துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.12.10

’’மானிடவர்க்கென்று பேச்சுப்படில்...’’


இணைய வாசகர்களுக்குப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ஒரு சிறுகதையும் கூடவே...
(ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி)

’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே உச்சிக்கால வழிபாடு நடந்தேறுவதற்கு அறிகுறியாக நாத வெள்ளமாகப் பல முறை முழங்கி ஓய்கிறது. அதன் ஒலி முழக்கம் ஓய்ந்த பின்னரும் கூடப்

28.12.10

தமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்

தில்லி தமிழ்ச்சங்கத்தில் டிச.10.11,12 நடந்து முடிந்த தமிழ்2010 கருத்தரங்கிற்குப் பின்பு தில்லி நண்பரும் பதிவருமான திரு கலாநேசன் கீழ்க்காணும் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
.............................................................................
வணக்கம் அம்மா,
இன்று நீங்கள் நெறியாளுகை செய்த கருத்தரங்கில் கலந்துகொண்டதில்

24.12.10

விருதுக்கு வாழ்த்து


ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த 
திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது
அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது.

13.12.10

தில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு-3

ஓர் அரசமைப்பாலும் பல்கலக்கழகத்தாலும் மட்டுமே நிகழ்த்துதல் சாத்தியமான நவீன தமிழ் இலக்கியக் கருத்தரங்கை - இன்றைய இலக்கியத்தின் போக்கை அவதானிக்கும் தீவிரத் தன்மை கொண்ட ஏழு அமர்வுகளைக் கொண்டு மிகச் சிறப்பாக நடத்திக்காட்டித் தமிழின் பலதுறை சார்ந்த மிகச்சிறந்தபடைப்பாளிகள்,விமரிசகர்கள்,சிந்தனையாளர்கள் ஆகிய பலரை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துத் தனது நெடிய வரலாற்றில் புதியதொரு சாதனையைப் படைத்திருக்கிறது தில்லி தமிழ்ச்சங்கம்

11.12.10

அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்

’உண்மையின்அழகு பொதிந்த ஓர் ஆன்மாவை சிருஷ்டிப்பதே என் நோக்கம்’’எனக் குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி அந்த எண்ணத்துடன் உருவாக்கியுள்ள ஆக்கமே இடியட்/அசடன்.(The Idiot)

 குற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரியதாக
 நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவலைக்
கொடிய வறுமை,இடைவிடாச்சூதாட்டம்,முதற்குழந்தையின் மரணம் முதலிய சொந்த வாழ்க்கைச்சிக்கல்களுக்கு நடுவிலிருந்து கொண்டு,அவற்றோடு போராடியபடி

9.12.10

தில்லியில் தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு-பதிவு 2


(இன்று 10.12.10 தொடங்கும் 
தில்லி தமிழ்ச்சங்க - தமிழ் 2010 இலக்கியக் கருத்தரங்கு நிகழ்வில் -முந்தைய அழைப்பிதழிலிருந்து ஒரு சிறிய மாற்றம்

5.12.10

’உன்னை விட்டால் யாருமில்லை..’

சங்க இலக்கியத்தைப் பொறுத்த வரை தோழியின் பாத்திரம் என்பது ,
ஒரு இலக்கிய மரபாக...
தலைவியால் வெளியிட முடியாத உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் ஒரு வடிகாலைப் போலவே

3.12.10

நெறியாளுகை ,புனைவிலக்கியம்-விளக்கம்

அன்புள்ள அம்மா,
தில்லி தமிழ்ச் சங்கத்தின்  கருத்தரங்கத்தில்    தாங்களும் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. 
வாழ்த்துக்கள்
எனது சிறிய இரு சந்தேகங்களைத் தெரிவிக்கிறேன்.
௧)கருத்தரங்கத்தில்  தங்களுடைய பணி நெறியாளுகை.  
தொகுத்து  வழங்குதலுக்கும் நெறியாளுகைக்கும் என்ன வேறுபாடு. .
௨)புனைவிலக்கியம்  என்றால் என்ன? 
    விளக்கவும்
அன்புடன்
நாராயணசாமி.ம 
புது தில்லி 
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எம்.ஏ.சுசீலா
அன்பிற்குரிய திரு நாராயணசாமி அவர்களுக்கு,
தங்கள் வினா தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்தவிருக்கும் 
இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பாக உள்ளதால் தங்கள் வினாக்களை , என் தளத்தில் புதிதாகத் தொடங்கியுள்ள இலக்கிய உரையாடல் என்னும் பகுதியின் முதல் உரையாடலாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.அந்த வாய்ப்பைத் தாங்கள் ஏற்படுத்தித் தந்ததில் மகிழ்ச்சி.
1.தொகுத்து  வழங்குதல்-நெறியாளுகை வேறுபாடு
Moderation என்னும் ஆங்கிலச் சொல்லையே நெறியாளுகை எனத் தமிழாக்கியுள்ளோம்.
கருத்தரங்கம் என்பது தொகுத்து வழங்கும் ஒரு கூட்டம் அல்லது நிகழ்வு அல்ல;அதற்கு மேலான சற்றுத் தீவிரத் தன்மை அதற்கு உண்டு.கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை வாசிப்போரின் ஆளுமை பற்றிய தெளிவு,புரிதல் இவற்றோடு,அவர்களது கட்டுரைகள் சார்ந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களை/அல்லது அந்தக் கட்டுரை தொடர்பான மேலும் சில கருத்துக்களையும் கூறும் உரிமையும்,பார்வையாளர்களிடமிருந்து எழும் விவாதங்களையும்,கேள்விகளையும் - அத்தகைய வாதங்களின் போக்கு - மையக் கருத்துக்கு மாறாகத் திசைதிரும்பிச் சென்றுவிடாமல் நெறிப்படுத்திக் கொண்டு செல்லும் பொறுப்பும் நெறியாளும் நபருக்கு உண்டு. 
கருத்தரங்கை நெறிப்படுத்துபவர் குறிப்பிட்ட துறையில் கொஞ்சமாவது பரிச்சயமும்,தேர்ச்சியும் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதே தொகுப்பாளரையும்,நெறியாளுபவரையும் வேறுபடுத்தும் மற்றொரு முக்கியமான அம்சம்.

