துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
சங்கக்காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கக்காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.10.14

வேர்ப்பலா...கிளைப்பலா


[சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-தொடர்]

மலை சார்ந்த குறிஞ்சிநிலப்பகுதி , பலவகையான பலாக்களின் தாய்வீடு.
 மர உச்சியிலிருந்து மிகச் சிறிய கிளையில் தொங்கும் பலாப்பழங்களும் அங்கே உண்டு. மரத்தின் அடித் தூரில் மண்ணில் கிடந்தபடி பழுத்துக் கிடக்கும் வேர்ப்பலாக்களையும் அங்கே பார்க்க முடியும்.
பலாவின் வெவ்வேறு ரகங்களை வெறுமே உண்டு ரசிப்பதோடு ஒரு கவிஞனின் உள்ளம் நிறைவு பெற்று விடுவதில்லை. தன் கவிதையின் சாரத்தையே வேறுபட்ட அந்தப் பலாக் கனிகளுக்குள் பொருத்திப் பார்க்கத் துடிக்கிறது அவன் நெஞ்சம்.

தனது மலை நாட்டுக்குப் பக்கத்திலுள்ளமற்றொரு மலை நாட்டுக்காரனைக் காதலிக்கிறாள் ஒரு தலைவி.
இருவர் உள்ளங்களும் முழுமையாகக் கலந்து நெருங்கிய பிறகும் திருமணத்தை மட்டும் விரைவாகப் பேசி முடிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான் தலைவன்.
அவனை விரைவுபடுத்துவதற்காக ஓர் உத்தியைக் கையாளுகிறாள் தோழி.

தலைவனின் நாடு,தலைவியின் ஊர் இரண்டிலுமே பலாக்கள் உண்டென்றபோதும், தலைவன் நாட்டிலுள்ள கனிகள் பெரும்பாலும் வேரில் பழுப்பவை ; மேலும் அந்தக் கனி மரங்களைச் சுற்றிலும் மூங்கிலால் செய்யப்பட்ட படல் /வேலி வேறு போடப்பட்டிருக்கிறது.

தலைவியின் ஊரில் பழுக்கும் பலவுகளோ கொம்பில் பழுப்பவை ; அந்த மரங்களுக்கு வேலிகளும் இல்லை.
சிறுகோட்டுப் பெரும்பழம்

இந்த வேறுபாட்டை எடுத்துக் காட்டி ஓர் உண்மையை அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறாள் தோழி.
தலைவியின் உள்ளம் ....உயிர் ஆகியவை , அவள் கொண்டிருக்கும் மிகப் பெரிய காதலின் பாரம் தாங்காமல்....சிறியதொரு கிளையில் தொங்கும் பெரும்பழம் போலத்துடித்துக் கொண்டிருக்கின்றன. எந்த வினாடியும் கிளை இற்றுப் போய்ப் பழம் விழுந்து விடலாம் என்பது போலக் காதலின் வேதனையும்  அவளை மாய்த்து விடக் கூடும்.
மேலும் அவள் நாட்டுப் பலவுக்கு வேலியில்லை என்பதால் வேறு எவராவது அவளைத் திருமணம் என்ற பெயரில் கவர்ந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்ற குறிப்பான ஒரு பொருளையும் இதற்குள் பொதிந்து வைக்கிறாள் தோழி.


தலைவனோ வேர்ப்பலாவுக்கேபழகிப் போனவன் ; அது கிளையிலிருந்து விழும் சேதாரம் பற்றி அவனுக்கு அதிகம் தெரியாது.
அத்தோடு அவன் நாட்டுப் பலாவுக்கு மூங்கில் வேலியும் கூடவே இருப்பதால் அதைப் பிறர் கவர்ந்து செல்லும் அபாயம் பற்றியும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இக்கருத்தை வைத்தே அவனைத் திருமணத்துக்கு விரைவில் ஆயத்தமாகும்படி தூண்டுகிறது கபிலரின் குறுந்தொகைப்பாடல்.
 ''மூங்கிலை வேலியாகக் கொண்ட வேர்ப் பலாக்கள் பழுக்கும் சாரல் நாடனே
  சற்று விழிப்பாய் இருந்து கொள் !
  நடக்கப் போவது என்னவென்று எவருக்குத் தெரியும் ?
  மலைச் சாரலிலுள்ள பலா மரங்களில்
  சின்னஞ்சிறு கொம்புகளில் பெரிய பெரிய பழங்கள் தொங்கியபடி
  எப்போது விழுமோ என ஊசலாடிக் கொண்டிருக்கின்றன
  அது போலத்தான் உன் தலைவியும்....
  சிறு கோட்டுப் பெரும்பழம் போல
  அவள் உயிர் மிகச் சிறியது...
  ஆனால் அவள் உன் மேல் கொண்டுள்ள அன்போ மிகப் பெரிது’


