துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.10.09

18நாட்கள்,10நாடுகள்..(5)

நாட்கள்2,3,4-பிரான்ஸ்-பாரீஸ்

ஸ்றீலங்கன் விமானம்-UL563 ,கொழும்பை விட்டுப் பாரீஸுக்குக் கிளம்புகையில் நள்ளிரவு 2.45 மணிக்கு மேல் ஆகியிருந்தது.
சற்று உறங்கினால்தான் மறுநாளைய காட்சிகளை நன்றாக ரசிக்க முடியும் என்பதால் எப்பொழுது உறங்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன் நான்.ஆனால்,விமானத்திற்குள் ஜகஜ்ஜோதியாய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கப் பழரசங்களும்,வேறு பலரக உற்சாக பானங்களும் நிதானமாகப் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.அதற்குப் பிறகு சாவதானமாக இரவு உணவு என்றால் உறங்குவது எப்படி?கொழும்புஓட்டலின் தயிர் சோறு மட்டுமே போதும் என்று முடிவுகட்டிக் கொண்ட நான் ஆரஞ்சுப்பழச் சாற்றை மட்டும் குடித்து விட்டு,அடுத்த உணவு வகைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல்,கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனேன்.
4,5 மணி நேர உறக்கத்துக்குப் பிறகு,நான் கண் விழித்தபோது,என்னைத் தவிர எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதும்,இந்திய நேரத்திலிருந்து பின் தங்கிப் போய்விட்டதால் இன்னும் பொழுது விடியவில்லை என்பதும் எனக்குப் புரிந்தது.
காலையில்கண் விழித்ததும் காப்பியைத் தேடியே பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு நேரக்குழப்பத்தின் காரணமாக,அது தாமதமாகிக் கொண்டே போனது பெரிதும் மனச்சோர்வை அளித்தது.

ஜன்னல் அருகிலுள்ள இருக்கை வேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுக் கொண்டும் அது கிடைக்காமல் போனதால் ஒரே வரிசையின்மூன்று பிரிவுகளில்,நடுவிலுள்ள இருக்கையில் மாட்டிக்கொண்டிருந்தேன் நான்.
கூட்டம் அதிகமில்லை என்பதால் என் அறைத்தோழி, 3 இருக்கைகளை ஆக்கிரமித்தபடி ஆனந்த சயனத்தில் ஆழ்ந்திருந்தார்.
எனக்குத் தூக்கம் முற்றாகக் கலைந்து விட்டிருந்தது.
வேறு காட்சிகளைப் பார்க்க வழியில்லாததால் உடன் கொண்டு சென்ற புத்தகங்களைப் படித்துப் பொழுதை ஓட்டினேன்.
இருக்கைக்கு மேலே உள்ள காட்சித்திரையில் விமானத்தின் பாதை,அதுகடந்து செல்லும்-(மற்றும் அருகிலுள்ள) நகரங்கள்,கடல்கள்,மகாசமுத்திரங்கள் முதலிய விவரங்கள் வரைபடமாக விரிந்து கொண்டே வந்தது எனக்குச் சுவாரசியமூட்டுவதாக இருந்தது.பன்னாட்டு விமானப் பயணங்களில் வாய்க்கும் இந்த அனுபவம் ,மிகவும் ருசிகரமானது..
கரீபியக் கடல்,கருங்கடல்,மத்தியதரைக் கடல்...ஆகிய பல கடல்களும் , கராச்சி,பாக்தாத்,இஸ்தான்புல்,புடாபெஸ்ட்,ஏதன்ஸ்,பிராங்பர்ட்,வியன்னா,பிரேக் முதலிய நகரங்கள் பலவும் மாறி மாறி வரைபடத்தில் வந்துகொண்டே இருக்க அவற்றின் அருகாமையில்..அண்மையில் சென்று கொண்டிருப்பதான உணர்வு மனச் சிலிர்ப்பூட்டியது.
ரஷிய இலக்கியங்களின் பால் ஈர்ப்புக்கொண்ட எனக்கு,அந்த வரைபடத்தில் மாஸ்கோவும்,பீட்டர்ஸ்பர்க்கும் கூட அந்த வரைபடத்தில் சற்றுத் தொலைவில் சுட்டப்பட்டிருந்தது...ஏதோ நாம் அங்கிருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறோம் என்பது போன்ற பேரானந்தத்தை அளித்தது.

விமானத்துக்குள் வரைபடத்திரை

இந்திய நேரப்படி 11 மணியளவில் ஒரு வழியாக சிற்றுண்டி என்ற பெயரில் ஏதோ ரொட்டியும்,தேநீரும் வந்து சேர்ந்தது. சைவ உணவைக் கேட்டுப்பெறுவதற்குள் பெரும்பாடுதான்.

பிரான்ஸ் நேரப்படி காலை 10.05க்குப்பாரீஸின் சார்லஸ் டிகால் விமான நிலையத்தை வந்தடைந்தோம் நாங்கள்.கோலாலம்பூர்,சிங்கப்பூர் போன்ற நாடுகளின் விமான நிலையங்களில் காணப்படும் அட்டகாசமான தோற்றம் எதுவுமின்றி அமைதியான அழகுடன் -கச்சிதமான நேர்த்தியுடன் சுத்தமாகக் காட்சியளித்தது பாரீஸ் விமான நிலையம்.அநாவசியமான கெடுபிடிகள் ,அலட்டல்கள் அங்கே எதுவுமில்லை;அதே வேளையில் நவீன கருவிகளின் துணையுடன்,பயணிகளுக்கு நேரடியாகத் தெரியாத வகையில் ஒரு புறம் அவர்களின் பொருள்களும்,உடைமைகளும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன.

பாரீஸ் விமான நிலையத்திற்குள்.....

இங்கும் எங்களுக்குச் சற்றுத் தவிர்க்க முடியாத தாமதங்கள்தான்.
பாரீஸிலிருந்துதொடங்கி,ஐரோப்பா முழுவதையும்,சாலைவழியே சென்று பார்ப்பதற்கான ஏற்பாடு ,லண்டனிலுள்ள மற்றொரு சுற்றுலாக் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்ததால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து சாலை நெரிசல்களில் மாட்டிக் கொண்டு லண்டனிலிருந்து வந்து சேர... அந்த ஊர் நேரப்படி பகல்
12 மணிக்கு மேலாகி விட்டது.

மும்பையைச் சேர்ந்தவரும்,தற்போது லண்டனில் இருப்பவருமான ஷெரீன் என்ற பெண்,அந்தப் பேருந்துடன் வந்து பாரீஸின் முதல் இரண்டு நாட்களும் எங்களுக்கு வழிகாட்டி உதவினார்.

பாரீஸுக்குள் கால்வைப்பதற்கு முன்பே மதிய உணவு நேரம் வந்து விட்டதால்,எங்களை அவர் முதலில்கூட்டிச் சென்ற இடம் தமிழர்கள் நடத்தும் ஒரு உணவு விடுதி.
பாரீஸ் ரயில்நிலையத்துக்கு மிக நெருக்கமாக இருந்த அந்தப்பகுதியின் பெயர் ‘லிட்டில் இந்தியா’(சிங்கப்பூர்,மலேசிய நாடுகளிலும் இந்தியர்கள்-குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதிக்கு இவ்வாறுதான் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது).

உணவு விடுதிக்குச் செல்லும் வழி நெடுகிலும்,ஈழத் தமிழர்கள் நடத்தும் கடைகள் பலவும் இருப்பதால்....கடைப்பெயர் தாங்கிய பலகைகளும் தமிழில் இருப்பதைப் பார்த்துப் பாரீஸின் தமிழ்முழக்கத்தில் மகிழ்ந்து கொண்டே வந்தேன் நான்.
கடைப்பெயர் தாங்கிய பலகைகள் தமிழில்....


அப்போது அங்கிருந்த ஒரு சில கடைகளில், பிரபாகரனின் புகைப்படமும் அதற்குக்கீழே எழுதப்பட்டிருந்த பின் வரும் வாசகமும் கண்ணில் பட ஒரு கணம் அப்படியே உறைந்துபோய் நின்றேன் நான்.

‘’எம் தேசத்தின் ஒளியை யாராலும் அழிக்க முடியாது..
காலத்தின் நேரத்தில் எம் கரிகாலன் தோன்றுவார்’’




கொழும்பில் பார்த்த கொய்யாப்பழக்காரரும் சரி ,பாரீஸிலிருக்கும் பல்பொருள் அங்காடிக்காரரும் சரி....உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் பலரும் இந்த விஷயத்தைப்பொறுத்தவரை பெரும்பாலும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள் என்பது....,குறிப்பிட்ட ஒரு நபரின் ஆளுமை அவர்களிடம் ஏற்படுத்திவிட்டிருந்த நம்பிக்கை எத்தனை அழுத்தமானது என்பதைப் புரிய வைத்தது.(பிற்பாடு நாங்கள் வெனிஸ் நகரத்தில் சந்தித்த ஒரு தமிழ்க் குடும்பத்தினரிடமிருந்தும் கூட-அவர்கள் வெரோனாவிலிருந்து வெனிஸச்சுற்றிப் பார்க்க வந்தவர்கள்- இதே போன்ற எதிர்வினைதான் எங்களுக்குக்கிடைத்தது.)

இலங்கையைத் தாண்டி வெகு தொலைவு வந்து விட்டாலும் கூட இந்தப்பயணத்தின் பல இடங்களிலும்,இலங்கைத் தமிழ் மணம் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேதான் இருந்தது.

