துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.1.09

ஒருசாமானியனுக்கு அஞ்சலி......






இந்தியாவின் முதல் குடிமகனாக விளங்கிய காலம் சென்ற ஆர்.வி.அவர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில்.....தமிழகத்தின் சாமானிய இளைஞர் ஒருவருக்கும் அஞ்சலி செலுத்தியாக வேண்டிய கடப்பாட்டில் நாம் இருக்கிறோம். 26வயதே நிரம்பிய அந்த வாலிபரின் சாவைக்காட்டிலும் தன் இறப்புக்கு முன் அவர் எழுதி வைத்துள்ள துண்டுப்பிரசுரமே நம் சிந்தையைக்கிளர்த்துவதாக அமைந்திருக்கிறது. தமிழக-தேசீய- சர்வ தேசப்பிரச்சினைகள் பற்றிய தெளிந்த நோக்கும் கூர்த்த அறிவும் வாய்ந்த அந்த வாலிபரைப்போன்ற அறிவுசால் இளைஞர்களை இழப்பது -அதிலும் இத்தனை கொடூரமாக இழப்பதென்பது நம் நாட்டுக்கு ஏற்படும் ஈடு செய்ய முடியாத இழப்பு. தனிவாழ்வாயினும் பொது வாழ்வாயினும் தற்கொலை என்பதும்-தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் வன்முறையான தீக்குளிப்பு என்பதும் சிறிதும் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை;தனது இறப்பால் மட்டுமே பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படப்போவதில்லை என்பதை அவர் ஒருகணம்- ஒரே ஒரு கணம் நினைத்துப்பார்த்திருந்தால் துர்ப்பாக்கியமான இந்த சோகம் சம்பவித்திருக்காது. எனினும் அவரை அந்த முடிவை நோக்கி உந்தித்தள்ளிய அரசியல், மற்றும் சமூகச்சூழல்களை அவர் விட்டுவிட்டுப்போயிருக்கும் பிரசுரத்தின் வழி அறிகையில் ஒருகணம் நெஞ்சு துணுக்குறத்தான் செய்கிறது. அந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதிலும்,ஈட்டுப்பணம் வழங்குவதிலும் முன்நிற்கும் அரசியல்..அதிகார சக்திகள் இந்தக்கொடூர இழப்பில் தங்கள் பங்களிப்பையும் எண்ணிப்பார்த்துத்தங்களை சற்றே மாற்றிக்கொள்ளமுற்படுவார்களென்றால் (அப்படி ஒன்று நடப்பது கற்பனைக்கெட்டாத அபூர்வம்தானென்றாலும்) வருங்காலத்திலாவது புத்திசாலியான முத்துக்குமார்களை பாரதம் இழக்காமலிருக்கும்.



ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்)



விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்..........................என்று தொடங்கும் முத்துக்குமாரின் கடிதம் கீழ்க்காணும் வாசகங்களுடன் நிறைவு பெறுகிறது.



அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


பின்குறிப்பு;முத்துக்குமாரின் முழுமையான கடிதத்தைக்கீழ்க்காணும் இணைப்பில் காண்க. உங்கள் கருத்துரைகளைப்பதிவு செய்க.http://www.pandiidurai.wordpress.com/

27.1.09

ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்த்து....

தமிழ் செம்மொழியாக்கப்பட வேண்டும் எனக்கோரிக்கை விடுத்த அரசியல்வாதிகளின் முகங்கள் முன்னிலைப்படுத்தப்படும் அளவுக்கு ,தமிழைச்செம்மொழியென்று நிறுவுவதற்காகவே நேரடியாகக்களத்தில் இறங்கி உழைத்த பெருமக்கள் பரவலான மக்களின் கவனத்திற்குப்பொதுவாகக் கொண்டு வரப்படுவதில்லை. குடியரசு நாளை ஒட்டி மைய அரசு அறிவித்துள்ள ''பத்மஸ்ரீ''விருது,அவ்வாறான ஒரு பெருமகனை-பண்டிதர்கள்,படிப்பாளிகள் மட்டத்திலேயே பெரும்பாலும் அறிமுகமாகியிருந்த தமிழ்த்தாயின் தலைமகன் ஒருவரை இந்தியத்திருக்கண்டம் முழுவதுமே ஏறெடுத்துப்பார்க்குமாறு செய்திருக்கிறது. கல்வெட்டுத்துறையில் கரை காணாப்புலமை கொண்டவரும்,'தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும்,இந்திய ஆட்சிப்பணியாளராக உயர் பதவி வகித்து ஓய்வு

பெற்றிருப்பவருமான திரு ஐராவதம் மகாதேவன் அவர்களே அந்த மாமனிதர்.
தனது வாழ் நாளின் பெரும்பகுதியைக்கல்வெட்டியல் துறைக்கே அர்ப்பணித்துத் தொல்லியல் ஆய்வுகளில்புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.மிகத்தொன்மையான பிராமி எழுத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து,அரியதொரு ஆய்வு நூலை உருவாக்கியவர்.
வரலாற்று மொழியியல் கண்ணோட்டங்களையும்,புள்ளியியல் கூறுகளையும்அடிப்படைகளாகக்கொண்டு வேத கால சமஸ்கிருத மொழியில் திராவிடமொழிக்கூறுகள் பொதிந்திருப்பதை இனம் காட்டி,அவற்றின் துணையோடு சிந்துசமவெளி கால எழுத்துக்களை-அகழ்வாய்வில் கிடைத்த எழுத்துருக்களை- விளக்க வழி உண்டா எனத்தேடிஅந்த ஆய்வில் முழு மூச்சுடன்,முனைப்பாக இயங்கியவர்.சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் , தொன்மையான தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும் உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைக்கூறுகளை விளக்க முயன்ற அவரது ஆய்வுகளே தமிழின் பழமையைத்தமிழர்கள் மட்டுமன்றி,அயல் நாட்டவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தன.'பிற நாட்டார் நல்வணக்கம்' செய்யும் வகையில் 'திறமான புலமை பெற்றிருந்தபோதும், எந்த ஒரு கருத்தையுமே முடிந்த முடிவாகக்கூறக்கூடாதென்ற நிலைப்பாட்டைக்கொண்டிருந்தவர்ஐராவதம் மகாதேவன் அவர்கள்.உண்மையான ஆய்வாளனின் இலக்கணம் அதுவே.
ஏதேனும் ஒரு களத்தையோ, ஒருசில நூல்களை மட்டுமோ எடுத்துக்கொண்டு அதற்கு ஆய்வென்று பெயர் சூட்டி,முனைவர் பட்டத்தை வெகு சுலபமாகத்தட்டிக்கொண்டுபோகும் இன்றைய நீர்த்துப்போன தமிழ் ஆய்வுகளைப்போன்றவை அல்ல மகாதேவனுடையவை.புற அங்கீகாரங்களின் தூண்டுதலுக்காகவோ, பிற நெருக்குதல்களுக்காகவோ ஆய்வை மேற்கொள்ளாமல் ஆய்வை ஆய்வுக்காக மட்டுமே செய்து வந்தவர் அவர் என்பதை இன்றைய வளரும் தமிழ் ஆய்வு மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.




