருக்கலாம்,அதனால் அவர்கள் அவனைக்கூப்பிட்டிருக்கலாம்’’


சரி சரி....இனிமேல் கொஞ்சம் கூட நம்பிக்கைக்கே இடம் இல்லை. யெமிலியான்.... கிழவா...உனக்கு மட்டுமில்லை,நம் இரண்டு பேருக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். நாம் செய்த ஏதோ பாவங்களுக்காகக் கடவுள் நம்மை தண்டித்துக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.’


சார்.....! அப்படிப்பட்ட ஒரு மனிதனை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது,,,,நீங்களே சொல்லுங்களேன்...

ஆனால்...அவன், அந்த யெமிலியான் பிசாசுத்தனமான தந்திர புத்தி படைத்தவன். நான் பேசுவதையெல்லாம் நெடுநேரம் கேட்டுக்கொண்டே இருப்பான். சிறிது நேரம் கழிந்த பிறகு அது அவனுக்கு சலித்துப்போய் விடும். நான் பொறுமை இழந்து கோபம் கொள்ளப்போகிறேன் என்பது தெரிந்த அந்த நிமிடத்தில் தன் பழைய கோட்டை இடுக்கிக்கொண்டு ஓடியே போய்விடுவான். நாள் முழுவதும் எங்காவது சுற்றித்திரிந்து விட்டு மாலை வேளையில் மூச்சுமுட்டக்குடித்துவிட்டு வந்து சேருவான்.அவன் குடிப்பதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்றோ...அவனே அதைக்கொடுப்பதானால் அதை எப்படி சம்பாதித்தான் என்றோ எனக்குத் தெரியாது; எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கடைசியாக ஒரு முறை அவனிடம் இப்படிச்சொன்னேன்.


‘’இதோ பார் யெமிலியான்!   நீ இந்த மாதிரியே இன்னும் கொஞ்ச காலம் போய்க் கொண்டிருந்தாயானால் மிகவும் மோசமான ஒரு முடிவுதான் உனக்கு ஏற்படும். முதலில் குடிப்பதை நிறுத்து..என்ன..கேட்கிறாயா இல்லையா? அந்தப் பழக்கத்தை விட்டுத் தொலை. அடுத்த முறை நீ குடித்து விட்டு வந்தால் அந்த இரவை நீ மாடிப்படியிலேயே உல்லாசமாகக் கழித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி மட்டும் செய்தால் உன்னை உள்ளே விடுகிறேனா பார்...’’


இந்த முறை நான் அந்த வார்த்தைகளை உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்பதை அவன் புரிந்து கொண்டுவிட்டான் சார். அதனாலேயே அடுத்த இரண்டு நாட்களும் அவன் எங்கேயும் போகவில்லை. ஆனால்..சரியாக மூன்றாவது நாள் மறுபடியும் வெளியில் போய் விட்டான்.நான் அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்தேன்; ஆனால் அவன் திரும்பி வரவில்லை. சார்...! உண்மையைச்சொல்ல வேண்டுமென்றால் எனக்குக்கொஞ்சம்கஷ்டமாகக்கூட இருந்தது.அவனுக்காக நான் வருந்தவும் செய்தேன்....’ஐயையோ நான் என்னகாரியம் செய்துவிட்டேன்....அவன் கொஞ்சமாவது நல்ல வழிக்கு வர வேண்டுமென்பதற்காகத்தானே அவனுக்கு பயம் காட்டினேன்....! பாவம்..அவனும்தான் எங்கே போவான்? கடவுளே..அவனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாதுஎன்றெல்லாம் நினைத்துக்கொண்டேன்.


இரவாயிற்று. அவன் திரும்பி வந்திருக்கவில்லை. காலையில் பார்க்கும்போது மாடிப்படிகள் முடிவடையும் முன்முற்றத்தில் அவன் இருந்தான் சார். இராத்திரி முழுவதும் அங்கேயே இருந்திருக்கிறான்.மேல் படியில் தலையை வைத்துக்கொண்டு அப்படியே தூங்கியிருக்கிறான். குளிரில் உறைந்து போனபடி கிடந்தான் அவன்.

‘’யெமிலியான்....ஏன் இப்படிச்செய்தாய்? இரவு வேளையில் இப்படி ஒரு இடத்திலா இருப்பது?’’


‘’ஏன்....நீங்கள்தான் அன்று இரவு என்னிடம் அவ்வளவு கோபமாக இருந்தீர்களே. மிகவும் எரிச்சலோடு வேறு பேசினீர்கள்...படிக்கட்டில்தான் படுக்க வைப்பேன் என்று சத்தியம் செய்தீர்கள்..அதனால் உள்ளேவர எனக்கு தைரியம் இல்லை அஸ்தாஃபி. இங்கேயே படுத்து இப்படியே உறங்கி விட்டேன்’’


அவன் பேச்சைக்கேட்டு எனக்குப்  பைத்தியம் பிடித்து விடும்போல் இருந்தது. கோப வெறி கிளர்ந்த அதே நேரத்தில் அவன் மீது அனுதாபமும் எழுந்தது.


