துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.1.11

’இருவேறுலகம் இதுவென்றால்.....’


அன்று விடிந்த அந்தப்பொழுது.., ஏதோ ஓர் அசாதாரணத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டிருப்பது போல அவளுக்குப்பட்டது.அறையின் மூலையில் உள்ள நார்க்கட்டிலில் மரக்கட்டையைப் போல அசைவற்றுப் படுத்துக் கிடந்தான் கலைப்பிரியன்.இயற்கை உபாதைகளுக்காகவும்கூட நேற்றிரவு அவன் தன்னை எழுப்பியிராதது ராதாவின் மனதுக்குள் நெருட...,அவன் முகத்தருகே கை வைத்துப் பார்த்தாள் அவள்.
திக்கித் திக்கிப் பாடம் ஒப்புவிக்கிற மாணவனாய்ச் சுவாசம் அவனிடமிருந்து தயங்கித் தயங்கி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

26.1.11

தேன் குரலுக்கு விருது

தேன் தடவிய குரலில் இசையைக் கசிய விட்டு, உணர்வு பூர்வமான தனது உட்கலப்பால் உரிய ‘பாவ’ பேதங்கள் காட்டிக் கேட்போரை வசீகரிக்கும் மாயத்தைச் செய்பவர் எஸ்.பி.பி.
 குடியரசு நாளான இன்று (26/01/11) அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்
பத்மபூஷண் விருதைக் கொண்டாடுவதற்காக....
அவரது பாடல்களில் என்னை உருகிக் கரைய வைக்கும் பலவற்றுள்.
தேனே தென்பாண்டி மீனே என்ற பாடல் மட்டும் பகிர்வுக்கு இங்கே....

ராஜாவின் இசையும் பாலுவின் குரலும் காதுக்குள் இசைத் தேனாய்ப் பாய்ந்து நம்மை மூழ்கடிக்கும் இந்தப் பாடல் இரவின் மோனத்தையும் , தனிமையின் சோகத்தையும் ஒரு சேரச் சுமந்து வருவது.
பத்மபூஷண் எஸ்பி.பி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.


பி.கு; இந்தப் பாடலை விடவும் பாலச்சந்தரின் அக்கினி சாட்சி (சிவகுமார்,சரிதா நடிப்பில்)படத்தில் அவர் பாடும்‘கனாக் காணும் கண்கள் மெல்ல’ பாடலே எனது எஸ்.பி.பி பட்டியலில் முதலிடம் பெறுவது.
என்னைக் கசிந்து உருகிக் கண்ணீர் மல்க வைப்பது..
ஒரு முறை எஸ்.பி.பி தந்திருந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அந்தப்பாடலைக் கேட்ட பிறகே , தான் உறங்கச் செல்வது வழக்கம் என்று கூடக் குறிப்பிட்டிருந்தார்.
யூ டியூபில் தேடிப் பார்த்தபோது அது கிடைக்கவில்லை..
நண்பர் எல்.கே அவர்கள் அனுப்பி வைத்த இணைப்பால் அந்தப் பாடலும் கூடவே...



தினமணியில்...

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றபோது வெளியான தினமணி நாளிதழில் -14/01/11-
‘உங்களிடம் இருக்கிறதா?’என்ற தலைப்புடன்
என் மொழிபெயர்ப்பில் வெளியான தஸ்தயேவ்ஸ்கியின்
‘குற்றமும் தண்டனையும்’ பற்றிய குறிப்பு வெளியாகி இருப்பது தற்போதுதான் என் கவனத்துக்கு வந்தது.
(இங்கே புது தில்லியில் தினமணி கிடைப்பது மிக அபூர்வம்)
வாசகர்களுடனான பகிர்வுக்காக இங்கே அச் செய்தித் தாள் பக்கம்

..
பி.கு; குறிப்பிட்ட செய்தித் துணுக்கு பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்ட புது தில்லி அகில இந்திய வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
திரு குருமூர்த்தி அவர்களுக்கும், நான் அது குறித்து விசாரித்த மறுநாளே மின் அஞ்சல் வழி அச் செய்திப் பக்கத்தின் கோப்பை எனக்கு அனுப்பி உதவிய அன்பிற்குரிய எழுத்தாளநண்பர்-தினமணி உதவி ஆசிரியர் திரு தமிழ்மகன் அவர்களுக்கும் என் நன்றி.

23.1.11

தாகூரின் தாக்கத்தில்.....


