துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.1.18

தினமணி.காமில் தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து...



இந்தக் கட்டுரையை எழுதியே தீர வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.
ஆண்டாளின் புகழையோ இலக்கியப்பெறுமானத்தையோ நான் 
உயர்த்திப்பிடித்தால்தான் உயரப்போகிறது என்பது இல்லை.
நான் எழுதுவதாலோ எழுதாமல் இருப்பதாலோ  எந்த மாற்றமும் எதிலும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

ஆனால் இதை  இப்போது நான் பதிவு செய்யாவிட்டால் - 
இதை எழுதத் தவறினால் 
நான் படித்த தமிழும் நான் ரசித்த ஆண்டாளும் வீண் என்ற குற்ற உணர்வு என்னைக்கொல்லும்.

ஆண்டாள் என்ற பெண்ணோடு நான் கொண்டிருக்கும்மானசீக நட்பும்
அவள் தமிழ் மீதான என் நேசமும் மட்டுமே  இதை எழுதத் தூண்டியவை

.சார்பு நிலைப்பாட்டுக்கோ காழ்ப்புணர்வுக்கோ இடம் தராமல் கருத்தைக் கருத்தால் மட்டும் எதிர்கொள்ள இக்கட்டுரையை ஒரு வழியாக வடிகாலாகக் கொண்டிருக்கிறேன். 


இக்கட்டுரையை வெளியிட்டு என் வடிகாலுக்கு- வேறொரு மாற்றுக் கருத்துத் தரப்புக்கு வழி அமைத்துத் தந்த தினமணி.காமுக்கு என் நெகிழ்வான நன்றி..

தினமணி.காமில்
என் கட்டுரை...




.

11.1.16

மூடிய நெய்யும்,கூடார வல்லியும்..

பொங்கலை மூடியிருக்கும் நெய்யைப்போல நம்மை மூடியிருக்கும்                                    அறியாமைகள்தான் எத்தனை எத்தனை?

இலக்கிய வரிகள் சில, காலப்போக்கில் தேய்ந்து போய் வேறுவகையாக மாறி விடுவதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆண்டாள் திருப்பாவையின் இருபத்தேழாம் பாடலின் தொடக்கமான ‘’கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா’’கூடாரவல்லியாய்த் திரிந்து போன கதை.

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா என்று தொடங்கும் பாடல் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்’’என இனிய முரணோடு முடிகிறது; மால் தன்னைக்கூடாதவருக்குக் கொடியவன்,தன்னைச்சேர்ந்தவர்களுக்குத் தண்மையானவன்,குளிர்ச்சி தருபவன். இந்தக்கூடல் கூடாரவல்லியாய் மாறி, இந்த நாளின் பெயரே ‘கூடாரவல்லி’என்று மருவி விட்டது விநோதம்தான்..

மார்கழி நோன்பின் நிறைவைச்சொல்லும் இந்தப் பாடலில் ’’மூட நெய் பெய்து முழங்கை வழி வார’’ பாற்சோறுசெய்துகூடியிருந்து உண்போம் என்றும் வருவதால் ’கூடாரவல்லி’யாக ஆக்கப்பட்ட இந்த நாளில் பொங்கல் படைத்து நிவேதனம் செய்து உண்ணும் வழக்கமும் தொடங்கியது,.

மார்கழி நோன்பு வெற்றியாக முடிந்து என்றென்றும் கண்ணன் திருவடியில் அவனுக்குத் தொண்டு செய்யும் பெரும்பேறு மட்டும் வாய்த்து விட்டால்- நோன்புக் காலத்தில் நெய்யுண்ணாமல் பாலுண்ணாமல்  துறந்திருந்த நல்லுணவை உண்போம்,மையிட்டெழுதி மலரிட்டு முடியாமல் விட்ட ஒப்பனைகளைப் புனைந்து கொள்வோம் என்று வரிசையாகச்  சொல்லி வரும் பாடல் இது.  ’மூட நெய் பெய்து முழங்கை வழி வார’’நெய்யால் முழுக்காட்டி  சர்க்கரை  இட்ட பாற்சோற்றைக் கையில் எடுத்தால் முழங்கை வழி அந்தநெய் வழிந்து வர வேண்டும் என்பதுதான் இதில் நாம் வெளிப்படையாகக்காணும் பொருள்,எல்லோரும் சொல்லும் பொருள்.
திவ்வியப்பிரபந்த உரைகாரர்கள் வியாக்கியான கர்த்தர்கள் அதற்குத் தரும்  விளக்கம் வேறு. கண்ணனைக்கண்டு விட்ட திகைப்பில்.....அவனைப்பணிந்து அவனது பெயர்கள் பலவற்றை சொல்லி அவன்  புகழ் பாடிய பரவசத்தில்  உள்ளங்கையில் ஏந்திய பொங்கலை உண்ண வேண்டும் என்பதும் கூட அந்தப்பெண்களுக்கோ அல்லது பரமாத்மாவைச்சேர வேண்டும் என்ற பசியோடு இருக்கும் ஜீவாத்மாக்களுக்கோ மறந்து போகக் கையில் எடுத்த பொங்கலிலிலிருந்து நெய் வழிவதைக்கூடக் கண்டு கொள்ளாத பிரமிப்பில் அவர்கள் அமிழ்ந்து போய்க்கிடக்கிறார்களாம்....அதனாலேதான் உண்ணப்படாத அந்த நெய் முழங்கை வழி சொரிகிறதாம்.

