துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.2.09

சிறகுலகில் மீண்டும்....சூர்சரோவர்


















பரத்பூருக்கு மிக அருகாமையிலேயே உள்ள மற்றுமொரு அற்புதமான பறவைகள் சரணாலயம்,' சூர் சரோவர்'. ஆக்ரா-தில்லி தேசிய நெடுஞ்சாலையில், ஆக்ராவுக்கும் மதுராவுக்கும் இடையே(ஆக்ரா நகர எல்லை முடிவடையும் இடத்திலேயே இந்த இடம் நம் கண்களில் பட்டுவிடுகிறது) அமைந்துள்ள இப்பகுதி, கண்ணனின் வடமதுரைக்குப்பக்கத்தில் அமைந்திருப்பதனாலோ என்னவோ, கண்ணனும்,ராதையும் காதலிசை பாடிக்களித்த இடமாகக்கருதப்படுகிறது. அந்தக்காதலை மையமாக்கி 'பக்தி காவ்யம்' என்ற கவிதை நூலைப்படைத்த கவி சூர்தாசின் நினைவாகவே 'சூர்சரோவர்' என்ற பெயரும் இதற்கு வழங்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இச்சரணாலயம்,எங்கோ தொலைதேசங்களிலிருந்தெல்லாம் இளைப்பாற வரும் பலவகைப்பறவைகளுக்கு இனியதொரு புகலாகத்திகழ்கிறது.1991 ஆம் ஆண்டு முதல் 'பறவைகள் சரணாலய'மாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில், பிற இடங்களிலிருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகளும் உண்டு;இங்கேயே நிலையாகக்குடியிருக்கும் பறவைகளும் உண்டு. இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் அடங்கும் கிட்டத்தட்ட 126 இனங்களைச்சேர்ந்த புள்ளினங்கள்,இங்கே இருப்பதாகக்கண்டறியப்பட்டிருக்கிறது.
4.03 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட இப்பகுதி, 7.83சதுர கி.மீ அளவுக்கு அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.செயற்கையான வனப்பகுதிகளும்,சதுப்புநிலக்காடுகளும் இங்கே புகல் தேடி வரும் பறவைகளின் வசதிக்காகப்புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

சூர்சரோவரின் தனிச்சிறப்பு. ஐங்கோண வடிவில் இங்கே விரிந்து பரந்து கிடக்கும் அற்புதமான ஆழமான ஏரி. ஏரிக்குள் படகில் பயணிக்கையில் ஆங்காங்கே புதர்களில் கூட்டம் கூட்டமாக, கொத்துக்கொத்தாக நம் கண்களுக்குத்தென்படுபவை, இளஞ்சிவப்பு நிறம் கொண்ட 'பெலிகன்'நாரைகள். ஒரே இடத்தில் இத்தனை நாரைகளை ஒட்டுமொத்தமாக- ஒன்றாகக்காண்பது,பரவசச்சிலிர்ப்பூட்டும் அருமையான,அதிசயமான ஒரு அனுபவம். ஏரியின் வற்றாத நீர்ப்பரப்பும், அங்கு நிலவும் இதமான தட்ப வெப்பமும் பறவைகளுக்கு இதமளித்தபோதும், கடலைப்போன்ற அதன் ஆழம் அவற்றுக்குப்பாதகமாகவே இருக்கிறது.ஏரிக்குள் கால் பதித்து நின்று வேட்டையாடவும்,புதர்களுக்குள் கூடுகளை அமைத்துக்கொண்டுகுடியிருக்கவும் அவ்வாறன இடத்தில் வாய்ப்பு சற்றே குறைவு என்பதாலேயே- இத்தனை அழகு கொஞ்சும் இந்த இடத்தில் ,பரத்பூரைத்தேடி வருவதைப்போல -அந்த எண்ணிக்கையில் பறவைகள் இங்கே மிகுதியாக வருவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார், அங்கிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர். அந்தக்குறையை ஈடுகட்டுவதற்காகவே செயற்கையான சதுப்பு நிலங்களை உருவாக்கும் முயற்சிகள் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறவைகளைத்தவிர வேறு பல உயிரினங்களின் புகலிடமாகவும் இச்சரணாலயம் விளங்குகிறது.பல இன மான்கள், பலவகைப்பாம்புகள்,நரி, ஓநாய், காட்டுப்பூனை,ஆமை, கரடி ,காட்டெருமைகள் எனப்பிரபஞ்சத்தின் ஜீவராசிகள் பலவற்றையும் இங்கே பார்க்க முடிகிறது. குறிப்பாகப் 'பைதான்'எனப்படும் மலைப்பாம்புகள், இந்த இடத்தில் அதிகம் இருப்பதால், அவற்றைப்பராமரிக்கவென்றே ஒரு தனி மையம் சரணாலயத்தினுள் இயங்கி வருகிறது. சூர்சரோவர் சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளில் ஒன்று,வன உயிர்களைப்பாதுகாக்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தோடு (Willd life SOS)இணைந்து வனத்துறையினர் மேற்கொண்டுவரும் 'கரடிகள்மீட்பு-மறுவாழ்வுத்திட்டம்'. (AGRA BEAR RESCUE).சரணாலயத்தைச்சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது,அங்குள்ள கரடிகள் காப்பகத்தைக்காணுமாறு வனப்பொறுப்பாளர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தபோதுகூட அதன் பின்னணியிலிருந்த அடர்த்தியான சோகத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் குறிப்பிட்ட அந்த இடத்திற்குச்சென்று, கரடிகள் பற்றிய குறும்படம்(ஆவணப்படம்)ஒன்றையும் பார்த்துவிட்டு, அங்கே வேலிக்குள் திறந்த வெளியில் உலவிக்கொண்டிருந்தபச்சிளம் கரடிக்குட்டிகளையும் கண்ட பிறகுதான் உண்மையான சிக்கல் இன்னதென்பது புரிபடத்தொடங்க,ஒரு கணம் மனம் கனத்துப்போயிற்று.

அடர்ந்த காட்டுப்பகுதிகளிலிருந்து,கரடிக்குட்டிகளை- அவை பிறந்ததுமே பிடித்து வந்து,அவற்றைவைத்து வித்தைகாட்டிப்பிழைப்பு நடத்துபவர்கள்,'கலந்தர்' என்னும் பிரிவைச்சேர்ந்த மக்கள். .கிட்டத்தட்ட நம்மூர் நரிக்குறவர்களைப்போன்றவர்கள் என்று அவர்களைக்கூறலாம்.அவர்களின் பிடியிலிருந்து குட்டிகளை மீட்டு வந்து, அவற்றுக்கு வனச்சூழலுடன் கூடிய மறு வாழ்வை அமைத்துத்தருவதே இத்திட்டத்தின் அடிப்படை.காலம் முழுவதும் கரடிவித்தைகாட்டியே பிழைப்பு நடத்திப்பழகிவிட்ட 'கலந்தர்'களுக்கு மாற்றுத்தொழிலை ஏற்படுத்திக்கொடுத்து- வேறுவகையான வாழ்வாதாரங்களை அவர்களுக்கு அமைத்துத்தருவதும் கூட இத்திட்டத்தின் ஒரு கூறாக இடம் பெற்றிருக்கிறது.
வனவிலங்குகளை அவற்றின் வாழ்விடங்களிலிருந்து பிரித்து வந்து காட்சிப்பொருளாக்கும் கொடுமயைக்குறைக்க இம்முயற்சிகள் ஓரளவு உதவியபோதும்,காட்டிலிருந்தும், தாயிடமிருந்தும் என்றோ பிரிந்து நகரச்சூழலுக்குள் வந்துவிட்ட கரடிகளுக்குத்தங்கள் பழைய வாழ்க்கைக்குத்திரும்புவது, சற்றுக்கடினமாகத்தான் இருக்கிறது.தாய்க்கரடியின் பாலைப்பருகி வளராத இவ்வகைக்குட்டிகளிடம் நோய் எதிர்ப்புச்சக்தியும்,தங்களுக்குப்பகையாக உள்ள விலங்குகளை இனம்கண்டு, ஈடு கொடுக்கும் போர்க்குணமும் குறைவாகவே உள்ளதாலும்,அவை மண்ணில் ஜனித்த மறுகணமே காட்டுச்சூழலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டதாலும் காடு என்பது அவற்றுக்கு மிரட்சியை ஊட்டும் ஒரு இடமாகவே அமைந்திருக்கிறது என்பது,விசித்திரமான,வேதனையளிக்கும் ஒரு முரண். அதனாலேயே வன வாழ்வுக்கு அவை ஆயத்தமாகும்வரை,விலங்கு மருத்துவர்களின் தனிப்பட்ட கண்காணிப்புக்கு உட்ப்படுத்தப்படுகின்றன; மனிதக்குழந்தைகளைப்போலப்புட்டிப்பால் அருந்திக்கொண்டு,தங்கள் ஆரோக்கியத்திற்காக அட்டவணைப்படுத்தப்பட்ட சத்துணவை இயந்திரத்தனமாக உண்டபடி...கம்பிவேலிக்குள் அமைதி உலா வருகின்றன. மீட்பும்,மறுவாழ்வும் சரியானவைதான் என்றபோதும்,அவற்றின் சுயமான வாழ்க்கைக்கு அவை திரும்பியாக வேண்டாமா என்ற கேள்வி எங்களை அரித்தெடுக்க, அதையே வினாவாக்கி உடன் வழிகாட்டுவோரிடம் முன் வைக்கிறோம்.காட்டு வாழ்க்கையை எதிர்கொள்ளத்தயாராகிவிட்ட கரடிகள், சுதந்திரமாக அவ்வாறே விடப்பட்டுவிடுகின்றன என்றும், இன்னமும் கூடக்காட்டைக்கண்டு மிரளும் சில கரடிகள், இறுதிவரையிலும்கூட அங்கேயே பராமரிக்கப்படுகின்றன என்றும் வரும் மறுமொழி, நம்மைத்துணுக்குற வைத்துவிடுகிறது.தங்கள் வேர்களை என்றோ துறந்துவிட்டு,அப்படித்துறந்துவிட்டதைக்கூட அறியாமல் இருக்கும் பாவப்பட்ட அந்த ஜீவன்கள், மனிதச்சுரண்டல்களின் மௌன சாட்சிகளாக அங்கே சுற்றிச்சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் காட்சி,இதயத்தைப்பிசைகிறது.

