துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.3.21

விரிசல்- சிறுகதை.

       


 விரிசல்

சொல்வனம் இணைய இதழில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை.

கையில் வைத்திருந்த பனையோலை விசிறியால் வீசிக்கொண்டே ‘தோல் தலகாணி’யைத் தலைக்கு வைத்துக்கொண்டு வளவின் ஒரு பக்கம் கண்ணை மூடிப் படுத்திருந்தாள் சாலாச்சி. அது ஆழ்துயில் இல்லை, அறிதுயில் என்பது அங்கிருந்த எல்லோருக்குமே தெரிந்ததுதான்.

‘’ஏ தெவ்வி, இங்ஙனே கொஞ்சம் வா” என்று இரண்டாம் கட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணுக்குக் குரல் கொடுத்தபடி தானும் அதை உறுதிப்படுத்தினாள் ஆச்சி.

கழுவிக்கொண்டிருந்த சாமானை அப்படியே போட்டு விட்டு முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வந்த தெய்வானை,

‘’என்ன ஆத்தா வேணும்? காப்பி போட்டுக் கொண்டாறவா..இல்லே வேற எதுவும் வேணுமா’’என்றாள்.

‘’அதெல்லாம் ஒரு எளவும் வேண்டாம். அந்தப் பட்டுக்கெடப்பான் ..அதுதான் அந்த சுப்புப்பய எங்கே போய்த் தொலைஞ்சான்னு தெரியல. அவன் எங்கேன்னு போய்ப் பாத்துக் கூட்டியா தெவ்வி. உன்னை ஒடனே ஆத்தா கூப்பிடறாகன்னு சொல்லு’’

‘’அந்தப் பட்டுக்கெடப்பான் எங்கேயும் போயிடல…, இங்ஙனயே… உங்க பக்கத்திலேயேதான் இருக்கேன் ஆச்சி. ஹ்ம்ம்..பொளுது விடிஞ்சா அடைஞ்சா ஆச்சி வாயிலேயிருந்து இந்த ஒரு வார்த்தைதான் வருது, ஆனா என்னோட ஆயுசு என்னமோ நீண்டுக்கிட்டேதான் போகுது’’ என்றபடி அவள் முன் வந்து நின்றான் சுப்பு என்ற சுப்பிரமணி.

‘’ஒனக்கென்னடா கொறச்சல்? உங்க அப்பனும் ஆத்தாவும் அந்தக் குன்னக்குடியானோட சன்னிதியிலே மொட்டைபோட்டுக் காதுகுத்தி அவன் பேரையே உனக்கு வச்சிருக்காக. இந்த வெள்ளச்சீல ஆச்சி, வாய் வார்த்தையா என்னத்தையோ சொன்னேன்னா அது உன் தலையெழுத்தை மாத்திடவா போகுது?’’

‘’அது கெடக்கு ஆச்சி, இப்ப எதுக்கு தாக்கீது’’

‘’தாக்கீது என்ன பெரிய தாக்கீது, நாங்க என்ன இங்கே வக்கீலாபீஸா வச்சு நடத்தறோம்’’

‘’ஆத்தி ! ஆச்சி என்ன பெரிய பேச்செல்லாம் பேசறீக? நம்ம அலமியாச்சி இத்தனை வருசம் களிச்சு மூணாம் பெறயப் பாக்கிறாப்பிலே வாராக. வீடு , மொத்தமும் ஒட்டற அடிச்சு எல்லா எடமும் சுத்தம் பண்ணியாச்சு. கரண்டெல்லாம் ஒளுங்கா இருக்கான்னு ஆளைக் கூப்பிட்டு சரிபாத்துப் புதுசா காத்தாடி மாட்டிக் கறுப்படிச்சுக் கெடந்த பளைய வாளத்தண்டு பல்பையெல்லாமும் மாத்தி மாட்டியாச்சு. செம்பு,வாளி, அண்டா எல்லாத்தையும் ஒதுக்கி வச்சுப்பிட்டுக் குளிக்கிற ரூமிலேயே அருவி கொட்டற மாதிரி சவரம் போட்டாச்சு’’

‘’அது சவரம் இல்லேண்ணே, சவர்’’ என்று திருத்தினாள் தெய்வானை.

‘’அது எப்படி வேணாலும் போய்த் தொலையட்டும் தங்கச்சி. இம்புட்டு பண்ணினப்பறமும் ஆச்சிக்கு இன்னும் என்ன மனத்தாங்கல்னுதான் எனக்கு வெளங்கலை’’

‘’ மனத்தாங்கல் எதுவுமில்லடா, நான் ஒண்ணுன்னா நீ ஒம்போது செஞ்சிடறே அது வாஸ்தவம்தான். ஆனாலும்..’’

‘’ ஆச்சி, இப்ப நீங்க எதைச்சொல்றீக, அந்தக் கண்ணாடி சமாச்சாரம்தானே? அதை என் கிட்டே விட்றுங்க. அவுக இத்தனை வருசம் எங்கெங்கேயோ சீமையெல்லாம் சுத்தி வந்திருக்காகளே அங்கெல்லாம் கூட இப்படிப் பார்த்திருக்க மாட்டாக. அது , அப்டியில்லை நிகு  நிகுன்னு மின்னிக்கிட்டுக் கெடக்கு! சும்மா வளவிலேயே படுத்துக் கெடக்காம எளுந்து வந்து நேரே பார்த்திட்டுச் சொல்லுங்க ஆச்சி’’

‘’பார்த்திட்டுத்தான் சொல்றேன் சுப்பு. நான் ஒன் மேலே குத்தஞ்சொல்லலை, நல்லாத் தொடச்சு வெளக்கித்தான் வச்சிருக்கே. ஆனாலும் கண்ணாடிக்கு நட்ட நடுவிலே கரும்புள்ளி மாதிரி ஒண்ணு குத்த வச்சு ஒக்காந்திருக்கே, அது எப்டி ஒன்னோட கண்ணுக்குத் தப்பிச்சுன்னுதான் எனக்குத் தெரியல’’

‘’அடப்போங்க ஆத்தா, அலமியாச்சி வரப்போறதா தாக்கல் வந்த நாளிலே இருந்து நானும் அதைச் சுத்தம் பண்றேன், சுத்தம் பண்றேன், அந்த ஒரு புள்ளி மட்டும் காட்டம்மன் கோயிலுக்குப்போற வளியிலே இருக்கிற கம்மாய்ச் சகதியிலே மாட்டிக்கிட்டு நகர முடியாம நட்டக்க நிக்கிற நம்ம கொப்பாத்தா தேரு மாதிரி அசைஞ்சு கொடுப்பேனாங்குதே..சரி ஆச்சி , நீங்க மொகம் கோணாதீங்க, அவுக வார வரைக்கும் நான் சொணங்காம தொடைச்சுக்கிட்டே இருக்கேன். நீங்க பதறாம இருந்தா அதுவே போதும்’’

தெய்வானையும் சுப்புவும் அங்கிருந்து போனபின் அதே இடத்தில் மீண்டும் படுத்துக் கண்களை மூடிக்கொண்ட சாலாச்சி இப்போது உண்மையிலேயே உறங்கிப்போனாள்.


லமுவின் குடும்பத்தில் ஒரு பின்னொட்டாக வந்து சேர்ந்து கொண்டவள்தான் சாலாச்சி என்கிற விசாலாட்சி. ப னா ழ னா குடும்பத்தின் வாரிசுகளான நாகப்பன்,நாச்சியப்பன் ஆகிய இரண்டு மகன்களில் ‘கொண்டு’ விற்பதற்காக் குடும்பத்தோடு ‘தொலை’க்குப் போயிருந்த நாகப்பன் ஏதோ மர்மக்காய்ச்சல் கண்டு இறந்து போய்விட, முகம் தெரியாத யாரையெல்லாமோ கெஞ்சிக்கூத்தாடி அவர்களின் துணையோடு ஒரே மகள் விசாலாட்சியைத் தன் கொழுந்தனார் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டு அதற்காகவே காத்திருந்தது போலக் கண்ணை மூடி விட்டாள் மீனாட்சி ஆச்சி.
சித்தப்பா நாச்சியப்ப செட்டியாரோடு, சின்னாத்தா வள்ளியம்மையும் சாலாவிடம் கூடுதல் கரிசனம் காட்டித் தன் பிள்ளைகளுக்கு மூத்த ஆச்சியாகவே அவளை முன்னிறுத்திவிட, அவள் அந்தக் குடும்பத்தின் செல்லப்பெண்ணாகவே ஆகிப்போயிருந்தாள்.

சிவன் கோயில் குளக்கரையிலிருந்த ஆண்கள் பள்ளிக்கு அழகப்பனையும் மெய்யப்பனையும் அதை ஒட்டியிருந்த எம் எஸ் எம் எம் பெண்கள் பள்ளிக்கு சாலா,அலமுவையும் அனுப்பி வைத்துவிட்டு விரல்களால் திட்டி கழித்துச் சொடுக்கிக்கொள்ள வள்ளியாச்சி ஒரு நாள் கூடத் தவறியதில்லை. ஆனாலும் சாலாவிடம் வராமல் சரஸ்வதி தேவியென்னவோ சண்டித்தனம் செய்து விட, சின்னாத்தாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு வெள்ளைப்பணியாரம் சுடுவதிலும் கந்தரப்பம் செய்யக் கற்றுக்கொள்வதிலும் இருந்த அளவுக்குப் பள்ளிப்படிப்பில் அவள் நாட்டம் செல்லவில்லை.

‘’நான் தாயா புள்ளையா வளர்த்தாலும் அந்த அருமை ஊருக்குத் தெரியுமா,ஒலகத்துக்குப் புரியுமா? கொழுந்தனார் மகளை அடுப்படியிலே தள்ளிட்டேன்னு இல்லே அது பேசும்? என் கண்ணில்லே, அலமுவோட போய் நாலெழுத்து படி ஆத்தா’’ என்ற வள்ளியாச்சியின் கெஞ்சலோ சித்தப்பாவின் மிரட்டலோ – எதனாலும் அவளைப் பணிய வைக்க முடியவில்லை. பல இடங்களிலும் தேடிப்பார்த்து நல்ல சம்பந்தமாய்க் கல்யாணம் பேசி சாலாவுக்குத் திருப்பூட்டி விட்டதில் நிம்மதிப்பெருமூச்சு விட்டு அவர்கள் நிமிர்வதற்குள் கார்விபத்தில் கணவனைப்பறிகொடுத்து விட்டு என்றென்றைக்கும் வெள்ளைச்சீலை ஆச்சியாய் மாறிப்போனபடி அந்த வீட்டிலேயே மீண்டும் வந்து தஞ்சம் புகுந்தாள் சாலா.

