துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.11.12

ஒரு பாலைப்பயணம்-3


புல் பூண்டுகள் கூட அற்ற - வெறுமையும்,முழுமையுமான மணல்வெளிப்பரப்பைக் காண ஏற்றதாக ஜெய்சால்மர் நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் இடமே சாம் மணல் மேடுகள்.  தார் பாலைவனத்தின் முகப்புக்களில் ஒன்றாகவும் இந்த இடத்தைக் கொள்ளலாம். நகரிலிருந்து அந்த மணல்மேடுகளை நோக்கிச் செல்லும் வழியெங்கும் பாலைக்குள்ளேயே தங்கியிருக்க வசதி செய்து தரும் பாலைவன ரிசார்ட்டுகள்...மற்றும் ஆங்காங்கே அவை அமைத்திருக்கும் கூடாரங்கள்.
கோட்டை வடிவில் ஒரு தங்கும் விடுதி

பாலைக்கூடாரங்கள்...
படிப்படியாக எங்கள் ஆர்வம் கூடிக்கொண்டே செல்ல....சாலையின் இரு பக்கங்களிலும் தாவரங்களின் பரவல் படிப்படியாகக்குறைந்து மணல் மேடுகள் கண்ணுக்குத் தென்படத் தொடங்கியிருந்தன.குறிப்பிட்ட ஒரு இடத்தோடு அங்கிருந்த காவலர்கள் வாகனத்தை நிறுத்தி விட.....அங்கே பார்த்தால் தேர்த் திருவிழா போன்ற மக்கள் கூட்டமும் வாகனக் குவியல்களும்....! சற்று தூரத்தில் பெரிய மணல் மேடுகளும் அங்கே ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் சவாரி செய்யும் மனிதர்களும்...!

பாலையின் ஏகாந்தத்தையும்....தனிமையான சூழலையும் கற்பனை செய்து கொண்டு வந்திருந்த எனக்கு வித்தியாசமான இந்தக் காட்சி சிறிது அதிர்ச்சி ஊட்டியபோதும் ‘பாலையைக்காணும் ஆர்வம் எல்லோருக்கும்தானே  இருக்கும்’என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.....ஆனாலும் அந்தக் கூட்டத்துக்குள் இருந்தபடி பாலைமணல்வெளியின் அழகைப்பருகுவதென்பது....அத்தனை எளிதானதாக இல்லை.ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் ஏறிச் சவாரி செய்யுமாறு நம்மைக் கையைப்பிடித்து இழுக்காத குறையாக வற்புறுத்தும் ஒட்டகக்காரர்கள் ஒரு புறம்....மனிதர்களைச் சுமந்தபடி நம் மீது மோதி விடுவது போல ஓடி வரும் ஒட்டகங்கள் இன்னொரு புறம்....பாலை மணலுக்குள் இருந்தபடி தன் பாட்டையும் நடனத்தையும் ரசிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த பெண்கள் மறுபுறம்... [’பத்தே பத்து ரூபாதான்....ஒரே ஒரு பாட்டு..ஒரே ஒரு நடனம் மண்ணுக்குள்ள உக்காந்து பாருங்க தீதி...உங்க வம்சமே நல்லா இருக்கும்..’’’  -  இதைத்தான் இந்தியில் சொல்லியிருப்பார்கள் என்பது என் புரிதல்!?].




இந்தக் கூட்ட நெரிசலில் என் அழகியல் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய்க் கழன்று கொள்ள...அங்கிருந்து தப்பித்து வெளியேறினால் போதும் என்னும் மனநிலைக்குக் கூடத் தள்ளப்பட்டிருந்தேன் நான். இருந்தாலும் அத்தனை தொலைவு பயணப்பட்டு வந்து விட்டு வெறுமே போக முடியுமா என்ன..? பாவப்பட்ட ஒட்டகம் ஒன்று எனக்காகவே காத்துக்கொண்டிருக்க அதன் முதுகை முறிக்கும் இறுதித் துரும்பாக...நானும் பேத்தியும் அதில் ஏறிக்கொண்டோம்; மகள்,மருமகன்,பேரன் இன்னொரு ஒட்டகத்தில். 

அங்கே ஒட்டகச்சவாரி செய்கிறவர்களெல்லாம் ஆனந்தக் கிளர்ச்சியிலோ...அச்சத்தை மறைப்பதற்கோ ...கண்டபடி கூச்சலிட்டுக்கொண்டு வந்தபோதும்....எனக்கென்னவோ அந்த ஒட்டகச்சவாரி எந்த வகை அச்சத்தையும்,.கிளர்ச்சியையும் ஊட்டவில்லை என்பதே உண்மை.... !

சுற்றுப்புறத்தில் காண்பவைகளை முடிந்தவரை மனதுக்குள்ளும்,புகைப்படக்கருவி மூலமும்[ ’ஒட்டகத்தின் மேலிருந்து விழுந்து அதன் காலுக்கு இரையாகித் தொலையப் போகிறீர்கள்’ என்று கத்திக் கொண்டே வந்த மகளின் எச்சரிக்கையையும் மீறி] தொடர்ந்து பதிந்து கொண்டே வருவதில் மட்டுமே என் கவனம் லயித்துக் கிடந்தது.



மங்கிவரும் கதிரவனின் பொன்னொளியில் ’’தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி’’யதைப்போல [நன்றி;பாரதிதாசன்] மின்னும் மணல் பரப்பு...பல்வேறு உயரங்களில் தாழ்ந்தும் உயர்ந்தும் நிற்கும் மணல் மேடுகள்....இடையே சமவெளியாகவும்,உட்குழிந்தும் இருக்கும் மணல் வெளிகள் என்று காட்சியெல்லாம் மணலாகவே நிறைந்து துளும்ப .....என் பேரன் விளையாடித் தூற்றிய மணல் துகளும் என்னில் வந்து அப்பிக் கொண்டது.... 



ஒட்டகச் சவாரி ஐந்தே நிமிடங்களில் முடிந்து விட....மாலைச் சூரியன் மறையும் காட்சியைக்காண மணல் திட்டுக்களில் மக்கள் குவியத் தொடங்கியிருந்தனர்... 



மலை...கடல்...பாலை என எல்லா நிலப்பரப்புக்களிலுமே அஸ்தமனக்காட்சி அழகானதுதான்.
இரவுக்கூடாரங்களுக்கு மேல்
முழுகும் சூரியன்...


‘’செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை’’
என்று அழகின் சிரிப்பில் பாரதிதாசன் சொல்லும் வருணனையை முழுவதும் உணர முடியும் சந்தர்ப்பங்கள் இவ்வாறானவையே......

மாலை மறையத் தொடங்கியதுமே மக்கள் கூட்டமும் கலையத் தொடங்க  வாகனநிறுத்தத்திற்கருகே தேநீர் குளிர்பானம் தண்ணீர் விற்பனைக்கடைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன...

சாம் மணல் திட்டுக்களிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் பாதையில் குல்தரா என்னும் கைவிடப்பட்ட கிராமம்[abandoned village] ஒன்றும் பார்க்கத் தகுந்த சுற்றுலா இடமாக இருப்பதை எங்கள் விடுதிக்காப்பாளர் கூறியிருந்தது நினைவுக்கு வந்ததால்...இரவு படர்வதற்குள் அதையும் காணும் ஆவலில் அப்போதைக்கு அந்தப்பாலை மண்ணிலிருந்து விடை பெற்றோம்...

[பயணம் தொடரும்]

இணைப்புக்கள்;
ஒரு பாலைப்பயணம்-1
ஒரு பாலைப்பயணம்-2

ஒரு பாலைப்பயணம்-2



கோட்டை
பத்வா ஹவேலி

ஜெய்சால்மர் நகரின் பிரதானக் கவர்ச்சியாகச் சொல்லப்படுபவை கோட்டையை ஒட்டி ஆங்காங்கே காணப்படும் கலையழகு மிளிரும் பிரம்மாண்டமான மாளிகைகள். ஹவேலி என்ற சொல்லால் வழங்கப்படும் அவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; ஜைன மதத்தைச் சேர்ந்த பத்வாக்கள் எனப்படும் மிகப்பெரிய தனவணிகர்களுக்குச் சொந்தமாக இருந்தவை.ராஜஸ்தானத்தில் இயல்பாகவே மிகுதியாகக்கிடைக்கும் மணல்கற்களையும் -sandstones-[மணல்மேடுகளும்,குன்றுகளுமே காலப்போக்கில் இறுகி மணல்கற்களாக,சலவைக்கற்களாக மாறுகின்றன] சலவைக்கற்களையும் கொண்டு இழைக்கப்பட்டிருக்கும் வசந்த மாளிகைகள் அவை .