நோன்புக்கு முன்  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று தவிர்த்தவர்கள் இப்போது நோன்பு முடிந்து இறைப்பேறு  கிடைத்த பின்  அதை உண்ணமுடியாத   வேறொரு உன்னத நிலை[SUBLIMITY]க்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்கள்..அப்போது நெய்யும் பாலும் அருந்துவது  அவர்களுக்கு ஒரு பொருட்டாக அல்லாமல் உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் கண்ணன் மட்டுமே என்று ஆகிப்போகிறது!
பொங்கலை மூடியிருக்கும் நெய்யைப்போல நம்மை மூடியிருக்கும் அறியாமைகள்தான் எத்தனை எத்தனை?

தொடர்புடைய பதிவுகள்

'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக....'


25.12.11

’பறவைகள் ஒலி கேட்டேன்...’

வடபத்ரசாயி ஆலயம்
மதுரைக்கு மிக அருகிலேயே வில்லிபுத்தூர் இருந்தாலும் ஆண்டாளை நான் சற்றுத் தாமதமாகத்தான் கண்டு கொண்டேன்...
இலக்கியத்தில் அல்ல.
அவளது சிலா வடிவத்தையும் அவள் பிறந்த பூமியையும் காண்பதில்தான்...

ஒரு புறம் ஓங்கி நிற்கும் பழமையான வடபத்ரசாயி ஆலயம்,மறுபுறம் பின்னாளில் உருவாக்கப்பட்ட ஆண்டாள் கோயில்..இரண்டுக்கும் இடையே அவள் ஜனித்த அல்லது கிடந்து கண்டெடுக்கப்பட்ட துளசிவனம்.என் ஆர்வம்...இடையிலிருந்த இடத்துக்குத்தான்...

11.1.11

'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக....'


கண்ணதாசன் கவிதைகளின் மீது ஆயிரம் விமரிசனங்கள் இருந்தாலும்,'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக..'என்பது போன்ற சில தொடர்களுக்காக அவரைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு விடலாமோ என்று சில வேளைகளில் தோன்றுவதுண்டு.
அவர் குறிப்பிடும் விடிந்தும் விடியாத காலைப்பொழுதைச்
’‘சிற்றஞ்சிறு காலை’’யாகத் தன் திருப்பாவையில் - புலர்த்திக் காட்டிக் கண்ணனை மட்டுமன்றி... இளங்காலையின் அழகையும் ஒலி ஒளிக் காட்சியாய் அகக்கண்ணில் தரிசனப்படுத்துபவள் ஆண்டாள்.

அவளது பாவைப்பாடலில் ....
காலை என்ற வேளை...சின்னதாய் அரும்பு கட்டி..மெல்ல மெல்ல மொட்டாகிப் படிப்படியாய் இதழ் விரித்துப் பின் கதிர் பரப்பி விடிகிறது.

திரு வில்லிபுத்தூர் சென்றிருந்தால் அங்கே ஓங்கி உயர்ந்து நிற்கும் பழமையான வடபத்ரசாயி கோயிலுக்கும் 
(அந்தக் கோபுரமே தமிழக அரசின் அதிகார இலச்சினை)
 பின்பு புதிதாய்க் கட்டப்பட்ட ஆண்டாள் கோயிலுக்கும் இடையே ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதாய்ச்சொல்லப்படும் துளசிப் பாத்தியையும் நந்தவனத் தோட்டத்தையும் கண்டிருக்கலாம்;

