துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.8.18

இரட்டையர் ஓர் எதிர்வினை-ஜான்மேரி ரோஸ்



இரட்டையர் ஓர் எதிர்வினை
Johnmary Rose -முகநூலிலிருந்து 
[இரட்டையர் - தஸ்தயெவ்ஸ்கி
தமிழில் - எம்.ஏ.சுசீலா]

மிக நேர்மையாகவும் , பணிவாகவும், அடுத்தவர் மனம் காயப்படாமல் பேச்சிலும் நடத்தையிலும் கூட கண்ணியமாக நடந்து கொள்ளும் அதுவும் தன் வாழ்வை தனிமையில் கழிக்கும் ஒரு மனிதனின் வாழ்வில் அதற்கு நேர் எதிராக போக்கிரித்தனமும் வெறுப்பேற்றி சீண்டிப் பார்க்கும் குணமும் அதுவும் ஒரே உருவத்தில் ஒரே பெயரில் இரண்டு மனிதர்களுக்கிடையே நடக்கும் போராட்டம் தான் இந்நாவல்.

வாசிக்கும் பல இடங்களில் ஜூனியர் கோலியாட்கின் உண்மைதானா இல்லை கற்பனையா என்று என்னை சந்தேகப்பட வைத்து உறுதி செய்ய மீண்டும் வாசிக்க செய்தது ஏன் என்றால் சீனியர் கோலியாட்கின் அப்படிப்பட்ட மனநிலை உடையவர் அவராகவே மனதில் பலவற்றையும் போட்டு வருத்திக் கொண்டு எப்போதும் ஒழிந்து தனிமைப்பட்டு வாழ நினைக்கும் ஒரு மனிதர்
இது இரட்டையர் உருவத்தில் இருக்கும் வெறும் சீனியருக்கும் ஜூனியருக்கும் நடக்கும் போராட்டம் மட்டும் அல்ல, பலபேர் வாழ்க்கையில் - ஏன் நானே கூட ஜூனியர் கோலியாட்கின் போல நபரைக் கடந்ததுண்டு மற்றவரிடத்தில் மிகுந்த நல்லவர்களைப் போலவும் அந்தத் தனிப்பட்ட மனிதரிடம் மட்டும் தன் வேலையைக் காட்டும் அந்தப் போக்கிரி கோலியாட்கின் போன்றுமனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
எனக்கு இன்னும் கூட குழப்பமாகவே இருக்கின்றது. கதையின் ஆரம்பத்தில் கோலியாட்கின் அந்த பாலத்தின் கீழ் உள்ள ரெஸ்டாரெண்டில் தனியாக உட்கார்ந்து இருக்கும் போது யோசிப்பது போல் தெரிகிறது அதன் பின் அந்த பார்ட்டிக்கு செல்வது போலவும் அங்கே அவமானம் அடைந்தது போலவும் வருகின்றது அதன் பின் சில பக்கங்கள் வரை நான் அவர் அங்கு திரும்ப செல்லாமலேயே தான் சென்றால் அங்கு எப்படி இருக்கும் மற்றவர்கள் தன்னை எப்படி நடத்துவார்கள் என்று அவர் அங்கு இருப்பதை போல் நினைத்துக் கொண்டாரோ என்று தான் நினைத்தேன் அதன் பின் நடந்து செல்வது மாதிரி சொல்லும் இடத்தில் தனக்கு எதிராக ஒரு உருவம் தன்னை போன்றே அதுவும் அவர் அணிந்த அதே உடையில் ஒரு மனிதன் தன்னை கடந்து செல்வதாகவும் கூறும் இடத்தில் கூட கற்பனை என்றே நினைத்தேன்.
உளவியல் ரீதியாக ஒரு மனிதன் படும் துன்பங்கள் , அவனது உணர்வுகளோடு மற்றவர் சீண்டி விளையாடும் கொடுமை தாங்க முடியவில்லை. அவன் உண்மையிலையே இரட்டையர்தானா மன பிரமையா? முழுவதும் வாசித்து முடித்தும் அந்த ஜூனியர் கோலியாட்கின் உண்மைதானா நிஜமா என்று குழப்பமாகவே உள்ளது.
உளவியல் ரீதியாக மனதை சோதித்து பார்க்கிறது இந்நாவல்
எம்.ஏ.சுசீலா மொழி பெயர்ப்பு மிக அருமை
எனது வாழ்த்துகள் அம்மா
அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்
உங்களின் இந்த மகத்தான பணிக்கு வாழ்த்துகள்
Johnmary Rose
salem

