துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.10.23

“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” ...-நாவல் வெளியீடு

 இன்று ,

‘’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்”

என்னும் என் மூன்றாவது நாவல் வெளிவரவிருக்கிறது.




சென்னை ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார் தங்கள் வேறு வெளியீடுகளுடன் சேர்த்துக் கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் என் நாவலையும் வெளியிடுகிறார்கள்.( என் அன்புக்குரிய மாணவி தேனம்மை லக்‌ஷ்மணனின் நூல் ஒன்றும் இந்தப்பட்டிலில் இடம் பெற்றிருப்பதில் ஓர் ஆசிரியராகவும் பெருமிதம் கொள்கிறேன்)



நாவலிலிருந்து…( தலைப்புக்கும் இது விளக்கமாகலாம்)
//“அற்புதம் டாக்டர்! ‘மானுடப்பிறப்பில் மாதா உதரத்தில் ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்னு ஆரம்பிச்சு… ‘ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்… அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்… ஏழுதிங்களில் தாழ் புவி பிழைத்தும்’னு ஒவ்வொரு மாசமும் கருவோட வளர்ச்சியையும் அது படற அவஸ்தையையும் போராட்டத்தையும் காட்டற மாதிரியே பொருத்தமான வரிகள், அப்படியே அசந்து போயிட்டேன்’’
“அது திருவாசகத்திலே போற்றித் திரு அகவல்ங்கிற பகுதியிலே இருக்கிற வரிகள் சுமதி. ‘புல்லாகிப் புழுவாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’னு சொல்ற மாணிக்கவாசகர் மனுஷப் பிறப்பு எடுக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குங்கிறதை அந்தப் பத்து பன்னிரண்டு வரிகளிலே சொல்றார். ஒவ்வொரு மாசமும் என்ன பாடு..? எல்லாமே சர்வைவலுக்கான யுத்தம்தான்கிறதை கைனகாலஜிஸ்டோட நிலையிலே இருந்து ஒரு ஆன்மீகவாதி எப்படிசொல்லியிருக்கார் பாரு. ஆனா பரமபத ஏணி மாதிரி இத்தனை படிகளிலே தப்பித் தப்பிப் பிழைச்சு வந்து அருமையாக் கிடைக்கிற மனிதப் பிறவியை நாம ஒழுங்காப் பயன்படுத்திக்கிறோமா, பல வழிகளிலே விரயமாக்கித் தொலைச்சுக்கறோமாங்கிறதுதான் அவர் எழுப்பற அடுத்த கேள்வி” //
என்னுரையிலிருந்து…
“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” என்ற இந்த நாவலும் கூட ஒரு யுக சந்தியின் கதைதான். சென்ற தலைமுறை மரபுச்சட்டகங்கள் பெண்கல்வியின் பாதையை மறித்ததென்றால், அதன் அடுத்த பரிமாணமாய்த் தனக்கென்ற சுயதேடல் ஒன்றை சுமந்தபடி,தன் தனிப்பட்ட ஆர்வத்தையும் கனவுகளையும் - குடும்பம் என்ற எல்லை தாண்டி நிறைவேற்றும் பெண், தனது அடுத்த தலைமுறையாலேயே குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டு விடுவதை இந்த நாவல் வழி எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். தொழில் நுட்ப வளர்ச்சியில், நடை, உடை ,நாகரிக பாணிகளில் அடுத்த நூற்றாண்டுக்கே கூடத் தாவிச் செல்லத் தயாராக இருக்கும் இன்றைய இளைய தலைமுறை,மரபு வழி மனப்போக்குகளில் சற்றுப் பின்னோக்கி நகர்ந்தபடி - தாய் என்னும்பங்கு நிலை ( role) ஒன்றை மட்டுமே பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்த நாவலின்காயத்ரியைப்போலத் தங்களைக் கொண்டு செலுத்திக் கொண்டிருப்பதும், இரவும் பகலுமாக ஆட்டிப்படைப்பதுமான அகத்தேடலை இறக்கி வைக்க வழியின்றித் தங்கள் கனவுகளை மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக் கொள்ளும் பெண்கள், குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல, வெளி உலகத்தில்…, புறப்பணிகளில் ஈடுபடாமல் வீட்டளவில்,குடும்பத் தளத்தில் மட்டுமே இயங்கும் பெண்களும் அவர்களில் உண்டு.
வீட்டு வாழ்க்கை,வெளி வாழ்க்கை என்ற பங்கு நிலைப் போராட்டத்தில் வெற்றியும் தோல்வியுமாய் ஊடாடிக்கொண்டிருக்கும் அனைத்து அன்னையருக்கும் இது சமர்ப்பணம்.
இதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதோடு மிக விரைவாகவும் வெளியிட்டிருக்கும் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார்க்கு என் நன்றி.