சூர்சரோவருக்கு விடைகொடுத்துவிட்டுப்புதுதில்லி நோக்கி விரையும் வழியில்,தேநீருக்காக இறங்கியபொழுது,அங்கேயிருந்த கடைவாசலில் குரங்குகளை வைத்து வித்தைகாட்டிக்கொண்டிருந்த கூட்டம் ஒன்று கண்ணில் பட,அவற்றின் மறுவாழ்வுஎப்போது சாத்தியமாகப்போகிறதோ என்ற நினைப்பில்,தொண்டைக்குள் இறங்கிக்கொண்டிருந்த தேநீர் ,சிறிது கூடுதலாகவே சுடுகிறது

















23.2.09

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார்



எளிமை,அர்ப்பணிப்புடன் கூடிய கடுமையான உழைப்பு, இசைத்துறை தவிர வேறு எதிலும் கவனத்தைச்சிதற விடாத ஆழமான லயிப்பு....இவற்றால் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப்பெற்று தமிழத்தின் -இந்தியத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி இசைக்கொடி நாட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

19.2.09

திருப்பூர் கலை இலக்கியப்பேரவை விருது

திருப்பூர் கலைஇலக்கியப்பேரவை, 2008ஆம் ஆண்டில் வெளியான தமிழ்நூல்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. அப்பட்டியலில் நான் மொழியாக்கம் செய்து, மதுரை பாரதி புத்தகநிலைய வெளியீடாகப்பதிப்பிக்கப்பட்டிருக்கும் பியோடார் தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நூலும் இடம் பெற்று சிறந்த மொழியாக்கத்திற்கான விருதைப்பெறவிருக்கிறது.29.03.09, மாலை திருப்பூரில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இச்செய்தியை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
செய்தி அறிந்ததுமே என்னை வாழ்த்தித்தன் வலையில் விரிவான தகவல் வெளிட்டிருக்கும் எழுத்தாளர் திருஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.
http://jeyamohan.in/?p=1780

காண்க; குற்றமும் தண்டனையும்- மொழியாக்க அனுபவம்

வாசக எதிர்வினைகள்;

வணக்கம்,ஜெய மோஹனின் இணைய தளம் முலமாக உங்களுக்கு திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் சிறந்த மொழியாக்கத்துக்கான விருது இவ்வருடம் அளிக்கப்பட்டிருக்கிறது என அறிந்தேன்.வாழ்த்துக்கள்.நன்றி, நாஞ்சில் மகி.

வணக்கம் உங்கள் சிறப்பான பணிக்குக் கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள் அம்மா.முனைவர் சே.கல்பனா.

10.2.09

சிறகுலகில் சிறிது நேரம்....பரத்பூர்

























''கானப்பறவை கலகலெனும் ஓசை'' யைப் பாரதியின் பாட்டில் ரசித்ததுண்டு. 'புள் சிலம்பு'வதை....'கீசுகீசென்று ஆனைச்சாத்தான் கலந்து பேசிய பேச்சரவத்தை'ஆண்டாளின் அழகுதமிழில் படித்துச்சொக்கியதுண்டு. ஆனால் நடைமுறை வாழ்வில் இது வரை அதற்காக நேரம் ஒதுக்க வாய்ப்பு கூடி வராமலே காலம் கடந்துபோய்க்கொண்டிருந்தது.'' நிலாப்பார்க்க என்றே நிலாப்பார்த்து வெகு காலமாயிற்று'' என்று வண்ணதாசன்(கல்யாண்ஜி) 'நிலாப்பார்த்தல்' கவிதைத்தொகுப்பில் குறிப்பிடுவது போல பறவைகளுக்காகவே பறவைகளைப்பார்ப்பது இது வரைநிகழவே இல்லை. ஏதோ தற்செயலாக அவற்றை எதிர்ப்படுவதோடு சரி;பதட்டமற்ற மனநிலை கைகூடிய நேரமாக இருந்தால் 'ஹலோ' சொல்வது போல ஒரு செல்லப்பார்வை, அதன் குரலொலி கேட்டு ஒரு மென்னகை...அவ்வளவுதான். வேலை அவசரமும்...விரையும் நடையுமாக இருக்கும்போது அந்த நொடியும் கூடத்தவறிப்போய்விடும். நாடகத்தில் ..காவியத்தில் நிழல் உருவங்களாக அவற்றை தரிசிப்பதோடு, ரசனை உணர்வில் திளைப்பதொடு சரி. நிழல், நிஜமாகிற வாய்ப்பு...., கூட்டம் கூட்டமாய்ப்பல ரகப்பறவைகளையும்,பன்னாட்டுப்பறவைகளையும் நேரில்..கண்டு ஒரு நாளாவது அவற்றோடு மட்டுமே நேரத்தைச்செலவிடும் அரிதான வாய்ப்பு, உலகின் மிகப்பெரிய 'பறவைப்புகலிடங்களில்' ஒன்றாகக்கருதப்படும் பரத்பூர் சென்றபோது அண்மையில் (9,10 ஜன.09) கிட்டியது. வாழ்க்கையில் மிக அபூர்வமாகவே வாய்க்கும் அருமையான ஒரு தருணத்தைத்தவற விட்டு விடாமல் தக்கவைத்துக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அங்கு சென்ற பின்னரே பூரணமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

உ.பி.,ராஜஸ்தான் எல்லையில், தில்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில்,மதுராவிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில்,ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்தான் பரத்பூர்.மதுராவிலிருந்து 35கி.மீ.தொலைவிலும்(தில்லியிலிருந்து 185 கி.மீ.),இந்தியாவின் உலக அதிசயமான தாஜ் மகாலிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இந்தச்சிறிய நகரத்திலேதான் உலகெங்குமுள்ள பறவை ஆர்வலர்களைக்கவர்ந்து தன் வயப்படுத்தும் ''பரத்பூர் பறவைகள் சரணாலயம்''அமைந்திருக்கிறது.ஆண்டு தவறாமல் ஏதோ ஒரு வேண்டுதலைப்போல'ஆராக்காதலுடன் அவர்கள் தேடி வருவது 'பறவைகளின் சொர்க்க'மான இந்த இடத்தை நோக்கித்தான்.
இப்பறவைகள் சரணாலயம், ''கியோலதெவோ தேசீயப்பூங்கா'(Keoladeo NationalPark) என்ற பெயரிலும், '' கானா (Ghana)பறவைப்புகலிடம்'' என்ற பெயரிலும்கூட வழங்கப்பட்டு வருகிறது.சரணாலய வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானின் பெயரே 'கியோலதெவொ'என்ற பெயருக்குக்காரணமாகச்சொல்லப்படுகிறது. ''கானா'' என்னும் சொல் அடர்த்தியைக்குறிப்பது. அடர் காடுகளும்,தாழ்வான நீர்ப்பரப்புக்கொண்ட சதுப்பு நிலப்பகுதிகளும் நிறைந்துள்ள இப்பகுதியைத்தான், தாங்கள்,காதல்செய்து கூடிக்களிப்பதற்கு ஏற்றதொரு இடமாகப்பறவையினங்கள் தேர்ந்துகொண்டிருக்கின்றன.

