’குற்றமும் தண்டனையும்’ தமிழ் மொழியாக்கத்தின் இரண்டாம் பதிப்பு-மதுரை பாரதி புத்தக நிலைய வெளியீடாக..விரைவில்

21.5.12

இமயத்தின் மடியில்-4



பத்ரி விஷால்..

நாற்புறமும் பனிப்போர்வையோடு கூடிய மலைத் தொடர்கள் சூழ்ந்திருக்க…நடுவே இயற்கையின் எழில் கொஞ்சும் கம்பீரத்தோடு வீற்றிருந்தது பத்ரிநாத்.பத்ரி என்பதன் பொருள் இலந்தை. இலந்தை மரங்கள் அடர்ந்திருந்த வனத்துக்கு நடுவே இருந்ததாலேயே பத்ரி என்னும் பெயர் இதற்கு உரியதாயிற்று. நர நாராயண மலைத் தொடர்களுக்கு மத்தியில் நீலகண்ட சிகரத்தின் நிழலில் அலக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்தத் தலம் 108 வைணவத் திருப்பதிகளில் முதன்மையானது என்பதோடு சமணர்களும் கூட இங்குள்ள பத்ரிநாதரைத் தங்கள் முதல் தீர்த்தங்கரராக-ஆதிநாதராகக் கருதிப் போற்றுகின்றனர்.

பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் அரிதான இத் திருத்தலத்தை ‘வதரி’ எனக் குறிப்பிடும் திருமங்கையாழ்வார்., இத் திருப்பதியைக் காண விழைவோர் மூப்பு வந்து தங்களைப் பற்றிக் கொள்வதற்கு முன் அதைச் செய்து முடித்து விட வேண்டும் என்பதைத் தன் மூன்றாம் திருமொழியின் முதல் பத்துப் பாடல்கள் முழுவதிலும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொண்டு போகிறார்.
 ‘’முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி
விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது என் அப்பர் மூத்தவாறுஎன்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே
-பெரியதிருமொழி-முதல்பத்து 3ஆம் திருமொழி
[நடக்க முடியாமல் முதுகை ஒரு கையால் பிடித்துக் கொண்டு...
ஒரு கையில் கோலை ஊன்றிக் கொண்டு,நெடுமூச்சு வாங்கி..இடைவிடாமல் இருமியபடி..’இந்தக் கிழவனைப் பார்’ என இளைஞர்களெல்லாம் கேலிபேசும் நாள் வருவதற்கு முன்னர் தேன் உண்டு வண்டுகள் பண்பாடும் வதரி என்னும் பத்ரியை வணங்குவோம்..]


இத்தகைய நெடும் பயணத்தை மேற்கொண்டு பார்த்தால்தான் ஆழ்வார் பாசுரத்தின் உட்பொருள் முழுமையாக விளங்கும். போக்குவரவுக்கான நல்ல வாகனங்களும் அவை சென்றுவர ஒழுங்கான மலைப்பாதைகளும் இருக்கும் இன்றைய காலகட்டத்திலேயே இந்தப் பயணம் சிரமங்களும் அபாயங்களும் நிறைந்ததாகத் தோன்றுகிறதென்றால் எந்த ஒரு சிறு வசதியும் இல்லாத ஒரு காலகட்டத்தில் ஆழ்வார்கள் இங்குள்ள தலங்களைக் கண்டிருப்பதும் அவை குறித்துப் பாடியிருப்பதும் வியப்பூட்டுபவைதான்.