14.11.20

'தடங்கள்' ஒரு பார்வை-தேனம்மை லெக்‌ஷ்மணன்

’தடங்கள்’ மதுரை மீனாட்சி புத்தக நிலைய வெளியீடாக வந்திருக்கும் என் இரண்டாவது நாவல். கடந்த ஐம்பதாண்டுக் காலமாக என் வாழ்வோடு கலந்துவிட்ட மதுரை மண்ணுக்குள்ளும், முப்பத்தாறு நெடிய ஆண்டுகள் என் உயிரோடு பிணைந்து எனக்குப் பரிச்சமாகியிருந்த கல்லூரிப் பணிச்சூழலுக்குள்ளும் கால்பதித்து நின்றபடி- பழகிய களத்தில் எனக்குத் தெரிந்த கதையைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.மானுட வாழ்க்கை,கதைகளுக்கான கச்சாப்பொருட்களால் நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்தாலும், படைப்பு மனம் ஏதோ ஓர் அகத் தூண்டுதலால் ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பாகத் தேர்வு செய்து கொள்கிறது.‘60களின் இறுதியிலிருந்து 2000த்தின் தொடக்கம் வரை நான் எதிர்ப்பட நேர்ந்த பலதரப்பட்ட வகைப்பாடுகளைச் சேர்ந்த மனிதர்களும், எனக்குள் அதிர்வுகளைத் தோற்றுவித்த பல சம்பவங்களும் என்னுள் பதித்திருக்கும் ’தடங்க’ளே இந்த ஆக்கத்தின் அடித்தளங்கள். நிஜமும் நிழலும் என்னுள் நிகழ்த்திய கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடர்ந்து சென்றபடி ஆட்டத்துக்கான காய்களையும் சூழல்களையும் கலந்தும் மாற்றியும் போட்டபடி இந்தப் புனைவை உருவாக்க முயன்றிருக்கிறேன்.
என் முதல் நாவல் ’யாதுமாகி’யின் இன்னொரு பக்கமாக இதை நான் திட்டமிடவில்லையென்றாலும் இப்போது இதைத் திரும்ப வாசித்துப் பார்க்கும்போது ஒரு தலைகீழ்ப்பரிணாமம் நிகழ்ந்திருப்பதைப்பார்க்க முடிகிறது.’யாதுமாகி’யின் தேவி, அவளது காலகட்டத்தின் நெருக்குதலின் நடுவிலும் தன் முடிவுகளைத் தானே எடுக்கும் தீர்க்கமான பார்வையைக்கொண்டிருந்தாள். அடுத்தடுத்த தலைமுறைகளின் புதுயுகப்பெண்களோ, முடிவெடுக்கப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள்;அல்லது என்ன முடிவெடுப்பது என்றறியாதவர்களாய்த் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

’தடங்க’ளின் இந்த மையத்தைத் தொட்டுத் தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கும் என் அன்பு மகள்/மாணவி/கவிதாயினி/கதாசிரியை தேனம்மை லெக்‌ஷ்மணனின் அருமையான அறிமுகக்கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.இந்த நாவலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாச்சிமுத்து அவர்கள் குறிப்பிடுவதைப்போல ஒரு கல்விச்சாலைப்புதினமான [கேம்பஸ் நாவல்]இதனை,’கேம்ப’ஸில் என்னோடு ஊடாடிய என் மாணவியே ரசனையோடும்,ஆழமாகவும் அணுகியிருப்பது என்னை நெகிழ்விக்கிறது.


                             தடங்கள் – ஒரு பார்வை

தேனம்மை லெக்‌ஷ்மணன்

நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ளச் செய்கிறது தடங்கள். சுசீலாம்மாவின் கல்லூரிப் பருவ, பேராசிரியக் காலங்களில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் அழகான மொழியில் எழுத்தாக்கம் பெற்றுள்ளன.

பெண்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள் சில இடங்களில் பெண்களே பிரச்சனைகள். நந்தா, சிந்து என்ற இருவரின் கடித உரையாடலாகத் தொடர்கிறது புதினம். அநேகம் சிந்து நந்தாவுக்கு எழுதும் அறிவுசார் மின்னஞ்சல்கள். இது புதினத்தில் புதுவகை உத்தி.

