துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.10.23

தோல்வி-மொழிபெயர்ப்புச் சிறுகதை

                                                           தோல்வி

                    மணிப்புரி மூலம்: நிங்கோம்பாம் சர்மா.

                          ஆங்கிலத்தில்: போபோ குறைஜாம்
                        ஆங்கில வழி தமிழாக்கம்: எம் ஏ சுசீலா
நன்றி; ஹெர் ஸ்டோரீஸ் https://herstories.xyz/translation-stories-1/ அக்-16,2023

நிகழ்ச்சி ஒரு மணிக்குத் தொடங்கிவிடும்.  ஏற்கெனவே உச்சிப்பொழுதாகி விட்டது.  பிபின் இன்னும் வீட்டுக்குத் திரும்பியிருக்கவில்லை.

காலையில் அவன் வேலைக்குக் கிளம்பும்போதே, ‘‘தயவு செய்து மத்தியானத்துக்குள்ளே கட்டாயம் வந்திடுங்க.  இன்னிக்கு முக்கியமான மனுஷங்க எல்லாம் வரப்போறாங்க’’ என்று சொல்லியிருந்தாள் நளினி.

ஆனால்… அவன் இன்னும் வராதது ஏன்? அப்படி அவன் வராமல் இருப்பதற்கான காரணங்கள் எல்லாவற்றையும் நளினி கஷ்டப்பட்டுத் தேடிப் பார்த்தாள்.  ஆனால், அவையெல்லாம் அவளுடைய பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே உதவிக் கொண்டிருந்தன.

பிபினைப் போன்ற ஓர் இலக்கியவாதியால் இன்றைய நிகழ்ச்சியை அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடியுமென்று யாரால்தான் நம்பமுடியும்? மதிப்பிற்குரிய ஒரு விருதை அண்மையில் பெற்றிருந்த அவன் மனைவி நளினி, இன்று கௌரவிக்கப்பட இருக்கிறாள். அவள் அவன் மனைவி! அவள் மேடையில் ஏறி ஒரு சில வார்த்தைகள் பேசும்போது, அந்த சாதனையின் முழுப்பெருமையும் தன் கணவனுக்குத்தான் சேரும் என்பதை எல்லாரும் கேட்கச் சொல்லப்போகிறாள். அதைக் கேட்கும் ஆர்வம் பிபினுக்கு நிச்சயம் இருக்கும்.  இதுவரை தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் அவன் அவளுக்காகச் செய்திருக்கிறான்.

‘‘எழுத்துப் பிழை விடாமல் எழுதணுங்கிறதிலே ஏன் இப்படிக் கவனமில்லாமல் இருக்கே? உணர்ச்சிகளை வெளிப்படுத்தறதிலேயும் இன்னும் கொஞ்சம் அக்கறை வேணும். அழகான கதைக்கருவோ நல்ல சொற்களோ இருந்திட்டா மட்டும் போறாது. வார்த்தைகளை எந்த அளவுக்குச் சிக்கனமாகப் பயன்படுத்தறோங்கிறதும் முக்கியம்’’ என்று அவளிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான் அவன்.

பிபின் ஒருபோதும் எதுபற்றியும் கவனக்குறைவாக இருந்ததே இல்லை.  நளினி ஏதாவது ஒன்றை எழுதி முடித்துவிட்டால், குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவன் அதைச் சரிபார்த்து ஒரு சில மாற்றங்கள் செய்துவிடுவான்.  ஒரு கட்டாயக் கடமை போலவே மிக ஒழுங்காக அதைச் செய்து வந்தான் அவன்.

‘‘ஆண்களோட உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் போனால் பெண்கள் கிட்டே இருக்கிற ஆற்றல், திறமை எல்லாமே வீணாய்ப் போயிடும்.  சமூக அந்தஸ்திலே பெண்கள் இப்ப ரொம்பப் பின்தங்கி இருக்காங்க’’ என்பான் அவன்.




பெண்ணியம் குறித்து அலசி ஆராய்ந்து அவன் எழுதியிருந்த புத்தகம் ஒன்று, மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.  மேலும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து அவன் வெளியிட்டிருந்த ஒரு கவிதைத் தொகுப்பு நூலுக்கும் மிகச்சிறப்பான அங்கீகாரம் கிடைத்திருந்தது. பெண்கள் தங்களிடம் மறைந்து கிடக்கும் வலிமையை மீட்டெடுத்துக் கொண்டு தங்களை மேலும் உயர்த்திக் கொள்ள அந்த நூல் உதவுமென்று மதிப்பிடப்பட்டது.  மணிப்பூரில் உள்ள சில இலக்கிய அமைப்புகள் அவனது அந்தப் படைப்புக்கு விருதுகள் தந்து கௌரவித்தபடி, ஒரு முன்னணிப் பெண்ணியவாதியாக அவனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தன.