இணைப்பு;
18நாட்கள்,10நாடுகள்..(1,2,3,4)

25.10.09

18நாட்கள்,10நாடுகள்..(4)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


கொழும்புவின் பல்பொருள் அங்காடியில் பயணிகளை விட்டுவிட்டு,ஓய்வாகத் தேநீர் பருகிக் கொண்டிருந்த எங்கள் உள்ளூர் வழிகாட்டி , தனியாக என்னிடம் மாட்டிக் கொண்டு விட...,ஈழப் புலிகளின் அழிவைப் பற்றியும் ,புலித் தலைவரின் மரணம் குறித்தும் அவர் அறிந்திருக்கும் செய்திகளைக் கேட்டேன்;பிரபாகரனின் மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படாத மர்மம் பற்றியும் அவரிடம் வினவினேன். பிறவற்றை மிக இலேசாக மழுப்பிவிட்ட அவர்,பிரபாகரனின் உடலை மட்டும் தானே நேரில் பார்த்ததாகக் கதை விடத் தொடங்கினார்.அவரிடம் அதைத் தவிர வேறதையும் எதிர்பார்க்க முடியாதென்ற சலிப்புடன் மெல்ல அங்கிருந்து நழுவி...எதிர்ப் புறம் அங்காடிக்கு அருகே சாலையோரத்தில் இருந்த கொய்யாப்பழ வண்டியை நாடிச் சென்றேன்.

சராசரியாக நாம் பார்க்கக் கூடிய கொய்யாக்களை விட அளவில் பல மடங்கு பெரிதாக இருந்த அந்தப் பழங்களின் விலை -( இந்திய மதிப்பை விட சிங்களப் பணத்தின் மதிப்பு குறைவுதான் என்றபோதும்)-மிக மிக அதிகமாகவே இருந்தது.ஆனாலும் சீன உணவு விடுதியில் நான் உட்கொண்டிருந்த பற்றாக்குறையான உணவின் காரணமாகப் பசி,என் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது.மேலும் பழம் விற்றுக் கொண்டிருந்த தமிழ்ப்பையனின்(அவனுக்கு 18,19 வயதிருக்கலாம்)களையான சிரித்த முகம் ,அவனுடன் கொஞ்ச நேரம் உரையாடும் ஆவலையும் என்னுள் தூண்டி விட்டிருந்தது.
பழம் உண்மையிலேயே அபூர்வமான சுவையுடன் மிக மிக நன்றாகத்தான் இருந்தது(பாரீஸ் வரையிலும் கூட அந்தப்பழங்கள் சில நேரங்களில் எனக்குப் பசியாற்றி உதவின).

அவற்றைத் தினந்தோறும் தலை மன்னாரிலிருந்து கொண்டு வருவதாகச் சொன்ன அந்த அந்த முஸ்லிம் பையன்,நாங்கள் தமிழர்கள் என்பது தெரிந்ததும் ,எங்களிடம் பிரியத்தோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவற்றை அழகாகக் கூறு போட்டு, உப்பு,மிளகாய் தூவித் தந்தான்.
அவனிடமும் பிரபாகரன்பற்றி நான் பேச்செடுக்க....சட்டென்று ஒரு கணம் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு,
’’காந்தியைக் கூடத்தான் சுட்டுட்டாங்க’’
என்றான்.
அடுத்த கணமே
‘’இதோட நாலு தடவ சுட்டாச்சு’’
என்றும்சேர்த்துக் கொண்டான்.

இவன் ,புலித் தலைவரைக் காந்தியோடு சமநிலப்படுத்துகிறானா அல்லது அப்படி ஒரு மரணத்தையே நம்ப மறுக்கிறானா....,புரியவில்லை.
ஆனால்....சில பிம்பங்கள் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள்,எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத வலுவான பதிவுகள் என்பது மட்டும் எனக்கு அப்போது தெளிவாகப் புரிந்தது.

பேருந்தில் ஏறத் தயாராக வந்த சக பயணிகள் சிலரிடமும் கொய்யாவின் சுவை பற்றிச் சொல்லி,அவனது விற்பனைக்கு ஓரளவு உதவ முற்பட்டேன். அப்போதைய நிலையில் என் இலங்கைத் தமிழ்ச் சகோதரனுக்குஎன்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.

இரவு மணி 1.30க்குப் பாரீஸ் கிளம்பும் விமானத்தைப்பிடிக்க வேண்டுமென்பதாலும்,ஆறு மணிக்கு மேல் அடங்கி விடும் அந்த ஊரில் அதற்குமேல் எதையும் பார்க்க இயலாது என்பதாலும்,வெள்ளவத்தையிலுள்ள ஒரு விடுதியில் (Global tower hotel)ஆறு மணி முதல் இரவு ஒன்பதரைவரை நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
என் கேள்விகள் எழுப்பிய தூண்டுதலாலோ,நாங்கள் தமிழ்ப் பயணக் குழு என்று கருதியதனாலோ....போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவரவர் இருப்பிடங்களில் மீள் குடியமர்த்தும்பணி மும்முரமாக நடந்து வருவதாக (அவர் சொன்ன கணக்கு 4 லட்சம்.இக்கட்டுரை எழுதும் இந்த அக்டோபர் மாதம் வரையிலும் கூட அந்தப் பணி இன்னும் சரியாக முழுமை பெறவில்லை) விடுதிக்குச் செல்லும் வழி நெடுகச் சொல்லிக் கொண்டே வந்தார் அஜித்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள்,அவர்கள் வழிபடும் கோயில்கள் என்று அந்தவெள்ளவத்தைப் பகுதி முழுக்கத் தமிழர்களே அதிகம் நிறைந்திருப்பதால் அதற்குக் ‘குட்டி யாழ்ப்பாணம்’என்ற பெயர் கூட உண்டென்று சொல்லி எங்களைக் கொஞ்சம் குளிர வைக்க முற்பட்டார் அவர்.’சிங்களவரான எங்களுக்கு எல்லாத் தமிழரோடும் பகையில்லை...தீவிரவாதிகளோடு மட்டும்தான்’ என்று,தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஏதேதோ பதில்களை..சமாதானங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.அவர் நிலையில் அவரால் வேறு எதைத்தான் சொல்லிவிட முடியும்?

கடற்கரைச் சாலையில் அமைந்திருந்த அந்த விடுதியிலிருந்து புலப்பட்ட சுற்றுப் புறமும் இயற்கைக் காட்சியும் அற்புதமாக இருந்தன.

இலங்கைக்குள் நுழைந்தது முதல் ‘இலங்கையில் இருக்கிறோம்’என்ற உணர்வு(feel)எனக்கு அவ்வளவாகக் கிடைக்கவே இல்லை;அத்தகையதொரு உணர்வு கிடைத்த முதல் தருணம் அது.





ஆனாலும் ’கடல் வாசல் தெளிக்கும் அந்த வீட்டின்’(நன்றி-வைரமுத்து-கன்னத்தில்முத்தமிட்டால்) முற்றத்தில் நின்று , மறிந்து வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது...இனம்விளங்காத கனமும்,துயரமும் இதயத்தைப் பிசைந்ததென்னவோ உண்மை.

’’தெற்குமாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே..............
‘’நாட்டை நினைப்பாரோ-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே’’


என்று பீஜித்தீவின் கரும்புத்தோட்ட அழுகுரலைப்பற்றிப் பாரதி பதிவு செய்த வரிகளே அந்தக்கடலலை முழக்கத்திலும் கலந்து வருவதைப் போல எனக்குத் தோன்றியது.

பிற பயணிகள் ஓய்வெடுப்பதிலும்,குளித்து முடித்துத் தங்களை அடுத்த பயணத்துக்குஆயத்தம் செய்து கொள்வதிலும் முனைந்திருந்தனர்.
உறைந்து போன மனத்தோடு , விடுதியின் மூன்றாவது மாடியில் அமைந்திருந்த அறையின் ஜன்னல் வழியே,கடலையே வெகு நேரம் வெறித்துக் கொண்டிருந்த நான் என்னையும் அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்தபோது..இரவு உணவுக்கான அழைப்பு..!
அந்த உணவும் எனக்கு ஏற்றதாக இல்லாமல் போகவே,வெறும் சோறும்,தயிருமாவது கிடைக்குமா என்றுதேடிப்போன எனக்கு இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் ஓடோடி வந்து உதவினர்.அன்போடு உபசரித்த அவர்களோடுசற்றுப்பேச்சுக் கொடுத்தபோது,கொழும்பிலுள்ள சொத்துசுகங்களையெல்லாம் விட்டு விட்டு ஓடிய தமிழர்கள் சிலரின் கண்ணீர்க் கதைகளைச் சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறிது தயக்கத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

இரவு உணவோடுஎங்கள் இலங்கைத் தங்கல் முடிந்து விட, இரவு ஒன்பதரை
மணி அளவில் பண்டாரநாயகா விமன நிலையம் நோக்கிஎங்கள் பேருந்து கிளம்பியது.

இலங்கைப் பயணம் அப்படிக் ’குறுகத் தறித்த குறள்’போலச் சுருக்கமாக முடிந்து போனதில் எனக்குச் சற்று வருத்தம்தான்.ஆனால் உள்ளபடி,எங்கள் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தில் இலங்கை முதலில் இடம்பெற்றிருக்கவே இல்லை.இணைப்பு விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தை
மிகச் சிறிய ஒரு கொழும்புச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்தி நாங்கள் இன்னொரு நாட்டையும் கொஞ்சம் காண்பதற்கு வழியமைத்துக் கொடுத்திருந்தது எங்கள் சுற்றுலா அமைப்பு.(Shalom travels,Chennai).
ஏதோ சிறிது நேரமாவது இலங்கையின் ஒரு சிறு பகுதியையாவது காண முடிந்ததே ...அது வரையில் மகிழ்ச்சிதான்.