சமூக அக்கறையுடன் சக பெண்களின் மீதான பரிவு, மாணவிகளின் மேலான பாசம், அநீதியை எதிர்க்க இயலாமல் மேலும் தன்னைத்தானே வெல்ல இயலாமல் மடங்கிப் போகும் அவர்களைப் பார்த்து ஆவேசம், சிலரை மாற்ற இயலாத இழிவரல், சிலரின் வாழ்வைப் பார்த்து எள்ளல், சிலருக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு பொங்குதல் எனப் பல்வேறு உணர்வுகளைப் படைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

தனித்தனி மனுஷிகளின் கதையை ஒரு விழிப்புணர்வுப் புதினமாக்கி இருக்கும் முறையும் வித்யாசம். ஆனால் எல்லாவற்றிலும் பெண்களின் உணர்வுகளும் உறவுகளும் கலந்த இணைப்புதான் மையப்புள்ளி. சமயத்தில் இவை புனைவா நம் அக்கம் பக்கம் இருப்போரின் வாழ்வியலா என்று எண்ணமிடவைக்கும் வண்ணம் இருக்கிறது இக்கதைகளின் யதார்த்தமும் உண்மைத்தன்மையும்.

திருமணத்தோடு பெண் வாழ்வு முடிந்துவிடுகிறதா? திருமணத்துக்குப் பின்பும் அவள் மேலெழுகிறாளா என்றும் சிந்திக்க வைத்தது. சமூகத்தை விட்டோ, திருமண உறவை விட்டோ, குடும்ப அமைப்பை விட்டோ பெண்ணை அத்யாவசியம் ஏற்பட்டால் ஒழிய, தாங்கொணாத் துயரம் ஏற்பட்டால் ஒழிய வெளியேறச் சொல்லவில்லை ஆசிரியர்.

எவ்வளவுதான் மற்றவர்கள் உதவினாலும் மரபுசார் அடிமையா, அறிவுசார் வாழ்க்கையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது பெண்ணே. தன் இக்கட்டுகளைக் களைந்து முளைத்தெழுவது அவள் கையில் மட்டுமே உள்ளது என்பதும் ஆசிரியர் காட்டும் வழி.

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, கருத்தியல் ரீதியான வன்முறை என அனைத்தையும் அலசுகிறது இந்த நாவல். மீனாக்ஷி கல்யாணத்தில் ஆரம்பிக்கும் நாவல் தங்கையின் திருமணத்துக்காக வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதோடு முடிந்திருக்கிறது. திருமணம்தான் முடிவு என்று எண்ண வைக்கப்படும் பெண் மனமும் அதன்பின் அது நல்லதாகவோ கெட்டதாகவோ முடிந்தாலும் உதவ முடியாத பிறந்த குடும்பத்தின் நிலையும் இதன்மூலம் குறியீடாகக் காண்பிக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரியில் வருடாந்திரம் மாணவிகள் வைக்கும் பொங்கல், ஹாஸ்டலில் இருக்கும் மாணவிகளைப் பார்ப்பதற்கான நடைமுறை, கல்லூரி வாழ்க்கை, காதல் வாழ்க்கை, இளவயதின் ஏக்கங்கள், துக்கங்கள், முடிவெடுப்பதில் அவர்களின் குழப்பம், திருமண பந்தத்தின் நன்மை தீமைகள், நடுநடுவே இலக்கியப் பந்தி, கூட வேலை செய்யும் பெண்களின் மனோபாவங்கள், பேச்சுகள், நடவடிக்கைகள், பல்கலைக் கழக மானியக் குழு ஊதியத்துக்கான ஆசிரியர் போராட்டம், அதோடு நித்யகன்னி, கன்யாகுமரிக்கான அழகான விளக்கங்கள் என்று அசரவைக்கிறார் ஆசிரியர்.

கணவனே கண் கண்ட தெய்வம் என்று வீட்டு வேலை செய்யும் லட்சுமி, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று வாழும் சோலையம்மா, சந்தேகக் கணவனோடு பல்லாண்டுகள் வாழும் சித்ரா, ஒவ்வாக் காதலில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ளும் வாணி, இன்ஃபாக்சுவேஷனின் சிக்கித்தவித்த மாலா, வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு தேடி வந்த ஆராய்ச்சி மாணவி முத்தரசி தனபாலன், குடும்ப வன்முறையில் உயிரை இழக்கும் ரமணி, அமிலம் ஊற்றப்பட்டு இறந்த புதுமைச் செல்வி, பாலியல் கொடுமையில் இருந்து தப்பித்துத் தன்னை உயர்த்திக் கொண்ட ஹேமா , ஆசைக்கணவனைத் தனித்திருக்க விட்டு மதபோதகரான ஸ்டெல்லா, எப்போதும் தன்னை இறுக்கமாக வைத்துக் கொள்ளும் கலா என இருண்மையான பக்கங்களை மட்டுமல்ல தன் வாழ்க்கையைத் தான் நினைத்தபடி சீராக நடத்தும் கனகா, அதேபோல் சில ஆண்டுகளே திருமண வாழ்க்கை நீடித்தாலும் இனிமையாக வாழ்ந்த ஜமீலா, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை இயல்பாக அழகாக எடுத்துக்கொண்ட தாழை, கோலம் மாறினாலும் காதல் மாறாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழும் மல்லிகா தினகரன், தன்மேல் சுமத்தப்பட்ட துறவைத் தைரியமாகத் துறந்து வெளிவந்த லீமா, கர்மயோகியான பத்மா, தனித்து வாழ்ந்து எல்லோரையும் கவரும் கல்யாணி, உழைக்கும் பெண்களுக்காக உழைக்கும் நந்தா, ஆதரவற்றோருக்கு இல்லம் அமைக்க முயலும் நிருபமா, அனைவரது வாழ்க்கையையும் சீர்தூக்கிச் செதுக்கும் சிந்து என எத்தனை விதமான பெண்கள் நம்மைச் சுற்றிலும் என வியக்கவைக்கிறார் ஆசிரியர்.

