துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.12.10

தமிழ்/2010-ஒரு கடிதமும் சில பார்வைகளும்

தில்லி தமிழ்ச்சங்கத்தில் டிச.10.11,12 நடந்து முடிந்த தமிழ்2010 கருத்தரங்கிற்குப் பின்பு தில்லி நண்பரும் பதிவருமான திரு கலாநேசன் கீழ்க்காணும் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
.............................................................................
வணக்கம் அம்மா,
இன்று நீங்கள் நெறியாளுகை செய்த கருத்தரங்கில் கலந்துகொண்டதில்

மகிழ்கிறேன். நாவல் இலக்கியம் பற்றிய திரு நாஞ்சில் நாடன் அவர்களின் நக்கல் மற்றும் சுய எள்ளல் கலந்த கருத்துச் செறிவுமிக்க கட்டுரை என்னை மிகக் கவர்ந்தது. 
திரு எஸ்.ராமகிருஷ்ணன் வராதது எனக்கு ஏமாற்றம் அளித்தது. மதியம்  நடந்த கவிதை இலக்கியம் பற்றிய இரண்டாம் அமர்வும் மிகப் பயனுள்ளதாய் இருந்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் மூன்றாம் தலைமுறையையும் முகம் மலரச் செய்து நிகழ்த்திய உரை இனிமையிலும் இனிமை.
சரி, விசயத்திற்கு வருகிறேன்.
1 ) சுஜாதா, பாலகுமாரன் போன்ற சமகால எழுத்தாளர்களை 50 ஆண்டு கால நாவல் எழுத்தாளர்களில் நாஞ்சிலார் ஏன் கணக்கில் கொள்ளவில்லை?
2  ) மரபுக் கவிதை , புதுக் கவிதை என்று பேசுகையில் கட்டுரையாளர்கள் சுரதாவில் இருந்து கல்யாண்ஜிக்கு ஏன் தாவுகிறார்கள்? வாலி, வைரமுத்து, மேத்தா எழுதியதெல்லாம் கவிதைகளே இல்லையா?
 அப்படியெனில் வெகுஜன இலக்கியம் விருது இலக்கியம் என இரு வேறு இலக்கியங்கள் தமிழில் உள்ளனவா?
3  ) கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் தமது கட்டுரையில் "சமகால இலக்கியத்தில் இருண்மைக் கவிதைகளே இல்லை" என்று குறிப்பிட்டார். இருண்மைக் கவிதைகள் என்றால் என்னவென்று விளக்குங்கள். (இந்த சொல்லாடல் எனக்குப் புதிது
).
.................................................................................................................................................
கருத்தரங்கம் முடிந்ததும் எனது தமிழகப் பயணம் அமைந்து விட்டதால் மேற்குறித்த அஞ்சலுக்கு உடன் பதிலளிக்க முடியவில்லை.
கலாநேசனுக்குப் பதிலளிக்கும் அதே வேளையில் தமிழ்2010 பற்றிய எனது சில பார்வைகளையும் அதனோடு ஒருங்கிணைத்துக் கூற முற்பட்டிருக்கிறேன்.
தமிழ் இலக்கியத்தில் கூர்மையான பயிற்சியும் ஆர்வமும் ஆழமும் கொண்ட படைப்பாளிகள் ,திறனாய்வாளர்கள் ,ஆர்வலர்கள் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியத் தலைநகரை அணி செய்திருகிறார்கள்.
’பொய்த்தேவு’முதலிய சிறந்தநாவல்களை அளித்தவரும் மொழிபெயர்ப்பாளரும்,கறாரான விமரிசகருமான க.நா.சுப்ரமண்யம்,
‘பாலையும் வாழையும்’முதலிய திறனாய்வு நூல்களை உருவாக்கிய வெங்கட் சாமிநாதன், 
எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா,வாஸந்தி எனப் பலரும் இங்கிருந்தபடி தீவிரத் தமிழ் இலக்கியத்திற்கு ஆக்கம் சேர்த்தவர்களே.
சி.சு. செல்லப்பா முதலிய இலக்கிய முன்னோடிகளுடன் நெருங்கிப் பழகியவரும் நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம்கொண்டவருமான திரு யதார்த்தா பென்னேஸ்வரன் எத்தனையோ சிக்கல்களுக்கும்,போராட்டங்களுக்கும் இடையே ‘வடக்கு வாசல்’என்னும் இலக்கிய இதழை விடாப்பிடியாய் தில்லியில் இருந்தபடி நடத்தி வருவதற்கு ஆத்மார்த்தமான இலக்கியப் பற்றைத் தவிர வேறு காரணங்கள் ஏதும் இருக்க முடியாது.
மூத்த பத்திரிகையாளர் ராஜாமணி,’புலிநகக் கொன்றை’நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன்,ஆனந்தம் கிருஷ்ணமூர்த்திதம்பதியர்,புலவர் விஸ்வநாதன் எனத்தமிழிலக்கியத் துறையில் தம்மால் இயன்றதைச் செய்யும் கூட்டம் இன்னமும் இங்குண்டு.
(வேறு பெயர்கள் விடுபட்டிருந்தால்-குறிப்பான காரணம் ஏதுமில்லை என ஏற்று மன்னியுங்கள்)

