துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.7.15

பாத்திமாவின் சாகுந்தலம்

பாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின்                                                           சிற்பி இவர்...


மதுரை பாத்திமாக் கல்லூரியின் முதல் முதல்வராய்ப் பெண்கல்விக்குப் பெரும் பணியாற்றிய பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள் 29/7/15 காலையில் தான் மிகவும் நேசித்த மதுரை மண்ணிலேயே இயற்கை எய்தி விட்டார்கள். அவர் ஏற்றிய தீபங்களாய் உலகெங்கும் பரவிக்கிடக்கும் மாணவச்செல்வங்களோடும் சக ஆசிரியைகளோடும் இத் துயரச்செய்தியைக்கண்ணீர் மல்கப்பகிர்ந்தபடி அவர்களுக்கு என் நெகிழ்வான அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்....

பேராசிரியை செல்வி சகுந்தலா 

பெண்கல்வி தலைதூக்கித் தழைக்கத் தொடங்கியிருந்த இந்திய விடுதலையை அடுத்த காலகட்டம். பெண்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வது இயல்பான நடப்பாக மாறிப்போகத் தொடங்கியிருந்தாலும் சுற்றிலும் கிராமங்கள் மொய்த்துக்கிடந்த மதுரையைப்போன்ற ஓரிடத்தில் வாழ்ந்த பெண்கள் பலருக்கும் உயர்கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. அந்தக்காலகட்டத்தில் மிஷினரிகளான வெளிநாட்டுப்பெண் துறவிகளின் பணி இத் துறையில் மகத்தான பங்களிப்பைச்செய்தது. குறிப்பாகப் புனித வளனாரின் லியான்ஸ் பிரிவைச்சேர்ந்த அன்னை ரோஸ் அவர்களும் அவருக்குத் துணை நின்ற அயல்நாட்டு, மற்றும் இந்தியப்பெண் கத்தோலிக்கத் துறவிகளும் மதுரையிலும் மதுரை சார்ந்த பகுதிகளிலும் பெண்கல்வியைப் பரவலாக்குவதில் தங்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக அரும்பணி ஆற்றியபடி இருந்தனர், மதுரை வீதிகளில் கால்நடையாக…..வீடு வீடாகச்சென்று பெண்களைக் கல்வி பயில அனுப்புமாறு தூண்டுதல் தந்து கொண்டிருந்தார் அன்னை ரோஸ்.
அன்னை ரோஸ்
 அந்த முயற்சியின் முதல் படியாக உருவான புனித வளனார் உயர்நிலைப்பள்ளியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் தொலை நோக்குடன் அவர் கண்ட கனவால் அயரா உழைப்பால் பிறந்ததே இன்று மதுரையின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனமாகப்பெயர் பெற்று மதுரை மாநகரின் ஓர் அடையாளமாகவே விளங்கும் பாத்திமா கல்லூரி. 

தான் விரும்பிய நிறுவனத்தைத் தொடங்கியதோடு தன் கனவு மெய்ப்பட்டு விட்டதாக அமைதியுறாத அன்னை ரோஸ் அதை மேலும் மேலும் அர்ப்பணிப்போடு வளர்த்துச்செல்லும் சீரிய தலைமைக்கும் தகுந்த ஒரு நபரைத் தேர்ந்து தெளிந்தார். அவர் கண்டெடுத்த நல்முத்தாக….வாராது வந்த மாமணியாக மதுரைக்கு வாய்த்தவரே பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள். கத்தோலிக்க நிறுவனம் ஒன்றில் ஓர் இந்துவை முதல்வராக்குவதில் அன்னைக்கோ பிற அருட்சகோதரிகளுக்கோ அன்று எந்த விதமான மனத் தடையும் இல்லை; இன்று பாத்திமாக்கல்லூரி எட்டியிருக்கும் உயரங்களுக்குக் காரணம்  மதம் கடந்த அந்தச் சமூக இலக்கு மட்டுமே.

அன்னை ரோஸ் கண்ட கனவுகளுக்காகவே தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவராய், அவரது நோக்கங்களின் நிறைவேற்றங்களை மட்டுமே தன் வாழ்நாளின் ஒரே இலட்சியமாய்க்கொண்டவராய் அந்த நொடி முதல் பாத்திமாக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மட்டுமே தன் வாழ்வைத் தத்தம் செய்து கொண்டார் பேராசிரியை செல்வி சகுந்தலா . தனக்கென ஒரு வாழ்க்கை, தனக்கெனக் குழந்தைகள் என எந்த வகையான சொந்தத் தேடல்களும் பந்தங்களும் அற்றவராய்ப் பாத்திமா பூமியையும் அங்கே சஞ்சரிக்கும் மாணவிகள்,ஆசிரியைகள்,அருட்சகோதரிகள் ,பணியாளர்கள்,ஆகியோரை மட்டுமே தன் சுற்றமாக்கிக்கொண்டார். 1953இல் தொடங்கிய அந்தத் தியாக வேள்வி 1983 வரை-  அவர் பணி நிறைவு பெறும்வரை 30 ஆண்டுக்காலம் அயராது ஓய்வின்றித் தொடர்ந்தது.

அந்தக் காலகட்டத்தில் பதின்மூன்று ஆண்டுகள் அந்த அரிய முதல்வரோடு நெருக்கமாய்ப்பழகவும், அவரால் பயிற்சியளிக்கப்படவும் நான் பேறு பெற்றிருந்தேன் என்பதைக் கண்கள் பனிக்க எண்ணியபடி அவர்கள் இறைவனோடு ஒன்றிக்கலந்து விட்ட இந்தத் தருணத்தில் அவர்களோடான  என் எண்ண அலைகளை.....நெகிழ்ச்சி,துயரம்,பெருமிதம் எனக்கலவையான பல உணர்வுகளோடு என் உள்நெஞ்சிலிருந்து மீட்டெடுக்கிறேன்…

நான் பணியாற்றியதுதான் பாத்திமாவிலேயே தவிர நான் அந்தக்கல்லூரி மாணவி இல்லை.என்றாலும் என்னை நானாகச்செதுக்கி வடிவமைத்து ஒரு முழுமை பெற்ற தன்னுணர்வு கொண்ட பெண்ணாக ஆக்கியது பாத்திமா மண்ணும் அதன் முதல்வர் பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்களும் மட்டுமே என்பதை பாரதி போல நான் நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்...  