இலக்கியப் படைப்பு, இலக்கிய ரசனை ஆகியவற்றில் ஈர்ப்புக் கொண்டவர் எவராயினும் தாகூர்,பாரதி என்னும் இரு மகாகவிகளின் தாக்கம் பெறாதவர்களாக அவர்கள் இருப்பதென்பது, சாத்தியமில்லை.

மொழியும் அதன் அழகும் என்னை வசீகரிக்கத் தொடங்கிய இளம் பருவத்தில் தமிழின் வழியாக,பாரதியை நேரடியாகக் கண்டடைய முடிந்ததைப் போல்,தாகூரின் வாழ்வையும்,அவரது படைப்புக்களையும் தமிழின் மொழியாக்க நூல்கள் வழியே(குறிப்பாக த.நா.குமாரஸ்வாமி)நான் கண்டு கொண்டேன்.
செல்வச்செழுமை வாய்ந்த குடும்பத்தில் பிறக்க நேர்ந்தாலும் அதிலிருந்து ஒதுங்கி விலகி...ஒரு தனிமை விரும்பியாய்...மரபு சார் கல்வியின் பால் தனது எதிர்ப்புணர்வைப் பதிவு செய்பவராகத் தாகூரின் இளமைப் பருவம் கழிந்திருப்பதை முதன்முதலாக நான் அறிந்து கொள்ள நேர்ந்தபோது ஒற்றைக் குழந்தையாகப் பிறந்து தனிமை என்பது நிர்ப்பந்தமாக்கப்பட்ட நிலையில் என் உள்ளமும் கூட அந்த வகையான உணர்வுகளின் ஒத்த அலைவரிசையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை- நான் அறிந்து கொள்ள நேர்ந்தது.

பிறகு கல்லூரிக்காலம் வரை மொழியாக்க நூல்கள் மூலமாகவே நான் தாகூரின் சிறுகதைகள்,நாவல்கள்,கவிதைகள் என அனைத்தையும் வாசித்துக் கொண்டு வந்தேன்.
குறிப்பிட்ட அந்த இலக்கிய வடிவங்களுக்கான இலக்கணம் இன்னதென்பது புரிபடாத ஒரு பருவத்திலும்கூட, அவை குறித்த அடிப்படைப் புரிதலும், கவிதை மற்றும் சிறுகதை ஆக்கங்களை உருவாக்க வேண்டும் என்னும் பொறியும் என் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டதற்குத் தாகூர் சார்ந்த தொடர்ந்த என் வாசிப்பும் முதன்மையான ஒரு காரணமாக இருந்திருத்தல் கூடும்.

கல்லூரி நாட்களில் படிக்க நேர்ந்த தாகூரின் புயல் நாவல்-'The wreck- அவரை ஒரு அகலமான கிழியில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.
சாருலதாவும் காபூலிவாலாவும் போஸ்ட்மாஸ்டரும் வினோதினியும் என்னைப் பலகாலம் அலைக்கழித்ததுண்டு என்றபோதும் என் நெஞ்சுக்கு நெருக்கமாக நான் அடிக்கடி உணர்ந்து இப்போதும் திளைப்பவை..கீதாஞ்சலியின் பல வரிகளே.
குறிப்பாக..

’’நான் பாட நினைத்த பாடல் இன்னமும் பாடப்படாமலேயே இருக்கிறது.
சுருதியை மீட்டுவதிலும்....கலைப்பதிலுமே என் காலம் கழிகிறது
பாடலின் அலைவரிசை கையில் சிக்கவில்லை..
சொற்கோவையும்கூடச் சரிவர இயையவில்லை.....

பாடியே ஆக வேண்டுமென்ற தாகம் மட்டும் நெஞ்சினுள்..’’

என்னும் வரிகளில் வெளிப்படும் தாகூரின் எளிமை..அடக்கம்...
படைப்பின் உச்சம் தொடவேண்டுமென்று--இன்னும் இன்னும் என எழும் தாகம்...
இவையனைத்தும் ஒரு வேதம் போல என்னை ஆட்கொண்டு என்றும் இயக்கி வருபவை;
எழுதியதன் போதாமையை வாசிப்பின் அரைகுறைத்தனத்தைச் சாஸ்வதமாக அறிவுறுத்தியபடி...இன்னும் செம்மைப்பட வேண்டும் என எனக்குப் போதித்துக் கொண்டே இருப்பவை..

