துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.4.23

தடங்கள் – அறிமுகம்




என் இரண்டாவது நாவலாகிய ‘தடங்கள்’ கோவிட் 2020 இன் இடைப்பகுதியில் கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் வெளிவந்தது. ஆங்காங்கே சில வாசிப்புக்களும் எதிர்வினைகளும் கட்டுரைகளும் வந்தாலும் அது பற்றிய முழுமையான மதிப்புரையை ‘ மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்து கொண்டவர்களில் ஒருவன்’ என்று தன்னைப்பற்றிக்குறிப்பிடும் திரு சித்திர வீதிக்காரன் இப்போது தன் முகநூலில் வெளியிட்டிருக்கிறார். அவரைப்போலவே தமிழுக்கும், மதுரைக்கும்,என்னை ஒப்புக்கொடுத்திருப்பவள் என்பதால், ‘திருவிழாக்களின் தலைநகரம்’ என்று மதுரை குறித்த நூலை எழுதியிருப்பவரும், மதுரை பற்றி அங்குலம் அங்குலமாக அறிந்து வைத்திருப்பவருமான சித்திர வீதிக்காரன் போன்ற ஒருவர் முழுக்க முழுக்க மதுரைப்பின்னணி கொண்ட இந்த நாவல் குறித்து எழுத முன் வந்திருப்பது எனக்கு மிகுந்த முக்கியத்துவம் உடையதாகிறது. 
நன்றி திரு சித்திரவீதிக்காரன் மதுரை 

