24.4.13

அழைப்பு-அறிவிப்பு

அண்மையில் ஐந்து வயதுப்பெண்குழந்தைக்கு தில்லியில் இழைக்கப்பட்ட  கொடூரமான பாலியல் வன்முறையை எதிர்த்த பீனு ராவத் [Beenu Rawat] தாக்கப்பட்ட காட்சி கீழே....
சற்றே மனச்சாட்சியும்....சமூக மாற்றத்துக்கு நம்மால் முடிந்த எதையேனும் செய்தே ஆக வேண்டும் என எண்ணுபவர்களும் இத்துடன் உள்ள மனுவில் கையொப்பமிடலாம்....
இத்துடன்....change.org தளத்திலிருந்து வந்திருக்கும் கடிதமும் கோரிக்கையும்....

We need 25,000 signatures before we deliver this petition to Home Minister, Sushilkumar Shinde.
Sign My Petition
Dear SUSILA 

I was slapped repeatedly by Assistant Commissioner of Police, B.S. Ahlawat. You might have seen this video in the news. He slapped me when I was inside the hospital demanding justice for the 5-year-old girl who was brutally raped in Delhi.
We all know that the Delhi Police grossly violated the law in this case. They delayed filing a missing complaint for the 5-year-old, tried to bribe the girl’s father and slapped me when I was protesting, while other policemen just watched.
If the police had responded promptly and responsibly, the girl could have been rescued earlier. It is time this police impunity ended. They should be made responsible for their actions.
That’s why I support Kapil’s demand telling Home Minister, Sushilkumar Shinde to dismiss and take strict action against all these errant police officers.
I have been protesting along with others on the streets of Delhi for more than five days. I am shocked by the lack of strict action against these police officers.
Together we need to ensure that immediate steps are taken to hold Delhi Police responsible for their actions. We will deliver this petition to the Home Ministry soon, but before that we need more support.
Join me and tell Home Minister, Sushilkumar Shinde, to immediately dismiss and take strict action against all the policemen who refused to file the complaint, tried to bribe and watched as the ACP slapped me.
Help us reach 25,000 signatures before we deliver this petition to Mr.Shinde. Please sign this petition and forward my mail to your friends and family asking them to join us.
Thanks for taking action,
Beenu Rawat via Change.org
--
News sources:
Zee News: Delhi rape case: ACP suspended for slapping protester:
NDTV: Women protestor at Delhi hospital slapped by senior policeman:
Deccan Herald:  Three police officers suspended:

21.4.13

’பரதேசி’-விமரிசனக்காணொளி



இந்த ஆண்டு 2013இல் நான் இதுவரை பார்த்த தமிழ்த் திரைப்படங்களில் நெஞ்சைப்பிழிந்து உலுக்கிப்போட்ட படம் பாலாவின் பரதேசி.


 ‘ரெட் டீ’ என்னும் நாவலின் தூண்டுதலால் இப்படம் உருவானதாக பாலா சொன்னபோதும் படம் முழுவதும்  வெளிப்படிருப்பது அவரது உழைப்பும், தனித்துவமான ஆளுமையுமே. சேது, நந்தா,பிதாமகன்,நான்கடவுள் ஆகிய தன் படங்கள் வழியே தமிழ்த் திரையை அதற்குப் பரிச்சயமில்லாத ஒரு தளத்துக்கு முன்னகர்த்திச் சென்ற பாலா ‘அவன் - இவ’னில் சற்றே சறுக்கி விட்டதில் வருத்தம் கொண்டிருந்த நான்
’’பாலா காட்டும் நல்லுணர்வுகள் அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்க வைக்கின்றன.வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’’என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

இப்போது அந்த நல்ல நாளின் உதயத்தில்...
தன் ‘பரதேசி’யின் மூலம் தமிழ்த் திரைக்கு அவர் புதிய பரிமாணம் சேர்த்திருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.



தில்லியில் அது வெளியிடப்பட்ட முதல்நாளே அதைப்பார்த்து மனம் கசிந்து, அதில் வசனப் பங்களிப்பாற்றிய எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடனுடன் தொடர்பு கொண்டு என் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு பாராட்டும் தெரிவித்தேன்.விரிவான விமரிசனத்தை உடன் எழுத முடியாமல் வேறு ஏதேதோ வேலைகள். நான் அதை எழுத முனைவதற்குள் பல விமரிசனங்கள் இணையத்தில் குவிந்து விட்டதால் கூறியது கூறலைத் தவிர்க்க எண்ணி எழுதாமலிருந்து விட்டேன்.

தற்போது பாலாவின் ‘பரதேசி’ பற்றி மதுரை நிஜநாடக இயக்க நிறுவனரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாடகத் துறைப்பேராசிரியருமான மதிப்பிற்குரிய திரு மு.ராமசுவாமி அவர்களது உரையடங்கிய காணொளியை என் தளத்தில் பகிர விரும்பி அவரிடம் ஒப்புதல் கேட்டபோது மகிழ்வோடு  அனுமதியளித்த திரு மு.ரா.,வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
காணொளிக்கான இணைப்பு;


குறிப்பு;
பேராசிரியர் முனைவர் திரு மு.ராமசுவாமி அவர்கள், தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் தன் நிஜ நாடக ஆக்கங்களின் வழி கணிசமான பங்காற்றியிருப்பவர். 

dramaswamy.com யில் தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் ராமசுவாமி, கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பிதாமகன்,பருத்தி வீரன்,சண்டைக்கோழி,கன்னத்தில் முத்தமிட்டால் முதலிய சில திரைப்படங்களிலும் நண்பர் மு ராவை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.