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெய்சால்மர் நகரில் தங்கள் வர்த்தகத்தைத் தொடர முடியாத சிக்கல் ஏற்பட்டுத் தவிக்கும் நிலை பத்வாக்களுக்கு நேர்ந்தபோது அங்கிருந்த சமண ஆலயத்தில் பூசை செய்யும் குரு ஒருவரின் அறிவுரைப்படி அவர்கள் அந்நகரை விட்டு வெளியேறியதாகவும் ,பிறகு வெள்ளி,சரிகை,ஓபியம்[கஞ்சா போன்ற ஒருவகை போதைப்பொருள்] ஆகிய வணிகங்களின் வழியாகவும்,நிதிநிறுவனங்களை நடத்துவதன்  மூலமும் பெரும்செல்வந்தர்களாக உயர்நிலை அடைந்தபின் ஜெய்சால்மர் நகரின் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்கென்றே அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வழங்கி வருகின்றன.

குறிப்பிட்ட காலகட்டம் வரை ஜெய்சால்மர் நகரம் முழுவதுமே கோட்டைக்குள் உள்ளடங்கியதாகத்தான் இருந்திருக்கிறது. பத்வாக்களில் மூத்தவரான குமன் சந்த் பத்வா[Ghuman Chand Patwa], தன் ஐந்து மகன்களுக்கும் மாளிகை -ஹவேலி- கட்ட முடிவு செய்தபோது கோட்டைக்குள் இடம் போதாது என்பதால், கோட்டைக்குக் கீழ்,கோட்டையை நோக்கியதாக அவற்றை அமைத்தார்.காலப்போக்கில் பல கைகள் மாறிப்போன அந்த மாளிகைகள் பழைய கலாசாரத்தைப் பறைசாற்றும்  எச்சங்களாக,சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அருங்காட்சியகங்களாக மட்டுமே தற்போது விளங்கி வருகின்றன.

நாங்கள் சென்றது...அவ்வாறான ஹவேலிகளில் ஒன்றான 
பட்வோன்-கி-ஹவேலி. ஜெய்சால்மர் மாளிகைகளில் மிகப் பெரியதென்றும், மிகச் சிறப்பு வாய்ந்த‌ விரிவுபடுத்தப்பட்ட மாளிகை என்றும் சொல்லப்படும் இதன் அழகுபடுத்தப்பட்ட ஐந்து-மாடி வளாகத்தை முடிக்க ஐம்பது வருடங்கள் தேவைப்பட்டதாகக்கருதப்படுகிறது.

குறுகலான சந்துப்பகுதியில் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு முன் கலைப்பொருள்களையும்,ராஜஸ்தானிப்பாணியிலான தலைப்பா குல்லாய்,பைகள்,உடைகள் ஆகியவற்றை விற்கும் அங்காடிகள்...சுற்றுலா இடங்களுக்கே உரிய உள்நாட்டு,வெளிநாட்டுப்பயணிகளின் நெரிசல்....
உள்ளே செல்லவும்,படம் எடுக்கவும்  நுழைவுச்சீட்டுகள். ஜெய்ப்பூர் அரண்மனை போலவே இவைகளும் கூட அரசின் அல்லது தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டில் இன்னும் வந்திராததால் தனியார் நிர்வாகத்தில் அவர்கள் வைத்ததே சட்டம் என்பதோடு...மட்டுமல்லாமல்...பயணிகளை உள்ளே சீராக அனுப்புவதிலும்,வெளியேற்றுவதிலும் கூடக்குழப்பம்தான்....!


நான்கு கைத் தாழ்வாரம் வைத்த பழங்கால வீடுகள் போலச் சதுரம் சதுரமாக அடுக்கடுக்கான 5 தளங்களோடு ஒடுக்கமாகவும்,உயரமாகவும் அமைந்திருந்தது அந்த ஹவேலி. 

பத்வாக்கள் வாழ்ந்த ராஜபோக வாழ்க்கைக்கு அடையாளமாக அவர்கள் உடுத்த ஆடை அணிகலன்கள்,பயன்படுத்திய சமையல் சாதனங்கள், 


போர்க்கருவிகள்,தளவாடங்கள்,சேகரித்திருக்கும் ஓவியங்கள்,படங்கள்,
பாலை மணலூடே குழலூதும் இசைக்கலைஞர்

மிகப்பெரிய ஹுக்கா குழல்
சிற்பங்கள்,வீட்டுக்குள்ளேயே கோயில்கள் என ஒவ்வொரு தளமும் ஒரு அருங்காட்சியகத்தின் பாணியிலேயே அமைந்திருந்தது....



4,5 தளங்களுக்கு மேலேறிப்பார்த்தபோது கோட்டையின் காட்சி மிகத் தெளிவாகப்புலப்பட்டது.கோட்டையில் மியூசியமாக்கப்பட்டிருக்கும் ஒரு சில பகுதிகளைத் தவிரப் பிற பகுதிகளில் அரசுக்குடியிருப்புக்களும்,தனியார் குடியிருப்புக்களும் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் தற்போது உள்ளதாகக் கூடவந்த எங்கள் விருந்தினர் விடுதியின் காப்பாளர் கூறினார்.அது உண்மைதான் என்பதைக் கோட்டையை ஒட்டிய  கீழே உள்ள வீடுகளில் உலர்ந்து கொண்டிருந்த துணிகள் மெய்ப்பித்துக்கொண்டும் இருந்தன.தொல்பொருள்துறை இதில் ஏன் கருத்துச் செலுத்திக் காக்கத் தவறியது என்னும் கேள்விக்கு மட்டும் எங்குமே விடை கிடைக்கவில்லை.

பத்வா ஹவேலி மேல்தள உச்சியிலிருந்து....
தில்லி வந்தது முதல் கடந்த 6,7 ஆண்டுகளாக இது போன்ற அரண்மனைகள்,அருங்காட்சியகங்கள் போன்றவற்றையே மிகுதியாகப் பார்த்துப்பார்த்து அலுத்துப்போயிருந்த குழந்தைகள் இயற்கையான மணல் மேட்டுக்குப்போவது எப்போது என நச்சரிக்கத் தொடங்க....பாலைமணலிலிருந்து சூரிய அஸ்தமனம் காணும் அரிய காட்சியைத் தவற விட்டுவிடக்கூடாதே என்ற பதைப்பும் கூடவே சேர்ந்து கொள்ள.....ஜெய்சால்மரிலிருந்து கிட்டத்தட்ட 42 கி.மீ தொலைவில் இருப்பதும் தாவரங்கள் சிறிதும் அற்ற தார்ப்பாலை மணல்குன்றுகளுமான
சாம் மணல் திட்டுக்களை நோக்கி விரைந்தோம்.
சாம் மணல் திட்டு[நான் எடுத்த படம்]

[பயணம் தொடரும்..]

இணைப்பு;
ஒரு பாலைப்பயணம்-1




26.11.12

ஒரு பாலைப்பயணம்-1

பாலைப் பெருவெளியில் 
பேரனுடன்....


தமிழ் நாட்டில் காணக் கிடைக்காதது பாலைநிலம்.பாலை என்றதுமே நம் மனதில் இயல்பாக வந்தமரும் ராஜஸ்தானின் தார் பாலைவனம்,அரேபியப்பாலை வனங்கள் போன்ற  நிலச்சித்திரங்கள்,காட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை.இங்கு நாம் காண்பதெல்லாம் வற்றிப்போன தாவரங்களும்,வளம் இழந்து வறண்டு போய் மொட்டையாய்க்காட்சியளிக்கும் மலைகளும் மட்டுமே.அவற்றையே பாலையென்று குறிப்பிடுகிறோம் நாம்.