 ‘’வேரல் வேலி வேர்க்கோட்பலவின் 
    சாரல் நாட செவ்வியை ஆகுமதி
    யாரதறிந்திசினோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு
    இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’’
என்னும் இச் சிறிய பாடலுக்குள் இயற்கையோடு ஒருங்கிணைத்தபடி வாழ்வியலையே கற்பித்துவிடுகிறான் புலவன்.


10.6.11

காதல்..நீர்..நெருப்பு...


நீரின் குளிர்ச்சி..தீயின் தகிப்பு ஆகிய இரண்டும் அவற்றை நாம் உணரும்போது மட்டுமே உறைக்கும்.
அவற்றிடமிருந்து நீங்கியதுமே அவ்வெம்மையும்,தண்மையும் நம்மிடமிருந்து விலகிப் போய்விடும்;அதுவே உலக இயற்கை.


13.2.11

காதல்...கசப்பதுண்டு !


’’காதலோ...பொருளோ...வேலையோ..பதவியோ எதுவானாலும் அடைந்து முடிந்தபின் அவற்றின் கவர்ச்சி குன்றித்தான் போய்விடுகிறது....’’

5.12.10

’உன்னை விட்டால் யாருமில்லை..’

சங்க இலக்கியத்தைப் பொறுத்த வரை தோழியின் பாத்திரம் என்பது ,
ஒரு இலக்கிய மரபாக...
தலைவியால் வெளியிட முடியாத உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் ஒரு வடிகாலைப் போலவே

17.9.10

உலைக்களமாகும் உள்ளம்...

சங்கப் பாடல்களிலுள்ள பல உவமைகள் அரிதானவை;அபூர்வமானவை.
கவிஞனின் வலிந்த முயற்சி எதுவுமின்றி இயல்பான வாழ்க்கைத் தளத்திலிருந்து தன்னிச்சையாக ஜனித்து வருபவை.


கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப் பாடல் ஒன்று.
திருமணத்துக்காகப் பொருள் தேடப் பிரிந்திருக்கிறான் தலைவன்.
(அவனது பிரிவுக்குப் பிற காரணங்களும் இருக்கக் கூடும்;இது உரையாசிரியர்கள் கூறும் காரணம் மட்டுமே)
’காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் காதல்’துயரமும் அதன் தனிமை ஏக்கமும் தலைவியை வாட்டியெடுக்கின்றன.

22.7.10

தீராக் காதலன்

முல்லை நிலக் காட்டுப் பகுதி.
போர் நிமித்தம் மாதக் கணக்கில் பாசறையில் தங்கியிருந்த தலைவன் தலைவியைக் காணும் தீராத தாகத்துடன் தேரில் விரைவாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.
தேர்ப் பாகன் எவ்வளவு வேகமாகத் தேரைச் செலுத்தினாலும் காதல் பித்தேறியிருக்கும் தலைவனுக்கு அது போதுமானதாக இல்லை.

தேரையும்,
அது கடந்துபோக வேண்டிய தொலைவையும் தாண்டிக் கொண்டு,அவற்றின் வேகத்தையெல்லாம் மிஞ்சிக் கொண்டு அவன் உள்ளம் எப்போதோ தலைவியிடம்...அவள் புழங்கும் வீட்டு முற்றத்திடம் சென்று சேர்ந்து விட்டது.
ஆனாலும் கண்குளிர அவளை நேரில் காணும் ஆர்வத்தில் தேரை விரைவாக முடுக்குமாறு தேர்ப்பாகனைப் பணிக்கிறான் அவன்.