‘’ஒங்க மேலே தப்பில்லை செட்டியார்வாள், நீங்க இதுக்காக சங்கடப்பட்டுக்காதீங்கோ. அது ஒருவேளை ’குடும்ப’ தோஷமாக்கூட இருக்கலாம்’’ என்று ஜோதிடர் சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் நாச்சியப்பன் – வள்ளியம்மையின் குற்ற உணர்வு கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே ஒட்டிக்கொண்டு அவர்களின் சுகதுக்கங்களை மட்டுமே தனதாக்கிக் கொண்டுவிட்ட சாலா, தன்னைச் சுற்றி நடந்த எதையும் பெரிதாகப் பாராட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.


ஹால்வீட்டில் மாட்டியிருந்த கடிகாரத்தின் பெண்டுலம் நான்கு தரம் அடித்ததும் மெள்ளப் புரண்டு கொடுத்துத் தூக்கக் கலக்கத்தைப் போக்கிக்கொண்ட சாலாச்சி, வாளித் தண்ணீரை முகத்தில் வாரித் தெறித்துக்கொண்டு வளவிலிருந்த இரட்டை வீட்டின் முதல் அறையில்  அந்தக்கண்ணாடி இருந்த இடத்துக்குப்போய் நின்றாள். கண்ணாடி அவள் பிம்பத்தைக் காட்டுவதற்குப் பதிலாக அலமுவையே காட்டிக்கொண்டிருந்து. வெள்ளைச்சீலைதான் நிரந்தரம் என்று ஆவதற்கு முன்னால், துள்ளித் திரிந்து கொண்டிருந்த பதின்ம வயதிலும் கூட  அந்தக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சாலாவுக்கு ஏனோ ஒருபோதும் தோன்றியதில்லை. வித்தியாசம் பார்க்காமல் அலமுவுக்கும் சாலாவுக்கும் வள்ளியாச்சி ஒரே மாதிரி எல்லாம் செய்தாலும் தன் தோற்றத்தைப்பற்றிய அக்கறையோ தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வமோ இல்லாதவளாகவே இருந்தாள் சாலா. அந்த வீட்டில் எங்கிருந்து எவர் எதற்காகக் குரல் கொடுத்தாலும் கேட்ட நொடியில் பறந்து போய் அதைச்செய்து கொடுத்தபடி சிட்டாய்ப் பறப்பதில் மட்டுமே அவளுக்கு சந்தோஷமும் திருப்தியும் இருந்தது.

‘’இப்படிப் பக்கி மாதிரி லாத்தாதே சாலா. அப்றம் ஒரு கண்ணிலே வெண்ணெயும் மறுகண்ணிலே சுண்ணாம்பும் வச்சிட்டேன்னு பாக்கிறவக என்னையத்தானே குத்தம் சொல்லுவாக’’என்று கடிந்து சொல்லிக்கூடப் பார்த்து விட்டாள் வள்ளியாச்சி.

இப்போதும் அந்தக் கண்ணாடியென்றாலே அலமுவைத் தவிர அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஞாபகம் விலகிப்போக மறுத்தது சாலாவுக்கு.

உயர்ரகத் தேக்கை இழைத்துச் செய்த அலங்கார வேலைப்பாட்டுச் சட்டத்தோடு சுவரின் முக்கால் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த அந்த பெல்ஜியம் கண்ணாடியை வீடு கட்டும்போதே ஐயா அந்த இடத்தில் அமைத்திருந்தார். நினைவு தெரிந்த நாளிலிருந்து அதைத் தன் ஏகபோக சொத்தாகவே ஆக்கிக்கொண்டிருந்தாள் அலமு. அதில் போட்டி போடவும் ஆள் அதிகமில்லை. வளவிலும்,பட்டாலையிலும் இத்தனை பிரம்மாண்டமான கண்ணாடிகள் இல்லாவிட்டாலும் குளித்து முடித்துத் தலையை வெடுக் வெடுக்கென்று உதறிப்போட்டு சீப்பால் இரண்டு இழு இழுத்தபடி கொண்டை முடிந்து கொள்ளவோ, காலணா சைஸ் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்ளவோ அந்த பெல்ஜியம் கண்ணாடியைத் தேடிப்போக வேண்டிய அவசியம் வள்ளியாச்சிக்கோ, கண்ணாடியே பார்த்துக் கொள்ளாத சாலாவுக்கோ இல்லை. பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் அவசரத்தில் அந்தக் கண்ணாடியில் தலை சீவ அண்ணன்மார்கள் தற்செயலாக வந்து விட்டாலும் கூட..
‘’பாருங்க ஆத்தா அண்ணங்களை. அவுகளோட கிராப்புத் தலையைச் சீவ இவ்வளவு பெரிய கண்ணாடி கேக்குதாக்கும்’’ என்று ஒரு மூச்சு புலம்பித் தீர்த்து விடுவாள் அலமு.

ட்ரெஸ்ஸிங் டேபிள் கலாச்சாரமெல்லாம் பரவலாக இல்லாத அந்தக்கால கட்டத்தில் கண்ணாடிக்குக்கீழே சற்று உயரமும் அகலமுமான ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்து மலாயாவிலிருந்து முன்பு வந்திருந்த காலி ரொட்டிப்பெட்டிக்குள் எவர்சில்வர் புட்டாமாவுக்கிண்ணம், ஐடெக்ஸ் மைடப்பி,சாந்துக்குப்பி என்று எல்லாவற்றையும் அடுக்கித் தனக்கே உரிய சொத்துப்போல அதன் மீது வைத்துக் கொண்டிருந்தாள் அலமு.

அலமு ஒரு நாளில் எத்தனை முறை அந்தக்கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாள் என்பதற்குக்கூட சாலாவிடம் கணக்கு இருந்தது. தூங்கி எழுந்து முகம் கழுவி ஒரு தடவை, குளித்துத் தலை சீவும்போது மட்டுமல்லாமல் வெளியே கிளம்பும்போது மின்வெட்டாக ஒரு நொடி, வீடு திரும்பியதும் ஒரு தரம், படுக்கும் முன் பிரிய மனமில்லாததைப்போல ஒரு பார்வை..இவை அவளின் குறைந்தபட்சக் கணக்குகள் மட்டும்தான்.

அலமுவுக்கும் அந்தக்கண்ணாடிக்கும் உள்ள பந்தத்தைப்பற்றி சரித்திரம் போன்ற செய்திகளைத் தன்னுள் சேமித்து வைத்திருந்த சாலாவுக்கு ‘இப்டி மாயமந்திரம் போட்ட மாதிரி இவ கெறங்கிக் கெடக்காளே, அப்படி என்ன எளவுதான் இருக்கு அதுக்குள்ளே’ என்று அப்போதெல்லாம் கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருந்தது.

செக்கில் ஆட்டியெடுத்த தேங்காய் எண்ணெயை வஞ்சகமில்லாமல் தலை நிறையப் பூசி ,வழித்து வாரி சில்க் ரிப்பன் வைத்து இறுக்கிக்கட்டி இரட்டைப் பின்னலாக மடக்கிப்போட்டிருந்தாலும் முதுகின் பாதி வரை எட்டிக்கொண்டிருந்த கூந்தலோடு தெரியும் பத்து வயது அலமு, இடுப்புக்குக் கீழ்வரை நீண்டு தொங்கும் கருநாகம் போன்ற ‘ஒத்தச்சடை’ யை லாவகமாய் முன் பக்கம் சுழற்றியபடி அழகு பார்க்கும் கல்லூரிக்காலத்து அலமு, கையில் பிடித்திருக்கும் சின்னக்கண்ணாடியின் துணையோடு மணக்க மணக்கத் தாழம்பூ வைத்து வள்ளியாச்சி தைத்து விட்ட சடையைப் பின்புறக்கண்ணாடியில் பார்த்து ரசித்துக்கொண்ட அலமு, திருமணக்கோலத்தின்போது செய்த தலையலங்காரம் திருத்தமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்ட அலமு என்று இப்போதும் விதம் விதமான தன் தோற்றங்களால் அந்தக்கண்ணாடியை நிறைத்துக்கொண்டு அலமுவே நிற்பதாகப் பிரமை தட்டியது சாலாச்சிக்கு.


நாளைப்பொழுது விடிந்து விட்டால் அலமு வந்து விடுவாள் என்ற உற்சாகத்துடன் துயில் கலைந்த சாலாச்சி, கிணற்றடி முதல் முகப்பு பட்டாசாலை வரை ஒருதரம் முழுசாகப் பார்வையிட்டுவிட்டுத் தயக்கத்தோடு இரட்டைவீட்டு அறைக்குள் நுழைந்தாள்.

‘ அது’ அப்படியேதான் இருந்தது.

சின்ன வயதில் ‘கப்பலோட்டிய தமிழன்’ முதல்ஷோ படம் பார்க்க, மகர்நோன்புப் பொட்டலுக்குப் பக்கத்திலிருக்கும் சரஸ்வதி டாக்கீஸுக்கு அப்பத்தாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அவர்கள் இரண்டு பேரும் போயிருந்தார்கள். அப்போது வெளிறிப்போய்ப் பழுப்பேறிக்கிடந்த அந்த ‘வெள்ளித் திரை’க்கு மத்தியில் டிஸைன் போட்டது போல் அடைசல் கறுப்பாய் இருந்த அழுக்கைப்பார்த்து விட்டு  ‘’அது என்ன சாலாக்கா நடுவிலே? பூச்சி கீச்சி பறந்து வந்து ஒட்டிக்கிச்சா? சிவாஜி வந்து கப்பலோட்டும்போது அவரு கொரலக்கேட்ட ஒடனேயே அது பறந்து போயிரும் பாரு’’என்று சொல்லி விட்டுக் கலகலவென்று அலமு சிரித்தது இப்போது நினைவில் முட்டியது.

வெளி வாசலிலிருந்து யாரோ பெயர் சொல்லிக்கூப்பிட கவனம் கலைந்தாள் சாலா. பக்கத்து வீட்டு சிகப்பி ஆச்சிதான்.

‘’ வீடு  பிரமாதமா ஆயிறுச்சு சாலா, அந்தக் கானாடுகாத்தான் அரமனை வீடு கூடத் தோத்துப்போயிறும்.’’

