துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.4.18

விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா,முழு காணொளிக்காட்சி



சென்னை ருஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து என் மொழியாக்க முயற்சிகளைப் பாராட்டி நிகழ்த்திய விழாவின் காணொளிக்காட்சி .நன்றி 

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா



விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா,இந்திரா பார்த்தசாரதி உரை

சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில்  எம்.ஏ.சுசீலா அவர்களை பாராட்டும் முகமாக  ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்முகம்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை

எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை

எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்



விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா- ஏற்புரை




                                                                   ஏற்புரை
அனைவருக்கும் வணக்கம். விழாத்தலைமை ஏற்றிருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்தஎழுத்தாளர் திரு இ பா அவர்களுக்கும் என் அன்பிற்குரிய நண்பரும்,எழுத்தாளருமான திரு ஜெயமோகன் அவர்களுக்கும் அரங்கில் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை முன் வைத்து ஆய்வுரை நிகழ்த்திய எழுத்தாளத் தோழர்கள் யுவன் சந்திரசேகர்,ராஜகோபாலன் சுரேஷ் பிரதீப் ஆகியோருக்கும் இந்த விழாவை நடத்துவதில் ஒருங்கிணைந்ததோடு இதில் பங்கேற்றுச் சிறப்புச்செய்த தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர் திரு திரு.மிகயீல் கார்ப்பட்டோவ் அவர்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த இனிய நட்புக்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் அவையில் குழுமியிருக்கும் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கங்கள்.
நான் செய்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை கவனப்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு விமரிசனக் கூட்டம் நடத்தப்போவதாக பிப்ரவரி மாதம் ஜெயமோகன் எனக்கு ஒரு மின்அஞ்சல் அனுப்பி ,கைபேசியிலும் சொன்ன அந்தத் தருணத்திலும் கூட ருஷ்யக்கலாசார மையத்தோடு இணைந்து இத்தனை பெரிய விழாவாக இது உருப்பெறக்கூடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. நண்பர் சிரில் அலெக்ஸ் அவர்கள் இது குறித்துப்பகிர்ந்தபோதும், தொடர்ந்து ஜெயின் தளத்தில் விரிவான பதிவும் அழைப்பிதழும் வெளியானபோதும் மகிழ்ச்சியோடு கூடவே சிறு தயக்கமும்- கூச்சமும் கூட எனக்கு ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு முதன் முதலாக ஆ மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்த காலகட்டத்திலிருந்து அந்த இலக்கியக்குடும்பத்தில் ஒருத்தி நான். திரு ஜெயமோகன் உட்பட விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரும் -என்னை நேரில் பார்த்தவர் பாராதவர் என எல்லோருமே- -தங்கள் குடும்பத்தின் ஒரு மூத்த சகோதரியாக, அன்னையாகவே என்னை ஏற்று வேற்றுமை பாராட்டாத உண்மையான அன்பையும் மதிப்பையும் செலுத்தி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு இளையோர் எடுக்கும் விழாவாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டபடி இதற்கு இசைந்தேன்.
மேலும் என் மொழியின் வழியாகவும் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கும் இலக்கியப்பேராசான் தஸ்தயெவ்ஸ்கி அவர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகம் ஒன்று கூடித் தமிழகத் தலைநகரில் எடுக்கும் விழா என்றே இதை நான் கொள்கிறேன். அந்த மாமேதைக்கு என் நன்றியைக்காணிக்கையாக்குகிறேன்.