‘’சூரியன் மறைந்து விட்டதே என்று அழாதே 
நிலவானது உன் வானிலும் ஒளிரும்
நிலவும் மறைந்து விட்டதே என்று வருந்தாதே
அங்கே
நட்சத்திரங்களாவது கண்சிமிட்டிக் கொண்டிருக்கும்’’
என்னும் தாகூரின் சொற்கள்,தன்னம்பிக்கைப்பாடத்தை எனக்குப் புகட்டியபடி இன்றுவரை என்னுடன் கை விளக்காய்த் துணை வந்து கொண்டிருப்பவை.

தாகூர் ஒரு பாற்கடல்.
அந்தப் பாற்கடலின் தெறிப்புக்கள்  பெரும்பாலான இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்களில் மட்டுமன்றி, வாழ்வின் தருணங்களிலும் உள்ளீடாக ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
என் தருணங்களும் அது போன்றவையே!



18.1.11

சங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்)

தாய்வழிச் சமூக அமைப்புக்கு முதன்மை தரும் இனக் குழுவாழ்க்கை சென்று,தேய்ந்து,மறைந்து சிற்றரசுகளும்,பேரரசுகளும் படிப்படியே தலையெடுக்கத் தொடங்கித் தனிச் சொத்துரிமைநோக்கிய மதிப்பீடுகள் வலுப்பெற ஆரம்பித்திருந்த சங்கக்களத்தில் பெண்ணின் குரல் அன்றைய சமூக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருந்த சட்டகங்களுக்குள் (frame work) எந்த முரண்பாடுகளும் இன்றிப் பொருந்திப் போனதாகவே பெரும்பாலும் ஒலிக்கிறது.

‘’எவ்வழி நல்லவர் ஆடவர்
   அவ்வழி நல்லை வாழிய நிலனே..’’
என்றபடி ஆணுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள சமூக அமைப்பை மறுப்பின்றி ஏற்கும் ஔவையின் எழுத்தும்,
(ஆடவர் ஒழுக்கமானவர்களாக இருந்தால்தான் உலகம் அறவழிப்பட்டதாக இருக்க முடியும் என்பதாலேயே ஔவை ஆடவரை மட்டும் முன்னிறுத்திப் பேசுவதாக இன்றைய மாறிய கண்ணோட்டத்தில் இதற்கு விளக்கம் தருவோரும் உண்டு)
குடும்ப நிறுவனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகப் பிரிவினை போல ஒதுக்கப்பட்டிருந்த பங்கு நிலைகளை
‘’ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
   சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’’
என அமைதியாக ஒத்துக் கொண்டு வழி மொழிந்த பொன்முடியார் பாடலும் இதற்குச் சான்றுகள்.

காதலுக்கும்,வீரத்துக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்ட சங்க காலச் சமூக அமைப்பில் தனது தந்தை,கணவன்,மகன் ஆகியோரின் வீர வெளிப்பாடுகள் கண்டு விம்மிதம் அடைபவளாய்...
புறப்புண் படாமல் இறந்த மகனின் உடலைக் கண்டு
‘’ஈன்ற ஞான்றினும் பெரிது உவப்ப’’வளாய்
ஒரு மகனைத் தவிர வேறு எவருமற்ற நிலையிலும் அவனைச்
‘’செருமுகம் நோக்கிச் செல்’’கென விடுப்பவளாய்..
‘உன் மகன் எங்கே’எனக் கேட்பவர்களிடம்
‘’தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’’
என்றும்,
‘’இந்த வயிறு அந்த வீரப்புலி சிறிது காலம் தங்கியிருந்த ஒரு கற்குகை மட்டுமே’’
என்றும் கூறித் தன்னிறைவு பெற்றுக் கொள்பவளாய்...
இவ்வாறு மட்டுமே பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள்சங்கப் பெண்.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத் தகுதிப்பாட்டின் உயர் இலக்கை எட்டும் ஓர் அடையாளமாகப் புறங்கொடாத மகனை உருவாக்குவதே சிறந்த தாய்ப் படிமம் என்ற சிந்தனையை மாற்றுக் கருத்தின்றிச் சங்கப் பெண் எழுத்து ஏற்றுப் போற்றியிருக்கிறது.