‘’யெமிலியான்....நீ வேறு ஏதாவது ஒரு வித்தியாசமான வேலையைத் தேடிக்கொண்டிருக்கலாமே...இப்படிப் படிக்கட்டைக் காவல் காத்துக்கொண்டிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?’’


‘’அஸ்தாஃபி....நீ சொல்கிற அந்த வித்தியாசமான வேலை என்ன?’’
அவன் மீது கொண்ட கிறுக்குத்தனமான கோபத்தோடு ‘’ உருப்படாத ராஸ்கல்’’என்று கத்தினேன்.


‘’நீ ஒரு தையல் வேலையாவது தெரிந்து வைத்திருக்கலாம் இல்லையா....? முதலில் உன் கோட்டைப்பார்...அதில் இத்தனை பொத்தல்கள் இருப்பதோடு திருப்திப்பட்டுக்கொள்ளாமல் அதைக்கொண்டு இப்படி இந்தப் படியை வேறு துடைக்க வேண்டுமென்று நினைத்து விட்டாய் போலிருக்கிறது.ஒரு ஊசி நூல் எடுத்து அதை முதலில் தைத்துக்கொள்ளலாம்தானே? ம்....குடிகாரப்பயலே....கொஞ்சநஞ்ச நாகரிகமாவது பாக்கியிருந்தால்தான் அதை எப்பொழுதோ செய்திருப்பாயே’’ என்றேன்.


உங்களால் இதை நம்ப முடிகிறதா பாருங்கள் சார்...!


அவன் நிஜமாகவே ஒரு ஊசி நூலை எடுத்துக்கொபண்டு விட்டான்.நான் சும்மா வேடிக்கைக்காகத்தான் அதைச் சொன்னேன்;ஆனால் அவன் உண்மையாகவே பயந்து போய் விட்டான்.கோட்டைக்கழற்றி எடுத்துக்கொண்டு அதைத் தைக்க முற்பட்டு விட்டான். நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.அவன் கண்கள் சிவந்து பஞ்சடைந்து கிடந்தன.அவனது கைகள் பயங்கரமாக நடுங்கிக்கொண்டிருந்தன.அவன் திரும்பத் திரும்ப முயன்று பார்த்தும் ஊசியின் காதுக்குள் நூல் போக மறுத்தது.அவன் எந்த அளவுக்குக் களைத்துப்போய் விட்டான் என்பதைச்சொல்லவே முடியாது.கண்களை இடுக்கியபடி  கூர்மையாகப்பார்த்துக்கொண்டு.....நூலை ஈரமாக்கி, ....விரல்களால் அதைத் திரித்துக்கொண்டு....ஆனாலும் எந்தப்பயனும் இல்லை.கடைசியில் ஒரு வழியாக அந்த முயற்சியைக் கை விட்டு விட்டு என்னைப்பார்த்தான்.


''நல்லது யெமிலியான்..நீ இப்போது செய்த காரியம் என்னைப்பெருமைப்பட வைத்து விட்டது. வேறு யாராவது இப்படிச்செய்திருந்தால் நான் அவமானத்தில் தரையோடு தரையாக அழுந்தியே போயிருப்பேன்... முட்டாள்...நான் சும்மா விளையாட்டுக்காக அப்படிச்சொன்னேனென்று உனக்குத் தெரியாதா...உன்னைக் கண்டிப்பதற்காகத்தானே அப்படிச்சொன்னேன்..சரி சரி..இப்பொழுது அதை விட்டுத் தள்ளு''என்றேன்.


''இதோ பார்...உன்னால் செய்ய முடியாத எதையும் நீ செய்ய வேண்டாம்; இனிமேல் இப்படிப்படிக்கட்டில் படுத்துத் தூங்காதே.மறுபடியும் அப்படி ஒரு அவமானகரமான காரியத்தைச் செய்து என்னைக் கேவலப்படுத்தி விடாதே''


''ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் அஸ்தாஃபி...நான் எப்போதும் குடிபோதையில் மட்டுமே இருப்பேன் என்பதும் எந்த வேலைக்கும் நான் லாயக்கில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.என்னால் முடிவதெல்லாம் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கும் உன்னைக்கஷ்டப்படுத்திக்கொண்டிருப்பது மட்டும்தான் என்று எனக்குத் தோன்றுகிறது''


சார்....இப்படிச்சொல்லிக்கொண்டிருக்கும்போது நீலம்பாரித்துப்போன அவனது உதடுகள் திடீரென்று நடுங்க ஆரம்பித்து விட்டன.வெளிறிப் போயிருந்த அவனது கன்னத்தில் ஒரு கண்ணீர்த்துளி சிந்தியது.கட்டை குட்டையாக இருந்த தன் தாடையெல்லாம் துடிக்க....மறு நிமிடமே அவன் கண்ணீர் விட்டுக் கதறத் தொடங்கி விட்டான்.