உலகின் தலைசிறந்த பறவைச்சரணாலயங்களில் ஒன்றாகப்புகழ் பெற்று விளங்கும் பரத்பூர் சரணாலயம், 29 சதுர கி.மீ.சுற்றளவில் பரந்து,விரிந்து கிடக்கிறது.சாஸ்வதமாகத்தண்ணீர் தேங்கியே கிடக்கும்(1 கி.மீ.,தூரத்திலுள்ள அஜான் அணையிலிருந்து வரும் தண்ணீர்,காப்பகத்தில் வற்றாமல் நீர் நிறைந்திருப்பதற்கும்,அங்குள்ள ஏரியை வற்றிப்போகாமல் பார்த்துக்கொள்வதற்கும் துணை செய்கிறது) சகதி மண்டிய சதுப்பு நிலக்காடுகளும்,புல்வெளிகளும்,அடர்ந்த புதர்களும் -பறவைகள் இனிய சூழலில் காதல் புரிய,இயற்கை நல்கிய இனிய கொடையாக அங்கே அமைந்திருக்கின்றன...அதனால்தான், ''அற்ற குளத்து அறு நீர்ப்பறவைகள்,'' உலகின் எந்தெந்த மூலைகளில் இருந்தெல்லாமோ குறிப்பிட்ட இந்த இடத்தை நாடி ஓடோடி(பறந்து) வந்துகொண்டிருக்கின்றன. குளிர் காலம் அண்மிக்கும் நேரமே,இங்கே பறவைகளின் கூத்தாட்டு தொடங்கும் நேரம்.வட கோளங்களிலிருந்தும், துருவப்பகுதிகளிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இங்கே கூட்டம் கூட்டமாய்ப்பறவைகளின் அணிவகுப்பு நிகழும் இனிய தருணம் அது.தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாய்க்கிடக்கும் தங்கள் இருப்பிடங்களிலிருந்து அவை, இடம்பெயர்ந்து வருவது அப்பொழுதுதான்.மேலை, கீழை நாட்டுப்பறவைகளோடு இந்தியப்பறவைகளும் சங்கமிக்கும் காட்சி...,. சர்வதேச எல்லைக்கோடுகளெல்லாம் அற்ப மானிட ஜாதிக்கு மட்டுமெ உரியதென்பதை நிரூபணம் செய்யும் அற்புதக்காட்சி.

இன்று, பறவைகளைப்பாசத்துடன் அரவணைத்துப்பாதுகாக்கும் இந்த பூமி, சிறிது காலத்திற்கு முன்பு வரை- அவைகளை இரக்கமில்லாமல் சுட்டு வீழ்த்தும் அரக்க பூமியாக-குறி தவறாத தங்கள்வேட்டைத்திறனை வெளிக்காட்டிக்கொள்ளவென்றே அவற்றின் குருதியைப்பெருக்கெடுத்தோட வைக்கும் அசுர பூமியாக விளங்கியிருக்கிறது என்பது மறைக்க முடியாத ஒரு வரலாற்றுண்மை.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே இப்பூமி',வேட்டைய ராஜா'க்களுக்கு விருந்து படைக்கும் ஒரு களமாக விளங்கி வந்திருக்கிறது.பல சுதேச சமஸ்தான சிற்றரசர்களும்,இளவரசர்களும் தங்கள் வீர, தீர பராக்கிரமங்களை நிரூபிப்பதற்காக, ஆயிரக்கணக்கில் வாயில்லாப்பறவைகளையும்,விலங்குகளையும் கொன்று குவித்து, இங்கே இரத்த ஆறு கரைபுரண்டோடுமாறு செய்தனர்.
பிரிட்டிஷாரின் வருகைக்குப்பிறகும் வேட்டைக்களமாகவே தொடர்ந்த இப்பகுதியில், வேட்டையாடி உல்லாசமாகப்பொழுது போக்குவதற்கென்றே உயர் பதவியிலிருந்த வைஸ்ராய்களும்,கவர்னர்களும்,அவர்களை அண்டிப்பிழைத்த இந்திய சமஸ்தான அரசர்கள் பலரும் இப்பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தனர்..
முக்கியமான ஒவ்வொரு நபரின் வருகையின்போதும் எத்தனை பறவைகள் வீழ்த்தப்பட்டன என்பது பதிவாகியுள்ள ஒரு நினைவுத்தூண், இன்னும் கூடக் காலத்தின் கறை படிந்த ஒரு ஆவணச்சாட்சியாக அந்தக்காப்பகத்தில் நின்றுகொண்டு இருக்கிறது.

டிச.-1902இல்-பிரிட்டிஷார் காலத்தில்- இங்குள்ள பறவைகளை முதன் முதலாக அதிகாரபூர்வமாகச்சுட்டு வீழ்த்தி இச்செயலுக்கு அடித்தளம் இட்ட 'புண்ணியத்தை'க்கட்டிக்கொண்டவர், லார்ட் கர்ஸன்.அதைத்தொடர்ந்து இந்திய நாட்டின் வேட்டை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வேட்டையாடும் களமாக இந்த இடம் உருப்பெறத்தொடங்கியது; வேட்டை ஆர்வலர்கள், இதை நாடி வருவதும் அதிகரித்தது. நவ.1938இல், அப்போதைய வைஸ்ராயாகிய லார்ட் லின்லித்கோவின் விஜயத்தின்போது மட்டும்-அந்த ஒரே நாளில் சுடப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை, 4273 என்றும், அது ஒரு உலக சாதனை என்றும் (சோகத்தோடு?)பறை சாற்றுகிறது, அங்குள்ள ஆவணம். நினைவுத்தூணிலுள்ள புள்ளிவிவரங்களைப்பார்க்கப்பார்க்க நம்மனம் பதைக்கிறது.
'புல் மேய்ந்து பால் சுரக்கும் பசுவோடு வந்த பகைமை என்ன' எனக்கேள்வி தொடுத்த ஆபுத்திரனைப்போல, நம் உள்ளமும் 'புள்ளின் மீது வந்த பகைமை என்ன?' என்று கேட்கத்துடிக்கிறது. பாண்டிச்சேரியில் பெரும்புயல் அடித்துக்கொண்டிருந்த நேரத்தில் மனிதர்களெல்லாம் தத்தளித்துத்தடுமாறி ,ஒடுங்க இடம் தேடி, அலைந்துகொண்டிருந்த அந்தத்தருணத்தில்,மகாகவி பாரதி மட்டும் அங்கே புயலில் மடிந்து வீழ்ந்து கொண்டிருந்த புள்ளினங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான் என்பதும் 'காக்கை குருவி எங்கள்ஜாதி' என்று பாடக்கூடிய தகுதி அதனாலேயே அவனுக்கு வாய்த்ததென்றும் அறிந்ததெல்லாம் நினைவில் எழ,மனம் ஒருகணம்கனத்துப்போகிறது. கூண்டுக்குள் பறவை வளர்த்துப்பார்க்க ஆசைகொண்ட லெனின், அந்தப்பறவைகள் போதிய உணவின்றி, அந்தக்கூட்டுக்குள்ளேயே மடிந்து போகும் காட்சி கண்டு மனம் மாறி,கூண்டுப்பறவைகளைக்காசு கொடுத்து வாங்கிப்பிறகு அவற்றைச்சிறை வீடு செய்தாரென்று படித்த வரலாற்றுச்சம்பவம் நெஞ்சுக்குள் முட்டுகிறது.