ஆனாலும்....
இலங்கையின் அழகை...அதன் ஜீவனை ...அதன் உயிர்த்துடிப்பை உள்ளபடி உணர்ந்து ரசித்து உள்வாங்கிக்கொள்ள.....
முதலாவது....இன்னும் சில நாட்களாவது கட்டாயம் வேண்டும்;

இரண்டாவது,கொழும்பை மட்டும்...அதன் ஒரு சில பகுதிகளை மட்டும் ஒரு அரை நாள் அவகாசத்தில்பார்த்து முடிவுக்கு வந்து விடாமல், தீவின் முக்கியமான வேறு சில இடங்களையாவது பார்க்க வேண்டும்;

இதையெல்லாம் விட முக்கியமாக....அதற்கான நல்ல மனநிலை வாய்த்திருக்கவும் வேண்டும்.(துரதிருஷ்டவசமாக நான் எத்தனை முயன்றும் தற்போதைய இலங்கைச் சூழல் அப்படிப்பட்ட மனநிலையிலிருந்து என்னை அன்னியப்படுத்தியே வைத்து விட்டது)

என்றாவது ஒரு நாள்,காலம் கனியும்போது....
தமிழர் உரிமையோடு சமத்துவம் பெற்று வாழும் அந்தத் திருநாளில் இலங்கையை மட்டுமே சுற்றிப்பார்க்க மகிழ்வான மன நிலையோடு நிதானமாக அங்கு வந்தே தீருவேன் என்று எனக்கு நானே சூளுரைத்துக்
கொண்டபடி,

கால்செருப்பிலிருந்து,கை வளையல் வரை கழற்றி வைக்கும் கடுமையான விமானநிலையப் பரிசோதனைகளுக்கு உட்பட்ட பிறகு, பாரீஸ் செல்லும் ஸ்றீலங்கன் விமானத்தில் ஏறிஅமர்ந்தேன்.
(பயணம் தொடரும்)

இனணைப்புக்கள்;

18நாட்கள்,10நாடுகள்.(1)

18நாட்கள்,10நாடுகள்(2)

18நாட்கள்,10நாடுகள்(3)

24.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(3)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


சீதை சிறையிருந்த அசோகவனம்,இலங்கையிலுள்ள நுவரேலியாவில் இருப்பதாகவும்,இராமாயண காவியத்துடன் தொடர்பு கொண்டவைகளாகக் கிட்டத்தட்ட 50 இடங்களை இலங்கையில் காண முடியும் என்றும் விவரித்துக் கொண்டே வந்தார் வழிகாட்டி அஜித்.
அவற்றில் இயற்கை இறந்த பல அதிபுனைவுகளும் கலந்தே இருந்தன.

-சீதைக்கு முன்பாகத் தன் விசுவ ரூப தரிசனத்தைக் காட்டித் தான் இராமதூதன் என்பதைப் புரிய வைத்த அனுமனின் பாதச் சுவடுகளை இன்னும் அங்கே காண முடிகிறது....

-சீதை விட்ட கண்ணீர், எந்தப்பஞ்ச காலத்திலும் கூட வற்றாமல் ஒருபொய்கையைப் போலத் தேங்கியபடி,சாஸ்வதமாய் அப்படியே இருக்கிறது; அந்த நீரை ஒரு பிரசாதமாகக் கருதிப்போற்றும் மக்கள் கூட்டமும் இருக்கிறது....

-இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற அந்தக் குறிப்பிட்ட பாதையில் இப்போதும் ஒரு புல் கூடமுளைப்பதில்லை...

-இராம-இராவண யுத்தம் நடந்த போர்க் களத்தில் உள்ளங்கையை வைத்துப்பார்த்தால் அது சிவப்பாகி விடுகிறது......

இந்த ரீதியில் அவர் கதைத்துக் கொண்டே போன செய்திகள் பகுத்தறிவுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ...,இன்றைய சமகால நிகழ்வுகளோடு ஏதோ ஒரு வகையில் ஒத்துப் போவதை உணர்ந்த என் மனம், அந்தச் செய்திகள் எல்லாவற்றையும் அந்தப் போக்கிலேயே முடிச்சுப் போட்டுப் பொருத்திப் பார்த்து ஆராய்ந்தபடி இருந்தது.(சிறைக் கூடங்களும்,கண்ணீர்ப் பெரு மூச்சுக்களும் எந்த நாளிலும் சிங்களத்திற்கே உரிய தனிச் சிறப்பாக அல்லவா ஆகி விட்டிருக்கிறது?)

உணவுக்குப் பின் முதன் முதலாகப்பேருந்திலிருந்து எங்களை இறக்கிவிட்ட இடம்,ஒரு பௌத்தக் கோயில்.
இந்தியாவிலுள்ள சாரநாத்தில்,பல நாட்டுப் புத்தர் ஆலயங்களையும் விரிவாகப் பார்த்து முடித்து விட்டிருந்ததால் குறிப்பிட்ட இந்தக் கோயில் என்னை மிகுதியாகப் பாதிக்கவில்லை.
ஆனால், அங்கேயும் சில செய்திகள் காத்திருந்தன.
நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்குச் சாட்சியாக இருக்க விருப்பமில்லாதவை போல, அங்கே இருந்த சில புத்தர் சிலைகள் உறங்கும் கோலத்தில் இருந்தது,எனக்குச் சற்று ஆறுதலாகக்கூட இருந்தது.

அந்தக் கோயிலின் வேறுபாடான அம்சமாக நான் உணர்ந்தது,புத்தர் சிலைகளைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் தென்பட்ட -இந்துக் கடவுளரை நினைவுறுத்தும் பல உருவங்களைத்தான்...பிள்ளையாரையும்,முருகனையும்,விஷ்ணுவையும், இலக்குமி,சரசுவதி போன்ற பெண் கடவுளரையும் ஒத்திருக்கும் பற்பல சுதை உருவங்கள் புத்தரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.



யானையின் துதிக்கை,நெகிழ்ச்சியின்குறியீடு;

பருந்துப் பார்வை ,கூர்மையின்குறியீடு;

மயில்,அழகின் குறியீடு;

பன்றியின்காது,புலனறி திறனின்குறியீடு;

யாளி (dragon )யின் வாய்,உறுதிப்பாட்டின் குறியீடு

என்று அவற்றுக்கான தொன்மக் குறியீட்டு விளக்கங்கள் தரப்பட்டபோதும்,அந்தக் கோயிலும் அதிலுள்ள சிற்பங்களும் இன்னும் ஆழ்ந்த பார்வையுடன் நோக்கப் பட வேண்டியவை என்றே எனக்குப் பட்டது.



அந்தக் கோயிலின் பருத்தமேற்கூரை(dome),
கருவுற்ற பெண்ணை நினைவுபடுத்துவதாக உள்ளதால்,கருவுற்ற பெண்கள் அந்தக் கோயிலைச் சுற்றி வந்து வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகக் கூடும் என்ற நம்பிக்கையும் கூட அங்கே நிலவி வருவதை அறிய முடிந்தது.
புத்தர் கோயிலை ஒட்டியே இருந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்ல நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதால் தேர்த் திருவிழாக் கோலாகலத்தில் இருந்த அதை வீதியிலிருந்தபடியே தரிசித்து முடித்து வண்டியில் ஏறிக்கொண்டோம்.

தொடர்ந்து ,

-அனுராதபுரத்தில் இருக்கும் புத்தர் சிலையைப் போல ஒற்றைக்கல்லில்(monolithic) உருவாக்கப்பட்ட பெரிய புத்தர் சிலை,

-இன்று அருங்காட்சியகங்களாகவும்,காவல்துறை மற்றும் பிற அரசு அலுவலகங்களாகமாறிப் போயிருக்கும் அந்தக்காலத்துக் காலனிஆதிக்கக் கட்டிடங்கள்,

-சிங்களத் தொலைக்காட்சி நிலையமாகிய ரூபவாஹினி,

-வழி நெடுகத் தென்படும் அசோகமரங்கள், ஆல மரங்கள்....
என்று பேருந்து ஓட்டத்திலேயே பல காட்சிகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம்....

ஒரு நாட்டின் தலைநகரம் என்பதற்கான கட்டமைப்புக்களை....சீரான நேர்த்திகளை இந்தக்குறுகியபயணத்தில் எதிர்ப்படும் வாய்ப்பு மிகுதியாகக் கிடைக்காததனாலோ அல்லது சாஸ்வதமான பதட்டமும் போர்ச்சூழலுமே நிலவி வந்த காரணத்தால் தலைநகரின் மேம்பாட்டுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனதாலோ .....,தமிழ் நாட்டின் ஒரு சாதாரண நகரத்தை விடவும் கூடச் சுமாரானதாகவே கொழும்பு என் கண்களுக்குப்புலப்பட்டது.

அடுத்தாற்போல எங்களை இறக்கிய இடம் இலங்கையின் சுதந்திர சதுக்கம்.

அங்கேயும் கூட சேனநாயகாவின் சிலைப் பீடத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழே கண்ணில்பட்டு என்னை நீர் மல்கச் செய்தது.

காலங்காலமாய் ஒருதாய்ப் பிள்ளைகளாக ஒன்றி வாழ்ந்த இரு இனங்களுக்குள் தூர்க்க முடியாதபடி இன்று எத்தனை அகழிகள்!
சாமானியச் சிங்களனும் சாமானியத் தமிழனும் இப்பொழுதும் கூடக் கை குலுக்கி வாழ ஆசைப்படுவது ஒரு புறம் இருந்துகொண்டுதானிருக்கிறது என்றபோதும் சுலபத்தில் ஒருவரை ஒருவர் அணுக முடியாமல் எத்தனை மனத் தடைகள்!

கிரிக்கெட் பந்து வடிவிலிருக்கும் மங்குஸ்தான் பழங்களையும்,
‘ருசியில் சொர்க்கம்,வாசனையில் நரகம்’என்று கூறப்படும் துரியன் பழங்களையும் சிங்கப்பூர்,மலேசியாபோன்றே இங்கும் அதிகமாகக் காண முடிந்தது.
(சிங்கப்பூரின் சில பொது இடங்களில் துரியன் பழத்தைக்கொண்டு செல்லக்கூடாது என்ற விசேட அறிவிப்புக் கூடக்காணப்படுவதுண்டு;காரணம் அதன் ’வாசனை’யிலுள்ள மகிமைதான்.)