அண்மையில் தன் திரை அனுபவங்களைத் தொகுத்து
 ‘திரை வளர்த்தநான்,நான் வளர்த்த திரை’ என்ற பெயரில் நூலாக்கியுள்ள திரு மு ரா , மிகச்சிறந்த திரை விமரிசகரும் கூட.
அவரது வழக்குஎண் 18/9 பற்றிய ஒரு விமரிசனக் காணொளியை இந்தத் தளத்தில் முன்பு பகிர்ந்திருக்கிறேன்.

இணைப்புகள்;
ஏழாம் உலகமும் நான்கடவுளும்







2.4.13

தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்

தில்லி தமிழ்ச்சங்கம் ஏப்ரல் 6ஆம் நாள்[2013] மாலை வழங்கவிருக்கும் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகளுக்குரியவர்களில்  நானும் ஒருத்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.சிறுகதைத் துறைக்கான ‘அமரர் சுஜாதா விருது’ எனக்கு அளிக்கப்படவிருக்கிறது.

தில்லி தமிழ்ச்சங்கத்தாருக்கும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் மூத்த எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,வாசகர்கள் ஆகிய அனைவருக்கும் என் நன்றி.

எழுத்துத் துறையில் முனைப்போடும்,மேலும் உற்சாகத்தோடும் இயங்க இவ்வாறான விருதுகள் புத்துணர்வு நல்கும் என்ற நம்பிக்கையோடு அதனை ஏற்கவிருக்கிறேன்.

தினமணி செய்தி-கீழே...
http://dinamani.com/edition_new_delhi/article1526394.eceபுது தில்லி,
First Published : 02 April 2013 12:59 AM IST
தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்-2013' வழங்கும் விழா இம்மாதம் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு தில்லிச் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பேச்சாளர், தமிழ்க் கவிஞர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பத்ம விருது பெறுவோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக "தினமணி" ஆசிரியர் கே. வைத்தியநாதன் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கியும், பத்ம விருது பெற்றோரை பாராட்டியும் பேசுகிறார்.
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான "அமரர் ஏ.ஆர். ராஜாமணி விருது' திருப்பூர் கிருஷ்ணனுக்கும், சிறந்த தமிழ்ப் பேச்சாளருக்கான "குமரி அனந்தன் விருது',பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தமிழ்க் கவிஞருக்கான "கவியரசு கண்ணதாசன் விருது' கவிஞர் ஜெயாபாஸ்கரனுக்கும், சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான "அமரர் சுஜாதா விருது' எம்.ஏ. சுசீலாவுக்கும், "சிறந்த தமிழ் ஆர்வலருக்கான விருது" சிந்துகவி மா. சேதுராமலிங்கத்திற்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடனக் கலைஞருக்கான விருதை "பத்மபூஷண்' சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ஆகியோரும், சிறந்த வாத்தியக் கலைஞர்களுக்கான விருதை வி.எஸ்.கே. சக்ரபாணி (வயலின்), கும்பகோணம் என். பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோரும், சிறந்த தமிழிசைப் பாடகருக்கான விருதை அகிலா கிருஷ்ணனும் பெற உள்ளனர்.

8.3.13

தில்லிகை-மார்ச் நிகழ்வு


தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கவிதை
இலக்கியச் சந்திப்பு: 2013/03

தமிழில் தலித் கவிதைகளும் தன்நிலை போக்குகளும்
திரு. சு.அம்பேத்கார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.

  இப்படிக்கு, அன்புள்ள அம்மா...
டேனிஷ் கவிதை மொழிபெயர்ப்பு நூல் குறித்து
பேரா.எச்.பாலசுப்பிரமணியம்
சாகித்ய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர்- 20 நி.

சாவின் மீதான பாடல்
- பா.அகிலனின் கவிதை மீதான அனுபவக் குறிப்பு
திரு. தி.சதீஷ்குமார்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - 20 நி.

                                                                                         கலந்துரையாடல் 30 நி.

                                                                                                      9 மார்ச் 2013, 

                                                                       இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு 


                                                                                  பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், 
                                                                                                    ராமகிருஷ்ணாபுரம் 

                                                                                இலக்கிய ஆர்வம் கொண்டோர்  நண்பர் சூழ வருக! 

7.3.13

’பெரிய கடவுள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்....

சர்வதேசப் பெண்கள் நாளில்.......
‘’‘’பெண்விடுதலை வேண்டும்...
பெரிய கடவுள் காக்க வேண்டும்’’
ன்றான் பாரதி..அந்தப் பெரிய கடவுள் சட்டப் புத்தகங்களுக்குள்ளோ,மேடை முழக்கங்களுக்குள்ளோ இல்லை என்பதையும்....ஒவ்வொரு மனித மனசாட்சிக்குள்ளும் மறைந்தும் ஒளிந்தும் கிடக்கும் அந்தப் பெரிய கடவுளைத் தூசி தட்டி விழித்தெழச் செய்ய வேண்டியது நமது பொறுப்புத்தான் என்பதையும் நாம் என்றைக்குத்தான் புரிந்து கொள்ளப்போகிறோம்..?’’