நாடகம்,திரைப்படம் முதலிய ஊடகங்களில் அனைத்தையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் முழுப் பொறுப்பும் இயக்குநர் வசத்திலேயே இருப்பதால் சில நாடக,திரைப்பட இயக்குநர்கள் ,இயக்கம் என்பதற்கு மாறாக நெறியாளுகை என்று குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.
பி.கு;இறுதியாக..இதைச் சொல்ல வேண்டாமென்று நினைத்தாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை.
பட்டிமன்றம்,வழக்காடு மன்றம் போன்றவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்களின் போக்கையும் கூட நடுவர்கள் கிட்டத்தட்ட இந்த முறையிலேதான் சமன் செய்து கொண்டு போக வேண்டுமென்றாலும், (50.60களில் அப்படித்தான் இருந்தது)
இன்றைய இலக்கியச் சூழலில் அவ்வாறு நடைபெறாமல் அவை நீர்த்துப் போய்க் கேலிக் கூத்துக்களாகிவிட்டதால் அங்கே பயன்படும் நடுவர் என்னும் சொல் இங்கே கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 
மற்றும் ஒன்று..
தொகுப்பாளர் என்கிற கலாச்சாரமே தொலைக்காட்சி போன்ற ஊடகங்களால் பரவலாக்கப்பட்டு - இலக்கியக்கூட்டங்கள் வரை.-..அண்மையில்,புதிதாக வந்து சேர்ந்த ஒன்றுதான். 
அதற்கு முன்பு வரையில் குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்களே அடுத்தடுத்துப் பேச இருப்பவர்களை ஒருங்கிணைத்து நடத்தும் பணியையும் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
இன்று...தொகுப்பாளர்களுக்குத் திறமை இருக்கிறதோ,இல்லையோ தோற்ற,நடை உடை பாவனைகள் கவர்ச்சிகரமாக இருந்தால் போதும் என்ற அளவுக்குச் சில இடங்களில் நிலைமை கீழிறங்கிக் கிடக்கிறது.
2.புனைவிலக்கியம் பற்றி...
புனைவு என்பது கற்பனை.
நடந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கட்டுரைகளைத் தவிரக் கற்பனையான புனைவுகளால் உருவாகும் நாவல்,சிறுகதை,கவிதை ஆகிய அனைத்தும் புனைவிலக்கியங்களே.புனையப்படும் இலக்கியமே புனைவிலக்கியம்.
இன்னும் ஒன்று..
புனையப்படும் எல்லாமே புனைவிலக்கியமாக ஆகிவிடுவதுமில்லை.
புனையப்படும் எழுத்தில்,மெய்யான இலக்கியத் தகுதிகள்,அழகியல்கூறுகள்,உள்ளடக்கச்செறிவு ஆகியவைகளும் உடன் இணையும்போதுதான் புனைவிலக்கியம் என்ற உண்மையான தகுதிப்பாட்டுக்கு அது உரியதாகிறது.





கடிதமும்,எதிர்வினையும்

மதிப்பிற்குரிய சுசீலா:
உங்கள் பதிவை அவ்வப்போது வந்து ஆவலோடு படிப்பேன்.  அந்த வகையில், நீங்கள் அறிவித்திருக்கும் இரண்டு மாற்றங்கள் பற்றிய என் கருத்து இது
1. இலக்கிய உரையாடல் செவிக்கும் அறிவுக்கும் சிறிதீயும் அருமையான திட்டம்.  எனினும் அதைக் கடிதம் மூலமாகச் செயல்படுத்த எண்ணியிருப்பது நடைமுறைச் சிக்கல்.  உங்களுக்கும் எனக்கும் (எங்களுக்கும்?). இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே?  இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா? உங்கள் தளம் உங்கள் மனம் - ஒப்புக்கொள்கிறேன்; இருந்தாலும் அறிவு நாலிடத்திற்கு சென்றடைய வேண்டும், இலக்கிய இன்பம் தொட்டனைத்தூறும் மணற்கேணித் தன்மையது என்று நம்பினால் பொதுவில் வையுங்கள்.  பகிர்வோருக்கும் எளிமையாக இருக்கும்.  இதனால் சில அறிவுக்குருடர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் - நாளடைவில் குறைந்து விடும்.  இதைக் கேள்வி பதில் தளமாக்குங்கள்.  கூடவே கருத்துப் பரிமாறவும் இடங்கொடுங்கள்.

2. பின்னூட்டத்துக்கும் கடிதமா?  பின்னோக்கிப் போகிறீர்களே என்று உரிமையுடன் கேட்கலாமா? ஒரு வரிக்கருத்துகளின் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் அவை வாசகர்களின் வாழ்த்துக்கள் தானே?  விருப்பமில்லையென்றால் நீக்கிவிட உங்களுக்கு வசதியுண்டே?

இணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே?  கருத்தையும் கோப்பையும் பொறுத்து உங்கள் தளத்தில் பரிமாற்றமும் முதிருமே?