'உன் அகம் இப்படிப்பட்டதாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூடப்பார்த்ததில்லையே யெமிலியான்....உன்னிடம் இவ்வளவு மென்மையான உணர்வுகள் இருக்கக்கூடும் என்று யாரால்தான் ஊகிக்க முடியும்...இல்லை...இதற்கு மேலும் என்னையே நான் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.அதில் அர்த்தமில்லை....இனி உன் விஷயத்தில் நான் தலையிடவே போவதில்லை.நீ எப்படியும் தொலைந்து போ' என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.


சரி சார்...இனி இதற்கு மேலும் கதையை ஏன் வளர்த்துக்கொண்டு போக வேண்டும்...? போதாக்குறைக்கு அதுவே வருத்தத்தை ஏற்படுத்தும்  மோசமான  ஒரு அனுபவம்.அதில் போய் வார்த்தைகளை வீணடித்துக்கொண்டிருப்பானேன்..?


உங்களைப்பொறுத்தவரை அது ஒரு ஃபார்திங் கூடப்பெறாத விஷயமாகக்கூட இருக்கலாம்...ஆனால் எனக்கோ அப்படி ஒரு சம்பவமே இனிமேல் நடக்கவே கூடாதென்றால் - என் சொத்தையே அதற்கு எழுதி வைக்க வேண்டுமென்றாலும் கூட- அப்படி ஒரு சொத்து ஒருவேளை எனக்கு இருந்தால்- நான் எழுதி வைத்திருப்பேன்.


சார்...விஷயம் இதுதான்...கேளுங்கள் ! என்னிடம் குதிரை சவாரியின்போது அணிந்து கொள்ளும் ஒரு ஜோடி கால்சராய் இருந்தது.[அது எக்கேடு கெட்டும் போகட்டும்!] மிக அழகான நீல வண்ணத்தில் கட்டங்கள் போட்டது,ஒரு முறை கிராமத்துப்பெரிய மனிதர் ஒருவர் இங்கே வந்திருந்தபோது அதைத் தயார் செய்யச்சொல்லி என்னிடம்ஆர்டர்கொடுத்திருந்தார்.ஆனால்  அது அவர் அளவை விட மிகவும் சிறியதாக அமைந்து விட்டதால் வேண்டாமென்று சொல்லிவிட அது என்னிடமே தங்கிப்போயிருந்தது.


இது நிச்சயமாக விலையுயர்ந்ததுதான்...பழைய பொருள்களை வாங்கிக்கொள்ளும் கடையில் இதைக்கொண்டுபோய்க்கொடுத்தால் பதினைந்து ரூபிளோ அதற்கும் கூடுதலாகவோ எனக்குக்கிடைக்கும்;ஒருவேளை அத்தனை கிடைக்கவில்லையென்றாலும் கூடக் கிடைக்கும் காசை வைத்து அந்த பீட்டர்ஸ்பர்க் பெரிய மனிதனுக்கு இரண்டு கால்சட்டைகளும் மிஞ்சிய பணத்தில் எனக்கொரு மேல்கோட்டும் வாங்கி விட முடியும்என்று நான் நினைத்துக்கொண்டேன். எங்களைப்போன்ற ஏழைகளைப்பொறுத்தவரை சின்னத்தொகைக்கும் கூட அதிக மதிப்பு இல்லையா சார்?

அந்த சமயத்தில் யெமிலியானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது.கடந்த சில தினங்களாக அவன் ஒரு சொட்டு மது கூட அருந்தியிருக்கவில்லை என்பதையும் நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.மனம் தளர்ந்து போனவனாய்..சோர்வும் விரக்தியுமாக அவன் இருந்தான். உண்மையில் பார்க்கக்கூட சகிக்காதபடி இருந்தான்.அப்படி ஒரு வருத்தமான கோலத்தில் அவனைப்பார்ப்பது எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.


பையா....ஒன்று, உன்னிடம் குடிக்கக் காசே இல்லாமல் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் கடைசிகடைசியாக நீ உன் புத்தியின் போதனைக்குப்பணிந்து உன் வாழ்வின் புது அத்தியாயத்தை நிஜமாகவே தொடங்கியிருக்க வேண்டும்....உன் நன்மையைக் கருத்தில் கொண்டு நீ அந்தக்குடிப்பழக்கத்தை விட்டுத் தொலைத்திருக்க வேண்டும்என்று நானே சொல்லிக்கொண்டேன்.


அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் அந்த விஷயம் நடந்தது சார்..!
அந்த நேரத்தில் ஒரு சர்ச் விடுமுறை வந்ததால் நான் மாலைப்பிரார்த்தனைக்குப்போயிருந்தேன். நான் திரும்பி வந்தபோது கண் மண்தெரியாமல் மூச்சு முட்டக்குடித்து விட்டு வந்திருந்த யெமிலியான், ஜன்னல் திண்ணையில் உட்கார்ந்து ஏதோ ஊஞ்சலில் ஆடுவதைப்போல முன்னும் பின்னும் அசைந்து ஆடிக்கொண்டிருந்தான்.