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நானிலப் பாகுபாடுகள் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் பாலையை ‘நடுவணது’ என்ற சொல்லாலேயே குறிக்கிறார்.தமிழகத்தைப்பொறுத்தவரை பாலை என்பது ஒரு தனிநிலமாக இல்லை என்பதையும் காட்டுநிலமாகிய முல்லையும்,மலை சார்ந்த குறிஞ்சியும் தங்கள் வளம் குன்றிப்போகும்போது வெறுமையும் வறட்சியுமாய்ப் பாலையாய்த் திரிபடைகின்றன என்றும் அவர் அறிந்து வைத்திருந்ததே அதற்கான அடிப்படை.
பழந்தமிழ் இலக்கியங்கள் பாலை என்ற பெயரில் சுட்டுவதும் அவ்வாறான நிலப்பகுதிகளையே.
முல்லையென்ற காட்டு நிலமும் ,குறிஞ்சி என்னும் மலைநிலமுமே படிப்படியே பாலையாகத் திரிந்துபோகின்றன என்ற
தொல்காப்பியத்தின் கருத்தை
‘’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்’’
என்னும் வரிகளில் மேலும் விளக்கமாகவும்,நுணுக்கமாகவும் விவரிக்கிறது சிலப்பதிகாரம்.

பாலைப்பெருமணல் வெளியைத் திரைப்படக்காட்சிகளிலும் புகைப்படங்களிலும் மட்டுமே அதுவரை கண்டிருந்த நான் இம்மாத நடுவில் எங்கள் ஜெய்சால்மர் பயணம் உறுதியான பிறகு  புதிதான ஒரு நிலவியல் காட்சியைக்காணப்போகும் பரவசத்தில் கனவு காணத் தொடங்கியதோடு, இணையத்தில் அது சார்ந்த செய்திகளையும் திரட்டத் தொடங்கினேன்.

முழுமையும் காரிலேயே செல்வதான எங்கள் பயணத் திட்டம்,அலுவலக,பள்ளி வேலை நாட்களால் நான்கு நாட்கள் என்று மட்டுமே எல்லை கட்டப்பட்டிருந்தது ; செல்ல வேண்டிய தொலைவோ  மிகவும் கூடுதலாக - கிட்டத்தட்ட 900கி.மீ வரை நீள்வது [சென்று திரும்பும் தூரம் கிட்டத்தட்ட 1800 கி.மீ] என்பதால் வழியிலிருந்த ஜெய்பூர்,ஜோத்பூர் ஆகிய இடங்களில் இரவுநேரத் தங்கல் மட்டுமே சாத்தியமாயிற்று.மேலும் ஜெய்ப்பூர் முன்பே இரு முறை பார்த்த இடம்;ஜோத்பூர் பார்க்கலாம் என்று ஒரு சபலம் இருந்தபோதும் ஜெய்பூர்-ஜோத்பூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், பயணத்தைப் பல மணி நேரம் தாமதப்படுத்த இம்முறை ஜெய்சால்மரை மட்டுமே ஒற்றை இலக்காக வைத்துக் கொண்டு அதற்கு முதன்மை தர முடிவெடுத்தோம். பாலைப்பகுதிகளுக்குச் செல்வதற்குக்  குளிர் இலேசாகத் தொடங்கி வெயில் மட்டுப்பட்டிருந்த இந்தப்பருவநிலையே உகந்தது என்பதால் இம்முறை நழுவவிட்டால்  அங்கே திரும்பச்செல்வது கடினம் என்பதும் அதற்கு ஒரு காரணம்.

வெள்ளி மாலை கிளம்பி இரவு ஜெய்பூர்;சனிக் கிழமை முழுவதும் பயணித்து இரவில் ஜோத்பூர் ;மறுநாள் விடியற்காலை ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மரை நோக்கி என்று எங்கள் பயணம் ஒன்றரை நாட்களுக்கும் மேலாக நீண்டு கொண்டே சென்றது.

பயணப்பாதையில் ஆர்வமூட்டும் சுவாரசியங்களைக் கொண்டிருந்தது ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் சாலைதான்.சமகாலத்து அதிவிரைவு நெடுஞ்சாலைகள் போல இல்லாவிட்டாலும் கூட மிக விரைவாகப் பயணிக்க முடிந்ததும் அந்தச் சாலையிலேதான்.

ஜோத்பூரிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே வெள்ளிய மணல் பரப்பையும், ஒரு சில வறண்ட தாவரங்களையும் இருபுறமும் கொண்டிருப்பதும், நம்மை ஜெய்சால்மர் நோக்கி இட்டுச் செல்வதுமான அந்த மிக நீண்ட பாதை வந்து விடுகிறது...அப்புறம்...திருப்பங்களோ வளைவுகளோ அதிகம் இல்லாமல் நீ.....ண்....டு சென்று கொண்டே இருக்கிறது அந்த சாதாரணத் தார்ச் சாலை.






சாலையின் இருபுறமும்
மணல் மேடுகள்..பாலைத் தாவரங்கள்
வறண்டு வெளுத்த மணல் வெளிகளுக்குள் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்த அந்தச் சாலை, கொல்லென்று வெளுத்துப் போன ஒரு மூதாட்டியின் நரைமுடிக்கு நடுவே சீராகப் பராமரிக்கப்பட்டுச் சமமாக வகிரப்பட்டிருக்கும் வகிடு போல நீண்டு போவதாக எனக்குத் தோன்றியது.


ஒரு கட்டத்தில் இது முடிவே அற்றதோ என்னும் மன மயக்கத்தைக் கூட ஏற்படுத்தி விடும் அந்த நீண்ட சாலையின் குறுக்கே அவ்வப்போது மயில்களும்,மான்களும் வந்து ஜாலம் காட்டி விட்டுச் செல்கின்றன.அத்கமான போக்குவரத்து அற்ற சாலை என்பதால் அதிவேகமாக விரையும் வாகங்களின் அடியே பரிதாபமாக நசுங்கிச் சாகும் ஜீவன்களையும் பார்க்க முடிந்தது.
மர நிழல்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்பாரம் சுமக்காத ஒட்டகங்கள் 
குறிப்பிட்ட இந்தச் சாலையில்தான் குறுக்கிடுகிறது இந்தியா அணுஆயுத சோதனையை நிகழ்த்திப் பார்த்த பாலை நிலமான போக்ரான்.
போக்ரான் அருகே....
அதற்கான அடையாளங்கள் நினைவுச்சின்னங்கள் என எதுவும் அந்தச் சாலை வழியில் இல்லாமல் [ஒருக்கால் சற்று விலகி இருக்கக்கூடும்] சின்னதொரு நகரமாக சுற்றுலாப்பயணிகளின் சோர்வு தீர்க்கும் உணவகங்கள்,தாபாக்கள் நிறைந்ததாக இருக்கும் போக்ரானில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.இம்முறை ராஜஸ்தான் பயணத்தில் வயிற்றுக்குத் தொந்தரவு தராத போஹா [நம்மூர் அவல் உப்புமா] பல இடங்களிலும் மிகச் சுவையாகக் கிடைத்ததால் வயிற்றுப்பிரச்சினையின்றிப்பயணம் செய்ய முடிந்தது.

முற்பகல் 11 மணியளவில் ஜெய்சால்மர் நகரை வந்தடைந்தோம்;ஜெய்ப்பூர் நகரம் இளம் சிவப்பு வண்ணத்தைத் தன் அடையாளமாகத் தரித்துக் கொண்டு’பிங்க் சிடி’என்று பெயர் பெற்றிருப்பதைப்போலச் சூரிய ஒளியில் பொலியும் பொன்மணல் நிறத்தில்- இளம் மஞ்சள் வண்ணக் கட்டிடங்களையும் வீடுகளையும் கொண்டதாக-பொன் நகரம் எனப்பெயர் பெற்றிருப்பது ஜெய்சால்மர்.

நகரத்தின் சாலைகளைப்பிரிக்கும் தடுப்புக்களும்,

வங்கிக் கட்டிடங்களும் கூட ராஜஸ்தானியக் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்திருப்பது புராதன மரபுகளைப் பேணிப் போற்றிக் கொண்டாடும் அந்த மக்களின் மனோபாவத்துக்கு ஒரு சான்று.

நெடுந்தூரப் பயணக்களைப்புத் தீர ஒரு குளியல் போட்டு விட்டு உடன் கிளம்ப ஆயத்தமானோம்.ஜெய்சால்மர் கோட்டையை ஒட்டியிருந்த ராஜஸ்தானிய உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டோம்; சௌகிதானி என்று அதைச் சொல்கிறார்கள்;அந்த மண்ணின் பாரம்பரிய ஆடல் பாடல் கைவினைப்பொருட்கள்,வீடுகளோடு - அந்த மண்ணின் மணத்தோடு சுற்றுலாப்பயணிகளைக் கவர அங்கே கடைப்பிடிக்கப்படும் உத்திகளில் இதுவும் ஒன்று.