தனக்குக்கிடைத்த விருதைக் கல்வெட்டியல் துறைக்குக்கிட்டிய வெற்றியாகக்குறிப்பிடும் அளவுக்கு அந்தத்துறையோடு தோய்ந்து உட்கலந்து போய்விட்ட ஐராவதம் மகாதேவனைப்பாராட்டி வணங்கி வாழ்த்தும் இத்தருணத்தில்,உதட்டளவில் தமிழ் வாழ்த்தைப்பாடுவதோடு நின்றுவிடாமல் ,உன்னத உச்சங்களை நோக்கி நம் மொழியை நகர்த்தியாக வேண்டிய கடப்பாட்டையும் கருத்தில் கொண்டால் மட்டுமே தமிழின் செம்மொழித்தகுதி என்றும் நின்று நிலைக்கும்.

கடிதங்கள்
1.ஐராவதம் மகாதேவன் பற்றிய உங்கள் பதிவு உண்மையிலேயே அற்புதம். பத்மஸ்ரீ விருது என்பது அவருக்கு ஒன்றுமே இல்லை. அவர் அந்த விருதினை விட மேன்மையானவர். உண்மையாகவே இவருக்கு விருது வழங்கியதால் மைய அரசு தன்னை சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.
இது வெறும் புகழ்ச்சி இல்லை -
முழுதும் கற்றறிந்த உங்களைப் போன்றவர்கள் பதிவிடும்போது அதன் சிறப்பே தனியாக இருக்கிறது.
YADARTHA பென்னேஸ்வரன்,ஆசிரியர்,வடக்குவாசல்
http://www.sanimoolai.blogspot.com/
http://www.vadakkuvaasal.in/










Posted by Picasa

26.1.09

''பத்ம பூஷண்''ஜே.கே.



தனது அன்பு வாசகர்களால் ஜே.கே. என்று பாசத்தோடும்,மரியாதைகலந்த பிரமிப்பு உணர்வோடும்,(சற்று பயத்தோடும் கூடத்தான்) அழைக்கப்படும் நவீன இலக்கியத்தின் நிராகரிக்கப்பட முடியாத ஆளுமைகளில் ஒருவர் திரு ஜெயகாந்தன்.
இந்திய நாட்டின் 60ஆம் ஆண்டுக்குடியரசு தினமான இன்று --26.01.09--அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ''பத்ம பூஷண்''விருது,ஜே.கேயை விடவும், அவரை நேசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பது நிச்சயம். காரணம்,ஜே.கே.,என்றுமே விருதுக்காக எழுதியது இல்லை; அவற்றைப் பொருட்படுத்தியதும் இல்லை; அவை மட்டுமே அங்கீகாரம் என்று கருதியதும் இல்லை; அதே நேரத்தில் அவை தன்னை நாடி வருகையில் முரட்டுப்பிடிவாதம் காட்டி அவற்றை ஒதுக்கி விடவும் இல்லை. ''மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும் இத்திருத்துறந்து ஏகென்றபோதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை.....''போல இராமனின் முகம் இருந்ததாகக்காட்டும் கம்பரின் வாக்கைப்போன்ற மன நிலை வாய்க்கப்பெற்று விட்ட இலக்கிய ஞானி அவர்.

தான் உணர்ந்து தெளிந்தவற்றை...,தான் கொட்ட நினைத்ததைக்கொட்டிவிட்டு ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதை நிறுத்தியும்,குறைத்தும் கொண்டவர் அவர்.சுய தூண்டுதலும் ,உண்மையான அக எழுச்சியும் இல்லாத எழுத்துக்களை வாசகர்களின் வற்புறுத்தலுக்காகவோ,பிற எந்தப்புறக்காரணத்துக்காகவோ, படைப்புக்களின் எண்ணிக்கையைக்கூட்டுவதற்காகவோ என்றுமே அவர் கைக்கொண்டதில்லை; எந்தச்சீண்டல்களுக்கும் பணிந்து போய் விடாமல், அகத்தின் கட்டளைக்கு மட்டுமே செவிகொடுக்கும் அரியதொரு படைப்பாளியான ஜே.கேயைப்போன்ற எழுத்தாளரை அபூர்வமாகத்தான் இந்த மண்ணும்,மனிதர்களும் எதிர்ப்படுகிறார்கள்.அவர் காலத்தில் வாழ நேர்ந்ததில் நாம்தான் பெருமை கொள்ள வேண்டும்.

இன்றைய பின் நவீனத்துவ இஸங்களின் அளவுகோல்களால் ஜே.கேயை அளக்க முற்படுவதைப்போன்ற பேதமை வேறெதுவுமில்லை. 'என் எழுத்துக்களை வைத்துத் தங்கள் அளவுகோல்களை அமைத்துக்கொள்ளுங்கள்'என்று விமரிசகர்களிடம் துணிச்சலாகக்குறிப்பிட்ட புதுமைப்பித்தனைப்போல-சுயம்புவாக- எந்த இலக்கண வரையறைக்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளமாகப்பொங்கிப்பெருகியவை ஜே.கேயின் எழுத்துக்கள்.ஆனால்- சிறுகதை பற்றியும், குறு நாவல் பற்றியும் ஆயிரம் இலக்கணங்களைப்படித்தாலும் தெரிந்து கொண்டுவிட முடியாத சூட்சுமங்களை,அவரது படைப்புக்கள் புதிய எழுத்தாளர்களுக்குப் படிப்பித்துக்கொடுத்தன. 60 களுக்குப்பிறகு எழுதுகோல் பிடித்த எவருமே--குறைவாகவோ,கூடுதலாகவோ ஜே.கேயின் பாதிப்பை- தாக்கத்தைப்பெற்றிருப்பவர்களே. அதன்பிறகு ஏற்பட்ட புதிய தரிசனங்களும்,அக ஒளிகளும் ,அவர்களுக்கு அறிமுகமான நவீன,பின் நவீன இலக்கியக்கோட்பாடுகளும் அவர்களை வேறு,வேறு பாதைகளுக்கு இட்டுச்சென்றாலும்-- ஜே.கேயின் எழுத்துக்கள் 'உரக்க'ப்பேசுவதாக அவர்கள் விமரிசனம் செய்யும் சூழலும் கூட ஒரு கட்டத்தில் நேர்ந்த போதும்- தங்கள் ஆரம்ப ஆசான் ஜே.கே என்பது,அவர்களது மனங்களின் இடுக்குகளில் நிச்சயம் எங்காவது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும்.