வலுவான இத்தனை பின்புலம் இருந்தபோதும் இன்றைய சூழலில் தீவிர இலக்கிய ஆர்வமும்,வாசிப்பும்,ஈடுபாடும் கொண்டவர்களின் எண்ணிக்கை தலைநகர் தில்லியில் எவ்வளவு இருக்கிறது என்று பாசாங்குகள் இன்றிக் கணக்குப் போட்டுப் பார்த்தால் நமக்கு ஆயாசம்தான் மிஞ்சும்.
இது தில்லியில் மட்டும் உள்ள குறைபாடு இல்லை;ஊடகப் பெருக்கத்தால் வாசிப்புப்பழக்கம்குறைந்து போனது ஒட்டு மொத்தத் தமிழகச் சூழலுக்கும் பொருத்தமானதுதான் என்றாலும் சதவிகித அடிப்படையிலும்,இங்குள்ள வாழ்க்கைச் சூழலை வைத்துப் பார்க்கும்போதும் இந்தக் குறைபாட்டின் அளவு இங்கே சற்று அதிகம்தான்.
பொதுவாகத் தமிழ்ச் சூழலிலிருந்து விலகியிருக்கும்போது அதன் மீதான நாட்டம் அதிகரிப்பது இயல்புதான் என்றாலும் 
தமிழ் என்ற பெயரில் 
கேலிக்கூத்தான பட்டிமன்றங்கள்,
ஒரு சில சொற்பொழிவுகள் (அவற்றிலும் மிகப் பல நீர்த்துப் போனவை,பழைய செய்திகளையே அரைத்துஅரைத்து ஊசல் வாடை வீசுபவை)
நான்காம் தர நகைச்சுவை நாடகங்கள் 
தொலைக்காட்சிப் பிரபலங்களின் மேடையேற்றங்கள்
அத்தி பூத்தாற்போல அபூர்வமாகச் சில தரமான இலக்கியப் பேச்சுக்கள்,இசை நிகழ்வுகள்
 ஆகியவை மட்டுமே தமிழ் என்ற பெயரில் -தமிழ்ச்சங்கம் போன்ற பொது அரங்குகளில் பலகாலம் பரிமாறப்பட்டு வந்திருக்கும் நிலையில் 
குருடனுக்கு வாய்த்த ராஜ பார்வையாக அரிதாக அமைந்தது..இந்தத் 
தமிழ் 2010 கருத்தரங்கம்.
பார்வையாளர் எண்ணிக்கை குறைவென்றாலும்,ஓரிரு மாதங்களாக நடந்து வந்த ஏற்பாடுகளும்,அறிவிப்புப் பலகைகளும் 
இலக்கிய நாட்டமே இல்லாத தில்லித் தமிழனைக்கூடக் கொஞ்சம் உலுக்கி எழுப்பித்
தற்காலத் தமிழ் எந்தெந்த திசைகளிலெல்லாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது 
என்பதை ஓரளவாவது பார்க்க வைத்து விட்டது என்பதே முதல் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.
இதை ஏற்பாடு செய்தவர்களின் அசாத்தியமான தன்னம்பிக்கை உண்மையிலேயே போற்றுதலுக்கு உரியதுதான்.