நமது அறச்சீற்றம் அளவு மீறுவதற்கு முன், 1956 ஆம் ஆண்டு முதல், மாநில அரசு, இதைப்பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவெடுத்தசெய்தி ,கண்ணில் பட கோபம் சற்றே தணிகிறது.1972 ஆம் ஆண்டுமுதல்,வனவிலங்குப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் எல்லா வகையான வேட்டைகளும் முற்றாகத்தடை செய்யப்பட்டு,இந்தப்பகுதி,'தேசீயப்பூங்கா'வாக அறிவிக்கப்பட்டது.உலகின் மிக முக்கியமான சதுப்புநிலப்பகுதியாக- பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதொரு சூழல் இயல்பாகவே அமைந்திருக்கும் அபூர்வமான இடமாக உலக நாடுகள் , இதை இனம் கண்டபிறகு- சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படத்தொடங்கிய 'பரத்பூர்','பாரம்பரியப்பழமை' வாய்ந்த சிறப்பான இடங்களுள் ஒன்றாக(WorldHeritage Centre) 1985 இல்யுனெஸ்கோவின் அங்கீகாரத்தையும் பெற்றது..


பரந்து விரிந்து கிடக்கும் விசாலமான இந்தப் பறவைக்காப்பகத்தைச்சுற்றிப்பார்க்கப்புகை கக்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை;தொலைநோக்குக்கருவியையும், நவீன தொழில்நுட்ப புகைப்படக்கருவிகளையும் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டோ,வாடகை சைக்கிள் ரிக்க்ஷாக்களில் பயணித்தபடியோ,பறவைக்காதலர்களான உள்நாட்டு, வெளிநாட்டுப்பயணிகள்,புள்ளினங்களின் பால் கொண்ட தீராத ஆர்வத்துடன் புதிய பறவைகளின் தரிசனத்திற்காகச்சுற்றிச்சுற்றி வருகிறார்கள். வெறுமே பொழுதைக்கழிப்பதற்காக வரும் கூட்டம் இங்கே சற்றுக் குறைவுதான். உள்ளார்ந்த தாகத்துடன் பறவைகளை இனம் காண்போரும், அவற்றின் வாழ்க்கை முறையை ஆராயும் நோக்கத்துடன் பல நாட்கள் தொடர்ந்து இங்கே மீண்டும், மீண்டும் வந்து பறவையியல் குறித்த தங்கள் அறிவுப்பசிக்குத்தீனி போடுபவர்களையும் மட்டுமே இங்கு மிகுதியாகக்காண.முடிகிறது..

பறவை இனத்தின் தீராக்காதலரும், சர்வதேச அளவில் புகழ் பெற்றவருமான திரு.சலீம் அலியுடன் நெடு நாட்கள் பழகித்தேர்ந்த ஒரு பறவை ஆர்வலர் எங்களுக்குத்துணையாக,வழிகாட்டியாக வந்தார்; பறவைகளை எங்களுக்கு இனம் காட்டி விளக்குவதை விடவும்- -இன்னும் கூட அவற்றைத் தான் பார்த்து ரசிப்பதிலேயே அவர் கொண்டிருந்த ஆர்வம், அந்த நேரத்தில் சற்று எரிச்சலூட்டினாலும் கூட அவர் பார்த்துத்தீராத பறவைகளும் கூட இன்னும் இருக்கின்றன என்றஉண்மையையை அது புரிய வைத்தது;,அந்தத்துறையின் மேல் அவர் கொண்டுள்ள மெய்யான பிடிப்பையும் ,நேசத்தையும் கூட அது உணர்த்தியது.
அங்கிருந்த சிறிய ஏரிக்குள் படகுப்பயணம் செய்து சுற்றிலும் விரவிக்கிடந்த பலவண்ணப்பறவைகளைப்பார்த்துவிட்டுக்கரையேறும் நேரம்;அப்பொழுது எங்களை மிக விரைவாக வருமாறு அழைத்தார் சலீம் அலிக்கு உதவியாக இருந்த அந்த வழிகாட்டி. திடீரென்று அலைகடல் பொங்கி ஆர்ப்பரிப்பதைப்போல ,இடிமுழக்கம் போன்றதொரு பலத்த ஓசை. அது எங்கிருந்து கேட்கிறது என்பதையும்,எதனால் அந்த ஓசை என்பதையும் நாங்கள் அனுமானித்து முடிப்பதற்குள்,ஒரே நேரத்தில் தங்கள் சிறகுகளைப்படபடத்தபடி பலவகைப்பட்ட ஆயிரமாயிரம் பறவைகள்,வானமண்டலத்தையே மறைப்பதைப்போலக்கூட்டம்கூட்டமாக-ஒன்றாகப்பறந்து சென்றன.இரைக்காகத் தங்களைத்துரத்திவரும் பருந்துவகைப்பறவைகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக நிகழ்ந்த வேகப்பாய்ச்சல் அது என்பதையும், அந்த அபூர்வக்காட்சியை நாங்கள் தவற விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே வழிகாட்டி அத்தனை அவசரமாக அழைத்திருக்கிறார் என்பதையும் பிறகுதான் எங்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது. வாழ்வில் மிக அரிதாகவே கிடைக்கக்கூடியதும்-என்றென்றும் நெஞ்சை விட்டு நீங்காததுமான அற்புதமான காவியக்காட்சி அது.

''தாய் இரை தின்றபின்பு,
தன் குஞ்சைக்கூட்டிற்கண்டு
வாயினைத்திறக்கும்;குஞ்சு தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கைத்
தாய் அருந்தியதைக்கக்கித்தன் குஞ்சின் குடல்நிரப்பும்
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்
அன்புக்கோர் எடுத்துக்காட்டாம்''என்று பாரதிதாசனின்'அழகின் சிரிப்பி'ல் என்றோ படித்து வியந்த காட்சி -தாய் தன் உணவைக்கக்கிக்குஞ்சுக்கு ஊட்டும் அரிதான காட்சி ஒன்றும் அங்கே உலா வரும் வேளையில் கண்களில் பட்டு இதயத்தை நெகிழ்த்தியது

ஒரு நாளைக்குப் பலபேர் வருகை புரியும் இடமாக அது இருந்த போதும் ,புள்ளினங்களின் கூச்சலைத்தவிர வேறு ஆரவாரமற்ற அமைதியான பூமியாகவே இருக்கிறது அந்த இடம். அது, பறவைகளின் இடம் என்பதையும், தாங்கள் பார்வையாளர்கள் மட்டுமே என்பதையும் புரிந்து வைத்திருக்கும் மனிதர்கள்,பறவைகளின் அந்தரங்கத்துக்கு ஊறு விளைவிக்காமல் தள்ளியிருந்து பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் நயத்தக்க நாகரிகம்,விரைவாகச்செல்லும் தன் தேரின் மணிஓசையால் புதரில் பதுங்கிக்கிடந்து காதல் செய்யும்பறவைகளின் மோனத்தவம் குலைந்து விடக்கூடாதென்பதற்காகவே மணியின் நாக்கை இழுத்துக்கட்டிவிட்டுப்பின் தனது தேர்ப்பயணத்தைத்தொடர்ந்த சங்க வரிகளை(''தாதுண்பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் வினைத்தேரன்'')நினைவுக்குக்கொண்டு வருகிறது.