உன்னதம், உதாசீனம், பொறுமை, பெருமை, இருண்மை, தெளிவு எனப் பெண்களின் மனோபாவங்களை சுசீலாம்மா படைத்துச் செல்லும்விதம் அற்புதம். 

அதேபோல் சந்தேகப்படும் மனநிலை உள்ள  வளர்தலும் தேய்தலுமான கலைகள் உள்ள) சந்திரன், வன்கொடுமை செய்யும் ரமணியின் கணவன், மகன் மேல் உள்ள பிரியத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு மனைவியை வெட்டும் சோலையம்மாளின் கணவன், பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கட்டியங்காரன் தனபாலன் ஆகிய நெகட்டிவ் கேரக்டர்கள் மட்டுமல்ல ,மனைவிக்காக விட்டுக்கொடுத்துப் போகும் ஃப்ரான்ஸிஸ், விரும்பிய பெண்ணைத் துணையாக அடைய தியாக மனப்பான்மையுடன் வரும் தினகரன், மகள்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் விருப்பம்போல வாழ அனுமதிக்கும் நந்தா, நிருபமாவின் தந்தைகள் என ஆண்களின் அக புற உலகத்தையும் படைத்து நம்மை அதில் உலவச் செய்திருக்கிறார் ஆசிரியர். 

ஆணால் கவரப்படும்போதே ஆணைக் கவரவிரும்புகிறாளா பெண், திருமணத்தை நோக்கி மட்டுமே பெண் வாழ்க்கை செல்கிறதா, பெண்ணின் உயர்வும் வெற்றியும் சமையல் அது தொடர்பான வேலைகளையும், குடும்ப வாழ்க்கையையும் குழந்தைப் பேறையும் ஒப்புநோக்கியே சீர் தூக்கப்படுகிறதா, வெளி உலகம் காணாத பெண் என்பவள் உயர்வானவளா எனப் பல்வேறு அலைகளை எழுப்பியபடி இருக்கிறது வெகு அடர்த்தியான இந்நாவல்.  

கல்வியும் உத்யோகமும் தற்சார்பும் உயர்வாழ்க்கைத்தரமும் பெற்றபின்பும் பெண் என்பவள் வெற்றியடைந்திருக்கிறாளா இல்லையா என்று யோசிக்க வைப்பதே இந்தப் புதினத்தின் வெற்றி.

நூல் ;- தடங்கள்
ஆசிரியர் :- திருமதி எம். ஏ. சுசீலா அவர்கள்
பதிப்பகம் :- மீனாட்சி புத்தக நிலையம். 
விலை :- ரூ 225/-

31.10.20

'தடங்கள்’ குறித்து தமிழ் இந்துவில்...

செப்டம்பர் 2020இல் மதுரை மீனாட்சி புத்தக நிலைய வெளியீடாக வெளிவந்திருக்கும் என் இரண்டாவது நாவல் தடங்கள் குறித்து தமிழ் இந்து வெளியிட்டிருக்கும் அறிமுகக்குறிப்பு.







 

24.12.14

’யாதுமாகி’- நாவல் வெளியீடு

வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் 
என் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா
அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.