பிபின், வீட்டுவேலைகளிலும்கூட நளினிக்கு உதவுவதுண்டு.  இன்னும் பல வகைகளில் அவன் அவளுக்குத் துணையாகவே இருந்தான். அளவுக்கு மீறிய அற்பமான வீட்டு வேலைகளுக்குள் மட்டுமே அவளைத் தளைப்படுத்தி வைப்பது அவளுக்குக் குடும்பத்தின் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விடுமென்றும் தங்களுக்கிடையே ஓர் இடைவெளியைக்கூட அது உண்டாக்கிவிடக் கூடுமென்றும் அவன் நினைத்தான்.

‘பெண்ணியத்தின் மீது உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் உண்மையான ஒரு பெண்ணியவாதியைத் தவிர்த்தபடி நடைபெறும் பெண்ணியம் குறித்த எந்த விவாதமும் சரியாக அமைய முடியாது.  பெண்களின் உயர்வில் உண்மையாகவே எவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ, பெண்களை அன்போடு எவரால் அணுக முடிகிறதோ அவர்களால்தாம் இலக்கியத்தில் உள்ள பெண்ணியம் பற்றியும் விவாதிக்க முடியும்’ என்று அடிக்கடி அவன் சொல்வதுண்டு.

இப்படி அவன் பேசுவதைக் கேட்கும்போது சில பெண்களுக்குப் பொறாமை ஏற்படாமல் இருக்காது.

“இவளுக்கு வாய்ச்ச மாதிரி எங்க வீட்டு ஆண்களும் எங்களுக்குத் துணையா இருந்திருந்தா இதுக்குள்ளே நாங்களும்கூடஎங்கேயோ போயிருப்போம்’’ என்று அவர்கள் சொல்வார்கள். அவர்களது அந்த அபிப்பிராயத்தை நளினியும் ஒப்புக்கொள்வாள். அவள் ஏன் அதைத் குறித்துப் பெருமைப்படக் கூடாது ?

‘சட்டியும் அகப்பையும் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு நம் பெண்களைப் பேனா பிடிக்க வைக்க வேண்டும்.  அவர்கள் வெளியே வர வழிசெய்துதர வேண்டும்’ என்று சொல்லக்கூடிய கணவர்கள் அவளைப்போல எத்தனை பேருக்கு வாய்த்திருக்க முடியும்?

பிபின் விருது பெற்றபோது, ‘‘இவரைப்போல நம் சமூகத்துக்கு இன்னும் நிறைய ஆண்கள் தேவைப்படுகிறார்கள்.  பெண்கள் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் அவரது மிகச் சிறந்த புத்தகத்தை நாம் கொண்டாட வேண்டிய தருணம் இது’’ என்று நளினியின் சக பெண் எழுத்தாளர்கள் சொன்னதைக் கேட்டு அவள் எந்த அளவு பெருமையால் பூரித்தாள்! மகிழ்ச்சியடைந்தாள்! கணவனின் சாதனைகளில் ஒரு மனைவிக்கு எப்போதுமே பெருமிதம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

தேசிய அளவில் மிகவும் மதிக்கப்படும் இலக்கிய விருது ஒன்றை அண்மையில் தனது மூன்றாவது நூலுக்காகப் பெற்றிருந்த நளினி, அதற்காக இன்று பாராட்டப்பட இருந்தாள்.  இந்தச் சாதனை திடீரென்று இலக்கிய உலகில் மிக முக்கியமான மதிக்கத்தகுந்த ஓர் ஆளுமையாக அவளை ஆக்கிவிட்டிருந்தது. அவளுக்கென்று ஒரு தனித்த இடம் உருவாகியிருந்தது. அந்த விருது பெற்ற பிறகு, தொடர்ந்து வந்த பல நாட்கள் பாராட்டு விழாக்களால் மட்டுமே நிரம்பி வழிந்துகொண்டிருந்தன.