ஆஹா....அப்படியென்றால்..நீ மறுபடியும் வெளியேபோய் உன்காரியத்தை முடித்து விட்டு வந்து விட்டாயா பையா..’என்றுநினைத்தபடியே என் பெட்டியிலிருந்து எதையோ எடுப்பதற்காகச்சென்றேன்.அதைத் திறந்தபோது என் கண்ணில் பட்ட முதல் விஷயம் அந்தக்கால்சராய் அங்கே இல்லை என்பதுதான். என் நினைவுக்கு எட்டியவரை இங்கும் அங்குமாய்ப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் எனக்கு அது கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் தலைகீழாய்ப்புரட்டிப்பார்த்தும் பலன் இல்லை. பலமாக யாரோ நெஞ்சில் குத்தியதைப்போல இருந்தது. நான் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரப்பெண்ணைத் தேடி வேகமாகச் சென்ற நான் அந்தத் திருட்டுக்காக முதலில் அவளைக்குற்றம் சொல்ல ஆரம்பித்தேன்....ஆமாம்..அப்போது உண்மையிலேயே நான் பைத்தியம் பிடித்த மாதிரிதான் நடந்து கொண்டேன். நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. உண்மையான குற்றவாளி யெமிலியானாக இருக்கக்கூடும் என்பதோ அவன் முழுக்குடிபோதையுடன் கண்ணெதிரே இருப்பதே அதற்கான சாட்சி என்பதோ என் மூளையில் அப்போது உதிக்கவே இல்லை.

‘’இல்லைசார்...உங்கள் கால்சராயை நான் எடுக்கவில்லை.அதை வைத்துக்கொண்டு நான் என்னசெய்யப்போகிறேன்?என்னால் அதைப்போட்டுக்கொள்ள முடியுமா என்ன’’என்றாள் வீட்டின் சொந்தக்காரி.


‘’என் பாவாடை கூடத்தான் அன்றைக்கு ஒரு நாள் காணாமல் போய் விட்டது.உங்கள் பிரியத்துக்குரிய சிநேகிதன் அதை எடுத்திருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்’’என்றவள் ‘’ஆனால்...உங்கள் கால்சராயைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’என்றாள்.


‘’நான் வெளியில் போயிருந்தபோது இங்கே யார் இருந்தார்கள்?வெளி ஆள் யாராவது வந்திருந்தார்களா’’என்று அவளைக்கேட்டேன்.


‘’இல்லையே யாரும்  வரவில்லையே...முழு நேரமும் நான் இங்கேதான் இருந்தேன்.அதனால் அதைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்’...யெமிலியான் மட்டும் சற்றுநேரம் வெளியே போய்விட்டுத் திரும்பி வந்தான்..அதோ அங்கேதான் அவனே இருக்கிறானே...அவனையே கேட்கவேண்டியதுதானே’’என்றாள் அவள்.


உடன் யெமிலியானிடம் அதைப்பற்றி விசாரித்தேன்.
‘’
யெமிலியான் ! நீ என் கால்சராயைத் தப்பித் தவறி எடுத்து விட்டாயா சொல். ! அதுதான்..! அந்த கிராமத்துப்பெரிய மனிதருக்காகப் பிரத்தியேகமாகத் தைத்து வைத்தேனே .அதுதான்  ..சவாரிசெய்யும்போது அணிந்து கொள்கிற கால்சராய்...உனக்கு அது ஞாபகம் இருக்கிறதுதானே?’’


‘’இல்லை அஸ்தாஃபி...நிச்சயமாக நான் அதை எடுக்கவே இல்லை’’என்றான் அவன்.


இவனிடம்போய்க்கேட்டுக்கொண்டிருப்பது வீண் என்று தோன்றவே நான் மறுபடியும் அதைத் தேடத் தொடங்கினேன்.எல்லா இடங்களிலும் துருவினேன்;ஒரு பயனும் இல்லை. முழுநேரமும் யெமிலியான் முன்னும் பின்னும் அசைந்து ஆடியபடி வெறுமே உட்கார்ந்து கொண்டே இருந்தான்.  அவன் கண்ணுக்கு நேராகவே என் பெட்டியைக்குதிகாலால் எட்டி உதைத்தேன்.அப்போது சட்டென்று ஓரக்கண்ணால் அவனைப்பார்த்தேன்.


ம்...அப்படித்தான் இருக்க வேண்டும்என்று எண்ணிக்கொண்டேன்.

யெமிலியான் மீது வெறித்தனமான கோபம் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.என் முகமெல்லாம் சிவந்து போயிருந்தது.அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக யெமிலியானும் என்னைப்பார்த்தான்.