இனி..அடுத்த கட்டம்.
பொழுதுபோக்கு எழுத்துக்களை மட்டுமே அறிந்து - அதையே தமிழ் இலக்கியம் என்று கருதி வரும் சாராருக்கும் இந்தக் கருத்தரங்கினால் பல புதிய தகவல்களும்,எதிர்பாராத அதிர்ச்சிகளும் நேர்ந்திருக்கலாம்.அதுவும் இந்நிகழ்வினால் விளைந்த நன்மையே.
.திரு கலாநேசனின் வினா இந்தத் தளத்திலேதான் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
அவர் மட்டுமல்லாமல் அரங்கிலேயே மிகப்பலர் அவ்வாறான கேள்விகளோடும்,மனப்போக்கோடும் இருந்ததைக் காண முடிந்தது.
எழுதப்படுபவை எல்லாமே இலக்கியமாகி விடுவதில்லை என்பதும்,அதில் சில தரங்கள் தகுதிகள் எதிர்பார்க்கப்பட்டு அவையே காலத்தை வென்று நிற்கும் தகுதி படைத்தவையாகின்றன என்பதும் எல்லா நாடுகளிலும்,மொழிகளிலும் கையாளப்பட்டு வரும் அளவுகோல்கள்தான்.
வெகுஜன எழுத்துக்கு மிகுதியாகப் பரிச்சயப்பட்டுப் போனதால் சுஜாதா,பாலகுமாரன்,வாலி,வைரமுத்து முதலிய விடுபடல்கள் பலருக்கு ஆச்சரியத்தையும்,வருத்ததையும் கூட அளித்திருக்கும் என்பதும் எதிர்பார்க்கக் கூடியதுதான்.
வெகுஜன எழுத்து ,விருது எழுத்து என்றெல்லாம் பாகுபடுத்திப் பிரித்து எவரும் எழுதுவதில்லை.
வெகுஜனங்களைக் கவரும் எழுத்துக்கு உண்மையில் இலக்கியத் தகுதி இருந்தால் அவற்றை அங்கீகரிப்பதில் தவறும் இல்லை.
ஜெயகாந்தன் வெகுஜன இதழில் எழுதினாலும் அவரது பல நூல்கள் இலக்கியத் தகுதி பெற்றவை.
சுஜாதாவின் ஒரு சில சிறுகதைகள் பாலகுமாரனின் தொடக்க கட்ட எழுத்துக்கள் ஆகியவை ஓரளவு இலக்கியத் தகுதி கொண்டிருந்தன.பிறகு வணிகச் சூழலில் அவை கரைந்து காணாமல்போயின.
வாலி,வைரமுத்து முதலியோரின் முழு நோக்கம் எழுத்து வர்த்தகம் தவிர வேறு எதுவுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இக் காரணத்தினாலேதான் மெய்யான இலக்கியத் தேடலை மட்டும் முன்னிறுத்தும் விமரிசகர்கள்,கட்டுரையாளர்கள் இவர்களைப் புறந்தள்ளுகிறார்கள்.