பிபினும் தன் சொந்த வேலையில் அதிகமாக மூழ்கிப் போயிருந்தான். காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பினால் மாலை மறைந்த பிறகுதான் அவன் வீடு திரும்புவான்.  அதனால் இருவருமாகச் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியவில்லை.  அதைப் பற்றி அவள் எப்போது கேட்டாலும், ‘‘ஆபிஸ்லே நிதியாண்டோட கடைசி நேர வேலை நெருக்கடி’’ என்பது மட்டுமே அவன் சொல்லும் ஒரே பதிலாக இருக்கும்.

‘‘நாளைக்குத் தயவு செஞ்சு நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்.  எல்லாரும் உங்களைப் பத்தி விசாரிப்பாங்க’’ என்று அவனிடம் நேற்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் அவள்.

‘‘எங்க பாஸுக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்கு. அதைக் கொண்டாடறதுக்காக நாளைக்கு ஒரு முக்கியமான விருந்து ஏற்பாடாகி இருக்கே.’’

‘‘இல்லை… நாம ரெண்டு பேருமா சேர்ந்துதான் நாளைக்கு என்னோட நிகழ்ச்சிக்குப் போகணும்.’’

‘‘இதோ பாரு, நான் சொல்றதைக் கேட்டுக்கோ. பைரன் ஏமாந்து போயிடுவான். இன்னிக்குக்கூட நாங்கள் ரெண்டு பேருமாதான் நாளைக்குள்ள விருந்து ஏற்பாடுகளைக் கவனிச்சோம். அது மட்டுமில்லை. நான் போகலைன்னா ‘பாஸ்’ ஏன்னு கேப்பார்.’’

‘‘அவர்கிட்டே உண்மையான காரணத்தைச் சொல்ல வேண்டியதுதானே’’ என்று பதிலடி தந்தாள் நளினி.

பிபின் ஒரு புன்னகையை மட்டுமே அவளுக்கு மறுமொழியாகத் தந்துவிட்டு வெளியேறிவிட்டான்.  நளினி தன்னிடம் வேண்டிக் கேட்பதை மறுக்கும் துணிச்சல் அவனிடம் இல்லை. அவனது மெல்லிய புன்னகை, நளினியிடம் ஒரு சிறிய நம்பிக்கைக் கீற்றைத் தோற்றுவித்திருந்ததால் இன்று காலையில் மீண்டும் அவனை வருமாறு வற்புறுத்தினாள் அவள்.

‘‘மத்தியானத்துக்கு முன்னாலே கட்டாயம் திரும்பி வந்திடுங்க, முக்கியமான ஆட்கள் நிறையப்பேர் இன்னிக்கு வராங்க.’’

பிபின் ‘வரமாட்டேன்’ என்று சொல்லவில்லை.  அவன் சரியான நேரத்தில் வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை நளினிக்கு இருந்தது. அவன் ஏன் வராமல் இருக்கப்போகிறான்?  இந்தக் கட்டம் வரை அவள் வந்து சேர்வதற்கு மிக அதிகமாகவே உதவியிருக்கிறான் அவன்.  இதற்கு முன்னால் அவளுடைய பாராட்டு விழாக்கள் சிலவற்றுக்கு அவன் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய நிகழ்ச்சிக்கு வரவேண்டுமென்ற விருப்பம் நிச்சயம் அவனுக்கு இருக்கும்.

ஒரு வேளை அவனுக்கு அது மறந்து போயிருக்குமோ? அதற்கு வாய்ப்பே இல்லை. புதிதாக வேறு ஏதோ காரணம்தான் முளைத்திருக்க வேண்டும். அது என்னவாக இருக்கும் என்று எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள் அவள்.  இந்த மன உளைச்சலிலேயே நேரம் போய்விட, நிகழ்ச்சிக்குத் தாமதமாகிவிடும் என்பதால் நளினி உடையணிந்து கொண்டாள்.  சிறிது நேரம் கழித்து உறுதியான தீர்மானத்துக்கு வந்தவளாகக் கிளம்பிச் சென்றாள்.

நளினிக்கு பிபின் மீது நம்பிக்கை இருந்தது. அவர்களது வாழ்க்கையின் வெவ்வேறு நேரத்தில் அவன் அவளுக்குப் பக்கத் துணையாகத்தான் இருந்திருக்கிறான்.  அதனால் அவன் மீது அவநம்பிக்கை கொள்ள அவள் விரும்பவில்லை.