‘ஆஷ் பனானா’ என்று சொல்லப்படும் சற்றே சாம்பல் நிறத்தில் இருக்கும் வாழைப் பழங்கள் அங்கே குவிந்து கிடப்பதை எங்களுக்குச் சுட்டிக் காட்டிய அஜித் ,அதனுடன் கூடவே அதிர்ச்சியான வேறொரு தகவலையும் அஞ்சல் செய்தார்;அந்தப்பழங்கள் மனித சக்தியைக்குறைப்பவை என்பதால் சிறையிலுள்ள கைதிகளுக்கு அவை தரப்படுவது அங்கே வழக்கமாம்.(சிறைப் பட்டவர்களுக்கு எப்படியெல்லாம் துன்பம் தரலாம் என்று இவர்கள் உட்கார்ந்து யோசிப்பார்கள் போலிருக்கிறது)

மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும் (அதைக் கூட dead city ஆகி விடும் என்றுதான் அமங்கலமாக வருணித்தார் அவர்) என்று சொன்னபடி,பொருட்கள் வாங்க விரும்பினால் வாங்கலாம் என்று மிகமிகச் சாதாரணமான வணிக வளாகம் ஒன்றில் எங்களைக் கொண்டுபோய் இறக்கி விட்டார் வழிகாட்டி.நானும்,இப் பயணத்தில் என்னைப் போல ஒற்றை ஆளாக வந்து என் அறைத் தோழியாக வாய்த்த சென்னையைச் சேர்ந்த சாரதாவும் அந்த வளகத்தை வெறுமே ஒரு முறை சுற்றி வந்துவிட்டு எதிரிலிருந்த நம்மூரைப் போன்ற டீக் கடையில் காப்பி குடிக்கச் சென்றோம்.

(பயணம் தொடரும்)

22.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(2)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


சென்னையிலிருந்து கிளம்பிய இலங்கைவிமானத்தில்(ஸ்றீலங்கன் விமானம்-UL122)ஏறியது முதலாகவே (பின்பு பாரீஸ் சென்ற ஸ்றீலங்கன் விமானத்திலும் கூட)என்னை ஈர்த்த ஒன்று,விமானத்திற்குள்ளும்,பிறகு இலங்கை விமான நிலையத்திலும் நிரம்பித் தளும்பிய தமிழ்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பல கோஷங்களை முழங்கியபடி இருந்தாலும்,தமிழ்நாட்டுக்குள் இயங்கும் விமான சேவைகளில் கூடக் காணவும் கேட்கவும் கிட்டாத தமிழ் அறிவிப்புக்கள் இலங்கை விமானசேவைகளில் நிறைந்து கிடப்பதைக் காணமுடிந்தது.

சிங்களம்,ஆங்கிலம் இவற்றோடு தீந்தமிழிலும் அறிவிப்புச் செய்து செவி குளிரச் செய்யும் விமானப் பணிப் பெண்கள்!
இருக்கைகளிலும்,விமான நிலையத்தின் மையமான பல இடங்களிலும்

’’அமர்ந்த வண்ணம் ஆசனப்பட்டியைப் பூட்டுங்கள்’’(seat belt)

‘’உயிர் காப்புச் சட்டை உங்கள் ஆசனத்தின் கீழ்’’(live vest)

‘’பயணப்பொதி’’(conveyar belt)

‘’குடிவரவுத் திணைக்களம்’’(department of immigration)பயணம்-புகைப்படங்கள்

‘’குடிஅகல்வுத் திணைக்களம்’'(department of emigration)

என்று அழகழகாகத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் அருமையான வாசகங்கள்...!

தமிழுக்குத் தரப்பட்டிருக்கும் முதன்மை சற்று மகிழ்ச்சியளித்தபோதும், தமிழுக்கு இடம் தரும் இடத்தில் தமிழருக்குமட்டும் இடமின்றிப் போனது ஏன் என்ற அடிப்படையான வினாவும்,இந்தச் சொற்களை இந்த அளவுக்குச் சிறப்பாகத் தமிழ்ப்படுத்திக் கொடுத்த தமிழ் ஆர்வலர்களும்,வல்லுநர்களும் உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் சிதறிக் கிடக்கிறார்களோ என்ற ஏக்கமும் உள்ளத்தின் ஒரு மூலையில் வலியோடு எழுவதைத் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை.

பண்டாரநாயகா பன்னாட்டு விமான நிலத்திலிருந்து 27 கி.மீ.தள்ளியிருந்த கொழும்பு நகரத்துக்கு எங்களை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்த விசேடப்பேருந்தில் நாங்கள் ஏறிக் கொள்ள ,உள்ளூர் வழிகாட்டி மைக்கைப்பிடித்தபடி இலங்கையின் சிறப்புக்களை வரிசையாக அடுக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் அந்த வருணனைகளுக்குள் செல்ல முடியாமல்-அவற்றில் கருத்துச் செலுத்த முடியாதபடி சொந்த சகோதரர்களின் துயரங்களை அசைபோட்டபடி, மனம் மரத்துப்போனவளாக உறைந்து போய்க் கிடந்தேன் நான். பயணத்தின் மகிழ்ச்சியைக் கூடத் தொலைத்து விட்டவளாகச் சாவு விசாரிக்க வந்திருப்பது போன்றதொரு கனத்த வெறுமை உணர்வு என்னை அப்போது பற்றிக் கொண்டிருந்தது.பேருந்து ஜன்னலில் முகத்தை அழுந்தப் பதித்தபடி நெடுஞ்சாலையை வெறித்துக் கொண்டுவந்த எனக்கென்னவோ அங்கே நிலவிய அமைதி ,ஒரு மயான அமைதியாக-செயற்கையான முறையில் வலிந்து வலிந்து உண்டாக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றிக் கொண்டிருந்தது.

வளைவுகள் அதிகமின்றி நீண்டுகொண்டே சென்ற அந்தக் குறுகிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென்றுஒரு சலசலப்பு எழவே என் சிந்தனை ஓட்டத்திலிருந்து உலுக்கப்பட்டவளைப் போல விழித்துக் கொண்டேன் நான்.வழிகாட்டியும்,ஓட்டுநரும் உரத்த சிங்களத்தில் சத்தம் போட்டுக்கொண்டிருக்க...., வண்டி நேராகப் போகாமல் ஏதோ அலைபாய்வதைப்போலக் குறுக்கு நெடுக்காக மறுகிக் கொண்டிருந்தது.எங்கள் பேருந்துக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று ,மடங்கி மடங்கிப் போக்குக் காட்டிக் கொண்டிருந்ததால் அதன் போக்கிற்கேற்பவே எங்கள் வண்டியும் சென்றாக வேண்டிய கட்டாயம்.

அந்த மண்ணுக்குள் அடியெடுத்து வைத்தது முதல் கலவையான பல உணர்வுகளின் பிடியில்சிக்கிப்போயிருந்த எனக்கு ,அந்த வேளையில் விபரீதமான கற்பனை ஒன்று தலையெடுக்கத் தொடங்கியிருந்தது.
சொந்த இனத்தின் அழிவு சம்பவித்த அதே இடத்தில்...இதோ..இப்பொழுதே நமக்கும் ஒரு முடிவு நேரிட்டு விடப் போகிறது!ஒன்று வண்டி விபத்துக்குள்ளாகும்...இல்லையென்றால் பேருந்துக்கு முன்பாகக் கோணல் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும் அந்த இரு சக்கரவாகனத்திலிருந்து மனித வெடிகுண்டொன்று கிளம்பி வந்து நம்மைத் தூள்தூளாக்கிப் போட்டு விடப் போகிறது....!

ஆனால்...., அப்படியெல்லாம் ஒன்றும் நேர்ந்து விடவில்லை.அந்த வாகனத்தில் சென்ற இளைஞர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டிச்செல்வதாக ,வழிகாட்டியும் ஓட்டுநரும் சிங்களத்தில்(ஏதோ கெட்ட வார்த்தையில்)வசைமாரி பொழிந்து கொண்டிருக்க அந்த மோட்டார் சைக்கிளும் வேகமெடுத்து வெகுதொலைவு சென்று மறைந்தது.
இதற்கும் தமிழர்கள் மீது பழியைப் போட்டு விடாமல்,குடிகாரர்கள் என்று சொன்னதோடு எங்கள் வழிகாட்டி நிறுத்திக் கொண்டதில் ஒரு சின்ன ஆறுதல்!
பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட...ஊடகங்களும்,அவை தரும் செய்திகளும் நம்மிடையே ஏற்படுத்தி விட்டிருக்கும் மனப்பிரமைகள் குறித்து வெட்கிப்போனேன் நான்.

’’இந்தியா விடும் கண்ணீர்த் துளி’’(like a tear drop falling from India)யைப் போல இலங்கையின் நில அமைப்பு வாய்த்திருப்பதான வருணனையோடு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார் எங்கள் வழிகாட்டி அஜித்.அது ஒரு கவித்துவத்துக்காகவே சொல்லப்பட்டபோதும் - குறிப்பிட்ட இந்தத் தருணத்தில் அதில் பொதிந்து கிடந்த நகை முரண் (irony)நெஞ்சைச் சுட்டது.சொல்வது இன்னதென்பதை உணராமலே .... மகத்தானதொரு உண்மையை அவர் பேசி விட்டாரென்றே எனக்குப் பட்டது.