காலப் போக்கில் பரவலாகத் தொடங்கியிருந்த சமயம் சார்ந்த சில மரபுகளின் தாக்கம் பெண்கள் மீதுசுமத்திய சில கொடுமைகளைப் புறநானூற்றுப் பெண் பாடல்கள் சில பதிவு செய்திருக்கின்றன.
ஆயினும் அம் மரபுகளுக்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பதிவு செய்யும் சூழல் இல்லையென்பதாலோ..
அல்லது அவற்றை ஏற்றுப் பணிதலே பெண்மையின் இலக்கணம் எனக்காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டதாலோ
குறிப்பிட்ட கொடுமைகளுக்கு எதிரான விமரிசனங்களை அவை முன் வைக்கவில்லை.
விதவை நிலைக்கு ஆளான பெண்கள் உடன்கட்டை ஏறத் துணிவதாகக் காட்டும் மாறோக்கத்து நப்பசலையும்,பெருங்கோப் பெண்டும் இத்தகைய மரபுகளையோ அவற்றுக்குக் காரணமான அமைப்புக்களையோ பழிக்காமல் , பழைய சோற்றையும்,எள்ளுத் துவையலையும் உண்டு கட்டாந்தரையில் பாயின்றி உறங்கும் விதவை மகளிரையே
‘’கழி கல மகளிர்’’
 ‘’உயவற்பெண்டிர்’
என்றும் பழிக்கின்றனர்.
ஒரு வகையில் இந்தச் சொற்கள் ஆழ்ந்த தன்னிரக்கத்தின் எதிர்மறை வெளிப்பாடுகள் எனக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
கணவனை இழந்த பெண்ணின் கற்பு அவனது இறப்பைத் தொடர்ந்த அவளது செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுத்
தலைக்கற்பு-கணவன் இறந்ததும் தானாகவே மனைவியின் உயிர் நீங்குதல்
இடைக்கற்பு-கணவனை இழந்ததும் மனைவி உடன்கட்டைஏறியோ,தீப்பாய்ந்தோ பிற வழிகளிலோ வலிந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளல்.
கடைக்கற்பு-கணவனைப் பறி கொடுத்த பெண் தொடர்ந்து உயிர் வாழ்ந்தபடி கைம்மை நோன்பு நோற்றல்
எனத் தர நிர்ணயம் செய்யப்படும் ஒரு சமூக அமைப்பில் , கைம்மையால் நேரும் சமூக அவமதிப்புக்களைச் சுமந்து வாழ்வதை விடவும் உடன்கட்டை ஏறி ஒரு கணத்தில் உயிர்நீத்தலே மேலானது என்னும் ஆழ்மன உந்துதலும் கூட இப் பாடல்களின் அடிநாதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

பொன்முடியார் எழுதியுள்ள புறப் பாடல் ஒன்று, மாதவிலக்கில் தீண்டத் தாகாதவளாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போலத் தோற்றுப் போன மன்னனின் குதிரைப்படைகள் கூச்சம் கொண்டு நின்றதாகக் காட்டுகிறது.
’தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக் 
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’’-புறம்;299
பகை நாட்டுப் படைகளின் தயக்கத்தைவெளிக்காட்ட இப்படிப்பட்ட ஓர் உவமையை ஒரு பெண்பாற்புலவர் இயல்பாகக் கையாண்டிருப்பது , மிக அரிதான ஒரு நிகழ்வாகவே இருந்தபோதும் அப்படிப்பட்ட ஒதுக்கம் ஒரு பெண்ண்ணின் உள்ளத்தில் எத்தகையதொரு தாழ்வுணர்ச்சியை விதைத்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் ஆவணமாக இந்தப் பாடல் அமைந்திருப்பது இதைக் குறிப்பிடத்தக்கதாக்குகிறது.

சங்கப் பெண் எழுத்துக்களின் சொல்லாடல்கள் நிறுவன மரபுகளின் பாதிப்புக்களால் தனித்த ஆளுமை சிதைக்கப்பட்ட நிலையில் விளையும் ஆழ்ந்த சோகத்தின் அழுத்தமான சுவடுகளையே நனவு நிலையிலோ,நனவிலி நிலையிலோ பதிவு செய்திருக்கின்றன என்பதை மட்டும் எளிதில் ஒதுக்கி விடுவதற்கில்லை..



16.1.11

நூல் வெளியீடு-ஆய்வுரை

’யுகமாயினி’ சித்தன் அனுப்பி வைத்துள்ள நூல் வெளியீடு ,ஆய்வுரை குறித்த அறிவிப்பு.

11.1.11

'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக....'