மோடி கிறுக்கி மோகம் தலைக்கேறிய அந்த மன நிலையிலும் கூடச் சமநிலை தடுமாறாமல்
சக ஜீவ ராசிகளைப்பற்றி ,
கானுயிர்களைப் பற்றி ,
அவற்றின் காதலைப் பற்றிக் கவலையும்,கரிசனமும் கொள்கிறது அந்தக்காதலனின் உள்ளம்.

தேரோட்டத்தின் வீரியமான வேகத்தில் அதில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஓசையுடன் சப்திக்கும் ;
புதர்களிலும்,பொந்துகளிலும்,மரக் கிளைகளிலும் கிடந்தபடி காட்டுயிர்கள் உறங்கிக் கொண்டிருக்கலாம் ;
இரை தேடுவதில் அவை மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கலாம்;
தாய்ப் பறவைகள் குஞ்சுகளுக்கு இரையூட்டிக் கொண்டிருக்கலாம்;
காட்டுப் பறவைகளும்,விலங்குகளும் தங்கள் ஜோடிகளுடன் இணைந்து காதல் விளையாட்டிலும் கூட ஈடுபட்டிருக்கலாம்.
தனது தேரின் உரத்த மணியோசை அவற்றின் ஏகாந்த இனிமைக்கு இடைஞ்சலாக இருப்பதை உயிர் நேயம் கொண்ட அந்த உன்னத மனிதனால்.., காமவெறி தவிர்த்த மெய்யான அந்தக் காதலனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தேரைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு மணியின் நாவை இறுகக் கட்டிவிட்டுப் பிறகு தேரைச் செலுத்துமாறு பாகனைப் பணிக்கிறான் அவன்.

தன்னுடைய காதலியை விரைவாகச் சென்று காணவும் வேண்டும் ;
ஆனால் அதற்காகக் காட்டின் அமைதியான நிசப்த சௌந்தரியத்தைக் குலைத்துப் போடவும் தனக்கு உரிமையில்லை என்ற உள்ளார்ந்த உணர்வே இச் செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது.

‘’தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
  மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்....’’


(பூக்களின் மகரந்தத் தேனை நுகர்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்கள் மணியோசையின் உரத்த ஒலி கேட்டு ப் பயந்து ஒடுங்கிவிடும் பாவச் செயலைப் புரிவதற்கு அஞ்சித் தன் தேர் மணியின் நாவை இறுகக் கட்டச் செய்த மாட்சிமை படைத்த தலைவன்)
என மாண் வினைத் தேரனாக .....செயற்கரிய செயலைச் செய்ததொரு உன்னத மனிதனாக அவனை உச்சத்தில் தூக்கி வைக்கிறது....மெய்யாகவே இயற்கையைக் கொண்டாடும் சங்க இலக்கியம்.

சங்க காலம் வெறும் இலக்கிய அழகியலுக்காக இயற்கையை நேசிப்பது போலக் காட்டிக்கொண்ட இலக்கியமில்லை.
சங்க மனிதர்கள்...சங்கக் கவிகள் இயற்கையோடு பின்னிப் பிணைந்து இயற்கையையே சுவாசித்து வாழ்ந்தவர்கள்.