சிங்களர்கள்,தமிழர்கள்,டச்சுக்காரர்கள் எனப்பல இனத்தவர்களும்,
இந்துக்கள்,பௌத்தர்கள்,இசுலாமியர்கள்,கிறித்துவர்களெனப் பல மதத்தவரும் இலங்கையில் வாழ்ந்தபோதும் மே 18 முதல் சிறுபான்மை என எவருமில்லை...எல்லோரும் இலங்கைக்குடிகளாக மட்டுமே ஆகி விட்ட நாள் அது என்று அவர் அழுத்திச் சொன்னபோது அவர் எதைக் குறி வைக்கிறார் என்பதை எங்கள் எல்லோராலுமே புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்கு இன்னும் கூடக் கூடுதல் அழுத்தம் சேர்ப்பதைப்போல
’’சிங்கம் போன்ற வலிமை என்பதைவைத்துத்தான் சிங்களம் என்ற சொல் வந்தது;ஆனால் இங்கே சிங்கமும் இல்லை,இப்போது புலிகளும் கூட இல்லை!’’
என்று ஏதோ ’பன்ச்’வைப்பதைப் போலப் பல தடவைகள் அவர் சொல்லிக் கொண்டே சென்ற விதம்,மனதை மிகவும் காயப்படுத்தியது.

‘’இங்கே சிங்கமும் இல்லை புலிகளும் இல்லை’’-வழிகாட்டி அஜித்


இலங்கை விமான நிலையத்தில் நேர்ந்த தேவையற்ற தாமதத்தால்,கொழும்பு நகரத்துக்குள் நுழைவதற்குமுன்பே மதிய உணவுக்கான நேரம் வந்துவிட , ஒரு சீன உணவகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டோம் நாங்கள்.
தமிழும்,தமிழரும் உள்ள நாட்டில் தமிழ் உணவுக்கா பஞ்சம்?(பாரீசில் கூடத் தமிழ் உணவத்துக்குச் சென்றவர்கள் நாங்கள்)எங்கள் வழிகாட்டியின் மனப் போக்கு புரிந்து விட வேறு வழியின்றி.....சுத்த சைவ உணவுக்காரியான நான் பயந்து பயந்து இலை தழை காய் கனி என்று எதையோ கொறித்துப் பசியாறி விட்டதாகக் கற்பிதம் செய்து கொண்டேன்.

இலங்கையில் எங்கள் ஓட்டுநரைப்பார்த்தபோது எனக்கென்னவோ அவர் இலேசாகப் பிரபாகரன் ஜாடையில் இருப்பதாகத் தோன்ற ,அவரை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.என் நோக்கம் புரியாத அவர் முகமெல்லாம் சிரிப்பாக ஒரு சிறிய தலையசைப்போடு அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்.என் உள் மன ஓட்டம் மட்டும் அவருக்குப் புரிந்திருந்தால்.....?

இலேசாகப் பிரபாகரன் ஜாடையில்....


உணவு முடிந்தபின் எங்கள் மிகச் சிறிய அரை நாள் கொழும்புச் சுற்றுலா தொடங்கியது.

மீண்டும் ஒரு நகை முரணாக(irony )என் கண்ணில் பட்ட முதல் இடம்...எல்லா இனத்தவர்க்கும்,மதத்தவர்க்கும் பொதுவான ஒருமயானம். மரண பூமியாகவே மாறிப்போய்விட்ட அந்ததேசத்தில் என் முதல் தரிசனமும்கூட ஒரு மயானத் தலமாகவே அமைந்து போனது.

(பயணம் தொடரும்)

இணைப்பு காண்க:
18நாட்கள்,10நாடுகள்.......(1)

15.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(1)

பயணத் தொடருக்கு ஒரு கட்டியம்:

பதினெட்டு நாட்கள்!
நான் நானாக மட்டுமே இருந்த பொன்னாட்கள்!

இந்தப் பிரபஞ்சத்தோடு...அதுகாட்டும் புதுமைகளோடு...உலகத்தின் தலை சிறந்த பல அதிசயங்களோடு,இயற்கை அற்புதங்களோடு,மனித அறிவின் உச்சகட்ட ஆக்கங்களோடு உறவாடிய நாட்கள்!

அவை ஏற்படுத்தும் மாயக் கவர்ச்சிகளோடும் -
இனிமையானதும் ......சிலபொழுதுகளில் கிலேசமானதுமான மனக் கிளர்ச்சிகளோடும் செலவிட்ட நாட்கள்!

அவற்றின் பின்னணியிலிருக்கும் வரலாறு,புவியியல்,மற்றும் சமூகத் தகவல்களோடு மட்டுமே ஊன் கலந்து உயிர் கலந்து ஒன்றிப் போயிருந்த நாட்கள்!

இறந்த காலம் மறந்து ,எதிர்காலம் தொலைத்து, நிகழ்கால நொடிகள் ஒவ்வொன்றையும் ஜென் கதையில் இடம்பெறும் தேநீர் பருகும் சடங்கைப்போலச் சொட்டுச் சொட்டாக ரசித்தபடி அவற்றில் மட்டுமே தோய்ந்து கரைந்து வாழ்ந்திருந்த நாட்கள்!

வாயிலில் அலறும் அழைப்பு மணிகளுக்கும்,அலைபேசிகளுக்கும் பதிலளிக்க அவசியமின்றி உள்ளுக்குள் மட்டுமே மூழ்கிக் கொண்டு புறத்தை ரசிக்கப் பாதை வகுத்துக் கொடுத்த பொன்னாட்கள்!

அடுத்தடுத்த வேலை என்று மனம் அடுக்கடுக்காக ஆணையிட்டுக் கொண்டே வரும் அன்றாடநியதிகளிலிருந்து சற்றே விலகி நின்று,அப்போதைய கணத்தை மட்டுமே ஆசை தீரப் பருகி மகிழ்ந்த அரிய நாட்கள்!

நினைவு மலர்ந்த நாள் முதல் தொடர்ச்சியாக இத்தனை நாட்கள் - கணநேரப்பதட்டமோ..கவலையோ இல்லாமல் இருந்ததே இல்லையே என்பதை ஆச்சரியத்தோடு நினைவுபடுத்திக்கொள்ள வைத்த அதிசய நாட்கள்!

இனியொரு முறை இது வாய்க்குமோ என எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் வைக்கும் இனிய நாட்கள்!


என் ஐரோப்பியப் பயணத்தில் எனக்கு வாய்த்த அற்புத நாட்கள் அவை!

கடமைகள்...பொறுப்புக்கள்...சுமைகள் என ஏதுமின்றிப் பதட்டங்கள் சிறிதுமின்றிப் பயணப்பொறுப்பாளர்களிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டுப் புறக் காட்சிகளைக் காணுவதும்....அவற்றைப் புகைப்படக்கருவியில் பதிவதும் மட்டுமே தொழிலாக.....
அறுபது வயதில் ஆறு வயதுக் குழந்தையாக நான் மாறிப் போய்விட்டிருந்த அந்த அபூர்வக் கணங்களை ......
நாள் வரிசைப்படி தொடர்ச்சியாக வலையில் முன் வைக்கிறேன்.

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு


இலங்கை,பிஞ்சுப் பருவம் முதலாகவே என் நெஞ்சுக்கு நெருக்கமாகியிருந்த ஒரு நாடு.தமிழகத்து மக்களுக்குக்கதை படிப்பதைத் தவிர வானொலி மட்டுமே வீட்டுப் பொழுதுபோக்காக இருந்த ஐம்பதுகளில்,இலங்கை வானொலியே என் உற்ற துணையாகவும்,தோழமைக்கான கருவியாகவும் இருந்து வந்திருக்கிறது.
இலங்கைத் தமிழும், இலங்கையின் பல ஊர்ப்பெயர்களும் நினைவு தெரிந்த நாளிலிருந்தே இலங்கை வானொலியின் அப்போதைய மதுரத் தமிழ்க்குரல்கள் வழி (முதல் கட்டத்தில் மயில் வாகனன்,பிறகு கே.எஸ்.ராஜா) எனக்கு நன்கு அறிமுகமாகி நேசத்திற்குரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.
பிறகு, தமிழ் இலக்கியத் துறையில் கால் பதித்த பிறகு,கம்பன் காட்டிய இலங்கை, அடுத்த கட்ட வளர்ச்சியாக நவீன இலக்கிய ஈடுபாட்டுக்குப்பின்பு இலங்கைப் படைப்பாளிகள் , திறனாய்வாளர்கள் ஆகியோரின் எழுத்துக்களில்கொண்ட ஆர்வம்,சமூக அக்கறை கொண்ட நபராக இலங்கை அரசியலின் மீதுகுறிப்பிட்ட கவனம் என இலங்கையைப் பற்றிய என் பார்வைகள் விரிவடைந்துகொண்டே வந்தபோதும்,அங்கே கால் பதிக்கும் வாய்ப்பு மட்டும் வாய்க்காத ஒன்றாகவே இருந்து வந்தது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொண்ட மலேசியா,சிங்கப்பூர் பயணத்தின்போதுதான் முதன்முதலாக இலங்கையை நான் எட்டிப் பார்த்தேன்.அப்போதும் கூட அது,விமானம் மாறுவதற்கான இடைப்பட்ட சிறிதுநேரத் தங்கல்தானே ஒழிய விமான நிலையம் தாண்டி,இலங்கைக்குள் செல்ல வாய்ப்பிருந்திருக்கவில்லை.கண்ணடிக்கதவுகள் வழியே இருட்டாகத் தெரியும் இலங்கை மண்ணையும்,கட்டுநாயகாவிலுள்ள பண்டாரநாயகா விமானநிலையப் பெயர்ப்பலகையையும் வெறித்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

ஈழவிடுதலையின் இறுதிக் கட்டப் போர் உக்கிரமாகத் துவங்கியிராத அந்த டிசம்பர் மாத நள்ளிரவுப் பொழுதொன்றில்-கிட்டத்தட்ட மூன்று மணிநேரக்காத்திருப்பில்....விமான நிலையத்திற்குள்ளாகவே சுற்றி வந்து கொண்டிருந்தேன் நான்.தமிழ் தெரிந்த சிங்களக் காவலர் ஒருவரோடு சகபயணி ஒருவர் உரையாடிக்கொண்டிருக்க அதில் நானும் போய்க் கலந்து கொண்டேன்.அதற்குச் சற்று முன்புதான் மும்பை தாஜ் ஓட்டல் முற்றுகை நடந்து முடிந்திருந்ததால் அதைச் சுட்டிக் காட்டிய அந்தக் காவலர் ‘’உங்கள் நாட்டில் மட்டும் குண்டு வெடிப்புக்கள் இல்லாமலிருக்கிறதா என்ன?’’என்று மடக்கிவிட்டுப் பொதுமக்களாகிய தாங்களெல்லாம் தமிழர்,சிங்களர்,இசுலாமியர் என்ற பேதம் கொஞ்சமுமின்றி வாழ்ந்து வருவதாகவே உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அவர் கூறியதை எப்படி நம்பாமலிருக்க முடியும் என்று தெரியவில்லை.ஆட்சியிலுள்ளவர்களின் ஆதிக்கப் போக்குக்கும் சராசரி மனித மனப்போக்குக்கும் இடையே இட்டு நிரப்பமுடியாத இடைவெளி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அப்போது கிறிஸ்துமஸ் விழாத் தருணமென்பதால் விமான நிலையம் மிக அழகாகவும்,ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
டிசம்பர் மாத நள்ளிரவுத் தங்கலில்....