தன்னம்பிக்கை தராத-கழிவிரக்கமூட்டும் பெண் சார்ந்த எழுத்துக்களைத் தவிர்க்க வேண்டுமென்பதைச் சில காலமாக நான் ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கிறேன்; ஆனாலும்..அண்மைக்காலக் குரூர நடவடிக்கைகள் பலவும்   அன்றாட நடவடிக்கைகளாகவே ஆகி வருவது (குறிப்பாக நாளும் அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுகள்,ஆசிட் வீச்சு போன்றவை) மனதுக்கு ஆயாசமூட்டுவதாகத்தான் இருக்கிறது. இன்றைய நாளிதழ் செய்தி ஒன்று தில்லியில் 48 மணிநேரத்துக்கு ஒரு முறை பெண் சார்ந்த  7 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகக் கூறுகிறது;மற்றுமொன்று பெண் சார்ந்த பாலியல் குற்றங்கள் போன ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்திருப்பதை எடுத்துச் சொல்கிறது.இந்தச் சூழலில் பெண்கள் தின வாழ்த்துக்களை மட்டும் சொல்லுவதோடு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பெண் சார்ந்த சமூக மனப்போக்கும்-அவளை நுகர்பொருளாக மட்டுமே அணுகும் ஆணின் உளக்கட்டமைப்பும் மாறினாலன்றி வெறும் வாய்ச் சொல் வீரங்களும், அந்த நேரத்து ஆவேசங்களும் இந்த நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப்போவதில்லை. ஆனாலும் கூட...எழுத்து என்ற கதவின் வழி சமூக மனச்சாட்சியைத் தட்டிக் கொண்டே இருப்பது ஒரு தார்மீகக் கடமை என்றே தோன்றுகிறது.

கருத்தொருமித்தலே காதல்..., ஒட்டும் இரு உள்ளங்களின் இறுகிய பிணைப்பே காதல் என்பது புரியாததால்....அதைப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை நம் ஊடகங்களும், so called ’திரைக்’காவியங்க’ளும் அளிக்காததால் - கணநேரச் சலனத்தையும்,ஒரு பக்கம் மட்டுமே ஜனிக்கும் வெறி பிடித்த காமத்தையும் மட்டுமே காதல் என்னும் மாயச் சிமிழுக்குள் வண்ணக்கனவுகளாக்கி வியாபாரம் செய்து கொண்டிருப்பதால் சாதனைப்பெண்களாக வலம் வர வேண்டிய வினோதினிகளும் வித்யாக்களும்...இன்னும் பெயர் தெரியாத எண்ணற்ற பல பெண்களும் ..ஆசிட் வீச்சின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் முகத்தை மட்டுமன்றித் தாங்கள் பதித்துச் செல்ல வேண்டிய முகவரிகளையே தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வினோதினி
வித்யா
இவர்கள் செய்த பாவம்...தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக்காதலை ஏற்க மறுத்தது...! காதல் ஒருவனைக் கைப் பிடிப்பது பெண்ணின் கம்பீரமான உரிமை என்றால் அவனை மனம் ஏற்க விரும்பாதபோது நிராகரிக்கும் உரிமையும் அவளுக்கு உரியதே என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால்...தன்னைப்பற்றிய பெருமிதத்தில் -அளவுக்கு மீறிய தன்னகங்காரத்தில் திளைக்கும் ஆணின் மனப்போக்கு அதை ஏற்க மறுத்து அடம் பிடிக்கிறது; முரண்டு பிடிக்கிறது...’என்னிடம் வயதும்,வாலிபமும் இருக்கும்போது என்னை இவள் எப்படி மறுதலிக்கலாம்’என்று கெக்கலித்தபடி பேயாட்டம் போடுகிறது. அவ்வாறான காட்சி அமைப்புக்களையும்,வசனங்களையும் ஊக்குவிக்கும் திரைப்படங்களே ஆரவாரமான வரவேற்புக்களையும்,கைதட்டல்களையும் அள்ளிக் குவிக்கின்றன.வேலைவெட்டி இன்றி சுற்றித் திரிபவனாக....ஊரறிந்த  பொறுக்கியாகவே ஒருவன் இருந்தாலும் அவன் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தி விட்டால் அவள்  அதை ஏற்றே ஆக வேண்டும்...காரணம் அந்தப்படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் அவன் ஹீரோ ஆக்கப்பட்டு விடுவது உறுதி. அப்படிப்பட்ட அதிபராக்கிரமசாலியான (!?) ஒருவனை ஏற்க ஒரு பெண் முன் வரவில்லையென்றால் ‘அவள் திமிர் பிடித்தவள்...ஆணவக்காரி..’

முதலில் சொல்லப்போனால்...இந்த ஒருதலைக்காதல் என்னும் சொல்லாட்சியே சரியானதில்லை.

ஒரு தரப்பில் மட்டுமே ஏற்படும் இவ்வகையான உணர்வைக் ‘கைக்கிளை’ என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.
கிளை என்பது உறவு...கை என்பது சிறியது.(கைக்குட்டை,கையேடு ஆகிய சொற்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்)
தொல்காப்பிய உரைகள் வழியாகப்  பல  வகைகளில் அர்த்தப்படுத்திக் கொள்ள இடமளிப்பது கைக்கிளை என்னும் தொடர்.