இன்று....இயற்கை ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள்;
’இயற்கையைக் காப்போம்’என்ற கோஷங்களும் வலுவாக முழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் மற்றொரு புறத்திலோ....,
செல்பேசிக் கோபுரங்களுக்காகவும்...,.
பிற கட்டுமானங்களுக்காகவும்....
திரைப்படப் படப் பிடிப்புக்களின் ’இராவண சம்ஹாரங்க’ளுக்காகவும்....
யுத்தப் பதுங்கிடங்களுக்காகவும்....
தீவிரவாதத் திட்டங்களுக்காகவும்..
கடத்தல் தொழில் கேவலங்களுக்காகவும்
காட்டின் இயற்கைச் சமன்பாட்டை..,
கோடி கொடுத்தும்பெற முடியாத அதன் எழிலான தவ மோனத்தை.....
நாம் எப்படியெல்லாம் நாசப் படுத்திக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு கணம் ....ஒரே ஒரு கணம் நினைவுபடுத்திக் கொண்டால்.....
உச்சி முதல் உள்ளங்கால்வரை ஆட்டிப் படைத்த காதலின் ஆளுகையின்போதும் உயிரக்கத்தோடு செயல்பட்டுத் தன் தேர் மணியை ஒலிக்காமல் இறுகக் கட்டி வைத்த அந்தச் சங்கக் காதலனின் முன்
 அற்ப மானுடர்களாக நாமெல்லாம் சிறுத்துப் போய்க் குன்றிக் கிடக்கும் வீழ்ச்சியின் அவலம் விளங்கும்.

’’மணி நா ஆர்த்த’’ அந்த ‘’மாண்வினைத் தேரன்’’ தன் மனைவியின் காதலன் மட்டுமல்ல.
ஒட்டு மொத்த உயிர்க் குலத்தின் தீராக் காதலன் அவன்.


 புகைப்படம்
 நன்றி ;
குமரன் குடில் http://www.saravanakumaran.com/2010/05/blog-post_17.html

7.4.10

சங்கக் காதலில் தாய்மை(2)

காதல் வயப்படும் நிலையில் பெற்றோர் அதற்கு எதிராகவும்,தடையாகவுமே இருப்பார்கள் என்ற எண்ணமே பெரும்பாலான இளம் உள்ளங்களில் படிந்து போயிருக்கிறது.

(இன்றைய திரைப்படங்கள் சிலவற்றில் இதற்கு மாறான ஆரோக்கியமான சிந்தனைப்போக்கு முன்வைக்கப்பட்டு வருவதை வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் எனலாம்.)

சங்ககாலத் தலைவியும் இந்தப் போக்கிற்கு விலக்கானவள் அல்ல.


தாய்மைக்கே உரிய கரிசனத்தால், அக்கறையால் தலைவியை அவள் கண்காணிப்பதும் கூட அவளுக்குத் தவறாகவே படுகிறது.


இந்தத் தாய், பிறக்கும்போதே வயதில் மூத்தவளாகப் பிறந்து விட்டாளோ...அவளுக்கு இளமைப் பருவம் என்ற ஒன்றே இல்லையோ....காதல் போன்ற மெல்லிய உணர்வுகளை அவள் அறிந்ததே இல்லையோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகிறது அவளது நெஞ்சம்.


''இளையளாய் மூத்திலள் கொல்லோ அன்னை''என அவளின் உள்ளத்துக்குள் ஓடும் எண்ணத்தின் தடத்தைத் தாயும் கண்டுபிடித்துவிடுகிறாள்.


தலைவியின் நினைப்புக்கு முற்றிலும் வேறாகத் தான் இருப்பதை அவளுக்கு நிறுவிக் காட்டப் பல முயற்சிகள் செய்தபடி அவள் தவியாய்த் தவிப்பதைப் பல சங்கப் பாடல்கள் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கின்றன.

சான்றாக இரண்டு சங்கப் பாடல்கள் இங்கே....


காதலித்த தலைவனோடு உடன்போக்காகச் (வீட்டுக்குத் தெரியாமல்)சென்றுவிட்ட மகள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நற்செய்தியை - அதற்கான  நல்ல சகுனத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காக்கைக்கு விருந்து வைக்கும் 
 சங்கத் தாயைக் காட்டுகிறது ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.

‘’அழகான கறுத்த இறகுகள் கொண்ட சிறு கருங் காக்கையே ! உனக்கு நான் நெய் வழிந்தோடும் புதிய இறைச்சிச் சோற்றைப் பொன்னால் செய்யப்பட்ட தட்டில் படைக்கிறேன்....அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் போ!அதன் பிறகாவது...என் மகள் சீக்கிரம் வந்து விடுவாள் என்பதற்கு அடையாளமாகச் சிறிது நேரம்குரலெழுப்பிக் கரைந்து விட்டுப்போ !’’என்று லஞ்சம் கொடுப்பது போல
 அதைக் கூவி அழைக்கிறாள் அவள்.