15.8.18

’தலாக்’- மகாஸ்வேதா தேவி - மொழிபெயர்ப்பு

தலாக்-

மகாஸ்வேதா தேவி,

மொழிபெயர்ப்புச்சிறுகதை

நன்றி-நம் நற்றிணை ஜூலை2018


“சொத்து பத்து எதுவும் இல்லை! ஒரு கோழிப் பண்ணைகூட இல்லை, இப்படி ஒரு மாப்பிள்ளையை நீங்களாப்பா தேர்ந்தெடுத்தீங்க?” என்று திருமணத்துக்குப் பிறகு தன் கந்தையிடம் கேட்டாள் குல்சம்.
“ஒருவேளை யாரையாவது சுவீகாரம் எடுத்துக்கலாம்னு நினைச்சிருந்திங்களோ?”
...போகப் போக, தன் கணவன் அர்ஷத் நிதானப் போக்குடைய ஒரு மனிதன் என்பதை அவள் தெரிந்துகொண்டாள். அமைதியாக வாழ்வது எப்படி என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான்.
“உன்னோட அப்பா கொடுத்திருக்கிற பணத்தை வச்சு ஒரு கோழிப்பண்ணை உருவாக்கினா என்ன? முட்டைகளையெல்லாம் வித்துப் பொழச்சுக்கலாம். நம்ம குடும்பத்துக்கு அதுவே போதும்.”
குல்சமின் அப்பா, அவளுக்குக் கொடுத்திருந்த பணத்தை வைத்து அவர்கள் கோழிக் குஞ்சுகளையும், வாத்துகளையும் வாங்கினார்கள். முட்டை விற்ற முழுப் பணமும் குல்சம் கைக்கு வந்துவிடும். அர்ஷத் ஒரு குதிரையைப் போல மிகக் கடுமையாக உழைப்பான். கோழிக் குஞ்சுகளையும், முட்டைகளையும் விற்பதற்கு ‘டையமண்ட் ஹார்பர்’ வரை போவான். சம்பாதித்த பணத்தையெல்லாம் அப்படியே மனைவியின் கையில் கொடுத்துவிடுவான். அதனால் குல்சமும் மகிழ்ச்சியுடன்தான் இருந்தாள்.
தன் அக்காவைப் போல ஒரு வெற்றிலைக் கொடிக்காலோ, தங்கை போல மூன்று ஏக்கர் நிலமோ அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மன நிம்மதியும், நிறைவும் கொண்டவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
சாணி பொறுக்குவதற்கோ, விறகு சேகரிப்பதற்கோ குல்சமை அர்ஷத் ஒருநாளும் அனுப்பியதில்லை. கடைகளுக்குப் போய்ப் பலசரக்கு வாங்கும் வேலை கூட அவளுக்கு இல்லை. அவள் மீது எல்லோருக்குமே பொறாமை இருந்தது. அவள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்லும் அவள் தந்தை ‘கோனு’,
“இங்கே ரொம்ப நிம்மதியாக இருக்கு, ‘ஃபூலி’, ‘டூலி’ இவங்க கிட்டே பணம் இருந்தாலும் மனசு அமைதியா இல்லை” என்பார்.
பல வருடங்களுக்கு மேல் அங்கே அமைதி மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது. குல்சமின் மகன் பள்ளிப் படிப்பை முடித்து ஒரு கப்பல் கம்பெனியில் வேலை தேடிக் கொண்டான். அவனுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. இப்போது கிதிர்பூரில் வசித்து வந்தான் அவன்.
கோனு, தன் மூன்று மகள்களையும் வெவ்வேறு குணம் கொண்ட மூன்று மாப்பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைத்திருக்கிறார் என்று எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால் அவர்கள் மூவரிலும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையைப் பெற்றிருந்தவள் ‘கூலி’ தான் (குல்சம்). அவள் மகனும் கூட நன்றாக உருவாகிவிட்டான். அவன் ஏன் அப்படி உருவாகாமல் இருக்கப் போகிறான்? அவனுடைய தந்தைதான் தினமும் அவனைப் பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு, மாலையில் திரும்ப அவனை அழைத்துக் கொண்டு வந்துவிடுவாரே? தான் படிக்காதவராக இருந்தாலும் ஒவ்வொரு நாள் மாலையும் அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்துப் படிக்கப் பாய் விரித்து வைத்து மகன் படிக்க உட்கார்ந்து விட்டானா என்று உறுதி செய்துகொள்வார் அவர். கூலி,  உண்மையிலேயே கொடுத்து வைத்தவள்தான்!
கூலி மிகவும் அதிருஷ்டசாலி என்று ஊர்மக்கள் பேசிக் கொண்டார்கள். மகன் அனுப்பும் பணத்தையெல்லாம் பித்தளைப் பாத்திரத்தில் போட்டு பூமிக்கடியில் புதைத்து வைத்து சேமித்து வந்தாள் அவள். வீட்டுச் செலவுக்கு முட்டை விற்ற காசை வைத்துக் கொள்வாள். அடுத்த மழைக்காலம் தொடங்குவதற்கு முன், புதிதாக ஒரு வீடு கட்டி அங்கே குடிபோய்விட வேண்டுமென்பதே அவளது திட்டம். ஆனால், திடீரென்று அவள் கனவுகளெல்லாம் கலைந்து போயின.
அக்கம் பக்கத்தில் வசிக்கும் எல்லோருக்கும் முன்னால் வைத்து, அர்ஷத் அவளைப் பார்த்து எப்போது ‘முத்தலாக்’ சொன்னானோ... அந்த நாளில் அவை எல்லாமே கலைந்து போய்விட்டன.