‘’பின்னே…மூணுவருசம் களிச்சில்லே என்னோட தங்கச்சி வாரா.
ஏ தெவ்வி, தோப்பிலே இருந்து எறக்கிக் கொண்டுவந்து வச்சிருக்கோம் பாரு எளநி, அதிலே ஒண்ணை ஒடைச்சு லோட்டாவிலே ஊத்தி செகப்பி ஆச்சிக்குக் கொண்டா’’

‘’சும்மா சொல்லக்கூடாது சாலா, புதையலை பூதம் காக்கிற மாதிரியில்லே ஒத்தை ஆளா இந்த வீட்டை இத்தனை வருசமாப் பாதுகாத்துக்கிட்டிருக்கே நீ’’

சிகப்பி ஆச்சி முக தாட்சண்யத்துக்காகவோ சம்பிரதாயத்துக்காகவோ பேசுவதில்லை என்பதால் சாலாவும் மனம் திறந்தாள்.

’’வேற என்ன பண்றது செகப்பியாச்சி, மேப்படிப்பு, உத்தியோகம், கல்யாணம்னு அழகு,மெய்யப்பன், அலமுன்னு மூணு பேருமே ஆளுக்கொரு தெசை போயி அங்ஙனயே இருந்திட்டாக. அப்பச்சி ஆத்தா இருந்தவரைக்கும் அவுகளைப் பார்த்துக்கறது சரியாப்போச்சு. அவுக காலம் முடிஞ்சப்பறம் ஒரு கல்யாணம் காச்சின்னாதானே சொந்த ஊரைத் தேடிப் புள்ளக இங்கே  வாராக’’

’’அதிலேயும் அலமு இங்க வந்து எம்புட்டு நாள் ஆயிருச்சு..?ஆமாம்…அவளுக்கு ஒரு மகதானே, அதையும்தான் கட்டிக்கொடுத்தாச்சே, அப்புறம் இங்கே வாரதுக்கு என்ன’’

‘’அதுதான் ரொம்ப நாளா என்னையப் போட்டுக் குடையுது செகப்பியாச்சி. பொண்ணுக்குப் பிரசவம் பார்க்க லண்டனுக்குப் போனாளே அந்த ஒரு வருசம் மட்டும்தான் அவ இங்கே வரல. மத்தபடி அவ செட்டியார் மெட்ராஸ்லே இருந்தாலும் பம்பாய்லே இருந்தாலும் வருசத்துக்கு ஒரு தரமாவது இந்த சாலாக்காவைப் பார்க்காம இருக்கவே முடியாது அவளாலே. இப்ப மூணு வருசமா என்ன ஆச்சுன்னே தெரியாமப் பேதலிச்சுக் கெடக்கேன் நான். இந்த செல்போன் வந்தப்பறம் விடாம என் கூடப் பேசறவ இப்ப அதையும் மாசம் ஒரு தடவை இரண்டு தடவைன்னு கொறைச்சுக்கிட்டா’’

‘’மனசைப் போட்டு அலட்டிக்காதே சாலா, அதுதான் நாளைக்கு அவளே வந்திடப்போறாளே அப்பறம் என்ன? அலமுவோட ‘ஆம்பிளையான்’ இருக்காரே .., அந்த எளையாத்தங்குடிச் செட்டியார் – அவரு ஒரு மாதிரி சிடுசிடுத்தவரு, கொணம் பத்தாதவருங்கிறது நமக்கெல்லாம் தெரிஞ்சதுதானே. நீ போய் வேலையைப்பாரு. நாளைக்கு அலமு வந்தப்பறம் நான் வந்து பார்க்கறேன்’’


லமுவின் வருகைக்காகவே செய்த சீப்பு சீடையையும் மணகோலத்தையும், மாவுருண்டையையும் ருசி பார்த்துக்கொண்டிருந்த சாலாச்சியைக் கைபேசியில் கூப்பிட்டான் மூத்த தம்பி அழகப்பன். ஆசைஆசையாய் போனை எடுத்த ஆச்சியின் முகம் அவன் பேசப்பேச இருண்டுகொண்டே வந்தது. அழைப்பு முடிந்தபோது திக்பிரமை பிடித்தவள் போல் ஆகி விட்டிருந்த அவள், வளவுத் தூணைப் பிடித்துக்கொண்டு அதில் அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். அடுப்படியிலிருந்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்த தெய்வானை ஒரு சின்ன செம்பில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வேகமாக அவளிடம் வந்தாள்.

‘’இப்படி வேர்த்திருச்சே ஆச்சி…சரி சரி….எதுன்னாலும் மொதல்லே இதைக் குடிங்க’’
என்றபடி செம்பை அவள் கையில் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக்கொண்டு முழுச்செம்புத் தண்ணீரையும் தொண்டையில் அப்படியே சரித்துக்கொண்ட சாலாச்சி, முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைப்  புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு தன்னை ஓரளவுக்கு நிதானப்படுத்திக்கொண்டாள். கையெழுத்து மறையும் நேரத்தைக் காட்டுவது போல மாலை மங்கிக்கொண்டு வந்தது.

‘’தெவ்வி, முகப்பு இருட்டா இருக்கு பாரு. போய் வெளக்கைத்தட்டி விட்டுட்டு அந்த சுப்புவை மட்டும் இங்ஙனே கூட்டிக்கிட்டு வா’’ என்றாள்.

இருவரும் அவளருகே வந்தபின், சுற்றுமுற்றும் வேறு யாருமில்லை என்பதை மறுபடியும் உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு ‘’இப்ப என்கிட்டே என்ன ஏதுன்னெல்லாம் எதிர்க்கேள்வி போடாதீக, நான் சொல்லப்போறதை மட்டும் கேட்டுக்கங்க. நாளைக்கு அலமு வந்தப்பறம் அவளா வீட்டுக்குள்ளே எங்கே வேணுனாலும் போகட்டும் எதை வேணும்னாலும் பாத்துக்கட்டும்…நாமளா முந்திரிக்கொட்டை மாதிரி இங்கே வாங்க..இதைப் பாருங்கன்னு ஏதும் சொல்ல வேண்டாம்,புரியுதா’’ என்று மட்டும் சொன்னாள்.

எதையோ கேட்கத் துடித்த சுப்புவின் வாய், ஆச்சியின் உள் மனத்தைப் படித்து விட்டதைப் போல சட்டென்று மூடிக்கொண்டது.


ல்யாணக் கோலாகலம் முடிந்த இடம் போல வீடு மொத்தமும் சோவென்று நிசப்தம் காக்க, மின்னல் கீற்றைப்போலக் கழிந்து போன அந்த இரண்டு நாட்களையும் – வழக்கமான குதூகலத்துடன் இல்லாமல் மனபாரத்தோடு அசைபோட்டபடி துவைக்கிற கல் மீது உட்கார்ந்திருந்தாள் சாலாச்சி.

உதவிக்கு வந்த பெண்ணின் துணையோடு காரை விட்டு இறங்கினாலும் அவள் பிடியிலிருந்து உடனே தன்னை விடுவித்துக் கொண்டு ’’சாலாக்கா’’ என்று பாய்ந்து வந்து தழுவிக்கொண்ட அலமுவைத் தானும் அணைத்துக்கொண்டபடி, பொங்கி வந்த கண்ணீரை ஆனந்தக்கண்ணீராக மாற்றிக்கொள்ளப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்  சாலாச்சி. ஒரு காலத்தில் சந்தனத்தை நினைவுபடுத்திக்கொண்டிருந்த அலமுவின் மேனி இப்போது தழல் தின்று தீர்த்ததைப் போலக் கறுத்து மெலிந்து போயிருந்ததும், வேடு கட்டுவது போல அவள் தலையைச் சுற்றியிருந்த துணிப்பொதியும் முதல்நாள் மாலை அழகப்பன் எச்சரித்திருந்த கொடூர நோயின் சாட்சியங்களாக அவள் கண் முன்னால் நின்று கொண்டிருந்தன.

எதனாலோ செலுத்தப்பட்டது போல வலிய வருவித்துக்கொண்ட ஒரு உற்சாகத்தோடு, எதையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் அந்த இரண்டு நாட்களும் வளைய வந்து கொண்டிருந்தாள் அலமு. தோட்டத்துப்பக்கம் ஆத்தா வள்ளியாச்சி வளர்த்து வந்த துளசிச்செடியில் ஆரம்பித்துப் பின் வாசலில் நாலு பிள்ளைகளுமாய் நட்டு வைத்த மாங்கன்று காய்த்துக்குலுங்குவது வரை ஒவ்வொன்றையும் ஆசைதீரப் பார்த்துத் தன் உயிருக்குள் நிரப்பிக் கொள்வதைப்போலக் கண்களால் விழுங்கிக்கொண்டாள்.

‘’ வீடுன்னா இப்படி இருக்கணும் சாலாக்கா. என்னதான் வசதியிருந்தாலும் நாங்க இருக்கிறதெல்லாம் பொறாக்கூடு போலத்தானே…இங்கேதான் நிம்மதியா மூச்சு விடவே முடியுது’’ என்றபடி மூச்சு விடாமல் பேசவும் செய்தாள்.  குடும்பத்தோடு குற்றாலம் போய் அங்கே நாலு நாள் காட்டேஜ் எடுத்து சமைத்து சாப்பிட்டு நாளைக்கு ஒரு அருவியாய் ஆசை தீரக் குளித்தது,அப்போது அழகுவையும் தன்னையும் மட்டும் குரங்கு துரத்திக்கொண்டு வந்தது, டிரான்சிஸ்டர் ரேடியோவை மொட்டை மாடியில் மறைத்து வைத்துக்கொண்டு சிலோன் ரேடியோ கேட்டபடி தானும் சாலாக்காவும் அதோடு பாடிக் கொண்டிருந்தபோது வீட்டுப்பாடம் எழுதாமல் பாட்டுப் படித்துக்கொண்டிருந்த அவர்களைப் பிடித்து அப்பச்சி உக்கி போட வைத்தது……என்று தொடர்பே இல்லாமல் இன்னும் இன்னும் என்று எதையெல்லாமோ பேசிக்கொண்டு போனாள் அலமு. தன் உடல் நிலையை மறைக்க சக்திக்கு மீறி அவள் அப்படிச் செய்வது சாலாவுக்குப் புரிந்தது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அது பயமாகக் கூட இருந்தது.

