துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.7.11

’தேவந்தி’யின் கணம்...


திரு ஒய்.எஸ்.ராஜன்,சி.டி.சனத்குமார்,தமிழ்ச்சங்கத் தலைவர் 
ஆகியோருடன் மேதகு அப்துல் கலாம்

வாழ்வின் சில கணங்கள் ..என்றென்றும் நினைவுகூரத்தக்க அபூர்வமான வினாடிகளாக வாய்த்து மனதுக்குள் நிலைத்து விடுகின்றன.
அவ்வாறான ஒரு தருணம்...வெள்ளி( 29/7/11) மாலை மேதகு அப்துல் கலாம் அவர்கள் ‘தேவந்தி’ நூலை வெளியிட்ட கணம்...!


சுப்புடு நினைவாய் வடக்கு வாசல் நிகழ்த்திய இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விமரிசகர் சுப்புடு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திரு அப்துல் கலாம் அவர்கள்,அதே அரங்கில் வடக்கு வாசல் பதிப்பக நூல்களை வெளியிட்டதோடு ஒவ்வொரு நூல் குறித்தும் சில குறிப்புக்களைத் தன் உரையில் சேர்த்துப் பேசியது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிட்ட நபர்களைக் கௌரவிக்க வேண்டும் என எண்ணும் அந்த அந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.


எனது ‘தேவந்தி’தொகுப்பை வெளியிட்ட அவரிடம் அருகில் சென்று பிரதியைப் பெற்றபோது...
‘இராமனைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா...’
என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்..
தேவந்தி நூல் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் திரு அப்துல் கலாம் .
அருகில் வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்


தொகுப்பில் இரு கதைகள் இராமன் சார்ந்தவை என்பதால் எந்தக் கதை பற்றி அவர் குறிப்பிடுகிறார் என்பதில் எனக்கு ஏற்பட்ட குழப்பம்,
அவர் உரை நிகழ்த்தியபோதுதான் தீர்ந்தது..
அரச பதவி கையில் இருந்தும் சமூகச்சமநீதி வழங்க அதைப் பயன்படுத்தத் தவறிய இராமனைக் குறித்து 
‘சாத்திரம் அன்று சதி!’’(செம்மலர் இதழில் வெளிவந்த சிறுகதை)
என்ற கதையில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்..
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த திரு கலாம் குறிப்பாக அதை மேற்கோள் காட்டிச் சற்று விரிவாகவே பேசியபோது...
’அந்தத் தொகுப்பில் எத்தனையோ கதைகள் இருக்கும்போது மிகச் சரியாக அந்தக் குறிப்பிட்ட கதை அவர் கண்ணில் பட்டது எப்படி ’என்ற வியப்பு என்னில் ஒட்டிக் கொண்டது.
மனம் எந்த திசையில் செல்கிறதோ..அதை ஒட்டிய பார்வைதானே முதன்மை பெற முடியும்!
அவரது கவனம் நாட்டு நலன்..சமூக மேன்மை...!
அதைச் சார்ந்த கதைக்கு அவர் சிறப்பிடம் தந்து பேசியது நான் பெற்ற பெரும்பேறு.
(விரைவில் அந்தக் கதையை வலையேற்றம் செய்கிறேன்)


தமிழை எழுதப் படிக்கத் தொடங்கிய நாள் தொடங்கி என் கதைகளை முதன்முதலாகப் படித்து ,விமரித்து,விவாதித்து அதை மேலும் செழுமையாக்க-செம்மையாக்க ஆலோசனைகளைத் தந்து ஊக்குவித்து வரும் வரும் முதல் வாசகியான என் மகள் மீனு பிரமோதுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஆனால்...தற்செயலாக விழாவன்று காலையில் வடக்கு வாசல் ஆசிரியர் என்னைத் தொலைபேசியில் அழைத்து என் நூலின் முதல் பிரதியைத் 
திரு அப்துல் கலாமின் கரங்களிலிருந்து என் மகளே பெற வேண்டும் எனக் கூறியபோது இன்னுமொரு இனிய அதிர்ச்சி..மகிழ்ச்சி..
நூலின் முதல் பிரதியைப் பெறும் என் மகள் மீனு பிரமோத்
புதுதில்லியின் வலைப் பதிவர்களில் ஒருவரும்,கவிதை,கதை,கட்டுரை முதலிய ஆக்கங்களை உருவாக்கும் ஆர்வத் தேடலும் செயல்துடிப்பும் கொண்டவரும்,என்னிடத்தில் ஒரு மகனைப் போன்ற பிரியம் கொண்டிருப்பவருமான திரு தேவராஜ் விட்டலன் என் தொகுப்பின் இன்னொரு பிரதியைத் திரு கலாம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது மற்றுமொரு மகிழ்வான கணம்..
நூலின் பிரதியைப் பெறும் திரு தேவராஜ் விட்டலன்
‘70 களில் மதுரை பாத்திமாக் கல்லூரியில் என்னிடம் பயின்று,தற்போது தில்லியில் வசிக்கும் என் அன்பு மாணவி மீனாஷி இந் நிகழ்வுகளைப் புகைப்படமாக்கி உடன் எனக்கு அஞ்சலிட்டது ..அதுவும் ஒரு பேரின்பம்..
(என் மாணவி மீனாஷி அனுப்பி வைத்த புகைப்படம்)
இத்தனை மகிழ்வான கணங்களை ஒருசேர அளித்து வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளைத் தந்த வடக்கு வாசலுக்கும் அதன் ஆசிரியருக்கும் என் வந்தனம்.