அன்புடன்
 -அப்பாதுரை
http://moonramsuzhi.blogspot.com/
http://nasivenba.blogspot.com/
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எம்.ஏ.சுசீலா..
அன்பான வலை நட்புக்களுக்கு,
எனது வலையில் நான் மேற்கொள்ளத் தொடங்கிய இரு மாற்றங்கள் பற்றி வந்த இந்தக் கடிதமும்,சென்ற பதிவில் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டிருந்த சில செய்திகளும் நண்பர்களுடனான உரையாடல்களும் இவற்றை மறு பரிசீலனை செய்வது நல்லது எனச்சற்று யோசிக்க வைத்திருக்கின்றன.
//இணையக் கலாசாரத்தின் அடிப்படையே தடையில்லாத உடனுக்குடன் கருத்துப் பரிமாற்றம் தானே? //
//இணையத்தின் சிறப்பே அதன் சிறகுகள் தானே?  இப்படித் தான் பறக்க வேண்டும் என்று சொல்லலாமா?//
என்று திரு அப்பாதுரை எழுப்பும்கேள்வி மிக நியாயமானதுதான்.
நான் ஒரு சோதனை முயற்சியாகவே முதலில் இதை எண்ணினேன்.
வாசகர்களின் கருத்துப் பகிர்வுக்கும் தடையற்ற உடனடிக் 
கருத்துப் பரிமாற்றத்துக்கும் இதனால் சிரமம் ஏற்படும் என்றால் - உடனடி எதிர்வினைகளைப் பெறுவதில் தடை விளையும் என்றால் 
கருத்துரைப் படிவங்களை/பின்னூட்டங்களை  
மீண்டும் மகிழ்வோடு திறந்து வைப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

கருத்துரைப் பெட்டியின் கொள்ளளவுக்குள் அடங்காத கடிதங்களை மட்டும் தனியே வெளியிடுகிறேன்.
எனவே கருத்துரைகளுக்கு மாறாகக்கடிதங்கள் என்பதை மாற்றிக்
கருத்துரைகள்,கடிதங்கள்
என இரண்டுமேஏற்கப்படும் எனத் திருத்திக் கொள்கிறேன்.
இலக்கிய உரையாடல் பகுதி அப்படியே இருக்கட்டும்.அதன் வழி எதைக் கேட்க வாசகர்கள் நினைக்கிறார்களோ அதைக் கேட்கட்டும்.இலக்கியம் தொடர்பான விளக்கங்களை..தகவல்களைப்பெற அது ஒரு வாயிலாக இருந்தால் பதிவுகளின் விறுவிறுப்பும் சுவையும் கூடும் என எதிர்பார்க்கிறேன்.



1.12.10

இரு மாற்றங்கள்;கடிதங்கள்

என் வலைத் தளத்தில் செய்துள்ள இரு மாற்றங்கள் குறித்த எதிர்வினைக் கடிதங்களும் அவற்றுக்கான என் விளக்கமும்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
நல்ல முயற்சி. விவாதங்கள் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முடியும். எழுத்தாளர் ஜெயமோகன் இதைச் செவ்வனே செய்துவருகிறார். வாசகர்களின் இலக்கிய சந்தேகங்கள் தீர்த்து வைப்பதன் மூலம் பலருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆரம்பகட்டமாக பரஸ்பர பகிர்தல் நடைபெறும். உங்கள் இலக்கியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
-தமிழ்மகன்.

நல்ல முயற்சி. 
வலைப்பதிவுகளைப் பொழுது போக்குக்காகப் படிப்பவர்கள், இலக்கிய ஆர்வமோ / சந்தேகங்களோ கொண்டவர்களாக இருப்பார்களா என்கிற சிறிய சந்தேகம் எங்கள் மனதில் இருக்கின்றது.
அப்படி இல்லாமல், எல்லோரும் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் பல நன்மைகள் விளைய சந்தர்ப்பம் உள்ளது. எங்கள் பதிவுகளில் நீங்கள் காணும் பிழைகள் எது இருந்தாலும், அவற்றை நீங்கள், தயங்காது எங்கள் மின்னஞ்சலுக்கு பிழைகளையும், திருத்தங்களையும் எடுத்துரைக்கலாம், நாங்கள் அதை நிச்சயம் மதித்து, பின்பற்றுவோம். 
அன்புடன்,
க கோ கௌதமன்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
எம்.ஏ.சுசீலா
முயற்சிக்கு வாழ்த்துக் கூறிய திரு தமிழ்மகன்,மற்றும் நண்பர் கௌதமன் ஆகியோருக்கு நன்றி.
வலைப் பதிவை வெறும் பொழுதுபோக்காக ஆக்கி விடாமல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு சோதனை முயற்சிதான் இது. கௌதமன் தெரிவித்த ஐயங்கள் எனக்கும் உண்டு;எனினும் இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு சில வாசகர்களாவது இந்த முயற்சிக்குக்கை கொடுப்பார்கள் என்றநம்பிக்கையும் ஒரு புறம் இருந்து கொண்டுதானிருக்கிறது.காலம் என்ன சொல்கிறது..பார்ப்போம்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

மாற்றங்களைக் கண்ணுற்றேன் அம்மா. இந்த மாற்றங்களின் தாக்கம் வாசகர்களிடம் ஏற்பட நீண்ட நாட்களாகும். ஜெயமோகன் தளத்தில் வாசகர்கள் பின்னூட்டம், அதன் மீது அவர் பதில் என்பது ஒருவிதமாகவும், வேறு சில எழுத்தாளர்களுடைய தளத்தில் வேறுவிதமாகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்..