கண்ணதாசன் கவிதைகளின் மீது ஆயிரம் விமரிசனங்கள் இருந்தாலும்,'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக..'என்பது போன்ற சில தொடர்களுக்காக அவரைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு விடலாமோ என்று சில வேளைகளில் தோன்றுவதுண்டு.
அவர் குறிப்பிடும் விடிந்தும் விடியாத காலைப்பொழுதைச்
’‘சிற்றஞ்சிறு காலை’’யாகத் தன் திருப்பாவையில் - புலர்த்திக் காட்டிக் கண்ணனை மட்டுமன்றி... இளங்காலையின் அழகையும் ஒலி ஒளிக் காட்சியாய் அகக்கண்ணில் தரிசனப்படுத்துபவள் ஆண்டாள்.

அவளது பாவைப்பாடலில் ....
காலை என்ற வேளை...சின்னதாய் அரும்பு கட்டி..மெல்ல மெல்ல மொட்டாகிப் படிப்படியாய் இதழ் விரித்துப் பின் கதிர் பரப்பி விடிகிறது.

திரு வில்லிபுத்தூர் சென்றிருந்தால் அங்கே ஓங்கி உயர்ந்து நிற்கும் பழமையான வடபத்ரசாயி கோயிலுக்கும் 
(அந்தக் கோபுரமே தமிழக அரசின் அதிகார இலச்சினை)
 பின்பு புதிதாய்க் கட்டப்பட்ட ஆண்டாள் கோயிலுக்கும் இடையே ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதாய்ச்சொல்லப்படும் துளசிப் பாத்தியையும் நந்தவனத் தோட்டத்தையும் கண்டிருக்கலாம்;

ஒரு முறை அங்கே சென்றிருந்த மாலைப் பொழுதொன்றில்  கூடடையும் பறவைகளின் ஒலிக் கலவை கூட்டாய் எழுந்து மனதுக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சியும்,எழுச்சியும் இன்னும் கூட நெஞ்சுக்குள் மிச்சமிருக்கிறது.
என்றோ ஒரு நேரம் எழும் பறவைகளின் ஒலியே அத்தகைய மன எழுச்சியைத் தரக்கூடுமென்றால்...ஒவ்வொரு நாள் விடியலிலும் அந்தப் பறவைகளின் ஒசை கேட்டுத் துயில் கலையும் ஆண்டாளின் கவிமனம் அவற்றின் ஒலி பேதங்களை...எந்தெந்தப் பறவை எந்தெந்த நேரம் கண்விழித்து எவ்வாறு குரல் தரும் என்பதை எத்தனை நுணுக்கமாக உள்வாங்கிக் கொண்டிருக்கக்கூடும் என்பதை எளிதாக அனுமானித்து விடலாம்.

திருப்பாவையின் சிறு காலை..
புள் சிலம்பு’வதோடு தொடங்குகிறது. 
இது...பறவைகள் கண்விழித்து இலேசாகக் குரல் கொடுக்கும் முதல் நிலை.
அடுத்தது புள்ளுக்கே அரசனான கருடனை வாகனமாய்க் கொண்ட திருமாலின் கோயில் திறக்கப்பட்டு விட்டது என்பதன் அறிகுறியாக ஆலயத்தில் முழங்கும் வெள்ளை விளிச் சங்கின் பேரரவம்.
தொடர்ந்து அந்தத் திருமாலை மட்டுமே உள்ளத்தில் தாங்கி வாழும் முனிவர்களும் யோகியரும் தங்கள் அறிதுயிலை மெல்லக் கலைத்து
(உறக்கம் கலைந்து விழிப்பு நிலை வரும்போது தூக்கிவாரிப்போட்டதைப்போல அமைந்து விடாமல் நிதானமாக...படிப்படியாகவே அத் துயில் கலைதல் நிகழ வேண்டும் என்ற அறிவியல் உண்மையினையும் குறிப்பிட்ட இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள்)
அரி..அரி..’என்ற பெயரைப் பெருமுழக்கம் செய்யத் தொடங்கும் அரவம்..

