துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.2.20

தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர்

தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர்
கனலி [http://kanali.in/] இணைய இதழில் என் கட்டுரை

’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின்போரும் அமைதியும்என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லி விடுவார்கள்’’ என்கிறார் எம்..அப்பாஸ் [என்றென்றும் வாழும் படைப்புகளும்,படைப்பாளர்களும்].

ரஷ்ய சமூகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை, அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞராக விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர். தானும் கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டார். மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளை - இண்டு இடுக்குகளைக் கூடத்துழாவி, அங்கே நிறைந்து வழியும் சபலங்களை, சலனங்களை, அன்பை, அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து மின் வெட்டுப்போல தரிசனப்படுத்தி விடும் அவரது எழுத்தை முழுமையாக வாசிக்கும்போதுதான் நீட்ஷேயின் கூற்றிலுள்ள உண்மை துலங்கும்.

வறுமையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் ஊடாடிய ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வும் கூட அவரது நாவல்களைப் போலவே துயர் கப்பிய, திருப்பங்கள் மலிந்த தருணங்களைக் கொண்டிருப்பதுதான்.

லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபுக்கள் வம்சத்தில், இராணுவ மருத்துவரின் மகனாக 1821 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று பிறந்த தஸ்தயெவ்ஸ்கிக்கு - காசநோயாளியான அன்னை, முன் கோபியான தந்தை என அமைந்த குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதிலேயே ஏழ்மை துன்பம் மரணம் இவற்றோடான பரிச்சயமே வாய்த்தது. இவற்றின் நடுவே அவருக்குக்கிட்டியது, மகிழ்ச்சியும் உற்சாகமும் அற்ற இளமைப் பருவமே. வறுமை, கண்ணீர்,அச்சம் இவற்றில் ஊடாடியபடியே தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வு நகர்ந்தது. தந்தையின் கொடூர நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது சொந்த வேலையாட்களே அவரைக் கொன்றுவிட அன்று முதல் தஸ்தயெவ்ஸ்கியைக் காக்காய் வலிப்பு நோய் தாக்கத் தொடங்கியது. காலம் முழுவதும் அந்த வலிப்பு நோய் அவரை வாட்டியும் வதைத்தும் வந்தது.

.கடனும் வறுமையும், மனைவியின் காச நோயும்,தொடர்ந்து அவளது மரணமும் , சூதாடும் பழக்கமும் அவரை அலைக்கழித்தன.கடன் தொல்லையிலிருந்து காத்துக் கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரே ஆயுதம் அவரது எழுத்து மட்டுமேகுற்றமும் தண்டனையும் 1866, அசடன் 1868-69, கரமஸோவ் சகோதரர்கள் 1879-80 ஆகிய உலகப் பேரிலக்கியங்களை உருவாக்கக் கடனாலும் சூதாட்டத்தாலும் விளைந்த வாழ்க்கை நெருக்குதல்களும் பணத் தேவையுமே அவருக்குக் களம் அமைத்தன.

‘’கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை தருவதென்பது அந்தக் குற்றத்தை விடவும் மோசமானது. சட்டபூர்வமான ஆணையின்படி நடந்தேறும் அந்தக் கொலை..வழிப்பறிக்காரர்களாக் கழுத்தறுபட்டுக் கொல்லப்படுவதையும் விடக் கொடூரமானது... ஒரு வேளை மரண தண்டனை விதிக்கப்பட்டு -தனக்கு மரணம் நெருங்கி விட்டது என்ற மன வேதனை தரும் சித்திரவதைகளையெல்லாம் அனுபவித்தபிறகுநீ இனிமேல் போகலாம்.உன்னை மன்னித்தாயிற்றுஎன்று யாராவது ஒரு மனிதனிடம் சொல்லப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட ஒரு மனிதன் மட்டும்தான் அவன் அந்தக் கணத்தில் அனுபவித்த வேதனைகளையும் சித்திரவதைகளையும் விரிவாகச் சொல்ல முடியும்’’
என்று தன் பாத்திரத்தின் வழியே வாக்குமூலம் தரும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி மரணத்தின் வாயிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்த இருபது அரசியல் கைதிகளில் ஒருவர். 

1849 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி; நேரம் அதிகாலை. இருபது அரசியல் கைதிகள் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஸெமனோவ் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த தூக்கு மரங்களைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.அவர்களில் முதல் மூன்று பேரின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டித் தூக்கு மேடையில் நிறுத்திச் சுற்றிலும் துப்பாக்கி வீரர்கள் சுடுவதற்குத் தயாராக நின்றனர்..அந்த பயங்கரமான காட்சியைப் பிற பதினேழு கைதிகளும் குலைநடுங்கப் பார்த்தபடி இருந்தனர்.அடுத்து வரவிருப்பது அவர்களின் முறை.