பிரகடனம் செய்வதுபோலவே இருந்தாலும் கூட-ஜே.கேயின் எழுத்துக்கள், சக மனித நேயத்தை..,மானுட அன்பை...,அறச்சீற்றத்தையே சத்தமாக முழங்கின. அழுக்கும்,அசிங்கமுமான களங்களைத்தேர்ந்து கொண்டாலும் அவற்றுக்குள் உறைந்து,உட்பொதிந்து கிடக்கும் உன்னதச்செய்தியை உலகுக்குப்பறை சாற்றின.நாசகாரி ஏவுகணைகளைப்போன்ற நச்சு இலக்கியங்களை-படிக்கக்கூசும் விரசங்களை,சமூகக்கட்டமைவுக்கு இன்றியமையாத அடிப்படைகளைமீறுவதை நியாயப்படுத்தும் நிலைப்பாடுகளை அவை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.எதற்காகவும் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ள முயலாத ஜே.கேயைப்போன்றவையே அவரது எழுத்துக்கள்.

''நான், எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப்பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும்,அதில்பொதிந்துள்ள சிறப்பானதும்,உயர்வானதும்,வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப்பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்......ஆழ்ந்து ஆழ்ந்து பார்க்கின்ற ஒரு பக்குவம்வந்து விட்டால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்துவம் துயில்வதை தரிசிக்க முடியும்''என்று தனது நூல் முன்னுரை ஒன்றில் குறிப்பிடுவார் ஜே.கே.
மகத்துவங்களை மட்டுமே தரிசித்துப்பழகி, அவற்றை மட்டுமே தன் வாசகர்களும் காணுமாறு பழக்கிய ஜே.கே அவர்களுக்கு இந்திய நாட்டின் மகத்துவமான விருது ,அவரது கழுத்தில் விழுந்த மாலையாக-பத்ம பூஷணாக அவரைத்தேடி வந்திருக்கிறது.தன்னைத்துரத்திக்கொண்டு வராதவனை செல்வம் தானே துரத்திக்கொண்டு வரும் என்பார் குலசேகர ஆழ்வார். ''தன்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் '''இவ்விருதும் அது பற்றிக்கொஞ்சமும் கவலை கொள்ளாத-அலட்டிக்கொள்ளாத அவரை நாடி வந்திருக்கிறது.ஜே.கேயை வந்து அடைவதால் விருதுகளுக்குத்தான் பெருமை என்பது சம்பிரதாயமான வாசகமாயினும் இந்த மாமனிதருக்கு மிகப்பொருத்தமானது.
காலம் தாழ்த்தாமல் பரிசளித்த சாகித்திய அகாதமியைப்போலவும், ஞான பீடத்தைப்போலவும் இந்திய அரசு அளிக்கும் இந்த விருதும் உரிய தருணத்தில் ஜே.கேயை வந்தடைவது தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்வளிக்கிறது.உச்சங்களை என்றோ எட்டிவிட்ட ஜே.கே அவர்களுக்கு இது உச்சமல்ல; இது தமிழ் மொழியின் உச்சம்,தமிழ் இலக்கியத்தின் உச்சம் என்றே கொண்டாடத்தோன்றுகிறது.


25.1.09

ஆண்டாளின் பெண்மொழி--3

''பெண்ணுக்கென்று கண்டிப்பாக ஒரு மொழி இருக்கிறது.பெண்ணின் விசனங்களை,இரசாயன மாற்றங்களை,அழகுணர்வுகளை ஓர் ஆணால் அப்படியே எழுத முடியாது.......வீரியமாக,நளினமாக,நாணம் கலந்து அத்தனை வலிகளுடன் அவள் சொல்வதைப்போல் ஓர் ஆணால் சொல்ல முடியாது.''என்பார் இரா.மீனாட்சி.

ஆண்டாளின் பக்தி உணர்வு காதலாகிப்பிறகு அதனோடு ஒருங்கிணைந்த காமமாகி, அனைத்தும் பேதமறக்கலந்துவிட்ட நிலையில்,''வாரணமாயிரம் சூழ வலம் செய்து''மதுசூதனனின் கைத்தலம் பற்றுவதான கனவும் அவளது ஆழ்மனதில் ஏற்பட்டபின்,கரம் பிடித்த மணவாளனோடு கூடி இல் வாழ்க்கை நடத்துவதான கற்பிதப்புனைவுகளையும் அவள்,கைக்கொள்ளத்தொடங்கி விடுகிறாள்.அதற்கான தடயங்களையும் நாச்சியார் திருமொழியில் காண முடிகிறது.
''நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டியகச்சங்கம்
நானும் அவனும் அறிதும்.....''

''ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ''

கண்ணனின் பீதாம்பரம் கொண்டு தனக்கு வீசுமாறு ஆண்டாள் கூறுவதும்,அவனது துழாயினையும்,வனமாலையையும்தனது கூந்தலிலும்,மார்பிலும் சூட்டுமாறு கூறுவதும் வழக்கமான நாயக-நாயகி மரபை ஒட்டியவை போலத்தோன்றலாம்;ஆனால்,அவனது 'அமுத வாயில் ஊறிய' நீரைக்கொணர்ந்து தன்னைப்பருகச்செய்து,தன் இளைப்பைப்போக்குமாறு கூறுவதும்,தன் உடல் உறுப்புக்களை அவனது தோளோடு இறுகக்கட்டுமாறு அவள் கதறுவதும் உடல்மொழியாக வெளிப்படும் பெண் மொழியின் அடையாளங்களையே கொண்டிருக்கின்றன.

கவிதைவெளியில் தானே புனைந்து வடிகால் தேடிக்கொண்ட கற்பிதங்கள்,ஒரு கட்டத்துக்கு மேல் பயன் தராதபோது-உடலின் எழுச்சிகள்,அவற்றையும் மீறி அவளை அலைக்கழிக்கும் தருணத்தில்,தன் மார்பையே வேராடு பறித்து,அவன் மீது வீசித்தன் அழலைத்தீர்த்துக்கொள்ளப்போவதான ஆவேசமும் அவளை ஆட்கொண்டு விடுகிறது.
''கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே''
கண்ணகியிடமிருந்து புறப்பட்டதாகச்சொல்லப்படும் கொங்கைத்தீயும்-எலும்பும்,நரம்பும் துருத்தும் பேயின் உடல்கொண்டு கண்டவர் மருளும் வண்ணம் தன்னை ஆக்கிக்கொண்ட காரைக்காலம்மையார்,
''......இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்து
.........பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும்''
என ஆழ்மன வேகத்துடன் உரைத்ததும் மேற்குறித்த ஆண்டாள்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளோடு பெரிதும் ஒத்திருக்கின்றன.உடலின் தேவைக்காக ஆணைச்சார்ந்தாக வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்பும்,அது கிடைக்காதபோது விளையும் சினமும் தீவிர வெளிப்பாடு கொள்ளும்தருணங்கள் இந்த அளவுக்கு உக்கிரமாகப்பதிவாகியிருக்கின்றன என்றே கொள்ள முடிகிறது. ஆண்டாளுக்கும், காரைக்காலம்மைக்கும் நேர்ந்த இந்த அவலத்தை'மனோதத்துவ விபத்து ' என்று குறிப்பிடுவார்,நாவலாசிரியர் இந்திரா பார்த்த சாரதி.