‘’மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
  அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
  பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
  பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
  வெஞ்சின விறல் வேல் காளையோடு
  அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’

தாய்மைப் பரிவிலும்,அன்பின் குழைவிலும் இந்தத் தாயையும் கூட விஞ்சுகிறாள் கபிலர் காட்டும் அகநானூற்றுத் தாய்.
மகளின் காதல் உறவை,அவ்வப்போது
அக்கம்பக்கத்தாரிடமிருந்து ஜாடைமாடையாகத் தெரிந்து கொண்டிருக்கிறாள் இவள்.

ஆனாலும் இப்படி ஒரு செயலுக்குத் தன் மகள் துணிய மாட்டாள் என்று தான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையால் அதைப் பற்றி அவளிடம் விசாரிப்பது கூட நாகரிகமற்ற செயலாக அவளுக்குப் படுகிறது.

மேலும்,அவ்வாறு கூறுவது தன் மகளை வருத்தப்படுத்திவிடுமோ என்று எண்ணியும் அதைச் செய்யாமல் தவிர்த்துவிடுகிறாள் அவள்.

மகளைப் பற்றி இந்த அளவுக்குக் கரிசனத்தோடும்,புரிதலோடும் தாய் இருக்க...மகளின் நினைவோ வேறொரு அலைவரிசையில் சஞ்சரிக்கிறது.தனது காதல் உறவு தாய்க்குத் தெரியவந்தால் அவள் ஒத்துக் கொள்ள மாட்டாளோ என்று நினைத்துக் கொண்டுவிடுகிறாள் அவள்.

அதனாலாயே காதலனோடு இணைந்து ஊரைத் தாண்டிச் செல்வதற்குத் துணிந்து விடுகிறாள் அவள்.
உண்மை வெளிப்பட்டதும் தாயின் உள்ளம் புழுவாய்த் துடிக்கிறது.

மகள் பிரிந்து போன துன்பத்தைக்காட்டிலும் அவள் தன்னைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே என்ற எண்ணமே அவளது நெஞ்சை வாள் கொண்டு அறுக்கிறது.

பெற்ற மகளுக்கோ அவளது காதலுக்கோ தான் எதிரியில்லை என்று நிரூபிப்பதற்காகவே அவள் ஒரு செயலைச் செய்ய முற்படுகிறாள்.

தன் காதலனோடு அந்தப் பெண் உடனாகச் செல்லும் காட்டு வழியில் ஆங்காங்கே சில வீடுகள் இருக்கும்.அங்கே உள்ளவர்கள் வழிப் பயணத்தில் களைத்துப்போன காதலர்களை வரவேற்று விருந்தோம்பல் செய்வது வழக்கம்.அப்படிப்பட்ட ஒரு விருந்துபசாரத்தைத் தன் மகளுக்கும் அவள் துணைவனுக்கும் தானே அளிக்க வேண்டுமென்று விரும்புகிறது அந்தத் தாய் உள்ளம்.
கல்லும்,முள்ளும் நிறைந்த அந்தக் காட்டு வழியில் காதலர்களுக்கு முன்பாகத் தான் சென்றுவிட வேண்டுமென்றும் ,அங்கே வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் மனையிலுள்ள விருந்தோம்பும் பெண்ணாகஇருந்தபடி அவர்களுக்குத் தன் கையால் முதல் விருந்து படைத்துப் பரிமாற வேண்டுமென்று விழைகிறது அந்தத் தாயின் உள்ளம்.



மகளின் காதலுக்குத் தான் எதிரியில்லை எனக் காட்டிக் கொள்ள இதைக்காட்டிலும் வேறு எந்த வழியும் அவளுக்குச் சிறந்ததாகத் தோன்றவில்லை.