’’சுடுங்கள்’’என ஓர் அதிகாரி ஆணையிட வாய் திறந்த மிகச் சரியான அந்தத் தருணத்தில்,மற்றுமொரு அதிகாரி வெள்ளை நிறக் கைக்குட்டை ஒன்றை வெள்ளைக் கொடி போல ஆட்டிக் கொண்டே அங்கே ஓடோடி வந்தார். ரஷியச் சக்கரவர்த்தியான முதலாம் நிக்கலஸ் அந்த மரண தண்டனையை ரத்து செய்து சிறைத் தண்டனையாக மாற்றி விட்ட மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்தபடி வந்திருந்தார் அவர்...

மரண.தண்டனை நிறைவேற்றத்தின் கடைசிக் கணத்தில் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட தஸ்தயெவ்ஸ்கிகை விலங்குடன் சைபீரியப்பனிச்சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இலக்கியப் படைப்பில் சற்றுத் தேக்கம் ஏற்பட்டாலும் அவரது மனம் உறுதி பெற்றது அப்போதுதான். பிராயச்சித்தம்,பாவம்,தவறு,மன்னிப்பு முதலிய மனிதாபிமானப் பண்புகள் அவரது உள்ளத்தில் மேலோங்கி எழுச்சி பெற்றது அந்தக் காலகட்டத்திலேதான். 

ஒரு சமூகப் போராளி போராட்டத்தைத் தன் ஆயுதமாக முன்னெடுக்கிறான். ஓர் எழுத்தாளனுக்கு அவனது எழுதுகோலே ஆயுதமாகிறது. மரணத்தின் விளிம்பைத் தான் எதிர்கொண்ட அந்தத் தருணத்தில் தன்னுள் ஓடிய உணர்வுகள்..எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றைத் தனது இடியட்/அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கினின் கூற்றாகப் பல இடங்களில் இடம்பெறச் செய்தபடி, தானே அனுபவிக்க நேர்ந்த கோரமான அந்த நிகழ்வைத் தன் படைப்புக்களில் முன் வைத்து-தார்மீக அறத்துடன்,சமூகப் பொறுப்புணர்வுடன் மரண தண்டனை மீதான தனது கடுமையான பார்வையைப் பதிவு செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி 

அசடன் நாவலில் தான் சந்தித்த மரண தண்டனை பெற்ற மனிதனைப் பற்றி இவ்வாறு விவரித்துக்கொண்டு போகிறான் மிஷ்கின்.
.
’’அந்த மனிதன் ஒரு முறை வேறு சிலருடன் சேர்த்துத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவன் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைக்கான தீர்ப்பும் வாசிக்கப்பட்டு விட்டது. தண்டனை நிறைவேற்றத்துக்காக அவர்கள் காத்து நின்ற இருபது நிமிடங்கள் கழிந்த பின் அவர்களுக்கு மரணதண்டனையை நிறுத்தி வைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு வேறொரு தண்டனை விதிக்கப்பட்டது.

மரணத்திலிருந்து அவர்கள் தப்பினாலும்....அந்த இரண்டு உத்தரவுகளுக்கும் இடைப்பட்ட நேரமான அந்த 20 நிமிட்ங்கள் எப்படிக் கழிந்திருக்கும்...?
இன்னும் ஒரு சில நிமிடங்களில் தான் இறக்கப்போவது உறுதி என்ற திகிலான நினைப்பில் மட்டுமே அந்த மணித்துளி கடந்திருக்குமல்லவா...?

அவன் உயிரோடு வாழ்வதற்குக் கிடைத்த 5 நிமிடங்களும் முடிவற்று நீண்டு கொண்டே போவதைப் போல அவனுக்குத் தோன்றியது...தனக்கு முன் பாக்கியிருந்த அந்த ஐந்து நிமிடங்களை அவன் மிகச் சரிவரப் பங்கிட்டுக் கொண்டான்.
தன் சக தோழர்களிடமிருந்து விடைபெற 2 நிமிடங்கள்......
தனது கடைசித் தருணத்தில் நினைத்துப் பார்ப்பதற்காக 2 நிமிடங்கள்.......
தன்னைச் சுற்றி இருப்பவைகளை இறுதியாகப் பார்ப்பதற்காக 1 நிமிடம்.......