‘‘ஏதோ ஒரு அற்ப விஷயத்துக்காக வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த நம்பிக்கையைக் கை நழுவவிடுவது முட்டாள்தனம். ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்” பிபின் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.

பாராட்டு விழாவில் ஏதோ கனவில் நடப்பதுபோல எல்லாம் நடந்து முடிந்தன. பிபின் இறுதிவரை வரவே இல்லை.  தன்னிரக்கத்தோடு கூடிய கவலை அவளது மூளையைக் கவ்விக்கொண்டது. நிகழ்ச்சியில் ஆற்ற இருந்த உரையை அவளால் சரிவரப் பேச முடியவில்லை.

கண்ணீர்விட்டுக் குமுறிவிடத் துடிக்கும் மனநிலையுடன் வீடு வந்து சேர்ந்தாள் அவள். பிபின் இன்னும்கூட வீடு திரும்பியிருக்கவில்லை.

அவன் வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணியாகி இருந்தது.  இன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறி விடப்போகிறோம் என்பதை நளினி உணர்ந்திருந்தாள்.

‘‘நீ சாப்பிட்டாச்சா?’’

எந்தப் பதிலும் இல்லை.

‘‘எனக்காகக் காத்திருக்க வேண்டாம்னு உன்கிட்டே சொல்லியிருக்கேன் இல்லையா? நீ சாப்பிட்டிருக்கலாமே?’’

நளினியின் மனதுக்குள் அதற்கான விளக்கம் அமைதியாக எழுந்தது.

‘நான் உங்களுக்காகக் காத்திருப்பது, உங்களோடு சேர்ந்து சாப்பிட ஆசைப்படுவது இவற்றையெல்லாம் ஒரு பெண்ணியவாதி என்று சொல்லிக்கொள்வதால் நீங்கள் மாற்றிவிட முடியாது.  இதெல்லாம் உள்ளூர ஒவ்வொருவரும் எப்படி உணர்கிறோம் என்பதைப் பொறுத்தது.’

கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி, ‘‘காலையிலே தொடங்கின உங்க விருந்து இப்பதான் முடிஞ்சதாக்கும்?’’ என்று தன் குரலை உயர்த்திக் கொண்டு கோபத்தோடு கேட்டாள் அவள்.

ஒரு பூசலைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதில் பெண்கள் மிகவும் தேர்ந்தவர்கள். அதற்கான பதிலும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இன்று நளினிக்கு வித்தியாசமான ஒரு பதிலே கிடைத்தது.

‘‘நான் ரொம்பக் களைச்சுப் போயிருக்கேன்… இதோபாரு, இதையெல்லாம் என்னாலே பொறுத்துக்க முடியாது.’’

நளினி வியப்போடு பிபினை ஏறெடுத்துப் பார்த்தாள்.  அவனால் அப்படிப் பொறுத்துக்கொள்ள முடியாதது எது? அப்படி என்ன நடந்துவிட்டது?

‘‘நான் மனிதர்களை நேசிப்பவன், எவரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ எனக்குப் பிடிக்காது’’ என்று ஒருமுறை பிபின் அவளிடம் கூறியதுண்டு.  

இப்படிப்பட்ட வார்த்தைகளால்தாம் அவனிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தாள் அவள்.  எல்லார் மீதும் அன்பு செலுத்தும் ஓர் இதயத்தைவிட விலை உயர்ந்ததாக வேறெதுதான் இருக்கமுடியும்?

‘‘என்ன ஆச்சு?’’

‘‘ஒண்ணும் இல்லை. ஏன் கேட்கிறே?’’

பிபினின் முகத்தில் கவலையின் நிழல் நன்றாகவே படர்ந்திருந்ததைக் காணமுடிந்தது.  ஒரு வகையான பதட்டமும் கூட.

எதுவுமே நடக்கவில்லை என்பதை நளினியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் நேற்றோ இன்றோ அறிமுகமானவர்கள் இல்லை. பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருபவர்கள். ஆனாலும் தன் இயற்கையான சுபாவத்தின்படி அவனை அதற்கு மேலும் அவள் தூண்டித் துருவிக்கொண்டிருக்கவில்லை. அவளது மௌனம் பிபினைக் கூடுதல் பதட்டத்துக்கு உள்ளாக்கியது.

‘‘எதுவும் பேசாம மௌனமா இருக்கிறதுகூட ஒரு வகையான அகங்காரம்தான். நான், சுய கௌரவத்தோட வாழ ஆசைப்படறேன். நான் ஒரு ஆம்பிளை” என்றான் அவன்.