முதல் மாற்றமாக நீங்கள் அறிவித்திருக்கிற இலக்கிய உரையாடல் என்பது பதிவுகளில் தொடர்ந்து நடக்கக் கூடியது அல்ல. அது குழுமங்கள்,  புல்லட்டின் போர்ட் மாதிரி தனி இழைகளாகக் கொண்டு போகக் கூடிய வசதி இருந்தால் தான் சாத்தியம், எடுத்துக் காட்டாக திரு பென்னேஸ்வரன் கூட சமீபத்தில் தமிழ்வாசல் என்று கூகிள் குழுமம் ஒன்றைத் துவங்கி இருப்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து, பின்னூட்டங்கள் குறித்த மாற்றம்! இது கூட மட்டுறுத்தல் வசதியை நீங்கள் எப்படிப் பயன் படுத்துகிறீர்கள்  என்பதைப் பொறுத்ததே. ஒற்றை வரியோ, அல்லது ரிப்பீட்டே  என்பது மாதிரி வருகிற பின்னூட்டங்கள், நமக்கு எப்படிப் பட்ட வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு அளவுகோல், அவ்வளவுதான்! இதைக் கூட அதிகமாகப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. நம்முடைய எழுத்தில், என்ன எழுதுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே போதுமானது. நீங்கள் ஒரு புத்தக ஆசிரியராகவும் இருப்பதால், உங்களுடைய படைப்புக்களை மார்கெடிங் செய்ய தளத்தில் இந்த மாற்றங்கள் மட்டுமே போதாது. டாட் காம் என்று தனியாக தளம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், தளத்தில் வேறு சில வசதிகளையும் செய்ய வேண்டி இருக்கும். Wordpress  தள தீம்கள், நிறைய வசதிகளுடன் கிடைக்கின்றன. வண்ணம் முதல், உள்ளடக்கம், உங்களைப் பற்றிய வேறு விவரங்கள், எழுதிய புத்தகங்களின் குறிப்பிட்டபகுதிகளை தளத்திலேயே படிக்கும் வசதி இப்படி நிறைய மாற்றங்களைப் படிப்படியாக அதில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இது என்னுடைய இரண்டு பைசே.
அன்புடன்
கிருஷ்ண மூர்த்தி

எம்.ஏ.சுசீலா
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி.இது இப்போதைக்குஒரு சோதனை மட்டுமே.
தமிழ் இலக்கியத்தில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் 36 ஆண்டுக்காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாலும்,படைப்பிலக்கியத் துறையில் கொண்ட நாட்டத்தினாலும் எனக்குத் தெரிந்திருக்கும் - மற்றும் என் சேமிப்பிலிருக்கும் ஓரளவு தகவல்களைத் தேவைப்படும் நபர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமே இந்த அடியை நான் எடுத்துவைக்கக் காரணம்..
வாசகர்களிடம் இதன் தாக்கம் ஏற்பட நாளாகும் என்பதையும்,அவ்வப்போது படித்து விட்டுப் போகும் பதிவுகளில் தொடர்ந்த செயல்பாடு சற்றுக்கடினமானதாகத்தான் இருக்கும் என்பது எனக்கும் தெரிகிறது.
இருந்தாலும் அத்தகைய ஆர்வமுள்ள வாசக வரவுக்காகக் காத்திருப்பதில்பிழையில்லையே.
அத்தகையோர் வரும் வரை பிற பக்கங்களை என் போக்கில் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.
தங்கள் உடன் பதிலுக்கு நன்றி.

பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட......

28.11.10

மீனாட்சியின் பொன் விழா

’’கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...’


தன் எழுத்தின் வழி மனித நேயத்தின் சிகரம் தொட்ட கதை ஆசான்
 பத்மபூஷண் திரு ஜெயகாந்தனை முன்னிலைப்படுத்தி-
பாரம்பரியப் பெருமை மிக்க மதுரை மீனாட்சி புத்தக நிலையம் தன் பொன்விழாவை டிச.12ஆம் தேதியன்று மதுரையில் கொண்டாடவிருக்கிறது..
விழா அழைப்பிதழும்,பொன்விழா மலருக்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரையும்..கீழே...



இரு மீனாட்சிகள்......
எம்.ஏ.சுசீலா

மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.
மதுரையம்பதியின் அணியாகத் திகழும் ஆலயத்தில் குடிகொண்ட அன்னை மீனாட்சியோடு...,புத்தக அடுக்குகளுக்குள் குடியிருந்து கோலோச்சும் மீனாட்சியையும் (மீனாட்சி புத்தக நிலையத்தில் )
சேர்த்து...மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.

1970ஆம் ஆண்டு பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையின் இளம் விரிவுரையாளராக மதுரையில் கால் பதித்தது முதல்...பல காவதங்கள் தாண்டி வடமாநிலத்தில்..இந்தியத் தலைநகரில் வசித்து வரும் இன்றைய சூழ்நிலையிலும் கூட இரண்டு மீனாட்சிகளுக்கும் ஒரே மாதிரியான இடத்தையே என் உள்ளத்தில் வழங்கி வருகிறேன்..
மீனாட்சி புத்தக நிலையத்தோடான என் பிணைப்பும்,நட்பும் மதுரையில் நான் வசிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நீண்டு,இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டிருக்கின்றன.