ஒரு முறை அங்கே சென்றிருந்த மாலைப் பொழுதொன்றில்  கூடடையும் பறவைகளின் ஒலிக் கலவை கூட்டாய் எழுந்து மனதுக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சியும்,எழுச்சியும் இன்னும் கூட நெஞ்சுக்குள் மிச்சமிருக்கிறது.
என்றோ ஒரு நேரம் எழும் பறவைகளின் ஒலியே அத்தகைய மன எழுச்சியைத் தரக்கூடுமென்றால்...ஒவ்வொரு நாள் விடியலிலும் அந்தப் பறவைகளின் ஒசை கேட்டுத் துயில் கலையும் ஆண்டாளின் கவிமனம் அவற்றின் ஒலி பேதங்களை...எந்தெந்தப் பறவை எந்தெந்த நேரம் கண்விழித்து எவ்வாறு குரல் தரும் என்பதை எத்தனை நுணுக்கமாக உள்வாங்கிக் கொண்டிருக்கக்கூடும் என்பதை எளிதாக அனுமானித்து விடலாம்.

திருப்பாவையின் சிறு காலை..
புள் சிலம்பு’வதோடு தொடங்குகிறது. 
இது...பறவைகள் கண்விழித்து இலேசாகக் குரல் கொடுக்கும் முதல் நிலை.
அடுத்தது புள்ளுக்கே அரசனான கருடனை வாகனமாய்க் கொண்ட திருமாலின் கோயில் திறக்கப்பட்டு விட்டது என்பதன் அறிகுறியாக ஆலயத்தில் முழங்கும் வெள்ளை விளிச் சங்கின் பேரரவம்.
தொடர்ந்து அந்தத் திருமாலை மட்டுமே உள்ளத்தில் தாங்கி வாழும் முனிவர்களும் யோகியரும் தங்கள் அறிதுயிலை மெல்லக் கலைத்து
(உறக்கம் கலைந்து விழிப்பு நிலை வரும்போது தூக்கிவாரிப்போட்டதைப்போல அமைந்து விடாமல் நிதானமாக...படிப்படியாகவே அத் துயில் கலைதல் நிகழ வேண்டும் என்ற அறிவியல் உண்மையினையும் குறிப்பிட்ட இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள்)
அரி..அரி..’என்ற பெயரைப் பெருமுழக்கம் செய்யத் தொடங்கும் அரவம்..

காலை....இன்னும் சற்றுப் புலர ஆரம்பிக்கிறது.
அதன் அறிகுறியாக ‘ஆனைச் சாத்தன்’என்ற பறவையினம் தனக்குள் கலந்து பேசும் பேச்சரவம் கேட்கிறது.
முதலில் கேட்டது, பறவைகள் கண் விழித்ததும் எழுப்பிய மெல்லொலி;
இப்பொழுது கேட்பது, கரிக்குருவிகளாகிய ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் தமக்குள் கீச்சு மூச்சென்று ஆரவாரமிட்டுக் கொண்டு உரையாடும் சற்று உரத்த ஓசை.
ஆண்டாளின் நுண்ணிய கவிமனம்...அந்தக் குருவிகளின் இரைச்சலையும் கூட அவற்றுக்கிடையே நடக்கும் ஓர் உரையாடலாகப் பார்க்கிறது.
பறவைகள் எழுப்பிய பலதரப்பட்ட ஓசைகள் ஆய்ச்சியரைக் கண்விழிக்கச் செய்ய...அவர்கள் தங்கள் காலைப் பணியைத் தயிர் கடையும் ஒலியோடு துவங்குகிறார்கள்.
பெருமளவில் தயாரிக்கப்பட்டாலும் கூட் மத்தினால் தயிர் கடையும் ஒலி பேரோசையாக இருக்க வாய்ப்பில்லை ; அதனாலேயே அத் தொழிலில் அவர்கள் மேற்கொள்ளும் அசைவினால்,அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் குலுங்கிச் சத்தமிடுவதையும் கூடவே இணைத்தபடி.. 
.’காசும் பிறப்பும் கலகலப்ப’என்கிறாள் ஆண்டாள்.
ஆயர் குலப் பெண்கள் கழுத்தில் அணியும் அச்சுத் தாலியும்,ஆமைத்தாலியுமே காசு,பிறப்பு என்று குறிக்கப்படும் அணிகலன்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், நால்வகைப் பா இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய ஆண்டாள் வெண்பாவின் கூறுகளாகிய காசு,பிறப்பு ஆகியவற்றையும் உட் செரித்து உரிய இடத்தில் வெளிப்படுத்தும் நுட்பம் சிறப்பானது.