1970இல் இளம் தமிழ் விரிவுரையாளராக நான் பாத்திமாக் கல்லூரியில் அடியெடுத்து வைத்தேன் . அப்போது கிராமமாகவோ  நகரமாகவோ இல்லாத சிற்றூராக மட்டுமே இருந்த காரைக்குடியில் முதுகலைத் தமிழ்க்கல்வி முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்திருந்த என்னை....பள்ளிக்கல்வியைத் தமிழ்வழிக்கல்வியாகக் கற்றிருந்த என்னை மதுரையே ஒரு பேரூராக மிரட்டிக்கொண்டிருந்தது.

முதுகலைத் தமிழில் மிக நல்ல மதிப்பெண்ணோடு பல்கலைக்கழக மூன்றாமிடத்தைப் பெற்றவளாக இருந்தாலும்  உலக அநுபவம்,வாழ்க்கைக்கல்வி ஆகியவற்றை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத முதிர்ச்சியற்ற 21வயதுப்பெண்ணாக ....மனதளவில் அதை விடவும் இளையவளாக....பலரும் கலந்து பழகும் இடத்திலிருந்து கூச்சம் கொண்டு விலகிச் செல்பவளாக மட்டுமே அப்போது நான் இருந்தேன்...
தமிழ்வழிக்கல்வி பயின்றாலும் என் அம்மா தலைமை ஆசிரியை என்பதால் வீட்டில் என் ஆங்கிலப்பின்னணி வலுவாகவே இருந்தது,ஆனாலும் கூடப் பேச்சு மொழியாக  ஆங்கிலத்தைக் கையாளுவதில் எனக்கிருந்த இனம் புரியாத கூச்சமே என்னைப் பிறரிடமிருந்து ஒதுங்கிப்போகச் செய்து கொண்டிருந்தது. 

ஆசிரியப்பணியில் அளவு கடந்த ஆர்வம்...தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட கரை காணாக்காதல்...அதை மாணவரிடையே முழு வீச்சோடு கொண்டு  சேர்க்கும் துடிப்பு,ஏதோ கொஞ்சம் சொற்பொழிவாற்றும் சக்தி இவை மட்டுமே அப்போதைய என் தகுதிகள்;  பாத்திமாவின் படிகளில் கால்வைக்கும் வரை அவை தவிர வேறு எந்த ஆளுமைத் திறனும் அற்றவளாக மட்டுமே இருந்த என்னை உருவாக்கிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா அவர்கள்..

அப்போது புகுமுக வகுப்பு எனப்படும் பி யூ சி மாணவர்கள் பலரும் தமிழ்வழி படித்தவர்களாக இருப்பார்கள் என்பதால் ஆங்கிலத்துக்குப்பாலம் போடுவது போல முதல் ஒரு மாதம் அடிப்படை ஆங்கிலம்,ஆங்கில இலக்கணம் ஆகியவற்றை ஆங்கில ஆசிரியர்கள் மட்டுமன்றி வேறுதுறை ஆசிரியர்களும் கூட நடத்துவதுண்டு[BRIDGE COURSE] ;அப்படி ஒரு வகுப்பை எடுக்க என்னையும் என் தமிழ்த்துறைத் தோழி இன்னொருவரையும் பணித்தார் முதல்வர்.என் தோழியாவது சென்னையில் பயின்றவர்,ஆங்கிலத்தில் சரளமாகப்பேசுபவர்..ஆங்கிலம் பேசவே அஞ்சிக்கொண்டிருந்த நான் எப்படி...? அழுத கண்ணீரோடு முதல்வர் முன் நின்ற என்னை’எனக்குத் தெரியாது,உனக்கு இந்த வேலை தரப்பட்டிருக்கிறது நீதான் செய்தாக வேண்டும்’என்ற கட்டளை பிறந்தது. அதை முனைந்து செய்து சிறப்பாகவும் முடித்ததும் என் மீதே எனக்கு நம்பிக்கை பிறக்க நான் புதிதாய்ப்பிறந்தேன்....
இது பதச்சோறான ஒரு உதாரணம்மட்டுமே..
நீச்சல் கற்க அஞ்சுபவனை நீர்நிலைக்குள் தூக்கிப்போடுவது போல எந்த வேலைக்கெல்லாம் அச்சம் வருமோ அந்தப்பணியில் முதல் ஆளாய்த் தூக்கிப்போட்டுப் பழக்கி விடுவது அவருக்கே கை வந்த அருங்கலை. 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்குக் கொடுக்க மதுரைப் பழ மண்டியில் போய் மொத்தமாய் ஆப்பிள் வாங்குவது முதல் ஆசிரியர்களுக்கான உணவகத்துக்கு அன்றாட மெனு தந்து நிர்வகிப்பது வரை.-.

விடுதியில் இருக்கும்போது விடுமுறை நாட்களில்  ஊருக்குக்கூடச்செல்லாமல் சித்திர குப்தன் பதிவேடு என்று எங்களால் செல்லமாய்ச்சொல்லப்படும் பதிவேட்டில் மொத்தக்கல்லூரி மாணவிகளின் மதிப்பெண்களையும்  பதிந்து வைப்பது முதல் தேசிய சேவைத் திட்டம் , வயது வந்தோர் கல்வித் திட்டம் ஆகிய பலவற்றின் பொறுப்பாளராக நிர்வாகம் செய்வது வரை  ஆசிரியர்களான எங்களுக்கு முதல்வர் அளிக்காத பயிற்சி இல்லை.

