துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(2)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


சென்னையிலிருந்து கிளம்பிய இலங்கைவிமானத்தில்(ஸ்றீலங்கன் விமானம்-UL122)ஏறியது முதலாகவே (பின்பு பாரீஸ் சென்ற ஸ்றீலங்கன் விமானத்திலும் கூட)என்னை ஈர்த்த ஒன்று,விமானத்திற்குள்ளும்,பிறகு இலங்கை விமான நிலையத்திலும் நிரம்பித் தளும்பிய தமிழ்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று பல கோஷங்களை முழங்கியபடி இருந்தாலும்,தமிழ்நாட்டுக்குள் இயங்கும் விமான சேவைகளில் கூடக் காணவும் கேட்கவும் கிட்டாத தமிழ் அறிவிப்புக்கள் இலங்கை விமானசேவைகளில் நிறைந்து கிடப்பதைக் காணமுடிந்தது.

சிங்களம்,ஆங்கிலம் இவற்றோடு தீந்தமிழிலும் அறிவிப்புச் செய்து செவி குளிரச் செய்யும் விமானப் பணிப் பெண்கள்!
இருக்கைகளிலும்,விமான நிலையத்தின் மையமான பல இடங்களிலும்

’’அமர்ந்த வண்ணம் ஆசனப்பட்டியைப் பூட்டுங்கள்’’(seat belt)

‘’உயிர் காப்புச் சட்டை உங்கள் ஆசனத்தின் கீழ்’’(live vest)

‘’பயணப்பொதி’’(conveyar belt)

‘’குடிவரவுத் திணைக்களம்’’(department of immigration)பயணம்-புகைப்படங்கள்

‘’குடிஅகல்வுத் திணைக்களம்’'(department of emigration)

என்று அழகழகாகத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் அருமையான வாசகங்கள்...!

தமிழுக்குத் தரப்பட்டிருக்கும் முதன்மை சற்று மகிழ்ச்சியளித்தபோதும், தமிழுக்கு இடம் தரும் இடத்தில் தமிழருக்குமட்டும் இடமின்றிப் போனது ஏன் என்ற அடிப்படையான வினாவும்,இந்தச் சொற்களை இந்த அளவுக்குச் சிறப்பாகத் தமிழ்ப்படுத்திக் கொடுத்த தமிழ் ஆர்வலர்களும்,வல்லுநர்களும் உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் சிதறிக் கிடக்கிறார்களோ என்ற ஏக்கமும் உள்ளத்தின் ஒரு மூலையில் வலியோடு எழுவதைத் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை.

பண்டாரநாயகா பன்னாட்டு விமான நிலத்திலிருந்து 27 கி.மீ.தள்ளியிருந்த கொழும்பு நகரத்துக்கு எங்களை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்த விசேடப்பேருந்தில் நாங்கள் ஏறிக் கொள்ள ,உள்ளூர் வழிகாட்டி மைக்கைப்பிடித்தபடி இலங்கையின் சிறப்புக்களை வரிசையாக அடுக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் அந்த வருணனைகளுக்குள் செல்ல முடியாமல்-அவற்றில் கருத்துச் செலுத்த முடியாதபடி சொந்த சகோதரர்களின் துயரங்களை அசைபோட்டபடி, மனம் மரத்துப்போனவளாக உறைந்து போய்க் கிடந்தேன் நான். பயணத்தின் மகிழ்ச்சியைக் கூடத் தொலைத்து விட்டவளாகச் சாவு விசாரிக்க வந்திருப்பது போன்றதொரு கனத்த வெறுமை உணர்வு என்னை அப்போது பற்றிக் கொண்டிருந்தது.பேருந்து ஜன்னலில் முகத்தை அழுந்தப் பதித்தபடி நெடுஞ்சாலையை வெறித்துக் கொண்டுவந்த எனக்கென்னவோ அங்கே நிலவிய அமைதி ,ஒரு மயான அமைதியாக-செயற்கையான முறையில் வலிந்து வலிந்து உண்டாக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றிக் கொண்டிருந்தது.

வளைவுகள் அதிகமின்றி நீண்டுகொண்டே சென்ற அந்தக் குறுகிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென்றுஒரு சலசலப்பு எழவே என் சிந்தனை ஓட்டத்திலிருந்து உலுக்கப்பட்டவளைப் போல விழித்துக் கொண்டேன் நான்.வழிகாட்டியும்,ஓட்டுநரும் உரத்த சிங்களத்தில் சத்தம் போட்டுக்கொண்டிருக்க...., வண்டி நேராகப் போகாமல் ஏதோ அலைபாய்வதைப்போலக் குறுக்கு நெடுக்காக மறுகிக் கொண்டிருந்தது.எங்கள் பேருந்துக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று ,மடங்கி மடங்கிப் போக்குக் காட்டிக் கொண்டிருந்ததால் அதன் போக்கிற்கேற்பவே எங்கள் வண்டியும் சென்றாக வேண்டிய கட்டாயம்.

அந்த மண்ணுக்குள் அடியெடுத்து வைத்தது முதல் கலவையான பல உணர்வுகளின் பிடியில்சிக்கிப்போயிருந்த எனக்கு ,அந்த வேளையில் விபரீதமான கற்பனை ஒன்று தலையெடுக்கத் தொடங்கியிருந்தது.
சொந்த இனத்தின் அழிவு சம்பவித்த அதே இடத்தில்...இதோ..இப்பொழுதே நமக்கும் ஒரு முடிவு நேரிட்டு விடப் போகிறது!ஒன்று வண்டி விபத்துக்குள்ளாகும்...இல்லையென்றால் பேருந்துக்கு முன்பாகக் கோணல் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும் அந்த இரு சக்கரவாகனத்திலிருந்து மனித வெடிகுண்டொன்று கிளம்பி வந்து நம்மைத் தூள்தூளாக்கிப் போட்டு விடப் போகிறது....!