‘’சாலாக்கா, நம்ம ஆத்தா கை சமையல் பக்குவமே தனிதான். ஆனாலும் பணியாரத்துக்கு நீ ஒரு வரமொளகாய்ச்சட்னி செய்வியே. அதோட ஒறைப்பு ஏறும்பாரு சுள்ளுன்னு..அதை வேற எதாலேயும் அடிச்சுக்க முடியாது. அதை எனக்கு செஞ்சு கொடுக்கா…! அப்பறம் நீ அவிக்கிற கவுனி அரிசி , கிண்டற கும்மாயம் எல்லாமே வேணும் எனக்கு, இப்பமே சொல்லிட்டேன்’’

ஆசை ஆசையாய்ப் பட்டியல் போட்டாலும் அரைத் தட்டுக்கு மேல் அவளால் எதையும் காலி செய்ய முடியவில்லை என்பதை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சாலா. பேச நினைத்தை முழுவதுமாய்ப்பேசி முடிக்கும் முன் அரைக்கண் செருகி அவள் தன் மடியில் உறங்கிப்போவதையும்தான்! நாலாப்பு படிக்கும்போது வாய்ப்பாடு ஒப்பித்துப் பார்த்துக்கொண்டே தன் மடியில் தூங்கிப்போன அந்தச் சின்னஞ் சிறு அலமுவின் தலையைக் கோதி விட்டது போல் இப்போதும் மெள்ள அவளை வருடிக்கொடுத்துக் கொண்டே இருந்தாள் சாலாச்சி.

ஊருக்குப் புறப்படும் நேரத்தில் ‘’இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த வீட்டிலே ஒத்தையாவே இருக்கப்போறீக சாலாக்கா. உமையா அடுத்த வருஷமே லண்டனிலே இருந்து திரும்பிவந்திடப்போறா. அப்பறம் நீங்க அவளோட கூடப்போய் இருந்தீகன்னா புள்ள மொகத்தைப்பார்த்துக்கிட்டு ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கலாம். என்னாலேதான் இனிமே யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லேன்னு ஆகிப்போச்சு’’ என்று சொன்னபோது மட்டும் அவள் கண்கள் இலேசாகக் கலங்கியதைப் போலிருந்து.

இருந்த நாற்பத்தெட்டு மணி நேரமும் வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் தன் காலால் அளந்த அவள் , மறந்தவாக்கில் கூட இரட்டைவீட்டுப்பக்கம் போயிருக்கவில்லை.


லமு வந்து போய் மூன்றுமாதம் கடந்திருந்தது. ஒரு பின் மதிய வேளையில் அவள் காலமாகி விட்ட செய்தியைக் கைபேசியில் சாலாச்சிக்குச் சொல்லிக்கொண்டிருந்தான் சின்னத்தம்பி மெய்யப்பன். உள்ளே தூசி தட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த சுப்பு, தற்செயலாய் நிமிர்ந்து பார்த்தபோது, நடுவிலிருந்த கரும்புள்ளிக்கு நேர் கீழாக அந்தக் கண்ணாடி விரிசல் விட்டிருந்தது.

16.3.21

முகமூடி-சிறுகதை

 சொல்வனம் 242 இணைய இதழில் என் சிறுகதை.

                                                     முகமூடி


சரிவான ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்திருந்த ஷெட் போன்ற ஒரு சின்னக் கட்டிடம். அதன் நுழைவுப்பகுதி, தகரக் கதவொன்றால் மூடப்பட்டிருக்க, தடுப்புக் கம்பிகள் இல்லாமல், ஒரு பெரிய பொந்தளவுக்கு மட்டுமே திறந்திருந்த ஜன்னலுக்குள் முடிந்தவரை தலையை நுழைத்துவிட எழுபது வயதை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதரும், கிட்டத்தட்ட அவரது மகன் வயது மதிப்பிடக்கூடிய நடுத்தர வயதுக்காரர் ஒருவரும் இரண்டு பக்கங்களிலிருந்தும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

அடர்ந்த வெண்பனி, திரையாய்ப் போர்த்தியிருந்த இமயத் தொடர் இடுக்குகளின் வழியே செவ்வொளியைக் கசிய விட்டபடி வெளியேற முயன்றுகொண்டிருந்த சூரியனைச் சிறைபிடிப்பதில் மும்முரமாக இருந்த நான், அக்காவின் குரலால் கவனம் கலைந்தேன்.

‘’இதுக்குத்தான் அம்மு உன்னோட வரணும்னாலே நான் ஆயிரம் தரம் யோசிப்பேன். வந்த வேலையை விட்டுட்டுப் பைத்தியக்காரி மாதிரி மரம், மட்டை, மலை, மனுஷன்னு பார்க்கிறதையெல்லாம் படம் எடுக்கப் போயிடுவே. அப்புறம் பிடிக்கவே முடியாது உன்னை.’’

‘’கூல் டவுன் அக்கா..! வந்த வேலை… அது பாட்டுக்கு அது ஒரு பக்கம்! அதுக்காக இவ்வளவு தூரம் வந்திட்டு இப்படி அபூர்வமான ஒரு நேரத்தைத் தவற விட்டுட முடியுமா? உன் கவலை, டென்ஷன் எல்லாத்தையும் கொஞ்சம் மூட்டை கட்டி வச்சிட்டு நீயும்தான் இந்தக் காட்சியைக் கொஞ்சம் பாரேன். சூரியனும் பனியும் ஒண்ணோட ஒண்ணு போட்டி போட்டுக்கிட்டிருக்கிற அபூர்வமான ஒரு சூரிய உதயத்தை வாழ்க்கையிலே இனிமே எப்ப பார்க்கக் கிடைக்கப் போகுதோ நமக்கு?’’

‘’என் கண்ணிலேயும் அது பட்டுக்கிட்டுதான் இருக்கு அம்மு. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. இயற்கையிலே இருக்கிற இந்த அழகை…, நமக்கு விடை தெரியாம இதிலே மறைஞ்சிருக்கிற எத்தனையோ புதிர்களை எவ்வளவுதான் ஹைடெக்கா இருந்தாலும் – உன்னோட காமரா வழியா கொண்டு வந்திட முடியும்னு நினைக்கிறியா நீ?’’

பெரும்பாலான நேரங்களில் ஒரு நடைமுறைவாதியாக மட்டுமே இருந்து வரும் அக்காவிடமிருந்து இந்த மாதிரி வார்த்தைகள் அதிகம் வருவதில்லை என்பதால் நான் சற்றுநேரம் அசையாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘’என்ன அப்படிப் பார்க்கிறே? உன்னோட சேர்ந்து சேர்ந்து நானும் பைத்தியமாயிட்டேன்னா? ஆரியக் கூத்தாடினாலும் காரியம் கையை விட்டுப் போயிடக்கூடாது. அம்மு, அந்த மானேஜர் ’பையா’ இருக்காரே-.. அவர் பேரென்ன பிரதீப்பா, பிரதாப்பா? இப்பதான் இடது பக்கமா எங்கேயோ போனதைப் பார்த்தேன். அவரோட தொத்திக்கிட்டே இன்னும் நாலு பேரும் கூடப் போறாங்க. நாமளும் முந்திக்கிட்டாகணும். அம்மு..! என் கண்ணு இல்லே? அந்தப் பக்கம் கொஞ்சம் போய்த்தான் பாரேன். ஒருவேளை இப்ப அவர் திரும்பிக்கூட வந்துக்கிட்டிருப்பாரா இருக்கும்’’

‘’ஏங்க்கா இப்படி அலட்டிக்கறே? அதுதான் உன்னோட செல்லப் பிள்ளை – அந்த ’முகமூடி’ கிட்டே குசுகுசுன்னு இந்தியிலே பேசி பக்காவா ஏதோ ஏற்பாடு பண்ணி வச்சிருக்கே போல இருக்கே.”

‘’பாவம் அம்மு..! அவனைப்போய் ஏன் இப்படிக் கரிச்சுக் கொட்டறே? இந்த இடத்தைப் பொருத்தவரைக்கும் அவன் ஒரு வாட்ச்மேன் மட்டும்தான். அந்த அளவிலே அவனுக்கு என்ன தெரியுதோ அதை வச்சு நமக்கு அப்பப்ப ஏதோ ஐடியா கொடுத்துக்கிட்டிருக்கான், நாமதானே அதை கேரிஅவுட் பண்ணணும்? இதோ பாரு அம்மு, நேத்து மத்தியானம் இங்கே வந்ததிலே இருந்து ரெண்டு மூணு தரம் அந்த மேனேஜரோட என் ஓட்டை இந்திய வச்சு நானும் பேசிப் பார்த்துட்டேன். நீயும்தான் ஒரு தரம் உன்னோட முகத்தைக் காட்டி இங்கிலீஷ்லே ட்ரை பண்ணிப் பாரேன். அந்த இடம் ரொம்ப மேடா இருக்கு, இந்த முழங்கால் வலியோட ஏறி ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு பார்க்கறேன். இல்லேன்னா நானே..’’

‘’நீ வேற அப்படியெல்லாம் விழுந்து புரண்டு சாகசம் பண்ணி வச்சுடாதேக்கா. பேசாம சூரியனைப் பார்த்தோமா, குளிர் காய்ஞ்சோமான்னு இங்கேயே உக்காந்திரு. நான் போய் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்’’ என்று அவளைத் தடுத்துவிட்டு இடதுபுற ஏற்றத்தில் பாதம் பதித்து மெள்ள ஏறிப்போனேன்.

மலை சார்ந்த சிற்றூரான ’ஃபட்டா’வின் ஒதுக்குப்புறத்தில் – ஒடுக்கமான சாலைகளுக்கும் மலைத்தொடர்களுக்கும் இடையே இருந்த அகலமான ஒரு நிலப்பரப்பில் அமைந்திருந்ததது கேதார்நாத் பயணத்துக்கான அந்த ஹெலிகாப்டர் நிலையம். பத்து நிமிடத்துக்கொரு தரம் அங்கும் இங்குமாய்ப் பறந்து கொண்டே இருக்கும் ஹெலிகாப்டர்களுக்கான ஹெலிபேட் ஓடுபாதைகள் இடதும் வலதுமாய் அமைந்திருக்க, இடையிலிருந்த டிக்கெட் ஷெட்டுக்கு முன்னால் போடப்பட்டிருந்த சோஃபா வடிவநாற்காலிகளில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.

பயணிகள் காத்திருக்கும் ஹாலும் அதை ஒட்டியே இருந்தாலும் டிக்கெட் ஷெட்டின் மீது பதிந்திருந்த எங்கள் பார்வை நொடிப்பொழுதும் அதை விட்டு விலகிவிடக்கூடாது என்றே அந்த இடத்தைத் தேர்வு செய்திருந்தோம்.

ஏதோ யோசனையில் கிட்டத்தட்ட இடதுபுற ஹெலிபேட் அருகே வரை ஏறிவிட்ட நான், சட்டென்று சறுக்கி விழப்பார்க்க, என்னைத் தாங்கிப் பிடித்துத் தூக்கிய கரம்…, அது மானேஜர் பிரதாப்பேதான்.