ஒன்று...., ஒரு தரப்பில் மட்டுமே தோன்றும் இது சிறுமையானது. எந்த வகையிலும் எவருக்கும் பெருமை தராதது.

அடுத்தது....இத்தகைய உணர்வு நீடித்திருக்கும் காலகட்டம் மிகக் குறுகியது. அடுத்த தரப்பில் எந்த எதிர்வினையும்,சமிக்ஞையும் சாதகமாகக் கிடைக்காதபோது கௌரவமாக விலகிச் சென்று விடுவதே கண்ணியமான ஓர் ஆணின் நடத்தையாக இருக்க முடியும்.

மூன்றாவதான ஒன்றும் உண்டு...
அதுவே ஒரு தரப்பில் தோன்றும் அன்பை மாற்றுத் தரப்பிலும் ஏற்படுத்தி ஒத்த காதலுக்கு வித்தாவது. காரணம் எந்தக் காதலுமே ’அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்ற காவியக்காட்சி போல அமைந்து விடுவதில்லை; முதலில் ஒரு மனதில் தோன்றிப் படிப்படியாக அடுத்த உள்ளத்திலும் பற்றிக் கொளும் காதலே நடைமுறையில் சாத்தியமானது.
‘’யான் நோக்குங்கால் நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்’’
என்ற திருக்குறள் ஒரு மனத்தின் குரல் இன்னொரு மனதிலும் மெல்லப் பற்றிப்படரத் தொடங்கும் படிநிலையைப்படம் பிடிக்கிறது.

ஆனால்....அது...வெறித்தனமானதில்லை. தான் விரும்பும் இன்னொரு நெஞ்சின் ஒப்புதல் கிடைக்கும் வரை அது மௌனமாகக் காத்திருக்கவே செய்கிறது... ஒப்புதல் கிடைக்காதபோது ஆவேசமோ ஆத்திரமோ கொள்ளாமல் வழி விட்டு விலகிச் செல்கிறது. தனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று ரௌத்திரம் கொண்டு அதை அழிக்கவோ சிதைக்கவோ அது துடிப்பதில்லை...அதனாலேதான் அதற்கும் குறிப்பிட்ட ஒரு கால வரையறை இருப்பதைக் கைக்கிளை என்னும் சொல் உணர்த்துகிறது. முதலில் ஒரு தரப்பில் மட்டுமே அன்பு ஏற்பட்டிருக்கலாம்...ஆனால் மறுதரப்பு அதை உடன்படவில்லையென்றால் அது சிறுமைப்பட்டுப் போகும் என்ற காரணத்தால்... சிறிது காலம் மட்டுமே அது அவ்வாறு இருப்பது நியாயம் என்பதாலேயே குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்கு உட்பட்ட அன்பு கைக்கிளை என்கிறது தமிழ் மரபு.

மரபும் தெரியாமல்....பெண் மனமும் புரியாமல் பித்தேறித் திரியும் பேய்க்கூட்டங்கள் இருக்கும்வரை.....நம் சமூகத்தில் நிர்பயாக்களும்,வினோதினிகளும்,வித்யாக்களும்தான்  பெருகிக் கொண்டிருக்க முடியும்...
‘’பெண்விடுதலை வேண்டும்...
பெரிய கடவுள் காக்க வேண்டும்’’
என்றான் பாரதி..அந்தப் பெரிய கடவுள் சட்டப் புத்தகங்களுக்குள்ளோ,மேடை முழக்கங்களுக்குள்ளோ இல்லை என்பதையும்....ஒவ்வொரு மனித மனசாட்சிக்குள்ளும் மறைந்தும் ஒளிந்தும் கிடக்கும் அந்தப் பெரிய கடவுளைத் தூசி தட்டி விழித்தெழச் செய்ய வேண்டியது நமது பொறுப்புத்தான் என்பதையும் நாம் என்றைக்குத்தான் புரிந்து கொள்ளப்போகிறோம்..?


15.2.13

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-5

சுஜாதாவின் நிபந்தனை

நவீன தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் சுஜாதா. தமிழ் உரைநடையில் ஒரு புதிய -வேகமான பாணி எழுத்து நடை உருப்பெறுவதற்கான வாயிலைத் திறந்து வைத்தவர். சிறுகதைகள்,சமூக/மற்றும் துப்பறியும் நாவல்கள்,வரலாற்று,விஞ்ஞானப்புனைவுகள் எனப் பல வகையான படைப்புக்களையும் உருவாக்கியிருக்கும்  சுஜாதா ,நாடகங்கள்,மற்றும் திரைக்கதை உருவாக்கலிலும் விற்பன்னர். தனக்கு வசப்பட்ட எழுத்துக் கலையைப் பிறருக்கு எளிதாக ஆக்கித் தருவதிலும் ஆர்வம் காட்டியவர் .கணையாழி போன்ற சிற்றிதழ்களிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தாலும்  எல்லா வகையான எழுத்துக்களையும் எழுதிப்பார்க்க வேண்டும் என்று எண்ணிய அளவுக்குத் தீவிர இலக்கியம் மட்டுமே படைக்க வேண்டும் என்பதில் சுஜாதா ஏனோ முனைப்புக் காட்டவில்லை; அவ்வாறான முனைப்பு மட்டும் அவருக்கு நேர்ந்திருந்தால்....வணிக இதழ்களாலும்,வணிகப்படங்களாலும் அவர் கபளீகரம் செய்யப்படாமல் இருந்திருந்தால் சாகித்திய விருது போன்ற பல இலக்கிய விருதுகளைப்பெறுவது அவருக்குக் கடினமாக இருந்திருக்காது. இருந்தாலும் இன்றும் கூட சுஜாதாவின் எழுத்துக்கள் புதுமையாகவும்,இளமையாகவும் இருப்பதும்- தேர்ந்த பல இலக்கிய விமரிசகர்களும் கூட சுஜாதாவின் பல சிறுகதைகளைத் தரமானவையாக இனம் காட்டுவதும் [நகரம்,நிபந்தனை,ஒரு லட்சம் புத்தகங்கள்] தமிழ் எழுத்தில் சுஜாதாவுக்கென்று ஓரிடம் என்றும் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவை.