பல்லாயிரக்கணக்கான குறியீடுகளுக்கும்,படிமங்களுக்கும் நெருக்கமானதாகச்சொல்லப்படும் பெண்மொழியின் இயல்புகளையும் ஆண்டாளின் பாடல்கள் பெற்றுள்ளன.'சிற்றில் சிதைத்தல்'என்ற படிமம்,கண்ணனைத்தோணியாகவும்,விளக்காகவும் குறிப்பிடும் போக்கு
''வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்''
''வேங்கட வாணன் என்னும் விளக்கினிற்புக என்னை விதிக்கிற்றியே''
ஆகியவையும்,'பாம்பணையான்','நாகத்தணை'என்னும் தொடர்களில் பொதிந்துள்ள பாம்பு என்ற குறியீடும் ஆண்டாளின் ஆழ்மன உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்திருப்பவை.

அக உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மட்டுமன்றித் தன் சுயம்,தன் முடிவு ஆகியவற்றிலும் தீர்மானமாகச்செயல்பட்டவள் ஆண்டாள்.சமய அமைப்பில் தோய்ந்து கலக்கும் ஈடுபாடும்,சமயக்கடமைகளும் பெண்ணுக்கு மறுக்கப்பட்டுவந்த வைதீக மரபிலும்,தமிழ்ச்சூழலிலும் ஊறி வளர்ந்த ஆண்டாள்,பக்தி நெறியைத் தன் நெறியாகத்தானே தேர்ந்து கொண்டதுடன்,கவிஞர் என்ற தனித்த ஆளுமையுடனும் வெளிப்பட்டிருப்பதை,9ஆம் நூற்றாண்டுச்சூழலில் குறிப்பிடத்தக்கதென்றே கூற வேண்டும்.

ஆண்டாளின் பிறப்புப்பின்னணியில் தாக்கத்தை ஏற்ப்படுத்திய ஆண்முதமைச்ச்மூகம்,அவளது இலக்கிய ஆளுமையின் மீதும் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை விளைவித்தது. இதுவும் பெண்ணிய நோக்கில் கவனம் பெறத்தக்கது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக ஆண்டாளை ஏற்க -அவள்பெண் என்ற காரணத்தால் பக்திமரபு முதலில் தயக்கம் காட்டியது.அவளை ஒரு கவியாக அங்கீகரிக்கத்தடை போட்ட இலக்கிய மரபுகள்,அவள் பாடல்களைப்பெரியாழ்வார்தான் (அவள் பெயரில்)பாடினார் என்று கூறவும் தயங்கவில்லை''ஆண்டாளின் அகத்துறைப்பாடல்கள்,வேறெந்த ஆண் புலவரின் அகத்துறைப்பாடல்களை விடவும் துணிவும், தெளிவும் உடையவை.இதனாலேயே,ராஜாஜி,பெரியாழ்வாரே நாயகியாகத்தம்மைப்பாவித்துப்பாடிய பாடல்கள் இவை என்று கருத்துரைத்தாரோ''
என்பார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.

பெண் அடியார்களின் போக்குகள்,மாற்றுக்கலாசார வெளிப்பாடுகளுக்கு வழியமைத்துக்கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தால் ஆணாதிக்க சமுதாயம் அதனோடு ஒரு சமரசத்தைச்செய்து கொண்டு,அதன் எதிர்ப்புப்போக்கை பலமிழக்கச்செய்தது என்று ஏ.கே.ராமானுஜன் முன்வைத்திருக்கும் கருத்து முக்கியமானது. இச்சமரசத்தின் விளைவாகவே,திருப்பாவைக்கும்,'வாரணமாயிரம்' என்ற ஒரு பாடலுக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்டது என்றும்,ஆண்டாளின் பிற பாடல்கள்,''பால் ரீதியான வெளிப்படையான படிமங்கள் காரணமாகக்கோயில்களிலும்,ஏனைய பொது இடங்களிலும் .....ஓதப்படாமல்,பக்தி இலக்கிய மரபில் அதிகம் வெளிக்காட்டப்படாமல் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டன''என்றும் ஈழ எழுத்தாளர்,செல்வி திருச்சந்திரனும் குறிப்பிட்டுள்ளார்.

ஔவையைமூதாட்டியாகவும்,காரைக்காலம்மையாரைப் பேயாகவும் மாற்றிய சமூக அமைப்பு,ஆண்டாளின் ஆளுமையினையும்,அவளது பாடல்கள் எற்படுத்திய அதிர்வுகளையும் இயல்பான போக்கில் எதிர்கொள்ளவும்,அங்கீகரிக்கவும் இயலாமல் தவித்தது; பிறகு அவளையும் பெரிய பிராட்டியாகக் கோயிலில் நிற்க வைத்து வழிபாடு செய்யத்தொடங்கிவிட்டது.

பெண்மொழியின் ஒரு கூறாக 'உடல்மொழி'என்பதுகருதப்பட்டாலும் பெண்ணுடல் பற்றிக்கிளர்ச்சி நோக்கிலும்,அதிர்ச்சி நோக்கிலும் மொழிவது,பெண்மொழியாகி விடுவதில்லை.பெண் இருப்பைப்பற்றிச்சமூக வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள பிரமைகளையும்,மதிப்பீடுகளையும் தகர்த்து,மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் கலகக்குரலாக ஒலிக்கும்பொழுதுதான்,பெண்மொழி,பெண்ணிய மொழியாகப்பரிமாணம் பெற முடியும்.
இந்தக்கோணத்தில் அணுகும்போதுதான் ஆண்டாள் முன்வைத்த 'உடல்மொழி', போதையூட்டும்பாலியல் கிளர்ச்சிக்காகச்சொல்லப்படவில்லைஎன்பதையும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட அவளது ஆழ்மனம் முன்வைத்திருக்கும் மாற்று அரசியலின் வெளிப்பாடாகவே அது ஒலித்திருக்கிறது என்பதையும் விளங்கிக்கொள்ள முடியும்.

சித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும் உட்செரித்துக்கொண்டு,நனவு நிலையில் இயங்கிய பெண்ணியவாதியாக ஆண்டாளை இனங்காட்ட இயலாது.அவளது காலத்தில் நிலவிய சமூகக்கட்டுமானங்களுக்கு உட்பட்டுக்கணவன்,குடும்பம் ஆகிய சூழலில் வாழும் வாழ்க்கையே அவள் அவாவிய ஒன்று.அது கைகூடாமல் போய்விட்ட நிலையில்,அவளது மன உணர்வுகளை மடைதிறந்து கொட்ட,பக்திக்களம் பின்புலமாகிவிட...அவளது நனவிலி மனம்,தன்னையும் அறியாமல் 'பெண்மொழி'யை அவளிடமிருந்து வடித்துக்கொடுத்திருக்கிறது எனக்கொள்வதே ஆண்டாள் பற்றிய சரியான புரிதலாக இருக்க இயலும்.