கல்லூரி வாயிலில் காரை நிறுத்திக்கொண்டு என்னையும் இன்னொரு பேராசிரியையும் அழைப்பார்;கார் நகர்ந்த பின்பே ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைத்துச்செல்கிறார் என்பது தெரியும்..தலைப்பும் கூட அப்போதுதான் தரப்படும்..
இது எப்படி சாத்தியம் என்றால்....உன்னால் முடியும் என்பார்..அது பலிதமாகவும் செய்யும்...அதுதான் அவர்...அதுதான் பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!

என்னிடம் ஏட்டுச்சுரைக்காயாய் மட்டுமே இருந்த கல்வி பட்டை தீட்டப்பட்டு என்னைப் பற்றியும் என்னுள் உறைந்து கிடக்கும் வேறு பல திறன்களைப்பற்றியும் நானே உள்ளபடி அறியவும் என் ஆளுமைமுழுமை பெறவும் உதவியவராய் என்னை இன்றைய நானாகச் செதுக்கிய சிற்பி பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!


நான் கதை எழுதத் தொடங்கி என் முதல் சிறுகதை 1979இல் ’அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டி’யில் முதல் பரிசு பெற்ற காலத்தில் என்னைக்கொண்டாடி வரவேற்றது தொடங்கி என் அண்மைய நாவலான ‘யாதுமாகி’வரை என் முதன்மையான  வாசகராக இருந்தவர்  என் நேசத்துக்குரிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!
’80களில் பல தமிழ் வார இதழ்களிலும் என் சிறுகதைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தபோது அவை பற்றி நான் அறியும் முன்பேஅவர் படித்து முடித்து விட்டு அன்றைய காலையை அது பற்றிய அவரது விமரிசனங்களோடு தொடங்கிய இனியநாட்கள் பல என்னுள்சேமிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற மாதம் அவர் இறுதிப்படுக்கையில் இருந்தபோது மதுரையில் அவரைக்காணச் சென்றஎன்னிடம் ‘சுசீலா’என்று கூட பெயர் சொல்லி அழைக்காது’யாதுமாகி’என என் நாவல் பெயர்சொல்லி நெகிழ்ந்தபடி என்னை ஆரத் தழுவிய கரங்கள் அவருடையவை.

அறிவியல் பேராசிரியராக அவர் இருந்தாலும் தமிழ்மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாக்களில் அவர் காட்டிய முனைப்பும், கி வா ஜ தொடங்கி குமரி அனந்தன்,கண்ணதாசன், ஜெயகாந்தன்,லா ச ரா எனப் புகழ் பெற்ற தமிழ் ஆளுமைகளைக்கல்லூரிக்கு வருவித்து அவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில் காட்டிய முனைப்பும் மாணவர்களின் பல்துறை வளர்ச்சியில் அவர் காட்டிய கரிசனத்தின் அடையாளங்கள்.

மாணவர் நலனும் உயர்வும் மட்டுமே அவரது உயிர்மூச்சாய் அவரின் சுவாசமாய் இருந்து வந்தது கண்டு நான் வியந்து பணிந்திருக்கிறேன்....கல்விக்கூடத்தில் கழிக்கும் நாட்களில் மாணவியர் உச்ச பட்ச அறிவைப் பெற்று விட வேண்டுமென்ற துடிப்போடு  ஆசிரியர்களையும் அது நோக்கி அவர் உந்தியபடி இருந்தபோது கடுமையின் தெறிப்புக்கள் அதில் இருந்திருக்கலாம்....ஆனால் தான் ஊட்டும் உணவின் முழுப்பயனும் தன் மகவை அடைந்தேஆக வேண்டும் என்ற தாய்மையின் ஆவேசம் அது என்பதைப்புரிந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அவர் மீது புகார் ஏதும் இருக்க முடியாது.

ஆயிரக்கணக்கில் இருக்கும் மாணவிகளின் பெயரை மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்து உரையாடும் அவரது ஆளுமைத் திறன் அந்தப்பொறுப்பில் இருப்போர் பயின்றாக வேண்டிய ஒன்று.[தலைமை ஆசிரியையாய் இருந்த என் தாய்க்கும் இதே பண்பு இருந்திருக்கிறது..அதில் மட்டும் நான் என்னவோ சற்று ஞாபக மறதிப் பேர்வழிதான்]

கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஒரு அறையில் தங்கியிருந்த அவர் காலை 7 மணிக்கெல்லாம் கல்லூரி அலுவலகம் வந்துசேர்ந்து விடுவார்...இரவு 7 மணி..சில நேரங்களில் 9 மணி வரை அவரது இருப்பு அங்கே நீளுவதுண்டு.சோர்வோ களைப்போ சற்றும் இன்றி ....நறுவிசாக அணிந்து வந்த உடையிலோ,கூந்தல் முடிப்பிலோ எந்த ஒரு சிறு நலுங்கலும் இல்லாமல் புதுமலர் போல அவர் பொலிவதைக் காணும்போது மனதுக்குப்பிடித்ததைஉற்சாகமாக மனமொன்றிச்செய்யும் தவமுனிவராக அவர் தீட்சண்யத்தோடு துலங்குவதாய்த் தோன்றும்.

கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர்களைப்பொதுவாக இன்றைய மாணவ உலகம் விரும்புவதில்லை; ஆனால் எந்த அளவு கண்டிப்பாக இருந்தாரோ அதற்குப்பல மடங்கு மேலாகத் தன் மாணவச்செல்வங்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்திருக்கிறார் முதல்வர் சகுந்தலா .இது அவரது அணுகு முறையை உள்ளபடி விளங்கிக்கொண்டதால் அவரது மாணவியர்  அவருக்களித்த வரம்.

எம் ஃபில் பி எச்டி என்று உயராய்வு மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உந்துசக்தியாக விளங்கினாரே தவிர  தனக்கென வாழாப்பெருந்தகையான அவர் எம் எஸ்சிக்குப்பிறகு தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒருபோதும் நினைக்கவே  இல்லை....அவரது மூச்சும் முனைப்பும் பாத்திமாவை மேம்படுத்துவது மட்டுமே....