இந்தியாவிற்குள்ளிருந்தும், எங்கோ பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள தொலை தூர நாடுகளிலிருந்தும் ஒவ்வொருஆண்டும் தடம் பிசகாமல்- வழி மாறாமல் வந்து செல்லும் பறவைகளின்
மதிநுட்பம் மலைப்பூட்டுகிறது. பனி உறைந்துபோயிருக்கும் சைபீரியாவிலிருந்தும் கூட கொக்குகளும் நாரைகளும் இங்கே -குறிப்பிட்ட இந்தப்பருவத்தில்(அக்.இறுதி முதல், மார்ச் இறுதி வரை)வருவதுண்டு; இப்போது அவற்றின் வருகை சற்றே குறைந்திருப்பதாகச்சொல்லப்பட்டதைக்கேட்கும்போது, இலேசான வருத்தம் தலையெடுக்கிறது.பலவண்ண நாரைகள்,கொக்குகள்,வாத்துக்கள்,இன்னும் கணக்கிலடங்காத பலரகப்பறவைகள்........அவற்றின் பெயர் இன்னதென சுட்டிக்காட்டி மகிழும் பறவை ஆர்வலர்கள்.(Bird watchers)....என்று தனி ஒரு உலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்தப்பறவை சாம்ராஜ்ஜியத்திற்குள் செல்வதற்கு அங்குள்ள பறவைகளின் பெயர்கள், கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமோ, அவற்றின் வாழ்முறை பற்றிய ஞானமோ கூட அவசியமில்லை.கண்ணையும், செவியையும் ,மனதையும் சற்றே விரியத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால்......என்றும் மறக்க இயலாத அதிசய, அபூர்வக்காட்சிகள் அற்புத தரிசனங்களாக நமக்குச்சித்திக்கும்.

பறவைகளுக்குப்பிரியாவிடை கொடுத்தபடி அங்கிருந்து கிளம்பி,மிக அருகிலுள்ள அக்பரின் பதேபூர் சிக்ரியைச்சுற்றிப்பார்த்துவிட்டு, ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கு நேர்பின்னால் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்,இரவு தங்கியபோது-அன்றைய முழுநிலவின் ஒளியில் மேகம் போர்த்திய தாஜ் மஹால் மங்கலாகப்புலப்பட்டுக்கொண்டிருக்க,அதில் கவனம் நிலைக்காதபடி... மனம் முழுவதையும் பரத்பூர் மட்டுமே நிறைத்திருந்ததது.

The Birds sighted in BARATHPUR;
White breasted kingfisher,Painted stark,Rosy pelicons,Crimson breasted barbets(immature)known as copersmith,Open bill starks,Blacknecked starks,Darters(snake bird),Large egrets(comparatively uncommon),Little egret,Purple Heron,Grey Heron,Darters(snake bird),Large egrets(comparatively uncommon),Little egret,Purple Heron,Grey Heron,PondHeron,Spoonbills,Bar headed Gheese,Stone curlew on the nest,Collared scorps owl,Baya Weaver bird,Golden backed woodpecker
வாசக எதிர்வினைகள்;
வணக்கம்.பறவைகளைப் பற்றிய இடுகை அருமை.படித்தவுடன் பரத்பூர் பறவைகள் சரணாலத்திற்கு நேரிலே சென்றது போன்ற உணர்வினைக்கொடுத்தது.நிழற்படங்கள் அனைத்தும் உயிரோவியங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்தது..முனைவர் சே.கல்பனா. http://www.kalpanase.blogspot.com
உங்கள் எழுத்தை முதல் முறையாகப் படிக்கிறேன். (ஜெயமோகன் அவர்களின் அறிமுகம் வழியாக).
அருமை, அழகான தமிழ்!
வாழ்த்துக்கள்!
வெற்றிமகள்.






















































































































6.2.09

காசு



அந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மீரட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மா பதட்டத்தோடு கத்தினாள்.
''ஐயையோ....! அந்த உண்டியலை எடுத்துக்க மறந்து போச்சே...? ''
ஒரு கணம், மொத்தக் குடும்பமும் திடுக்கிட்டுப் போய்விட.... என் மனதின் ஆழத்தில் மட்டும் கபடமான ஒரு திருப்தி!

எல்லோருமாக ஹரித்துவார் போக வேண்டுமென்று முடிவு செய்து, அதற்கான நாளை இறுதி செய்வதற்கு முன்பிருந்தே அம்மாவின் சில்லறைச் சேமிப்பு தொடங்கி விட்டது. எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே செல்வதைப் போல், யார் எதற்காகச் சில்லறை மாற்றி வந்தாலும், அதைக் கபளீகரம் செய்வது அம்மாவின் உண்டியல் தான் என்பது, எங்கள் வீட்டில் எழுதப்படாத ஒரு விதியாகவே மாறிப் போயிருந்தது. அதிலும் அம்மா பிரத்தியேக கவனம் எடுத்துக் கொள்வது, சின்னஞ்சிறு வடிவத்தில், கைக்கு அடக்கமாகக் கொஞ்சம் கனமாகவும் இருக்கும் ஐந்து ரூபாய்க் காசின் மீதுதான்! ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க் காசுகளின் மேலெல்லாம் அவள் பார்வை, கொஞ்சம் இரண்டாம் பட்சமாகத்தான் படியும்! ஏதோ போனல் போகிறது என்பதைப் போன்ற அலட்சியத்துடன் இரண்டு ரூபாய்க் காசுகளை மட்டும் எடுத்து உண்டியலில் போட்டுக் கொள்வாள். நாளாக ஆகக் காசுகளின் கனம் கூடிக் கொண்டே வந்ததால், அந்தத் தகரப் பெட்டியை எவராலும் அத்தனை லகுவாகத் தூக்கிவிட முடியாது என்று கூடத் தோன்ற ஆரம்பித்து விட்டது.

''ரயில்லே போகும் போது இதுவே ஒரு தனி லக்கேஜ் ஆயிடும் போல இருக்கே? இதுக்குத் தனியா ஒரு போர்ட்டரைத் தான் போட்டாகணும்!'' என்று அப்பா கிண்டலடிப்பார்.

'' நாட்டிலே சில்லறைத் தட்டுப்பாடு வருதுன்னா.. ,அதுக்கு உன்னை மாதிரி ஆட்கள்தாம்மா காரணம்! நான் நம்ம நிதியமைச்சருக்கே கூட இதைப்பத்தி ஒரு லெட்டர் எழுதிப் போடலாம்னு இருக்கேன்! காசுங்கிறது.... வத்தாம ஓடிக்கிட்டிருக்கிற ஜீவநதி மாதிரி, ஓயாமே புழக்கத்திலேயே இருக்கணும்மா! அப்பத்தான் அதுக்கு மதிப்பு! இப்படி உண்டியல் பெட்டியிலே போட்டுப் பூட்டி வச்சா...''. என்று என் பங்குக்கு நான் ஆரம்பிப்பதற்குள்... ,பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் என்று தனக்குத் தெரிந்த தமிழ்ப்பாட்டை அடங்கிய தொனியில் அரைகுறையாக முணுமுணுக்கத் தொடங்கி விடுவான் தம்பி.

''ஏண்டா...? நீங்க எல்லாருமாச் சேர்ந்து என்னை ஒரு கஞ்சப் பிசாசாவே ஆக்கிடுவீங்க போலிருக்கே...? நான் என்ன.... எனக்காகவா இதைச் சேர்த்து வைக்கிறேன்? நாம எல்லாருமாக் குடும்பத்தோட ஹரித்துவார் போகும்போது, அங்கே பொங்கிப் பெருக்கெடுத்து வர்ற கங்கைத் தாயோட மடியிலே காணிக்கையாப் போடணும்னுதானே இப்படிப் பார்த்துப் பார்த்துச் சில்லறைக் காசாச் சேர்த்து உண்டியல்லே போட்டுக் கிட்டிருக்கேன்...''

'' அம்மா...! காசைக் கரியாக்கறதைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்! அதைத் தண்ணியிலே வீசி வீணாக்கறதும் கூட அந்த மாதிரிதானே...? ''

''இதோ பாருடா...! ஏதோ என்னோட நம்பிக்கை எனக்கு! தேவையில்லாமே அதைப் பழிச்சுப் பேசாதே! அவ்வளவுதான்! ''என்று, அத்துடன் அந்தப் பேச்சுக்கு அழுத்தமான ஒரு முற்றுப் புள்ளியை வைத்து விட்டு எழுந்து போய் விடுவாள் அம்மா.