24.1.09

ஆண்டாளின் பெண்மொழி--2

''பெண் உடல் மீது இந்தச்மூகம் நிறைய வரையறைகளை வைத்திருக்கிறது.பெண்புழங்கும் வெளியையும்,பார்வையையும்,கனவுகளையும் கட்டுப்படுத்துகிறது.பெண் உடல்,பாவமானது,தீட்டானது என்று மதம் சொல்கிறது.....மதமும்,சமூகமும்விதிக்கும் இந்த வரையறைகளை மீற வேண்டும் என்பதற்காகத்தான் பெண் தன் உடலைக்கொண்டாட வேண்டுமென்று சொல்கிறேன்''என்று குறிப்பிடும் நவீன பெண் கவிஞர் மாலதி மைத்ரி,அத்தகைய சொல்லடுக்குகளை ஆன்டாள், அன்றேஉருவாக்கத்தொடங்கிவிட்டதாகக்குறிப்பிடுகிறார்.

ஆணின் எழுத்தை முன்மாதிரியாகக்கொண்டு,அவன் முன்வைத்த கருத்து நிலைகளையும்,மதிப்பீடுகளையும் வழிமொழியும் போக்கு-
ஆணை எதிர்ப்பதற்காகவென்றே பெண் எழுதிய போக்கு ஆகிய
இவ்விருவகைப்போக்குகளும் பின்னடைவு பெற்றுத்'தன் எழுத்தைப்பெண்தானே எழுதுதல்'
என்ற போக்கே இன்று முன்னுரிமை பெற்று வருவதைப்பெண்ணியத்திறனாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒடுக்கப்பட்ட உடலுக்குள்,சூழல் மாற்றத்தால் நேரும் கிளர்ச்சி,வேட்கை,வலி,கனவுஆகிய அக நிகழ்வுகள் சார்ந்ததாகவும்,பால் சார்ந்த தனி அடையாளங்களை உடையதாகவும் நவீன படைப்பிலக்கியத்திலும்,திறனாய்வுத்தளத்திலும் இனங்காட்டப்பட்டு வரும்'பெண்மொழி'பற்றிக்குறிப்பிடும் ஹெலன் சிக்சஸ்,பெண்,தன் உடம்பின் அதிர்வுகளை எந்த விதமான தணிக்கைக்கும் உட்ப்படுத்தாமல்,அப்படியே பொங்கி வழிந்து வெளிப்படுத்துவதே,'பெண் எழுத்து'என்கிறார்.இத்தகைய எழுத்துக்கள்,கலகத்தன்மை கொண்ட எதிர்வினைச்செயல்பாடுகளாகவும்,மொழி என்ற ஊடகத்தின் வழியே ஆண்-பெண் பால்பாகுபாட்டை நிலை நிறுத்தும் பண்பாட்டுக்கட்டமைப்பைச்சிதைத்துக்கட்டுடைப்பை நிகழ்த்துவனவாகவும் மதிப்பிடப்படுகின்றன.

மேற்குறித்த கோட்பாடுகள் எவற்றையும் சித்தாந்த ரீதியாக அறிந்திராதவள்,ஆண்டாள்.;ஆயினும் அவளது நனவிலி மனம்,இதுகாறும் பண்பாட்டு வரையறைகளுக்குள் சிறையிருந்த 'அக வெளி'யை விடுதலை செய்து,பெண்ணின் அக மொழியைத்தன் பாடல்களில் மடையுடைத்த வெள்ளமாகப்பெருக விட்டிருப்பதைக்காண முடிகிறது.
''தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண்டலமிட்டு...............
......அநங்க தேவா
உன்னையும் உம்பியையும் தொழுதேன்''
என்று,மன்மத வழிபாட்டுடன் நாச்சியார் திருமொழிப்பாடல்கள் தொடங்குவதே,பெண் சார்ந்த மரபுக்கட்டுடைப்பின் முதல் படியாக அமைந்து விடுகிறது.

எப்பொழுதுமே நுகரும் இடத்தில் தன்னையும்,நுகரப்படும் இடத்தில் பெண்ணையும் வைத்து அழகு பார்ப்பவன் ஆண். இத்தகைய ஆண் நோக்கிற்கு மாறாக,நுகரும் இடத்தில் தன்னை அமர்த்திக்கொள்ளும் ஆண்டாள்,
''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவள வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுகேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே''
என வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறாள்.அவனோடு இணைய வேண்டும் என்று தான் கொண்ட தணியாத விரகத்தை,தன் உடல் படும் வேதனைகளை,தவிப்புக்களை சிறியமனத்தடை கூட இல்லாமல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறாள்.
''காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே''
''உலங்குண்ட விளங்கனி போல் உள்மெலியப்புகுந்து என்
நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே''
''உடலுள் புகுந்து ஊறல் அறுக்கின்ற மாயற்கு''
''அவனொருவன் தழுவி முழுசிப்புகுந்தென்னைச்
சுற்றி சுழன்று போகானால்....''

மடல் ஏறுவது பெண்ணுக்குரிய மரபில்லை என்பது போன்ற மரபுகளை உடைக்கும் ஆண்டாள்,,கண்ணன் காளியமர்த்தனம் செய்த பொய்கைக்கரைக்கும்,அவன் தந்தை நந்தகோபனின் வீட்டு வாசலுக்கும்,கோவர்த்தன மலைக்கும்,வடமதுரைக்கும்,துவாரகைக்கும்,ஆயர்பாடிக்கும்,பிருந்தாவனத்திற்கும் தன்னை உய்த்துச்செல்லுமாறு ஓலமிடுகிறாள்.
பெண் என்பவள்,எப்படியாவது காதலனின் பிரிவைப்பொறுத்துக்கொண்டு வீட்டிலேதான் இருந்தாக வேண்டும் ,மனம் தேறித்தான் ஆக வேண்டும் என்பது போன்ற மரபுச்சட்டகங்களையும்,
''அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப''
என்ற இலக்கண வரையறைகளையும் மீறிக்கொண்டு,'மிக்க காமத்து மிடலாய்'வெளிப்பட்டிருப்பவை,ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடல்கள்.
அயலார் அறிந்தபின் காதலனோடு உடன்போக்காகச்செல்லும் சங்க மரபுக்கு மாறாகப்பெண்,தானே தன் காதலனைத்தேடிச்செல்லும் துணிவையும் அப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.
''தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழி போயினள் என்னும் சொல்லு
வந்த பின்னைப்பழி காப்பதரிது...''
பக்தி இலக்கிய மரபு வகுத்துள்ள நாயகநாயகி பாவனையிலான பாடல்களாகவே ஆண்டாளின் பாடல்களும் கருதப்பட்டபோதும்-தான் ஒரு ஆண் என்ற பிரக்ஞையுடன் நாயகி பாவனையை வலிந்து புனைந்து கொண்டு,நனவு நிலையில் பாடும் ஆண் அடியார்களின் பாடல்களுக்கும்,ஆண்டாள் என்ற பெண்ணின் நனவிலி மன வெளிப்பாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதைக்காண முடிகிறது.