சகுந்தலா அவர்களின் கலை அழகியல் ரசனைகளைச் சொல்லிக்கொண்டே போக முடியும்.கல்லூரி விழாக்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது முதல் மாக்கோலம் போடுவது வரை அவரது பார்வை எல்லைக்குள்ளேதான் நடக்கும்; ...இனிய உணவு...இனிய இசை நல்ல கலைகள் இவற்றை ரசித்துத் தோயும் அவர் அந்த வேளைகளில் சிறு பிள்ளையாகி விடுவதும் உண்டு.

இன்னும் சொல்லநினைப்பது ஏராளம்....
சொற்கள் மயங்கித் தயங்கி நிற்கின்றன...
நான் அறியாத பல நுணுக்கமான பல செய்திகள் அவரது நேரடியான மாணவியருக்கு இன்னும் கூடத் தெரிந்திருக்கக்கூடும்...
ஆனாலும் நானும் கூட அவரதுமாணவியாக என்னை எப்போதும் கருதிக்கொள்பவள் மட்டுமே...

பாத்திமாவில் பணி நிறைவுக்குப்பின் திருச்சி காவேரி கலைக்கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராய்ப்பணியாற்றிப்பிறகு சமூகப்பணிகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அவர்.

எங்கள் கல்லூரிப்பொன்விழாவின்போது எடுத்த ஒரு குறும்படத்துக்காக அவரை நேர்காணச்சென்றபோது அவரது வாழ்க்கையையே ’சாகுந்தலம்’என்ற தலைப்பில் குறும்படமாக எடுக்க வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் வெளியிட்டேன்;அதை நிறைவேற்றுவதற்கு முன் காலம் அவரைக்கவர்ந்து சென்று விட்டது.

பாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின் சிற்பி இவர்...இருவருமே இளைஞர் நலனை உயிரெனக் கொண்ட தன்னலம் துறந்த பெருந்தகையாளர்கள்.......இருவரது இறப்பும் ஒருசேரத் தாக்க உறைந்து நிற்கிறேன்...

காவியங்களுக்கு என்றும் எப்போதும் அழிவில்லை,
எங்கள் பாத்திமாவின் சாகுந்தலமும் அவர் ஏற்றி வைத்த சுடர்களாய் ஒளிரும் மாணவச்செல்வங்கள் வழி தொடர்ந்து அவரது பணியை முன்னெடுத்துச்சென்று பாத்திமாவின் புகழைப்பாரெங்கும் கொண்டு செல்லும்... .

எங்கள் இனிய சாகுந்தலம் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
என் கை கூப்புக்களும் அஞ்சலியும்

28.7.15

கலாமுக்குப் பிடித்த கதை

காலம் சென்ற அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களிடம் கடைசியாகத் தொடுக்க எண்ணிய கேள்வி பாராளுமன்றத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுடையதாக ஆக்குவது பற்றியது என இன்றைய செய்தித் தாள்களில் படித்தபோது அரசாங்கச் செயல்பாடுகள் பற்றிய அவரது ஆர்வத்தை எடுத்துக்காட்டும் சம்பவம் ஒன்று என் நெஞ்சில் நிழலாடியது.

[//எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய்த் தெரிகிறது.//
என்ற கதையின் கடைசி வரியையும் தன் உரையில் வாசித்துக் காட்டினார்....

தொகுப்பில் பல வகைப்பாடுகள் கொண்ட கதைகள் இருந்தாலும் அரச நீதி என்பது சமநீதியின் பாற்பட்டதாக இருக்க வேண்டும் எனச்சொல்லும் அந்தக்கதையை அவர் தேர்வு செய்த நுட்பம் கண்டு நான் வியந்து போனேன். இந்தக்கதை எழுதப்பட்ட நோக்கத்தை நிறைவு சேய்யும் வகையில் அதன் மிகச்சிறந்த வாசகர் ஒருவரை அது சென்றடைந்து விட்டதான பூரிப்பும் மனநெகிழ்வும், நிறைவும் எனக்கு ஏற்பட்டன. 


ஒரு கதை சொல்லிக்கு வேறென்ன வேண்டும்? 

கலாமின் மனதை இலேசாகத் தொட்ட அந்தக்கதையை இங்கே மீள் பிரசுரம் செய்வதில் நெகிழ்ச்சியடைகிறேன்.....

அதற்கு முன் அது குறித்த ஒரு பின்னணி;
‘90களின் நடுப்பகுதி; தமிழ் முதுகலை மாணவிகளுக்குக் குலசேகரர் பாசுரங்களில் சிலவற்றைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது இராமாவதாரத்தைச் சிறப்பித்துப் பேசிக்கொண்டு வந்த ஆழ்வார் ஓரிடத்தில் ‘சம்புகனைக்கொன்று’ என்றார்.
எனக்குப் பயிற்சி இருக்கும் அளவில் கம்பனில் சம்புகன் பற்றிய எந்தக் குறிப்பும் இருந்ததாய் நினைவில்லை என்பதால் நூலகத்தில் உள்ள மேற்கோள் விளக்கக்கதைகளைச் சரணடைந்தபோதுதான் உத்தர காண்டத்தில்[கம்பர் அதைத் தொடவில்லை] சம்புகவதம் பற்றிய குறிப்பு இருப்பதைக்கண்டேன்.அதை வெறுமே விளக்கிச் சொல்வதோடு என் மனம் நிறைவுறவில்லை.மனதுக்குள் கிடந்து அதை உழுதபோது கிடைத்ததே இக்கதைக்கரு.

இக்கதையில் இராமன் ஒரு பாத்திரமாக வந்தபோதும் அவனை மட்டுமே குற்றம் சாட்டுவதோ...குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதோ என் நோக்கமில்லை.
இராமன் இங்கே ஆளும் வர்க்கத்தின் ஒரு குறியீடு மாத்திரமே. 
சட்டங்களைப்புதிதாக இயற்றவும்,உளுத்துப் போன சட்டங்களைக் கைவிடுவதற்குமான அதிகாரம்,ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரம். - வல்லமை பொருந்திய அந்தப்பதவில் இருக்கும்போது அதைச் செயலாக்காமல் தாங்களும் அந்தச் சட்டங்களைக் காட்டி அவர்கள் ஒளிந்து கொண்டு விடுகிறார்களே என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்ள,இந்தத் தொன்மக்கதை எனக்கு ஒரு கருவியாக அமைந்தது.அவ்வளவே.