அப்படிப் பார்த்துப் பார்த்து அவள் சேமித்து வைத்த காசு..., அவள் பருமனக்கி வளர்த்து விட்டிருந்த அந்த உண்டியல் _ அது எப்போதும் கொலுவிருக்கும் கூடத்து அலமாரியின் மேல் தட்டில்... வீட்டிலேயே தங்கிவிட _ இதோ.... நாங்கள் மட்டும் இப்போது ஹரித்துவாரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்! என்னதான் பயணப் பதட்டம், அவசர நெருக்கடி என்றாலும் கூட... அம்மாவால் அதை எப்படி மறந்து போக முடிந்தது? ஒரு பக்கம் என் மனது சந்தோஷக் கும்மாளமிட்டது. இனிமேல் ஊருக்குத் திரும்பிப் போய் அந்த உண்டியலை எடுத்துக் கொண்டு வருவது சாத்தியமில்லை! ஊர் போய்ச் சேர்ந்ததும் ஏதாவது ஒரு கோயில் உண்டியலுக்குள்ளே தான் அது அடைக்கலமாகப் போகிறது! அது கூடப் பரவாயில்லை! ஓடுகிற தண்ணீரில் எறிவதை விட... எப்படியோ ஒரு வகையில் அது பயன்படவாவது செய்யுமே...?

அம்மாவின் முகம் இருண்டு போயிருந்தது. கங்கையாற்றின் குறுக்கும், நெடுக்குமாக வலுவான இரும்பு கர்டர்களுடன் கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய பாலங்கள், வண்டியின் இருபுறங்களிலும் தென்பட ஆரம்பித்திருந்தன. நாங்கள்.... ஹரித்து வாருக்குள் நுழைந்து கொண்டிருந்தோம். புறக்காட்சி எதிலுமே மனம் லயிக்காதவளாக உறைந்துபோய்க் கிடந்தாள் அம்மா.

விடுதி அறைக்குப் போய்ச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, அப்பா மெள்ளப் பேச்சுக் கொடுத்தார்.

''இதோ பாரு ராஜி! நடந்துபோன அசட்டுத் தனத்தையே நினைச்சு மறுகிக்கிட்டிருக்காமே இனிமே நடக்க வேண்டியது என்னன்னு பார்ப்போம்! அந்த உண்டியல்லே உத்தேசமா எவ்வளவு தொகை இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுச் சொல்லு! என் கிட்டே உள்ள ரூபா நோட்டை இங்கே உள்ள கோயில் உண்டியலிலே செலுத்திடுவோம்! ''

_அம்மா, அவர் பேச்சை அவசரமாக இடை மறித்தாள்.

'' ஏங்க... அப்படிச் செய்யறதுக்காகவா நான் அத்தனை நாள் கஷ்டப்பட்டுச் சில்லறைக் காசாச் சேர்த்தேன்....? கோயிலிலே காணிக்கை போடறது என்னோட வேண்டுதல் இல்லீங்க! ஓடற கங்கையிலே காசைப் போடணுங்கிறது தான் என்னோட ஆசை! ''

''இப்ப இப்படிச் சட்டம் பேசறவ...., டூர் கிளம்பும் போது முதல் காரியமா அந்த உண்டியலைத்தானே எடுத்து வச்சிருக்கணும்... ''என்று கடிந்து கொள்ள ஆரம்பித்த அப்பா, அம்மாவின் முகம் போன போக்கைப் பார்த்ததும் குரலைக் கொஞ்சம் மென்மையாக்கிக் கொண்டார்.

''சரி...! உன்னோட ஆசை எல்லாம் எனக்குப் புரியாம இல்லை! ஆன... இப்ப என்ன பண்றது சொல்லு! நம்ம கிட்ட இருக்கிற எல்லாச் சில்லறைக் காசையும் திரட்டிப் பார்க்கலாம்! ஆனா நிச்சயம் அது போதாதுன்னுதான் நீ நினைப்பே! பாஷை கூடச் சரியாத் தெரியாத இந்த ஊரிலே... நான் யார்கிட்டே எங்கே போய்ச் சில்லறை மாத்தறது... சொல்லு! ''

''அப்பா! என் ஃப்ரண்ட் ஒருத்தனோட நெருங்கின சொந்தக்காரங்க இந்த ஊரிலேதான் இருக்காங்க! அவங்க ஹிந்தி பேசறவங்கதான்! நாம இங்கேயிருந்து கிளம்பறதுக்கு முன்னலே அவங்க மூலமா அம்மாவுக்குக் கொஞ்சம் சில்லறைமாத்தித் தர முடியுமான்னு முயற்சி பண்ணிப் பார்க்கறேன்'' என்று அபயக்கரம் நீட்ட முன் வந்தான் தம்பி.

''அப்புறம்என்னம்மா...? முடிஞ்ச வரைக்கும் பார்ப்போம்! கிடைச்ச காசை இப்பப்போடு! கடவுள் சித்தம் இருந்து, இன்னொரு தடவை இங்கே வரமுடிஞ்சா... அப்ப நீ சேர்த்து வச்சிருக்கிற உண்டியல் காசை எடுத்துக்கிட்டு வா! நம்ம ஊரிலேயிருந்து வேற யாராவது தெரிஞ்சவங்க இங்கே டூர் வந்தாக் கொடுத்து விடுவோம்... அவ்வளவு தானே...'' என்று முத்தாய்ப்பு வைத்தபடி அந்தச் சிக்கலை அப்போதைக்குச் சுமுகமாக முடித்து வைத்தார் அப்பா


இயற்கையின் மடியில் இளைப்பாற வந்த நேரத்திலும் கூடக் கருமம் தீராத காசுப் பிரச்சினை பிடித்து ஆட்டி வைத்ததில் மனம் சலித்துப் போயிருந்த நான்..., கங்கையின் தரிசனம் நாடிக் காலார நடக்கத் தொடங்கினேன்.

உயரே இருந்த மலைத்தொடர்களில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆற்றில் புது வெள்ளம் புரண்டோடிக் கொண்டிருந்தது. இமயத்திலிருந்து கீழிறங்கும் கங்கை, சமவெளிக்குள் பிரவேசிக்கும் முதல் இடம் ஹரித்துவார். மனித அரவமே இல்லாத பனிமலைச் சிகரங்களுக்குள் அமைதியாகப் புகுந்து புறப்பட்டு வரும் கங்கைக்குத் தான் சமதரைக்குள் கால்பதித்ததும் _ தாய்வீட்டைக் காணவந்த பெண்ணைப் போல எத்தனை குதூகலம்? அவளைக் காணும் மனித மனங்களிலும் அது தொற்றிக் கொண்டு விட...., அலையின் தெறிப்புக்களோடு கூடவே எங்கெங்கும் தென்படும் சந்தோஷத் தெறிப்புக்கள்...! ஆனந்த ஆரவாரங்கள்...! ஒரு காலத்தில் பொய்யாக் குலக்கொடியாக இருந்தாலும்.... இப்போது வற்றி வறண்டு போயிருக்கும் வைகை நதி தீரத்திலிருந்து வந்திருந்த நான், நுங்கும், நுரையுமாய்ச் சுழித்துக் கொண்டு இருகரை தொட்டு ஓடிக் கொண்டிருந்த அந்த நதியை..., ஏதோ உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். புதுமழை பெய்து, புரண்டு வந்த அந்த வெள்ளத்தில் மண்வாசனை சற்றுத் தூக்கலாகவே அடித்தது.

கரை ஓரமாகச் சிறியதும், பெரியதுமாய்ச் சிதறிக் கிடக்கும் கோயில்கள்... மடாலயங்கள்! சுருட்டுப் பிடித்தபடியும், நிஷ்டையில் ஆழ்ந்தபடியும்... போலியும், நிஜமுமாய்ப் பல பண்டாரங்கள்... பைராகிகள்! ஆனந்தமாய்க் குளியல் போட ஆசை இருந்த போதும், அலை நாவைச் சுழற்றி வரும் ஆற்றின் வீச்சைக் கண்டு அஞ்சியவர்களாய்க் கரையில் நின்றபடியே காலை மட்டும் நனைத்துக் காக்காய் குளியல் போட்டு விட்டு அவரவர் வந்த டூரிஸ்ட் பஸ்ஸை நோக்கி ஓட்டம் பிடிக்கும் அவசர யாத்ரிகர்கள்!