அடுத்த படிநிலையாகக் கீழ் வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது.
எருமைகள் பனி படர்ந்த புல்லில் மேய்வதற்காகச் சிறு தோட்டங்களை நாடி மென்னடை இடத் தொடங்குகின்றன.
 பரந்த மேய்ச்சல் வெளிகளுக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு முன்பு , அருகிலுள்ள சின்னத் தோட்டங்களில் கால்நடைகள் அப்போதைக்குச் சற்று மேய்ந்து திரிவதுண்டு ; இந்த நுணுக்கமான வேறுபாட்டையே உணர்த்திக் காட்டுகிறது ’சிறுவீடு மேய்வான்..’என்னும் தொடர்.

இறுதி நிலையாக வருவது....,வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும் அரிய வானியல் காட்சி.
புலரும் காலையில் வியாழக் கிரகம் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து கொள்வதும், சுக்கிரன் என்னும் விடி வெள்ளி பளிச்செனக் கண்ணில் படுவதும் இயற்கையோடு ஒன்றிக் கலந்து வாழ்பவர்களுக்கு அன்றாடம் அனுபவமாகியிருக்கும் ஒரு தினசரி நிகழ்வுதான் என்றாலும்..
‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’
என்ற பாவைப்பாட்டு வரிகள் அந்த அனுபத்தை அழியா ஓவியமாக்கி மனதில் நிலைநிறுத்தி விடுகின்றன.

காலையின் மற்றொரு அடையாளமாகச் செங்கழுநீர்ப்பூக்கள் வாய்நெகிழ்த்தி விரியத் தொடங்க...ஆம்பல்கள் வாயடைத்துக் கூம்புகின்றன.

மீண்டும்....உரத்த குரலுடன்...புட்களின் சிலம்பல்.
ஆலயச் சங்கின் முழக்கம்....

இயற்கையாக நிகழும் இத்தனை பின்னணி ஒலிகளொடு குள்ளக் குளிரக் குடைந்து நீராடிப் பாவை நோன்பியற்றும் பெண்கள் , தங்கள் தோழியர் வீட்டு முற்றத்தில் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடும் ஒலிகளும் இறுதியாகப் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.
காலை விடியலைக் காணாமல் ‘கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருண’னைப் போல உறங்கும் சக தோழிக்குக் காலையின் ஒலி,ஒளிக் காட்சிகள்,
ஆண்டாளின் வாய்மொழியில் விரியும் வரிசை இது......
‘’புள்ளும் சிலம்பின காண்’’

‘’புள்ளரையன் கோயில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம்’’

’’முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்’’

‘’கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
  பேசின பேச்சரவம்..’’

‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
   வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
   ஓசைப்படுத்த தயிரரவம்..’’

‘’கீழ் வானம் வெள்ளென்று..’’

‘’எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன’’

‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’

‘’புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின..’’
இறுதியாகப்
’ 'பாவைக்களம் புக்க பிள்ளைகள்’’,மனதுக்கினியானைப்பா’’டும் பாட்டொலிகள்..

பதட்டமும்.. நெருக்கடிகளுமாய்ப் பிற புலன் மயக்கங்கள் அதிகம் கூடிப் போயிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்திருக்கும் இன்பங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் அவற்றில் விடியலின் அழகைத் தவற விட்டிருப்பதும் தென்படக் கூடும்.
தற்செயலாகக் கண்ணில் தட்டுப்படுவதன்றி.
.’’நிலாப் பார்ப்பதற்கென்று நிலாப் பார்த்து நாளாயிற்று’’ என்கிறது கல்யாண்ஜி(வண்ணதாசன்)யின் ஒரு கவிதை.


விடியலின் அழகை நாம் வியந்து ரசித்த காலமும் கூடத் தொலைந்து கை நழுவிப் போய்க்கொண்டேதான் இருக்கிறது.
தொலைக்காட்சிகளும்...கணினிகளும்...பின்னிரவுப் பொழுதுபோக்குகளும் தின்று முடித்த இரவின் இன் துயிலைச் சூரியச் சூட்டின் எரிச்சலோடு கலைத்தபடி கண்விழிக்கிற தலைமுறைக்கு இளங்காலை இனிமைகளின் அருங்காட்சி சாலையாக....தொல் புராதனச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கப் போகும் திருப்பாவை.,.வெறும் விடிகாலை பஜனை மட்டுமல்ல.
சிற்றஞ்சிறு காலையை .....அது மெல்ல விடியும் பேரழகை , அந்த மோனப் பொழுதில் கேட்கும் பல்வகை ஒலிக் கூட்டுகளை அசை போட்டு ஆராதிக்க வைத்த ஒரு சிறுநடைப் பயணம்..அது



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....