இம்முறை தன் இதயத்தில் ஓங்கிக்குத்துவிட்டது போன்ற வலியை அனுபவித்தாள் நளினி.

‘உன் விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் நீ என்னைக் கூட்டிக் கொண்டு போவதையும், நீ விரும்பும் எந்த இடத்திலும் என்னை நிறுத்தி வைப்பதையும் – இதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.  நான் ஒரு ஆண். உனக்குப் பின்னால் நின்றபடி, உன்னைப் பாராட்ட வருபவர்களிடமெல்லாம் என்னை நீ அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை’ என்று பிபின் சொல்லாமல் சொல்வதைப் போல் இருந்தது அவளுக்கு.

மனித மனங்களின் வேறுபட்ட பல விகாரங்களைத் தன் எழுத்துகளில் விரிவாகச் சித்திரித்திருந்தாள் நளினி. ஆனால், தனக்கு மிகவும் நெருக்கமான ஓர் இதயத்தைப் புரிந்துகொள்ள மட்டும் அவள் தவறியிருந்தாள். தனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது, தன் சாதனைகளால் கிடைக்கவில்லை, தன் தோல்வியால்தான் அது கிடைத்திருக்கிறது என்பது நளினிக்குப் புரியத் தொடங்கியது.

( ‘மைதிபா’ என்கிற தலைப்பில் மணிப்புரி மொழியில் முதலில் (2007) வெளியான இந்தக் கதையை எழுதியவர் நிங்கோம்பாம் சர்மா. (Ningombam Sarma)

(Source : CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR EDITOR THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)

9.10.23

என் குழந்தைகளின் புகைப்படங்கள்-மொழிபெயர்ப்புச் சிறுகதை

 அக்டோபர். 2023  தேதியிட்ட சொல்வனம் இணைய [304 ஆம் ] இதழில் வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை.

என் குழந்தைகளின் புகைப்படங்கள்

மணிப்புரி மூலம் : சத்யவதி நிங்கோம்பாம்
ஆங்கிலத்தில்: சபம் ஸ்வீட்டீ
 ஆங்கில வழி : தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

“அம்மா! நான் பெரியவனா வளர்ந்தப்புறம் ஏரோப்பிளேன்லே பறந்து போவேன்தானே?’’


‘‘கட்டாயம் போவே குழந்தை’’


‘‘நான் பெரிய ஆளா ஆனப்புறம் நியூஸ் பேப்பரிலே என்னோட ஃபோட்டோ வரும் இல்லையாம்மா?’’


‘‘நிச்சயமா வரும் மகனே’’


‘‘அக்கா பெரியவளா வளர்ந்த பிறகு என்னவா ஆவா?’’


‘‘உன்னோட அக்கா ஒரு பொண்ணு.  அவளுக்குக் கல்யாணம் ஆகும்.  அவங்க, வேறே ஒரு வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.’’


‘‘சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது.  அவளை அவங்க அப்படிக் கூட்டிக்கிட்டுப்போக எல்லாம் நான் விட மாட்டேன். அக்காவை என்னோட கூடவே பிளேனிலே உட்கார வச்சுக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்து போயிடுவேன்.  அவ அங்கேயே இருக்கட்டும்.  அப்படின்னா அவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியிருக்காதுதானே? “


‘‘கிறுக்குப்பையா? அக்காவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?’’


‘‘ஆமாம்!’’


‘‘எவ்வளவு பிடிக்கும்?’’


‘‘இதோ இ…வ்..வ..ள…வு’’ என்று தன் சின்னஞ்சிறு கைகளை முதுகு வரை விரித்து சைகை காட்டினான் அவன்.


‘‘அம்மா அப்பா, அக்கா- எங்க மூணுபேரிலே உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’’


‘‘உங்க மூணு பேரையுமே எனக்குப் பிடிக்கும்தான்’’


‘‘அட…. இந்தக் காலத்துக் குழந்தைகளைப் பாரு! இத்தனூண்டா இருந்துகிட்டு அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைகள்தான் எப்படி இருக்கு?’’