சுஜாதாவின் நினைவு நாள் 27 ஃபெப்ரவரி
இனி நிபந்தனை பற்றி...

திருவனந்தபுரத்துக்குச் சென்றிருக்கும் சோமசுந்தரம்-ஈஸ்வரி தம்பதியர் கோயிலருகே பிச்சையெடுக்கும் நடுத்தர வயது அந்தணப்பெண் ஒருத்தியைப் பார்க்கிறார்கள்.அவளது நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளும் ஈஸ்வரி அவளைத் தங்களுடன் அழைத்துச் சென்று வீட்டு வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்புகிறாள்.தடுத்துப்பேசும் கணவனிடம் நியாயம் பேசித் தர்க்கம் செய்கிறாள்.பிற்பகலில் தன் மகளையும் அழைத்துவந்து அவர்களுடன் சேர்ந்து கொள்வதாகச்சொல்லி விட்டு விடை பெற்றுச் செல்கிறாள் அந்தப்பெண்.

இடையே அவர்களைத் தவறான வழியில் செலுத்தியபடி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் தாடி வைத்த கடைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து அந்தப்பெண்ணின் நடத்தை மோசமானதென்று சொல்ல,அதைக்கேட்ட ஈஸ்வரியின் உள்ளம் மாறி விடுகிறது.

’’என்னை உங்காத்திலே சேத்துக்க வேண்டாம்.பட்டணத்திலேஅழைச்சுண்டு போய் ஏதாவது ஒரு ஆச்ரமத்திலே ரெண்டு பேரையும் சேத்துடுங்கோ புண்ணியம் உண்டு’’என்று அந்தப்பெண் அவர்களிடம் கெஞ்சிக்கதறி மன்றாடியபோதும் அவள் மனம் நெகிழவில்லை.ஆனால் முதலில் ஈஸ்வரியின் கருணக்கு மறுப்புத் தெரிவித்த அவள் கணவன் சோமசுந்தரம் இப்போது சற்று நிதானித்து உண்மை எது பொய் எது என்று அறிய நாட்டம் கொள்கிறான்.ஈஸ்வரியின் பலமான எதிர்ப்பில் அது அடிபட்டுப்போக அவர்களின் கார் சென்னையை நோக்கிப் பறக்கிறது.
கார் கண்ணாடி வழி ஈஸ்வரி பார்க்க
‘’புடவைத் தலைப்பில் அழுது கொண்டு அலமேலு,சங்கிலியைக்கடித்துக் கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி,சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி’’என்று முடியும் கதை கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு என்பதை முன்வைக்கிறது.

கருணை காட்டவும் இரக்கம் கொள்ளவும் தயாராக இருந்தாலும் அவற்றுக்கும் கூட சில வரையறுக்கப்பட்ட எல்லைகளை நிபந்தனைகளை வைத்துக் கொள்ளும்  மனிதப்பொது இயல்பைக் கலையழகு குன்றாமல் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதாவின் கதை இது.

‘’எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம்,என்ன பிரயோசனம்,நடைமுறையிலே ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்?....வேற யாராவது பாத்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா யாரு அந்த வேற யாராவது....கோயிலுக்குக்கூடப்போக வேண்டாம்.இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்’’என்று முதலில் ஒரு குட்டிச் சொற்பொழிவே ஆற்றுகிறாள் ஈஸ்வரி.அவள் கணவன் அப்போது தயங்குகிறான்.முன் பின் தெரியாத பெண்களை உடனழைத்துச்செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.ஆனால் தாடிக்காரன் வந்து அவர்கள் மீது புகார் சொன்னதுமே ‘ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரி’ய ஆரம்பிக்கிறது.

அந்தப்பெண்களைப்பற்றிய தகவல் தாடிக்காரன் வழி வெளியாகும் முன்னரும் பின்னரும் தம்பதியருக்குள் வெளியாகும் முரணைக்காட்சிப்படுத்தும் வகையில் கதையை சுவாரசியப்படுத்துகிறார் சுஜாதா.

முதலில் தன் மனைவி அவர்களை உடனழைத்துச்செல்ல எடுத்த முடிவை சோமசுந்தரம் எதிர்த்தாலும் தாடிக்காரன் சொன்னதைக்கேட்டபின் கொஞ்சம் யோசிக்கிறான்.அவன் சொல்வது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்க விரும்புகிறான்.
‘’இரு ஈஸ்வரி...இதைச் சரியா விசாரிச்சுறலாம்.யார் பொய் சொல்றான்னு பாத்துடலாம்’’
என்கிறான்.
ஆனால் கணவனின் அந்தப்பார்வைக்கு ஈஸ்வரியின் மனம் இப்போது சபல முலாம் பூசிப்பார்க்கத் தொடங்குகிறது.தன் கருணை, இரக்கத்தின் அடிப்படையில் பிறந்ததென்றும் அவனது கருணைக்கு வேறு உள்நோக்கம் இருக்கலாமென்றும் தனக்குத்தானே கற்பித்துக் கொள்கிறாள்.அதனாலேயே அவர்களை உடனடியாகத் தவிர்ப்பதில் முனைப்புக்காட்டுகிறாள்.