யாதுமாகி நூல் வெளியீட்டின் நிகழ்ச்சிக்குறிப்பு

நாள்;27.12.2014

மாலை 5 30

இடம்;ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் அரங்கம் , ஆர் எஸ் புரம் , கோவை
[மதுரை ஐ ஃபௌண்டேஷனுக்கு எதிரில்]

நூல்;’ நாவல்- ‘யாதுமாகி’

வரவேற்பு; திரு கோவை சுரேஷ்

பாரதி பாடல்- வானதிஶ்ரீ

நூல் வெளியீடு 

திரு பாவண்ணன் வெளியிட திரு ஜெயமோகன் முதல்பிரதியைப்பெற்றுக்கொள்கிறார்.
வாழ்த்துரை
 1.திரு ஜெயமோகன் 
2.திரு பாவண்ணன் 
3.திருமதி கே வி ஷைலஜா-எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்[வம்சி பதிப்பகம்]
விமரிசன உரை- 
1.திரு ராஜகோபாலன்-எழுத்தாளர்,விமர்சகர்
2.திருமதி பாத்திமா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
3.திருமதி நா அனுராதா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
ஏற்புரை
எம்.ஏ.சுசீலா
நிகழ்ச்சித் தொகுப்பும் நன்றியுரையும்-
மீனு பிரமோத் இ வ ப,
கூடுதல் ஆணையர்,கலால் மற்றும் சுங்கவரித்துறை,கோவை

14.12.14

யாதுமாகி- அணிந்துரை



[யாதுமாகி நாவலுக்கு எழுத்தாளர் காவேரி அவர்கள் எழுதிய அணிந்துரையின் சில பகுதிகள்]
’’முன்னோக்கி ஓடும் கங்கை’’-

எழுத்தாளர்,
புது தில்லி


‘யாதுமாகி’நாவலின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அதன் அமைப்பு.  நேர்கோட்டு எழுத்தைத் தவிர்த்து முன்னும் பின்னுமாய்ச் செல்வதால் கடந்த கால சம்பவங்களைப் புதிய அநுபவ முதிர்ச்சியுடன் பின்பார்வையிட அது உதவுகிறது. 

தேவியின் மகள் சாருவின் மூலம் தற்கூற்றாக சொல்லப்படும் இந்த நாவலில், தாய் பற்றி எழுதும்போது இயற்கையாக வரும் நெருக்கம் ,அதே வேளையில் அவரது வாழ்க்கையை சற்று விலகி நின்றும் பார்வையிடும் திறம் இவை இரண்டும் சேர்ந்து நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன.இதனாலும் தேவியின் உருவ அமைப்பு இன்னும் கூர்மையாகிறது.


'தேவி' என்ற தனித்துவம் கொண்ட பெண் தனக்கான பாதையைத் தானே வகுத்துக்கொண்டு, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார்.அவரது வாழ்வை வரலாறு போல அளிக்கிறார் அவர் மகள் சாரு. ஆசிரியர் எம்.ஏ.சுசீலாவின் 'யாதுமாகி' நாவலில் இது தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது.

ஆங்கில மஹாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரைப்பொறுத்தவரை ’நம் விதியை நிர்ணயிப்பது நம் ஆளுமையே ’ - character is destiny . தற்கால உளவியல் அறிஞர்களும் நம் வாழ்வை சீராக அமைத்துக்கொள்ள நம‌க்கு self-actualization [சுய உருவாக்கம் ] என்னும் ஆரோக்கியமான திறமை மிகவும் தேவைப்படுகிறதென்ற ஆலோசனையை வழங்குகிறார்கள்.இவர்கள் குறிப்பிடும் self-actualization தேவிக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது.வாழ்க்கை என்பது நம் தலைவிதியின்படி அதிருஷ்ட/துரதிருஷ்ட திசைகளில் இட்டுச் செல்லும் என்ற சோம்பேறித்தனமான கருத்தை முற்றிலும் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையும்,துணிவும்,முற்போக்கான மனப்பான்மையும்,ஆளுமையும் கொண்டு செயல்படும் தேவிக்கு வாழ்க்கை பல வாயில்களைத் திறந்து கொடுக்கிறது.தனது ஆழமான இலட்சியங்களைத் தன் கொள்கைகளின்ப‌டி நிறைவேற்றிக்கொள்ள தன்னைச் சுற்றி இயங்கி வரும் அநீதிகள்,அசிங்கங்க நடவடிக்கைகள்,கொடூரங்களைக் கடந்து சகதி படிந்த தடாகத்தில் தூய்மையுடன் மலரும் வெண்தாமரை போல அவள் துலங்குகிறாள்.


நாவலின் மையம் தேவி.நாவலின் முதுகுத் தண்டும் தேவி.நாவலின் பொருள்பரப்பும் தேவியே.கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி மேலே சுழலும் மீன் மீது மட்டுமே கண்களைப் புதைத்த அர்ச்சுனன் போலக் கல்வியே குறியாக தேவி செயல்படுவது நம்மை சிலிர்க்க வைக்கிறது.