நான் பணி புரிந்த கல்லூரி நூலகத்துக்கும்,ஆண்டு விழாவுக்கும் பரிசுப் புத்தகங்கள் வாங்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்படும்போது - இளமைக் காலம் தொட்டே புத்தக விரும்பியாக இருந்த நான் , அந்தப் பணியை ஆர்வத்தோடு வலிந்து ஏற்றுக் கொண்டதனாலேயே மீனாட்சி புத்தக நிலையத்தாரோடான என் உறவுப் பாலம் , தலைமுறைகள் தாண்டியும் தளராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தானப்ப முதலி தெருவில் மயூரி வளாகத்தில் தற்போது இருக்கும் மீனாட்சி புத்தக நிலையம் ,  '70,மற்றும் '80களில் மேலக் கோபுர வாசலில்,செண்ட்ரல் திரையரங்கிற்குச் சற்றுத் தள்ளி மிகச் சிறிய இண்டு இடுக்கான பெட்டிக் கடை போன்ற ஓர் இடத்திலேதான் இருந்தது.
மூர்த்தி சிறிதானாலும்...அதன் கீர்த்தி பெரிது;
காரணம் அது வெறும் புத்தக விற்பனை நிலையமாக மட்டும் இல்லாமல் தமிழின் தலை சிறந்த பதிப்பகங்களில் ஒன்றாகவும் விளங்கியதுதான்.
அப்போதைய எழுத்துலக ஜாம்பவான்களாகிய ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,லா.ச.ராமாமிருதம் போன்றோரின் நூல்கள் பலவும்(குறிப்பாக ஜெயகாந்தனின் நூல்கள் அனைத்துமே) மேலக் கோபுர வாசல் முகவரியைத் தாங்கியபடிதான் வெளிவந்து கொண்டிருந்தன

அந்தப் பருவத்தில் அக்கினிப் பொறியாகத் தெறித்துக் கொண்டிருந்த திரு ஜெயகாந்தனின் எழுத்துக்களையே ஆதர்சமாகக் கொண்டு எழுதுகோல் பிடிக்க ஆரம்பித்திருந்த எனக்கு அவரது நூல்களைப் பதிப்பிக்கும் அந்தக்குறிப்பிட்ட இடமும் கூட மனக் கிளர்ச்சியும்,உத்வேகமும் ஊட்டும் ஒன்றாகத்தான் தோன்றிக் கொண்டிருந்தது; தொடர்ந்து...அதே பதிப்பகக் கடைக்குள் வைத்து நான் ஆராதித்து வந்த எழுத்தாளர்களை-ஜே.கே முதல் லா.ச.ரா வரை எதிர்ப்பட நேர்ந்ததும்,அவர்களில் ஒரு சிலரை மீனாட்சி புத்தக நிலையத்தின் நிறுவனரும்,உரிமையாளருமான திரு செல்லப்பன் அவர்களின் உதவியோடு கல்லூரியில் உரையாற்ற அழைத்துச் சென்றதும் என் வாழ்க்கைப் பேரேட்டில் மறக்க முடியாத சில பக்கங்கள்.

 பதிப்பகத்தின் இன்றைய உரிமையாளர் திரு செ.முருகப்பனின் தந்தையும், நிறுவனருமான திரு செல்லப்பன் ,முக மதிப்புக்காக ,ஜோடனையாக எதுவுமே பேச அறியாதவர்;ஆனால் கருமமே கண்ணாக...உரிய நேரத்தில்,உரியதைச் செய்து-மிகத் துல்லியமான தரமான படைப்பாளிகளை மட்டுமே தெரிவு செய்து அவர்களது நூல்களை மட்டுமே பதிப்பித்து மிகச் சிறந்த தரக் கட்டுப்பாட்டைத் தன் பதிப்புப் பணியில் பேணி வந்தவர் அவர்;


சென்னையிலிருந்த பல பதிப்பகங்கள் கூடச் செய்யாத தலை சிறந்த பதிப்புக்களை அளித்து மதுரையின் முகவரியை உலகறியச் செய்து கொண்டிருந்த அவர் எண்ணியிருந்தால் அந்தத் துறையைக் கொண்டே பணம் பண்ணக்கூடிய எழுத்துக்களைப் பதிப்பித்துக் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கலாம்.அவ்வாறு செய்யத் துணியாத தேர்ந்த ரசனையோடு கூடிய கறாரான பதிப்புக் கொள்கை கொண்டிருந்தவர் திரு செல்லப்பன்.

நான் சற்றும் எதிர்பார்த்திராத நிலையில்...திரு செல்லப்பன் அவர்கள் எனக்கு வழங்கிய இரு பெரும் வாய்ப்புக்கள் , வாழ்வின் எந்தத் தருணத்தில் நினைவுகூர்கையிலும் என்னை நெகிழ வைப்பவை. 
ஒன்று....,சிறந்த சிறுகதைகளின் வரிசையான தொகுப்புக்களாக அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்த மணிக்கதைகள் ஐந்தாம் தொகுப்பில் என் சிறுகதை ஒன்றையும் இணைக்கப் போவதாக அவர் எழுதிய கடிதம்..
(மணிக்கதைகள் 5 இல் கலைமகள் மாத இதழில் வெளியான
புதிய பிரவேசங்கள்’என்னும் என் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.)மீனாட்சியின் அரிதான அந்தத் தொகுப்புக்கள் ஒன்றில் என் படைப்பும் இடம் பெற்றிருப்பதைப் பெருமைக்குரிய ஓர் அங்கீகாரமாக இன்றளவும் நன்றியின் நெகிழ்வோடு நான் போற்றிக் கொண்டிருக்கிறேன்.

அடுத்தாற்போலத் திரு செல்லப்பன் அவர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி, நான் கற்பனையிலும் எண்ணிப் பாராதது.
மதுரை ஒய் எம் சி ஏ அரங்கை ஒட்டிய குஜராத்தி சமாஜத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழா நிகழ்வில் - சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக என்னையும் இணைத்துச் சொற்பொழிவாற்றுமாறு அவர் பணித்ததை எனக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச கௌரவமாக நான் எண்ணுகிறேன்.ஜே கே பற்றிய என் எண்ண ஓட்டங்களை உரையாய் ஆக்கி அவர் முன்னிலையிலேயே சமர்ப்பிக்கவும், அவருடன் உரையாடவும் வழி அமைத்துத் தந்த அந்த மணிவிழா மேடை... என்னுள்ளத்தில் என்றென்றும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கிறது.