நகரின் மையத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த பாங்கட் தர்மசாலாவில் எங்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
பாங்கட் தர்மசாலா...
விடுதியருகில் நான்...
விடிகாலை 3 மணிக்கு ஜோஷிமட்டை நோக்கிக் கிளம்பும்போதே குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற கம்பளி உடைகளை அணிந்து கொண்டு விட்டபோதும் குளிர்மலைகளுக்கு இடையே பொதிந்து கிடக்கும் பத்ரிநாத்தின் குளிரைப் பொறுக்க அவை போதுமானவையாக இல்லை என்பதால் மேல் கோட், சால்வை, கை உறை,கால் உறை எனப் பலவற்றையும் அவரவர் வசதிப்படி உடனே போட்டுக் கொண்டோம்காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கான டோக்கன்களை சுற்றுலா அமைப்பாளர்கள் அளிக்க, காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கோயில் ஓரிரு கிலோமீட்டர்தானென்றபோதும் ஏற்ற இறக்கமான மலைப்பாதைச்சரிவுகள்! அவற்றில் வரிசையாக நிறைந்து கிடக்கும் கடைகளில்…..பாசிமணிமாலைகள், ருத்திராட்சங்கள், பல வண்ணப் பைகள், புகைப்படஅட்டைகள்,கடவுள் உருவங்கள் ,கம்பளி ஆடைகள் மற்றும் போர்வைகள் என மலை சார்ந்த கோயில் தலங்களுக்கு வழக்கமாக உரிய பொருட்கள் மண்டிக் கிடந்தன. என்றாலும் கூடக் காசி ஹரித்துவார் போன்ற புனிதத் தலங்களைப் போல அழுக்கும் குப்பையும் நிரம்பி வழியாமல் ஓரளவு தூய்மையுடனேதான் இருந்தது பத்ரிநாத்.(இந்த ஆண்டுக்கான பக்தர் கூட்டம் இப்போதுதான் வரத் துவங்கியிருப்பதும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம்). ஒரு புறம் தேவபூமிகளாகப் போற்றிக் கொண்டே- மறுபுறம் அடிப்படைச் சுத்தம் கூட இல்லாமல் அவற்றை நாம் பராமரிக்கத் தவறி விடுகிறோம்  என்பது உண்மையிலேயே வருத்தத்துக்குரியதுதான்

.இமயச் சிகரங்களின் பின்னணியில்பெருகி ஓடும் அலக்நந்தா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலய தரிசனம் சற்றுத் தொலைவிலிருந்தே  அற்புதமாகக் கிடைத்து விடுகிறது
ஆலய வாயிலில் குழுவினரோடு நான்...

தென்னாட்டுக் கோயில்கள் போன்ற கோபுர அமைப்போ, வட நாட்டுக் கோயில்கள் போன்ற கூம்பு வடிவ மேற்கூரையோ கொண்டிராத வித்தியாசமான வடிவமைப்புடன் புத்த விகாரைகளைப் போல- அதே வேளையில்- வண்ண மயமாகக் காட்சியளிக்கும் பத்ரிநாத் ஆலய முகப்பு கண்ட அளவிலேயே நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. .


.பத்ரிநாதரின் காலடிகளை நாளெல்லாம் தழுவிச் செல்லும் குளிர்ச்சியான ஆற்று நீரோட்டத்தோடு கூடவே கொதிக்கும் வெந்நீர் ஊற்றாக தப்தகுண்டமும் நாரதஷீலாவும் (இதிலுள்ள நீர் அத்தனை சூடாக இல்லை) இயற்கையின் அதிசயங்களாக அங்கே அமைந்திருப்பது வியப்பூட்டுகிறது. தப்தகுண்டக் குளியல் மறுநாள் என்பதால் கொதிக்கும் நீரில் கால்களை மட்டும் நனைத்துக் கொண்டோம்.



ஒன்பதாம் நூற்றாண்டை ஒட்டி சாளக்கிராமக் கல்லில் அமைந்த பத்ரிநாதரின் உருவச் சிலையை அலக்நந்தா ஆற்றிலிலிருந்து  கண்டெடுத்த ஆதிசங்கரர் அருகிலுள்ள குகை ஒன்றில் அதைப் பிரதிஷ்டை செய்தார் என்றும் பின்னாளில் கட்வால் மன்னர்களால் 16ஆம் நூற்றாண்டில் அச் சிலை வடிவம் தற்போதுள்ள ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.


மேற்கூரையுடன் கூடிய பாதையில் பக்தர்கள் வரிசையாகச் செல்ல வசதி செய்யப்பட்டிருக்கிறது; கூட்டம் அதிகமாகச் சேரத் தொடங்கியிராததால் வரிசை விரைவாக நகர்ந்து செல்ல அரை மணி நேரத்துக்குள்ளேயே உள்ளே செல்வது சாத்தியமாகி விட்டது.