“உன்னாலே சும்மாவே இருக்க முடியாதா? எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருந்தாகணுமா? யோசிக்காம பேசிடற ஒரே ஒரு வார்த்தை, அண்ணன் தம்பியைக் கூட ஒருத்தரை ஒருத்தர் கொலை பண்ண வச்சிடுது. ஒரே ஒரு தீக்குச்சியை வச்சுக்கிட்டு பெரிய நெருப்பைக்கூட உண்டாக்கிட முடியும்னு உனக்குத் தெரியாதா என்ன...?” என்று இதே அர்ஷத் அவளிடம் திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லியிருக்கிறான்.
அவர்களது பேரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது கூலிக்கு எதிராக ஒரு புயலைக் கிளப்பியவனும் இந்த அர்ஷத் மட்டும்தான். உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தையை உள்ளூர் ஹோமியோ மருத்துவரிடம் அழைத்துச் செல்வதா அல்லது நகரத்திலிருக்கும் டாக்டரைத் தேடிப் போவதா என்பதே பிரச்சினை. அவர்கள் இப்போதைக்கு இங்கே இருப்பதால் இங்கிருக்கும் நிதாய் டாக்டர் முதலில் பார்க்கட்டும், கொல்கத்தாவுக்குத் திரும்பிப் போனபிறகு வேறு எவராவது ஒரு மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போகலாம் என்பது கூலி சொன்ன யோசனை.
கூலியின் மருமகள், அர்ஷத்துக்கு சொந்தக்காரப் பெண்.
“உங்களால் முடியும் என்கிறபோது, உங்களுக்கு வசதி இருக்கும்போது அப்படி ஏன் செய்யவேண்டும்? நிதாய் டாக்டரிடம் ஏன் அவனைக் கொண்டு போக வேண்டும்” என்று அவள் தந்தை கேட்டார்.
“அந்தப் பொம்பளை என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டும். அவன் என்னோட சதை... என்னோட இரத்தம். அவனை டையமண்ட் ஹார்பருக்குத்தான் கூட்டிக்கிட்டு போவேன்” என்றான் அர்ஷத்.
கூலி, மறுபடியும் பேச ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு திடீர்னு பணம் கொழுத்துப் போயிடிச்சு போல இருக்கு.”
“ஆமாம், அத்தனை பணத்தையும் நீ எதுக்கு இப்படிப் புதைச்சு வச்சிருக்கே?” என்று கேட்டான் அர்ஷத்.
“நான்தான் சொல்லிட்டேனே...? உங்க பேரனுக்குப் பால் வேணும்கிறதுக்காக அந்தப் பணத்தை வச்சு நான் ஒரு பசுமாட்டை வாங்கலாம்னு நினைக்கிறேன்.”
“முதலிலே அவனை உயிரோட கொண்டு வந்து சேர்ப்போம். நீ பாலுக்கெல்லாம் ஏற்பாடு செய்யறதுக்கு முன்னாலே அவனை நல்லபடியா முதல்லே ஆக்குவோம்.”
“சரி உங்ககிட்டே பணம் இருந்தா டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போங்க.”
“அது உன்னோட பணம் அப்படிங்கிற திமிரிலேதானே இப்படிக் கறாராப் பேசிக்கிட்டிருக்கே நீ.”
“ஏ முட்டாள்! அப்படியே இருந்தால்தான் அதிலே என்ன வந்தது?”
அதற்குப் பிறகு, கண்மண் தெரியாத கோபத்துடன் உச்சஸ்தாயியில் சத்தம் போடத் தொடங்கினான் அர்ஷத். கூலியும் கூட ஆவேசமாகக் கூச்சல் போட ஆரம்பித்துவிட, சண்டையை வேடிக்கை பார்க்க அக்கம் பக்கமெல்லாம் ஒன்று கூடிவிட்டது.
கடைசியில் வெறுப்போடு ஒரு முடிவுக்கு வந்த அர்ஷத்,
“அப்படின்னா சரி! நமக்குள்ளே ‘தலாக்’ பண்ணிக்கலாம்” என்றான்.
“என்னது? ‘தலாக்’கா?”
“ஆமாம்! என்று சொல்லிவிட்டு, ‘தலாக், ‘தலாக், ‘தலாக் என்று மூன்று தடவை உரக்கக் கத்தினான் அர்ஷத்.
“அட அல்வாவே! இப்படிப் போய் செஞ்சிட்டீங்களே” என்று கூச்சல் போட்டபடி மயக்கம் போட்டுத் தரையில் சுருண்டு விழுந்தாள் கூலி.
அவள் சுயநினைவுக்கு மீண்டபோது, புண்பட்ட தன்னகங்காரத்தோடு துடித்துக் கொண்டிருந்தாள்.
“சரி! எல்லாத்தையும் நீங்களே வச்சுக்குங்க” என்று சுத்தினாள்.
பித்தளைப் பாத்திரத்திலிருந்து நாலாயிரம் ரூபாயையும், அதோடு கூடவே தன் தங்க வளையல்களையும், வெள்ளிக் கொலுசுகளையும் சின்ன மூட்டையாகக் கட்டிக் கொண்டாள். ‘தாட்தோபியில் இருக்கும் தன் அக்கா ஃபூலியின் வீட்டுக்கு நடையைக் கட்டினாள்.
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இங்கே இருந்து போயிடுவேன். பையனே அவனை கவனிச்சுக்கட்டும். அந்தக் காட்டுமிராண்டியோட முகத்திலே இனிமே ஒரு தடவை கூட முழிக்க மாட்டேன்” என்று அவர்களிடம் சொன்னாள்.
“உனக்கு இப்ப ஐம்பது வயசாச்சு! அவனுக்கு அறுபது இருக்கணும். இனிமேல் எங்கே போகப் போறே? பேசாம இங்கேயே இருந்திடு. உங்கிட்டேயோ பணம் இருக்கு, எதுக்குக் கவலைப்படறே” என்றாள் ஃபூலி.