இதுநாள்வரை தன் விருப்பத்தின்படி ஆட்டி வைத்துக் கொண்டிருந்த ‘பட்சிகள்’கையை விட்டுப்பறந்து விடுமே என்பதற்காகத்தான் தாடிக்காரனும் அவர்களைத் தேடி வருகிறானே தவிர அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் அவனிடம் இல்லை.கணவன்-மனைவி இருவருமே கதை முடிவில் அதை உணர்ந்து விட்டாலும் துணிச்சலாக ஒரு முடிவெடுத்து அவர்களுக்கு அவனிடமிருந்து மீட்சியளிக்க விரும்பாமல் சராசரித்தனமாகப்பிரச்சினையிலிருந்து நழுவிப்போகிறார்கள்.அவர்களின் கார் வேகமெடுத்துப் பறப்பது யதார்த்தத்திலிருந்து விரைவாக நழுவித் தப்பித்துக்கொள்ள விரும்பும் மனித இயல்பையே வெளிக்காட்டுகிறது.

தங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவரை பிறர் மீது கருணையை வர்ஷிப்பவர்களைப் போல பாவனை செய்து கொள்ள ஆசைப்படும் மனித மன விகாரங்களை இந்தக்கதையில் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதா
‘’பத்மனாப சுவாமி கோவில் முன்னால் ஒரு சம்பவம் நடந்தது.அதுதான் கொஞ்சம் கற்பனை சேர்ந்த ‘நிபந்தனை’’’என்று இந்தக்கதையின் பின்னணி பற்றியும் எழுதியிருக்கிறார்.

சிறுகதையை இணையத்தில் படிப்பதற்கான இணைப்பு
நிபந்தனை









5.2.13

ஒரு பாலைப்பயணம்-4 [இறுதி]

[தவிர்க்க இயலாத சில தாமதங்களால் பாலைப்பயணத்தின் நிறைவுப்பகுதி-சற்று இடைவெளிக்குப்பின்]

கை விடப்பட்ட ஒரு கிராமம்-குல்தரா



சாம் மணல்மேடுகளுக்கான வாகன நிறுத்தத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் தாண்டிக்கொண்டு எங்கள் காரை வெளியே எடுப்பது பெரும் சிக்கலாக இருந்ததால் முதன்மைச் சாலைக்கு எங்கள் வண்டி வந்து சேர்வதற்குள் இருளின் ஆதிக்கம் இலேசாகத் தொடங்கியிருந்தது.அது அதிகமாவதற்குள் எப்படியாவது அந்தக் கைவிடப்பட்ட கிராமத்தைக் கண்டே ஆக வேண்டுமென அதை நோக்கி விரைந்தோம்.

குறிப்பிட்ட ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழும் மக்களில் ஒருவர் கூட மீதமில்லாமல் முழுமையாக அந்த இடத்தைக்காலி செய்து கொண்டு செல்லும் அவலம் வரலாற்றின் சில சூழல்களில்-சில நேரங்களில் நேர்ந்து விடுகிறது.அதற்குப்பிறகும் அங்கு வேறு எவரும் குடியேற முன்வராதபோது அந்த இடம் வெறிச்சோடிப்போய்க் காலப்போக்கில் அநாதரவான-கைவிடப்பட்ட பிரதேசமாக மாறி விடுகிறது.பஞ்சம்,பிணி,பகைவர் படையெடுப்பு,கொள்ளையர் தாக்குதல் எனப்பலப்பல காரணங்களால் உலகின் பல இடங்களிலும் இவ்வாறான கைவிடப்பட்ட இடங்களைக்காண முடியும்.[An abandoned village is a village that has, for some reason, been deserted. In many countries, and throughout history, thousands of villages were deserted for a variety of causes. Abandonment of villages is often related to plague, famine, war, climate change, environmental destruction, or deliberate clearances]

அவ்வாறான ஓரிடத்தை ஒரு சுற்றுலாத்தலமாக்கி நுழைவுச்சீட்டும் வாங்க வைத்து அதை ஒரு சந்தைப்பொருள் போல மலினப்படுத்துவது சகிக்கக்கூடியதாக இல்லை; அங்கே ஆண்டுக்கணக்காக உறைந்து போயிருந்த கண்ணீரும்,பெருமூச்சும் காசாக்கப்படுவது போன்ற பாரம் நெஞ்ச அழுத்தியது.

சாம் மணல் மேட்டிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் பாதையில் கிட்டத்தட்டப்பாதி தூரம் வந்த பிறகு தென்பட்ட  ஒரு அடையாளக் கல் வலப்புறமாகத் திரும்புமாறு அறிவுறுத்த குல்தரா செல்லும் சாலையில் பயணத்தைத் தொடர்ந்தோம்.நேராக இரண்டு,மூன்று கிலோமீட்டர் சென்றபின் சிறியதொரு அரண்மனை முகப்பின் தோரண வாயில் போன்ற கட்டிட அமைப்பு ஒன்று தென்பட்டது.