அந்த அலங்காரங்களை விடவும் அங்கிருந்த குழந்தை ஏசுவின் குடிலும்,அருகிலிருந்த புத்தர் சிலையும் எனக்குள் என்னென்னவோ ரகசிய செய்திகளை ஓதிக் கொண்டிருந்தன.


அன்பையும் அகிம்சையையும் உயிராய்க் கொண்ட அந்தத் திரு உருவங்கள் அங்கே மௌனசாட்சியாக இருந்தது எதற்காக என்பது...,பொருள் விளங்காத ஒரு புதிராகவே எனக்குப்பட்டது.

அந்த நள்ளிரவுத் தங்கலுக்குப் பின்--மிகக் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகள் பலவற்றைக் கடந்து அடுத்த விமானம் நோக்கிச் சென்று விட்டதால் ஓரளவு ஆற அமரக் கூட இலங்கையைக் காணவும் அசைபோடவும் அப்போது சமயம் வாய்த்திருக்கவில்லை.

தற்பொழுது ஆகஸ்டில் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத் திட்டத்தில்-இலங்கைக்கென்றே ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் -என் மனம் சற்றே ஆறுதல் கொண்டது.
இங்கும் கூடச் சென்னையிலிந்து பாரீஸ் செல்லும் வழியில் ஒரு இடைத் தங்கல் மட்டும்தான்.ஆனாலும் பாரீஸ் விமானம் நடு இரவு ஒரு மணிக்கு மேல்தான் என்பதாலும் நாங்கள் சென்னையிலிருந்து காலை பதினொன்றரைக்கே இலங்கையை அடைந்து விடுவதாலும் ஒரு கூடுதல் போனஸாகக் கொழும்புப் பயணம் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவிலிருந்து...அதுவும் தமிழகத்திலிருந்து அங்கே வரும் எங்களுக்கு ஆயிரம் கெடுபிடிகள்...சோதனைகள்...உடல்நலப்பரிசோதனைகள்....! ஒருவழியாக எல்லாம் முடிந்து 06.08.09 நண்பகல் பன்னிரண்டு மணியளவில் கலவையான பல உணர்வுப் போராட்டங்களுடன்...சற்றுக்கனத்த நெஞ்சுடன் இலங்கை மண்ணில் கால் பதித்தேன் நான்.
இலங்கையை நோக்கி....




தமிழினத்தை ஒட்டுமொத்தமாகக் கையசைத்து வழியனுப்பி விட்டேன் என்கிறாரோ?
(விமான நிலையத்திற்கு வெளியே ராஜபக்‌ஷேயின் கட்அவுட்)



(பயணம் தொடரும்)

இணைப்பு பார்க்க:

ஐரோப்பியப் பயணம்
’ஷாலோமுக்கு ஒரு சலாம்’

13.10.09

ரீபில் தீர்ந்து போன பால் பேனா

கணவன்,வீடு,குழந்தைகள் என்று எப்போதுமே ஏதாவது ஒரு பொறுப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தாலும் கூடச் சில வேளைகளில்-தவிர்க்க இயலாதபடி பெண்ணுக்குள் ஒரு தனிமையும்,வெறுமையும் நேர்ந்து விடுவதை அண்மையில் ஆனந்த விகடன் இதழின் (23.09.09)‘சிறிது வெளிச்சம்’ பகுதியில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருந்த ‘தனியா இருந்தா என்ன தப்பு’ என்ற கட்டுரை அற்புதமாக முன் வைத்திருந்தது.

‘உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமலே போவது திருமணமாகிப் பத்து வருடங்களான பிறகு பெண்ணுக்குள் உருவாகும் தனிமையும் ,வெறுமையுமே’,

‘கணவன்
,குழந்தைகளுடன் பயணம் செய்வதைப்போலவே தன்னோடு படித்த தோழிகள் மற்றும் தனக்கு விருப்பமான தோழமையுடன் பயணம் செய்வதற்குப் பெண் உள்ளூர ஆசைப்படுகிறாள்.அது இயல்பானது..ஆனால் இந்த எளிய விருப்பம் ஒருபோதும் நிறைவேறுவதில்லை.
ஐந்து வருடங்களுக்குப்பின் தற்செயலாகச் சந்தித்த கல்லூரி நண்பனுடன் சேர்ந்து குடிக்கச் செல்வதில் ஆண் காட்டும் விருப்பம் அவனது மனைவியோடு பள்ளி முழுவதும் படித்த தோழியைத் தற்செயலாக மனைவி வழியில் சந்திக்கையில் அவளோடு சேர்ந்து ஒரு தேனீர் அருந்தக்கூட அனுமதிக்காதது என்ற நிலைதான் உள்ளது’


ஆகிய கட்டுரை வரிகள் , உலக நடப்பியலுக்கு நிதரிசனமான சான்றுகள்.
திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் சென்றபின் எந்தப் பெரிய பிணக்குக் காரணமாகவும் இல்லாமல் தனியே செல்லவேண்டும் என்பதற்காகவே இரண்டு நாட்கள் எவரிடமும் எதுவும் சொல்லாமல் கன்னியாகுமரி சென்று வந்த ஒரு பெண்ணைப் பற்றியும் அந்தச் செயல் குடும்பத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் பற்றியும் கூடத் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் திரு ராமகிருஷ்ணன்.

ஞான பீட பரிசு பெற்றவரும்,வங்கத்தின் மிகச் சிறந்த எழுத்தாளருமாகிய ஆஷா பூர்ணாதேவியின்


‘ரீபில் தீர்ந்து போன பால் பேனா ‘என்ற அற்புதமான சிறுகதை ஒன்றை நினைவுபடுத்துவதாகவும், அதைத் திரும்ப வாசித்துப் பார்க்கும் ஆசையைத் தூண்டுவதாகவும் அக் கட்டுரை அமைந்து விட்டது.

ஆஷா பூர்ணாதேவியின் அந்தக் கதை....

தன் இரண்டு மகன்,மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் லீலாவதி என்ற மூதாட்டி,ஒரு நாள் விடிகாலையில் எங்கோ போய் விடுகிறாள்.அவள் குளித்துவிட்டு வந்ததை மட்டுமே பார்த்திருந்த வேலைக்காரச் சிறுமிக்கு அவள் எங்கே போனாள் என்பது தெரியவில்லை.குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மும்முரத்தில் இருந்த மருமகள்களும் மாமியாரைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை.தாங்கள் அலுவலகத்துக்குக் கிளம்பும் நேரத்தில் மட்டுமே ஒப்புக்குத் தாயிடம் சொல்லிக்கொண்டு போகும் மகன்களுக்குச் சுத்தமாகத் தாயைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.காவல் துறைக்குத் தாயின் அங்க அடையாளங்களைத் தெரிவிக்கக் கூடத் தங்கள் மனைவிமார்களின் துணையை நாடுபவர்களாய்..அந்த அளவுக்குத் தங்கள் தாயிடமிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கிறார்கள் அவர்கள்.

வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் அவள் சார்ந்த குற்ற உணர்வு-அவளைத் தாங்கள் சரியாகப் பொருட்படுத்தியிராதது போன்ற ஓர் உணர்வு இருக்கிறது.ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் குற்றத்தை அடுத்தவர் மீது சுமத்தி ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்கிறார்கள்;வசை பாடிக் கொள்கிறார்கள்.
அவள் அடிக்கடி செல்லும் அவள் வயதொத்த தோழிகளின் வீடுகளுக்கும்,உறவினர் வீடுகளுக்கும் ஆளனுப்பிப் பார்க்கிறார்கள்.
அவள் உடனிருந்தபோது அவளுக்காகச் சிறிது நேரம் கூட ஒதுக்காத அவளது மகன் ,அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்புப் போட்டுவிட்டு அவளைப் பற்றி விசாரிக்கும் பணியில் முனைகிறார்.
செய்தி தெரிந்து நட்புக்களும் உறவுகளும் அடுத்தடுத்து விசாரிக்க வந்துவிடும் நிலையில் அவளது தலைமறைவை விடவும் குடும்ப கௌரவமே அந்தக் குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

இறுதியாகப் பள்ளியிலிருந்து திரும்பி வரும் பேரனால் புதிரின் ஒரு முடிச்சு மெள்ள அவிழ்கிறது.காலையில் அவனிடம் ஒரு பென்சில் (பால்பேனா) கேட்டு வாங்கிக் கடை சாமான் வந்த ஒரு பழுப்பு நிற உறையில் அவள் எதையோ கிறுக்கித் தர முயன்றிருக்கிறாள்.
பாதி எழுதும்போது பேனாவின் ரீபில் தீர்ந்து விட, அவள் எழுத வந்தது அரைகுறையாகவே முடிந்துவிட்டிருக்கிறது.
’’பாட்டி நிச்சயம் ஆத்திலே விழுந்து முழுகிப் போயிருப்பா’’ என்ற முன்னுரையுடன் தனது கால்சட்டைப் பையிலிருந்து சாக்லெட் பிசுபிசுப்பேறிய ஒரு கசங்கிய துண்டுக் காகிதத்தை எடுத்துக் கொடுக்கிறான் பேரன்.
‘’ நான் வெளியே போறேன்.திரும்பவில்லைன்னா என்னைத் தேட வேண்டாம். தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.நான்....’’
என்பதைத் தவிர அந்தச் சீட்டில் எதுவுமில்லை.