“இப்படி ஒரு ஏமாத்துக்காரனை நீ எப்பவாவது பார்த்திருக்கியா… என்று ஆரம்பித்தபடி கணவன் தனக்கு முன்னால் இருப்பதைப் போலவே பாவித்துக்கொண்டு இப்படிப் பேசித் தீர்த்தாள் கூலி.
“நீயோ ஒரு ராத்திரிக்குருடு. ராத்திரிப்பொழுது வந்தா உனக்கு ஒழுங்கா கண்ணு தெரியாது. கதவுக்குப் பக்கத்திலே சிம்னி விளக்கை ஏத்தி வச்சுக்கிட்டு ராத்திரியிலே நீ வீட்டுக்கு வழி கண்டுபிடிச்சு வரணுமேன்னு நான் நிப்பேன். உனக்கு மெத்து மெத்துன்னு இருக்கிற போர்வைதான் பிடிக்கும், கிழிசலே இல்லாத துணியிலே இருந்து உனக்கு நான் அதை செஞ்சு தருவேன். பச்சை மொளகாய் இல்லாட்டா உனக்கு சாப்பாடே இறங்காது. வீட்டிலேயே செடி வச்சு அதை உண்டாக்கி, தினப்படி உன் சாப்பாட்டிலேயே அது கட்டாயம் இருக்கிற மாதிரி நான் பார்த்துக்குவேன். உனக்குன்னே புதுசா ஒரு மூக்குக் கண்ணாடி வாங்கித் தந்தேன். வெளியே போனப்ப ரயிலிலே நீ அதைத் தொலைச்சுட்டு வந்தே. உனக்கு நான் இன்னொண்ணு கூட வாங்கித் தந்திருப்பேன். ஆனால் அதுக்குள்ளே நீ எனக்கு ‘தலாக் சொல்லிட்டே. ஏன் அப்படி செஞ்சே? உன்னோட பேரனுக்காகவா? நம்ம பையன் சின்ன வயசா இருக்கும்போது இருமலோ, காய்ச்சலோ வராமலா இருந்தது? எனக்கு டைஃபாய்ட் காய்ச்சல் வந்தப்ப கூட நிதாய் டாக்டர்தானே சரியாக்கினாரு? நம்ப ‘பலாயியோட (பேரன்) வியாதியை அவரால சரிப்படுத்த முடியாதா என்ன?
“சரி சரி... இப்ப அதைப் பத்தியெல்லாம் நெனச்சுக்கிட்டிருக்காதே” என்று சொன்னபடி அக்கா ஃபூலி, தன் வேலையைப் பார்க்க நகர்ந்து போனாள். உண்மையில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துபோனதில் அவளுக்கு இரகசியமான ஒரு சந்தோஷம் கூட இருந்தது. அவளுடைய கணவருக்கு அவளோடு கூடவே இன்னும் இரண்டு பெண்டாட்டிகள் இருந்தார்கள். அதனால் அவரோடு அவள் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பாள். கூலியின் மணவாழ்க்கை நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து வந்ததில் அவளுக்கு எப்போதுமே ஒரு பொறாமை இருந்து கொண்டிருந்தது. இப்போது மனம் இலேசாகிப் போனதில் மகிழ்ச்சியோடு தன் மகனை அழைத்தாள் அவள்.
“போ! போய்த் தூண்டில் போடு! மீன் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். இதையும் கூடவே கேட்டுக்கோ! அவளோட ஒட்டிக்கிட்டே இரு. சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப உனக்கு ஒரு குடை வாங்கித் தர முடியுமான்னு அவகிட்ட கேளு.”
அக்காவோடு இருந்தபோது, அர்ஷத்தின் தந்தைவழி உறவுக்காரப் பெண் ஒருத்தி, அவனோடு தங்கியிருக்க வந்திருக்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டாள் கூலி. அவர்களுக்கிடையே புதிதான நெருக்கம் ஒன்று அரும்பி இருந்தது என்பதையும், தினசரி சாப்பாட்டோடு ‘சிக்கனும் கூடச் சாப்பிடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டாள். கூலியின் மகன் இன்னும் விடுமுறை எடுத்துக்கொண்டு வீடு திரும்பி இருக்கவில்லை .
“உன்னோட குடும்பத்து மேலே உனக்கு ரொம்ப ஒட்டுதல் இருக்கு கூலி! பாரு... இப்ப என்ன நடந்திருக்குதுன்னு! தெரிஞ்சோ தெரியாமலோ நீ பயங்கரமான ஏதோ ஒரு பாவத்தை செஞ்சிருக்கணும். இல்லேன்னா அல்லா உன்னை இப்படியெல்லாம் ஏன் தண்டிக்கணும்?
இப்படி பேசியதற்காக அக்கா ஃபூலியிடம் கோபித்துக்கொண்டு தங்கை வீட்டுக்குக் கிளம்பிப் போனாள் கூலி.
“இத பாரு! பேசாம இங்கேயே இரு. உன்கிட்ட பணம் இருக்கு. ஒரு பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் வாத்து, கோழின்னு எதையாவது வாங்கிக்கோ. இங்கேயே ஒரு வீடும் கட்டிக்கோ என்றாள் தங்கை டூலி.
“அந்த வேலையெல்லாம் நான் எப்பவோ தூக்கிக் கடாசியாச்சு. இனிமேல் என்னாலே அதைத் திரும்பப் பண்ண முடியாது.”
கற்பாறைபோல இறுகிப்போன முகபாவனையோடு இப்படிப் பதிலளித்தாள் கூலி. தன் மனம், பற்றிக் கொண்டு எரிவது போலிருந்தது அவளுக்கு. எதை விட்டு விட்டு அவள் வந்தாளோ... அதற்குள் அவளால் திரும்பிப் போய்விட முடியுமா என்ன? எத்தனை அக்கறையோடும், ஒட்டுதலோடும் அவள் அந்தக் குடும்பத்தைப் பராமரித்திருப்பாள்? அதே மாதிரியான பழைய ஒட்டுதலோடு அவளால் இனிமேலும் இருக்க முடியுமா? பறவைகளுக்குத் தீனி போடுவதும், மாலை மங்கிய உடன் கோழிகளையெல்லாம் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து வைப்பதும்  இனிமேல் அவளால் முடியுமா?”