கருவறைக்குள் முதன்மைத் திருவுருவம் இளம் கறுப்புநிற சாளக்கிராமத்தில் அமைந்த பத்ரி விஷாலின் திருவுரு. பத்மாசனத்தில் தலைக்கு மேல் சக்கரத்துடன் அமைந்திருக்கும் அத் தோற்றம் புத்தரை நினைவூட்டுகிறது. [புத்தரும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றே எனச் சொல்லப்படுவதுமுண்டு] ருத்திர மூர்த்தியாக காளியாக அவ்வடிவத்தைக் காண்போரும் உண்டு…அரியோ..சிவனோ…அம்மையோ..அப்பனோ…. இவை அனைத்துமே ஈடு இணையற்ற பிரபஞ்சப் பெருவெளியின் மகத்தான சக்திக்கான குறியீடுகள் என்று புரிந்து கொண்டால் மட்டுமே பேதங்கள் அழிந்து சமநிலை தழைக்கும்…

பத்ரிநாதருடன் குபேரனின் மிகப்பெரிய முக வடிவம்,கருடாழ்வாரின் சிறிய சிலா வடிவம்,உற்சவ மூர்த்தி (இவரே குளிர்காலத்தில் ஜோஷிமட் செல்பவர்) நாரதர் ஆகியோரின் திரு உருக்களும் அங்கே உடனிருந்தன. கருவறையின் மற்றுமொரு தனிச் சிறப்பு நர நாராயண வடிவங்கள், பளிச்சிடும் கறுநிற சாளக்கிராம உருவங்களாகக் காட்சி தருவதே.
நர நாராயண தத்துவம் குறித்த கருத்துக்கள் மிகவும் சுவாரசியமானவை.  நரன்,நாராயணன் என இரு முனிவர்களின் வடிவங்களில் வரலாற்றுக்கெட்டாத காலம் தொடங்கி பூவுலகின் அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும் விஷ்ணுவே கடுமையான தவம் இயற்றி வருகிறார் என்கிறது பாகவத புராணம். இது பற்றியே பத்ரிநாத் கருவறையில் அவ்விரு வடிவங்களின் சாளக்கிராமங்களும் மூலவருடன் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் பத்ரிநாத் அமைந்துள்ள இடத்துக்கு இருபுறமும் உள்ள இமயச் சிகரங்கள் இரண்டும் கூட நர,நாராயணர் என்றே அழைக்கப்படுகின்றன.


அந்த நர நாராயணர்கள்தான் முறையே அர்ச்சுனனாகவும்[நரன்[,கண்ணனாகவும்[நாராயணனாகவும் வந்தவர்கள் என்றும்,இணைபிரியாத இரட்டையர்களான அவர்கள் இருவருமே முன்பிறவியில் நர நாராயணர்களாக பத்ரியில் தவமிருந்தவர்கள் என்றும் சொல்கிறது மகாபாரதம்.பகவத் கீதையில் அர்ச்சுன்னைப் பார்த்து ‘’முன்பு நீயே நரனாக இருந்தாய்!நாராயணனின் தோழனாக..அவனுடன் இணைபிரியாமல் இருந்தபடி பத்ரியில் தவம்செய்தாய்..’’ என்று கண்ணன் சொல்வதும் இதை ஒட்டியதே.நரநாராயணர் விஷ்ணுவின் 5ஆம் அவதாரமாகவும் கருதப்படுகின்றனர்

நர,நாராயண வடிவங்கள்-நன்றி;விக்கிபீடியா...


சன்னதிக்குள் பத்து நிமிடங்களுக்கு மேல் செலவிட்டு அங்கிருந்த மூர்த்தங்கள் இன்னவென்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டோம்.
பிரகாரத்தில் வலம் வருகையில் அங்கும் நர நாராயண சன்னதி ஒன்று தனியாகவே அமைந்திருந்ததைக் காண முடிந்தது. ஆதி கேதார்நாத் என்னும் பெயருடன் சிறிய சிவலிங்கத்துடன் கூடிய சன்னதி ஒன்றும் அங்கிருக்க அதை வழிபட்டு அப்போதைக்கு கேதார்நாத் செல்ல முடியாத குறையைப் போக்கிக் கொண்டோம்.
தென்னாட்டுக் கோயில்கள் போலக் கருவறையில் கற்பூர ஆரத்தி,சடாரியைத் தலை மீது வைத்தல் முதலிய சம்பிரதாயங்கள் இங்கு இல்லை; தீர்த்தம் மட்டும் வழங்கி செந்தூரத்தை நம் நெற்றியில் பூசிவிட்டுச் சிறிய சர்க்கரைக் கட்டிகளைப் பிரசாதமாகத் தருவதே இங்குள்ள கோயில்களின் மரபு.
கோயிலுக்குள்ளிருந்து வெளியே வந்த பிறகும் சூழ்ந்திருந்த சுற்றுப்புறக் காட்சிகளிலேயே கொஞ்ச நேரம் லயித்துப் போயிருந்தபோது கோயிலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் செதுக்கப்படாத
கற்பாறை ஒன்று நந்தியின் வடிவில் இருப்பது கண்ணுக்குத் தென்பட்டது.
                                                கல்லில் மறைந்திருப்பது நந்தியா..செம்மறி ஆடா..?