கலாநேசனின் அடுத்த வினா கவிதையில் இருண்மை குறித்தது.
கவிதைக் களத்தில் தனிமனிதவாதம் மேலோங்கிய நிலையில் கிளைத்த கூறு இது.
கவிஞன் சொல்ல வருவது மிக மிக மறை பொருளாக...எந்த அர்த்தத் தளத்திலே அது சொல்லப்பட்டிருக்கிறது என்பது நேரடி வாசிப்பில் விளங்காமல் அடுத்தடுத்த வாசிப்புக்களில் வெவெவ்வேறு விதமாக வெளிச்சமாகிக்கொண்டே வரும் நிலை இது.
//இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும்
வாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக
நடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம் ;
கவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல்
இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை
உடையது இது//
http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031554.htm
என்ற கருத்தையும் இத்துடன் சேர்த்துப்பார்க்கலாம்.
இருண்மையை ஏற்போர்,மறுதலிப்போர் என இரு சாராரும்கவிதைக்களத்தில் உண்டு.

இனி தமிழ் 2010இல் என்னை ஈர்த்தவை..
நாஞ்சில் நாடனின் தமிழ்நாவல் பற்றிய விரிவான  அலசல்,
தன்னால் நேரில்கலந்து கொள்ள முடியாத நிலையிலும் மிகுந்த சிரத்தையோடு தமிழ்ச்சிறுகதைகளின் தற்காலப் போக்குகளை வகைப்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன் அனுப்பியிருந்த கட்டுரை,
நாவலாசிரியர் இமையம் தலித் இலக்கியம்பற்றி முன் வைத்த நிராகரிக்க முடியாத சில கேள்விகள்,
நேரம் குறைவாகத் தரப்பட்டாலும் அழுத்தமான பெண்ணியச் செய்திகள் பலவற்றை முன் வைத்த அம்பையின் பேச்சு,
 கவிஞர் விக்கிரமாதித்தனின் பொருள்வயின் பிரிவு கவிதையை அற்புதமாய் இசைத்த ரவிசுப்பிரமணியனின் இசை மற்றும் ஊடகங்கள் முன்னிறுத்தும் கருத்தியல் ஆதிக்கங்கள் பற்றிய காலத்துக்கேற்ற அவரது கட்டுரை
காந்தளகத்தின் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சூழலையும்,தமிழை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் மடிக்கணினி மூலம் திரையில் காட்டிவிளக்கிய பாங்கு 
பத்ரி சேஷாத்ரி அவர்கள் எழுத்துரு தரப்படுத்தல் பற்றி வழங்கிய பயனுள்ள யோசனைகள்...

இவை தவிரப் பிற அமர்வுகளும் கட்டுரைகளும் கூடச் சிறப்பானவைதான் என்றாலும் நடந்தவற்றை என் பார்வையில் மேற்குறித்தவாறு வரிசைப்படுத்தியிருக்கிறேன்..
பிரேம்,சிற்பி கட்டுரைகளின் நீளம் பார்வையாளர்களைச் சற்றே சோதித்தது.
பிற கட்டுரைகளை விடவும் தியோடார் பாஸ்கரனின் திரைப்படம் சார்ந்த கட்டுரைக்கே கேள்விகள் மிகுதியாக வந்ததையும்,திரைப்பட்ப் பாடலாசிரியர் முத்துலிங்கத்தின் சினிமா துணுக்குச் செய்திகளுடன் கூடிய நகைச்சுவைக்கட்டுரை பெற்ற பெருத்த வரவேற்பையும் கண்டபோது,திரைப்பட ஊடகத்தைப் போல இலக்கியம் என்றுதான் பரவலான செல்வாக்குப் பெறப்போகிறதோஎன்ற ஏக்கம் மனதுக்குள் நெருடலாய்....

 ஏழு அமர்வுகளின் எல்லாக் கட்டுரைகளும் அருமையான நூலாக்கப்பட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களால் கருத்தரங்க நிறைவு விழாவின்போதே வெளியிடப்பட்டு விற்பனைக்கும் வந்து விட்ட வேகம் தமிழ்ச்சங்கக் கருத்தரங்க அமைப்பாளர்களின் ஊக்கத்துடிப்பிற்கு மிகச் சிறந்த உதாரணம்.