இனி....கதைக்குள்....
''சாத்திரம் அன்று சதி''
                 ’’சூத்திரனுக்கொரு நீதி-தண்டச்
                          சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
                    சாத்திரம் சொல்லிடுமாயின் -அது
                           சாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்’’
                                                                                     -பாரதி 
                                                                    ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’’''
முதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மேல் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன்எதிரே வெள்ளி ஓடையாகச் சலசலத்து ஓடும் சரயு ஆறு அவனுள் பல எண்ணக்குமிழிகளை அடுக்கடுக்காகக் கிளர்த்தியபடி வேதனைப்பள்ளத்தாக்குகளின் விளிம்புகளுக்கே அவனை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இதே இடத்தில் இருந்து கொண்டு இந்த நிலவொளியில் தகதகத்து ஓடும் சரயுவின் ஜொலிப்பைக் குழந்தைப்பருவத்தில் கைகொட்டி ரசித்திருக்கிறேன் என் சகோதரர்களோடு
பின்னாளில் இளமையும்,வனப்பும் வாய்ந்த சீதையின் தோழமை இந்தக் காட்சிக்கு வேறு வகையில் மெருகூட்டி இருக்கிறது.இன்றுநிலவுஅதில் நனையும் சரயுகாலம்கட்டுக்குலைக்காத இந்த அரண்மனை மாடங்கள் இவை அனைத்தும் கருக்கழியாமல் இருக்க..,நான் மட்டும் ஓர் ஏகாங்கியாய்..தனிமைப்பட்டுப் போனவனாய்!
தனிமை,பிரிவு இவையெல்லாம் இந்த அவதாரத்தின் சாபக்கேடுகளா….இல்லை அப்படி ஒரு பெயர் சூட்டி என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? களங்கமற்ற சீதையைக் கடுஞ்சொல் கூறியே மண்ணுக்குள் சமாதியாக்கியதும்,முனிவனின் சொல் கேட்டு இலக்குவனை சரயுவில் மூழ்கடித்ததும் இன்னும் அரச தர்மம் என்ற பெயரால் நான் சுமந்த பாரங்கள்தான் எத்தனை? இன்னும் இந்தப் பிறவியில் எஞ்சியிருக்கும் சுமைகள்தான் எத்தனை?

நீண்டதொரு வாழ்க்கைப் பயணத்தின் நெடிதான களைப்புணர்வு இராமனைத் திடீரென்று பற்றிக்கொள்ள,அசதியுடன் இருக்கையில் சாய்கிறான்.சலிப்புடன்மூடிக்கொண்ட அவன் இமைகள் மெலிதான ஓர் அரவம் கேட்டு விழிக்கையில் வாயிலில் ஒரு காவலன் நிற்கிறான்.

‘’
அந்தணர்களின் கூட்டம் ஒன்று தங்களைக் காண அவசரமாய் வந்திருக்கிறது பிரபோ’’
இந்த வேளையிலா?’ – ஒரு கணம் திடுக்கிட்டுப் போன இராமன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவர்களைக் காண விரைந்து வருகிறான்.
கவலை கப்பிய முகங்களுடன் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் ஐந்து முதியவர்களும் இராமனைக் கண்டதும் எழுந்திருக்க முயல்கிறார்கள்.

‘’
எல்லோரும் என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இப்படி ஒரு அகால வேளையில் அவசரமாய் என்னைத் தேடி வரும் அளவுக்கு இந்த ஆட்சியில் தங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்து விட்டதோ என்று அஞ்சுகிறேன்’’
‘’இந்த நள்ளிரவுப்பொழுதில் உன் அமைதிக்குப் பங்கம் விளைப்பதில் எங்களுக்கும் உடன்பாடு இல்லை ராமா….ஆனாலும் அடுத்தடுத்து நிகழ்ந்து விட்ட அகால மரணங்கள் பொழுது அகாலமானது என்று கூடப்பார்க்க இயலாமல் எங்களை இங்கே வரும்படி நிர்ப்பந்த்தித்து விட்டன’’

‘’
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’
‘’கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன் அரசே!சிறிது காலமாகவே எங்கள் அந்தணர் தெருவில் அடுத்தடுத்து மரணங்கள்! அதிலும்அசம்பாவிதமாய்அகாலமாய் நேரும் குழந்தை மரணங்கள்!இராம ராஜ்யம் நடந்து வரும் இந்த பூமியில் உன் நல்லாட்சி மீது களங்கம் கற்பிக்க விரும்பவில்லை என்பதால் விதிப்பயன் என்று இத்தனை நாளும் பொறுமையோடுதான் இருந்தோம்….ஆனால் இன்று கோயில் பூசை செய்யும் குருராஜ பட்டரின் வீட்டில் நிகழ்ந்த பிள்ளைச் சாவு எங்கள் எல்லோரையுமே உலுக்கி விட்டது’’

‘’
ஆமாம் அரசே! பிள்ளை வரம் கேட்டுத் தவமிருந்து பெற்ற செல்வ மகன்! ஐந்து வயது கூட நிரம்பாத அழகு மகன்….தலை நோவு என்று படுத்த ஒரு நாழிகையில் நிரந்தரமாய்த் தலை சாய்த்து விட்டானென்றால் பெற்ற மனம் எப்படித் துடிக்கும்? இந்த மரணங்கள் இப்படித் தொடர் சங்கிலியாகிக் கொண்டு போவதைத் தடுப்பது உன் கடமை என்று அறிவுறுத்தவே நாங்கள் ஓடோடி வந்தோம் மன்னா!’’
கவலைக் கோடுகள் உழுதிருக்கும் இராமனின் முகம் பின்னும் களை இழக்கிறது.