ஆனால்...., அப்படியெல்லாம் ஒன்றும் நேர்ந்து விடவில்லை.அந்த வாகனத்தில் சென்ற இளைஞர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டிச்செல்வதாக ,வழிகாட்டியும் ஓட்டுநரும் சிங்களத்தில்(ஏதோ கெட்ட வார்த்தையில்)வசைமாரி பொழிந்து கொண்டிருக்க அந்த மோட்டார் சைக்கிளும் வேகமெடுத்து வெகுதொலைவு சென்று மறைந்தது.
இதற்கும் தமிழர்கள் மீது பழியைப் போட்டு விடாமல்,குடிகாரர்கள் என்று சொன்னதோடு எங்கள் வழிகாட்டி நிறுத்திக் கொண்டதில் ஒரு சின்ன ஆறுதல்!
பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட...ஊடகங்களும்,அவை தரும் செய்திகளும் நம்மிடையே ஏற்படுத்தி விட்டிருக்கும் மனப்பிரமைகள் குறித்து வெட்கிப்போனேன் நான்.

’’இந்தியா விடும் கண்ணீர்த் துளி’’(like a tear drop falling from India)யைப் போல இலங்கையின் நில அமைப்பு வாய்த்திருப்பதான வருணனையோடு மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தார் எங்கள் வழிகாட்டி அஜித்.அது ஒரு கவித்துவத்துக்காகவே சொல்லப்பட்டபோதும் - குறிப்பிட்ட இந்தத் தருணத்தில் அதில் பொதிந்து கிடந்த நகை முரண் (irony)நெஞ்சைச் சுட்டது.சொல்வது இன்னதென்பதை உணராமலே .... மகத்தானதொரு உண்மையை அவர் பேசி விட்டாரென்றே எனக்குப் பட்டது.

சிங்களர்கள்,தமிழர்கள்,டச்சுக்காரர்கள் எனப்பல இனத்தவர்களும்,
இந்துக்கள்,பௌத்தர்கள்,இசுலாமியர்கள்,கிறித்துவர்களெனப் பல மதத்தவரும் இலங்கையில் வாழ்ந்தபோதும் மே 18 முதல் சிறுபான்மை என எவருமில்லை...எல்லோரும் இலங்கைக்குடிகளாக மட்டுமே ஆகி விட்ட நாள் அது என்று அவர் அழுத்திச் சொன்னபோது அவர் எதைக் குறி வைக்கிறார் என்பதை எங்கள் எல்லோராலுமே புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்கு இன்னும் கூடக் கூடுதல் அழுத்தம் சேர்ப்பதைப்போல
’’சிங்கம் போன்ற வலிமை என்பதைவைத்துத்தான் சிங்களம் என்ற சொல் வந்தது;ஆனால் இங்கே சிங்கமும் இல்லை,இப்போது புலிகளும் கூட இல்லை!’’
என்று ஏதோ ’பன்ச்’வைப்பதைப் போலப் பல தடவைகள் அவர் சொல்லிக் கொண்டே சென்ற விதம்,மனதை மிகவும் காயப்படுத்தியது.

‘’இங்கே சிங்கமும் இல்லை புலிகளும் இல்லை’’-வழிகாட்டி அஜித்


இலங்கை விமான நிலையத்தில் நேர்ந்த தேவையற்ற தாமதத்தால்,கொழும்பு நகரத்துக்குள் நுழைவதற்குமுன்பே மதிய உணவுக்கான நேரம் வந்துவிட , ஒரு சீன உணவகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டோம் நாங்கள்.
தமிழும்,தமிழரும் உள்ள நாட்டில் தமிழ் உணவுக்கா பஞ்சம்?(பாரீசில் கூடத் தமிழ் உணவத்துக்குச் சென்றவர்கள் நாங்கள்)எங்கள் வழிகாட்டியின் மனப் போக்கு புரிந்து விட வேறு வழியின்றி.....சுத்த சைவ உணவுக்காரியான நான் பயந்து பயந்து இலை தழை காய் கனி என்று எதையோ கொறித்துப் பசியாறி விட்டதாகக் கற்பிதம் செய்து கொண்டேன்.

இலங்கையில் எங்கள் ஓட்டுநரைப்பார்த்தபோது எனக்கென்னவோ அவர் இலேசாகப் பிரபாகரன் ஜாடையில் இருப்பதாகத் தோன்ற ,அவரை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.என் நோக்கம் புரியாத அவர் முகமெல்லாம் சிரிப்பாக ஒரு சிறிய தலையசைப்போடு அதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்.என் உள் மன ஓட்டம் மட்டும் அவருக்குப் புரிந்திருந்தால்.....?

இலேசாகப் பிரபாகரன் ஜாடையில்....


உணவு முடிந்தபின் எங்கள் மிகச் சிறிய அரை நாள் கொழும்புச் சுற்றுலா தொடங்கியது.

மீண்டும் ஒரு நகை முரணாக(irony )என் கண்ணில் பட்ட முதல் இடம்...எல்லா இனத்தவர்க்கும்,மதத்தவர்க்கும் பொதுவான ஒருமயானம். மரண பூமியாகவே மாறிப்போய்விட்ட அந்ததேசத்தில் என் முதல் தரிசனமும்கூட ஒரு மயானத் தலமாகவே அமைந்து போனது.

(பயணம் தொடரும்)

இணைப்பு காண்க:
18நாட்கள்,10நாடுகள்.......(1)

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....