திரு செல்லப்பனைத் தொடர்ந்து , தானும் நயத்தக்க நாகரிகத்தோடு பழகி எனது நூல்களையும் 
(தடை ஓட்டங்கள்,சிறுகதைத் தொகுப்பு-2001    ,
 பெண் - இலக்கியம் - வாசிப்பு-2001,
 இலக்கிய இலக்குகள்,-2004,      
 தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும்,பெண்ணும்- 2006)
செம்மையான முறையில் அச்சிட்டு வெளியிட்ட பண்பாளர் ,அவரது மகன் திரு முருகப்பன் அவர்கள்.
எத்தனை முறை ’படி’ திருத்த வேண்டுமென்று சொன்னாலும் - நூல் வடிவம்,அட்டை ஆகியன எப்படி அமைய வேண்டுமென்று நான் விரும்பினாலும்,முகம் சற்றும்கோணாமல் அதற்கெல்லாம் ஒத்துழைப்பு நல்கி.,நானும் சக பேராசிரியை ஒருவரும் இணைந்து நடத்திய-அவரது பதிப்பக வாயிலாக வெளியிடப்பட்ட -புத்தக வெளியீட்டு விழாவிற்கு இயன்ற உதவிகளையெல்லாம் செய்து தந்து அவர் துணை நின்றதை எந்நாளும் மறக்க இயலாது.


நூல் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து,அவர்களுக்குச் சேர வேண்டிய ராயல்டி - சன்மானம் போன்றவற்றை அவர்களே மறந்து விட்டாலும் - மறவாமல் குறித்து வைத்துத் தவறாமல் கொடுத்துவிடும் மிகச் சிறந்த நெறியைத் தந்தையின் வழியில் தனயனும் பின் தொடர்ந்து வருகிறார்.இன்றைய பதிப்புலகில் மிகவும் அருகிப் போய்விட்ட பண்பு இது.

என் முனைவர் பட்ட ஆய்வின்போதும்,தொடர்ந்து மாணவர்களுக்குத் தேவையான நூல்களை நாடி வரும்போதும்,இன்று தில்லியில் இருக்கும் நிலையிலும் எந்த நூல் எப்போது வேண்டுமென்று கூறினாலும் முகம் கோணாமல் உதவிக் கரம் நீட்டும் திரு முருகப்பன்,இன்று எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிப் போயிருக்கிறார்.

இன்று அச்சுத் தொழிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்கள் கை கூடியிருக்கலாம்..பல்வேறு பதிப்பகங்கள் பல்கிப் பெருகியிருக்கலாம்.விதம் விதமான செய்நேர்த்தியுடன் கூடிய நூல்கள் வெளிவரலாம்.ஆனாலும் கூட எனக்கென்னவோ மீனாட்சி புத்தக நிலையத்தின் பழைய பதிப்புக்களில்...(ஜெயகாந்தனின் குறு நாவல்கள் மற்றும் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து அவர்களே இன்றைய நவீன பதிப்புக்களாக வெளியிட்டிருந்தாலும்) -  கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...

பொன்விழாக் காணும் மீனாட்சி புத்தக நிலையம் ,தன் பாரம்பரிய உயர் நெறிகளைத் தக்கவைத்துக் கொண்டபடி பதிப்புத் துறையில் உன்னதமான பல சாதனைகளைப் படைக்க வேண்டும்...எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியின் ஆசி அதற்குத் துணை நிற்க வேண்டும் என இந்த இனிய தருணத்தில் மனம் கனிந்து வாழ்த்துகிறேன்.


பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட..susila27@gmail.com





















27.11.10

பெண்ணியம் சில எளிய புரிதல்கள்;கடிதங்கள்

பெண்ணியம் சில எளிய புரிதல்கள் (9பகுதிகள்)என்னும்கட்டுரைத் தொடரின் இறுதியில் எனக்கு வந்த கடிதமும்,என் மறுமொழியும்.

25.11.10

இரு மாற்றங்கள்

இத் தளத்தை இலக்கியத்துக்கும்,சமூகத்துக்கும் மேலும் சற்று  அண்மையாகக் கொண்டு சென்று மேம்படுத்தும் நோக்கில் கீழ்க்காணும் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.


1.இலக்கிய உரையாடல் என்னும் புதுப் பகுதி தனியொரு பக்கமாக அமையவிருக்கிறது.வாசகர்களும் அதில் பங்கு பெற்று இலக்கியப்போக்குகள் குறித்த தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
காழ்ப்புணர்வுகள் தவிர்த்த- மெய்யான இலக்கிய வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆரோக்கியமான விவாதங்களைத் தூண்டும் கருத்துக்கள் வலையில் பதிவாக வெளியிடப்பட்டுத் தொடர் விவாதங்கள் இந்த வலையின் பதிவரால் மட்டுமன்றிப் பிற வாசகர்களாலும் தொடர்ந்து மேலெடுத்துச்செல்லப்படும்.

மேலும் சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம்-(நாவல்,சிறுகதை,கவிதை) வரை வாசகர்களுக்கு ஏற்படும் ஐயங்களையும், நூல்கள் மற்றும் படைப்பாளிகள் குறித்த விவரங்களையும் அறிய விரும்பினாலும் இப் பகுதியில் பதிவு செய்தால் நான் அறிந்துள்ளவரை எனக்குத் தெரிந்த தகவல்களை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.


மின் அஞ்சலின் subject பகுதியில் இலக்கிய உரையாடல் எனக்குறிப்பிட்டு உங்கள் ஐயம்,கேள்விகள் மற்றும் சிந்தனைகளை மின் அஞ்சல் செய்யலாம்.