அங்குள்ள கோட்டை கொத்தளங்களைப் பார்ப்பதை விடவும் மணல் வெளியைக் காண வேண்டுமென்பதிலும், பாலைப்பெருநிலத்துக்கு எப்போது செல்லப்போகிறோம் என்பதிலுமே எங்கள் அனைவரின் கவனமும் குவிந்திருந்தாலும் மாலை நான்கு மணிக்குப் பிறகு அங்கே செல்வதே இனிமையாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் நானும் குழந்தைகளும் ஜெய்சால்மர் ஊருக்குள் இருந்த பத்வா ஹவேலிக்குள் விரைவாகச் சென்று கண்டு வந்தோம்....
[பயணம் தொடரும்..]



15.11.12

வைகை பெருகி வர…


‘’ புள்ளே நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா..? வைகை அணையிலே தண்ணியைத் தொறந்து விடப்போறாங்க…சாயந்திரத்துக்குள்ளே ஊருக்குள்ளே தண்ணி வந்திடும்னு எத்தினி வாட்டி தமுக்கடிச்சு சொல்லிட்டுப் போறாங்க…நீ பாட்டுக்குக் குந்திக்கிட்டிருக்கே..’’
‘’இப்ப என்னை என்னய்யா செய்யணும்ங்கிறே..’’-அவள் கண்களின் தீனமான பார்வை அவனை ஒருகணம் நெகிழ்த்தி விட,கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.


‘’இத பாரு..நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்….சாமான்,சட்டி எல்லாத்தையும் நான் ஒரு சாக்குப்பையிலே தச்சு நம்ம வாத்தியார் வீட்டிலே போட்டுட்டு வந்திட்டேன்.மேலத் தெருப்பள்ளிக்கூடத்திலே தங்கவும்,சாப்பிடவும் வசதி செஞ்சு கொடுக்கிறாங்களாம்….பேசாம புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு’’
‘’அப்ப..வீட்டை அப்படியே விட்டுட்டுப் போயிடறதா..’’
‘’ஆமாம்..பெரிய வீடு….செமெண்ட்டும் தேக்கும் எளச்சு நீ கட்டின பங்களா பாழாப்போகுதாக்கும்..பாத்துப்பாத்துக் கட்டி வச்சவங்க எல்லாருமே இன்னிக்கு உசிர் பொளச்சாப் போறும்னு ஆலாப்பறக்கிறாங்க..நீ என்னடான்னா இந்த மண்குச்சை நெனச்சு மூக்கைச் சிதிக்கிட்டுக் கெடக்கே..’’


மறு வார்த்தை பேசாமல் முத்தம்மா எழுந்து கொள்கிறாள். தந்தையின் தோளில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து கொள்கிறான் மூத்த பயல் ரங்கன். மாற்றுப்புடவையும்,குழந்தை துணிமணிகளும் அடங்கிய ஒரு கித்தான் பையைத் தூக்கிக் கொண்டு,இடுப்பில் கடைக்குட்டி செல்வியை இடுக்கியபடி அவள் புறப்படுகிறாள்.கிளம்புமுன்,தனக்கு இத்தனை நாள் புகலிடம் கொடுத்து அரவணைத்துக் காத்த அந்த மண்குடிசையை அன்போடு,ஆசையோடு..ஏக்கத்தோடு ஒரு முறை பார்க்கிறாள்.
அவளைப்பொறுத்தவரை வெறும் மண்குச்சு மட்டும்தானா அது….? 

அவள் கனவுகளின் சொர்க்கமாய்..சில நனவுகளின் நிஜமுமாய்..அவளுக்கென்று அமைந்த அந்தரங்கமான ஒரு அந்தப்புரமாய்..அவளே தனியொரு ராணியாய் அரசோச்சிய மாளிகையாய்…எல்லாமாய் இருந்த ஒன்றல்லவா அது…..?


கனக்கும் தலைச்சுமையுடன் கழுத்தளவு,இடுப்பளவு நீரில் நனைந்தபடி நிவாரணமுகாமை நோக்கி நடக்கும் கூட்டத்துடன் அவர்களும் சங்கமித்துப் போகிறார்கள்.கால்கள் இயந்திர கதியில் நடந்தாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஒன்றை வலுக்கட்டாயமாகப் பிய்த்தெறிந்து விட்ட சோகம்..திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு வெறிச்சோடிப்போன மனத்தோடு திரும்பும் கையாலாகாத நிர்க்கதித்தன்மை இவையெல்லாம் நிரந்தரமாக அவளைத் தொடர்ந்து வருகின்றன.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’வாடி மருமவளே…வலது காலை எடுத்து வச்சு உள்ளாற வா..’’-புதுப்பொலிவோடு புது மருமகளாய் அவன் கரம் பற்றி அந்த வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த அந்த நாள் நினைவுகளில் அமிழ்ந்து போகிறாள்.
‘’அய்த்தே….நீங்க கொடுத்து வச்சவுகதான்…புது வீட்டுக்குக் குடி போன முகூர்த்தம் வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு மருமவளையும் கொண்டாந்திட்டீங்களே..’’
‘’மாத்திச் சொல்லாதேடி கூறு கெட்டவளே…! எல்லாம் என் மருமவளை நிச்சயம் பண்ணின வேளைதான்….பொறம்போக்கு நெலத்திலே ஒரு குடிசையாவது போட்டுக்க முடிஞ்சது…அததுக்கு நேரம் காலம் வரணுமில்லே..’’


முத்தம்மா புகுந்த வேளை பொன்னாய்ப்பொழியா விட்டாலும் பொங்கித் தின்னச் சோறும் தங்கியிருக்க நிழலுமாவது நிரந்தரமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஏழைக்குடும்பம் நிறைவு காண்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ந்தா இந்த ரொட்டியை சாப்பிட்டுப் படுத்துக்க..அப்பறமா கனாக்காணலாம்’’
‘’எனக்கு வேணாம்’’
‘’என்னடா இது பெரிய ரோதனையாப்போச்சு…புள்ளைங்க,நான் எல்லாரும் பக்கத்திலேயே இருக்கோம்.அவங்கவங்க சொந்த ஜனங்களை சாமானங்களப் பறி கொடுத்திட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்காங்க.நமக்கு அந்தக்கவலையும் இல்லை….இதிலே உனக்கு என்ன எளக்காரமாப்போச்சுன்னு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கே நீ..’’
’’ஏன்யா மெய்யாலுமே சொல்லு…அத்தை மட்டும் உசிரோட இருந்தா அந்த வீட்டை முளுக விட்டுட்டு நாம மட்டும் வர்றதுக்கு சம்மதிச்சிருக்குமா..’’


’’இத பாரு முத்தம்மா சும்மா அதயே பெனாத்திக்கிட்டுத் திரியாதே.. ஒரு வகையிலே அந்த வீடு இடிஞ்சு போனாக் கூட நமக்கு லாபந்தான்…இந்தக் குச்சுக்கு நாம செலவளிச்சதை விட சாஸ்தியான பணத்தை சர்க்காரு கிட்டேயிருந்து ஈட்டுப்பணமா வாங்கிடலாம்.அதை வச்சு வேற இடத்திலே இன்னும் வசதியா ஒரு வீடு கட்டிக்கலாம்….அதையே நெனச்சு மறுகாம செத்தே படு’’
‘’மச்சான் நீ கூடவா இப்படிப்பேசறே…நம்ம குடும்பத்தோட ஒண்ணா ஒரு கொளந்தை மாதிரி பாத்துப் பாத்து நாம வளத்த அந்த வீட்டை விட இன்னிக்கு வரப்போற ஈட்டுப்பணம் பெரிசாப்போயிடிச்சா உனக்கு..’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வனும் அவளுமாய் வியர்வை நீரூற்றித்தான் அதை வளர்க்கிறார்கள்.அவள் வந்த புதிதில் நான்கு கம்புகளும் உயரமில்லாத தாழ்ந்த மண்சுவருமாய் இருந்த வீடு,அவர்கள் உழைப்பின் ஊக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கிறது.


வீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாக இருக்கும் வேளையில் அவள் மண் சுமந்து வந்து தர,அவனும் அவளுமாய் சுவரை உயர்த்துகிறார்கள்.ஒரு காற்றடித்தால் பறந்து போய்விடும் ஓலைகளை மாற்றி விட்டு ஓடு வேய்வதற்குத் தன் பிறந்த வீட்டில் போட்ட இரண்டு பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைக்கச் சொல்கிறாள் அவள்.
‘’மண்ணு வீட்டுக்கு ஓடு போடறதுக்குத் தங்கச் சங்கிலியை வைக்கறதா…ஒங்கிட்டே உள்ளதே இந்த ஒரு நகைதான் நீ போட்டுக்க ஆத்தா..வேண்டாம்’’
அத்தை அவள் செயலைத் தீவிரமாய் மறுக்கிறாள்.
‘’அத்தை நாம எப்படியும் சங்கிலியை மீட்டுக்காம இருக்கப்போறதில்லை….அட..அதுக்காகவாச்சும் இன்னும் கொஞ்சம் ஒடம்பு வணங்கி ஒளைச்சிட்டுப் போறோம்.ஆனா ஓடு போடறதுக்காக அப்படி ஒளைக்க வணங்குமா….இல்லே அப்படி சிறுக சிறுக சேத்து வச்சாதான் செலவளிக்காம ஊறுகா போட்டு வைக்க முடியுமா..’’
எப்படியோ மல்லுக்கு நின்று நினைத்ததைச் சாதித்து விடுகிறாள்.


‘’ஏன் மச்சான் பணக்காரங்க வீட்டுக்குப் பேர் வைக்கிற மாதிரி நாம கூட நம்ம வீட்டுக்குப் பேரு எதினாச்சும் வச்சா என்ன’’
‘’போடி பைத்தியக்காரி…அவங்க பேரு வைக்கிறது தங்களோட அந்தஸ்தைக் காட்டிக்க…நமக்கு அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டிக்கிற மாதிரி என்ன இருக்கு’’

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’ந்தா முத்தம்மா…செல்லி அளுவுது பாரு…அதுக்குப் பாலு கூடக் குடுக்காம என்ன ரோசனை ஒனக்கு’’
-மூலைவீட்டு முனியம்மா பாட்டி முத்தம்மாவைக்கடிந்து கொள்கிறாள்.

சுய உணர்வு பெற்றவளாய்க் குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்க்கிறாள் அவள். எங்கும் முகங்கள்! வாடி இருந்தபோதிலும் உயிர் தப்பிய ஆறுதலைத் தெரிவிக்கிற முகங்கள் !வீட்டை விடத் திருப்தியாக ஒருவேளையாவது சாப்பிட முடிந்ததே என்ற அற்ப சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற சில பிஞ்சு முகங்கள்….நாளைய கவலையை ஒதுக்கி விட்டு இன்றைய இந்தப் பொழுதில் நிம்மதி காணும் முகங்களுக்கிடையே முத்தம்மா மட்டும் வேறுபட்டு நிற்கிறாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டு வேயப்பட்டு உயரமாய் நிற்கும் அந்த வீட்டைப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் அவள்.சுற்றிலும் வேலிக்காத்தான் செடிகள் மதிலாய் வளர்ந்திருக்க படல்கதவு ஒன்றையும் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.என்றைக்கோ அத்தை சப்பிப்போட்ட மாங்கொட்டை செடியாகி,மரமாகிப்பூக்க ஆரம்பித்திருக்கிறது.தவிர அவளே கொத்திப்போட்ட கீரைப்பாத்திகள்,கொய்யா மரம்,இன்னும் மல்லிகைப்பந்தல்!

’’சாமர்த்தியக்காரிதாண்டி நீ…தம்மாத்தூண்டுக் குச்சைக் கோபுரமாக்கினதோட தோட்டமெல்லாம் போட்டுத் தோப்புக்கணக்கா ஆக்கி வச்சிருக்கியே...ஹ்ம்…உங்க அத்தை இப்ப இல்லாத்தது ஒண்ணுதான் குறை…’’
‘’செங்கல் சுவரெடுத்துத் தளம் போடணும்னு பாக்கிறேன் முடியலியே ஆயா..’’
‘’தளம் போடாட்டி என்னாடி? அதுதான் சாணம் போட்டுபோட்டுச் சிமிட்டியாட்டம் மொளுகி வச்சிருக்கியே தரையை..’’-முனியம்மா பாட்டி மூக்கில் விரல் வைத்து வியக்கிறாள்.
ஆயாவின் தலை மறைந்ததும் முத்தம்மா ஆத்திரத்துடன் வெடிக்கிறாள்.
‘’மொதல்லே ஒரு பூசனிக்கா வாங்கிட்டு வந்து மூஞ்சி வரைஞ்சு தொங்க விடணும் மச்சான்…அந்தப்பொம்பளையோட பேச்சு ஒண்ணும் சரியில்லை..’’
‘’ஆமா…அவ கண்ணேறு பட்டுதான் ஒன்னோட வசந்த மாளிகை ஆட்டம் கண்டிடப்போகுதாக்கும்’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகாமுக்குள் சில பேர் வேகமாக ஓடி வருகிறார்கள்.அரைத் தூக்கத்திலிருந்த முத்தம்மாவின் கணவன் உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறான்.
‘’ஓடைப்பட்டிக் கம்மா ஒடைப்பெடுத்து வாய்க்காத் தண்ணி நம்ம குப்பத்தைச் சுத்திக்கிடிச்சு அண்ணே..நல்ல வேளை நீ பொளுதோட வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு வந்தே.....நம்ம குப்பன் பய வேலை முடிஞ்சு வாறதுக்குள்ளே வீட்டுக்குள்ளாற தண்ணி புகுந்திடிச்சு…சரித்தான்….உசிரு பொளச்ச மட்டிலே போறுமுன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு இங்கே ஓடியாந்துட்டான்’’
கண்மாய் வெள்ளம் தன் உயிரையே கொள்ளை கொண்டு போவது போன்ற மயக்கத்தில் சரிந்து விழுகிறாள் முத்தம்மா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யற்கையின் ஊழித்தாண்டவம் ஒருவழியாகக்கொஞ்சம் ஓய்ந்திருக்கும் அந்தக் காலைப்பொழுதில் ஒரு பிச்சியைப்போலத் தன் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா . நீர்ச் சுழிப்பில் ஒதுங்கிய தென்னை மட்டைகள்,இளநீர்க்குலைகள்,வாழைத்தார்கள் எல்லாவற்றையும் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறியவள்,அங்கே தன் கனவு மாளிகையின் அஸ்தமனக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
ஓடைத் தண்ணீர் அகழியைப்போல நாலு புறமும் சூழ்ந்திருக்க…நடுவே நான்கு மூங்கில் கழிகள்…,மேலே இன்னும் பறக்காமல் பலங்காட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் சில ஓடுகள்,மத்தியில் குவிந்து கிடக்கிற உடைந்து போன ஓட்டுத் துண்டுகள்,மரச்சட்டங்கள்!அப்பளமாய் நொறுங்கிப்போக் கிடக்கிற தன் சாம்ராச்சியத்தின் கோர முகம் கண்டு அருவருப்போ வெறுப்போ கொள்ளாமல் அந்த முழங்காலளவு நீரில் அவள் மெள்ள அடியெடுத்து வைத்து வருகிறாள்.சாணமிட்டு மெழுகி அவள் கோலமிடுகிற முற்றம்,பத்து வீடு கேட்கிறாற்போல ரங்கன் பயல் வாய்ப்பாட்டை உருப்போடுகிற அந்த உயரமான திண்ணை,அவள் கணவன் ஆசையோடு வாங்கிப்போட்ட நார்க்கட்டில் கிடக்கிற மூலை,வாய்க்கு ருசியாய் அவள் பலகாரம் சுட்டுப்போடுகிற சமையலறை ஓரம், அத்தை தன் இறுதி மூச்சை விட்ட வீட்டின் கீழண்டைக்கோடி,ரங்கனையும்,செல்லியையும் ஈன்ற களைப்பை ஆற்றிக் கொள்ள அவள் இளைப்பாறியிருந்த வீட்டின் தெற்குப்பார்த்த வாயில்புறம்……இன்னும்,இன்னும்..இன்னும் மறக்க முடியாதபடி அவள் நினைவுச்சுவட்டில் பதிவாகியிருந்த வாழ்வின் சில கணங்கள்,அவற்றோடு பிணைந்த அந்த வீட்டின் பகுதிகள் எல்லாம் அந்தக் கூளத்தினூடே அவள் கண்ணுக்கு மட்டும் தனித்தனியே எழுதி வைத்த ஓவியங்களாய்க்காட்சி தருகின்றன.
‘’வீடுங்கிறது வெறும் உயிரில்லாத ஒருபொருள் மட்டும்தானா..நாம வேணுமானா உயிரில்லாத பொருள்களால அதைக் கட்டியிருக்கலாம்….ஆனா..மனுஷ உணர்வுகளினாலே அதுக்கு உயிரூட்டின பிறகும் சீவனே இல்லாத ஒரு மரக்கட்டையா……மண்ணாலேயும் கல்லாலேயும் ஆன ஒரு வெறும் பொருளா அதைப்பாக்க மனுசங்களாலே எப்படி முடியுது?’
இப்படியெல்லாம் பேசப் படிக்காத முத்தம்மாவின் பாமர மனது ஊமையாய்க் கண்ணீர் வடிக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’முத்தம்மா! ஒன்னத்தான் புள்ளே ம்…..கெளம்பு கெளம்பு…வெள்ளம் வடிஞ்சாச்சு இன்னும் எத்தினி நாளைக்கு இங்கே வச்சு சோறு போடுவாங்க….வூட்டுக்குப் போகலாம்..பொறப்படு’’