அவளது அந்தச் செயலுக்காக மீண்டும் குடும்பத்தார் ஒருவரை ஒருவர்குறை கூறிப் பழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில்,லீலாவதியே ஒரு ரிக்‌ஷாவில் வந்து இறங்கி விடுகிறாள்.
பிற வீடுகளிலுள்ள வயதான பெண்கள் ,பிறர் தயவின்றித் தானே எல்லாக் கோயில்களுக்கும் சென்று வருவதைப் பார்த்த அவளுக்குத் தானும் அப்படி ஒரு தடவை ஏன் தனியாகத் ‘தக்ஷிணேஸ்வரம்’சென்று வரக் கூடாது என்று தோன்றி விடவே தானும் அதைச் செயல்படுத்தி விட்டதாகக் கூறுகிறாள் அவள்.

மருமகள்களுக்கு என்னவோ அதில்நம்பிக்கையில்லை.
‘’இதெல்லாம் வெறும் சாக்கு! உண்மையிலேயே பிள்ளை மருமகள்களுக்கு அதிர்ச்சி கொடுக்க ஒருசூழ்ச்சி’’என நினைக்கிறார்கள் அவர்கள்.
அம்மா ஏதோ ஒரு திட்டத்துடன் போய்க் கடைசியாகப் பயந்து மனம் மாறியிருப்பாளோ என்பது மகன்களின் எண்ணம்.

ரீபில் தீர்ந்து போன பால்பேனாவைப் போலவே அவள் எழுத நினைத்ததும்....செயலாக்கத் திட்டமிட்டதும் அரைகுறையாகவே நின்று போயிருக்குமோ என்ற கேள்வியை எழுப்பியபடி முடியும் இந்தக் கதைக்கு
‘’லீலாவதி போன்றவர்களின் கதை பெரும்பாலும் ரீபில் தீர்ந்து போன பால்பாயிண்ட் பேனாவல்தானே எழுதப்படுகிறது’’
என்றுமுத்தாய்ப்பு வைத்து அவளது மனஓட்டம் என்னவாக இருக்கக் கூடும் என்பதை வாசக ஊகத்துக்கே விட்டு விடுகிறார் ஆஷா பூர்ணா தேவி.

முதுமையின் வெறுமை...பெண்ணின் தனிமை...முதிய பெண்ணின் வெறுமையும்,தனிமையும் என மூன்று அம்சங்களையும் முன் வைக்கும் அற்புதமான ஆக்கம் இது.

அம்பையின் ‘வெளிப்பாடு’ என்ற சிறுகதையும் கூட விருப்பப்படி வெளி இடங்களுக்குச் செல்ல வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் அதிக படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்களின் அக மன விருப்பத்தைப்பதிவு செய்திருக்கிறது.
ஒரு பெண்ணின் கனவுக்குள் அடிக்கடி சமுத்திரத்தின் தோற்றம் விரிந்து அவளை ஆசையோடு அழைக்கிறது.இயல்பான அந்த மன விருப்பம் ஒரு நோயாகப் பெரிதுபடுத்தப்பட்டு அவளது இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.
‘’திருச்செந்தூர் கோயில் விளால நான் பாத்திருக்கேன் சமுத்திரம்.ஒரு வாட்டி சொரம் வந்து ‘சமுத்திரம் சமுத்திர’முன்னு பெனாத்தினேன்.’பயித்தியக்காரி பயித்தியக்காரி’ன்னு இவுக ஒரே கோபம். அதென்னமோ வியாதிங்க. சமுத்திர சாபம்.சமுத்திரம் பார்க்கணுமே பார்க்கணுமேன்னுட்டுபறப்பேன். இவுக ஒரு அறை வைப்பாக அடங்கிடுவேன்..’’
என்கிறாள் அவள்.

அந்தச் சிறுகதையில் வரும் மற்றொரு பெண் தன் ஆசைகளை அப்பாவித் தனமாக இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகிறாள்.
‘தெருல நடக்கணும் தெனம்
ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும்
கடைக்குப்போய் நானே பொடவை எடுக்கணும்
சினிமா போகணும்
நெறைய ஊர் பாக்கணும்’’

இந்த ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கு இவையெல்லாம் மிக மிக அற்பமாகக் கூடத் தோன்றலாம்.

ஆனாலும் இப்படிப்பட்ட இயல்பான...எளிமையான விருப்பங்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத பெண்கள் இந்த நவீன..பின் நவீன யுகத்திலும் கூட நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் அதைக் கண்டுகொள்ளாமல் நம் வசதிக்காகக் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம்.

மேலும் வாசிக்க...
ஆஷா பூர்ணாதேவி
-கருப்பு சூரியன்(சிறுகதைத்தொகுப்பு),சிந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை
(தமிழாக்கம்:சு.கிருஷ்ணமூர்த்தி-புவனாநடராஜன்)
அம்பை - வீட்டின் மூலையில் ஒரு சமையலறை(சிறுகதைத்தொகுப்பு),க்ரியா,சென்னை

இணைப்பு பார்க்க:அம்பையின் ''அடவி’’

11.10.09

கவிஞர் பாலா-சில நினைவுகள்....



வானம்பாடிக் கவிஞர் குழுவில் ஒருவரான திரு பாலா என்ற பேராசிரியர் (முனைவர் )பாலச்சந்திரன் அவர்கள் , இன்று நம்மிடை இல்லை என்பதை எண்ணுகையில் இதயம் கனக்கிறது.

திரு பாலாவின் மரணத்தை நான் மிகவும் தாமதமாகவே அறிய நேர்ந்தது.
அண்மையில் இல்லாவிட்டாலும்,அடிக்கடி சந்தித்துப் பழகாத போதும் சில இழப்புக்கள் நம்மைப் பாதிப்பதுண்டு.திரு பாலாவின் மறைவிலும் நான் அது போலவே உணர்ந்தேன்.

சில கவியரங்குகள்,திறனாய்வுக் கருத்தரங்குகள் இவற்றில் மட்டுமே சந்தித்திருந்தாலும் கூட -சிறிது நேரச் சந்திப்பிலேயே ஈர்த்துவிடக் கூடியவை பாலாவின் எளிமையும்,கனிவான..இனிமையான அவரது இயல்புகளும்.
ஆயினும் நேரடியான பழக்கத்தை விடவும் பாலாவை அவரது எழுத்துக்கள் வழியாக நான் அறிந்து கொண்டதே மிகுதி.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழக ஆங்கிலத் துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற திரு பாலா , தமிழ்ப் புதுக் கவிதைக்கு வளம் சேர்த்தது,தமிழின் நற்பேறுகளில் ஒன்று.ஆங்கில இலக்கியப் பின்புலத்தோடு தமிழ் மரபுகளையும் அறிந்தவர்களாய்ப் படைப்பாக்கங்களில்-குறிப்பாகக் கவிதை-ஈடுபடும் பலர்,தமிலக்கியத்திற்கு மேலும் அழுத்தமும் செறிவும் கனமும் ஊட்டியிருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.அதற்கு மிகச் சிறந்த உதாரணம் திரு பாலா.

கவிதைப்படைப்பாளி என்பதோடு ,கவிதை விமரிசகர்,திறனாய்வாளர்,மொழிபெயர்ப்பாளர்,சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினர் எனப் பல முகங்கள் கொண்டவராய் இருந்தவர் பாலா.
‘புதுக் கவிதை ஒரு புதுப் பார்வை’ என்ற அவரதுநூல் புதுக் கவிதை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவே அமைந்திருக்கிறது.

மேலை இலக்கியக் கோட்பாடுகளைத் தமிழில் முன் வைக்கும் பலரும் தமிழ்த் தன்மையோடு அதை இணைத்து உட்செரித்துக்கொடுப்பதில்லை.அதனாலேயே அந்த நூல்களுக்கு ஒரு செயற்கைத் தன்மை ஏற்பட்டு விடுகிறது.அப்படிப்பட்ட குறை தவிர்த்த அருமையானதொரு நூல் திரு பாலாவின் ‘சர்ரியலிசம்’.அக் கோட்பாட்டின் ஆதிமூலம் தொட்டு எளிமையும்,தெளிவுமாக விளக்கிக் கொண்டு போகும் பாலா அதை ஒப்புநோக்கிப் பார்ப்பதற்குப் பிறமொழிச் சான்றுகளை மட்டும் கொடுத்துவிட்டுப் போகாமல் தமிழ்க் கவிதைகளில் தென்படும் சர்ரியலிசக்கூறுகளையும் ஒருங்கிணைத்துக் காட்டியிருப்பதே அந்நூலின் தனிச்சிறப்பு.

நவீனத்துவம்,பின் நவீனத்துவம் குறித்து இது வரை தமிழில் பல நூல்கள் வந்துள்ளபோதும்,பாலாவின் சர்ரியலிசத்தைப்போன்ற தெளிவும் நேரடித் தன்மையும் அவற்றில் இல்லை.பாலா அவர்களை ஒரு முறை நேரில்சந்தித்தபோது இது குறித்துக் கூறிக் குறைப்பட்ட நான் , இலக்கிய மாணவர்களின் பொருட்டாகவேனும் சர்ரியலிசத்தைப் போலவே பிற மேலைக்கோட்பாடுகளையும் அவர் நூலாக எழுதியளிக்கவேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.தனக்கும் அப்படி ஒரு திட்டம் இருப்பதாக கூறிய அவர் விரைவில்அந்தப் பணியை மேற்கொண்டு முடிக்கப்போவதாகக் கூறியிருந்தார்.அதற்குள் இவ்வாறான முடிவு அவருக்கு நேர்ந்து விட்டதைத் தமிழின் தவக்குறைவு என்றே கூற வேண்டியிருக்கிறது.