''புருஷன்,புருஷனைக்கண்டு ஸ்னேகிப்பதைக்காட்டிலும் ஸ்திரீ புஷனைக்கண்டு ஸ்னேகிக்கை பள்ளமடை(பள்ளத்தை நோக்கி நீர் ஓடுவது போல் இயல்பானது )''என்றுதிருப்பாவை அவதாரிகை உரையில் பெரியவாச்சான் பிள்ளையும் குறிப்பிடுகிறார்.நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார்,திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் பாடியுள்ள நாயகி பாவனைப்பாடல்களை விட ஆண்டாளின் பாடல்கள்,அசலானவை.பெரியாழ்வாராகிய தன் தந்தை எப்படியாவ்து கண்ணனுடன் தன்னைச்சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கையினை,
''வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே''
என ஆண்டாள் வெளிப்படுத்தியிருப்பதும்,பாசுரங்களின் முடிவில்,
''விட்டுசித்தன் வியன்கோதை .....
வேட்கையுற்று மிக விரும்பும் சொல்''
என நாயகியின் உணர்வுகள்,ஆண்டாளின் சொந்த உணர்வுகளாகவே கூறப்பட்டிருப்பதும் எளிதில் ஒதுக்கிவிட இயலாதவை.நாயகநாயகி பாவனை என்ற கவசங்களும் ,முகமூடிகளும் கழன்றுபோய், ஆண்டாள் என்ற ஒரு பெண்ணின் தனிப்பட்ட-அந்தரங்க உணர்வாக-உண்மைக்கு மிகப்பக்கத்தில் வந்துவிடுபவை அவள் கவிதைகள்

8.1.09

ஆண்டாளின் பெண்மொழி--1




ஒரு முன்குறிப்பு; 

சங்கத்தை அடுத்து நீண்டதொரு இடைவெளிக்குப்பின் பெண்குரல்,பெண் இலக்கியம் -ஆண்டாள் வழியாகவும்,
காரைக்கால் அம்மையார் வழியாகவும் ஒலித்தது. பக்தி என்ற ஒற்றைப்பரிமாணத்துடன் அவ்விருவர்தம் படைப்புக்களும் முற்றுப்பெற்று விடுவதில்லை.
ஆழ்ந்த சமூக,உளவியல் உள்ளடக்கங்களைக்கொண்டு விளங்கும் அவர்களின் வாழ்வும்,வாக்கும் பல வகையான மறு வாசிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆண்டாளின் கவிதைகளில் பெண்மொழி நாடி, நான் செய்த மறு வாசிப்பு,
மதுரைகாமராஜர் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையில் நிகழ்ந்த கருத்தரங்கில்
கட்டுரையாக வாசிக்கப்பட்டது. ('தமிழ் இலக்கியவெளியில் பெண் மொழியும் பெண்ணும்' என்ற என் நூலிலும் அக்கட்டுரை இடம் பெற்றுள்ளது).
ஆண்டாளின் வாழ்க்கைக்கதையை நான் செய்த மீட்டுருவாக்கம், 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்' என்ற தலைப்பில் சிறுகதையாக வெளிவந்திருக்கிறது.
ஆண்டாளின் தமிழிலும், அவளது கவிதை அழகிலும் நான் கொண்டுள்ள பற்றும்,பிடிப்பும், அவ்விரண்டு ஆக்கங்களையும் இணைய வாசகர்களுக்காக
இவ்வலைத்தளத்தில் முன் வைக்க என்னைத்தூண்டுகின்றன. படித்துக்கருத்தைப்பதிவு செய்ய வேண்டுகிறேன்.
ஆண்டாளின் பெண் மொழி;

சங்கப் பெண்பாற்புலவர்களை அடுத்து,நீண்டதொரு இடைவெளிக்குப்பின்
வலுவான சமயப்பின்புலத்தோடு கூடிய படைப்பாளிகளாக வெளிப்பட்டவர்கள்,
காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும்.இவ்விருவருமே பெண்கள் மீது
சமூகம் திணித்த பல மரபுகளால் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள். அவற்றுக்கு வடிகால் தேடும் முயற்சியாகத்தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும்,அவற்றால் உணர்ந்த மனக்காயங்களையும் தமது எழுத்துக்களில் இறக்கி வைத்திருப்பவர்கள்.

உடலையும்,பாலியலையும் வெறுத்து ஒதுக்கியதன் குறியீடாகப் பேய் வடிவு பூண்டு,தன் எதிர்ப்பைக்காட்டி, சமயம்,பக்தி-இவற்றினூடே மறை பொருளாகத் தன்
எதிர்ப்புக்குரலைப்பதிவு செய்தவர், காரைக்கால் அம்மை.
இதற்க்கு மாறாக- இது வரை உடல் சார்ந்ததாகவும்,பாலியல் சார்ந்ததாகவும்
சமூகத்தில் உருவாக்கப்பட்டிருந்த பால்பேதம் கொண்ட அனைத்துக்கலாச்சாரக்கட்டுமானங்களையும் தகர்த்து எறிந்து, தன் எதிர்ப்பைப்பதிவு செய்திருக்கிறாள் ஆண்டாள்.
மரபார்ந்த பக்தி இலக்கியப்பாடல்களின் பாதையிலிருந்து சற்றே விலகிப் பெண் மொழிக்கு அடித்தளம் அமைக்கும் போக்கில் ஆண்டாளின் பாடல்கள் அமைந்திருப்பதை, அப்பிரதிகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துகையில் விளங்கிக்கொள்ள முடிகிறது.
திருப்பாவை முப்பது பாடல்களாகவும்,நாச்சியார் திருமொழியின் பதினான்கு பத்துக்களாகவும் வெளிப்பட்டுள்ள ஆண்டாளின் கவிதைகளில் பொதிந்துள்ள பண்பாட்டு மாற்றத்திற்கான வேர்கள், அவளது பிறப்புப்பின் புலத்திலேயே பொதிந்து கிடப்பதை எளிதாக இனம் கண்டு விடலாம்.

மகாலட்சுமியின் அவதாரமாகத் தெய்வத்தன்மைகள் ஆண்டாளின் மேல் ஏற்றப்பட்டபோதும்,திருமகள் போல அவள் வளர்க்கப்பட்டபோதும்,பெரியாழ்வாரால்
துளசிச்செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட அனாதைக்குழந்தையாகவே
குருபரம்பரை நூல், ஆண்டாளின் பிறப்பைக் குறிப்பிடுகிறது.அவளது காலகட்டத்தில் வாழ்ந்த பிற பெண்களுக்கு எளிதாகக்கைகூடக்கூடிய மணவாழ்க்கை- சாதி,குலம் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பில்,பிறப்புப்பின்னணி இன்னதென்று தெரியாத பெரியாழ்வாரின் வளர்ர்ப்பு மகளான அவளுக்கு
மறுக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கில்லை.

தாய்,தந்தையுடன் கூடி வாழும் இயல்பானதொரு குடும்பச்சூழலில் வளர்க்கப்படாத ஆண்டாள், 'உண்ணும் சோறும்,பருகும் நீரும்' கண்ணன் மட்டுமே என்று கருதும் பெரியாழ்வாரின் மரபுச்சூழலிலேயே பிறந்தது முதல் வளர்ந்து ஆளாகிறாள்.நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணபிம்பம்,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, அவளின் இளமை உணர்வுகள்விழித்துக்கொண்ட நிலையில்,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.