‘’வூடா அது எங்கே இருக்கு?’’

‘’என்னா நீ..கம்மாத் தண்ணி சுத்திக்கிட்டிருக்குதுன்னு அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து பூட்டியா..?நல்ல காலம்..மதகுக்கு அப்பால நம்ம சந்து இருக்கிறதால அதிலே உள்ள நம்ம குடிசைங்க மட்டும் பொளைச்சிடிச்சு’’

‘’………………………………………’’

‘’என்னா புள்ளெ அப்படிப் பாக்கிறே….நான் சொல்றது நெசந்தான்..! நீ செஞ்ச புண்ணியம்….எங்க ஆத்தா ஆசை இதெல்லாம் வீணாப்போயிடுமா?’’
வியப்போடு கணவனைப் பார்க்கிற முத்தம்மா..,குழந்தைகளை ஆசையோடு நெஞ்சில் அழுத்தியபடி தன் மண்குச்சை நோக்கி…வெறி பிடித்தவளாய் மாளாத காதலோடு ஓடுகிறாள்.


அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அப்போதைக்கு வேறு இடத்தில் ஒதுங்கிக் கொண்டாலும் வெள்ளம் வடிந்ததும் முத்தம்மா ஓடி வருவது என்னவோ இந்தக் குடிசையை நோக்கித்தான்! அவளுடைய உலகம் ஸ்தாபிதமாகி இருக்கிற இந்த வீடு மீளாத துன்பத்தையே மீண்ண்டும் மீண்டும் தந்தாலும் அவளைப் பொறுத்த வரை அது ஒரு மீண்ட சொர்க்கம்தான்!

14.11.12

’தேவந்தி’-வானொலி மதிப்புரை

தேவந்தி சிறுகதைத் தொகுப்பு  குறித்து தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும்’திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’வானொலி நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பேரா.நாச்சிமுத்து அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

தமிழிலே  சிறுகதை உரைநடை வடிவில் இன்றைய முறையில் தோன்றி வளர்ந்த  வரலாறு சுமார்  150 ஆண்டு காலப் பழமையுடையது.உரைநடை வடிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியப் பாதிரியார் எழுதிய பரமார்த்த குரு கதை வந்தபோது உரைநடை வடிவில் கதை எழுதும் மரபு தொடங்குகிறது.

தற்காலச் சிறுகதை தமிழில் எழுவதற்கு முன்பே  வங்காளம் உருது ,இந்தி போன்ற  பிற இந்திய மொழிகளில் தோன்றி வளர்ந்து வந்துள்ளது.வங்காளியில் தாகூர் ,உருது இந்தி மொழிகளில் பிரேம்சந்த் போன்றோர் நல்ல கதைகளை எழுதிய காலத்தில் பாரதி,வ.வே.சு.அய்யர்,மாதவையா போன்றவர்கள் வங்காளிக் கதைகளை மொழிபெயர்த்தும் அவற்றின் மாதிரியில் புதிதாக எழுதியும் தமிழில் சிறுகதைக்கு வித்திட்டிருக்கிறார்கள். வங்காளம் ,இந்தி போன்ற மொழிகளில் சிறுகதை சிறப்பாக வளர்ந்த காலத்தில் சிறுகதை ஏன் வளர்ச்சி பெறாமல் இருந்தது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அதுபோன்றே சமூக யதார்த்த வாதம் மேற்கத்திய நாடுகளிலும் சோவியத்திலும் வளர்ந்த காலத்தில் இந்தி போன்ற மொழிகளில் 1920களிலேயே பிரேம்சந்த் போன்றவர்கள் அம்முறையில் கிராமத்து மனிதர்களையும் உழைக்கும் சாதாரண மக்களையும் கதை மாந்தர்களாக வைத்துச் சிறந்த கதைகளை எழுதிவிட்டார்கள்.நாம் அதற்கு 1930 களின் இறுதிவரை காத்திருக்க வேண்டி வந்தது.கு.ப.ரா.,புதுமைப் பித்தன் போன்றவர்கள் மணிக்கொடிக் கால கட்ட இதழ்களிலும்  கல்கி போன்றவர்கள் ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் மூலமும் அண்ணா போன்றவர்கள் திராவிட இயக்க இதழ்களிலும் தமிழ்ச் சிறுகதைகளை எழுதி வெளியிட்டு சமுக யதார்த்த வாதம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள்.
 
அதற்குப் பின் தமிழ்ச் சிறுகதைகள் பன்முகத் தன்மையுடன் வளர்ச்சி பெற்றதை நாம் அறிவோம்.ஜெயகாந்தன் ,அகிலன் ,மௌனி,தி ஜானகி ராமன்,லா.ச.ராமாமிர்தம், நா.பார்த்தசாரதி,அழகிரிசாமி,ராஜநாராயணன்,சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ,எஸ்.எஸ்,தென்னரசு,பா.செயப்பிரகாசம்,சா.கந்தசாமி, பாவண்ணன் போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையில் சமுக யதார்த்தவாதம், கற்பனை வாதம் , மனவெளி உலகம், கிராமிய உலகம் என்று பலவகை அனுபவக் களங்களில் கதைகளை எழுதியுள்ளார்கள்.இன்று தலித்தியம் பெண்ணியம் போன்ற களங்களில் இமையம், பெருமாள் முருகன் ,பாமா  போன்றவர்கள் கதைகளைப் படைக்கின்றனர்.
 
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண்களுக்கும்  பங்கு உண்டு.அனுத்தமா, கிருத்திகா  போன்ற பழைய  பெண் எழுத்தாளர்களும் பின் சூடாமணி ,லட்சுமி ,ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களும் சட்டென்று  நினைவுக்கு வருகிறார்கள்.இவர்கள் எழுத்து பெரும்பாலும் நகரங்களைச் சார்ந்த படித்த நடுத்தரக் குடும்பப் பெண்களின் வாழ்வை மையமிட்டதாக  அமைந்திருந்தன. இன்றைய பெண் எழுத்தாளர்களில் சிவசங்கரி, உஷா சுப்பிரமணியன்,வாஸ்ந்தி ,காவேரி ,செண்பகம் ராமசாமி ,அம்பை ,சுதந்திர தேவி,திலகவதி,சிவகாமி ,எம்.ஏ.சுசீலா என்று பலரும் எழுதிவருகிறார்கள்.நான் இங்கு குறிப்பிடும் பட்டியல் முழுமையானதல்ல,விடுபட்ட பெயர்கள் பலவும் உண்டு.இந்த எழுத்தாளர்கள் பெண்ணியம் தலித்தியம் சார்ந்த கருத்துப் பின்புலத்தில் தங்கள் இலக்கிய முயற்சியைச் சிறுகதை வழி செய்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எம்.ஏ.சுசீலா அவர்கள்.
 