இவற்றுள் தனக்குத்தானே சிந்தித்துக் கொள்வதற்காக ஒதுக்கியிருந்த 2 நிமிடங்களில் தான் சிந்திக்கப் போவது எதைப் பற்றி என்று கூட அவன் முன்னரே அறிந்து வைத்திருந்தான். இதோ..இப்போது அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்...ஆனால் இன்னும் மூன்றே நிமிடங்களில் அவன் வேறு ஏதோ ஒன்றாக வேறு என்னவோ ஒன்றாக மாறி விடப் போகிறான். அதையெல்லாம் தெளிவாய்த் தெரிந்து கொண்டு விட வேண்டுமென அவன் நினைத்தான்.

அங்கிருந்து சிறிதுதொலைவில் ஒரு மாதா கோவில் இருந்தது. பிரகாசமான சூரிய ஒளியில் மாதா கோவிலின் மெருகிட்ட பொற்கூரை ஜ்லித்துக் கொண்டிருந்தது. அந்தக் கூரையையும் அதன் வெளிச்சத்தையும் தான் தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவிருக்கிறது. அந்த ஒளிக் கற்றைகளோடு இன்னும் மூன்று நிமிடங்களில் தான் ஒன்றிக் கலந்து விடப் போவது போலவும் அவனுக்குத் தோன்றியது.. நிச்சயமில்லாத அந்தக் கணம் அவனுக்கு மிகவும் வெறுப்பூட்டுவதாகவும்,கொடூரமானதாகவும் இருந்தது. இப்படிப்பட்ட தொடர்ச்சியான சிந்தனைகள் அவனை மிக அதிகமாக மிரட்டியபடி மூர்க்கமான ஒரு ஆவேசத்தைத் தன்னில் கிளர்த்தி விட...இறுதியில் ஒரு கட்டத்தில் தன்னைச் சீக்கிரமாகச் சுட்டு விட்டால் போதும் என்று அவன் ஏங்கத் தொடங்கி விட்டான்..’’

ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இபான்சின் குடும்பத்துப் பெண் ஒருத்தி மிஷ்கினிடம் அதற்கான கருப் பொருள் ஒன்றைக் கூறுமாறு கேட்க, அப்போதும் அவன் மனத்தில் எழுவது மரணதண்டனைக் காட்சிதான்...

‘’தூக்கு மேடையில் நின்று கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தை நீங்கள் வரைய வேண்டும்...அவன் அந்த மேடையில் நின்று கொண்டிருக்கும்போது -பலகையில் அவன் கிடத்தப்படுவதற்கு முன் அவன் நின்று கொண்டிருக்கும் அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் காணும் அவன் முகத்தை நீங்கள் ஓவியமாகத் தீட்ட வேண்டும்தூக்கு மேடைக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டின் கடைசிப்படி தெளிவாகத் தெரியும் வண்ணம் ஓவியத்தை வரைய வேண்டும்.குற்றவாளி அப்போதுதான் அதில் கால் வைத்திருக்க வேண்டும். அவனது முகம் வெளிறிப் போயிருக்க வேண்டும்..பாதிரியார் சிலுவையைப் படித்தபடி இருக்க அந்த மனிதன் பேராசையோடு தன் நீலம் பாரித்த உதடுகளை அதில் அழுத்தமாகப் பதித்தபடி, எல்லோரையும் பார்த்துக் கொண்டும் நடப்பது எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டும் இருப்பவனைப் போல காட்சியளிக்க வேண்டும். சிலுவையும் அந்த முகமும் -இவைதான் அந்தப் படமாக இருக்க வேண்டும். பாதிரியாரின் முகம்,பிற 2 பணியாட்கள்,இன்னும் சில தலைகள் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள் முதலானவை அரை வெளிச்சத்தோடும் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பின்னணி போலவும் மட்டுமே தீட்டப்பட வேண்டும்..ஆம்..அப்படித்தான் அந்த ஓவியம் இருக்க வேண்டும்’’
என்று கூறியபடி மரண தண்டனைக்கு இட்டுச் செல்லப்படும் அந்தக் காட்சியை விவரிக்கிறான் மிஷ்கின்.

’’மனிதச் செயல்பாட்டுக்கான காரணங்கள் இன்னதுதான் என்று கூறிவிட முடியாத அளவுக்குச் சிண்டும் சிடுக்குமானவை; மிகவும் சிக்கலானவையும் வெவ்வேறு வகைப்பட்டவைகளுமான அவை, நாம் தரும் விளக்கங்களுக்குள் எளிதாக அடங்கக் கூடியவை அல்ல. அவற்றை மிகத் தெளிவாக வரையறுத்துச் சொல்வது கடினம்’’ என்று கூறும் தஸ்தயெவ்ஸ்கியின் பாத்திரங்கள், நன்மை / தீமை என்று வரையறுக்கப்பட்ட இருமைகளுக்குள் ஒருபோதும் அடங்காதவை.