அதன் அருகே கூண்டுவடிவ அறை ஒன்றில் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த ஒரு நபர்,’’அடைக்கும் நேரம் நெருங்கி விட்டதால் கால்நடையாகக் கிராமத்துக்குள் சென்று திரும்ப இனி நேரமில்லை;காரிலேயே  ஊருக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு வாருங்கள்’’என்றார்.

’’இந்த இடம் ஏன் இப்படி வெறிச்சோடிப்போனது?’’என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்க, ‘’அது மிகப்பெரிய ஒரு சோகக்கதை...அதைச்சொல்ல ஆரம்பித்தால் இருட்டி விடும்,பிறகு  நீங்கள் அங்கே எதையும் பார்க்க முடியாது, முதலில் பார்த்து முடித்து விட்டு வாருங்கள்’’என்றார் அவர்.
ஒரு கேளிக்கை சார்ந்த சுற்றுலா இடமாக அதனை எண்ண முடியாவிட்டாலும் அங்கே நிலவிய வெறுமையும்,இனம் புரியாமல் கப்பியிருந்த அடர்த்தியான சோகமும் அதற்குள் சென்றுவரும் ஆவலைக் கிளர்த்த,உள்ளே காரிலேயே ஒரு வட்டமடித்து விட்டு வரலாமென்று சென்றோம்.

வழி நெடுகிலும் கற்குவியல்களாய் இடிந்து,சிதைந்து நொறுங்கிக்கிடக்கும் வீடுகள்,தூர்ந்து போன கிணறுகள்,பாழடைந்த கோயில்கள்,தரிசான வெளிகள்,ஒரு காலத்தில் புழக்கத்திலிருந்ததற்கு அடையாளமாய் உடைந்து போன அம்மிகள்,அரவைக்கற்கள்,வெறுமையான வெட்ட வெளிகள் எனக் காணுகின்ற காட்சியெல்லாம் மனதுக்குள் கலவரத்தோடு கூடிய சோகத்தைக்கிளர்த்தின; 


ஒவ்வொன்றையும் நிதானமாகப்பார்த்துக்கொண்டு செல்ல முடியாதபடி இருள் அடர்ந்து வர கனத்த மனதோடும்,கதை கேட்கும் ஆவலோடும் முகப்புக்குத் திரும்பினால் எங்களுக்கு அது பற்றிய தகவல் சொல்வதாகக்கூறியிருந்த மனிதர் நேரம் மிகுதியாக ஆனதால் வீட்டுக்குச் சென்று விட்டிருந்தார்.சற்று ஏமாற்றமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்-ஜெரய்சால்மர் விடுதியை அடையும் வரை- நானாக ஒரு கதை புனைந்து குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தேன்.[வாழ்க்கையில் எத்தனை தமிழ்ப்படம் பார்த்திருப்போம்...?]ஒரு பணக்காரப்பண்ணையார்,ஏழைப்பெண் காதல்,அதன் மீதான எதிர்ப்பு,தொடர் விளைவு என்று கதையை ‘ஓட்டிக்கொண்டு போனேன்’.அதில் திருப்தி அடையாத என் பேத்தி விடுதிக்குள் நுழைந்ததுமே கூகிளைச்சரணடைந்து ‘குல்தரா’பற்றித் தேடத் தொடங்கி விட்டாள்.
திடீரென அவளிடமிருந்து ஒரு சின்னக்கூவல்..’’அம்மா..கிட்டத்தட்ட நீ சொன்ன மாதிரிதான்...’’என்று அந்தப்பக்கத்தை இணையத்தில் காட்ட கதைகள் விரிந்து கொண்டு சென்றன. பலிவால் என்னும் குறிப்பிட்ட அந்தண இனத்தைச் சேர்ந்த மக்கள் வேறு இடத்திலிருந்து புலம்பெயர்ந்து தார் பாலைவனத்துக்கு வந்து குல்தரா மற்றும் சுற்றியுள்ள 80க்கு மேற்பட்ட கிராமங்களைத் தங்கள் வசப்படுத்திக்கொண்டு கடும் உழைப்பால் முன்னேறி வந்திருக்கிறார்கள்.ஜெசால்மரைச் சேர்ந்த பிரபுத்துவ இளைஞன் ஒருவனின் பார்வை அந்தக்கிராமத்து இளம்பெண் ஒருத்தியின் மீது பட,அவர்கள் மறுக்க,அவன் கெடு வைக்க, தங்கள் குல ஆசாரங்களில் மிகத் தீவிரமான பிடிப்புக்கொண்டவர்களான அவர்கள் அவனது கோரிக்கைக்கு அஞ்சி இரவோடு இரவாகக் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு தங்கள் ஊரையே காலி செய்து கொண்டு எங்கோ சென்று விட்டார்கள்; குல்தராவைச் சுற்றியிருந்த கிராமங்களில் வாழ்ந்த அவர்களது இனத்தவரும் அதே போல வேற்றிடத்துக்குப்பெயர்ந்து விட,அந்தச்சூழல் வெறிச்சிட்டு விட்டது.