பெண்களுக்குக் கல்வி தேவையில்லை என்ற பிற்போக்கான மனப்பான்மையில் தொய்ந்து கிடந்த இருண்ட சகாப்தம் அது.கூடவே பெண்களுக்குக் கல்வி புகட்டினால் அதன் விளைவாக அவர்கள் விதவைகளாகக்கூடும் என்ற பயமும்,மன வக்கிரமும் தமிழ்நாட்டிலும்,வங்காள மாநிலத்திலும் பரவலாக வேரூன்றியிருந்தது.
குடும்பப் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பது தேவையற்றது என்று கருதும் அதே வேளையில் அவளுடைய வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வஞ்சக உறவினர்கள் தயங்கியதில்லை....ஆனால் தேவி புத்தகப்படிப்பில் மட்டும் புத்திசாலியில்லை; இயல்பான உலகியல் ஞானம், அதனால் விளைந்த முன்னெச்சரிக்கை உணர்வு - இவை எல்லாவற்றையும் விட முக்கியமான மனோதிடம் ஆகியவை தன் காலில் நின்றாக வேணாடும் என எண்ணும் அவரது சுதந்திர மனப்பான்மைக்கு வலுவூட்டுகின்றன.


தேவியிடம் பூமியின் மேல்பரப்பில் பாதங்கள் நன்றாகப் பதிந்திருக்கும் ஒரு முதிர்ச்சியைக் காண்கிறோம்.கல்வி மட்டும் போதாது என்ற விவேகம் அவரை ஒரு நிலையான நல்ல வேலையைத் தேடத் தூண்டுகிறது. அதற்கு வேண்டிய அயராத உழைப்பையும் அவரிடம் காண்கிறோம்.அதெல்லாம் தன் வாழ்க்கைக்கு எத்தனை தேவை என்பதை 
‘’நான் வாழ்க்கை பூரா என்னோட அண்ணா தம்பிகளோட இருந்துண்டு சமையல்கட்டே கதின்னு காலம் முழுக்க மாவரைச்சுண்டு இருந்திருப்பேன்…’’என்று ஒரே ஒரு வாக்கியத்தில் நறுக்கென்று சொல்லி முடிக்கிறார்.

தனது உயர்ந்த இலட்சியங்களை செயலாக்குவதற்கு வேண்டிய ஒழுங்கு,தெளிவான சிந்தனைகள் மற்றும் மனோதிடம் எல்லாமே தேவியிடம் தாராளமாக வாய்த்திருக்கின்றன.அவளுக்கு நேர்ந்த வாழ்க்கைப்போராட்டங்களில் பாதிப்பங்கு இன்னொரு பெண்ணுக்கு நேர்ந்திருந்தாலும் கூட அவள் நொறுங்கி மடிந்து போயிருப்பாள்.

கதையில் வரும் பாத்திரங்களைப் பொறுத்தவரை நம் மனத்தில் நிலைத்து நிற்பவர்களில் ஒருவர் இளம் விதவைப்பெண்களுக்கு ஒரு புகலிடமாக ஐஸ் ஹவுஸ் விடுதியைத் திறம்பட நடத்தி வந்த சுப்புலட்சுமி அக்கா.தேசம் பாராட்டிய பெண் திலகம்;விதவைப்பெண்களுக்கு ‘சாவித்திரி பாடம்’கற்பிக்கத் துணிந்த அபூர்வப்பிறவி. 

தன்னை முற்றிலும் ஐஸ் ஹவுஸ் விடுதிக்காகவே சமர்ப்பணம் செய்து கொண்ட இன்னுமொரு அபூர்வப் பெண்மணி சுப்புலட்சுமி அக்காவின் சித்தி வாலாம்பாள்.இளம் வயதில் விதவையாகி மற்ற இளம் விதவைகளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும்  மறுமலர்ச்சியும் தர முன்னிற்பவள்.சுவாரசியமான பேச்சும் நகைச்சுவை உணர்வும் கொண்ட அருமையான ஒரு பாத்திரம் தேவியின் தோழி சில்வியா

மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒருவர் நள்ளிரவில் திடீரென்று கதவைத் தட்டிப் பசியுடன் அடைகளை விழுங்கும் கிட்டு என்ற கிருஷ்ணன்.தேவியை மறுமணம் செய்து கொள்ள ஊக்குவித்த நற்சிந்தனையுடைய உண்மையான நண்பர்.இந்தக்கதாபாத்திரங்கள் அனைவரும் நாவலை வளமாக்குபவர்கள்.