2.அடுத்த மாற்றம் பின்னூட்டம் பற்றியது.
பெரும்பாலான பின்னூட்டங்கள் ஒற்றை வரிப் பாராட்டுக்களாகவும்,
சில வேளைகளில் ஆழ்ந்த வாசிப்பில்லாதவைகளாகவும் அமைந்து விடுவதால் 
அவற்றைத் தவிர்க்கும் நோக்கில் 
தனிப் பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு மாறாகக் 
குறிப்பிட்ட பதிவுகள் குறித்த கடிதங்களை மட்டுமே இனி இத் தளத்தில் ஏற்க முடிவு செய்திருக்கிறேன்.
கடிதம் வழியாகவும் விவாதங்களை முன்னெடுத்துச்செல்ல முடியுமென்பதாலும்,
பதிவர்-வாசகர் ஆகிய இரு முனை வளர்ச்சிக்கும் இதுவே பயனளிக்க வல்லது என்பதாலும் 
இணைய நண்பர்கள் இதைத் தவறாகக் கொள்ளாமல் தொடர்ந்த தங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பையும்,ஆதரவையும் 
எனக்கு அளிப்பார்கள் என்ற எண்ணத்தில் இம் மாற்றங்களைத் துணிந்து மேற்கொள்கிறேன்.
மின்னஞ்சலிடுவதற்கான முகவரி
susila27@gmail.com
கடிதம் அனுப்புவதற்கான மின் அஞ்சல் முகவரி வலையின் முகப்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடிதம் எழுதும் அன்பர்கள் அதிலேயே தங்கள் வலைத்தள இணைப்பையும் குறிப்பிட்டால் பலரும் பயன் பெற வழி ஏற்படும்.





19.11.10

சென்ற தம்பியும், நின்ற தம்பியும்..

காப்பியக் கவிஞர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு வழங்கும் நீதி துல்லியமானது;எந்த சமரசமும் அற்றது;கறாரானது. தலைமைப் பாத்திரமென்றாலும், துணைப்பாத்திரமென்றாலும், எதிர்நிலைத் தலைவன் என்றாலும் அவரவர்க்கு உரிய இடமும்,மதிப்பும் இலக்கிய அரங்கில் கண்டிப்பாக வழங்கப்பட்டு விடும்.


கம்பனில் ஒரு காட்சி

15.11.10

பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-9)

பெண்மொழியை உடல் மொழியாக்கும் கலகக் குரல்;

பெண்மொழி என்பது பால் சார்ந்த தனி அடையாளங்களை உடையது என்பதும்,’பெண் உடல்,பெண்ணின் பாலியல் உறவு,தாய்மை இவைகளை வெளிப்படுத்தும் மொழியே பெண்மொழி’என்பதுமே சமகாலப் பின் நவீனச் சிந்தனைப்போக்காக உள்ளது.

14.11.10

குற்றமே தண்டனையாக...-தமிழ்மகனின் பதிவு

குற்றமும் தண்டனையும் நாவல் குறித்தும்,எனது மொழிபெயர்ப்பு பற்றியும்'' குற்றமே தண்டனையாக''என்னும் தலைப்பில் தினமணி முதுநிலை உதவி ஆசிரியரும்,சிறந்த நாவல்,மற்றும் அறிவியல் புனைகதைகளை அளித்து வருபவருமான எழுத்தாளர் திரு தமிழ்மகனின் பதிவு,



தமிழ்ஸ்டூடியோ இணைய இதழில் வெளியாகியுள்ளது.
http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_18.php

12.11.10

தலைநகர்தில்லியில்..தமிழ்2010-கருத்தரங்கம்

சம காலத் தமிழின் பலமுனை வளர்ச்சிப் போக்குகளைக் கருத்தில்கொண்டு,
தமிழ் 2010 
என்னும் 
இலக்கியக் கருத்தரங்கை
டிச.10,11,12 ஆகிய நாட்களில்மிகச்சிறப்பாக நிகழ்த்த
தில்லித் தமிழ்ச்சங்கம் திட்டமிட்டுள்ளது.

எழுத்தாளர்களும்,விமரிசகர்களும்,நாடக மற்றும் ஊடகவியலாளர்களும்
(நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் , கவிஞர் சிற்பி , கவிஞர் முத்துலிங்கம் ,
கவிஞர் கலாப்ரியா , பேராசிரியர் ப்ரேம், வெளி ரங்கராஜன் ,இமையம்,அம்பை, 
லிங்க்ஸ்மைல் வித்யா , காந்தளகம் சச்சிதானந்தன் ,அமரந்தா ,தியடோர் பாஸ்கரன் , 
ரவி சுப்பிரமணியன், பத்ரி சேஷாத்திரி , 
பேராசிரியர் சிவப்பிரகாஷ்,சந்திரபோஸ்முதலியோர்)
பங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றும் நான்கு அமர்வுகள்,
50ஆண்டுக்காலப் புனைவிலக்கியம்,
கவிதை இலக்கியம்,
கணினித் தமிழ்,
பிறமொழிகளில் தமிழ்,
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம்,
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்,
நாடக-ஊடகத்தமிழ்
எனப் பல அமர்வுகளாக நடைபெறவிருக்கின்றன.

10.11.10

வலை முகவரி மாற்றம்

நண்பர்களுக்கு,
இந்த வலைப் பதிவு முகவரியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது வரை,
masusila.blogspot.com
என்னும் முகவரியில் இயங்கி வந்த இத் தளம்,தொடர்ந்த சில நாட்களில்,
masusila.com
என்னும்முகவரியில் இயங்கும்.
தொடர்ந்த தங்கள் கருத்துரைகளையும்,ஆதரவையும் நாடுகிறேன்.

8.11.10

பெண்மொழி(பெண்ணியம் சில எளிய புரிதல்கள்-8)

நவீனப் பெண் கவிதைகளில் பெண்மொழி அமைந்துளள தன்மையை மூன்று வகைப் போக்குகளாய்ப் பகுத்துக் காணலாம்.