மோமோச்சா, முடிவே இல்லாத கேள்விகள் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருப்பான்.  அவை அவனது பெற்றோருக்கு மிகவும் பிடிக்கும்; அவர்களைக் களிப்பூட்டும்.
‘திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.  ஆணையும் பெண்ணையும் அதில் வலுவாகக் கட்டிப்போட்டிருப்பது தங்களது குழந்தை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்புதான்.  உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறை இது’ என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

இன்று, இம்பாலில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஓவியப்போட்டியில் அவர்களது பெண் பங்கெடுத்துக் கொள்ள இருக்கிறாள்.  தன் பள்ளி சார்பாக அவள் இதில் கலந்துகொள்கிறாள் . மோமோச்சாவும் கூடப் போகிறான்.  

மதிய உணவை சீக்கிரமே முடித்து விட்டு அம்மா அவர்களுக்கு உடையணிவித்துவிடுகிறாள்.  தங்கள் வீட்டில் வைத்து வழிபடும் ‘சனமஹி’* (* ‘மைதேயி’ பழங்குடி மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் கடவுள் ‘சனமஹி’) என்ற தெய்வ உருவத்தின் அருகில் அவர்களை அழைத்துச் செல்கிறாள்.  அதன் பிறகு முற்றத்திலுள்ள துளசிச் செடிக்குக் கீழே எல்லோரும் விழுந்து வணங்குகிறார்கள்.


‘‘ஓவியப் போட்டியிலே நல்லா வரைஞ்சுட்டு வா பொண்ணே’’


‘‘சரிம்மா’’

‘‘இன்னிக்கு க்வைராம்பாண்ட் மார்க்கெட்டுக்கு மோமோச்சோவைக் கூட்டிக் கிட்டுப் போகலாம் நாம’’


‘‘அவனுக்கு ஒரு நல்ல சட்டை வாங்கித் தாங்கப்பா’’


‘‘கட்டாயம் வாங்கித்தரேன், பின்னே என் பையனுக்கு நான் வாங்காமலா?’’


‘‘அக்காவுக்கும்தான்’’


‘‘நிச்சயம் வாங்கறேன்’’


‘‘அம்மாவுக்கும் கூட’’


‘‘சரி, சரி…’’


‘‘அம்மா… பைபை …’’

அவள் வீட்டுவாசலில் நின்றபடி குழந்தைகளின் சின்னக் கையசைப்பை எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு நேரம் பார்த்தபடி நிற்கிறாள்.  பிறகு தங்கள் அப்பாவை முந்திக் கொண்டு வேகமாக நடை போட்டுப் போய் விடுகிறார்கள் அவர்கள்.

                                            ***********************

மாலை மறைந்து இருள் படர ஆரம்பித்துவிட்டது.  கணவனும், குழந்தைகளும் திரும்பி வருகிறார்களா என்று பார்ப்பதற்காக வாசற் கதவுப் பக்கம் வந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறாள் மோமோ-மா.  வழியைப் பார்த்துப் பார்த்து அவள் கண்கள் பூத்துப் போய் விடுகின்றன.


‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில் வருகிறவர்கள் போகிறவர்கள், அவளுக்கு அறிமுகமானவர்கள் எல்லோரும்
‘‘மோமோ-மா இங்கே என்ன செய்யறே’’ என்று பரிவோடு கேட்கிறார்கள்.
‘‘யாருக்காகக் காத்திருக்கே இபெம்மா? “(தங்கச்சி) என்று விசாரிக்கிறார்கள்.

 தான் நெய்த துணிகளை மார்க்கெட்டில் இருக்கும் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காகச் சென்றிருந்த ஒரு நெசவாளிப் பெண், நூல்கண்டுகள் அடங்கிய தன் பெட்டியை இறுகப்பிடித்துக் கொண்டு , அந்த இருளில் தெருவுக்குள் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்கிறாள்.  அவள் மிரண்டு போயிருக்கிறாள் என்பது, எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.

‘‘இபெம்மா! க்வைராம்பாண்டிலே இன்னிக்குத் துப்பாக்கிச் சூடு நடக்குது.  காயப்படாம, செத்துப்போகாம தப்பிச்சது என்னோட நல்லநேரம்.  பஸ் எதுவுமே வரலை.  ஏதோ அதிர்ஷ்டம் இருந்திருக்கு, எப்படியோ சாமி புண்ணியத்திலே தப்பிச்சு வந்திட்டேன். இது ரொம்ப மோசமான நேரம்… போர் நடக்கற நேரம்* (இனக்குழுக்களுக்குள் அடிக்கடி நிகழும் கலவரங்களே போர்ச்சூழலாக இங்கு சித்தரிக்கப்படுகின்றன). கூட்ட நெரிசலான ஒரு மார்க்கெட்டுக்குள்ளே குண்டு வெடிச்சா ஜனங்க கட்டாயம் செத்துத்தான் போவாங்க.  வீட்டிலே இருக்கிற எல்லாருக்கும் கவலைதான்’’ என்று போகிற போக்கில் வேகமாகச் சொல்லிக் கொண்டே கடந்துபோகிறாள் அவள்.