(ஒருவகையில் பார்த்தால் செம்மறி ஆட்டின் மிகப்பெரிய சிற்பமாகவும் கூட அது தோன்றியது). இந்த இயற்கைதான் தன்னைத்தானே எப்படியெல்லாம் செதுக்கிக் கொள்கிறது?
மறுநாள் காலை வரை பத்ரிநாத்திலேதான் தங்கப்போகிறோம் என்பதால் மதிய உணவுக்குப் பிறகு அங்கிருந்து 3 கி.மீ தொலைவிலிருந்த இந்திய-சீன   
எல்லையோரத்து கிராமமான மானாவுக்குச் சென்றோம்.
(மேலும் அடுத்த தொடர்ப்பதிவில்..)
புகைப்படங்கள்;பதிவர்.
காண்க;
.





18.5.12

இமயத்தின் மடியில்-3



’’கறுத்த மலைத் தொடர்களின் நடுவே 
வெண்நிறத்தில் மின்னும் மலை முகடுகளைக் கண்டபோது
வாழ்க்கை என்பது மகிழ்வு-துன்பம்கசப்பு-இனிப்புஇருட்டு-வெளிச்சம் என்ற இருவகை முரண்களாலேயே நெய்யப்பட்டிருக்கிறது என்னும் தத்துவ தரிசனம் விடியலின் வெளிச்சம் போல உள்ளத்திலும் வெளிச்சமாகிக் கொண்டிருந்தது...’’

ஜோஷிமட்-
வெள்ளிப்பனி இமயத்தின் முதல்காட்சி...
மே 8 ஆம் தேதி காலை சரியாக 3 மணிக்குஅடர்த்தியான இருள் கப்பியிருந்த அந்தப் பொழுதில் ஜோஷிமட் நோக்கிய எங்கள் பயணம் துவங்கியது.
பீப்பில்கோட்டியிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆதிசங்கரர் நிறுவிய மடங்களில் ஒன்றான ஜோஷிமட் எனப்படும் ஜோஷிமடம் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பது.
சைவத் திருக்கோயில்களில் தேவார மூவரால் பாடப் பெற்றவை பாடல் பெற்ற தலங்கள் என அழைக்கப்படுவது போல ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் அவர்களால் பாசுரம் பாடப்பட்ட ஆலயங்கள் அவர்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டிருக்கும் திவ்விய தேசங்களாகக் கருதப்படுகின்றன. அந்த 108 தலங்களில் ஒன்று ஜோஷிமட். அதனைப் பிருதி’ என்னும் செந்தமிழ்ச்சொல்லால் குறிப்பிடும்  திருமங்கையாழ்வார்.
‘’மறங்கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடி பணிதர இருந்த நல் இமயத்துள்…’’என்றும்,
‘’ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயர் அடையாமல்
ஏதம் இன்றி அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல்புரை எழில்நோக்கி
பேதை வண்டுகள் எரியென வெருவரும் பிருதி என்று அடை நெஞ்சே’’
என்றும் தனது பெரிய திருமொழியில் ஜோஷிமடத்து நரசிம்ம மூர்த்தியைப் பாடிப் பரவுகிறார்.

இங்கு துர்க்கை நரசிம்மர் ஆகியோரின் மூர்த்தங்கள் ஒன்றாக அமைந்திருப்பது பெருஞ்சிறப்பு. இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடையதாகக் கருதப்படும் கல்பதரு ஒன்றையும் இங்கே காண முடியும்.
சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்றே அமைந்திருக்கும் சில கோயில்களைத் தவிரப் பிற வைணவக் கோயில்களில் சிவன் துர்க்கை உருவங்களைக் காண்பது அரிது. ஆனால் சிவ வழிபாடு முதன்மை பெற்றிருக்கும் வடநாட்டு ஆலயங்கள் இப் பொதுப் போக்கிலிருந்து மாறானவை. மேலும் ஜோஷிமடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டிருப்பதுவும் கூட இங்கு துர்க்கை [சண்டிகா] சன்னதியும்,சிவன் உருவங்களும் அமைந்திருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