‘’இல்லை அஸ்தாஃபி....நான் உன் கால்சராயை எடுக்கவிலை. ஒரு வேளை .நான் எடுத்ததாக  நீ நினைத்துக்கொண்டிருக்கிறாயோ என்னவோ...? ஆனால் நான் அதைத் தொடக்கூட இல்லை’’


‘’அப்படியென்றால் அது எங்கேதான் போயிருக்கக்கூடும் யெமிலியான்’’


‘’எனக்கு எதுவும் தோன்றவில்லை அஸ்தாஃபி...நான் அதைப்பார்க்கக்கூட இல்லை’’என்றான் அவன்.


‘’அப்படியென்றால் .....அதுவாகக் கால் முளைத்துப்போயிருக்குமோ யெமிலியான்’’


‘’இருக்கலாம் அஸ்தாஃபி அப்படிக்கூட இருக்குமோ என்னவோ’’ என்று யெமிலியான் தனக்குத்தானே முனகிக்கொண்டது எனக்குக்கேட்டது. அதைக்காதில் வாங்கியபடியே ஒரு வார்த்தைகூடப்பேசாமல் ஜன்னலருகே எழுந்து சென்று ஒரு விளக்கைப் பற்றவைத்தபடி வேலை செய்ய உட்கார்ந்தேன்.

 

கீழ்த்தளத்தில் குடியிருக்கும் அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவரின் மேல்கோட்டை சரிசெய்யும் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தபோது நான் கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய துணிகள் எல்லாவற்றையும் ஒன்றாக அடுப்பில் தூக்கிப்போட்டுக்கொளுத்தியிருந்தால் கூட சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது. நான் எந்த அளவுக்கு எரிச்சலடைந்திருந்தேன் என்பதை யெமிலியானும் ஊகித்திருக்க வேண்டும்.


புயலின் வருகையை முன் கூட்டியே கண்டறியும் பறவையைப்போல ஒரு போக்கிரித்தனம் வாய்ந்த மனிதனும் கூடத் தனக்கு வரப்போகும் ஆபத்தை மோப்பம் பிடித்து விடுவதுண்டு.

’’அஸ்தாஃபி .....உனக்கு இந்த விஷயம் தெரியுமா?’’என்றபடி பேசத் தொடங்கினான் யெமிலியான். அவன் பேசியபோது அவனது பலவீனமான குரல் நடுங்கிக்கொண்டும் இருந்தது.


‘’அந்த ஆண் நர்ஸ் இருக்கிறானே...அவன்தான் அந்த அந்திப் ப்ராகோவிச்....அவன் என்ன செய்தான் தெரியுமா....? அன்றைக்கு செத்துப்போன அந்தக்கோச்சு வண்டிக்காரனுடைய மனைவியை இன்று காலையில் கல்யாணம் செய்து கொண்டுவிட்டான்..’’


அப்போது நான் அவனைப்  பார்த்த பார்வை  மிக மிக அருவருப்போடு  கூடியதாக இருந்திருக்க வேண்டும்; காரணம்....நான் என்ன நினைத்தேன் என்பதை  யெமிலியான் மிகச்சரியாகப்புரிந்து கொண்டிருந்தான். அதனாலேயே தான் இருந்த இடத்தை விட்டு உடனடியாக எழுந்தபடி படுக்கையருகே சென்று அங்கே தரையில் எதையோ தேட ஆரம்பித்தான்.நான் காத்திருந்தேன். ரொம்பநேரம் எதையோ குடைந்து கொண்டே இருந்தவன்இங்கே இல்லை...இங்கேயும் இல்லை....அப்புறம் அது எங்கேதான் போயிருக்கும்?’என்று தனக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டும் இருந்தான்.


தொடர்ந்து நடக்கப்போவதைப் பார்க்க நான் காத்திருந்தேன். பிறகு பார்த்தால்.....சார்., கேளுங்கள்....உங்களால் இதை நம்ப முடிகிறதோ இல்லையோ ? அப்படியே படுக்கைக்கடியில் குப்புறப்படுத்து ஊர்ந்து போகத் தொடங்கி விட்டான்...அவன் அப்படிச்செய்வதைப்பார்த்தபின் அதற்கு மேலும் என்னைக்கட்டுப்படுத்திக்கொள்ள என்னால் முடியவில்லை.

’’கட்டிலுக்குக் கீழே ஏன் ஊர்ந்து கொண்டிருக்கிறாய் யெமிலியான்?’’என்றேன்.


‘’ஏன் அஸ்தாஃபி? நான் உன் கால்சராயைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.ஒருவேளைஅது கீழே எங்கேயாவது விழுந்து கிடக்கலாம்தானே?’’


‘’ஒரு பாவப்பட்ட முட்டாளுக்காக நீங்கள் ஏன் சார் [எனக்குள்மூண்டெழுந்த வெறுப்பினால் அவனைஅப்படிசார்போட்டுக்கூப்பிட்டேன் நான்] இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? ஒன்றுமில்லாத ஒரு விஷயத்துக்குப்போய் அநாவசியமாகஉங்கள் முழங்கால்களைத் தேய்த்துக்கொண்டு நீங்கள்  ஏன் சிரமப்பட வேண்டும்?’’