காலை....இன்னும் சற்றுப் புலர ஆரம்பிக்கிறது.
அதன் அறிகுறியாக ‘ஆனைச் சாத்தன்’என்ற பறவையினம் தனக்குள் கலந்து பேசும் பேச்சரவம் கேட்கிறது.
முதலில் கேட்டது, பறவைகள் கண் விழித்ததும் எழுப்பிய மெல்லொலி;
இப்பொழுது கேட்பது, கரிக்குருவிகளாகிய ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் தமக்குள் கீச்சு மூச்சென்று ஆரவாரமிட்டுக் கொண்டு உரையாடும் சற்று உரத்த ஓசை.
ஆண்டாளின் நுண்ணிய கவிமனம்...அந்தக் குருவிகளின் இரைச்சலையும் கூட அவற்றுக்கிடையே நடக்கும் ஓர் உரையாடலாகப் பார்க்கிறது.
பறவைகள் எழுப்பிய பலதரப்பட்ட ஓசைகள் ஆய்ச்சியரைக் கண்விழிக்கச் செய்ய...அவர்கள் தங்கள் காலைப் பணியைத் தயிர் கடையும் ஒலியோடு துவங்குகிறார்கள்.
பெருமளவில் தயாரிக்கப்பட்டாலும் கூட் மத்தினால் தயிர் கடையும் ஒலி பேரோசையாக இருக்க வாய்ப்பில்லை ; அதனாலேயே அத் தொழிலில் அவர்கள் மேற்கொள்ளும் அசைவினால்,அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் குலுங்கிச் சத்தமிடுவதையும் கூடவே இணைத்தபடி.. 
.’காசும் பிறப்பும் கலகலப்ப’என்கிறாள் ஆண்டாள்.
ஆயர் குலப் பெண்கள் கழுத்தில் அணியும் அச்சுத் தாலியும்,ஆமைத்தாலியுமே காசு,பிறப்பு என்று குறிக்கப்படும் அணிகலன்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், நால்வகைப் பா இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய ஆண்டாள் வெண்பாவின் கூறுகளாகிய காசு,பிறப்பு ஆகியவற்றையும் உட் செரித்து உரிய இடத்தில் வெளிப்படுத்தும் நுட்பம் சிறப்பானது.

அடுத்த படிநிலையாகக் கீழ் வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது.
எருமைகள் பனி படர்ந்த புல்லில் மேய்வதற்காகச் சிறு தோட்டங்களை நாடி மென்னடை இடத் தொடங்குகின்றன.
 பரந்த மேய்ச்சல் வெளிகளுக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு முன்பு , அருகிலுள்ள சின்னத் தோட்டங்களில் கால்நடைகள் அப்போதைக்குச் சற்று மேய்ந்து திரிவதுண்டு ; இந்த நுணுக்கமான வேறுபாட்டையே உணர்த்திக் காட்டுகிறது ’சிறுவீடு மேய்வான்..’என்னும் தொடர்.

இறுதி நிலையாக வருவது....,வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும் அரிய வானியல் காட்சி.
புலரும் காலையில் வியாழக் கிரகம் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து கொள்வதும், சுக்கிரன் என்னும் விடி வெள்ளி பளிச்செனக் கண்ணில் படுவதும் இயற்கையோடு ஒன்றிக் கலந்து வாழ்பவர்களுக்கு அன்றாடம் அனுபவமாகியிருக்கும் ஒரு தினசரி நிகழ்வுதான் என்றாலும்..
‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’
என்ற பாவைப்பாட்டு வரிகள் அந்த அனுபத்தை அழியா ஓவியமாக்கி மனதில் நிலைநிறுத்தி விடுகின்றன.

காலையின் மற்றொரு அடையாளமாகச் செங்கழுநீர்ப்பூக்கள் வாய்நெகிழ்த்தி விரியத் தொடங்க...ஆம்பல்கள் வாயடைத்துக் கூம்புகின்றன.

மீண்டும்....உரத்த குரலுடன்...புட்களின் சிலம்பல்.
ஆலயச் சங்கின் முழக்கம்....

இயற்கையாக நிகழும் இத்தனை பின்னணி ஒலிகளொடு குள்ளக் குளிரக் குடைந்து நீராடிப் பாவை நோன்பியற்றும் பெண்கள் , தங்கள் தோழியர் வீட்டு முற்றத்தில் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடும் ஒலிகளும் இறுதியாகப் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.
காலை விடியலைக் காணாமல் ‘கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருண’னைப் போல உறங்கும் சக தோழிக்குக் காலையின் ஒலி,ஒளிக் காட்சிகள்,
ஆண்டாளின் வாய்மொழியில் விரியும் வரிசை இது......
‘’புள்ளும் சிலம்பின காண்’’

‘’புள்ளரையன் கோயில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம்’’

’’முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்’’

‘’கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
  பேசின பேச்சரவம்..’’

‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
   வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
   ஓசைப்படுத்த தயிரரவம்..’’

‘’கீழ் வானம் வெள்ளென்று..’’

‘’எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன’’

‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’

‘’புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின..’’
இறுதியாகப்
’ 'பாவைக்களம் புக்க பிள்ளைகள்’’,மனதுக்கினியானைப்பா’’டும் பாட்டொலிகள்..

பதட்டமும்.. நெருக்கடிகளுமாய்ப் பிற புலன் மயக்கங்கள் அதிகம் கூடிப் போயிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்திருக்கும் இன்பங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் அவற்றில் விடியலின் அழகைத் தவற விட்டிருப்பதும் தென்படக் கூடும்.
தற்செயலாகக் கண்ணில் தட்டுப்படுவதன்றி.
.’’நிலாப் பார்ப்பதற்கென்று நிலாப் பார்த்து நாளாயிற்று’’ என்கிறது கல்யாண்ஜி(வண்ணதாசன்)யின் ஒரு கவிதை.


விடியலின் அழகை நாம் வியந்து ரசித்த காலமும் கூடத் தொலைந்து கை நழுவிப் போய்க்கொண்டேதான் இருக்கிறது.
தொலைக்காட்சிகளும்...கணினிகளும்...பின்னிரவுப் பொழுதுபோக்குகளும் தின்று முடித்த இரவின் இன் துயிலைச் சூரியச் சூட்டின் எரிச்சலோடு கலைத்தபடி கண்விழிக்கிற தலைமுறைக்கு இளங்காலை இனிமைகளின் அருங்காட்சி சாலையாக....தொல் புராதனச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கப் போகும் திருப்பாவை.,.வெறும் விடிகாலை பஜனை மட்டுமல்ல.
சிற்றஞ்சிறு காலையை .....அது மெல்ல விடியும் பேரழகை , அந்த மோனப் பொழுதில் கேட்கும் பல்வகை ஒலிக் கூட்டுகளை அசை போட்டு ஆராதிக்க வைத்த ஒரு சிறுநடைப் பயணம்..அது



10.1.11

ஒரு பட்டியல்

என் குட்டி நூலகத்துக்குள்(இது அல்ல..) நுழையும் தருணங்களிலெல்லாம் மலைப்புத் தட்டுகிறது...
ஏக்கம் மேலெழுந்து நெஞ்சைக் கவ்வுகிறது...
இவற்றையெல்லாம் என்று படித்து முடிப்போம் என நினைப்பதற்குள் மனதில் புதிய பட்டியல் தயாராகப் புதிய வரவுகள் வந்து சேர்ந்து விடுகின்றன.

7.1.11

’கூதிர்ப் பானா’ளும்,குளிரும் தலைநகரும்...

நக்கீரரின் நெடுநல் வாடையில் வரும் குளிரும் பனியும் கூதிரும் வாடையும் அனுபவித்துப் படிக்கும்போது ரசனைக்குரியவையாக இருந்தவைதான்...!.

6.1.11

அசோகமித்திரனுக்கு ‘சாரல்’விருது

இன்றைய சூழலில் திரைப்படம் மற்றும் பிற ஊடகத் துறைகள் தமிழ் இலக்கியத்தின்பால் உண்மையான ஆர்வத்துடன் நெருங்கி வந்து கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு.
நல்ல இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கும்,

3.1.11

அசடன் வெளியீடு:இணைப்புக்கள்

இளவர்சன் மிஷ்கின்/இடியட்-அசடன்
மார்ச் 2011 இல் வெளிவர இருக்கும் எனது மொழியாக்க நூலாகிய ‘அசடன்’நாவலை (http://www.masusila.com/2010/12/blog-post_11.html)
(மூலம்;தஸ்தாயெவ்ஸ்கி-ஆங்கில வழி மொழியாக்கம்)
வாழ்த்தி வரவேற்று அதன் முன் வெளியீட்டுத் திட்டம் குறித்த செய்தியை
எழுத்தாளர்கள் திருஜெயமோகன் ,திரு எஸ்.ராமகிருஷ்ணன்ஆகிய இருவரும்
தங்கள் வலைத் தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அவர்கள் இருவருக்கும் என் நன்றி.

இணைப்புகள்;
http://www.jeyamohan.in/?p=10740
http://www.sramakrishnan.com/?p=2066

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....