சிவனின் முடியில் ஒயிலாய்க் கொலுவிருந்த கங்கையைத் தவமாய்த் தவமிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்தான் பகீரதன் என்றபுராணப் போற்றுதல்களால்.... ஆற்றங்கரை ஓரமாக அழிக்கும் கடவுளின் பிரம்மாண்டமான உருவச்சிலை ஒரு புறம்! ஹரித்துவாருக்குக் கொஞ்சம் மேல்மட்டத்தில் இருக்கும் பத்ரிநாத விஷ்ணுவின் பாதம் இங்குள்ள கங்கைக் கரையில் படிந்திருப்பதான நம்பிக்கையில் ஹர்க்கி பைரி என்ற பெயரோடு வைணவ வழிபாடு மற்றொருபுறம்! ஆனல்.... எனக்கென்னவோ அரியையும் சிவனையும் விட அங்கிருந்தவர்களின் உள்ளம் கவர்ந்தவள் கங்கையாறு மட்டும்தான் என்றே தோன்றியது. அதிலும் மாலை மங்கி, இரவு வரும்முன், பிரம்மகுண்டக் கரையில் நாள்தோறும் நிகழும் ஒளிமயமான ஆரத்தியை அன்று அந்தி நேரத்தில் பார்த்து முடித்தபிறகு, அந்த எண்ணம் இன்னும் கூட வலுப்பட்டது.

கதிரவன் மறையப் போகிற அந்த விநாடியை எதிர் நோக்கியபடி கரையைச் சுற்றியுள்ள படித் துறைகளிலும், படிக் கட்டுகளிலும் கட்டுப்பாட்டோடு காத்து நிற்கும் மக்கள் வெள்ளம். சூரியன் அஸ்தமித்த அடுத்த கணம், கரையைச் சுற்றியுள்ள அத்தனை கோயில்களிலும் மங்கல மணிகள் ஒலிக்க நிகழும் தீபாராதனை! அதே நொடியில்.... சாமானிய மக்களும் கூட இலைத் தொன்னைகளில் மலர் நிறைத்து, அகல்விளக்கேற்றி நீர்ப்பரப்பில் மித்தக விடும் அற்புதக் காட்சி! அத்தனை தீப ஆரத்திகளும், வேறு எந்த தெய்வ ஆராதனைக்காகவும் அல்லாமல்.... பெருகி ஓடும் கங்கையை நோக்கி மட்டுமே அர்ப்பணமாகிற அந்தக் கணத்தில் மெய்சிலிர்த்து, மயிர்க்கூச்சலிட்டபடி அங்கே கூடியுள்ள கூட்டம் எழுப்பும் கங்கா மாதா கீ ஜெய் என்ற அந்த கோஷம்! இரவு கவிந்துவரும் அந்த வேளையில்,ஒளிக்கீற்றுகளாக ஜொலிக்கும் ஆரத்தி தீபங்கள் அந்தச் சூழலையே அமானுஷ்யமாக.... அசாதாரணமாக ஆக்கி விடும்போது, உள்ளுக்குள் ஓடும் பரவசச் சிலிர்ப்பு! இறந்துபோன மூத்தவர்களுக்காக நீர்க்கடன் கழிக்கவும், பிறவேண்டுதல்களை நிறைவேற்றுவதற்குமாய் அங்கே வந்திருந்தவர்களும் கூடத் தாங்கள் வந்த நோக்கத்தை மறந்து விட்டு, அந்த இயற்கை வழிபாட்டில் உருகி நெகிழ்ந்து போகும் மாயம்! இயற்கையின் பிரம்மாண்டம்...., அதன் விசுவரூப தரிசனம், சாதாரண மானுடத் தேவைகளையெல்லாம் ஒன்றுமில்லாததாக ஆக்கிப் போடுகிற அற்புதமல்லவா அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது...? இயற்கையைத் தெய்வமாகவே எண்ணி ஆராதித்து வந்த ஆதிமரபின் எச்சம் தானோ இந்த நீர்வழிபாடு....? அதன் சம்பிரதாய வெளிப்பாடு தானோ இந்த ஆரத்தி போன்றவை எல்லாம்....?
* * * *
அன்று ஊருக்குக் கிளம்பியாக வேண்டும்! தம்பியின் துணையோடு ஏதோ கொஞ்சம் சில்லறைக் காசுகளைக் கூடுலாகத் திரட்டி விட முடிந்ததால், தன் விருப்பத்தை ஓரளவுக்கு நிறைவேற்றிக் கொண்டு விட்ட நிறைவும், நிம்மதியும் அம்மாவின் முகத்தில் தெரிந்தன.

''கிளம்பறதுக்கு முன்னலே கடைசியா ஒரு தடவை ஆற்றங்கரையோரமா நடந்து போயிட்டு, அப்படியே குளிச்சிட்டும் வந்திடறேன்'' என்று அறிவித்து விட்டுப் புறப்பட்டேன்.

''இதோ பாருடா...! நீ பாட்டுக்குக் குருட்டுத் தனமாக் கற்பனையை ஓடவிட்டுக்கிட்டு மிதப்பிலேயே இருந்திடாதே! நாலரை மணிக்கு வண்டி! இரண்டு, இரண்டரைக்கெல்லாம் மூட்டை முடிச்சோட ஸ்டேஷனுக்குப் புறப்பட்டாகணும்...''

_முதுகுக்குப் பின்புறம் அப்பாவின் குரல், தேய்ந்து மறைந்தது.

கங்கையின் மடியில் முழுசாக மூன்று நாட்கள்...! அவளையே பேசி...., அவளையே நுகர்ந்து...., அவளையே பருகியபடி மூன்று நாட்கள்! ஒலிப் பேழைகளும், குறுந்தகடுகளும் விற்கும் கடைகளிலிருந்து மிதந்து வந்த பாடல்களில் மட்டுமன்றி, அந்த ஊரின் காற்றலைகள் முழுவதிலுமே கங்கையே ஆராதிக்கும் ஒலி அலைகளே நீக்கமற வியாபித்திருந்ததை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக் கொண்ட நான், அவற்றை ஆசைதீர என் சுவாசம் முழுவதிலும் நிரப்பிக் கொண்டபடி, கரையின் விளிம்பில் நடந்து கொண்டிருந்தேன். அப்போதுதான்... அது, என் கண்களில் பட்டது.

கடந்த இரண்டு நாட்களாகவே கரையோரமாக நடந்து போகும் போதெல்லாம் அந்தக் காட்சி, அவ்வப்போது என் கண்ணில் பட்டுக் கொண்டுதான் இருந்ததென்ற போதும் மனதிற்குள் பதிவாகி இருக்கவில்லை. படித்துறைகளில் பிரமிப்போடு நின்றபடி, ஓடும் நதியின் பிரவாகத்தில் மட்டுமே மனதை லயிக்க விட்டிருந்ததால், பிறகாட்சிகளில் மனதை செலுத்தி அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் என் மூளை அப்போது இல்லை. இப்போது.... இந்தக் கணத்தில் பார்த்தபோது, அந்தக் காட்சியில் வித்தியாசமான ஏதோ ஒன்று இருப்பது புலனகியது.

வாலிபப் பருவத்தை எட்டிக் கொண்டிருந்த விடலைப் பருவத்துச் சிறுவர்கள் சில பேர், கரையோரமாக நின்றபடி நீளமான நைலான் கயிறுகளை ஆற்றுக்குள் வீசி எறிந்து துளைவதும், பிறகு அவற்றைமேலே இழுப்பதுமாக ஊக்கத்தோடு எதையோ செய்து கொண்டிருந்தார்கள். கயிறு மேலே வரும்போது சிலசமயம் எரிச்சலோடு உதட்டைப் பிதுக்கி விட்டு அதை அவர்கள் வீசி எறிவதையும், சில சமயம் ஏதோ காணாதது கண்டது போல் ஆனந்தக் கூச்சல் போடுவதையும் என்னால் பார்க்க முடிந்தது.