தஸ்தயெவ்ஸ்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர் என்றோ,முழுமையான தீயவர் என்றோ எவருமில்லை. காமுகனாகச் சித்தரிக்கப்படும் ஸ்விட்ரிகைலோவிடமும் கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது. கண்டிப்பாகச் செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கொல்நிகோவ் மீதுதோழமை ஜனிக்கிறது. ரஸ்கொல்நிகோவ் , ரசுமிகின் ஆகிய அறிவுஜீவிகளின் உரையாடல் படம் பிடிக்கப்பட்டிருப்பதில் வியப்பில்லை. ஆயின் அதற்கு நேர் மாறான தளத்தில் வீடே உலகமென வாழும் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா, கத்தரீனா இவாநோவ்நா ஆகிய பெண்களின் மன உணர்வுகளையும் துல்லியமாகச் சித்தரிப்பதிலேயே   படைப்பாளியின் மீது வியப்பு விளைகிறது

அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை  கபடுகளும் சூதுவாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக..அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் மட்டுமேமிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. .பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின். பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல், அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை. தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்..வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான்; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்
''எனக்கு இருபத்தேழு வயதாகிறது..
ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்...
என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன.
நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன.
அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன..
எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்..! ’
என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும்ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.

ஆளுக்கொரு புறமாக அவனை அலைக்கழித்து ஆட்டிப் படைக்கும் இரு பெண்பாத்திரங்களுமே அவனது இதயத்தின் பரிசுத்தத்தை வியக்கிறார்கள்.
அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் கொண்ட ஒரு மனிதனாக அவனைக் காணும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,பலதரப்பட்ட ஆண்களின் வஞ்சகங்களுக்கு ஆளாகி வாழ்வில் நொந்து போனவள்.மிஷ்கினின் தன்னலம் துறந்த அன்பும் காருண்யமும் அவளுக்கு வியப்பூட்ட,‘’என் வாழ்க்கையில் சந்தித்த முதல் மனிதர் நீங்கள்தான்!’’
என்கிறாள் .

மிஷ்கினின் வாழ்வில் குறுக்கிட்டுக் குறும்பு செய்யும் இன்னொரு பெண்ணான அக்லேயா இவானோவ்னா,
’’உங்களுடைய சுண்டுவிரல் அளவுக்குக் கூடத் தகுதியானவர்கள் இங்கே இல்லை.உங்களுடைய மனம்,உங்களுடைய இதயம் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்கும் இணையான தகுதி படைத்தவர்கள் இங்கே யாருமே இல்லை.
என்று அவனுக்கு நற்சான்று வழங்குகிறாள்
அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அவன் தூயவன் என்னும் உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.

குறைகளும்,தன்னலமும்,வஞ்சக மாசுகளும் மண்டிக் கிடக்கும் மானுடர்களுக்கு நடுவே தான் காண விரும்பிய நவீன ஏசுவின் வடிவமாகவே அசடனாகிய மிஷ்கினின் பாத்திரத்தை தஸ்தயெவ்ஸ்கி சித்தரித்திருக்கிறார் என்று மேலைநாட்டு இலக்கியவிமர்சகர்கள் கூறுவதற்கான ஆதாரங்களை நாவல் ஓட்டத்தின் பல கட்டங்களில் காண முடிந்தாலும் அதன் உச்சமாக அமைவது நஸ்டாஸ்யா கொலைப்பட்டுக் கிடக்கும் இறுதிக் கட்டம்.
நாவல் முழுவதும் யார் மீது செலுத்திய கருணைக்காகத் தன் காதலையும் வாழ்வையுமே கூடத் தொலைத்துக் கொண்டானோ அந்த நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,ரோகோஸினால் கொலையுண்டு கிடக்கிறாள்.ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சியின் மூர்க்கமான ஆவேசத்தால் அவளைக் கத்தியால் குத்திச் சாகடித்த ரோகோஸின் ஜுர வேகத்தில் சித்தப் பிரமை பிடித்தவனைப் போல இருக்கிறான். இது இப்படித்தான் நடக்கப் போகிறது என்பதை வழக்கமான தன் உள்ளுணர்வின் தூண்டுதலால் ஓரளவு ஊகிக்க முடிந்து விட்டிருந்தபோதும் அந்த எழில் வடிவம்...வாழ்வில் நிம்மதி என்பதையே சற்றும் நுகர்ந்திராத பாவப்பட்ட அந்தப் பெண் அவ்வாறு இறந்து கிடப்பது அவனுள் பெரும் துயரத்தைக் கிளர்த்துகிறது.
’’நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவின் அருகில் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் மிஷ்கின்; அவளை ஒரு குழந்தையைப் போலக் கருதிக் கொண்டு அவள் தலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும்,அவள் கன்னங்களைத் தன் கைகளால் வருடிக் கொடுத்தும் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்அவள் மீது அவன் காட்டிய நேசத்தில் மென்மையான பரிவுணர்ச்சியும் கூட ஓடிக் கொண்டிருந்தது.சுயமாக நகர்ந்து செல்ல முடியாத நோயுற்ற சந்தோஷமற்ற ஒரு குழந்தையின் பால் காட்டும் பரிவைப் போன்றதே அது.ஆனால் அவள் மீதான அந்த உணர்வை ஒருபோதும் எவரிடமும் விளக்கிக் கூற அவன் முற்படவே இல்லை’’என்கிறது நாவல்...