எம்.ஏ.சுசீலா அவர்கள் தாம் 1979 முதல் 2009 வரை எழுதிய 36 கதைகளைத் தொகுத்துத் தேவந்தி என்ற பெயருடன் வடக்கு வாசல் வெளியீடாக 2011 இல் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது புது தில்லியில் வசித்து வருகிற அவர்கள்  முன்பே நான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறார்கள்.அத்துடன் அவர் பியோதர் தஸ்தாவெஸ்கியின் குற்றமும்  தண்டனையும், அசடன் என்ற இரு பெரும் நாவல்களை நல்ல தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு மொழிபெயர்ப்புத் துறையிலும் அரும்பணியாற்றி வருகிறார்கள்.தொடர்ந்து அவர்கள் இலக்கியத் திறனாய்வு,மொழி பெயர்ப்பு, படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழில் பெண்ணியம் சார்ந்த படைப்புக்களைப் படைப்பதிலும் பெண்ணியத் திறனாய்வு பற்றி எழுதுவதிலும் வல்லவரான அவர் எழுதிய  விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்(1996),பெண் இலக்கியம் வாசிப்பு(2001),தமிழ் இலக்கிய  வெளியில்  பெண்மொழியும் பெண்ணும்(2006) போன்ற நூல்கள் அவருடைய பெண்ணியத் திறனாய்வு முயற்சிகளை வெளிப்படுத்துவனவாகும்.
 
தேவந்தி கதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலும் பெண்களே கதை மாந்தர்களாக வருகிறார்கள்.தன் கதைப் படைப்புக்களைப் பற்றி ஆசிரியையே கூறும் கூற்று அவர் கதை உலகைப் புரிந்து கொள்ள நமக்குத் துணைசெய்யும்.
’என் வாழ்க்கை அனுபவங்கள் எல்லை கட்டியவை, ஒரு ஆசிரியராக மாணவியரோடு எதிர்ப்பட நேர்ந்த அனுபவங்கள், பெண்ணியத்தில் முனைப்புக் கொண்டதால் நேரிட்ட தாக்கங்கள்,நவீன இலக்கிய மாணவியாகத் தமிழ்ப் புராணங்களையும்,இலக்கியச் செய்திகளையும் மறு ஆக்கம் செய்வதில் கொண்டஆர்வம் ஆகியவற்றையே பெரும்பாலும் கதை வடிவங்களாகப் பதிவு செய்ய நான் முயன்றிருக்கிறேன்.’
 
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் வெற்றியும் தோல்வியும் இனிப்பும் கசப்பும் கலந்தது.அதிலே ஆணாகட்டும் பெண்ணாகட்டும் எல்லோரும் ஒரே மாதிரித்தான்  இவற்றையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டும் என்றாலும் அவரவர் நிலைக்கு ஏற்ப  அனுபவங்கள் மாறுபடும்.இந்தத் தேவந்தி கதைத் தொகுப்பில் பெரும்பாலும் பெண் அனுபவக் கோலங்களை நமக்குக் கதை வடிவில் வடித்துக் காட்டியிருக்கிறார்.பெண் மனம் ,பெண்ணியக் கோபம் என்ற கண்ணாடி வழியே நிகழ்ச்சிகளை அலசிப் பார்க்கும் அவர் சிறுகதைகள் நமக்குப் பல சுவைகளையும் படைத்துத் தருகின்றன.
 
இந்தத் தொகுப்பின் முதல் கதையான ஓர் உயிர் விலைபோகிறது என்ற கதை இத்தொகுப்பின் பாவிகத்தை உட்பொருளை வெளிப்படுத்திவிடுகிறது.ஆன்மப் பறவையாய் இறந்து போய்ப் புகைப்படமாய்த் தொங்கும்  கஸ்தூரி என்ற பெண்ணின் பார்வையில் நினைவோட்டமாய் விரியும் கதை மனதை நெருடுகிறது.செல்ல மகளாய்ச் சீர் செனத்திகளுடன் புக்ககம் சென்ற கையோடு  புற்று நோய் தாக்கிப் பிறந்தகம் வந்து மறைந்து போகிறாள் அவள்.அவள் கணவன் நோயில் கிடந்தவளை எட்டியும் பார்க்காமல் ஈமச் சடங்குக்கும் வராமல் அவள் வேலை பார்த்த அலுவலகத்தில் அவள் சம்பளம் காப்புத் தொகை முதலியன பெற மரணச் சான்றிதழ் பெற மட்டும் வந்து நிற்கிற மனிதாபிமானமற்ற ஈனம் அவள் பெற்றோரைப் போல நம்மையும் நிலை குலைய வைக்கிறது.

சொல்லில் புரியாத சோகங்கள் கதையில் வரும் உமா ஆசிரியை வேலையைப் புனித சேவையாக நினைத்துச் செய்து வருபவள். கை நிறையச் சம்பாதித்துக் கொண்டிருந்த கணவன், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உமாவை -வேலையை விடச் சொன்னபோது சம்மதித்தவள் அதே கணவன் சம்பாத்தியம் குறைந்த நிலையில் அதே வேலையை விடாமல் சேர்ந்து கொள்ளச் சொன்னபோது மறுத்து விடுவதும் பின் வேறு வேலையில் சேர்ந்து கொள்ளலாம் எனச் சமாதானம் சொல்வதும் அவளுள் எழுந்த விடுதலைப் பெண்ணின் கோபத்தால் என்பது நமக்குப் புரிகிறது என்றாலும் இந்த வீம்பு வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனால் கன்னிமை என்ற கதையில் வரும் கல்யாணியின் தர்மாவேசத்தோடு அறச் சீற்றத்தோடு நாம் முற்றாகச் சேர்ந்து கொள்கிறோம்.பெற்றோரின் செல்லப் பெண் புதுக்  கணவனுடன் இன்பமாய் வாழ்வைத் தொடங்கியதுமே பேறாகி விட்டதைப் பெரும் பேறாகக் கருதாமல் சந்தேகக் கணைகளை வீசிக் கருக்கலைப்புச் செய்யச் சொல்லும் வக்கிர மாமியார் ,நாத்தனார் பேச்சைக் கேட்டு ஆடும் கணவனுக்கு அவள் கொடுக்கும் டோஸ்  பிரமாதம்.‘குழந்தை நம்முடையதுதான்ங்கிற நம்பிக்கை மட்டும் உங்களுக்கு இருந்தா…..நான் நரகத்திலே கூட உங்களோட வாழ்க்கை நடத்தத் தயாரா இருக்கேன்.‘ என்று அந்த வாழ்க்கையை உதறித்தள்ளும்  கல்யாணியை  ‘நீதான் விடுதலை பெற்ற வீரப் பெண்மணி‘ என்று  வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.இதைப் போன்ற இன்னொரு துணிச்சலான கதை உயிர்த்தெழல் பலாத்காரத்திலிருந்து பல பெண்களைக் காப்பாற்றிய அனு பெண் வீராங்கனையாகப் போற்றப்படவேண்டிய இளம் மாணவி. .அவள் அந்தச் செய்தியாலேயே திருமணத்திற்குத் தகுதியற்றவளாகப் போய்விடுவாள் என்ற  ஆண்வழிப்பட்ட சமூகக் கோட்பாடுகளின் பிடியிலிருந்து விடுபடுவதே அவளது உயிர்த்தெழல். அதுபோன்றே இருவேறுலகம் இதுவென்றால் ரத்னா தன் காதல் கணவன் இறந்து படுக்கையில் இருந்தபோதும் தன் சக துணை நடிகைகளின் வீட்டில் அடுப்பெரிய வேண்டும் என்பதற்காக நடிக்கச் செல்லும் தியாகம் துணைநடிகையான நம் மனதை வாட்டுகிறது. ரத்னா புதுமைப் பித்தனின் பொன்னகரப் புதுக் கற்புக்கரசியை நினைவூட்டுகிறாள்.இந்த நல்ல கதைகளை இத்தொகுப்பிற்கு அருமையான முன்னுரை அளித்துள்ள பாவண்ணனும்குறிப்பிடுகிறார், [கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்]

இன்னொரு தளத்தில் பொம்பளை வண்டி என்ற கதை, அளவில் சிறியதாக இருந்தாலும் பெண்ணியத் தளத்தில் நினைத்துக் கொள்ள வேண்டிய கதை.குடிகாரக் கணவனின் ‘ பொறுத்துப் போவதுதான் பொம்பிளை ‘என்ற ஆணாதிக்கக் கோட்பாட்டுக் கோணலை எதிர்க்க இயலாத ஈசுவரி என்ற சாதாரணப் பெண் ,பெண்கள் பேருந்தில் ஏறிவரும்போது பிற பெண்களுடன் சேர்ந்து தானும் அதில் ஏற வரும் ஆண்களை ஏற விடாது தடுக்கும் போது வந்து நின்றது அவளுடைய புருஷனுடைய முகம் என்று கதையை ஆசிரியை முடிக்கும் போது பூனைக்கும் காலம் வரும் ரோஷம் வரும்  பெண்ணும் பொங்குவாள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் நுட்பமான கதையாக இது உயர்ந்துவிடுகிறது.