அவளது விருப்பம் நிறைவேறுவதென்பது மிகவும் கடினமானதுதான் என்றபோதும் தன் மனதை மகளுக்குப் பிளந்து காட்ட அவள் படும் பரிதவிப்பும்,அன்பின் நெகிழ்வும் அவளது உணர்வை உன்னதப்படுத்திவிடுகின்றன.
மகளைப் பிரிந்த தாயின் மனத் தவிப்பை இவ்வாறு இதயத்தைத் தொடுமளவுக்கு எடுத்துக்காட்டும் நுட்பமான பாடல்கள் தமிழைத் தவிர வேறு எந்த உலக மொழியிலும் இல்லையென உறுதியாகக் கூறிவிட முடியும்.
கபிலரின் அந்தப்  பாடல்;

''நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் பேசாமல் தாய் பார்த்துக் கொள்ளட்டும் என்று சும்மா இருக்காமல்,வம்பு பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பெண்கள் பல நாட்களாகவே என்னிடம் வந்து'உன் மகள் இப்படி இருக்கிறாள் அப்படி இருக்கிறாள்'என்று பழிசொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் உன்னிடம் பகிர்ந்து கொண்டால் கூட நீ கூச்சப்படுவாய் என்பதால் உன்னிடம் சொல்லாமல் நாசூக்காக என் மனதுக்குள்ளேயே அதை ஒளித்து வைத்திருந்தேன்.


ஆனால் இப்படிப்பட்ட இந்த அன்னைக்குத் தெரிய வந்தால் நம் காதலுக்குத் தடை போட்டுவிடுவாளோ என்று பயந்து போன நீ ,மான்களைக் கூட வழி தடுமாற வைக்கும் மலைக் காட்டுப் பாதையில் உன் காதலனோடு சேர்ந்து எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உடன்போக்காகப் போய்விட்டிருக்கிறாய்.

நீ பயப்படுவது போன்ற தாய் நான் இல்லை என்பதை உனக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே நான் அந்த மலைப் பாதையை உனக்கு முன்பாகவே அடைந்து விட வேண்டும்....அங்கே உள்ள சில சின்னக் குடிசைகளில் களைத்து வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்காகவே பல மூத்த பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்;அவர்களில் ஒருத்தியாக நானும் மாறிப் போய் நீயும்,உன் காதலனும் அங்கு வந்து சேரும்போது உங்களுக்கு என் கையால் சமைத்த உணவை அளித்து விருந்து வைக்க வேண்டும்.அதுவே என் ஆசை ''என்கிறாள் அந்தத் தாய்.

மகளின் மனம் அப்போதாவது தன்னை விளங்கிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்போடு கூடிய ஏக்கத்தைப் பாசத்தின் மென்மையான இழையால் நெய்தபடி சித்திரமாக்குகிறது கபிலரின் குறிஞ்சித் திணை சார்ந்த இந்த அகநானூற்றுப் பாடல்.


''உவக்குநளாயினும் உடலுநளாயினும்

யாயறிந்து உணர்க என்னார் தீவாய்

அலர்வினை மேவல் அம்பற்பெண்டிர்

இன்னள் இனையள் நின் மகள் எனப் பன்னாள்

எனக்கு வந்துரைப்பவும் தனக்குரைப்பறியேன்

நாணுவள் இவள் என நனிகரந்துறையும்

யான் இவ்வறுமனை ஒழியத் தானே

அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை

எனக்கு எளிதாகல் இல்லெனக் கழற்கால்

மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்

பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்

அன்னேனன்மை நன்வாயாக

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி

எய்திடை உறாஅதெய்தி முன்னர்ப்

புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்ச்

செல்விருந்து ஆற்றித் துச்சில் இருத்த

நுனை குழைத்து அலமரும் நொச்சி

மனைகெழுபெண்டு யான் ஆகுக மன்னே''

18.3.10

சங்கக் காதலில் தாய்மை(1)

காதல் என்றால் அங்கு இடம் பெறுவது, தலைவன்,தலைவியரின் உணர்வு மட்டுமில்லை.

காதல் என்பது குடும்பம் சம்பந்தப்பட்டது ; சமூகம் சம்பந்தப்பட்டது.