-மரபு சார்ந்த நெருக்குதல் தாங்க முடியாமலிருப்பதை ஆற்றாமையாய்,வலியாய்-சில வேளைகளில் விமரிசனமாய் வெளிப்படுத்தல்.
-மரபுச் சிறையிலிருந்து வெளிப்பட்டாக வேண்டுமென எழுச்சி கொள்ளல்
-பெண்மொழியை உடல்மொழியாக்கி அதன் வழி எழுப்பும் கலகக் குரல்.

7.11.10

நன்றி தமிழ்மணம்...!

கடந்த ஒரு வாரமாக என்னைத் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக்கி என் பதிவுகளைக் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக வெளியிட்ட தமிழ்மணத்துக்கு என் நன்றி..
குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் என் வலைக்கான வருகை சராசரி எட்டு முதல் பத்து மடங்கு கூடியதும்,வழக்கமான வாசகர்களோடு புதுப்புது வாசகர்கள் வாய்த்ததும் எனக்குக்கிளர்ச்சியூட்டும் அனுபவங்களாக அமைந்தன.
அத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய தமிழ்மண அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக் கூறி வரவேற்றதோடு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து தொடர்ந்து பல விவாதங்களை மேலெடுத்துச் சென்ற வலை வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி


6.11.10

ஈஃபில் கோபுரம்.- பாரீஸின் அடையாளம்(?!)


'இரவு வேளையில் பாரீஸின் இளவரசி,
பகற்பொழுதிலோ பாரீஸின் ராட்சசி’’
- பாரீஸ் நகர வாசிகளிடையே மிகவும் பிரபலமானது ஈபில் கோபுரம் பற்றிய இந்த வாசகம்

பொம்பளை வண்டி..

மகளிர் மட்டும்...

காதுச் சவ்வே கிழிஞ்சு போயிடற மாதிரி இரைச்சலோட..கல்யாண வீட்டு ‘ஸ்பீக்கர்’பொட்டியிலேயிருந்து அலறிக்கிட்டிருந்த முக்கல் முனகல் சினிமாப்பாட்டுக்குப் பொடிசுகள் போட்டுக்கிட்டிருந்த கும்மாளம்,பிரியாணிச் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக்கிட்டே பொண்ணு மாப்பிள்ளையைக் கலாட்டா பண்ணிக்கிட்டிருந்த பொம்பளைங்களோட கலகலப்பு,அவங்க உடுத்திக்கிட்டிருந்த சரிகைச் சேலையெல்லாம் கூட்ட நெரிசலிலே கசங்கிப்போய் உச்சி வெயில் வேக்காட்டிலே வெளிப்படுத்திக்கிட்டிருந்த குமட்டலெடுக்கிற வேர்வை நாத்தம்...இதுங்களுக்கெல்லாம் மத்தியிலே - இதுங்களோட கூடவே ஈஸ்வரியும் இருந்தாலும்...காலையிலே புருஷன் கிட்டே வாங்கின ‘எத்து’ ,அவளோட அடிவயத்திலே பாறையாக் கனத்துக்கிட்டுத்தான் இருந்தது.

5.11.10

சின்னக் கண்ணன் அழைக்கிறான்....

(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )
தமிழில் பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகையின் முறைப்படுத்தப்பட்ட வருகை 12ஆம் நூற்றாண்டை ஒட்டியதாயினும்,ஆழ்வார் பாடல்களில்-குறிப்பாகப் பெரியாழ்வாரின் பாசுரங்களில் அதற்கான அடித்தளம் வலுவாக அமைந்திருக்கிறது.

ஜெயமோகனின் ’டார்த்தீனியம்’

(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு )
யதார்த்தச் சித்தரிப்பும், அதீதக் கற்பனையின் அழகியல் புனைவுமாய் மாறி மாறிச் சஞ்சாரம் செய்யும் குறிப்பிடத்தக்க ஒரு குறு நாவல், ஜெயமோகனின் டார்த்தீனியம்’.

3.11.10

’சக்ராதா’வின் மலை மடிப்புகளில்...

சக்ராதா மலைத் தொடர்களுக்குக்குள் மேற்கொண்ட 
பயணத்தின்போது நான் எடுத்த சில புகைப்படங்கள்...,இணைய வாசகர்களின் பார்வைக்கு.

மலையும்,மலை சார்ந்த இடமும் என்று தமிழ்க் குறிஞ்சி சொல்லும் மலைத் தொடர்கள் திகட்டாத பல ஆனந்தக் காட்சிகளை உள்ளடக்கி வைத்திருப்பவை.
ஒவ்வொரு நிலப் பகுதியில் இருக்கும் மலைகளுக்கும் ஒவ்வொரு முகங்கள் உண்டு.
தேராதூனுக்கு மேல் மட்டத்தில் இமையம் தொடங்கும் இடத்தில்-சக்ராதா என்னுமிடத்தில் உள்ள இம் மலைத் தொடர்கள் ஈரம் பட்ட மண் செறிந்து இறுகிப் போனவை.எளிதில் இளகிக் கரையக் கூடியவை.
மலைத் தொடர்களை ’அடுக்கம்’ என்ற சொல்லால் குறிப்பிடும் சங்கப்புலவனின் நுண்ணிய அவதானிப்பு எத்தனை துல்லியமானது என்பதற்கு,ஒன்றுக்குள் ஒன்று உட்செறிந்தபடி..அடுக்கப்பட்டது போலக் காட்சி தரும் இம் மலை அமைப்பே சாட்சியம் கூறுகிறது.
மானுட முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்...இயற்கை வழங்கும் இன்பம்
இணையற்ற இன்பம்தானே?.






LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....