‘’
சான்றோர்களே..! அயோத்தி நகரத்தைத் தங்கள் அறிவுக் கூர்மையாலும்,ஆலோசனைத் திறத்தாலும் பொலிவுபடுத்தி வருபவர்கள் நீங்கள்! தாங்கள் அறியாதது என்ன இருக்க இயலும்? பிரச்சினையை முன் வைத்த நீங்களே அதனைத் தீர்ப்பதற்கான வழியினையும் முடிவு செய்து என்னிடம் நாளை தெரிவியுங்கள்.தாங்கள் கூறும் தீர்வு எதுவாயினும் பணிவோடு ஏற்க நான் சித்தமாயிருக்கிறேன்.இராமன் விடும் மூச்சுக் காற்றும் கூட இந்த மண்ணின் நன்மைக்காகத்தான் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்குமானால் இப்பொழுது அமைதியோடு வீடு செல்லுங்கள்! நாளை நிச்சயம் நல்லதொரு தீர்வு காண்போம்…!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


மைதி இழந்த இராமனுக்கு மறுநாள் ஆலோசனைக் கூடத்தில் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார் வசிட்டர்.

‘’
இந்தப் பிரச்சினையில் நீ இந்த அளவு மனதை அலைக்கழித்துக் கொள்ள வேண்டாம் இராமா…! உலகில் பிறப்பும் இறப்பும் விதி வகுத்துத் தந்திருக்கும் நிர்ணயங்கள் ! அந்த அந்தணர்கள்தான் அதை அரச நீதியோடு சேர்த்துக் குழப்புகிறார்களென்றால் நீயுமா அதை எண்ணிக் கலங்குவது?’’

’’என்னால் அந்த விஷயத்தில் அத்துணை எளிதாக அமைதி காண முடியவில்லை வசிட்டரே..! தருமத்தின் ஆட்சி நடப்பதாக நான் பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்த சாம்ராஜ்ய எல்லைக்குள் எங்கோ அறம் தலை தடுமாறிக் கொண்டிருப்பதாகவும்,அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டதனாலேயே தங்கள் வீடுகளில் அகாலச் சாவுகள் அடுத்தடுத்து நேருவதாகவும் அல்லவா நேற்று என்னைச் சந்தித்த அந்தணப் பிரதிநிதிகள் இன்று மீண்டும் வந்து தீர்ப்பு வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்?’’
‘’சரி..ஒரு வாதத்துக்காக அதை சரியென்றே வைத்துக் கொண்டாலும் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் எவனோ ஒருவன் செய்து கொண்டிருக்கும் ஒரு செயலுக்கு நீ எப்படிப் பொறுப்பாக முடியும்? எனக்கென்னவோ அந்தணர்களின் குற்றச்சாட்டும் அவர்களின் எதிர்பார்ப்பும் மிகவும் அதீதமானவை என்றே தோன்றுகிறது.அது,உன்னை அபாயத்தின் எல்லைக்கே கொண்டு சென்று விடுமோ என்றும் நான் அஞ்சுகிறேன் இராமா’’

‘’என் மீது கொண்ட பாசம் தங்களையும் கூடக் கோழையாக்கி விட்டது குருதேவா!அறம் என்ற வேள்வியில் ஆகுதியாவதற்கென்றே பிறந்தவன் இந்த இராமன்…! அந்த யாகத்துக்குக் காணிக்கை செலுத்த நான் மறுத்திருந்தால் அன்று என் தந்தை தொடங்கி,இன்று என் மனைவி,தம்பி இலக்குவன் வரை என் உறவுகள் எல்லாவற்றையும் நான் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். இப்பொழுதுஎல்லாமே என்னை விட்டுப் போன நிலையில் அறம் என்ற ஒரு பற்றுக்கோடைத் தவிர எனக்கு வேறு என்னதான் மிச்சமிருக்கிறது? அந்த நெருப்பில் இப்பொழுது நானே கள பலியாகிறேன். இந்தப்பணிக்காக வேறு எவரையும் அனுப்பப்போவதில்லை. என் நாடு முழுவதும்,என் தாயகத்துத் திருமண் முழுவதும் என் பாதங்கள் தேயத் தேய நானே அலைந்து திரியப் போகிறேன். அந்தணர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டின் மூலப்பொருளை நானே கண்டறிந்து களையெடுக்கப்போகிறேன்.’’

-
சிறிது இடைவெளிக்குப் பின் இராமன் மீண்டும் தொடர்கிறான்.

‘’ஒருவேளை இதுவே என் இறுதிப் பயணமாகக் கூட அமைந்து விடலாம்.தாங்கள்தான் எனக்கு ஆசி கூறி வழியனுப்பி வைக்க வேண்டும்!’’
-தன் கால்களில்பணிந்தெழுந்த இராமனைத் தூக்கி நிறுத்தித் தழுவிக்கொண்ட வசிட்ட முனியின் கண்களில் யமுனை பெருக்கெடுக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பொறுப்புக்களின் சுமை இதயத்தில் கனத்து வழிந்தாலும் இராமனுக்கென்னவோ படை குடைகளின்றி ஆள் சேனை அம்பாரிகள் இன்றி தேசாந்திரியாய் மலைச் சாரல்களிலும் நதி ஓரங்களிலும் அலைந்து திரியும் அந்த அனுபவம் சுகமாய்த்தான் இருக்கிறது. வனவாச நாட்களின் சுதந்திரத்தை நீண்ட இடைவெளிக்குப் பின் அவனால் பூரணமாக உணர முடிந்தாலும்,சீதையும் இலக்குவனும் உடனிருந்து இனிமை சேர்த்த வசந்த காலங்கள் இனிமேல் திரும்ப இயலாத இறந்த காலங்கள் என்ற கசப்பான உண்மையும் அவன் நெஞ்சில் முள்ளாய் இடறத் தவறவில்லை.