சிவகங்கைத் தமிழ்ப்பேராசிரியரும்,அன்னம் பதிப்பகத்தின் மூலம் புதுக்கவிதை முயற்சிகள் பலவற்றையும் ஊக்குவித்து இளம் படைப்பாளிகளை வளரச் செய்தவரும்,’கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ என்ற கவிதை நூலின் வழி இளைஞர்களைப் பெருமளவில் ஈர்த்தவருமான கவிஞர் திரு மீரா வின் நெருங்கிய நண்பராக விளங்கிய பாலா , மீராவைப்பற்றி ஒரு ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் திரு பாலாவின் அறுபதாம் ஆண்டு விழாவை ஒட்டிய மணிவிழா மலருக்கு அவரைப்பற்றி எழுதுமாறு எனக்கு வந்த கடிதம், மிகத் தாமதமாகக் காலம் தாழ்த்தி வந்து சேர்ந்ததால் அப்போது அதை எழுத முடியாமல் போய்விட்டது.இப்பொழுது இந்த மரண அஞ்சலியை எழுதுவது மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது.அதுவே காலம் எனக்கு விதித்த கட்டளை போலிருக்கிறது.

பாலாவின் பிற நூல்கள்;

‘இன்னொரு மனிதர்கள்’ -கவிதை,
‘திண்ணைகளும் வரவேற்பறைகளும்’-கவிதை,
பாரதியும்,கீட்சும்,
கவிதைப்பக்கம்


கவிஞர் பாலாவின் நினைவாக அவர் கவிதைகளில் ஒன்று;

ஒரு தலைவன் பிறக்காத
நாளும் ஒரு நாளா
365தலைவர் இல்லாத
நாடும் ஒரு நாடா’

8.10.09

’குற்றமும் தண்டனையும்’-கடிதமும்,பதிவும்

’குற்றமும் தண்டனையும்’நாவல்மொழிபெயர்ப்புப்பற்றி வாசக அன்பர் திரு இளங்கோ அவர்கள் எனக்கொரு மின் அஞ்சல் அனுப்பியதோடு அந்நூல்பற்றித் தன் வலையிலும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புள்ள சுசீலா அம்மா அவர்களுக்கு,

தாங்கள் மொழி பெயர்த்த 'குற்றமும் தண்டனையும்' புத்தகத்தை படித்து முடித்து விட்டு, உங்களுக்கு இம் மடலை வரைகின்றேன். உங்கள் உழைப்பை என்னவென்று சொல்வது ? நன்றிகள் மட்டுமே என்னால் சொல்ல முடியும். வாழ்க தங்கள் தொண்டு.

நாவலை பற்றி என்னுடைய, வலை தளத்தில் ஒரு சிறு கட்டுரை எழுதி உள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும்.
http://ippadikkuelango.blogspot.com/2009/09/crime-and-punishment.html

நன்றியுடன்
இளங்கோ


திரு இளங்கோவின் வலைப்பதிவு
ஒரு குற்றத்தை செய்து விட்டு அதற்கான தண்டனையை அனுபவிக்க ஒரு மனசு வேண்டும். அல்லது தான் செய்த குற்றம் சரியே என நினைத்து கொண்டிருப்பது. தன்னுடைய நோக்கில், தான் செய்த கொலை அல்லது திருட்டு போன்றவற்றை சந்தர்ப்ப வசத்தால் நேர்ந்தது என்றும் கூட சொல்லலாம். ஊருக்கு தப்பாக தெரியும் ஒரு குற்றம், குற்றம் செய்தவனின் மனசில் நல்லதாக படலாம்.

ஒரு மாணவன், ஏதோ ஒரு நோக்கத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ஊரில் நடமாடி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் நபர்களிடம் இவன் நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடமே அந்த கொலையை பற்றி பேசி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?. அவனுடைய மனசாட்சி அவனை விடுவதில்லை. அவன் அவற்றை எதிர் கொள்ள தயார் ஆகின்றான். அப்படியும் ஒரு நப்பாசை, தப்பிக்கலாமா அல்லது கடைசி வரை மோதி பார்க்கலாமா என்று.

கடைசியில் அவன் தன் தங்கையிடம் சொல்கிறான். "குற்றமா ? எது குற்றம் ?, அந்த கிழவியினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மிகவும் கேவலமான பிறவி அவள். அவளை கொன்றது, நாற்பது பாவங்களுக்கு மன்னிப்பை தேடி கொண்டதுக்கு சமம்."

"அண்ணா என்ன சொல்லி கொண்டிருக்கிறாய் நீ. எப்படியானாலும் நீ ரத்தம் சிந்த வைத்திருக்கிறாய் என்பது உண்மைதானே ? " தங்கை.

"எல்லோரும்தான் ரத்தம் சிந்தி கொண்டிருக்கிறீர்கள், இந்த பூமியில் எப்போதுமே மனித குல வரலாற்றில் நாம் கடந்து வந்திருக்கிற எல்லா காலங்களிலும் ரத்தம் பிரவாகமாக ஓடி கொண்டுதான் இருக்கிறது. 'ஷம்பைனை' உடைத்து ஊற்றியது போல ரத்தம், இங்கே பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது !. அப்படி ஓட வைத்த மனிதர்கள்தான் தலை நகரங்களில் மன்னர்களாக முடி சூடி கொண்டிருக்கிறார்கள் ! பிற்பாடு அவர்களைத்தான் மனித குலத்தின் காவலர்களாக இந்த உலகம் அழைக்கிறது ! சந்தர்ப்ப வசத்தால் நான் மாட்டி கொண்டேன். இல்லையெனில், நானும் முடி சூட்டி கொண்டிருப்பேன்! ஆனால் இப்போது வலையில் வீழ்ந்து விட்டேன்."

ஒரு முறை நினைத்து பாருங்கள், ஒரு கொலையை செய்தவனுக்கு தண்டனை. கூட்டம் கூட்டமாக கொலை செய்பவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். அவர்களுக்கு பெயர் மன்னர், அதிபர், இத்யாதிகள். அவன் கேட்கும் ஒரே கேள்விக்கு நம்மால் யாராவது பதில் சொல்ல முடியுமா? . உலகின் எல்லா மூலையிலும் நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கு யார் பொறுப்பு. அவன் கொன்றது, ஒரு நல்ல மனிதனை இல்லை. அவன் நல்லவன்தான். வட்டிக்கு பணம் விட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் ஒரு கிழவியை கொல்வது குற்றமா, அவள் நல்லவளாக இருந்திருந்தால் அவன் இந்த செயலை செய்திருக்க மாட்டான்.

பக்கம் பக்கமாய் உரையாடல்கள், மனதை படிப்பது போல. குற்றம் செய்தவனின் மன நிலைக்கு பக்கத்தில் நம்மை இட்டு செல்கிறது ரஷ்ய நாவலான, குற்றமும் தண்டனையும். பியாதோர் தஸ்தெவெஸ்கி எழுதியுள்ள இந்நாவலை, எம்.ஏ.சுசீலா அம்மையார் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு மேல் இரவில் படித்து முடித்தேன். நான் படித்த நாவல்களில் பெரிய நாவல் இதுதான். நாவலில் வரும் அத்தனை கதை மாந்தர்களின் பேர்தான் ரஷ்ய மொழியே தவிர, அவர்களை நாம் நம்முடைய ஊரிலும் பார்க்கலாம்.

நாவலில் வரும், ரஸ்கொல்நிகொவ் தான் கதாநயகன். கொலையை செய்தவனும் இவனே. இவனின் அம்மாவாக வரும் பல்கேரியா, தங்கையாக வரும் துனியா, நண்பனாக வரும் ரசூமிகின், காதலியாக வரும் சோனியா... அடுக்கி கொண்டே போகலாம். பாத்திர படைப்பு என்றால், இப்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவரை பற்றியும் நமக்கு நன்றாக தெரிந்த பக்கத்து வீட்டு நபர்களை போல கொண்டு செல்கிறது நாவல்.

இதை தமிழில் மொழி பெயர்த்து என் போன்ற நபர்களை படிக்க தூண்டிய, சுசீலா அம்மா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல. 550 பக்கங்களுக்கு மேலாக மொழி பெயர்த்த அவர்களின் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்




அடுத்ததாக ஒரு மாதம் முன்பு,சவுதிஅரேபியாவிலிருந்து முகம் தெரியாத ஒரு அன்பர் உணர்ச்சிப்பெருக்குடன் ‘குற்றமும் தண்டனையும்’ பற்றிய தன் மனப் பதிவுகளை மிகுந்த ஆர்வத்துடன் தொலைபேசி வழி பகிர்ந்து கொண்டார்.அவருக்கும் என் நன்றி.

தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றுமொரு உலகப்புகழ்பெற்ற நெடிய நாவலான ‘இடியட்’டின் மொழிபெயர்ப்புப் பணியில் நான் தீவிரமாக முனைந்திருக்கும் இவ்வேளையில் ,இவ்வாறான ஊக்கமொழிகள் என்னை உற்சாகத்தோடு செயல்படவைக்கின்றன.

புத்தாண்டில் ‘இடியட்’ மொழியாக்கம் மதுரை பாரதி புத்தகநிலையத்தாரின் வெளியீடாக வரவிருக்கிறது என்ற நற்செய்தியை வலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

’இடியட்’நாவலின் மையப்பாத்திரம் இளவரசன் மிஷ்கின்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....