ஒருநாள் அவளைப் பார்க்க அவள் மகன் வந்தான்.
“வீட்டுக்கு வந்துடும்மா. எல்லாமே எப்படியோ தாறுமாறாய்ப் போயிக்கிட்டிருக்கு” என்றான்.
“இத பாரு! முன்னே பின்னே தெரியாத ஒரு ஆளோட போய் இனிமே நான் இருப்பேன்னு நெனக்கிறியா? உங்கப்பா ஒண்ணும் இனிமேல் என்னோட வீட்டுக்காரர் கிடையாது. அது உனக்குத் தெரியுமில்லை?”
“அவர் என்ன சொல்றாருன்னா....”
“ம்... சொல்லு!”
“நடந்தது என்னவோ நடந்து போச்சு. அதுக்கு என்ன செய்யறதுங்கிறாரு. எல்லாத்துக்குமே ஒரு வழி இல்லாம இல்லை. அது மட்டும் இல்லாம...”
“ம்... சொல்லு, வேறென்ன?”
“அப்பா எதுவுமே சாப்பிட மாட்டேங்கிறாரு! தான் செஞ்சதை நெனச்சு நெனச்சு நாள் பூரா அழுதுக்கிட்டேதான் இருக்காரு”
அப்போது வினோதமான ஒரு மகிழ்ச்சி உணர்வு தன்னுள் படர்வதை உணர்ந்தாள் கூலி.
“சரி. வேற என்னதான் சொல்றாரு அவரு”
“நான் யாருக்காக வாழ்ந்துக்கிட்டிருக்கேனோ அவளுக்குப் போய் ‘தலாக்’ சொல்லிட்டேனேங்கிறாரு. என் பெண்டாட்டியோட தாத்தா, இதுக்கு வேறொரு வழி இருக்குன்னு சொல்றாரும்மா”
“என்ன அது?”
கால்களை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டு, அசௌகரியமாக அசைந்து தயங்கியபடி அதற்குமேல் பதிலளிக்கத் தயங்கிய அவள் மகன்,
“அவங்களே உன்கிட்டே சொல்லுவாங்க” என்று முடித்துக்கொண்டான்.
டூலியின் வீட்டுக்கு அவர்கள் வந்தார்கள், தேநீர், பிஸ்கட், வெற்றிலை என்று எல்லாச் செலவும் கூலியுடையது. அவள் மருமகளின் தாத்தா, ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்; வயதானவர்; நல்ல அறிவாளி. அவர் மீது எல்லோருக்குமே நல்ல மதிப்பு இருந்தது.
வீட்டுக்குள் இருந்தபடியே அங்கே நடக்கும் பேச்சுவார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள் கூலி.
கிழவர், தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.
“ஹரா... அப்படின்னா நீ என்னதான் சொல்றே? உங்க அம்மா, தன்னோட புருஷனும், குடும்பமும் திரும்பத் தனக்கு வேணுங்கிறாளா..? என்ன, அப்படியா சொல்லு”
கூலியின் கண்கள் நிறைந்து தளும்பின.
“ஆமாம்! அதிலே ஒண்ணும் சந்தேகம் இல்லை” என்றான் ஹரா.
“அப்படின்னா சரிதான்! அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. என்ன, கொஞ்சம் காசு, பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அவ்வளவுதான்.”
குல்சம் (கூலி) மறுபடியும் ஒரு திருமணம் செய்துகொண்டாக வேண்டுமென்று அவர்கள் ஆலோசனை அளித்தனர். இர்ஃபான் மொண்டல் ‘நிக்கா’வுக்குத் தயாராக இருக்கிறான். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவன் குல்சமை ‘தலாக்’ செய்துவிடுவான். பிறகு அவள் அர்ஷதை மீண்டும் திருமணம் செய்துகொள்ள எந்தத் தடையும் இல்லை.
கூலி அதைக் கேட்டு அதிர்ந்துபோனாள். முப்பத்தைந்து ஆண்டுகால மண வாழ்க்கையில் இன்னொரு ஆண்மகனை அவள் ஏறெடுத்துக்கூடப் பார்த்ததில்லை. வீட்டுக்கு ஆண் உறவினர்கள் விருந்தாளிகளாக வரும்போது கூடத் தன்னுடைய மகன் மூலமாகத்தான் அவள் அவர்களுக்கு விருந்தோம்பல் செய்திருக்கிறாள். இப்போது, இந்த வயதில், இருபத்தேழு வயது மகனையும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு காரியத்தை அவளால் எப்படிச் செய்ய முடியும்?
“சரி... போங்க! எக்கேடும் கெட்டுப்போங்க” என்று கோபத்தோடு சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
அதற்கு மறுநாள் அழுதுகொண்டே கூலியிடம் வந்தான் அர்ஷத்.
“கூலி! கொஞ்சம் விஷயத்தைப் புரிஞ்சுக்க. நாம இந்த மாதிரி செய்யாட்டி அது பாவம்னு ஆயிடும். இல்லாட்டிப் போனா, இப்படி ஒரு காரியத்துக்கு நான் சம்மதிச்சிருப்பேன்னா நெனக்கிறே?”
“அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே?”
யார் பேச்சும் அவள் காதில் ஏறுவதாய் இல்லை.
“நான் தற்கொலை பண்ணிப்பேன்னு அவகிட்டே சொல்லுங்க, பாலிடால் சாப்பிட்டிட்றேன்”
வீட்டுக்குள்ளிலிருந்து அம்பு போலப் பாய்ந்து வெளியே வந்தாள் கூலி.