ஒரு கோடைப் பருவத்தின் முடிவில் தொடங்கிய பயணம் அடுத்ததொரு கோடையின் ஆரம்பத்தை எட்டும்போதுதான் வித்தியாசமான அந்தக் காட்சி இராமனுக்குப் புலனாகிறது.அடுக்கடுக்காய் மலைத் தொடர்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் சூரியச் சூடு தீர ஊற்றுநீரைப் பருகி விட்டுத் தலை நிமிர்கையில் பரந்து விரிந்திருக்கும் அரசமர நிழல் ஒன்றில் கறுத்து மெலிந்து எலும்புக் கூடாய்ப்போன உருவம் ஒன்று தலை கீழாய்ச் சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் காட்சியை அவன் காண்கிறான்.கண்கள் மூடிய நிலையிலிருக்கும் அந்த மனிதனின் உதடுகள் விடாமல் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதை வைத்து அது ஒரு தவம் என்ற உண்மையை அவன் அறிந்து கொள்கிறான்.

தவம் செய்பவனின் விழிகள் தாமாக விலகும் வரை அங்கே பொறுமையுடன் காத்திருந்த இராமன்,அவனுக்கு வணக்கம் செலுத்த அந்தத் தவஞானியோ திடுக்கிட்டுப் போகிறான்.

‘’இராமா..! நீயா..? உண்மையிலேயே நீதானா ?’’

‘’தவமுனியே தாங்கள் என்னை அறிவீர்களா?’’

‘’குடிமக்களைத் தனித்தனியே அறிந்து கொள்ள ஒரு மன்னனுக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்….ஆனால் உன்னைப்போன்ற ஓர் அரசனைத் தெரிந்து கொள்ளாத குடிமக்கள் இருக்க முடியுமா ராமா..’’

‘’தாங்கள் யார் என்பதையும் தனிமையான இந்தக்காட்டுச் சூழலில் தாங்கள் எந்த நோக்கத்திற்காக இந்தத் தவத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிந்து கொள்ளலாமா பெரியவரே?’’

‘’பொதுவாகத் தவம் என்பதே தனி மனித முக்திக்காக மேற்கொள்ளப்படுவதுதான்! சம்புகனாகிய என் தவமும் இந்த நடைமுறையை ஒட்டியதுதான் என்றாலும் என் செயலுக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணியும்,அழுத்தமானதொரு சமூகக் காரணமும் கூடுதல் துணையாக இருக்கின்றன ராமா’’
’’அதனை நான் தெரிந்து கொள்வதில்..?’’

‘’அரசன் என்ற முறையில் அது பற்றி நீ கட்டாயம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் ராமா..’’-பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி தன் கதையைத் தொடர்கிறான் சம்புகன்.

‘’என்றோ யாரோ வகுத்து விட்டுப் போன வருணப் பாகுபாட்டின் வேர்கள் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கும் இந்த மண்ணில் கடைப்பட்ட ஒரு சாதியில் பிறந்தது என் குற்றமில்லை! ஆனால் நான் பிறந்த இனத்துக்குப் பொருந்தாத வகையில் வேதங்களைப் பயில்வதிலும் அவற்றின் உட்பொருளை அறிவதிலும் என் நாட்டம் சென்றதுதான் நான் செய்த பெரும் குற்றம்உலகத்தோடு ஒட்டாதவன் என்று நான் பிறந்த குலம் என்னை ஒதுக்கி வைக்க,நான் தேடிச் சென்ற வைதீக நெறியோ நான் அதற்கு அருகதையற்றவன் என்று தன் கதவுகளை இறுக மூடிக்கொண்டது.ராமராஜ்யத்திலும் கூட சமநீதி இல்லையென்றால் உலகின் எந்த மூலைக்குச் சென்று அதை எவ்வாறு பெறுவது?என்னுள் வெறி மூண்டது….தவம்..! கடுந்தவம்..! உடம்பில் ஜ்வாலை மூள மூளக் கடுந்தவம் செய்து இந்த உடம்போடு சொர்க்கம் புக வேண்டும். வேதத்தின் வழியை எனக்குக் காட்ட மறுத்தவர்களும் கூட எட்டியிருக்காத ஒரு சிகரத்தை நான் வென்று காட்ட வேண்டும்இதுவே இன்று என் முன் இருக்கும் ஒரே சிந்தனை! ஒரே லட்சியம்..!’’

-இராமனின் சிந்தனையில் பளீரென்று ஒரு மின்னல் வெட்டுகிறது.குழந்தைச் சாவுகளைக் காரணம் காட்டிச் சம்புகனின் தவத்தைத் தடுப்பதற்காக….அவன் தங்களை விட மேன்மை பெறுவதைக் குலைப்பதற்காக அயோத்தி அந்தணர்கள் தீட்டிய சதித் திட்டத்திற்குத் தான் கருவியாகி விட்டோம் என்ற அவலம் அவனுள் கொடுமையாக உறைக்கிறது! அதே வேளையில் அவன் கைகள் அனிச்சையாகக் கோதண்டத்தை வளைத்துச் சரம் தொடுக்க ஆயத்தமாகின்றன.

’’சம்புகரே உங்கள் வாதம் நியாயமானதுதான்….ஆனாலும் இந்த யுகத்தின் தர்மங்கள் வரையறுக்கப்பட்டவை….அவற்றின் எல்லைக் கோடுகளை எவர் மீறினாலும் அவர் தண்டனைக்குரியவரே..’’

‘’ராமா..நீ….நீ...என்ன சொல்கிறாய்…? நீ என்னைத் தண்டிக்கப் போகிறாயா?’’

‘’ஆமாம் சம்புகரே ! உங்கள் நோக்கம் உன்னதமானதென்றபோதும் இந்த யுகம் விதித்துள்ள அறக்கோட்பாடுகளின்படி நீங்கள் சார்ந்திருக்கும் வருணத்தவர் தவம் செய்ய அதிகாரமற்றவர்கள் ! ஒரு செயலைச் செய்யும் அதிகாரமற்றவர்கள் வரம்பு மீறி அதில் முனையும்போது அதைத் தடுக்கும் பொறுப்பு அரசனுக்குரியதாகிறது..’’