படைப்பாக்க முயற்சிகளில் மொழியாக்கத்துக்கும் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு என்பதை அறிந்திருந்தாலும் மிகப்பெரும் மொழியாக்க முயற்சி ஒன்றில் நான் நேரடியாக ஈடுபட நேர்ந்தது மிக மிகத் தற்செயலான ஒரு நிகழ்வு.
தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் முதன்முதலாக அறிந்த பிள்ளைப்பிராயம் தொடங்கி எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்ற தீராத ஆர்வம் என்னில் பற்றிக்கொண்டிருந்தது. கிடைத்த நூல்களையெல்லாம் வாசிப்பது மட்டுமல்லாமல் ஏதோ ஒன்றை எழுதிப்பார்க்கும் முயற்சியை நான் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து மேற்கொண்டிருந்தேன். என் நேசத்துக்குரிய பேராசிரியப்பணி பிற பொறுப்புக்களுக்கிடையிலும் கூட வாசிப்பையும் எழுத்தையும் இடையறாது தொடர்ந்து வந்த எனக்குப் படைப்பாளியாகக்கிடைத்த முதல் அங்கீகாரம் 79இல் அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் என் முதல் சிறுகதைக்குக்கிடைத்த முதல் பரிசு. தொடர்ந்து பணி நெருக்குதல்கள்,ஆய்வு இவற்றுக்குஇடையே சில இடைவெளிகளோடு பல கதைகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் முழுநேர எழுத்து எனக்கு சாத்தியமாகாத நெடும் கனவாக மட்டுமே இருந்து வந்தது. இருந்தாலும் ஆண்டுக்கு 1,2 கதைகளையாவது எழுதிப்பார்த்தபடி அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளால் எழுத்தென்னும் சிற்றகல் என்னுள் முற்றிலுமாய் அவிந்து விடாது காத்தபடி முழுமையான எழுத்துப்பணியில் என்னை மூழ்கடித்துக்கொள்வதற்கான காலம் கனிந்து வரக்காத்திருந்தேன்.
பணிநிறைவு பெற்று குடும்பத்தோடு தில்லி கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்த அந்த வேளையிலேதான் மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் துரைப்பாண்டி அவர்கள் வழியாக தஸ்தயெவ்ஸகியின் குற்றமும் தண்டனையும் நாவலைப் பெயர்க்கும் பணி என்னை வந்தடைந்தது. அவர் வழியாக தஸ்தயெவ்ஸகி என்னிடம் வந்து சேர்ந்த ஒரு முகூர்த்த நேரமாகவே அதை என்னால் கொள்ள முடிகிறது. சொந்த மொழி, பழகிய சூழல், நட்புக்கள் என எல்லாவற்றிலிருந்தும் அந்நியப்பட்டிருந்த தில்லி மண்ணில் -படைப்பாக்க மனநிலை எனக்குள் கைகூடாத ஒரு ஒரு காலகட்டத்தில் குற்றமும் தண்டனையும் நாவலைப் படிக்கத் தொடங்கினேன். ஒரு சில பக்கங்களைத் தாண்டுவதற்கு முன்பே தஸ்தயெவ்ஸ்கி எனக்கு மிகவும் நெருக்கமானவர் போலத் தோன்றத் தொடங்கினார். ரஸ்கோல்நிகோவுக்கு அவரது அன்னை கடிதம் எழுதும் கட்டத்தை நெருங்கியபோது எந்த முயற்சியும் செய்யாமலே எவரோ dictation போடுவது போல அதன் தமிழ் வரிகள் என்னுள் ஓடத் தொடங்கியிருந்தன.
தானும் கூட கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ் தஸ்தயெவ்ஸ்கி படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டது போல .மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில்  எல்லாம் பயணம் செய்து,அதன் இண்டு இடுக்குகளையும்  கூடத்துழாவி,அங்கே மண்டிக்கிடக்கும் சபலங்களை,சலனங்களை,அழுக்குகளை,ஆசாபாசங்களை,அன்பை,அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் அவரது எழுத்தை வாசிக்க வாசிக்க அவர் எனக்கு மிகவும் நெருக்கமாகிப்போனார்.அந்த மாமேதையின் வார்த்தைகளுக்குள் – உருகி,உட்கலந்து,கசிந்து.கண்ணீர் மல்கி நான் என்னையே தொலைத்து விட , கூடு விட்டுக்கூடு பாய்வது போல தஸ்தயெவ்ஸ்கியே  என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போகிறாரோ என்ற  மனமயக்கம் கூட ஒரு கட்டத்தில் என்னுள் ஏற்பட்டிருக்கிறது. .தஸ்தயெவ்ஸ்கி சொல்ல விரும்பிய கதையை,உணர்வுகளைத்தமிழில் முன் வைக்க நானும்,என் எழுத்தும் கருவிகள் மட்டுமே என்ற உண்மையை அப்போது நான் விளங்கிக்கொண்டேன். எட்டு மாதங்களில் அதன் முதல் வரைவை முடிக்கும் அளவுக்கு என்னை ஆட்கொண்டு இயக்கியது அவரது எழுத்து மட்டுமே.  2007இன் இறுதியில் வெளிவந்து இலக்கிய வட்டத்தில் வரவேற்புப் பெற்ற குற்றமும் தண்டனையைத் தொடர்ந்து அசடனைப் பெயர்க்கத் தொடங்கினேன்.