“டூலி! அவர்கிட்டே இதை மட்டும் சொல்லு. வீட்டு வாசல்படி இறங்கிக் கடைக்குப் போய் ஒரு சாமான் வாங்கக்கூட அவர் என்னை விட்டதில்லை. வீட்டிலே இருந்து எங்கேயுமே நான் தனியாக்கூடப் போனதில்லை. அந்த மனுஷனாலே அதே ஆளாலே இப்படி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி என்னை எப்படித்தான் கேக்க முடியுது?”
அழுகையைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அர்ஷத் வெளியே சென்றான். அவன், தன் சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டான் என்றும் ஃபசீராக (சந்நியாசி) முடிவெடுத்துவிட்டான் என்றும் சில நாட்கள் சென்றபின் அவர்கள் கேள்விப்பட்டார்கள். கோழிப்பண்ணை, வீடு என்று எல்லாவற்றையும் ஐநூறு ரூபாய் கொடுத்து நிதாய் டாக்டர் வாங்கிக்கொண்டுவிட்டாராம்.
அன்று முழுவதும் அமைதியாக இருந்த கூலி, பிறகு அமைதியாக இப்படிச் சொன்னாள்.
பானம் எல்லாத்தையும்
“என்னோட வளை, ஒட்டியாணம் எல்லாத்தையும் அங்கேதான் நான் விட்டுட்டு வந்திருக்கேன் டூலி! பத்திரமாக இருக்கணும்னு அங்கேயே புதைச்சு வச்சிருக்கேன். இப்ப போய் அதெல்லாத்தையும் எடுத்துக்கப் போறேன்.”
“ஹராவோட அப்பா அங்கே இருக்கும்போதேயா?”
“ஒரே ஒரு நிமிஷம்தான். உடனே திரும்பிடுவேன். அந்த இடம் நிதாய் டாக்டருக்குக் கை மாறிடிச்சுன்னா அப்புறம் நான் அங்கே போக முடியாதில்லையா?”
டூலியும் அவள் கணவரும் ஒருவரை ஒருவர் இரகசியமாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் சுவாரசியமான ஒரு தீனி அவர்களுக்காக நிச்சயம் காத்திருக்கிறது.
“ஆமாம்... தனியாவா போவே?”
“எனக்கு வயசாச்சு! பயப்பட எதுவும் இல்லை!”
நள்ளிரவு நேரத்தில் ஐந்து மைல் நடந்து தன் சொந்த வீட்டுக்குச் சென்றாள் கூலி. சுற்றிலும் அமைதி மட்டுமே நிறைந்திருக்க, ஒரு பாயில் படுத்துக் கிடந்தான் அர்ஷத். அவன் அருகில் சென்ற அவள் பாய்க்கு வெளியே தரையில் நீண்டு கிடந்த அவன் கால்களை மெள்ளத் தட்டினாள்.
“யாரது? என் பெண்டாட்டியா..?”
“ஏ முட்டாள்! கொஞ்சம் பேசாம இரு. இப்ப நான் ஒண்ணும் உன் பெண்டாட்டி இல்லை. இதை மட்டும் கேளு. நம்ம காசு, பணம், நகைன்னு எல்லாத்தையும் நான் மூட்டி கட்டி மண்ணுக்குள்ளே புதைச்சி வச்சிருக்கேன்னு டூலிகிட்டே எதையோ சொல்லி எப்படியோ அவகிட்டே இருந்து நழுவிக்கிட்டு இங்கே வந்திட்டேன். வா, நாம இண்டு பேரும் இந்த இருட்டிலேயே இங்கே இருந்து போயிடலாம்.”
“எப்படி?”
“ரயிலிலேதான். முன்னாடி ஒருதரம் நாம ரெண்டு பேரும் போயிருக்கோம். ஞாபகம் இருக்கா உனக்கு? கொல்கத்தா போவோம். அங்கே தங்கறதுக்கு இடத்தைப் பார்த்துக்குவோம். ‘பெக்பேகன்’ ஆஸ்பத்திரிக்கும் போகலாம். நாம இருக்கிற இடத்திலே அந்த ரூமோட ஒரு பக்கம் நீ இருந்துக்க. இன்னொரு பக்கம் நான் இருந்துக்கிறேன். அங்கே ஏதாச்சும் ஒரு வேலை தேடிக்கலாம். நீ பீடி சுத்தற வேலையைப் பாரு. நான் மண்பானையிலே  அரிசி வச்சு சோறு வடிக்கிறேன். நீ அதை எடுத்துக்கிட்டுப் போ. அப்படி இருக்கிறதிலே எந்தப் பாவமும் இல்லை.”
“ஆனா, நாம இரண்டு பேரும் ஒரே ரூமிலே எப்படி?”
“அந்த ஆஸ்துமாக்கார இர்ஃபானோட போய் என்னை இருக்கச் சொல்றியே! அதைவிட இது தேவலைதானே?”
“ஆமாம்... ஹரா என்ன சொல்லுவான்?”
“அவனுக்கு என்ன தோணுதோ அதை அவன் சொல்லிக்கட்டும். இனிமே நாம ஒண்ணும் புருஷன் பெண்சாதி இல்லைங்கிறதை மட்டும் அவன்கிட்டே சொல்லிடுவோம். இத்தனை வருஷத்துக்கப்புறம் அதுவே நமக்குப் பழகியும் போச்சு. நம்ம இரண்டு பேராலேயுமே ஒருத்தரைவிட்டு இன்னொருத்தர் இருக்க முடியாது. இதைப் பாவம்னு சொல்லணும்னு நீ நெனச்சா அப்படியே சொல்லிக்கோ!”
"ஆமாம்... மத்தவங்க என்ன சொல்லுவாங்க?”
“அவங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி சொல்லிக்கட்டும். விடு! எழுந்திரிச்சு வா!”
அந்த இரவு நேரத்தில், திருடர்கள் போல மெள்ள ஊர்ந்து சென்று அவர்கள் இரயில் நிலையத்தை அடைந்தனர்.
மறுநாளே அவர்கள் செய்த அந்தக் காரியம் கிராமம் பூராவும் தெரிந்துவிடும். அந்த ஊர் முழுவதும் அவர்களைத் தூற்றப் போகிறது. இவற்றில் எதைப் பற்றியுமே கூலி கவலைப்படவில்லை.
“எனக்குப் பார்வை சரியா இல்லை! எதையும் பார்க்க முடியலை. உன் கையைக் கொடு” என்றான் அர்ஷத்.