அசடன் நாவலின் நாயகன் மிஷ்கின் குறிப்பிட்ட ஒரு வகைப்பாட்டைச் சேர்ந்தவன் என்றால் சாகசச்செயல் புரியும் நெப்போலியனைப்போல தன்னை பாவித்துக்கொண்டு முற்போக்குக் கட்டுரைகள் எழுதி வந்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், பேனை நசுக்குவது போல வட்டிக்கடைக்கிழவியைக் கொலை செய்ய வேண்டுமென்று கிளம்பிப்போய் சூழ்நிலை காஎரணத்தால் இரட்டைக் கொலைகள் செய்ய நேர்ந்து…..அங்கிருந்து திருடிய பணத்தையும் பயன்படுத்திக்கொள்ள மனம் வராத ’குற்றமும் தண்டனையும்’ நாவலின் ரஸ்கோல்நிகோவ் இன்னொரு வகைப்பாட்டைச் சேர்ந்தவன். 

அவன் செய்த குற்றங்களுக்கு எவ்வகை சாட்சியமே இல்லாமல் போனாலும்…. 
‘’பண்டைக்காலத்திலிருந்து தொடங்கி லிகர்ஸ், ஸோலான்.முகமது, நெப்போலியன் என்று ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோருமே விதிகளை மீறியவர்கள்தான். ஏன் தெரியுமா இவர்கள் ஒரு விதியையோ  நெறிமுறையையோ புதிதாக உருவாக்கும்போது அதன் வழியாகத் தங்களையும் அறியாமல் காலங்காலமாகத் தங்கள் முன்னோரிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொண்டவைகளை..இதுவரை புனிதமாகப் போற்றப்பட்டு வந்தவைகளை உடைத்து நொறுக்கி விடுகிறார்கள். அப்படிச் செய்யும்போது ரத்தக்களரி உண்டாக்குவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை என்பது உண்மைதான்..ஆனால்..அப்படிப்பட்ட ரத்தக்களரிகள்தான் நன்மை தருபவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்,அவ்வளவுதான்..’’ என்ற உறுதியான நிலைப்பாடு கொண்டவனாய் அவன் இருந்தபோதும்  
அவனது குற்றமே தண்டனையாக மாறி அவனை வதை செய்து அமைதியிழக்க வைக்கிறது… ஊசலாட்ட மனநிலையிலேயே இருக்கும் அவன் இறுதியில் ஒரு கட்டத்தில் தன் அன்புக்குரிய சோனியாவின் ஆணையால் குற்றத்தை ஒத்துக்கொண்டு சரணடைந்தாலும் சைபீரியாவில் இருக்கும்போதும் கூடத் தான் செய்தது குற்றமில்லை என்னும் இரட்டை மனநிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
‘’வெளித் தோற்றத்திற்கு அவன் தன்னை கடுமையாக தண்டித்துக்கொண்டிருப்பதைப்போல் தோன்றினாலும் கூட அவனது அந்தராத்மாவின் குரல் வேறாகத்தான் இருந்தது…ஆமாம் உண்மையில் இப்போதும் கூட அவன் தன் செயலைக்குற்றம் என்றே ஒப்புக்கொள்ளவுமில்லை, அதற்காக வருந்தவும் இல்லை…ஏதோ ஒரு வகையில் மன அமைதியைத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதற்காக..அபத்தமான அந்த விதியின் கட்டளையால் இந்தச்செயலைக் குற்றம் என்று ஏற்றுக்கொண்டு அதற்கு முன்னால் தன்னைத் தாழ்த்திக்கொண்டு விட்டதைப்போலவே அவனுக்குத் தோன்றியது’’
என்கிறது நாவலின் முடிவுப்பகுதி.

