துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.8.11

’சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி...’



’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’
என்னும் அற்புதமான இந்தக் கவிதையில் சான்றோர் படைப்பில்-கவிதையில்- இருக்க வேண்டிய ஏழு சிறப்பான குண நலன்களைக் கோதாவரி நதியின் வருணனை மூலம் புரிய வைக்கிறான் கம்பன்.


புவியினுக்கு அணியாய்,-
இயற்கையை அப்படியே நகலெடுக்காமல்,அதற்கு மேலும் அழகு கூட்டுவதே  சான்றோரின் கவிதை.
அது இயற்கையை உள் வாங்கிக் கொண்டு தன் புனைவுத் திறத்தால்-கற்பனையால் மேலும் மெருகூட்டி,அழகுபடுத்துவதால், பொங்கிப் பெருகி ஓடும் ஆற்றைப் போலப் புவி மேலும் அணி பெறுமாறு செய்கிறது.


ஆன்ற பொருள்தந்து,
காப்பியங்கள் ‘பாவிகம்’எனப்படும் உட்சாரம் பொதிந்தவை;
காப்பியங்களின் உள்ளடக்கமே பாவிகம் எனப்படும்.
சிலம்பில் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’,’ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் ‘என்பவை பாவிகமாக வருவது போல போல இராமாயண பாவிகமாகச் சொல்லப்படுவது;தந்தை சொல் தட்டாமை,ஒருவனுக்கு ஒருத்தி ஆகியன.
ஆழமான நதி தன்னுள் அடக்கிச் செறித்திருக்கும் கணக்கற்ற பொருள்களைப் போல் ஆழ்ந்த ஒரு பொருள்நுட்பத்தை உள்ளடக்கியிருப்பதே கவிதையின் பண்பு.

.புலத்திற்றாகி;
 புலத்து-இற்று- ஆகி- கவிதை வெறும் புலன் இன்பம் ஊட்டுவதோடு நின்று விடாமல்-அப்போதைக்கு ஒரு கிளர்ச்சி ஊட்டுவதோடு முடிந்து விடாமல்,அவற்றுக்கெல்லாம் அப்பாலான தளத்தில், ஒரு ஆன்ம திருப்தியை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.


அவி அகத் துறைகள் தாங்கி,
அகத் துறை என்பது காதல்-சிருங்கார ரசம் ஆகியவை மட்டுமல்ல.
மனித மனதை ஊடுருவித் துளைத்து அதிலுள்ள உணர்வுகள் -அழுக்குகள்,அழகுகள் உட்பட-அனைத்தையும் வெளிக்கொணர வேண்டும்.பேரிலக்கியங்களின் சிறப்பு இதுவே.
ஆற்றுத் துறைகள் பலவாக இருப்பது போலக் கவிதையும் பல துறை சார்ந்து அமைதல் வேண்டும்.


ஐந்திணை நெறி அளாவி;
குறிஞ்சி,மருதம்,நெய்தல்,முல்லை,பாலை எனப் பல நிலங்களிலும் ஓடும் ஆற்றைப் போல அந்தந்த நிலப் பின்னணிகளை மட்டும் கொண்டிருக்காமல்,அவற்றின் வாழ்வியல் பின்னணியும் சேர்ந்தமைவதே ஆழ்கவி.
அதையே’நெறி’ என்னும் சொல்லால் சுட்டுகிறான் கம்பன்.


சவி உறத் தெளிந்து ,_(சவி-ஒளி)
நல்ல கவிதையின் இலக்கணம் தெளிவுற மொழிதலாகிறது.
கதிரொளியில் பளிச்சிடும் நதியின் நீர்த்துளி போன்ற ஒளி மிக்க சொற்களால்,தான் கூற வந்த பொருளைப் பளிச்சென உரைத்தலே நற்கவிதையின் அழகு...


தண்ணென்று,ஒழுக்கமும் தழுவி..
இது காவிய நடை பற்றியது.தெளிந்த நீரொழுக்குப் போல-தெளிந்த ஆற்று நீரோட்டம் போல அமைய வேண்டுவது காவிய நடை என்கிறான் கம்பன்.

இப் பாடலில் 
ஐந்திணை நெறி அளாவி;
அவி அகத் துறைகள் தாங்கி
என்ற இரண்டு வரிகளின் வேறுபாட்டைக் கூர்ந்து நோக்கினால் மனிதனின் அகத்தைத் தாங்கிப் பிடிக்க,நிலக் காட்சிகள் பின்புலமே என்ற நுட்பத்தை உணரலாம்.
மனிதனின் அகத்தை
-உள்ளத்தின் ஏக்கத்தை,தாகத்தை,பாசத்தை,பரிதவிப்பை-படம் பிடிப்பதே கவிதையில் முதலிடம் பெறுவது.
அதனாலேயே அகத்துறை தாங்கி என்கிறது பாடல்.

அவ்வகையான அகச் சிக்கல்கள் நிகழ ஒரு களமாக-பின்னணியாக அமைபவை மட்டுமே ஐவகை நிலங்கள்.
எனவே அவற்றை அளாவிக் கொண்டு சென்றால் போதும் என்ற பொருள்பட  ஐந்திணை அளாவி என்கிறான் கம்பன்.
ஆறும் கூட ஐந்து நிலங்களையும் தழுவிக் கொண்டு சென்றாலும் தனக்கென்று உள்ள தனித்துவமான இயல்புடன் ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் கவிதையும்!



3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

'சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி.....' மிகவும் அற்புதம்! உங்கள் அருமையான விளக்கத்தால் இந்த கவிதையை நன்கு ரசிக்க முடிந்தது. கம்பரின் வர்ணனை பிரமிப்பாக இருக்கிறது. மனக் கண்ணில் கோதாவரி பரந்து, விரிந்து கம்பீரமாய் ஓடுகிறது.
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!

அப்பாதுரை சொன்னது…

இந்த வரிகளை என் தமிழாசிரியர் மிகவும் உற்சாகத்தோடு விளக்குவார். 'சான்றோர் கவி' மறக்கவேயில்லை. பின்னொரு நாள் கோதாவரி நதியைக் காண நேர்ந்த போது அதன் பிரம்மாண்டத்தில் வியந்த போதும் இந்த வரி தான் நினைவுக்கு வந்தது.

Unknown சொன்னது…

சான்றோர்களின் கவிதையையும் கோதாவரியின் அழகியலையும் ஒப்பிட்டு கூறும் அருமையான
கவிதை ..

அம்மா
எளிமையான விளக்கத்துடன் கொடுத்துள்ளீர்கள் .
கவிதை படைக்கும் அனைவருக்கும் நல்ல பாடமாக அமைந்தது .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....