‘’ஏன் அஸ்தாஃபி அப்படியெல்லாம் சொல்கிறாய்...எனக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் தொடர்ந்து பலநாள் இப்படித் தேடிக்கொண்டே இருந்தால் ஒருவேளை அது கிடைக்கலாமில்லையா..?’’


‘’ஏன் கிடைக்காது...நிச்சயமாய்க்கிடைக்கும்’’என்ற நான்...’’இதோ பார் யெமிலியான்..’’என்றுஅவனைக்கூப்பிட்டேன்.


‘’சொல் அஸ்தாஃபி’’


‘’நான் உனக்குச் செய்த உதவிக்கெல்லாம் கைம்மாறாக - ஒருஅற்பமான திருடனைப்போல - நீ அதைத் திருடவில்லை என்று உன்னால் உறுதியாகச்சொல்ல முடியுமா?’’


என் கண் முன்பாக அவன் தன் முழங்காலால் ஊர்ந்து போவதைப்பார்த்து நான் பைத்தியம் பிடித்தாற்போல இருந்தேன்.
என் முதுகை முறிக்கும் இறுதித் துரும்பு....!

‘’இல்லை அஸ்தாஃபி....நான் அதை எடுக்கவில்லை’’


ஆனாலும் அவன்கட்டிலடியிலிருந்து வெளியிலேயே வரவில்லை.

வரவே இல்லை சார்! நெடுநேரம் அங்கேயே குப்புற அடித்துக்கிடந்தவன் மெல்லத் தவழ்ந்து ஊர்ந்து வெளியே வந்தபோது அவன் முகம் ஒரு வெள்ளைத் தாளைப்போல வெளிறிக்கிடந்தது.கீழே இருந்துஎழுந்து கொண்டு ஜன்னல் திட்டில் என்னருகே அமர்ந்து கொண்டான்.கிட்டத்தட்ட பத்து நிமிடத்துக்குஅப்படியே உட்கார்ந்திருந்தான்.

திடீரென்று ‘’இல்லை அஸ்தாஃபி’’என்றவன்...தன் இடத்திலிருந்து எழுந்து என்னை நோக்கினான்.

பிரேதக்களையோடு என்னையே பார்த்தபடி[அந்தப்பார்வை இன்னும் கூட எனக்குள்பதிந்திருக்கிறது]’இல்லை அஸ்தாஃபி நான் உன் கால்சராயை எடுக்கவில்லை’’என்றான்.


அவனது உடல் முழுவதும் வெடவெடத்துக்கொண்டிருந்தது. அவன் தன் நெஞ்சை நோக்கிச் சுட்டிக்காட்டிய அவனது விரல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் குரலிலும் பயங்கரமான நடுக்கம் இருந்தது. தர்மசங்கடமான அந்தத் திருப்பத்தால் நான் பசை வைத்து ஒட்டியதைப்போல அந்த ஜன்னலிலேயே உட்கார்ந்திருந்தேன்.
‘’
போகட்டும் யெமிலியான்..நான்தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டு விட்டேன்;உன் மீது அநியாயமாகப்பழி சுமத்தி விட்டேன்.என்னைமன்னித்துக்கொள். அந்தக் கால்சராய் போனால் போகிறது...அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா என்ன? கடவுள் புண்ணியத்தில் நம்மிடம் உழைக்கக் கைகள் இல்லாமல் இல்லை. எவனோ ஒரு பாவப்பட்ட மனிதனிடம் போய்க்கொள்ளையடித்தோ பிச்சையெடுத்தோ பிழைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை.நம் உணவுக்குத் தேவைப்படுவதை நாமே சம்பாதித்துக்கொள்ளலாம்’’

யெமிலியான் நான் சொன்னதையெல்லாம் அமைதியாகக்கேட்டுக்கொண்டிருந்தான்.சிறிது நேரம் சென்ற பின் மீண்டும் ஜன்னல் திட்டில் போய் உட்கார்ந்து கொண்டான்.மாலைமுழுவதும் அந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.நான் படுக்கச்சென்ற பிறகும்கூட அவன் அங்கேயே இருந்தான்.மறுநாள்காலை நான் கண் விழித்தபோது பழைய கோட்டுக்குள் தன்னைப்பொதிந்து கொண்டு வெறும் தரையில் அவன்சுருண்டு படுத்திருந்ததைப்பார்த்தேன்.மேலே ஏறிப்படுக்கையில் படுப்பதற்குக்கூட அவனுக்குக் கூச்சமாக இருந்திருக்க வேண்டும்.


அன்றுமுதல் எனக்கு அவன் மீது கடுமையான வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது சார்....! உண்மையில் சொல்வதானால் தொடக்கத்தில் ஒரு சிலநாட்கள் அவன் முகத்தைப்பார்க்கக்கூட எனக்கு வெறுப்பாக இருந்தது.என் சொந்தப்பையனே என்னிடம் திருடி விட்டதைப்போலவோ....எனக்கு மரணக்காயம் ஏற்படுத்தி  விட்டதைப்போலவோ எனக்குத் தோன்றியது.