அசடன்,  குற்றமும் தண்டனையும் போல ஒருமுகத் தன்மை கொண்டதல்ல; பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவையே இடியட்/அசடன். பல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் அதிலுள்ள பிரெஞ்சுத் தொடர்களுக்காகவும் சொல்லாட்சிகளுக்காகவும் ஜே என் யூ பிரெஞ்சுத் துறைக்கு ஒரு மாணவ நிலையில் நான் பல நாள் அலைந்து திரிய நேர்ந்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது எனக்கு ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது.
குற்றமும் தண்டனையும், அசடன் ஆகிய இரு படைப்புக்களையும் என் வழி தமிழில் முதலில் பதிப்பித்து தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கத்தின்பால் என்னை ஆற்றுப்படுத்திய பாரதி புக் ஹவுஸ் துரைப்பாண்டி அவர்களை இந்த நல்ல தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். சில நெருக்கடிகளால் அவரால் தொடர்ந்து அந்தப்பணியை முன்னெடுக்க இயலாமல் போனநிலையில்- பலருக்கும் பிரதிகள் கிடைக்காமல் போன கட்டத்தில் – இவற்றை செம்பதிப்புக்களாகக்கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி அந்த 2 பெரும் படைப்புக்களைப்பதிப்பிக்க முன் வந்த தோடு[அசடன் செம்பதிப்புஅச்சில்] அவற்றுக்குப்பின் நான் செய்த தஸ்தயெவ்ஸ்கி குறுங்கதைகள், நிலவறைக்குறிப்புக்கள், இப்போது அச்சில் இருக்கும் இரட்டையர் ஆகியவற்றை மிகச்சிறப்பான தரத்தோடு பதிப்பித்து வரும் நற்றிணை பதிப்பகத்தாருக்கு – குறிப்பாக தோழர் யுகனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மிகப்பிரம்மாண்டமான படைப்புக்களை மொழிபெயர்த்ததை விடக் கடுமையான சவால்களை என் முன் வைத்த சிறிய ஆக்கம் நிலவறைக்குறிப்புக்கள் [Notes From The Underground]. தஸ்தயெவ்ஸ்கியின் பெரிய நாவல்கள் பலவற்றைப்போல எண்ணிக்கையற்ற கதைமாந்தர்களையோ,விறுவிறுப்பான கதைப் பின்னலையோ,மூலக்கதையோடு பிணைந்து வரும் சிறு சிறு கிளைக்கதைகளையோ கொண்டிருக்காமல்எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பலவீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியபடியும் ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. புனைவுகளின் சாத்தியங்களையெல்லாம் தன் படைப்புக்களில் எட்ட முடிந்த ஓர் இலக்கிய மேதை இருப்பியல் வாதம் என்னும் இலக்கிய அணுகுமுறைக்கு அளித்திருக்கும் புனைவு வடிவமே நிலவறைக்குறிப்புக்கள். உள்ளச் சுழல்களின் கொந்தளிப்பும்,இருட்டும் நிரம்பிய பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயலும் படைப்பாளியின் தடத்தைப் பிறழ்வின்றிப் பின் தொடர்ந்த வண்ணம் – வெளிப்படையாகச் சொல்லப்படாத பூடகமான அகச்சுழிப்புக்களோடு கூடிய இந்தப்பிரதிக்குள் பயணம் செய்து அதை என் மொழியில் வைக்க நான் எடுத்துக்கொண்ட கால அவகாசம் அளவில் கூடுதலான முன்னவற்றை விட மிகவும் அதிகமானது என்பதே இதன் செறிவையும் அடர்த்தியையும் இருண்மையையும் சொல்லி விடக்கூடும்…