8 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நல்ல நிகழ்ச்சி, பாராட்டுக்கள்.

இரண்டாம் வரி: “" நினைவுகூரத்தக்க "

கூறத்தக்க என்றுதானே இருக்க வேண்டும்?

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சுசீலாம்மா..

Unknown சொன்னது…

அன்புள்ள அம்மாவிற்கு ,

தேவந்தியின் கணம் என்றுமே என் நினைவில் இருக்கும் படி நிகழ்ந்துவிட்டது . பூவோடு சேர்ந்து நாரும்
மணப்பதைப் போல் எனக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் .
இந்நிகழ்வை உண்டாக்கிய திரு, பென்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கும் , தங்களுக்கும் என்றென்றும் கடமை பட்டுள்ளேன் .

மற்றுமொரு விஷயம் ..

31 ஜூலை 11 தினமணியில் -
இராமாயண காலத்தை ஆராய கலாம் ஆதரவு .. என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது .
அந்த செய்தியில் ராமாயணத்தின் மீது திரு அப்துல் கலாம் அவர்கள் வைத்திருக்கும் காதல் புரிகிறது .
இதானால்தான் தேவந்தி தொகுதியில் வரும் இராமன் சார்ந்த கதைகளை திரு அப்துல் கலாம் அவர்கள் ரசித்து நிகழ்வில் நினைவு கூர்ந்தார் என நினைக்கிறேன் .

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

புத்தக்கத்தை வாசித்ததோடல்லாமல் சிறந்த விமர்சனத்தை அம்மேடையிலேயே தங்களிடமும் எங்களிடமும் கலாம் பகிர்ந்துகொண்டது சிறப்பு..

அவருக்கு அந்தக்கதை ஏன் பிடித்தது என்று நீங்கள் சொன்ன காரணமும் அருமை..

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு சிம்மக்கல்,
நினைவு கூர்தல் என்பது நினைவுகளை ஒருமுகப்படுத்தி மனதுக்குள் கொண்டு வந்து அகக் கண்ணால் காணுதல்.
நினைவைக் கூறுதலாக-வாய்விட்டுச் சொல்லுவதாக - அது ஆகாது.
நினைவு கூரல் என்பதே சரியானது..பொருத்தமானது.

அமைதிச் சாரல்,விட்டலன்,கலாநேசன்,முத்துலட்சுமி ஆகியோர்க்கு என் அன்பும் நன்றியும்.

விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பித்த தில்லி பதிவர்கள் திருவிட்டலன்,கலாநேசன்,முத்துலட்சுமி,அகஸ்டஸ் மற்றும் என் பார்வையில் படாத நல்லன்பர்கள்,நண்பர்கள் அனைவர்க்கும் என் நன்றி....

Rathnavel Natarajan சொன்னது…

மிக்க மகிழ்ச்சி.
பெருமைக்குரிய தருணங்கள்.
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

//அவர் சிறப்பிடம் தந்து பேசியது நான் பெற்ற பெரும்பேறு.
(விரைவில் அந்தக் கதையை வலையேற்றம் செய்கிறேன்)//

மகிழ்ச்சி. காத்திருக்கிறோம். நூலையும் வாங்கி வாசித்திடுகிறேன்.தங்களுக்கும் நல்ல நூலை வழங்கியிருக்கும் வடக்கு வாசல் பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....