‘’சாவ்தான் பஹன்ஜி, சாவ்தான், டேக் கேர்’’

என்று இந்தியிலும் ஆங்கிலத்திலுமாய் அவர் சொல்லிக்கொண்டே போக – வாய்த்த சமயத்தை நழுவவிடாமல் நேற்றிலிருந்து காத்திருக்கும் மூத்த குடிமக்களாகிய எங்களுக்கு டிக்கெட்டில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற என் கோரிக்கையை சுருக்கமான நயமான ஆங்கிலத்தில் அவர் காதுக்குள் ஓதினேன்.

‘’சிந்தா மத்..பஹன் ஜி !.. வில் டேக் கேர். ஆராம் ஸே பைடியே,’’ என்று சொல்லிக்கொண்டே விரைவான காலடிகளில் ஷெட்டை நோக்கி நடந்தார் அவர்.

அக்காவைக் கேலி செய்துவிட்டு நானே சறுக்கிவிட்ட அந்தக்காட்சி எவர் கண்ணிலேனும் பட்டிருக்கக்கூடுமோ என்ற மெல்லிய கூச்சத்துடன் திரும்பிப் பார்த்தேன். அக்கா உட்பட நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த அத்தனை பேர் கண்களும் ஒரு இடத்தில் மட்டுமே நிலைகுத்தி இருந்தன. தான் அணிந்திருந்த முக மூடியைத் தற்காலிகமாகக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பீடி பிடித்துக்கொண்டிருந்த ‘முகமூடி’, அந்த பீடித்துண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு அக்காவை நெருங்கி வந்துகொண்டிருந்தான்.

………………………………………

நேற்று மதியம் ஃபட்டாவில் வந்து இறங்கியதுமே கண்ணில் பட்டவன் இந்த ’முகமூடி’தான். சுற்றுவட்டாரத்திலிருந்த அத்தனை ஹெலிகாப்டர் நிலையங்களையும் அலசிப்பார்த்து அத்தனையும் கைவிரித்துவிட்ட பிறகு, கடைசிப்புகலாக – ஒரு இரண்டாம் சுற்றாக இங்கே வந்து நாங்கள் இறங்கியபோது, ‘புக்கிங் க்ளோஸ்ட்’ என்று சாக் கட்டியால் எழுதப்பட்ட அறிவிப்புப்பலகை ஒன்றைப் பெருத்த ஓசையோடு அடைக்கப்பட்டிருந்த கதவுக்கு வெளியே நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தான் அந்த ’முகமூடி’. சுட்டுப்போட்டாலும் இந்தியே வராத என்னைப்போல் இல்லாமல், தன் கணவரின் பணி மாற்றத்தின்போது பல வட நாட்டு ஊர்களோடும் மொழிகளோடும் பரிச்சயம் கொண்டிருந்ததால் அவனருகே சென்று ஏதோ விசாரித்துக்கொண்டிருந்தாள் அக்கா. நான் சற்றுத் தள்ளியே நின்று கொண்டிருந்தேன்.

‘’ரெண்டு மணியோட இன்னிக்கு புக்கிங் முடிஞ்சு போச்சாம். இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு புக்கிங் கிடைக்கறது கஷ்டம்தான், அதுக்கப்புறம் ஏதாவது ஒரு நாளிலே அமைஞ்சாதான் உண்டுங்கிறான்’’

‘’இதுக்குத்தான்..’’என்று ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு விட்ட நான்,

‘’அக்கா! நம்ம ரெண்டு பேரும் எல்லாத்துக்கும் மனசைத் தயாரா வச்சுக்குவோம்னு முதல்லியே முடிவு பண்ணிட்டுத்தானே கெளம்பி வந்திருக்கோம்..? அவசரப்படாம பொறுமையா இரு. என்ன ஏதுன்னு மெள்ள விசாரிப்போம். காலையிலே எட்டு மணிக்கு வழியிலே ஏதோ சாப்பிட்டது. இப்ப மூணாகப்போகுது. நீ சுகர் பேஷண்ட் வேற, பசி தாங்க மாட்டே. கொஞ்சம் காருக்குள்ளேயே உக்காரு. சாப்பிட ஏதாவது கிடைக்குமா பார்க்கிறேன்’’ என்று அவளை அமர்த்திவிட்டு காரோட்டி வந்த விஜயை அழைத்து சாப்பாட்டு வசதி பற்றி விசாரித்து வர அனுப்பினேன்.

அக்காவின் முகத்தில் களைப்போடு கவலையும் அப்பிக்கிடந்தது.

‘’தப்புப் பண்ணிட்டோமோ அம்மு’’ என்றாள்.

‘’அக்கா, முதல்லே சாப்பிட்டு முடிப்போமே. அது வரைக்கும் வேறெதையும் இப்ப நினைக்க வேண்டாம், சரியா’’

உணவு விடுதியைத் தேடிக்கொண்டு போன விஜய், தானும் அந்த ’முகமூடி’ மனிதனையே கூட்டிக்கொண்டு திரும்பி வந்தான். இங்கே அவன்தான் ’ஆல் இன் ஆல்’ போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அக்கா அளவுக்கு அவன்மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை என்பதோடு இனம் விளங்காத ஏதோ காரணத்தால் அவன்மீது ஒரு வகையான ஒவ்வாமையும் கொண்டிருந்தேன் நான். ஜன நெரிசல் அதிகமில்லாமல், தூய்மையான பனிக்காற்று மட்டுமே பரவியிருந்த அந்த இடத்தில் ஒரு பெரிய கைக்குட்டையால் அவன் தன் வாயையும் மூக்கையும் இறுகக் கட்டிக்கொண்டிருந்தது (அதுவும் கொரோனாவுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தில்) எனக்குப் புரியாத வினோதமாகவே இருந்தது. ஏனோ ஒரு மர்ம மனிதன் போலவே அவன் எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தான்.

………………………………………

கங்கைக் கரையை ஒட்டிய ஆசிரமம் ஒன்றில் நடக்கும் இரண்டு வார தியானப் பயிற்சி முகாமுக்காக ரிஷிகேசம் செல்வதென்று முடிவெடுத்து, அக்காவும் நானும் அதற்கான முன்பதிவும் செய்துகொண்டிருந்தபோது எங்கள் பயணத் திட்டத்தில் கடைசிப் பின்னொட்டாகக் சேர்க்கப்பட்டதே இந்த கேதார்நாத். இட ஏற்பாட்டிலிருந்து சகலமும் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் விமான டிக்கெட்டுக்காகக் கணினியைத் திறந்தபோது அக்கா அந்த ஆசையை முன் வைத்தாள்.

‘’அம்மு, திடீர்னு இப்படி சொல்றேனேன்னு வள்ளுன்னு விழாதே. எனக்கொண்ணு தோணுது. நம்ம கேம்ப் முடிஞ்சு சாமானை அங்கேயே வச்சிட்டு கேதார்நாத் போயிட்டு வந்திடலாமா? ஆசிரமத்தைப் பார்த்துக்கற ஆச்சி உனக்குத் தெரிஞ்சவங்கதானே? ஒரு மூணு நாள் கூடுதலா தங்க ரூம் தர மாட்டாங்களா..? கேதார் போக ஹெலி டிக்கெட், கார் ஏற்பாடு எல்லாம் அவங்களையே கேட்டுப்பார்த்தா என்ன?’’

ஆச்சியோடு பேசியபோது, ’’வேறெதிலேயும் சிக்கலில்லைம்மா. ஆனா ஹெலிகாப்டர் டிக்கெட் மட்டும் மூணு நாலு மாசம் முன்னாடியே ஆன்லைன்லே புக் ஆயிடுது. ஒரு ஆளுக்குப் போகவர ரெண்டாயிரத்து ஐநூறுன்னு கவர்ன்மெண்ட் வச்சிருக்கிற ஹெலிகாப்டர் டிக்கெட்டை எட்டாயிரம், ஒம்பதாயிரம்னு எனக்குத் தெரிஞ்ச ஏஜண்ட் ஒருத்தர் ப்ளாக்கிலே வாங்கித் தராரு. ஆனா… அப்படிப்போக உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். பேசாம சாமி மேல பாரத்தப் போட்டுட்டு எதுக்கும் மூணுநாள் கூட இருக்கிற மாதிரியே வாங்க. ட்ரை பண்ணிப் பார்த்திடுவோம்’’ என்றார் ஆச்சி.

ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது முகாமுக்கு வந்து தியானத்தோடு கூடவே தினமும் இதையும் முயற்சி செய்து பார்த்த பிறகே புரிந்தது.

’’என்னோட வார்த்தையை நம்பி சந்தோஷமாக் கிளம்பிப் போங்கம்மா. நீங்க ரெண்டு பேருமே சீனியர் சிடிஸன்ஸ். கட்டாயம் உங்க முகத்தைப் பார்த்தே டிக்கெட் கொடுத்திடுவாங்க. தைரியமாப் போங்க.. நீங்க வேணும்னா பாருங்களேன், கட்டாயம் தரிசனம் பண்ணிட்டுத்தான் வருவீங்க’’ என்று உறுதி சொல்லி, ஹெலிகாப்டர் தளம் இருக்கும் ஊர் வரை சென்று வர வாகனமும் தந்து வழியனுப்பி வைத்த ஆச்சியின் வார்த்தைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு இப்படி நடு மத்தியான வேளையில் மலைகளுக்கு நடுவே வந்து நின்று கொண்டிருந்தோம் நாங்கள்.

பேச்சு வார்த்தையை ஒரு மாதிரி முடித்துக்கொண்டு என் பக்கத்தில் வந்தாள் அக்கா.

‘’அம்மு, நாம சீனியர் சிடிஸன்ஸ்ங்கிறதாலே ஆச்சி சொல்றதையேதான் அவனும் சொல்றான். ஆனா..கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணச் சொல்றான். ஹெலிபேட் பக்கத்திலே இருக்கு பார்த்தியா ஹோட்டல் சன்ரைஸ், அதிலேயே நாம சாப்பிட்டுக்கலாம். ராத்திரி தங்கவும் அங்கேயே ரூம் ஏற்பாடு பண்ணித் தரேன்னு சொல்றான். நாளைக்குக் காலையிலே இருந்து ட்ரை பண்ணினா நிச்சயம் மத்தியானத்துக்கு மேலேயாவது கட்டாயம் டிக்கெட் கிடைக்க சான்ஸ் இருக்கும்ங்கிறான்.’’