 தடங்கள் – எம்.ஏ.சுசீலா 

மீனாட்சியம்மன் திருக்கல்யாண விழாவோடு தொடங்கும் கதை அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவோடு நிறைவடைகிறது எம்.ஏ.சுசீலா அவர்களின் தடங்கள் நாவல். தொடக்கமும் முடிவும் கொண்டாட்டமாக அமைந்தாலும் வாழ்வு எவ்வாறு இருக்கிறது என்பதை சொல்கிறது கதை. எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தஸ்தாயெவெஸ்கியின் முக்கியமான நாவல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர். ஏராளமான சிறுகதைகள் எழுதியவர். நாவல் முழுவதும் ஏராளமான பெண் கதாமாந்தர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் சிக்கல்கள், இடையூறுகள் அதைத்தாண்டி தடம்பதித்த பெண்கள் அவர்களுக்கு ஏற்படும் தடங்கல்கள் என பலரது கதைகளின் வழியாக நம் சமூக அவலத்தை பதிவு செய்திருக்கிறார். பெண்கள் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியை தம் தோழியோடு மின்னஞ்சல் வழியாக தான் சந்தித்த பல பெண்களின் வாழ்க்கை கதைகளைப் பகிர்ந்து கொள்வதுதான் கதைக்களம். நாவலை வாசிக்கையில் நாம் அறிந்த பலரது கதைகளை நினைவூட்டினாலும் கதை சொல்லும் விதத்தில் தனது பார்வையையும் சேர்த்தே எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர். கதாமாந்தர்களின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவர்களுக்கான பிரச்சனை பொதுவாகத்தான் இருக்கிறது. குடும்பம், திருமணம், பணிச்சூழல், சமூகம் என பல தளங்களில் பெண்கள் இயங்கினாலும் அவர்கள் வாழ்வில் மையம் கொண்டுள்ள விசயங்களை நாவல் பேசுகிறது. கணவனின் சந்தேக குணத்தால் கஷ்டப்படும் பெண், கணவனின் பேராசையால் மரணமடைந்த பெண், கணவனின் பதவியாசைக்காக குடும்பவாழ்க்கையை விட்டுவிலகிய பெண், கட்டாயத்திருமணத்தால் வாழ்க்கையைத் தொலைத்த பெண், விடலைப்பையனின் காதலுக்காக தன்னை மாய்த்துக்கொண்ட பெண், துறவு வாழ்க்கையை உதறி தனித்து வாழ முற்படும் பெண், திருமணம் நின்றுபோனதால் வாழ்வின் மீதான நம்பிக்கையிழந்த பெண், தன் வாசிப்பால் வாழ்வை புரிந்துகொண்ட பெண், திருமணத்தைத்தாண்டி சாதித்த பெண் என கதை முழுக்க பெண்கள். தான் விரும்பிய பெண் விபத்தில் கால்களை இழந்தபோதும் அவளை விரும்பி ஏற்றுக்கொண்ட ஆண், தன் மகள்கள், மனைவிக்காக தன்னை மாற்றிக் கொண்ட ஆண் என கதையில் வரும் இரண்டு ஆண்கள் கவனிக்க வைக்கிறார்கள். வெறும் சம்பவங்களாக மட்டும் கதையைச் சொல்லாமல் வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் விதமாக கதையை கொண்டு செல்வது சிறப்பு. பேராசிரியையாகப் பணியாற்றும் பெண்ணுக்கும், வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கும் ஒரே பிரச்சனை சந்தேகம் கொண்ட கணவன். பல்கலைகழகத்தில் ஆய்வுசெய்யச் செல்லும் பெண்களுக்கு வழிகாட்டிகளாக வருபவர்களால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாவல் பேசுகிறது. கல்லூரியை மையம் கொண்ட கதையென்பதால் கல்லூரியின் அமைப்பு, மாணவிகளின் குணநலன்கள், அங்கு நடைபெறும் பல்வேறு விழாக்கள், குறிப்பாக பொங்கல் விழா, ஆசிரியைகளின் பணிச்சூழல், நாட்டுநலப்பணித்திட்டத்திற்கு செல்வது, ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் எனப் பல விசயங்களை நாவல் நம் கண்முன்னே நிறுத்துகிறது. மதுரையில் நிகழும் கதைக்களம் என்பதால் நாவலை வாசிப்பது மனதிற்கு நெருக்கமாகயிருக்கிறது. மீனாட்சியம்மன் கோவில், மேலமாசிவீதி, டவுன்ஹால்ரோடு, பத்துத்தூண் சந்து, தெப்பக்குளம், குருவிக்காரன்சாலை, பெசண்ட் ரோடு, கன்னடியர் மருந்துக்கடை, கௌரி கங்கா ஹோட்டல், செல்லத்தம்மன் கோவில், காமராஜர் சாலை, கீழக்குயில்குடி சமணமலை என கதாமாந்தர்கள் உலவும் இடங்களில் அலைந்துதிரிவதால் கதைமாந்தர்களை நேரில்பார்த்த உணர்வு. மதுரை மீதான நூலாசிரியரின் நேசம் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது. தடங்கள் நாவலை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிறது. ஓவியர் ஜீவா மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களோடு கூடிய அழகானதொரு முகப்போவியத்தை வரைந்திருக்கிறார்.

6.4.23

பாரதி என்றொரு மானுடன் - மதுரைக்கல்லூரி உரை

மதுரைக்கல்லூரி சுயநிதிப்பிரிவு தமிழ் மாணவர்களுக்கு 5.4.2013 அன்று ‘பாரதி என்றொரு மானுடன்’’என்ற தலைப்பில் உரையாற்றியது இனிமையான அனுபவம். பழைய ஆசிரிய வாழ்க்கையை இன்னுமொரு முற்பகலில் வாழ முடிந்தது போல் இருந்ததது.

 

3.4.23

வைகை இலக்கியத் திருவிழா -2023 ,படைப்பரங்கம்,உரை

தமிழக அரசின் பொது நூலக இயக்ககமும் ,பள்ளிக்கல்வித்துறையும், மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து  மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்திய (26.3.2023) வைகை இலக்கியத் திருவிழாவில் 'மொழிபெயர்ப்பின் சவால்கள்' குறித்த என் உரை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....