“இந்தா உன் கையிலே இருக்கிற கழியிலே ஒரு முனையை நீ பிடிச்சுக்கோ! இன்னொரு பக்கத்தை நான் பிடிச்சுக்கிறேன். இனிமே உன்னோட கையை என்னாலே பிடிச்சுக்க முடியாது. பார்த்து கவனமா வா. இல்லேன்னா, தடுமாறி விழுந்திடப் போறே...”

7.8.18

நிஜங்களும் கற்பிதங்களும்- இரட்டையர் முன்னுரை

                                


                             இரட்டையர்- நிஜங்களும் கற்பிதங்களும்
                       [இரட்டையர்- மொழியாக்க நாவலில் என் முன்னுரை]

’’துயரத்துடன் தனித்திருக்கும் மனித ஆத்மாதனிமைப்பட்டிருக்கும் அகப்பிரக்ஞைநிலவறைக்குள் தப்பித்து முடங்குதல் ஆகிய சிக்கல்களையே இரட்டையர்நாவலிலும் எதிர்ப்படுகிறோம்’’ என்கிறார் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வையும் படைப்புக்களையும் விரிவாக ஆராய்ந்து நூலெழுதிப் புகழ்பெற்றிருப்பவரான கான்ஸ்டாண்டின் மோசுல்ஸ்கி.[ Konstantin Mochulsky]

இரட்டையர் குறித்த கதைகளும் கருத்தாக்கங்களும் மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டுத் தொடர்ந்து நிலவி வருபவை  என்றபோதும் நவீனஇலக்கியக்களத்தில் அதை அடிப்படையாகக்கொண்டு புனைவிலக்கியம் படைத்த முன்னோடிகளில் ஒருவராக எண்ணப்படுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

மிகச்சாதாரண மட்டத்தில் ஓர் அரசு அலுவலக குமாஸ்தாவாகப் பணி புரியும் யாகோவ் பெத்ரோவிச் கோலியாட்கின் , தனக்கென எந்தத் தனி அடையாளமும்அற்ற சராசரிகளில் ஒருவர்சமூக வாழ்க்கையிலோ,காதலிலோ,அலுவல் களத்திலோ சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்கு எதையுமே சாதித்திராதவர்தன்நிழலை ஒத்த இரட்டை மனிதன் ஒருவனை அவர் எதிர்ப்படுவதும் அதைத் தொடர்ந்த சம்பவங்களுமே இக் குறுநாவலின் உள்ளடக்கம்.