மோமோ-மா அதிர்ச்சியால் திக்பிரமை பிடித்தவளாய் வாயடைத்துப்போய் நிற்கிறாள்.அக்கம்பக்கத்திலுள்ளவர்களும், உறவுக்காரர்களும் அவளைத் தேற்றவும் அவள் பயத்தைக் கொஞ்சம் குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

‘‘வண்டி எதுவும் ஓடாததாலே அப்பாவும், குழந்தைகளும் எங்கேயாவது மாட்டிக்கிட்டிருப்பாங்க.’’

‘‘இதோ பாரும்மா, ராத்திரிக்கு முன்னாடி அவங்க இங்கே வந்து சேர்ந்துடுவாங்க. நீ வேணும்னா பாரு! இம்பால் ஒண்ணும் அவ்வளவு தூரம் இல்லையே?’’

மோமோ-மாவை அண்டை வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குள் கொண்டு போய் விடுகிறார்கள்.

                                       *****************************

காலை விடிந்துவிட்டது.  செய்தித்தாள்கள் மட்டும் எப்படி இவ்வளவு சரியாக வந்து சேர்ந்துவிடுகின்றன?

‘‘இறந்தவர்கள்….இறந்தவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்,’’ என்று அந்தச் செய்திகளையே செய்தித்தாள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன.

எல்லோரும் மோமா-மா எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.  குறிப்பிட்ட அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் அலசித் தேடினார்கள்.  சிலர் குளங்களுக்குள் குதித்துப் பார்த்தார்கள் . நெற்குதிர்கள் மீது ஏறியும் பார்த்தார்கள்.  காலியாய்க் கிடந்த வயல் வெளிகளில், அடர்ந்த காட்டுப் புதர்களிலெல்லாம் அவளைத் தேடிப் பார்த்தார்கள்.  

கடைசியில் மூன்று நான்கு ஆண்கள் ஒன்று சேர்ந்து மோமோ-மாவைக் கைத் தாங்கலாய்ப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.  தலை வாராமல், முடிச்சு தளர்ந்திருக்க அவளது அடர்ந்த கூந்தல் , முதுகுப்புறம் அவிழ்ந்து கிடந்தது.  மேலாடை தளர்ந்திருந்தது.  இறுகப் பிணைத்து வைத்திருந்த அவளது கரங்களை அவர்களால் பிரிக்க முடியவில்லை.

‘‘மார்க்கெட்டிலிருந்து வந்தவங்ககிட்டே இருந்து செய்தித்தாள்களைப் பிடுங்கிக்கிட்டா அவ’’ என்று யாரோ சொன்னார்கள்.
‘‘ஒருவேளை பைத்தியம் பிடிச்சுத் தெருவிலே அலையப்போறாளோ அவ?”

‘‘ஹி ஹி ஹி!!’’ என்று வெறிபிடித்தாற் போலச் சிரித்தாள் அவள்.  கசங்கிப்போன அந்த செய்தித்தாளை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  பிறகு அதைத் தன் உதட்டருகே கொண்டுவந்து முத்தமிட்டபடி
‘‘ஆஹா.. இன்னிக்கு என் குழந்தைங்களோட படம் பேப்பர்களிலே வந்தாச்சு’’ என்று சந்தோஷமாகக் கூச்சலிட்டாள்.

                                                &**********************&

1992இல் மணிப்புரி மொழியில் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட (Ichagi Photo) இந்தச் சிறுகதையின் ஆசிரியர் சத்யவதி நிங்கோம்பாம்.

(Source CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR
EDITOR , THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)

6.10.23

“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” ...-நாவல் வெளியீடு

 இன்று ,

‘’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்”

என்னும் என் மூன்றாவது நாவல் வெளிவரவிருக்கிறது.