கயிறு மேலே வரும்போது ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளிக் கொண்டு சண்டை போடுவதும், ஒருவன் கையிலிருந்து அடுத்தவன் எதையோ பிடுங்கப் பார்ப்பதும், செல்லமாய்த் துரத்துவதுமாகச் சின்னச் சின்ன ரகளைகளும் கூட அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன.
ஒருவேளை மீன் பிடிக்கிறார்களோ என்று எனக்குள் தோன்றிய எண்ணம், அவர்கள் கையில் வைத்திருந்த வித்தியாசமான கருவியைப் பார்த்தவுடன் சட்டென்று மறைந்து போயிற்று. அவர்களிடம் நெருங்கிச் சென்று அருகில் இருந்தபடி சிறிது நேரம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த நான், அங்கிருந்த ஒரு பையனிடம் அரைகுறை இந்தியில் பேச்சுக் கொடுத்தபடி, அவர்கள் கையிலிருந்த உபகரணத்தைப் பார்க்க வேண்டுமென்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன். உடனே எவ்விதத் தயக்கமும் இன்றிக் கைவசம் வைத்திருந்த தூண்டிலை அவன் உயர்த்திக் காட்ட..., என் மனம் ஒரு கணம் அதிர்ந்து போயிற்று.
நீண்ட நைலான் கயிற்றின் முனையில் ஒரு தகரக் கம்பி! அதில் வரிசையாகக் கோர்க்கப்பட்டு முடுக்கப்பட்டிருந்த நான்கு காந்த வளையங்கள்! அந்த வளையங்களின் மேலும், கீழும் பக்கவாட்டிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆணிகள்..., ஊசிகள்..., மேலும் அங்கே நீராடும் பெண்களின் தலையிலிருந்து உதிர்ந்து விட்டிருக்கும் கொண்டை ஊசிகள்...! இவற்றோடு ஆங்காங்கே இடைச் செருகல்களாகத் தலைகாட்டும் ஒரு ரூபாய்..., இரண்டு ரூபாய்..., ஐந்து ரூபாய்ச் சில்லறைக் காசுகள்!
நன்றி:வடக்குவாசல்,ஜனவரி 2009இதழ்.http://www.vadakkuvaasal.com/
வாசக எதிர்வினைகள் :
எம்.ஏ.சுசீலாவின் 'காசு'கதை,ஒரு குடும்பத்தில் உள்ள மனிதர்களின் மன ஓட்டங்களை,அழகாகவும்,இயல்பாகவும் வெளிப்படுத்திய பாங்கு சிறப்பு.கங்கை நதியின் பாய்ச்சலை,அதன் அழகு தீரத்தினை சித்தரிக்கையில் மனக்கண்முன்பு அக்காட்சிகளை நிறுத்துகின்றார்.பாராட்டுக்கள்.கே.ரவிச்சந்திரன்,ஈரோடு.
ஜனவரி இதழில்,ய.சு.ராஜன் அவர்களுடைய 'சிந்தனைச்சிதறல்'களும்,எம்.ஏ.சுசீலா அவர்களின் 'காசு' சிறுகதையும்,தீரன் அவர்களின் நூல் மதிப்புரையும் இதழுக்கு அணி சேர்த்தன.க.இந்திரசித்து,கோவை.
நன்றி:வடக்குவாசல்,பிப்.09

1.2.09

நாகேஷ்- சில நினைவுகள்

சில நாட்களாகத்தொடர்ந்த வாழ்த்துக்களும்......தொடர்ந்த அஞ்சலிகளுமாக வலை இயங்கிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.சாதனை படைத்த மனிதர்களையும், முத்திரை பதித்த கலைஞர்களையும், சில சுவடுகளை விட்டுச்செல்லும் சிந்தனையாளர்களையும் அத்தனை எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்பதோடு ,இவ்வாறான தருணங்களில் அவர்கள் குறித்த செய்திகளை ஒருங்கிணைத்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதும் எழுதுகோலை ஏந்தியிருப்பவர்களின் தார்மீகப்பொறுப்புக்களில் ஒன்றாகிறது. அந்த வகையில் நாகேஷைப்பற்றிய சில நினைவுத்தீற்றல்கள்..........

வசனப்போக்கில் அமைந்திருந்த கலைவாணரின் நகைச்சுவைப்பாணியை,உடல்மொழியாக-மேலை நாட்டுத்திரைப்படப் பாணிக்கு மாற்றியவர் சந்திரபாபு. அவரைத்தொடர்ந்து 60களில் தமிழ்த்திரை உலகில் அடி வைத்த நாகேஷும் கூட உடல் மொழியைக்கையாண்டபோதும்- அவரது மெலிந்த, ஒடிசலான உடல்வாகு அதற்கு ஒத்திசைவாக இருந்தபோதும்,உடலைமுறுக்கி, நெளித்து,குட்டிக்கரணம் அடிக்கும் அங்க சேஷ்டைகள் மட்டுமே நாகேஷின் பாணியாக இருந்ததில்லை. அதற்கெல்லாம் மேலான வேறொரு தன்மையும் கூட அவரது நடிப்பில் ஊடும்,பாவுமாக விரவிக்கிடந்ததனாலேயே.....காலம் கடந்தும் அவரது நகைச்சுவை ரசிக்கப்பட்டது.நகைச்சுவையோடு குணசித்திரமும் கலந்து பரிமாறும் ஒரு நடிகராக அவரை ஆக்கியதும் கூட அவரது இந்தத்தன்மைதான்.அதை அவரது முதல் படமாகிய 'சர்வர் சுந்தர'த்திலேயே இனம் காட்டிய இயக்குநர் பாலச்சந்தர்,தொடர்ந்து 'எதிர் நீச்சல்','நீர்க்குமிழி','மேஜர்சந்திரகாந்த்' ஆகிய படங்களின் வழி அதை மேலும் உறுதிப்படுத்தினார். தனது 'நம்மவ'ரிலும்,'மகளிர் மட்டு'மிலும் அதை மிகச்சரியாகப்புரிந்துகொண்டு நாகேஷைப்பயன்படுத்திக்கொண்டார் கமல் .மாறாக முழுமையான குணசித்திர நடிப்போ,நகைச்சுவையோடு இணைந்த வில்லன் பாத்திரமோ அவரது திறமைக்குச்சரியான தீனி போடவில்லை என்பதற்கு 'அபூர்வ சகோதரர்கள்'.'ஒரு கைதியின் டயரி','பூவெல்லாம் உன் வாசம்' போன்ற படங்களே தகுந்த சாட்சிகள்.இந்தப்பட்டியலில் 'தில்லானா மோகனாம்பா'ளுக்கு வேண்டுமானால் விதிவிலக்கு அளிக்கலாம்.

தருணம் பார்த்து சடாரென்று அவர் வாயிலிருந்து உதிரும் ஒரு சொல்...,மிகச்சரியான ஒரு timing ஆகியவையே நாகேஷின் தனித்தன்மை என்பதற்கு அவர் நடித்த படங்களிலிருந்து ஆயிரம் உதாரணங்களைக்காட்ட முடியும்.'திருவிளையாட'லின் தருமி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் காலப்பிரமாணத்தைக்கணிக்கும் அவரது 'டைமிங் சென் 'ஸுக்குக் கட்டியம் கூறுபவை.அந்தக்காலகட்டத்தில் சிவாஜியே கூட சற்று பயத்தோடுதான் படப்பிடிப்புத்தளத்துக்கு வருவதுண்டு என்று படித்ததுண்டு.
'காதலிக்க நேரமில்லை'யில் நாகேஷ் அடிக்கும் லூட்டிகளும்,பாலையாவுக்குக்கதை கூறும் லாகவமும் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் தரமான நகைச்சுவைகள்.
நகைச்சுவை என்ற பெயரில் மலினமான சரக்குகளை அமோகமாக விற்பனை செய்யத்துடிக்கும் இன்றைய தலைமுறை நடிகர்களும், அவர்களுக்காகவென்றே நகைச்சுவை 'டிராக்'கை உற்பத்தி செய்யும் தனிப்பட்ட குழுவினரும் நாகேஷிடமிருந்தும், அவரது படங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாகக்கொட்டிக்கிடக்கின்றன. அதே போல குணச்சித்திரப்போக்கு இணைந்த நகைச்சுவையை வெளிப்படுத்திய காரணத்தினால்தான், சில படங்களில் கதாநாயகனாகவும் கூட அவர் தயக்கமின்றி ஏற்கப்பட்டிருக்கிறார் என்பதையும் 'ஹீரோ'வாகத்துடிக்கும் இந்தக்காலகட்ட நடிகர்கள் மனதில் வைத்துக்கொள்வது, நல்லது.நாகேஷின் திறமைகளைத்தமிழ்த்திரை உலகம் எந்த அளவுக்கு முழுமையாகப்பயன்படுத்திக்கொண்டது என்பது போன்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தபோதும், தனக்குக்கிடைத்த களத்தை-அந்த வரையறைகளுக்கு இடையேயும் கூட- நாகேஷ் கூடியவரையில் மிகச்சிறப்பாகப்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
மகத்தான அந்தக்கலைஞனுக்கு அஞ்சலிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....