’’தனிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களால் மட்டுமே ஒரு நாவலை நிரப்புவதோ அல்லது அந்தக் கதையைச் சுவாரசியமாக ஆக்குவதற்காகவே வினோதமான நம்ப முடியாத பாத்திரங்களை அதிகமாகச் சித்தரித்துக் கொண்டிருப்பதோ அந்தப் படைப்பை மேலும் கூட நம்ப முடியாததாகவும் சுவையற்றதாகவும் ஆக்கி விடும்’’ 
என்ற எண்ணம் கொண்டவரான தஸ்தயெவ்ஸ்கி
ரஸ்கோல்நிகோவ், மிஷ்கின் போன்ற முதன்மைப்பாத்திரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியதோடு 
’’சராசரி மனிதர்களிடமிருந்தும் கூடச் சுவையான சாரமுள்ள தன்மைகளை ஒரு படைப்பாளி தேடிக் கண்டடைய வேண்டும்’’ என்று முனைப்புக் காட்டியவர்..

இரட்டையர் [THE DOUBLE] குறுநாவலின் மையப்பாத்திரமான யாகோவ் பெத்ரோவிச் கோலியாட்கின்,மிகச்சாதாரண மட்டத்தில் ஓர் அரசு அலுவலக குமாஸ்தாவாகப் பணி புரிபவர்; தனக்கென எந்தத் தனி அடையாளமும்அற்ற சராசரிகளில் ஒருவர்சமூக வாழ்க்கையிலோ,காதலிலோ,அலுவல் களத்திலோ சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்கு எதையுமே சாதித்திராதவர்தன்நிழலை ஒத்த இரட்டை மனிதன் ஒருவனை அவர் எதிர்ப்படுவதும் அதைத் தொடர்ந்த சம்பவங்களுமே அந்தக் 
குறுநாவலின் உள்ளடக்கம்.

''இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப்போட்டு வாழ்வது ஒரு வாழ்க்கை ஆகாது. இரண்டும் இரண்டும் நான்கு என்பதைப் போன்ற கணிதவிதிக்கும், அட்டவணைகளுக்கும் உட்பட்டதாக ஒரு சுயவிருப்பம் எப்படித்தான் எஞ்சி இருக்க முடியும்? இரண்டும் இரண்டும் நான்கு என்று போடும் கணக்கையெல்லாம் விட – அளவிட முடியாதபடி உயர்வானது தன்னுணர்வு…’’
என்று ஓரிடத்திலும்..
’’ஒருமனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.. சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாரையும் விட நான் அறிவாளியாக இருப்பதுதான் என் முதல் குற்றம். என் வாழ்நாள் முழுவதும் பிறரிடமிருந்து என் பார்வையை அகற்றியே வைத்திருப்பவன் நான்; மனிதர்களை முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்ப்பதென்பது என்னால் ஒருபோதும்முடியாது’’
என்று பிறிதோரிடத்திலுமாக - எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பலவீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பிக்கொண்டு ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கும் நிலவறைக்குறிப்புக்களின் [Notes from Underground] நாயகனும் பெயரே சுட்டப்படாத ஒரு சராசரி மனிதனே....
’’நம்மைக் கடந்து போகும் ஒரு சாதனை மனிதனை..வேறுபட்ட ஒரு ஆளுமையைக் கவனிப்பது போல அன்றாட வாழ்வில் நாம் எதிர்ப்பட நேரும் ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் மீது நம் பார்வை குவிவதில்லை; அவர்களைப் பொருட்படுத்தாதபடி பெரும்பாலும் புறந்தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறோம் நாம். ஆனால் படைப்பாளிகளின் பார்வை, கவனம், அவதானிப்பு அவர்களின் மீதும் மையம் கொள்வதே ஒரு படைப்பை நம்பகத்தன்மையுடையதாக்கும். மனிதர்களின் அன்றாட நடப்பியல் செயல்பாடுகளில் ஒவ்வொரு கணமும் மிகவும் முக்கியமான மிகவும் அவசியமான கண்ணிகளாக விளங்கி அவறை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பவர்கள் சராசரி மனிதர்கள்தான்...அவர்களை ஒட்டுமொத்தமாக விட்டு விட்டால் கதை தன் நம்பகத் தன்மையை இழந்து விட நேரிடும்’’ என்று தானே குறிப்பிடும் அத்தகைய  எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டதாலேயே அவரது எழுத்து, அன்றாட வாழ்வில் காணும் வெகு சாமானிய சராசரி மக்களையும் நாவல் நாயகர்களாக முன்னிறுத்தியிருக்கிறது.