அப்புறம்சார்...அடுத்த இரண்டு வாரங்களும் யெமிலியான் மதுக்கடைக்குப்போய் முழுநேரமும் குடித்துக்கொண்டே இருந்தான். தறி கெட்டபோக்கில் போய்க்கொண்டே இருந்தான்.

காலையில் வீட்டை விட்டுப்போனால் இரவு மிகவும் தாமதமாகத்தான் திரும்பி வருவான்.அந்த இரண்டு வாரங்களில் அவன் என்னோடு ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை.அந்த சமயத்தில் அவன் தன்னை மிகவும் இழிவாக உணர்ந்திருக்க வேண்டும்; அல்லது வேண்டுமென்றே தன்னை இழிவுபடுத்திக்கொள்ள முயன்றிருக்க வேண்டும்...இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் அது!


எப்படியோ ஒரு வழியாக எல்லாம் முடிந்து போயிற்று. பிறகு அவன் குடிக்கவே இல்லை.அவனிடமிருந்த பணம் முழுவதும் தீர்ந்து போயிருக்க வேண்டும் என்பது என் கணக்கு. மீண்டும்...எந்த நேரம் பார்த்தாலும் ஜன்னலிலேயே உட்கார்ந்திருக்க ஆரம்பித்தான். முழுசாக மூன்றுநாட்கள்...ஒரு வார்த்தை கூடப்பேசாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தான் என்று நினைக்கிறேன்.பிறகு சட்டென்று அழ ஆரம்பித்ததைப்பார்த்தேன்.


சார்....ஒரு நிமிடம் எதுவுமே நடக்காததைப்போல உட்கார்ந்திருப்பவன் அடுத்த நிமிடத்திலேயே அழத் தொடங்கி விடுவான் சார்! ஐயோ...கடவுளே....! அந்த மனிதன்தான் எப்படி அழுவான் தெரியுமா..?கிணற்றிலிருந்து  வெளியே கொட்டும் தண்ணீரைப்போல அவனுடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்துக்கொண்டிருக்கும்; ஆனால் அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாதவனைப்போல அவன் உட்கார்ந்திருப்பான். ஒருமனிதன்..,அதிலும் யெமிலியானைப்போன்ற வயதான ஒரு மனிதன் துயரத்தோடும் அவலம் கொண்டும் அழுவதைப் பார்ப்பது ஒருகொடுமையான விஷயம் சார்!


‘’உனக்கு என்ன ஆயிற்று யெமிலியான்’’என்று அவனிடம் கேட்டேன்.


அவனது உடல் முழுவதும் நடுங்கத் தொடங்கியது.நீண்ட இடைவெளிக்குப்பிறகு அன்று மாலை அவனிடம் நான் முதன்முதலாகப்பேசத் தொடங்கியதில் அவன் மிகவும் அதிர்ந்து போயிருந்தான்.


‘’ஒன்றும் இல்லை அஸ்தாஃபி’’


’’இதோ பார் யெமிலியான்! இப்பொழுது அப்படி என்னதான் ஆகி விட்டது...அந்த விஷயம் எப்படியோ போய்த் தொலையட்டும் என்று அதை ஒரேயடியாக விட்டுத் தள்ளி விட்டேன். ஆமாம்..நீ ஏன் இப்படி நனைந்த கோழி போல உட்கார்ந்திருக்கிறாய்?’’


‘’..அதெல்லாம் ஒன்றும் இல்லை அஸ்தாஃபி. நான் இப்படி இருப்பது அதனால் எல்லாம் இல்லை.நான் சும்மா யோசித்துக்கொண்டிருந்தேன். ஏதாவது வேலை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்....வேலை தேடிக்கொள்வதைப்பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்’’


‘’எந்த மாதிரியான வேலை யெமிலியான்?’’


‘’எந்த வேலையென்றாலும் சரிதான். நான் முன்னால் பார்த்த அதே மாதிரி வேலையைத் தேடிக்கொள்ளலாமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.ஃபெடோசி இவானோவிச்சிடம் அதைப்பற்றி விசாரிப்பதற்குப்போயிருந்தேன். அஸ்தாஃபி...உனக்குச் சுமையாக இருக்க நான் விரும்பவில்லை. ஒருவேளை எனக்கு வேலை கிடைத்து விட்டால் எனக்காக நீ பட்ட சிரமங்களுக்குத் தகுந்த வெகுமதி தரவேண்டுமென்றுஆசைப்படுகிறேன்’’


’’இப்படியெல்லாம் பேசாதே யெமிலியான்! ஒன்றைச் செய்து விட்டு அதற்கு பதிலாக இன்னொன்றை எதிர்பார்ப்பதா....சே..என்ன இது?பேசாமல் எல்லாவற்றையும் விட்டுத்தள்ளு.நாம் முன்பு எப்போதும் இருந்ததைப்போலவே இனிமேலும் இருந்துவிட்டுப்போவோம்’’


‘’இல்லை அஸ்தாஃபி...உன் கால்சராயை நிச்சயமாக நான் எடுக்கவில்லை என்று சொன்னபிறகும் கூட இன்னும் நீஅதையே நினைத்து மறுகிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாமல் இல்லை’’


‘’சரி....உன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள். எனக்கு  ஒன்றுமில்லை.’’