நரசிம்மதுவார்என்னும் பெயர் தாங்கிய கருவறைக்குள் 

லட்சுமிநரசிம்மரின் உருவச்சிலையோடு பத்ரிநாத் கோயிலில் காணப்படும் அதே வரிசை முறையில் குபேரன்,உற்சவர்,விஷால்பத்ரி,கருடாழ்வார் ஆகியோரின் திரு உருவங்கள் காணப்படுகின்றன; கூடுதலாக இராமன் சீதை இலட்சுமணன் உருவங்களும்

கடும் குளிர்காலங்களில் பனி மலைச் சிகரத்துக்கு வந்து பத்ரிநாதரைத் தரிசிக்க முடியாதென்பதால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பின்பு குளிர்காலம் தொடங்கியதுமே பத்ரிநாத்திலுள்ள உற்சவமூர்த்தியின் சிலை ஜோஷிமட்டிலுள்ள இந்தக் கருவறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடுகிறது; ஏப்ரல் இறுதியிலோ மே தொடக்கத்திலோ கோடைகாலம் பிறந்ததும் உற்சவப்பெருமாள் பத்ரி மலைக்கு ஏறி விடுகிறார்.
புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் நரசிம்ம சன்னதியின் வாயிலில் காத்திருந்து  முதல் தரிசனம் செய்ய முடிந்தது அளவில்லா ஆனந்தத்தை அளித்தது.

பனியின் குளுமையும் இரவின் ஈரமும் பரவிப் படர்ந்திருந்த ஆலயத்தின் கல்தரையில் கால் பதித்தபடி வெளியே வந்தபோது இரவின் இருட்போர்வை மெல்லிதாக விலகத் தொடங்கியிருந்தது. நள்ளிரவில் கண் விழித்தது பசியைக் கிளர்த்த அங்கே திறந்திருந்த தெருவோரத் தேநீர்க்கடை ஒன்றில் தேநீரைப் பருகியபடி சற்றே நிமிர்ந்தால்….முற்றிலும் இருள் விலகாத கரிய மலைகளுக்கு நடுவே இமயத்தின் பனிச் சிகரங்கள் வெள்ளித் தகடுகளாக மின்னத் தொடங்கியிருந்தன. நந்தாதேவி, நீலகண்ட் ஆகிய சிகரங்களின் தோற்றமும் அவற்றில் அடக்கம்.

நின்றும் இருந்தும் கிடந்தும் மூன்று கோலங்களில் காட்சி தருபவன் நெடுமால். அவனது கிடந்த கோலக் காட்சி போல….அவன் பள்ளி கொண்டிருக்கும் அதே தோற்றத்தில் ஒரு மலைத் தொடரின் அமைப்பு தென்படுவதைச் சுட்டிக் காட்டினார் தோழியின் கணவர்.[அவர் ஒரு எழுத்தாளரும் கூட..]

திருக் கண்டேன்பொன் மேனி கண்டேன்..திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்..’’ என ஆழ்வார்கள் விடுத்த ஆனந்த அறைகூவல், இயற்கையின் இயல்பான எழில் வடிவில் அவனைக் கண்டுகொண்ட பரவசத்தாலேயே நேர்ந்திருக்கக் கூடும் என அப்போது தோன்றியது. கறுத்த மலைத் தொடர்களின் நடுவே வெண்நிறத்தில் மின்னும் மலை முகடுகளைக் கண்டபோதுவாழ்க்கை என்பது மகிழ்வு-துன்பம், கசப்பு-இனிப்பு, இருட்டு-வெளிச்சம் என்ற இருவகை முரண்களாலேயே நெய்யப்பட்டிருக்கிறது என்னும் தத்துவ தரிசனம் விடியலின் வெளிச்சம் போல உள்ளத்திலும் வெளிச்சமாகிக் கொண்டிருந்தது.