சென்னை ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார் தங்கள் வேறு வெளியீடுகளுடன் சேர்த்துக் கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் என் நாவலையும் வெளியிடுகிறார்கள்.( என் அன்புக்குரிய மாணவி தேனம்மை லக்‌ஷ்மணனின் நூல் ஒன்றும் இந்தப்பட்டிலில் இடம் பெற்றிருப்பதில் ஓர் ஆசிரியராகவும் பெருமிதம் கொள்கிறேன்)



நாவலிலிருந்து…( தலைப்புக்கும் இது விளக்கமாகலாம்)
//“அற்புதம் டாக்டர்! ‘மானுடப்பிறப்பில் மாதா உதரத்தில் ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்னு ஆரம்பிச்சு… ‘ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்… அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்… ஏழுதிங்களில் தாழ் புவி பிழைத்தும்’னு ஒவ்வொரு மாசமும் கருவோட வளர்ச்சியையும் அது படற அவஸ்தையையும் போராட்டத்தையும் காட்டற மாதிரியே பொருத்தமான வரிகள், அப்படியே அசந்து போயிட்டேன்’’
“அது திருவாசகத்திலே போற்றித் திரு அகவல்ங்கிற பகுதியிலே இருக்கிற வரிகள் சுமதி. ‘புல்லாகிப் புழுவாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’னு சொல்ற மாணிக்கவாசகர் மனுஷப் பிறப்பு எடுக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குங்கிறதை அந்தப் பத்து பன்னிரண்டு வரிகளிலே சொல்றார். ஒவ்வொரு மாசமும் என்ன பாடு..? எல்லாமே சர்வைவலுக்கான யுத்தம்தான்கிறதை கைனகாலஜிஸ்டோட நிலையிலே இருந்து ஒரு ஆன்மீகவாதி எப்படிசொல்லியிருக்கார் பாரு. ஆனா பரமபத ஏணி மாதிரி இத்தனை படிகளிலே தப்பித் தப்பிப் பிழைச்சு வந்து அருமையாக் கிடைக்கிற மனிதப் பிறவியை நாம ஒழுங்காப் பயன்படுத்திக்கிறோமா, பல வழிகளிலே விரயமாக்கித் தொலைச்சுக்கறோமாங்கிறதுதான் அவர் எழுப்பற அடுத்த கேள்வி” //
என்னுரையிலிருந்து…
“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” என்ற இந்த நாவலும் கூட ஒரு யுக சந்தியின் கதைதான். சென்ற தலைமுறை மரபுச்சட்டகங்கள் பெண்கல்வியின் பாதையை மறித்ததென்றால், அதன் அடுத்த பரிமாணமாய்த் தனக்கென்ற சுயதேடல் ஒன்றை சுமந்தபடி,தன் தனிப்பட்ட ஆர்வத்தையும் கனவுகளையும் - குடும்பம் என்ற எல்லை தாண்டி நிறைவேற்றும் பெண், தனது அடுத்த தலைமுறையாலேயே குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டு விடுவதை இந்த நாவல் வழி எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். தொழில் நுட்ப வளர்ச்சியில், நடை, உடை ,நாகரிக பாணிகளில் அடுத்த நூற்றாண்டுக்கே கூடத் தாவிச் செல்லத் தயாராக இருக்கும் இன்றைய இளைய தலைமுறை,மரபு வழி மனப்போக்குகளில் சற்றுப் பின்னோக்கி நகர்ந்தபடி - தாய் என்னும்பங்கு நிலை ( role) ஒன்றை மட்டுமே பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்த நாவலின்காயத்ரியைப்போலத் தங்களைக் கொண்டு செலுத்திக் கொண்டிருப்பதும், இரவும் பகலுமாக ஆட்டிப்படைப்பதுமான அகத்தேடலை இறக்கி வைக்க வழியின்றித் தங்கள் கனவுகளை மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக் கொள்ளும் பெண்கள், குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல, வெளி உலகத்தில்…, புறப்பணிகளில் ஈடுபடாமல் வீட்டளவில்,குடும்பத் தளத்தில் மட்டுமே இயங்கும் பெண்களும் அவர்களில் உண்டு.
வீட்டு வாழ்க்கை,வெளி வாழ்க்கை என்ற பங்கு நிலைப் போராட்டத்தில் வெற்றியும் தோல்வியுமாய் ஊடாடிக்கொண்டிருக்கும் அனைத்து அன்னையருக்கும் இது சமர்ப்பணம்.
இதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதோடு மிக விரைவாகவும் வெளியிட்டிருக்கும் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார்க்கு என் நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....