பெண் பாத்திரங்களைப் பொறுத்த வரை, தனது நாவல்களில் வரும் பெண்கள் - அவர்கள் காதல் வயப்பட்டிருப்பவர்களானாலும்,விலைமகளிராக ஆக நேர்ந்தவர்களாயினும்அந்தக் குறிப்பிட்ட சூழல்களை விரிவாக வருணிக்க கதைக்களமே இடம் அமைத்துத் தந்தாலும் - அந்த இடங்களிலும் கூடப் பெண் என்பவளை தஸ்தயெவ்ஸ்கி ஒரு சக உயிரியாக..ஒரு மானிட ஜீவனாக மட்டும்தான் அணுகியிருக்கிறாரே தவிர ஒரு சதைப்பிண்டமாக- நுகர்பொருளாக்கிக் கீழ்மைப்படுத்தியதில்லை; அதற்கு அவரது எழுதுகோல் ஒருநாளும் துணிந்ததில்லை. குற்றமும் தண்டனையும் நாவலில் மஞ்சள் சீட்டுடன் சஞ்சரிக்கும் சோனியா, உலகமே வேசியெனத் தூற்றும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா (அசடன்) போன்ற பெண்களைக் கூட உரிய மானுட மதிப்புடன் மட்டுமே அவர் சித்திரித்திருக்கிறார்
‘’நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச்சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள்,நாற்சந்தியிலே சதுக்கத்தின் நடுவிலே போய் நில்லுங்கள், மனிதர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள், மண்ணைக் களங்கப்படுத்தி விட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுவதும் கேட்கும் வண்ணம் நான் ஒரு கொலைகாரன், நான் ஒரு கொலைகாரன் என்று உரக்கச் சொல்லுங்கள்’’
என்று ரஸ்கோல்நிகோவின் மனச்சான்றுக்கு அறைகூவல் விட்டபடி அவனது மனப்போக்கில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொண்டு வருபவள் 
குற்றமும் தண்டனையும் நாவலில் விலைமகளாக வரும் சோனியாவே 
அசடன் நாவலில் மிஷ்கினின் வாழ்க்கைப் போக்கையே மாற்றும் இரு பெண்களில் அக்லேயா, அவனது காதலுக்கு உரியவள்; மற்றொருத்தியான 
நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா அவனது கருணைக்குப் பாத்திரமானவள்.
தாய் தந்தையரை இழந்த அனாதைப் பெண்ணாக டாட்ஸ்கி என்ற பணக்கார மனிதன் ஒருவனின் பராமரிப்பிலும்,பாதுகாவலிலும் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைத்தே கழிவிரக்கம் கொண்டவளாக மாறிப்போனவள்; முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் - அதற்குத் தகுதியற்றவளாய்த் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் பாத்திரமான , நஸ்டாஸ்யா, ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்குச் சில வேளைகளில் நினைவூட்டியபோதும் கங்காவிடம் இல்லாத சில இயல்புகளையும் கொண்டிருக்கிறாள். குறிப்பாகத் தன்னைப் பற்றிய ஒரு பெருமித உண்ர்வு அல்லது தன்முனைப்பு ஒருபுறமும்,தன்னைப் பற்றிய கீழ்மை உணர்வு மறு புறமுமாக அவளை அலைக்கழித்து ஆட்டி வைக்கின்றன.

சந்தர்ப்ப வசத்தாலும் மிகத் தீயவனான ஒருவனின் நடத்தையாலுமே தன் ஒழுக்கநெறி சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையும் அதில் தன் தவறு ஏதுமில்லை என்பதையும் அவள் உணர்ந்தே இருக்கிறாள்; என்றாலும் முறையான ஒரு வாழ்வைக் கைக்கொள்ளத் தனக்கு அருகதை இல்லை என்ற எண்ணமும் அதே நேரத்தில் அவளிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