3 கருத்துகள் :

Unknown சொன்னது…

அம்மா,
தங்களது பத்தியை வாசித்தேன். கலாநேசன் அவர்களின் கேள்வியை ஒரு தளத்தில் வைத்து பார்க்கும்போது சரியாகப் பட்டாலும், இலக்கியத்தை இலக்கியமாக படைக்காமல் அவற்றை வர்த்தக ரீதியில் பயன் படுத்தும் படைப்பாளிகளின் படைப்புகள் தனது வலிமையை இழந்து விடுகிறது.
தீவிர வாசிப்பும் , இலக்கிய ஈடுபாடும் உள்ள எழுத்தாளர்கள் வர்த்தக ரீதியில் செயல்படும் எழுத்தாளர்களின் படைப்புகளை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதை நாம் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது என் எண்ணம் .

ஏனெனில் சினிமா என்ற ஊடகத்தில் அத்தகைய எழுத்தாளர்களைப் பற்றி தேவைக்கு அதிகமாகவே மக்களிடம் செய்திகள் சென்றுள்ள காரணத்தினால் இலக்கிய கருத்தரங்கங்களில் அவர்களைப் பற்றி பேசுவதை தவிர்த்து, வாழ்க்கையையே இலக்கியத்திற்காக செயல் படுத்தும், ஊடக அடையாளம் அற்ற நல்ல படைப்பாளிகளை முன் நிறுத்தி பேசுவதுதான் ஞாயமான செயலாக எனக்குப் படுகிறது.

அன்புடன்
தேவராஜ் விட்டலன்

அப்பாதுரை சொன்னது…

இது தான் இலக்கியம் என்று சுட்டிக்காட்ட முடியாத வரையில் இலக்கியப் போலீசாவதற்கும் இது தான் தகுதி என்று சொல்ல முடியாது போகிறது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற காரணத்தினாலேயே இலக்கியவட்டத்தின் கதவு சில படைப்பாளிகளுக்கு மூடப்பட்டு விடுகிறது என்றே தோன்றுகிறது.

இருண்மை - எத்தனை அழகான சொல்! புதிதாகக் கற்றுக் கொண்டேன். நன்றி.

ஆழமான கேள்விகளுக்கு அருமையான பதில்கள். இருந்தாலும் சுஜாதா போன்றோரை ஏன் ஒதுக்கினார்கள் என்பதற்கு convincing விளக்கம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. once in for all என இல்லாவிட்டாலும் அடுத்த பத்து ஆண்டுகளுக்காகவாவது இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்டியிருக்கலாம்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு அப்பாதுரை,
விட்டலன் சொல்வதைக் கொஞ்சம் பாருங்கள்.
சி.சு செல்லப்பா,அசோகமித்திரன் போன்றோர் வாழ்க்கையை இலக்கியமாக மட்டுமே வைத்திருந்தவர்கள்.
சுஜாதாவுக்கு இலக்கியம் தெரியும்;நல்லிலக்கியத்தை இனம் காட்டவும் தெரியும்;அவர் வழி பிறரும் கூட இலக்கியத்தைக் கற்றுக் கொள்ள முடிந்தது.
ஆனாலும் அவரது நோக்கங்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தன.
தீவிர இலக்கியத்தில் மட்டுமே (அவரால் எழுத முடியுமென்றாலும்)அவர் பதித்திருக்கும் சுவடுகள் மிகக்குறைவுதான்.
அப்படிப்பட்ட ஒரு படைப்பாளி முழுமையாக இலக்கியத்துக்கு மட்டுமே கிடைக்க முடியாமல்..வர்த்தக உலகம் அவரை விழுங்கி விட்டது நமக்கும் பெருத்த நஷ்டம்தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....