குடும்ப உறவில் அச்சாணியாக விளங்கும் தாயை மகளின் காதல் உறவு பாதிக்கிறது.
தாயறியாத சூலில்லை என்பது பழமொழி!ஆனால் பாலூட்டிச் சீராட்டித் தான் வளர்த்த அருமை மகள் தனக்குத் தெரியாமல் ஓர் ஆடவனிடம்  காதல் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய நேரும்போது அந்தத் தாய் அதிர்ந்து போகிறாள்.அதிலும் அந்தப் பெண் , தன் காதலனோடு ஊரை விட்டே ஓடிப்போகும்போது .தாயின் அதிர்ச்சி பன்மடங்காகிப் பெருகுகிறது.

 தன் மகளை இன்னும் கூட வளர்ச்சியடையாத ஒரு சிறு குழந்தையாகவே எண்ணியிருந்த தாய்மனம் , பெண்ணைப் பிரிந்த ஏக்கம் ஒரு புறமும் , அவள் தந்திருக்கும் அதிர்ச்சி மறுபுறமுமாகத் தத்தளிக்கிறது.

தன் செல்ல மகள் பிரியமாக விளையாடும் பொம்மை....,

பாலும் பழமும் தந்து அவள் பழக்கியிருந்த பசுங்கிளி...,

அவள் வளர்த்துக் கொண்டிருந்த பூவை என்ற பறவை...,

என்று இவைகளையெல்லாம் காண்தொறும்,காண்தொறும் ஏக்கம் கிளர்ந்து வரக் கலங்கிப் போகிறாள் அவள்.

முறைப்படி திருமணம் முடிந்து மகள் புகுந்தவீடு செல்லும்போதே பிரிவிவின் சுமையால் ஏங்குவது பெற்றோர் மனம்.
‘’ஒரு மகள் தன்னை உடையேன்
   உலகம் நிறைந்த புகழால்
   திருமகள் போல வளர்த்தேன்
   செங்கண்மால்தான் கொண்டு போனானே..’’
என்று ஆண்டாளைப் பிரிந்த ஏக்கத்தைத் தந்தை நிலையில் பதிவு செய்வார் பெரியாழ்வார்.

அவ்வாறிருக்கையில்,இங்கே.... இந்தச் சங்கப் பாடலில் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட மகளின் திடீர்ப் பிரிவை அந்தத் தாய்மனம் எப்படித் தாங்கும்?

பாவை போன்ற என் அழகான மகள் ஏந்தியிருந்த பாவை இதுதானே?
பூவையைப் போலக் கொஞ்சி விளையாடிய என் செல்லக் குழந்தை கொஞ்சி விளையாடிய கிளியும் இதுதானே?
கிளி போன்ற என் பெண் வளர்த்து வந்த கிளியும் இதுதானே?

நேசத்துக்குரிய இவற்றையும், பாசத்துக்குரிய இந்த அன்னையையும் விட்டுவிட்டுக் கல்மனதோடு காதலனுடன் போக அவள் எப்படித்தான் துணிந்தாளோ என்று துடிக்கிறாள் சங்கத் தாய்.

‘’இது என் பாவைக்க்கினிய நன் பாவை
  இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி
  இது என் பூவைக்கினிய சொற்பூவை என்று
  அலம்வரு நோக்கின் நலம் வரு சுடர்நுதல்
  காண்தொறும் காண்தொறும் கலங்க
  நீங்கினளோ என் பூங்கணோளே’’

என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் பெற்ற மனம் பித்தாகும் தன்மையை நடப்பியல் போக்கில் நயம்படச் சித்திரிக்கிறது.

பி.கு;
‘’எங்கப்பனைப் போட்டுத் தள்ளிட்டு என்னத் தூக்கிட்டுப் போ’’ என்று காதலி காதலனிடம் கூறும் ‘வீர’ (!?) வசனங்களை மட்டுமே (நன்றி;பருத்தி வீரன்) கேட்டுப் பழகும் இன்றைய இளைய தலைமுறை ...பெற்றோராக மாற்றம் பெறும்போதுதான் மென்மையான இந்த உணர்வுகளை ஒரு வேளை விளங்கிக் கொள்ள முடியுமோ...என்னவோ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....