எங்கள் வண்டிக்கு முன்னால் தொடர்வரிசையாய் நின்றிருந்த வாகனங்கள் நகரத் தொடங்கியபின் நாங்களும் ஜோஷிமட்டிலிருந்து பத்ரி நோக்கிய பாதையில் செல்லத் தொடங்கினோம்
வழியில் பாண்டுகேஷ்வர் என்னும் சிற்றூர் ஒன்று எதிர்ப்பட்டது.அங்கே சிறிதான ஒரு கோயிலும் கூட

மகாபாரதத்தின் பாண்டு சிலகாலம் வாழ்ந்த்தாக்க் கருதப்படும் அங்கிருந்து தென்பட்ட இமயச் சிகரம் ஒன்றுபனிலிங்கம் போல எனக்குக் காட்சி தர, என் தோழிக்கோ துதிக்கையுடன் கூடிய விநாயகர் உருவமாக அது தென்பட்டது. புகைப்படக் கருவியைச் சீரமைத்து நெருக்கமாக நோக்கியபோது எனக்கும் அது சரியானதாகவே தோன்றகாமராவில் சிறைப் பிடித்துப் பார்த்தால் அப்படியே...அச்சு அசலான பிள்ளையார் வடிவம்!.
’’அவரவர் தம தம அறி அறிவகை வகை..’’என நம்மாழ்வார் சுட்டுவதும் இதைத்தானோ?


ஜோஷிமட்டிலிருந்து பத்ரிநாத் செல்லும் தொலைவு 30 கி மீதான் என்றபோதும் அதுவரை நாங்கள் கடந்து வந்த மலைப்பாதைகளையெல்லாம் விஞ்சி விடும் அளவுக்குக் கடுமையான பாதை அது.மண்குழைந்து நெகிழ்வாக இருந்துவந்த மலையடுக்குகள் இப்போது இறுகிய கற்பாறைகளாகக் காட்சி தரத் தொடங்கியிருந்தன.
ஆழம் காண முடியாத பள்ளத்தாக்குகள் , கோட்டை மதில்களைப் போல விண்முட்ட எழுந்து நிற்கும் நெடிதுயர்ந்த மலைத்தொடர்கள்…, சரிந்து கொண்டிருக்கும்……சரியும் நிலையில் இருக்கும் கற்குவியல்கள் இவை அனைத்தும் இறைவனை அடையும் வழி அத்தனை எளிதானதல்ல என்பதை உணர்த்தியபடி எங்களை நடுக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.



பிடரி பிடித்து ஆட்டிக் கொண்டிருந்த அச்சம் ஒரு மூலையில் இருந்தாலும் குறிப்பிட்ட அந்தப் பாதை முழுவதும் தென்பட்ட பனி இமயத்தின் பல்வேறு முகங்கள் வாழ்வில் என்றுமே காணக் கிட்டாத அபூர்வ கணங்களாய் இதுவரை உணர்ந்தறியாத  சிலிர்ப்பைக்கிளர்த்தியபடி இருந்ததால் அச்ச உணர்வு அதிசய உணர்வாய் மாறிப்போனது..
வெள்ளிப்பனி உருகி’ மலையிடுக்குகளில் நீரோடை போல வழிந்து வர….
மலைச் சரிவுகளில் பாளம் பாளமாய்ப் பனி உறைந்து கிடக்க இமயத்தின் முகடுகள் பனிச் சிற்பங்கள் போல் காட்சி தர
’’மன்னும் இமய மலை எங்கள் மலையே ‘’என இதயம் ஒரு கணம் பூரித்துப் பொங்கியது.






நேற்றைய பயணத்தில் எதிர்ப்பட்டிராத பஞ்சப்பிரயாகைகளில் ஒன்றான விஷ்ணுப்பிரயாகை...இப்போது எதிர்ப்பட்டது.அதில் பொங்கிப் பெருகும் நீரைக் கொண்டு புனல் மின்சாரத் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதைக் கண்டபடியே அதைக் கடந்து சென்றோம்.
விஷ்ணுப்பிரயாகை.




அடுத்து பத்ரிநாதரை எண்ணித்தவமிருந்த அனுமன் தவம்செய்த ஹனுமான்சட்டி....
பொழுது முற்றாகப் புலர்ந்து விட்ட காலை.8 மணியளவில் பத்ரிநாத் எல்லையைத் தொட்டதும்அங்கு தென்பட்ட அற்புதக் காட்சிகள் ‘’கண்டேன்..கண்டறியாதன கண்டேன்..’’என 
ஆனந்தக் கூச்சலிட வைக்க, வாழ்க்கையின் மகத்தான...உன்னதமான கணங்களில் அதுவும் ஒன்றாய் ஆகிப்போனது.






[மேலும் அடுத்த தொடர்ப் பதிவில்..]
.புகைப்படங்கள்;பதிவர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....

பரவலான கவனம் பெற்ற பதிவுகள்