‘’ராமா நீயா இப்படிப்பேசுவது? குகனோடு ஐவராகிக் குரங்குத் தலைவன் சுக்கிரீவனைக் கூட்டாளியாக்கி சடாயுக் கழுகிற்கு ஈமச்சடங்கு முடித்து..விபீஷணனுக்கு அடைக்கலம் அளித்த நீயா இப்படிப் பேசுவது? அந்த நிகழ்ச்சிகளில் பொதிந்து கிடக்கும் செய்திகளெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டதா என்ன?’’
இராமனின் தசைநார்களில் ஓர் இறுக்கம் படர,உணர்ச்சியற்ற குரலில் பசையற்ற சொற்களை உதிர்க்கிறான்.

‘’நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்கள் இராமன் என்ற தனி மனிதனுக்குரியவை.உங்கள் முன் இப்போது நிற்கும் இராமன் யுகதர்மம் என்னும் நியதிகளால் கைவிலங்கிடப்பட்ட ஓர் அரசன்! அந்த தர்மங்கள் சட்ட பூர்வமாக மாற்றியமைக்கப்படாதவரை தன்னிச்சையாக அவற்றை மாற்றியமைக்க உரிமை பெறாத ஓர் அரசன்..’’
-தலைகீழ் நிலையில் அதுவரை தவம் செய்து கொண்டிருந்த சம்புகன் அந்த நிலையைத் துறந்து மெள்ள எழுதுகிறான்.கணை தொடுக்க ஆயத்தமாகத் தன் முன் நிற்கும் ராமனின் கோலத்தை முழுமையாக அளந்தபின் விரக்தியான சிரிப்பொன்று அவன் இதழ்க்கடையில் விரிகிறது.

‘’சற்று முன்னர் முதன்முதலாக உன் தரிசனம் கிடைத்தபோது மோட்சத்தின் மூல வித்தே என் கண் முன்பு பிரசன்னமாகி விட்டதைப்போலப் புல்லரித்து நின்றிருந்தேன்…உயிர்க்குலங்களிடையே பேதம் காட்டாத ஓர் உத்தமனைக்கண்ட மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தேன்.இப்பொழுதோ ஒரு சந்தர்ப்பவாதியின் கைகளால் என் சாவு நிகழப்போகிறதோ என்று சஞ்சலப்படுகிறேன்.அரசுப்பொறுப்பில் ராமனும் கூட ஒர் சந்தர்ப்பவாதியாக மற முடியும் என்றால் இந்த வாழ்க்கையில்தான் என்ன அர்த்தமிருக்கிறது…? என்னைக் கொன்று என் வாழ்வை முடித்து விடு ராமா..’’
-சம்புகனின் வார்த்தைகள் முற்றுப்பெறுவதற்குள் இராமனின் இலக்குத் தவறாத பாணம் அவன் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வந்து சாதுவாய்த் திரும்பி வந்து தன் தலைவனின் அம்பறாத் தூணியில்பதுங்கிக் கொள்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

’நீ ஒரு சந்தர்ப்பவாதி!’-மலை முகடுகளில் பள்ளத்தாக்குகளின் பாதாள ஆழங்களில் முட்டி மோதி எதிரொலிக்கும் இந்தக்குரல் சம்புகனுடையதா…?அன்று சைல மலை அடிவாரத்தில் ஒலித்து இன்று சரயு நதி தீரம் வரை விரட்டிக்கொண்டு வந்திருக்கும் தன் மனச்சாட்சியின் குரலாகவே இராமனுக்கு அது ஒலிக்கிறது.

‘சம்புகன் சொல்வதில் தவறென்ன? குகனிடம் தேனும்,மீனும் பெற்றுத் தோழன் என்று தழுவினேன்.அவன் கங்கையைக் கடக்க ஓடம் தந்தான்; சபரியிடம் எச்சில் கனி உண்டேன்.சுக்கிரீவனிடம் செல்ல அவள் வழி சொன்னாள்;சுக்கிரீவனை அரசனாக்கினேன்.அவனோ இலங்கைச் சேனையை எதிர்கொள்ள ஒரு பட்டாளத்தையே துணையாய்த் தந்தாள்.’வெளியே’இருந்து மதிப்பிடும்போது இவைகளெல்லாம் சந்தர்ப்பவாதமேயன்றி வேறென்ன?

‘உண்மையிலேயே ஆன்ம ஒற்றுமை கொண்ட அழுத்தமான பிடிப்போடு நான் வழங்கியிருக்கும் சமநீதிகள் என்றால் நான் அரசனான பிறகு அதனைச் சட்டமாக்க…புதிய தர்மமாக்கத் தவறியது ஏன்? இரட்டை வேடம் போடுவதைப்போல் என் ஒவ்வொரு செயலையும் மனித அறமென்றும்,அரச தர்மம் என்றும் பிரித்துப்பேசி முகமூடிகளை மாற்றி மாற்றி அணிந்து கொண்டு வந்தேன். இன்று என் முகத்திரை இந்த சம்புகனால் முற்றாகக்கிழிந்தது….பளுவாக இதுவரை அழுத்தி வந்த பாவ மூட்டைகளின் சுமையால் ஏற்கனவே இற்றுப்போய்விட்ட என் முதுகை முறிக்கப்போகிற இறுதித் துரும்பு இந்த சம்புகன் வதம்! சாதிகளற்ற மனிதத்தை உருவாக்கக் கிடைத்த அரியதொரு வாய்ப்பைத் தவற விட்ட இந்தப் பிறவி இந்த இறுதித் துரும்பினாலேயே…சம்புக வதத்தினாலேயே முற்றுப்பெறட்டும்!’’

சரயு நீரைக் கண்ணில் ஒற்றித் தலையில் தெளித்தபடி ஆற்றில் இறங்கி அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் இராமன்…எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய்த் தெரிகிறது.

[நன்றி;செம்மலர்]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....