ஆசிரியர் சுசீலாவின் மொழி ஆளுமை மிகச்சிறப்பானது.அந்தணக் குடும்பச்சூழல்,அதற்கென்றே தனிப்பட இருக்கும் நிஷ்டூரம் கலந்த வாய்த் துடுக்குகள், எடக்கான அதிகப்பிரசங்கித்தனமான பேச்சுக்கள் ஆகியவற்றை இவரது மொழி அநாயாசமாகச்சித்தரிக்கிறது.அதே போல மற்ற சாதிகளுக்கு ஏற்றபடியும் ஆசிரியர் மொழியை லாவகமாக மாற்றிக்கொள்வது நாவலுக்கு யதார்த்தமான ஒரு தன்மையைத் தருகிறது.


தோட்டம்,செடிகள்,மலர்கள் ஆகியவற்றின் வருணனையில் ஆசிரியரின் அபார அழகுணர்வு மிளிர்வதைக்காண்கிறோம். தேவிக்குள் புதைந்திருக்கும் இலட்சியங்கள்,உயர்ந்த மதிப்பீடுகள் ஆகிய எல்லவற்றையுமே அவர் சொந்தக்குழந்தைகளைப்போல சிரத்தையுடன் பராமரிக்கும் பூந்தோட்டத்திலும் பார்க்கலாம்.அதை ரசிக்கும் பெண் சாருவின் உரைநடை மணம் பரப்புகிறது.தேவி தன் வீட்டைச் சுற்றி அமைத்துக் கொண்ட தழைந்த தோட்டத்தில் சங்குபுஷ்பம்,நந்தியாவரட்டை,செம்பருத்தி,பவழமல்லி,பிறகு அவருக்கு ரொம்பவும் பிடித்தமான ‍இருட்டில் மயக்கமூட்டும் ரகசியம் போல மடலவிழ்க்கும் நைட்க்வீன் எல்லாமே பூத்துக் குலுங்கும்.
நாவலின் இறுதியில் தேவி உயிர் துறந்த வேளையிலும் ''ஒரு பூ உதிர்வதைப்போல அம்மா உதிர்ந்து போனாள்'' என்று சாருவுக்கு ஒரு மலர்தான் நினைவுக்கு வருகிறது.

வாசகர்களான நமக்கு நிர்மலமாக சலசலத்து ஓடும் நதியை நினைவூட்டுகிறாள் தேவி. சில தருணங்களில் இளம்பெண் தேவியின் குன்றாத உற்சாகத்தையும் கல்வித் தாகத்தையும் கவனித்த அவளது அம்மா பிரமித்துப் போகிறாள்.தன் சகோதரன் தேவியின் மாமா சகுனி போல தேவியின் கல்விக்குத் தடை விதித்தாலும் தேவி வேறு சில உபாயங்களைத் தானே தேடிக்கொள்ளும்போது ''கட்டற்று ஓடிக்கொண்டிருக்கும் காவேரி அந்தச் சின்ன வாய்க்கால்களிலும் கூட வெள்ளமாய்ப் பாய்ந்து போய்க்கொண்டிருக்''கும் காட்சி சட்டென்று அன்னத்திற்கு முன்வருகிறது.பிறகு ரிஷிகேசத்தில் சாரு நாவலின் கடைசி வாக்கியத்தை எழுதி முடிக்கும்போது தேவி போன்ற ஒரு ஒப்பற்ற பெண் கங்கையாகிறாள்.
'' திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறாள் கங்கை …..''

நாவலைப்பெற
யாதுமாகி- வம்சி பதிப்பகம்
vamsibooks@yahoo.com
32, Vettavalam Road,
ALC Teacher Training Institute (opp)
Tiruvannamalai,
Tamilnadu - 606601
Phone : 04175 251468



13.12.14

’யாதுமாகி’ .....கனவு மெய்ப்படுதல்


என் 
திருவண்ணாமலையிலுள்ள  
வம்சி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள் 

எனது நெடுங்காலக்கனவொன்று இந்தப்புத்தகம் வெளிவந்ததன் வழி சாத்தியமாகி இருக்கிறது. உடன் இருந்து இதைச் சாத்தியமாக்கிய  அனைவருக்கும் நெகிழ்வான நன்றி....

ஒரு வாழ்க்கைச் சித்திரத்தைப் புனைவாக்கித் தரும் சிறிய முயற்சியே                                                                           ‘யாதுமாகி

நெடுங்கதை ஆக்கத்தில் நான் எட்டும் முதல்கல் இது.