எனக்கென்னவோ அந்த வார்த்தைகளில் நம்பிக்கையில்லை.

’’நீ இப்படித்தாங்கா எல்லாரையுமே சட்சட்டுன்னு உடனே நம்பிடறே, அவன் மூஞ்சியும் முகமூடியும்…! பார்த்தாலே பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி’’

விஜய்க்கும் ’முகமூடி’க்கும் தமிழ் தெரியாதென்ற நம்பிக்கையில் அக்காவிடம் கத்தினேன்.

‘’நம்ம கிட்டேயிருந்து பணத்தைக் கறந்து ஹோட்டல்காரன் கிட்டே கமிஷன் அடிக்கத்தான் அவன் இப்படி வேலை பண்றான். நீயே யோசிச்சுப்பாரு, நாம வரும்போது மூணுநாள் புக்கிங் இல்லேன்னு போர்ட் வச்சவனே அவன்தானே?’’

’’அம்மு எதுக்கும் ஒரு சான்ஸ் எடுத்துத்தான் பார்ப்போமே? எப்படியும் நம்ம கைவசம் இன்னும் ரெண்டு நாள் முழுசா இருக்கு. நாளைக்கு மதியம் வரை பார்ப்போம். முடியலியா., .நாளைக்கு மறுநாள் ரிஷிகேஷ் திரும்பிடுவோம்’’

………………………………………

வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மனமில்லையென்றாலும் மலைப்பாங்கான அந்தச் சின்ன இடத்தில் ஹெலிபேடை ஒட்டியிருந்த அந்த அறை என்னவோ எளிமையான வசதிகளோடு நன்றாகவே இருந்தது. எண்ணெயில்லாத சப்பாத்தி, பன்னீர்,பருப்புக்கூட்டு,ஜீரக சாதம் என்று இரண்டாம் தளத்தில் இருந்த எங்கள் அறைக்கு விதம்விதமான சாப்பாட்டு வகைகளோடு கொதிக்கக்கொதிக்க ஃப்ளாஸ்கில் வெந்நீரையும் தன் குழந்தைகள் மூலம் அனுப்பிக்கொண்டே இருந்தார் கீழ்த்தளத்தில் இருந்த ஹோட்டல்காரர். பத்து வயதுக்கு உட்பட்ட அந்தப் பொடிசுகளிடம் அக்கா தன் மொழிப்புலமையைக்காட்டிக்கொண்டிருக்க, நான் அறையை ஒட்டிய வராந்தாவில் போய் நின்றபடி கண்ணெதிரே தெரியும் மலைகளை வெறித்துக்கொண்டிருந்தேன்.

வெள்ளியை உருக்கி ஊற்றி அந்த நிமிடம்தான் வார்த்தெடுத்த பூரண கலசங்களைப் போலப் பொலிந்து கொண்டிருந்த சிகரங்கள், அவற்றினூடே குறுக்கும் நெடுக்குமாய்ப் பறந்து கொண்டிருந்த இயந்திரப்பறவைகளாய் ஹெலிகாப்டர்கள். இவற்றில் ஏதோ ஒன்றில் ஏறி…, எந்தச் சிகரத்தின் பின்னாலேயோ ஒளிந்திருக்கும் அந்த கங்காதரனைப் பார்க்கமுடியப் போகிறதா எங்களுக்கு?

அறிமுகமில்லாத புது இடம், விறைக்கும் குளிர் என்று எல்லாவற்றையும் ஒரு வழியாக சமாளித்து விட்டுக் கண் செருகும் நேரம், யாரோ கதவு தட்டுவதைப் போலிருக்க அக்கா போய்ப் பேசி விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

‘’யாரு..? அந்த முகமூடிதானே? அக்கா, இப்போ நம்ம ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கொருத்தர் துணை. எதுன்னாலும் என் கிட்டே மறைக்காம சொல்லு. உன் கிட்டே ஏதாவது பணம் கிணம் கேட்டானா அவன்? இப்படி எவன் கிட்டேயோ கொடுத்து ஏமாறணும்னா பேசாம ப்ளாக்கிலேயே எட்டாயிரமோ ஒம்பதாயிரமோ டிக்கெட்டை வாங்கித் தொலைச்சிருக்கலாமே’’

‘’மனம் போன போக்கிலே நீயா ஏதாவது முடிவு பண்ணிக்காதே அம்மு. உன் கிட்ட எப்பவுமே உள்ள குணம் அதுதான். சில மனுஷங்களைப் பத்தி எடுத்த எடுப்பிலேயே இவங்க இப்படித்தான்னு ஏதாவது தீர்மானம் பண்ணிடுவே. இதோ பாரு.., சொல்லப்போனா அவன் எதுவுமே கேக்கலைங்கிறதுதான் நெஜம். நான் ஹேண்ட் பேகை எடுக்கப்போனபோது கூட சைகையால தடுத்து அந்த மாதிரி பேச்சே வேண்டாம்னு வாயிலே விரலை வச்சுக் காட்டினான் தெரியுமா?’’

‘’சரி, சரி, உன் கிட்டே நல்ல பேர் வாங்கிட்டான் இல்லே. விடு..அது போதும்! ஆமாம்..,அப்புறம் எதுக்கு இந்த ராத்திரியிலே இங்கே வந்தானாம்?’’

‘’குளிரிலே நம்மளை மறந்து தூங்கிப்போயிடாம- காலையிலே ரொம்ப சீக்கிரமே எழுந்து தயாராகி..கவுண்டருக்கு நேர் எதிரிலே- நம்ம மூஞ்சி நல்லா தெரியற மாதிரி காட்டிக்கிட்டு உக்காரணும்னு சொல்லி அலர்ட் பண்ணத்தான் வந்தான் அவன்’’

’’இந்த மாதிரி பண்ற சர்வீஸ் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு கடைசியிலே ஒரே தீட்டா தீட்டிடப் போறான்..பார்த்துக்கிட்டே இரு’’ என்று முனகியவாறே கம்பளிக்குள் என்னைப் பொதிந்து கொண்டேன்.

………………………………………

ஒடுக்கும் குளிரில் ஐந்து மணிக்கே எங்களை எழுப்பி ஆறுமணியிலிருந்து அங்கே உட்கார வைத்திருந்தது ’முகமூடி’யின் அந்த எச்சரிக்கை அலாரம்தான் என்பதை அசைபோட்டுக்கொண்டே சரிவில் இறங்கி அக்காவிடம் வந்தேன்.

‘’கருமம்..! பீடியைத் தூக்கிப்போட்டுட்டு நேரா உன் கிட்ட வந்து பேசறான் அவன். உனக்குத்தான் பீடி சிகரெட் நாத்தமே ஆகாதே? அந்த முகமூடிக்காரனை மட்டும் எப்படித்தாங்கா சகிச்சுக்கிறே நீ?’’

‘’அதிருக்கட்டும். நீ அந்த மானேஜர் கால்லே விழுந்து கும்பிட்டே போல இருக்கே? அதுக்கு ஏதாவது பலன் தெரிஞ்சதா?’’

அக்காவின் கண்கள் எதையும் தப்ப விட்டிருக்கவில்லை.

அவளது கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,

‘’ரிலாக்ஸ்டா இருங்கன்னு சொல்றார். மனசிலே என்ன இருக்கோ தெரியல’’ என்றேன்.

‘’அதுக்குத்தான் நீ நிமிஷத்துக்கு நிமிஷம் முகமூடி முகமூடின்னு இடிச்சுக்காட்டறியே அவன் இப்ப வந்து ஐடியா கொடுத்துட்டுப்போறான். நம்மளை மாதிரி இங்கே நிறைய சீனியர் சிடிஸன்ஸ் தேறுவாங்க போலே.இருக்கு. ஆனா அவங்களோட சேர்ந்தாப்பிலே குறைஞ்ச வயசுள்ள ஆளுகளும் இருக்கிறதாலே வயசானவங்களை மட்டும் குடும்பத்திலே இருந்து பிரிச்சு அப்படித் துணையில்லாம தனியா அனுப்பி வைக்க மாட்டாங்க. ஆனா, நாம ரெண்டு பேரா மட்டுமே இருக்கிறதாலே நமக்கு டிக்கெட் தர்றது சுலபம்தானாம்.. ஆனா..ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஷெட்டுக்குள்ளே தலையை விட்டு நாம இங்கேதான் இருக்கோம்னு அவங்களுக்குக் காட்டிக்கிட்டே இருக்கணுமாம். இப்போ ஒரு சின்ன பிரேக்குங்கிறதாலே சீக்கிரம் டிஃபனை முடிச்சிட்டு வந்து உக்காரச் சொல்றான்’’

புதினா, கொத்துமல்லித் தழை தூவிய அந்த ஆலு பரோட்டாவைத் தயிரோடும் ஊறுகாயோடும் சேர்த்துச் சாப்பிட நன்றாகத்தான் இருந்தது.

‘’மூணு வேளையும் இப்படி ஆலு பரோட்டா, மேதி பரோட்டா, ஃபூல்கா சப்பாத்தின்னு எப்படித்தான் கோதுமையா சாப்பிடறாங்களோ?’’

‘’நாம இட்லி தோசைன்னு அரிசியா உள்ளே தள்றோம், அவங்களுக்கு கோதுமை’’ என்ற அக்கா, சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த ’முகமூடி’யைக் கைகாட்டி எங்களோடு சாப்பிட வருமாறு அழைத்தாள். நல்ல காலமாய் அவன் அதை மறுத்துக் கை அசைத்தபடி, வலது பக்க ஹெலிபேட் பக்கமாய் நகர்ந்து சென்றான்.

‘’நல்ல மனுஷன் அம்மு. ஏனோ உனக்குத்தான் அவனைக் கண்டா ஆகலை’’

’’அக்கா! நல்லா யோசிச்சுப் பாரேன். இங்கே இத்தனை பேர் காத்திருக்கும்போது நம்ம கிட்ட மட்டும் ஏன் அவனுக்கு இப்படி ஒரு கரிசனம்? ஒருவேளை நாம ரெண்டு பேருமா தனியா வந்திருக்கிறதாலே சுலபமா ஏமாத்திடலாம்னு பார்க்கிறானா’’

‘’சே சே அப்படியெல்லாம் இருக்காது,வா அங்கே போய் உக்காருவோம்’’ என்று கை கழுவிக்கொண்டாள் அக்கா.