மிஷ்கின் தன்னை மணக்க முன்வரும்போது 
‘’நான் ஒரு வெட்கம் கெட்ட முரட்டுப் பெண். டாட்ஸ்கியின் வைப்பாட்டியாக இருந்திருப்பவள்.இளவரசே! இந்த   நஸ்டாஸ்யாவுக்குப் பதிலாக நீங்கள் அக்லேயா இபான்சினைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...என்று அவனது கோரிக்கையை நிராகரிப்பதற்குத் அவளது நெஞ்சுக்குள் நெருடிக் கொண்டிருக்கும் கறை படிந்த இறந்தகாலமே  காரணமாகிறது. அதே வேளையில் அளப்பரிய தன்மான உணர்வு கொண்டவளாகவும் அவள் இருக்கிறாள். பணத்தைக் கொடுத்துத் தன்னை கன்யாவின் தலையில் கட்டத் துடிக்கும் டாட்ஸ்கி, பணத்தால் துரத்தியபடி,  ஏலத்தில் வாங்குவது போலத் தன்னை உடைமையாக்கிக் கொள்ள எண்ணும் ரோகோஸின்-இவ்விருவரின் போக்கும் தனது தன்மதிப்பை ஊறு செய்வதாக எண்ணி அவர்களை அருவருக்கிறாள் அவள். இவ்விருவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவிக்க மிஷ்கின் முன் வருகையில் அந்த இரக்கமும் கருணையும் கூடத் தனது தன்மானத்தைக் காயப்படுத்துவதாகவே உணர்ந்து அதனாலேயே அதை ஏற்கவும் மறுக்கிறாள்

‘’கடைசியாக இப்படியும் ஒரு மனிதர்... உங்களைப் போன்ற அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் ஒரு மனிதரைப் பற்றி நான் எப்போதுமே கற்பனை செய்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு மனிதர் என்னிடம் வந்து நீ எந்தத் தவறும் செய்யவில்லை நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன்..உன்னை ஆராதிக்கிறேன் என்றெல்லாம் சொல்லப் போகிறார் என்று என் மூளையே பிசகிப் போகும் அளவுக்குக் கற்பனை செய்து கொண்டே இருப்பேன்’’
என்று அதை வெளிப்படுத்தவும் செய்கிறாள். ஆனாலும் அவனை மணந்து கொள்வதில் அவளுக்கு உள்ளூர ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருப்பதனாலேயே ரோகோஸினுடன் ஓடுவதும், பிறகு சிறிது காலம் மிஷ்கினிடம் மீள்வதுமாய் அவனை அலைக்கழிக்கிறாள்.

’’அவள் என்னிடமிருந்து ஓடிப் போனது ஏன் தெரியுமா....தான் ஒரு இழிந்த பிறவி என்பதை எனக்கு வெளிப்படையாகக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான்.அதை என்னிடம் நிரூபித்தாக வேண்டும் என்பதோடு அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வேறொரு உள் மனத் தூண்டுதலும் கூட இருந்தது. உள்ளத்தின் ஆழத்தில் இப்படித் தொடர்ச்சியாக அவமானத்தைச் சுமந்து கொண்டே இருப்பதென்பது,அவளைப் பொறுத்த வரையில் இயற்கைக்கு விரோதமான-குரூரமான ஒரு சந்தோஷத்தை அவளுக்கு அளிப்பதாகக் கூட இருக்கலாம்.’’
என்றபடி மிகத் தெளிவாக நஸ்டாஸ்யாவின் இயல்புகளை அவளது நடவடிக்கைக்கான காரணங்களை- பின் புலங்களை 
அவளையும், அவளது மன அமைப்பை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்த ஒரே ஒரு மனிதன் மிஷ்கின் மட்டுமே.

‘’நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்" என்று ஒரு முறை ஜெயகாந்தன் குறிப்பிட்டார். அது போல - வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் மண்டிக்கிடக்கும் அழுக்குகள் ஆபாசங்கள்...தனி மனிதக்கோணல்கள், விசித்திரமான பாத்திரங்களின் வித்தியாசமான செயல்பாடுகள் என்று எதை எடுத்துக்கொண்டாலும்- எந்தப்பாணியில் கதை சொல்லலை அமைத்துக்கொண்டாலும் பெண் குறித்த ஆபாச வருணனைகளோ உரையாடல்களோ சொற்பிரயோகங்களோ தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் கிஞ்சித்தும் தலை காட்டியதில்லை. பாரதி உட்பட செவ்விலக்கிய கர்த்தாக்கள் பலரும் கைக்கொண்ட சீர்மை அதுரஷிய இலக்கியத்தில் மட்டுமன்றி உலக இலக்கிய மாமேதை உலக இலக்கியத்தின் பக்கங்களிலும் அமரத்துவம் வாய்ந்த வராய்க் கொண்டாடப்படும் தஸ்தயெவ்ஸ்கியிடமிருந்து சமகால இளைஞர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டிய முக்கியமான செய்திகளில் இதுவும் ஒன்று.
                

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....