இதே பெண்ணியத் தளத்தில் சில பழைய புராண இலக்கியக் கதை மாந்தர்களை எடுத்து அவர்கள் பற்றிய  கதைகளை பெண்ணிய நோக்கிலும் சமுக நீதி நோக்கிலும் கட்டவிழ்த்து வரலாற்றுச் சிறுகதை போல அவர் எழுதியுள்ள கதைகள் ஐந்து .(1,மானிடவர்க்கென்று பேச்சுப்படில் ,2.புதிய பிரவேசங்கள், 3.சங்கிலி ,4.தேவந்தி.) இவற்றில் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் என்ற கதை ஆண்டாளை மையமாகக் கொண்டது.ஆண்டாள் ’’மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’’என்று பாடியதிலே வேறு ஒரு நுட்பமும் இருந்திருக்கலாம் என்கிறார் கதை ஆசிரியை.அது  அழகும் ஆற்றலும் எல்லாம் இருந்தும் அவள் பிறப்பை வைத்து எழுந்த சாதி குல ஆசாரம் பற்றிவினா எழுப்பும்   உலகியல் மானுடர் அவளைச் சாதாரணப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளாமையும் அவள் அவ்வாறு பாடியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிற பார்வை பெண்ணியமும் சமுக நீதியும் கலந்த பார்வை.

சங்கிலி  என்கிற கதை மாந்தர் பெரியபுராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் மணந்து கொண்ட பெண்கள் மூவரில் ஒருவரான சங்கிலியார் தான்.இக்கதையில் சுந்தரமூர்த்தியாரின் தடுத்தாட்கொண்ட புராணத்திற்கு மரபு தரும்  விளக்கத்தின் புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியை.மூன்று முறை திருமணம் நிகழ்ச்சியை நடத்திய சுந்தரமூர்த்தியாரின் நின்று போன முதல் திருமணத்தின்  மணப்பெண் சடங்கவி சிவாச்சாரியார் மகள் -திருமணம் நின்று போனதால் வாழாவெட்டியானவள் .அவள் மூன்றாம் மணப் பெண்ணான சங்கிலியைச் சந்தித்துப் பேசி இருவரும் இரண்டாம் மனைவியாகிய பரவை நாச்சியாரைச் சந்தித்து அவரைத் தடுத்தாட்கொள்ளப் போவதுதான் கதை,மூன்று பெண்கள் வாழ்வில் விளையாடிய சுந்தரமூர்த்தியார் தடுத்தாட் கொண்ட கதையைப் புரட்டிப்போடுகிற இக்கதை பெண்ணியப் புரட்சிக் கதைதான்.

வாழாவெட்டியாகிப் போன சிலப்பதிகார தேவந்தி கண்ணகியின் தோழி.இவளின் கதையையும் இவ்வாறே மீளாய்வும் மீள் படைப்பும் செய்து ஆண்கள் தன்னலத்தால் வாழ்வு சூறையாடப்பட்ட பெண்கள் மனக்குமுறலாக எதிரொலிக்கிறார் ஆசிரியை.இப்படிப் புராணம் என்ற பெயரில் புனிதப்போர்வையைப் போர்த்திக் கொண்ட புளுகுக் குட்டுகளை அம்பலப்படுத்தும் இக்கதைகள் இத்தொகுப்பின் சிறப்பு என்று நான் சொல்வேன்.இது போன்றே சம்புகன் என்ற சூத்திரன் தவமிருந்து துறக்கம் புகுவது சாத்திர விரோதம் என்று கணையெடுத்து அவனைக் கொன்ற இராமனின் செயலை சாத்திரம் அன்று சதி என்று நம் கதாசிரியை புரட்சிக் குரலில் விளாசும்போது நாமும் அவரைப் பெண்மை வாழ்க என்று கூத்திடுகிறோம்.புதிய பிரவேசங்கள் கதையில் இலங்கையில் நடக்க இருந்த அக்னிப் பிரவேசத்திற்குப் புரட்சிச் சீதை உடன்பட மறுப்பதாகப் புனைந்த ஆசிரியை இராமன் அதற்கு உடன்பட்டதாகக் கூறுவது பிற்காலத்தில் அவரே விதித்த அக்னிப்பிரவேச நிபந்தனைக்கு முரணாக அமைகிறது.கதை கொஞ்சம் மரபுப் பிடியால் சறுக்குகிறதோ என்று தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் ஆசிரியையின் எழுத்தனுபவத்தையே அதாவது பெண் எழுதுவதற்குப் படும் பாட்டையே தடை ஓட்டங்கள் என்று கதை ஆக்கியிருக்கிறார்.பெண் கல்வியை முன்னிலைப்படுத்தும் கண்திறந்திட வேண்டும் கதையும் குறிப்பிடத்தக்கது.இது தொலைக் காட்சி வடிவம் பெற்ற சிறப்புடையது.இன்னும் தாய்மை இளம்பருவத்து நட்பு கணவன் மனைவி உறவின் விரிசல்கள், பெண்களின் எந்திரத்தனமான வாழ்க்கை அதிலிருந்து விடுபடக் கோயில் குளங்களை நாடுதல் போன்றவை பற்றிய கதைகளும் சுவையானவை.ஆசிரியரின் கவனக் குறைவால் குறைந்த மதிப்பெண் பெற்று வாழ்வின் உயர்வை இழக்கிற மாணவன், அரசியல் வாதிகளின் இரட்டைவேடம் எல்லாவற்றையும் நுணுக்கமான கதை ஆக்கியிருக்கிறார் சுசீலா.ஆத்தா என்ற கதை தீவிர வாதத்தைச் சினிமாத்தனமாகப் படம் பிடித்திருப்பது சிறப்பாக இல்லை.சங்கமம் போன்ற மத நல்லிலக்கணக் கதையும் இதில் இடம் பெறுகிறது.ஆசிரியையின் மொழி நடை செறிவானதாகவும் செப்பமாகவும் கதை மாந்தர்களுக்குப் பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது.சில இடங்களில் ஆசிரியர் எடுத்துரைப்பில் பேச்சு நடையின் எளிமையை விட எழுத்து நடையின் இறுக்கம் இடறுகிறது.
பொதுவாகப் புதிய பெண் எழுத்தை அறிந்து கொள்ள ஒரு அருமையான கலைப்படைப்பு தேவந்தி.
ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்.

பி.கு;
நல்லதொரு விமரிசனத்தை அளித்த பேராசிரியர் முனைவர் நாச்சிமுத்து அவர்களுக்கு நன்றி. இதனை ஒலிபரப்பிய தில்லி வானொலிக்கும் நன்றி.அவரது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் சிறுகதைகளில் நான் வலையேற்றியிருப்பவைகளுக்கு உரிய இடத்தில் இணைப்புத் தந்திருக்கிறேன்.


9.11.12

தில்லிகை-நவம்பர் நிகழ்வு

தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
இலக்கியச் சந்திப்பு: 2012/9
பயணம்

தமிழ் இலக்கியத்தில் பயணம் 
அழகு சுப்பையா, இள முனைவர் பட்ட ஆய்வாளர்

பயணங்களால் புதுப்பித்துக் கொள்ளுதல்
கயல்விழி முத்துலெட்சுமி , இணையப் பதிவர்

கைலாசம்: சிவனைத் தேடிச் சீனப் பயணம் 
எம்.ஸ்ரீதரன், இந்திய வெளியுறவுப் பணி  



10 நவம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....