இப்போது ஷெட் கதவு திறந்திருந்தது. கதவுக்குப் பக்கத்திலும், கவுண்டர் பொந்திலும் சின்னச் சின்னக் குழுக்களாக மனிதர்கள் கூடுதலாய் மொய்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

‘’நாம உக்கார்றதுக்கு முன்னாடி ஒரு தரம் உள்ளே போய்ப் பார்த்துட்டு வந்துடு அம்மு. ஒரு வேளை கையோட டிக்கெட்கூட கிடைச்சுடலாம். எதுக்கும் ரெண்டு பேருக்கும் போக வர சேர்த்து அஞ்சாயிரத்தைத் தனியா எண்ணி எடுத்து வச்சுக்கோ’’

உள்ளேயிருந்த ஒழுங்கற்ற கும்பலுக்கு நடுவே மானேஜரின் பார்வை என்மீது படுவதற்காகக் காத்திருந்தேன். இருபது நிமிடங்களுக்குப் பிறகு தற்செயலாகப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தவர்

‘’வில் கால் யூ பஹன் ஜி, ப்ளீஸ் வெயிட் அவுட்சைட்’’என்றார்.

நான் எந்த பதிலோடு திரும்புவேன் என்பதை அக்கா முன்கூட்டியே அனுமானித்திருக்க வேண்டும். என் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் இளசும் பெரிசுமாய்ப் பத்துப்பேர் அடங்கிய தில்லிக் குடும்பம் ஒன்று ஒரு வாரமாய் அங்கே முகாமடித்தபடி டிக்கெட் தவம் இயற்றிக்கொண்டிருந்த கதையை சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிறைய தரம் கேட்டுப் பழகிய வார்த்தைகளை வைத்து அந்தக் கதையின் ஓட்டத்தை என்னாலும் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிந்தது. எங்கள் ஒன்றரை நாள் முயற்சியும் வியர்த்தமாய்ப் போய்விட …, தொய்ந்து போன முகங்களோடு நாங்கள் மலை இறங்குவதான ஒரு மனக்காட்சி என்னுள்ளே ஓடத் தொடங்கியபோது வேகமாக எங்களை நோக்கி வந்தான் ’முகமூடி’.

‘’ஜாயியே அபீ. ஜல்தீ..’’

என் வேக நடைக்கு ஈடுகொடுத்தபடி அக்காவும் என்னைப் பின்தொடர்ந்தாள்.

………………………………………

தூரத்து மலைத் தொடர்கள் கோலப்புள்ளிகள் போலச் சிறுத்துக் கரைந்து கொண்டே வர, எங்கள் வாகனம் மலையிறங்கிக்கொண்டிருந்தது. சுழித்தும் நுரைத்தும் சீறியும் நெளிந்தும் – பச்சையும் நீலமும் நீலப்பச்சையுமாய்ப் பல நிறங்கள் காட்டியபடி- அலக் நந்தாவாக, பாகீரதியாக, தேவப் பிரயாகையாக, ருத்ரப் பிரயாகையாக எங்கள் வழித்துணை போலக் கூடவே வந்து கொண்டிருந்தாள் கங்கை.

மூன்று நாட்கள் தொடர்ந்த பயணக் களைப்போடு, ஏதோ சிகரத்தைத் தொட்டுவிட்டு வந்தது போன்ற நிறைவும் வெறுமையும் கலந்த ஓர் உணர்வு எங்கள் இருவரையுமே ஆட்கொண்டிருந்ததால், எதுவுமே பேசிக்கொள்ளத் தோன்றாமல் மௌனத்தில் உறைந்திருந்தோம். கூர்மையான கொண்டை ஊசித் திருப்பம் ஒன்றில் வண்டி இலேசாக உலுக்கிப்போட, உறக்கமும் விழிப்புமாய் இருந்த அக்கா நன்றாகவே விழித்துக்கொண்டாள்.

‘’என்னக்கா கனவு கண்டு முடிச்சு எழுந்தாச்சா?’’

‘’எல்லாமே கனவு மாதிரிதான் இருக்கு அம்மு. நிஜமாவே நாம மேலே போனோமா, கேதாரைப் பார்த்தோமா..? எல்லாம் எப்படி நடந்து முடிஞ்சது? எதை நம்பறது..எதை விடறது…? எதுவுமே சொல்லத் தெரியல எனக்கு’’

மதியம் இரண்டே முக்காலுக்குக் கிளம்பும் ஹெலிகாப்டருக்கு பன்னிரண்டு மணியளவில் டிக்கெட் கிடைத்ததும்…, ஏதோ அரக்கப்பரக்கச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளத்தாக்குகளுக்கும் மலைகளுக்கும் இடையிலான ஏழு நிமிடப் பறத்தலில் கேதாரை எட்டியதும்…, சின்னக் கோயிலை வளைவாகச் சூழ்ந்து அரண் போலிருந்த பனிமலைகளின் காட்சியை – தேவர்கள் கூடிக் குதூகலிக்கும் வட்டமான நாடக அரங்குபோலத் தோன்றிய இமயத்தின் அந்த அற்புதத்தை- சுற்றிச்சுற்றி வந்து பார்த்துக் களித்தபடி குழந்தைகள் போலப் பரவசமுற்றதும், மெல்லிய தூறல் நடுவே வடநாட்டுப் பூசாரி ஒருவரின் துணையோடு இளம் செவ்வண்ணத்தில் இருந்த சுயம்புலிங்கத்தைக் கண் குளிரக்கண்டதும்…- இவை எல்லாமே உண்மையில் நடந்து முடிந்திருக்கிறதா என்ன?

………………………………………

பயணச்சீட்டு கைக்கு வந்து சேர்ந்தபிறகு ஏனோ அந்த ‘முகமூடி’ எங்கள் கண்களில் படவே இல்லை. தங்கியிருந்த அறையைக் காலிசெய்தபோதும், சாமான்களைக் காரில் வைத்துவிட்டு நாங்கள் திரும்பி வரும்வரை காத்திருக்கச் சொல்லி ட்ரைவரிடம் சொன்னபோதும், சாப்பிடும்போதும் அக்காவின் கண்கள் அவனை மட்டுமே தேடிக்கொண்டிருக்க, அப்போதும் கூட ‘’கவலைப்படாதேக்கா. நாளைக்கு நாம ஊர் திரும்பறதுக்கு முன்னாடி உன் தத்துப்பிள்ளை கட்டாயமா ஒரு பெரிய தொகையைக் குறிச்சுக்கிட்டு ஆஜராயிடுவான்’’ என்றே அவளை கலாய்த்துக்கொண்டிருந்தேன் நான்.

ஆனால்… நாங்கள் கேதாரிலிருந்து திரும்பிவந்து, மலையிறங்குவதற்குத் தயாரான பிறகும்கூட அவன் எங்கேயுமே தென்படவில்லை.

‘’ரெண்டு நாளா இங்கேயே சுத்திக்கிட்டு கண்ணிலே பட்டுக்கிட்டே இருந்தானே. இப்போ எங்கே போய் ஒளிஞ்சுக்கிட்டான்’’ என்று மாய்ந்து போனாள் அக்கா.

‘’அம்மு நீ என்ன நெனச்சாலும் சரி. முன்பின் தெரியாத நமக்கு அவன் செஞ்சிருக்கிற உதவிக்கு நாம ஏதாவது கொடுத்தே ஆகணும்னு நெனக்கிறேன். அது லஞ்சம்னெல்லாம் நெனச்சுக்க வேண்டாம். அது, நாம செஞ்சாக வேண்டிய ஒரு சின்னக் கடமை, அவ்வளவுதான்’’ என்றபடி விஜயை அழைத்து முகமூடி எங்கே இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுமாறு ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டோடு அவனை அனுப்பி வைத்தாள். நானும் இம்முறை அதற்கு மறுப்புச் சொல்லவில்லை.

இறுகிப்போன முகத்தோடு திரும்பி வந்த ட்ரைவர் விஜய், ரூபாய் நோட்டை அக்காவிடம் கொடுத்துவிட்டு ‘’இனிமேலும் மலையிறங்கத் தாமதித்தால் இருட்டிப்போய்க் கஷ்டமாகி விடக்கூடும்’’என்பதை அவளுக்குப் புரியவைத்தபடி காரை ஸ்டார்ட் செய்தான். சரியாக அந்த நேரம் பார்த்து எங்களை நோக்கி எங்கிருந்தோ ஓடி வந்தான் ’முகமூடி’.

‘’உங்களுக்கு சந்தோஷம்தானே… திருப்திதானே’’என்று இந்தியில் அவன் திரும்பத் திரும்பக் கேட்பது புரிந்தது. அக்கா அவனுக்குக் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டுக் காரணத்தோடு விஜயைப் பார்க்க, அவன் ’பின்னால் சொல்கிறேன்’ என்பதுபோல் சைகை செய்தான்.

‘’பஹன் ஜி.! ஏக் ஹீ ஆஷா ஹே மேரே பாஸ்’’ என்றபடி அழுக்கும் பிசுக்கும் ஏறிப்போயிருந்த கைபேசியைத் தன் உள்ளங்கையிலிருந்து எடுத்து விஜயிடம் தந்தபடி எங்கள் இருவரோடும் அதில் புகைப்படம் எடுத்துத் தருமாறு கேட்டுக்கொண்டான் ’முகமூடி’.

………………………………………

ருத்ரபிரயாகையை நாங்கள் நெருங்கிக்கொண்டிருந்தபோது விஜய்க்கு ஒரு அழைப்பு.

‘’பத்திரமா போறோமான்னு அந்த ’பாயி’தான் கேக்கறார்.. தங்கமானவர் மேடம் அவர். அப்ப அவருக்கு எதிரிலே என்னால இதை சொல்ல முடியல. இப்போ சொல்றேன். அவர் இந்த ஹெலி சர்வீஸ்லேயே வேலை பாக்கிறதால பயணிகள்கிட்ட பணம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியும். அது தெரிஞ்சா அவரோட வேலையேகூட போயிடலாம். அதனாலேதான் நீங்க பிரியப்பட்டுத் தந்த பணத்தை ஒதுக்குப்புறமா கூட்டிக்கிட்டுப் போய் அவர்கிட்ட கொடுத்தேன். ’அவங்க ரெண்டு பேரும் என்னோட மூத்த சகோதரிகள் மாதிரி.., நான் அதைத் தொடறதுகூட பாவம்’னுட்டார்! அஞ்சாறு வருஷமா அவரை எனக்குத் தெரியும் மேடம். பாவம் அந்த மனுஷன். டூரிஸ்ட் கைடா இருந்த அவரோட மகன் .கொஞ்ச வருஷத்துக்கு முன்னாலே கேதாரிலே மலைச்சரிவு வந்தப்ப எந்தப் பாதாளத்திலேயோ விழுந்து மறைஞ்சுபோன ஹெலிகாப்டரோட தானும் காணாமப் போயிட்டான். கடைசி வரைக்கும் அதைக் கண்டுபிடிக்கவே முடியல. தன்னோட வாய்க்கோணலை மறைக்கப் போட்டுக்கிட்டிருக்கிற முகமூடி மாதிரி எல்லாத்தையும் மனசுக்குள்ளே போட்டுப் புதைச்சுக்கிட்டுப் பொழப்புக்காக இதே ஹெலிகாப்டர்களோட காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கார் அவர். ஒருவேளை எந்த ஹெலிகாப்டரிலேயாவது தன்னோட மகன் வந்து இறங்கிடக்கூடாதான்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்காரோ என்னவோ..?’’ என்று தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் இடையிடையே இந்திக் கலப்போடு சொல்லி முடித்தபோது விஜயின் குரல் கம்மிப்போயிருந்தது..