மற்றுமொரு கதையும் அந்தக்கிராமத்தைப் பற்றிச்சொல்லப்படுவதுண்டு.பலிவால் என்னும் அந்தக்குறிப்பிட்ட இனத்தவரின் செல்வச்செழுமை மொகலாய அரசர்களின் கண்களை உறுத்த அவர்கள் பலமுறை இந்தக்கிராம மக்களைத் தாக்கிப்போரிட்டிருக்கிறார்கள்;ஒவ்வொரு முறையும் தங்கள் வீரத்தால் வென்றுவந்த அந்த இனத்தைத் தந்திரத்தால் வீழ்த்தத் திட்டமிட்ட மொகலாயர்கள்,இறந்த அல்லது கொல்லப்பட்ட விலங்குகளின் கழிவுகளை அந்தகிராமத்தின் எல்லாக் குடிநீர்க்கிணறுகளிலும் வீசி வைக்க சுத்த சைவ உணவுக்காரர்களான அந்தக்குறிப்பிட்ட இனத்தவர்கள் தங்கள் செல்வங்களையெல்லாம் கூட விட்டு விட்டு இரவோடு இரவாக அங்கிருந்து காலி செய்து கொண்டு புலம் பெயர்ந்து சென்று விட்டார்கள் [அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி சமீபத்தில் கூட சில வெளிநாட்டவரால் கைப்பற்றப்படவிருந்ததான செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது].அவ்வாறு புலம் பெயர்ந்து சென்றபோது அந்த இடத்தின் மீது அவர்கள் ஏதோ சாபமிட்டுச் சென்றதாகவும் இன்று வரை பிறர் யாரும் குடியேறத் தயங்குவதற்கான காரணம் அதுவே என்றும் பலவாறான கதைகள் குல்தரா குறித்து அங்கே வழங்கி வருகின்றன.

தொடர்ந்த எங்கள் பயணத்தில் அந்தக்கிராமம் அப்படி வெறிச்சோடி இருப்பதற்கான காரணத்தை நாங்கள் ஒவ்வொருவரும் -குழந்தைகள் உட்பட- ஒவ்வொரு கதையாக்கிப் புனைந்து கொண்டே சென்றோம்...என்றாலும் அங்கே நிலவிய வெறுமையின்-துயரப்பெருமூச்சின் காரணத்தை அங்கே எஞ்சியிருக்கும் ஜடப்பொருள்களே மெய்யாக அறிந்திருக்கக்கூடும்.

பாலைப்பயணம் ஒரு புதுமையான அனுபவம்தான் என்றாலும் ஒருசில நெருடல்கள் எங்களை அதிகமாகவே பாதித்தன.

-சுற்றுச்சூழல் காப்பு என்பதற்குப் பாலையும் உட்பட்டதுதான். அதிலும் அது மிக அரிதான நிலப்பரப்பென்பதால் கூடுதல் பாதுகாப்பும் கூடத் தேவையாகிறது. என்னதான் அதை ஒரு சுற்றுலாத் தலமாகக் கொண்டாலும்,அதை வைத்துப்பிழைப்பு நடத்தினாலும் அந்த நிலப்பரப்பை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்ற தார்மீக உணர்வும்,பொறுப்பும் அரசுக்கும் வேண்டும்;அங்கேயே வாழ்பவர்கள் மற்றும் அங்கே சுற்றுலா வருபவர்கள் ஆகியோருக்கும் வேண்டும். அவை எதுவுமே சுத்தமாக அங்கில்லை என்பதை அந்தப் பாலைப்பரப்பில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் தண்ணீர் குப்பிகளும்,தின்பண்ட உறைகளும் நிதரிசனமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.பாலைப்பெரு வெளியில் இன்னும் சற்று நேரம் கழிக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவை அந்தக் குப்பை குவியல்களே. மெரினா மணல் வெளியைப் பாழாக்கிக் கொண்டிருப்பதைப் போலவே ஜெய்சால்மரின் பாலை நிலத்தையும் நாம் பாழ் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான நிஜம்.
மணல் வெளிக்குள் குப்பிகள்,காகிதங்கள்,பிளாஸ்டிக் உறைகள்...
[படத்தை சற்றுப்பெரிதாக்கிப் பார்த்தால் மனம் அதிகமாகவே கொதிக்கும்]
அடுத்து...சுற்றுலா என்ற பெயரில் உல்லாசக் கூத்தடிப்போரின் எண்ணிக்கையே அங்கே மிகுந்திருந்ததேயன்றிப் பரந்து கிடக்கும் அந்த மணல்வெளியில் மோனத் தரிசனத்தை உணரவும்,துய்க்கவும் எவருக்குமே ஆசையில்லை என்பதை அங்கிருந்த பெரும்பாலான கும்பல்கள் வெளிப்படுத்திக்கொண்டிருந்ததால் அந்தக்கூட்டத்துக்கு நடுவே அப்படி ஒரு தரிசனம் எங்களுக்கு வாய்க்கவும் வழியில்லை; சீசன் இல்லாத ஒரு காலச்சூழலில் தனியே வந்து அமைதியான சில கணங்களை அந்த மணற்பரப்பில் கழிக்கும் பேறு அடுத்த முறையாவது எங்களுக்கு வாய்க்க வேண்டும் என்னும் விருப்பத்தைச் சுமந்தபடி தில்லி நோக்கி விரைந்தோம்.


ஒரு பாலைப்பயணம்-1
ஒரு பாலைப்பயணம்-2
ஒரு பாலைப்பயணம்-3

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....

பரவலான கவனம் பெற்ற பதிவுகள்