''ஆண்டாள், இளமைப்பருவம் வந்து தலைகாட்டியபோது, பாடியது, திருப்பாவை......
நன்கு வளர்ந்த நிலையில்,கண்ணனைத்தன் காதலனாக எண்ணிப்பாடிய பாடல்கள்,
நாச்சியார் திருமொழி'' என 'தமிழ்ப்பெரும் கவிஞர்' என்ற தமது நூலில் முனைவர்,பேராசிரியர் சு.வேங்கடராமன் அவர்கள் வெளியிட்டுள்ள அனுமானம்
மிகப்பொருத்தமானது.

வழிபாடுகளும்,நோன்பும் செய்தால் கண்ணனே தன் கணவனாகலாம் என்று
அந்தப்பேதைச்சிறுமியின் மனம் எண்ணியதன் வெளிப்பாடே திருப்பாவை.
காலப்போக்கில்,நனவுநிலையில் அது கைகூடாதபோது, கனவில் அவன் கைத்தலம் பற்றி கணவனாக்கிக்கொண்டு , ஊடலும்,கூடலுமான அவனோடான ஒளிவு மறைவற்ற உறவுகளை வெளிப்படுத்தி , அவள் பாடியவவை நாச்சியார் திருமொழிப்பாடல்கள் .

பக்தி மேலீட்டால் ஆண்டவனுக்கு அடிமை செய்தல், அவனையே கணவனாக எண்ணுதல் என்பவை ஒருபுறமிருக்க -ஆண்டாளின் பாடல்களில் வெளிப்படும் தீவிர மானுட வெறுப்பிற்கு முறையான திருமண பந்தத்தை அவளுக்கு அளிக்க மறுத்த அக்கால சமூக அமைப்பும் வலுவான காரணமாதல் கூடும்.பிறப்பின் மர்மத்தால் திருமணச்சந்தையில் தான் புறந்தள்ளப்பட்ட ஆழமான ஆவேசம், பக்திப்பின்னணியுடன் ஒருங்கிணைந்து இயங்கியதன் விளைவே மனித ஆணுக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பும் எழுச்சிகளை அவள் பாடல்களில் எதிர்வினையாக வெளிப்படுத்தியிருக்கின்றன. தன் உடலை அவள் பெரிதும் மையப்படுத்துவதும், 'சிறுமானிடவர்க்கு' அதை உரியதாக்கமாட்டேன் என முழங்குவதும் இதனோடு தொடர்புடைய சிந்தனைகளாகவே அமைந்திருக்கின்றன.

தேவர்களுக்குக்காணிக்கையாகப் படைப்பதற்காக வைத்திருக்கும் அவிர்பாக உணவை, கானில் திரியும் சிறுநரிகள் சீரழிக்க விடமாட்டேன் என
''உன்னித்து எழுந்த என் தடமுலைகள் ,
மானிடவர்க்குஎன்றுபேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய்''
என்று உரத்துப்பிரகடனம்செய்கிறாள்அவள்.
ஆணாதிக்க சமூகஅமைப்பு,பெண் மீது சுமத்திய 'கற்பு நிலை'என்ற கருத்தாக்கமும்
ஆண்டாளின் இத்தகைய பாடல்களுக்குத்தூண்டுகோலாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
பிறந்தது முதல் கண்ணனையே கணவனாக வரித்து விட்டதால்- அவனுடனான திருமண வாழ்வும், உடல் ரீதியான உறவும் கை கூடாதவை என்பதை உள்மனத்தில் உறுதியாக அறிந்து கொண்ட பின்னும், பிற மானிடவருக்குத்தன்னை
அளிப்பதென்பது, மரபுக்கட்டுக்களில் ஊன்றிப்பழகிப்போன ஆண்டாளின் நனவு
மனத்துக்கு இயலாத ஒன்றாகவும் இருந்திருக்கலாம்.

கண்ணனே கணவனாக வேண்டும் என்ற ஆழ்மன ஆவல்,அதனால்விளைந்த கற்புக்கோட்பாட்டின் வலுவான தாக்கம், நடப்பியல் வாழ்வில் சிறு மானுடரால்
நிராகரிக்கப்பட்ட காயம்ஆகிய மும்முனைத்தாக்குதல்களுக்கு ஆண்டாள் உட்பட
நேர்ந்திருக்கிறது என்பதே அவள் பாடல்களை உளப்பகுப்பாய்வு செய்கையில் வெளிப்படும் உண்மையாகும்.

காலம் காலமாகப்பெண் மீது ஆதிக்கம் செலுத்தி, அடக்கு முறைகளுக்கு ஆளாக்கி,அதிகார மையமாகச்செயல்பட்ட ஆணை நிராகரிக்கும் ஆண்டாளின் நனவிலி மனத்தில்,தன் உடலும் ,மனமும் தனக்குச்சொந்தமானவை என்ற எண்ணமும்,அவற்றை யாருக்கு சொந்தமாக்குவது என்பது, தான் எடுத்தாக வேண்டிய முடிவு மட்டுமே என்பதும் உறுதிப்பட்டு விடுகின்றன.பக்தியால் விளைந்த காதலாகவே இருப்பினும், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தன்னுடையதாகவே அவள் நிலை நாட்டிக்கொள்கிறாள்.
மனித ஆண் அவளால் புறந்தள்ளப்பட்டபோதும், இயல்பான மன வாழ்க்கையினையும், உடல் வேட்கையையும் பிழையாகவும்,பாவமாகவும் கருதும் போக்குகள் அவளிடம் இல்லை.தன் மனதின் அலைவரிசைக்கு ஏற்றவனாக
அமைந்துபோன கண்ணன் என்ற ஆண் பிம்பத்தைக்கற்பனையில் புனைந்துகொண்டு, அந்த பிம்பத்தோடு தானாகக் கற்பிதம் செய்து கொண்ட வாழ்வில் தன் பாலியல் உணர்வுகளுக்கு வடிகாலைத்தேடிக் கொள்வதில் அவளுக்கு எந்த மனத்தடையும் இல்லை.
தன் கவிதைவெளியில் தன்னுடயவனாக அவள் உருவாக்கி உலவவிட்ட ஆண் ,
அவளது சீண்டல் பேச்சுக்கும், ,பரிகசிப்பிற்கும், குத்தலுக்கும்,கண்டனத்துக்கும் ,பொறாமைக்கும் ஆளாகும் சமநிலைத்தோழன்.
அவன், அவளது சிற்றிலை சிதைத்து விளையாடுபவன். யமுனையில் அவள் நீராடுகையில் உடைகளைக்கவர்ந்து ஓடும் குறும்புக்காரன்.