ரிஷிகேசத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது ஆச்சியிடமிருந்து ஃபோன். ஸ்பீக்கரில் போட்டு அக்காவையும் கேட்க வைத்துக்கொண்டே ‘’ரொம்ப நல்ல தரிசனம் ஆச்சி’’ என்றபடி நடந்ததை சுருக்கமாய் விவரித்தேன்.

‘’எல்லாம் அந்தக் கேதார்நாதன் கருணைதான், வேறென்ன?’’ என்று சொல்லியபடி அவர் அழைப்பை முடித்துக்கொண்டபோது, அக்கா தன் கைபேசியில் வந்திருந்த அந்த வாட்ஸப் செய்தியை என்முன் நீட்டினாள். அக்காவின் எண்ணை சேவ் செய்து வைத்திருந்த ‘முகமூடி’ மலர்ந்த சிரிப்போடு எங்கள் இருவருக்கும் இடையே தான் நின்றுகொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தான். அதைத் தொடர்ந்த அடுத்த செய்தி ‘கங்காதரிடமிருந்து’ என்று அவன் பெயரையும் குறிப்பிட்டிருந்தது…

ஹெலிபேட் பின்னணியில் நின்றிருந்த கங்காதர், காரில் ஏறிய எங்களுக்கு வெகுநேரம் கையசைத்துக்கொண்டே விடைகொடுத்த அந்தக் காட்சி… பல இரவுகள் என்னை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

9.3.21

வெண் இரவுகள்- அறிமுகக்குறிப்பு,தினமலர்

’வெண் இரவுகள்’ மொழிபெயர்ப்பு பற்றிய  அறிமுகக்குறிப்பு 8/3/2021 தினமலரில் ...
 

7.3.21

வெண் இரவுகள்-(WHITE NIGHTS) மொழியாக்கம்

 தொடர்ந்த என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்கள் வரிசையில்

(குற்றமும் தண்டனையும்,அசடன்,தஸ்தயெவ்ஸ்கி கதைகள்,நிலவறைக்குறிப்புகள்,இரட்டையர்)

இப்போது நடைபெறும் சென்னை புத்தகக்கண்காட்சியில் என் ஆறாவது தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பான ‘வெண் இரவுகள்’(WHITE NIGHTS)வெளிவந்திருக்கிறது 

அதற்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை பகிர்வுக்கு

             ‘இதயத்தைச் சில்லிட வைத்து…’

                   (என்னுரை)

 

    தஞ்சைப்பெரிய கோயில் நந்தியின் பிரம்மாண்டப் பேரழகும், குந்துமணிக்குள் நூற்றில் ஒன்றாக அடங்கியிருக்கும் மிகச்சிறிய தந்தச் சிற்பத்தின் நுண்ணிய நகாசு வேலைப்பாடும் அளவில் வேறுபட்டாலும் தரமதிப்பீட்டில் வேறுபடுவதில்லை. தஸ்தயெவ்ஸ்கியின் பெரும்படைப்புக்களான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலையும், ‘அசட’னையும், மறிந்து வரும் பேரலைகளின் ஆர்ப்பரிப்புக் கொண்ட மகாசமுத்திரமாக மதிப்பிட்டால், ஒடுக்கமான கரைக்குள் பயணப்படும் அமைதியான சிற்றாறு போல அதே மேதையின் கற்பனையிலிருந்தும் கைவிரல்களிலிருந்தும் இனிதான - இலேசான சலசலப்புடன் பெருகி ஓடியிருக்கும் அற்புதமான குறும்படைப்பு ‘வெண்ணிரவுகள்’.

         

         இரண்டே இரண்டு பாத்திரங்கள், மிகச்சில பின்னோக்குச் சம்பவங்கள், உரையாடல்கள் கொண்ட இந்த ஆக்கத்தின் மைய இழை, காதல்தான் என்றபோதும் ‘காதல்கதை’ என்ற ஒற்றைப்பரிமாணத்துக்குள் அடக்கிவிட முடியாதபடி, ஒவ்வொரு இரவிலும் ஆழமான பல உளவியல் முடிச்சுக்கள் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. உரையாட எவருமற்ற தனிமை கொண்டவனான கதைசொல்லி, தனக்குப் புத்துயிர்ப்புத்  தந்த தேவதையாய்க் கொண்டாடும் நஸ்டெங்காவிடம் தன் அக உலகைத் திறந்து காட்டி அன்றாடம் தான் மேற்கொள்ளும் கனவுலக சஞ்சாரத்தை வெள்ளமாய்ப் பொழியும் விவரணை ஒரு துருவமென்றால், எந்த வகையான உலகியல் அனுபவமும் அற்றவளாய்ப் பாட்டியோடு பிணைப்பூசி குத்தப்பட்டு வாழ்ந்து வரும் நஸ்டெங்கா, கபடமற்ற பிள்ளை மொழியில் தன் வாழ்க்கைச் சரிதத்தை அவன் முன் திறந்து காட்டுவது, நேர் எதிரான மற்றொரு துருவம்.

 

        இரவா பகலா என்று இனம் பிரித்துச்சொல்ல முடியாத மேகமூட்டம் கொண்ட குளிச்சியான பகற்பொழுதுகளைப் போல நீண்டநேரம் மெல்லொளி வீசிக்கொண்டிருக்கும் வெண்மையான இரவுகள், செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் கோடைகால இரவுகள். அந்த இரவுகளின் பின்னணியில் சந்திக்கும் இந்த இருவரின் உணர்வுநிலைகளும் கூட மாறி மாறி அடிக்கும் வெயிலும்,மழையும் போலக் கணத்துக்குக் கணம் பாசம் பரிவு, நேசம் இரக்கம், காதல், கருணை என்று – குறிப்பிட்ட எந்தச்சிமிழுக்குள்ளும் அடக்கமுடியாதபடி- மாறி மாறி சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கின்றன. மங்கலான இருட்டாய்த் தெரியும் கற்பனையான மாய உலகத்துக்கும், வெயில் போலச் சுளீரென்று முகத்தில் அறையும் யதார்த்தத்துக்கும் இடையே சிக்கி அலைப்புறும் இரண்டு பாவப்பட்ட ஜீவன்கள் தம்மிடையே கொண்டிருக்கும் நேசத்தைக் காதல் என்ற ஒரு சொல்லால் மட்டுமே வரையறுத்துச்சொல்லி விட முடியாதபடி அதற்குத்தான் எத்தனை முகங்கள்? அன்புக்கு நெருக்கமானதாக எத்தனை வகையான சொற்கள் நம் சொற்களஞ்சியத்தில் இருக்குமோ அத்தனைக்கும் பொருத்தமான சூழல்களை நாவலின் உரையாடல்களிலும், விவரிப்புக்களிலும்,சம்பவங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பட்டுக்கொண்டே செல்லும்போது, அந்த இருவருக்கும்இடையிலுள்ள குறிப்பிட்ட அந்த உணர்வை -இன்னும் கூட எந்தச் சொல்லால்தான் சரியாகக் கடத்தி விட முடியும் என்று நம்மை மலைக்க வைத்து விடுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

       

     அப்படிப்பட்ட பிரியம், இதயத்தைச் சில்லிட வைத்து ஆன்மாவை கனக்கச் செய்து விடுகிறதுஎன்று இந்த நாவலின் கதைசொல்லி ஓரித்தில் குறிப்பிடுவது போல ’வெண்ணிரவுக’ளின் மொழிபெயர்ப்புப் பணியும் கூட ஒரு வகையில் என் இதயத்தைச் சில்லிட வைத்து ஆன்மாவை கனக்கச் செய்ததுதான். இந்தக் குறு நாவலைத் தமிழில் மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்தில் படித்ததோடு நின்றிருந்தால், இந்தப்பிரதிக்குள் இவ்வளவு துல்லியமாக ஊடுருவிப்போகும் அரிதான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன். குறுகத்தரித்த குறள் போலக் கிட்டத்தட்ட 40 பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கும் இந்தக் குறுநாவலைத் தமிழில் பெயர்ப்பது, 1000,2000 பக்கங்கள் நீளும் முந்தைய நாவல்களுக்கு நிகரான,அவற்றை விடக் கூடுதலான உழைப்பையும், சவால்களையும் என் முன் வைக்கக்கூடும் என்பதை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் இனிமையான அந்தச் சவால்களை ஆர்வத்தோடு எதிர்கொண்டபடி, அவற்றைக்  கடந்து சென்ற தருணங்கள், புதிர் போர்த்திய ஒவ்வொரு திரையையும் - ஒவ்வொன்றாக விலக்கிக்கொண்டே செல்வதைப்போன்ற மகிழ்ச்சியை என்னுள் மின்னலடிக்கச்செய்த கணங்களும் ஆயின. மனதுக்குப் பிடித்தமான ஒரு சங்கீதத் துணுக்கின் ரீங்காரம் போல இந்தப் படைப்பை மொழிமாற்றம் செய்த பொழுதுகள் என்னுள் என்றும் ரீங்கரித்துக் கொண்டிருக்கும்.

      என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை செம்பதிப்புக்களாக, மிகுந்த செய்நேர்த்தியுடன் தொடர்ந்து வெளியிட்டு வருவதோடு, ’வெண்ணிரவுக’ளைத் தமிழாக்கம் செய்ய வேண்டுமென்று எனக்கு வலுவான அன்புத் தூண்டுதல் அளித்து , நூலை வெளியிடவும் முன்வந்திருக்கும் நண்பர் யுகன் அவர்களுக்கும்,நற்றிணைப் பதிப்பகத்தார்க்கும் என் மனமார்ந்த நன்றி.

 

எம்  சுசீலா

மதுரை

15.12.2020

susila27@gmail.com

 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....