தாயாய்த் தந்தையாய் சகலமுமாய் இருந்த அன்னையின் ஆளுமை தன்னுள் விதைக்கும் தேடல்களின் தடம் பற்றிக் குறுக்கும் நெடுக்குமாய்க் காலத்தை ஊடறுத்தபடி அவள் வாழ்வுக்குள் அகமுகப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறாள் மகள் சாரு. அந்தப் பயணத்தில் தேவியின் வாழ்க்கை ஏடுகள் புதிரும் பிரமிப்புமாய் விரிந்தபடி அவளைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன. தடைகளும் சவால்களும் முட்களாய் விரவிக்கிடந்த ஒரு பாதையில் மனத்திண்மை என்ற ஒற்றை மந்திரத்தை மட்டுமே உறுதியாகப் பற்றிக்கொண்டு - தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் அது பற்றிய முழுமையான தன்னுணர்வோடு பதித்தபடி- அரற்றல்களோ ஆவேசக்கூச்சல்களோ இல்லாத அனாயாசமான லாவகத்தோடு அவற்றைப்புறங்கண்டு வென்றிருக்கும் அவளது சாதுரியம் அடுத்த தலைமுறைப்பெண்ணான அவளுக்கு வியப்பூட்டுகிறது.

எவராலும் பொருட்படுத்தப்படாத….., யாராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத இருட்டறை மூலைகளில் கிடந்து புழுதி படர்ந்து பாசி பிடித்து வீணடிக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மட்டுமே மலிந்திருந்த ஒரு வாழ்க்கை ; அதற்குள் புதையுண்டு போயிருக்க வேண்டிய ஞானம்; இவற்றை அரிதாக வாய்த்த ஒரு சில ஊன்றுகோல்களால் மீட்டெடுத்தபடி தனக்கென்று ஒரு தகுதிப்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட தாயின் வாழ்க்கை, கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்னும் எண்ணம் அவளுக்குள் பிறக்கிறது; அதன் செயல்வடிவமே அவள் வரையும் தாயின் வாழ்க்கைச் சரிதம்.
[’யாதுமாகி’என்னுரையிலிருந்து...]

பாரதியின் பல வரிகள் இந்நாவலின் அடிநாதங்கள்....
’’பால ருந்து மதலையர் தம்மையே 
பாத கக்கொடும் பாதகப் பாதகர் 
மூலத் தோடு குலங்கெடல் நாடிய 
மூட மூடநிர் மூடப் புலையர்தாம், 
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக் 
கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
 சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்
 தாத ராகி அழிகெனத் தோன்றுமே! ’’[பாரதி சுயசரிதை]
என்று குழந்தை மணம் பற்றி அவன் கொதித்தது பெண்ணின் மணவாழ்க்கை சார்ந்தது மட்டுமில்லை. கல்வி....ஆளுமை என அவள் சார்ந்த அனைத்துமே மண்ணோடு மண்ணாகி ஒரு மனித வாழ்வே வீணாகி விடுவதை என்பதை எண்ணியதே அவனது தார்மிகச்சீறல்.

அவனது குமுறலும்..ஆதங்கமும் எந்த அளவுக்கு நடப்பியல் உண்மையில் தோய்ந்தவை என்பதன் நிதரிசன நிரூபணமே என் யாதுமாகியின் ‘தேவி’

சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தின்  இந்தியப்பெண்ணின் ’மாதிரி’அவள்;
அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்...அதிலும் ஆசாரக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பெண்  சுமந்தாக வேண்டிய  எல்லாச் சிலுவைகளையும் - அலுப்போ சலிப்போ - வேதனைப்புலம்பலோ வெற்று அரற்றலோ இல்லாமல் இலாவகமாகச் சுமந்து அவற்றைப்புறங்கண்டவள் அவள். புலியை முறத்தால் விரட்டிய சங்கப்பெண் போலக் கல்வி என்னும் கவசத்தால் சமூகத் தடைகள் என்ற கொடிய விலங்குகளை அநாயாசமாக எதிர்கொண்டு வீழ்த்தியவள்; அதை ஆரவாரத்தோடு..ஆர்ப்பாட்டத்தோடு..கோஷ முழக்கங்களோடு செய்யாமல் இயல்பான கதியில் செய்துவிட்டு ஒரு புன்னகையோடு கடந்து போகிறவள்.
அது பற்றிய அலட்டல்களோ பெருமிதமோ கூட அவளுக்கு இல்லை.
அவை செய்தே ஆக வேண்டிய அவளின் கடமைகள் மட்டுமே.

செதுக்குவதற்கு வேறு யாருமற்றநிலையில் தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட சிற்பம் அவள்...!
ஆம்..அவள் ஒரு கர்ம யோகி மட்டுமே!!

நாவலைப்பெற
யாதுமாகி- வம்சி பதிப்பகம்
vamsibooks@yahoo.com
32, Vettavalam Road,
ALC Teacher Training Institute (opp)
Tiruvannamalai,
Tamilnadu - 606601
Phone : 04175 251468




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....