உள்ளம் கவர்ந்த காதலனுடன் உடலும் சங்கமிக்க வேண்டும் என ஆசைப்படுவதையும், அது குறித்த வேட்கையினை வெளிப்படுத்துவதையும்,
இயற்கைக்கு மாறானதாகவோ,நாணமற்ற செயலாகவோ ஆண்டாள் கருதவில்லை.
கணவனாகவே வரித்துக்கொண்டுவிட்ட ஒருவன் பொருட்டுத்தன் அக உணர்வுகளைத்திறந்து காட்ட அவளுக்கு எந்தத்தடையும் இல்லை.
இக்காரணத்தினாலேயே ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடல்களில் பெண்ணின் அகமொழியும், அகவெளியும் சமூகப்பொதுப்புத்தியில் படிந்துள்ள பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல்
கட்டற்றுப்பீறிட்டிருப்பதைக்காணமுடிகிறது.
(ஆண்டாளின் பெண்மொழி - தொடர்ச்சி அடுத்த பகுதியில்)

6.1.09

புத்தாண்டின் புலரியில்....

 
Posted by Picasa


இணைய வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
''கெட்ட போரிடும் உலகினை வேரொடு சாய்ப்போம்''என உலகக்குடிமக்கள்
ஒவ்வொருவரும் உறுதி கொண்டாலன்றி, உலகின் பல இடங்களிலும் பலவடிவங்களிலும் புகைமூட்டமாக சூழ்ந்து பரவிவரும் பகைமைத்தீயை அழிக்க முடியாது என்பதைக்கண்டு கவலை கொள்ளும் சம்பவங்கள் அன்றாட நடப்பாகி வருகின்றன. இத்தருணத்தின் தேவை ஆவேசத்தின் பிடியில் சிக்காத நிதானமும், அன்பும்,பொறுமையும் மட்டுமே என்பதை தார்மீக,சமூகப்பொறுப்புள்ள பிரஜைகள் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். அந்த மெய்யறிவை அனைவரும் பெற்றால் போர்,பகை,அச்சம் நீங்கி அமைதியும்,சாந்தமும் எங்கும் குடிகொள்ளும். அந்த நன்னாளின் விடியல்,விரைவில் வரவேண்டும் என்பதும், அதற்கான சிறியதொரு முன் முயற்சியையாவது தன்னளவில் தனிமனிதர்கள் எல்லோருமே மேற்கொண்டாகவேண்டும் என்பதும் புத்தாண்டில் நாம் கைக்கொள்ளும் சிறியதொரு இலட்சியமாக அமையட்டும். உலகில் பிறப்பெடுத்ததற்கு,இம்மண்ணுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன், சுற்றுச்சூழலால் அதை மாசுபடுத்தாமல், இரத்தக்களரிகளால் அதைகோரப்படுத்தாமல் அடுத்த தலைமுறைக்கு அழகாய்க்கொண்டு போய்ச்சேர்ப்பது மட்டுமே.




அறிவிப்புக்கள்

1.புத்தாண்டு புலரும் தருணத்தில், இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி வாய்த்திருக்கிறது. தமிழில் பல ஆண்டுகளாக எளிய மக்களின் குரலாக, விவசாயத்தரப்பினரின் குரலாகத்தன் படைப்புக்களை சிறுகதை,நாவல் என்ற பல வடிவங்களிலும் ஒலித்து வந்திருக்கும்- முற்போக்கு எழுத்தாளர் பாசறையைச் சேர்ந்த திரு மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாதமி பரிசுக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதே அந்த உவப்பான செய்தி.
காலம் அதிகம் கடந்து விடாமல் இப்பரிசு அவரை வந்தடைந்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. கரிசல் காட்டு மக்கள்- குறிப்பாகப்பெண்கள் படும் துன்பங்களையும், வறுமை அப்பிக்கிடக்கும் தென்மாவட்டசிற்றூர்களில் தீப்பெட்டி ஆபீசுக்கு-பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில்,
அங்கே பலவகையான நெருக்குதல்களுக்கு ஆளாக வேண்டிய வாழ்க்கைச்சூழல்களில் நாட்களை நகர்த்தும் அரும்புகளையும் (சிறார் மற்றும் பெண்கள்) - அசலாக- யதார்த்த வாழ்வுக்கு மிக நெருக்கமாகத் தன் படைப்புக்களில் சித்தரித்துக்காட்டிய வீரியமான படைப்பாளி,திரு பொன்னுசாமி அவர்கள்.
இந்திய இலக்கியத்தின் மேன்மையான விருதை அவர் பெறவிருக்கும் இத்தருணத்தில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்த விரும்புவோர் தொடர்புக்கு: திரு மேலாண்மை பொன்னுசாமி, மேலாண் மறைநாடு, ராஜபாளயம்வழி, விருதுநகர் -626127



2.புத்தாண்டின் தொடக்கம் புத்தகப்பிரியர்களுக்கு விருந்தளிப்பதாக புத்தகக் கண்காட்சியுடன் (சென்னை- 8.1.09 முதல்)தொடங்குகிறது. அதற்கு முன்பே நூல் வெளியீட்டு விழாக்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டு நூல்கள், திரு ஜெயமோகனின் நான்கு புதிய நூல்கள் 'உயிர்மை' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
எஸ்.ராமகிருஷ்ணன்;' பதினெட்டாம் நூற்றாண்டின் மழை', 'சித்திரங்களின் விசித்திரங்கள்','நம் காலத்து நாவல்கள்','காற்றில் யாரோ நடக்கிறார்கள்', 'கோடுகள் இல்லாத வரைபடம்', 'அதே இரவு அதே வரிகள்', 'உலக சினிமா', 'எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்'
ஜெயமோகன்; 'ஊமைச் செந்நாய்'-சிறுகதை,குறுநாவல், 'நிகழ்தல்'-கட்டுரை,
'இன்று பெற்றவை', 'தனிக்குரல்'


3. 2008 ஆம் ஆண்டின் 'டாப் டென்' புத்தகங்களாகக் 'குமுதம்'இதழ் (31.12.08)
தொகுத்து வெளியிட்டுள்ள பட்டியலில் (தொகுத்திருப்பவர்,திரு தளவாய் சுந்தரம்)
இந்த வலைப்பூவின் ஆசிரியரான(எம்.ஏ.சுசீலா) என் மொழியாக்க நூலும்-
'குற்றமும் தண்டனையும்' (ரஷிய மூலம்;தஸ்தயெவ்ச்கி)- இடம் பெற்றுள்ளது. இச்செய்தியை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். எல்லாப்புகழும், பெருமையும் தஸ்தயெவ்ச்கிக்கே உரியது.தமிழில் அது வெளிவர நான் ஒரு கருவியாக இருந்ததை எண்ணுகையில் மட்டுமே பெருமையும்,பூரிப்பும் கொள்கிறேன்.


4.. சென்ற ஆண்டின் இறுதியில், ஒரு சுற்றுலாக்குழுவுடன் இணைந்து,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச்செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பலரும் பலவகையாக அந்நாடுகளின் பலதரப்பட்ட அம்சங்களை முன்வைத்திருக்கிறார்கள். எனினும் என் பார்வையில், நான் கண்ட மனிதர்களையும், காட்சிகளையும் ,நான் எடுத்த புகைப்படங்களுடன் இணையத்தில், பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பயணக்கட்டுரைகளின் ஊடே ,அவ்வப்போது,பிற படைப்புக்களும் வெளியாகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....