‘’இல்லை அஸ்தாஃபி....தொடர்ந்து இப்படியே உன்னுடன் வசிப்பது என்னால்முடியாது...என்னை மன்னித்து விடு அஸ்தாஃபி. நான் இங்கிருந்து சென்றுதான் ஆக வேண்டும்’’


‘’
கடவுளே! இப்போது உன்னை யார் குற்றம் சொல்கிறார்கள் யெமிலியான்? உன்னை  யார் இங்கே வீட்டை விட்டுத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள்..? நான்  அப்படிச் செய்வதாக நீ சொல்ல மாட்டாய்தானே?’’


‘’ஆனாலும் அஸ்தாஃபி...இனிமேலும் உன்னுடன் இருப்பது எனக்கு இயலாது. நான் இங்கிருந்து போய்விடுவதே நல்லது’’


அவன் மிகவும் பிடிவாதத்தோடு திரும்பத் திரும்ப அதிலேயே முனைப்பாக இருந்தான் சார்.அப்படிச்சொன்னதோடு மட்டுமில்லாமல் அதை உறுதிப்படுத்துவதைப்போல எழுந்து நின்று தன் பழைய கோட்டைத் தன் தோள்களில் சரிவரப்பொருந்துமாறு சீர் செய்து கொண்டான்.


‘’ஆனால்....நீ எங்கேசெல்லப்போகிறாய் யெமிலியான்? நீ என்னசெய்கிறாய் என்பதை உன்  அறிவைச் செலுத்தி நீயே கொஞ்சம் யோசித்துப்பார் பையா...! உன்னால் எங்கே போக முடியும்?’’

‘’சென்றுவருகிறேன் அஸ்தாஃபி. என்னைத் தடுக்க முயற்சிக்காதே[மறுபடியும்அவன் தனக்குள் ஏதோ முனகத் தொடங்கி விட்டிருந்தான் அவன்].உன் பாதையிலிருந்து விலகிச்செல்ல வேண்டிய நேரம் எனக்கு வந்து விட்டதென்று நினைக்கிறேன்....நீ இப்போதெல்லாம் முன்னைப்போல இல்லை.’’


‘’நான் முன்னைப்போல இல்லை என்று நீ எதை வைத்துச்சொல்கிறாய் ..?

 

நான் எப்போதும் போல- பழையமாதிரியேதான் இருக்கிறேன்.என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள் யெமிலியான்.!இங்கிருந்து போய்விட்டால் நீ ஆதரவில்லாத குழந்தையைப்போல வாடிப்போய்விடுவாய்’’


‘’இல்லை அஸ்தாஃபி நீ பழைய மாதிரி இல்லை’’என்றான் அவன்.’’ இப்போதெல்லாம் நீ வெளியே செல்லும்போது உன் பெட்டியைப்பூட்டி விட்டுப்போகிறாய்.நீ அப்படிச்செய்வதைப்பார்க்கும்போதெல்லாம்  என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.வேண்டாம்...தயவு செய்து என்னைத் தடுக்காதே அஸ்தாபி..நான் இங்கே உன்னோடு தங்கியிருந்தபோது உனக்கு வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து விடு’’


அப்படிச்சொல்லிவிட்டு அவன் புறப்பட்டுப்போய்விட்டான் சார்! அன்றே கிளம்பி விட்டான்.
நான் முழுநாளும் அவனுக்காகக்காத்திருந்தேன்.மாலையானதும் அவன் வரக்கூடும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.ஆனால்...இல்லை...அவன் வரவே இல்லை....மறுநாளோ...அதற்கு மறுநாளோ கூட அவன் வருவதற்கான அறிகுறி ஏதும் இல்லை.
நான் உண்மையாகவே கவலையில் ஆழ்ந்தேன்.....சாப்பிட , குடிக்க...தூங்க என்று எதுவுமே செய்ய முடியாதபடி கவலை என்னை ஆட்கொண்டிருந்தது.

அந்தப்பாவி என்னை முற்றிலும் நிராயுதபாணியாக்கிவிட்டுப்போயிருந்தான்.நான்காவது நாள் நான் அவனைத் தேடிப்பார்ப்பதற்காக வெளியே சென்றேன்.எல்லா சாராயக்கடைகளிலும் அவனைப்பற்றி விசாரித்தேன்;ஆனால் அவனை எங்குமே காணவில்லை.எங்கேயோ மறைந்து போய்விட்டிருந்தான் அவன்.

யெமிலியான்.... கிழவா....நீ ஏதும் செத்துக்கித்துப்போய்விடவில்லையே..’என்று என் மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....