நாவலின் தொடக்கத்தில் மனச்சிதறல் நோய் கொண்டவரென மருத்துவரால் சந்தேகிக்கப்படும் கோலியாட்கின்,இறுதியில் தன் சுயக்கட்டுப்பாட்டைமுற்றிலும் இழந்த நிலையில் மனநோய் விடுதிக்கே  இட்டுச்செல்லப்படுவதோடு நாவல் நிறைவு பெறுகிறதுஇடையிலுள்ள அத்தியாயங்களில் அவர்எதிர்ப்பட நேரும் அந்த நிழல் மனிதன்இரத்தமும் சதையும் கொண்ட உண்மையான ஒரு நபர்தானா அல்லது அது அவரது மனமயக்கமா என்பதும்ஒருக்கால்அவன் உண்மையான நபராக இருந்தாலுமே கூட உருவத்தில் அவன் அவரது இரட்டை போலத்தான் இருக்கிறானா அல்லது அது அவரது கற்பிதமா என்பதும்இலைமறை காயாக மட்டுமே இருப்பதே இந்த நாவலின் தனித்துவம் நாவலில் இடம்பெறும் பல பாத்திரங்களும் அந்தஇரட்டை மனிதனைப் பார்த்தாலும்அவனோடு உரையாடினாலும்அவர்களது எதிர்வினைகள் நமக்கு வெளிப்படுவது கோலியாட்கினின்கண்கள் வழியாகத்தான்

ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட ..இந்த நாவலை சரியானபடி உள்வாங்கும் முயற்சி - கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக - இன்னும் கூடத்தொடர்ந்துகொண்டுதான்  இருக்கிறது.

குழப்பமான மனப்பிரமைகளுக்கு ஆட்பட்ட ஒரு மனிதரின் கதை இது என்பதே இந்த நாவல் குறித்த பரவலான கருத்துதன் சுய அடையாளம் குறித்த தேடல்ஒருவரைத் தன்னையே தொலைத்துக்கொள்ளும் அளவுக்கு தூண்டிவிடுகிறது என்பதை இதன் சாரமாக்கிச் சொல்வதையும் ஒதுக்கி விட முடியாதுகதையின்பின்புலமாக வரும் காலகட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய கெடுபிடிகள் மிகுந்த இறுக்கமான சமூக அமைப்பும்,அதன் அதிகாரப்படிநிலைகளும் பலநெருக்கடிகளை உருவாக்கியிருந்தனஅவற்றுக்குள் சிக்கிச் சிதறுண்டு போன மனிதர்களின் ஒரு ‘மாதிரி’[sample]யாகவே கோலியாட்கினின் பாத்திரஉருவாக்கம் முன்வைக்கப்படுகிறது.

எல்லா மனிதர்களோடும் இயல்பாககலகலப்பாகக் கலந்து பழகும் ஒரு சமூக மனிதனாகபெண்களால் நேசிக்கப்படும் கவர்ச்சிகரமான ஓர் இளைஞனாகவேலைத் தளத்தில் மேலதிகாரிகளிடம் சாமர்த்தியம் காட்டி மேன்மேலும் பதவி உயர்வு பெறும் அலுவலராக – இவ்வாறு பலவற்றையும் கோலியாட்கினின்ஆழ்மனம் விரும்பினாலும் நடைமுறையில் அவற்றை சாத்தியமாக்க அவனால் இயலாதபோது அத்தகைய இயல்புகள் கொண்ட ஒரு நிழல்மனிதனைஅவரது உள்ளம் தானாகவே உருவாக்கிக்கொண்டு விடுகிறதுகூடவே அதனோடு இடையறாத போராட்டம் ஒன்றையும் நடத்துகிறதுமனப்பிரமைகள் வரம்புமீறியதாய்க் கட்டற்றுப்பெருகும் நிலையில் எண்ணிக்கையற்ற நிழல் இரட்டையர்கள் தன்னைத் துரத்துவதான தீவிர உளச்சிக்கலுக்கு ஆளாகும்கோலியாட்கின் சராசரி வாழ்க்கையைக்கூடத் தொடர முடியாதபடி,மனநோய் விடுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுகிறார்,

இரட்டை என்பது மனிதர்களில் மட்டும் இல்லைமருத்துவரோடான சந்திப்பு,அலமாரிக்குப்பின் கோலியாட்கின் ஒளிந்து கொள்ளல்,அலுவலகக்காட்சி,வண்டிச்சவாரி என்று நாவலின் பல சம்பவங்களும் இரண்டிரண்டு முறை நாவலில் இடம் பெற்றிருக்கின்றன.

இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது,கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச்சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கியதொனியில் மட்டுமே இந்தக் குறுநாவலின் தொனியை அமைத்துக்கொண்டிருக்கிறார்தஸ்தயெவ்ஸ்கிஅந்த முடிவுகளை வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான மறை பொருளாக அவற்றை சொல்லியும்சொல்லாமலும் விட்டிருக்கிறார்இரட்டையர் நாவல்,நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே இந்நாவலின் வெற்றியும் ஆகிறது.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் நிலவறைக்குறிப்புக்களோடு சேர்த்தே பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலை நான் மொழிபெயர்த்த நிலவறைக்குறிப்புக்களைஅடுத்துத் தொடர்ந்து வெளியிட முன் வந்திருக்கும் யுகனுக்கும்,நற்றிணைப்பதிப்பகத்தாருக்கும்ஆங்கில மொழியாக்கங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து செம்மைசெய்து தகுந்த இடங்களில் விளக்கங்கள் கூறி இப்பணியில் என்னுடன் துணை நின்ற தோழி பேரா.காதம்பரி அவர்களுக்கும் என் நன்றி.
எம்  சுசீலா
19/6/18

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....