பெரும் படைப்பாளிகளும் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைந்திருக்கும் இந்த அவையில் தஸ்தயெவ்ஸ்கி.யின் 5 மொழிபெயர்ப்புக்களை செய்து முடித்திருப்பவள் என்னும் ஒரே ஒரு தகுதியுடன் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட ஆர்வமுடன் இருக்கும் இளைய தலைமுறைக்கு என் அனுபவ அடிப்படையில் சுருக்கமாகச்சில செய்திகளை முன் வைத்து என் ஏற்புரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நான் மொழிபெயர்ப்புக்கோட்பாடுகளையோ நெறிமுறைகளையோ முறையாகக் கற்றுக்கொண்டு இந்தத் துறையில் கால் பதித்தவள் இல்லை. அது தேவையும் இல்லை என்பதையே என் அனுபவமும் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் எதிர்வினைகளும் திரும்பத் திரும்ப எனக்கு உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
தொடந்த இலக்கிய வாசிப்பும் தொடர்ந்து ஏதேனும் ஒன்றை எழுதிப்பார்த்தபடி ஏதோ ஒரு வகையில் நம் மொழியைக் கூர் தீட்டிக்கொண்டபடி அது துருப்பிடித்துப்போகாத வகையில் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளும் மட்டுமே நம் மொழி ஆளுமையை உயிர்ப்போடு வைப்பவை படைப்பாக்கங்களுக்கு மட்டுமல்ல, மொழிபெயர்ப்புக்கும் துணை வருபவை அவை மட்டுமே என்பதே அனுபவ வாயிலாக நான் பெற்ற தெளிவு. செவ்விலக்கிய வாசிப்புக்களோடு சமகாலப் புனைவுகளையும் தொடர்ந்து கொண்டிருப்பதே இன்றைய மொழியின் நீரோட்டத்துக்குள் நம்மை இட்டுச்செல்லக்கூடியது; வழக்கிறந்ததாக ஆகி விடாமல் இன்றைய போக்கை ஒட்டியதாக நம் மொழிக்குப் புதுமையும் செழுமையும் சேர்க்கக்கூடியது . இன்றைய காலகட்டத்து இளைஞர்களும் கூட என் மொழியாக்கத்தோடு ஒன்ற முடிகிறதென்றால் என் மொழி நடையோடும் சொற்தேர்வோடும் இணைய முடிந்து அதன் சரளத்துக்காக அதை ஏற்க முடிகிறதென்றால் அதற்கான அடிப்படைக்காரணம் அதுவே.
அது போலவே மொழியாக்கத்தின் கதை ஓட்டத்தை நான் உயிர்ப்போடு தந்திருக்கிறேன் என்று நீங்கள் குறிப்பிடுவதற்கான பின்புலத்தை எனக்கு அமைத்துத் தந்தவை நான் எழுதிப்பார்த்திருக்கும் சிறுகதைகளும் ’யாதுமாகி’ என்ற என் நாவல் முயற்சியுமே. மொழியாக்கம் என்று தோன்றாத வண்ணம் அதை நான் தந்திருந்தால் அதற்கான காரணம், இடை இடையே இவ்வாறு தனிப்பட்ட படைப்பாக்கங்களிலும் நான் ஈடுபட்டு வருவது மட்டுமே..ஒரு மொழியாக்கம் முடிந்ததும் ஒரு சிறு படைப்பாக்கம் என்று என்னை நான் தகவமைத்துக்கொள்கிறேன். படைப்பாக்கத்தால் மொழியாக்கமோ மொழியாக்கத்தால் படைப்புத் திறனோ எந்த வகையிலும் பாதிப்புறுவதில்லை என்பதே நான் கண்டடைந்த முடிபு.
இவற்றுக்கெல்லாம் மேலான முதன்மையான ஒன்று உண்டு. அதுவே மொழியாக்கும் படைப்பின் மீது நாம் கொள்ளும் எல்லை கடந்த நேசம் பற்று. அதுவும் நாமும் வேறில்லை என்று ஒன்றிக்கலக்கும் அபேத நிலை மட்டும் நமக்குக் கை கூடி விட்டால்- மொழி ஆளுமை நம் வசப்பட்டு விட்டால்- மொழிபெயர்ப்புக்காகப் பிறகு எந்தத் தனிப்பயிற்சி வகுப்பும் இலக்கண நெறிகளும் வழிகாட்டுதல்களும் தேவையில்லை என்று துணிந்து இறங்கி விடலாம். நாம் மிகவும் நேசிக்கும் – நம்மைக்கட்டிப்போட்டு பிரமிக்க வைக்கும் விடும் ஒரு பிரதி சார்ந்த மொழிபெயர்ப்பில் முனையும்போது மட்டுமே குறிப்பிட்ட அந்த எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், மூலப்படைப்பாளி பெற்ற அகக்காட்சிகளை -அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை- அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் சாத்தியமாகும்.
என்னைப்பொறுத்த வரை என் அகமனத்தைத் துலக்கவும் அதில் புத்தொளி பாய்ச்சவும் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியாக்கப்பணியில் நான் கழித்த பொழுதுகள் துணை வந்திருக்கின்றன. அவரது ஒவ்வொரு படைப்பைப் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே.
ஒரு சிறிய சம்பவத்தைச் சொல்வதோடு இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்.2011- அசடன் வெளி வந்த நேரம்; அப்போது தில்லியில் வசித்துக்கொண்டிருந்த எனக்கு மதுரை அனுப்பானடிப்பகுதியிலுள்ள அறிமுகமில்லாத தையல் கலைஞர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. 600 ரூபாய் என்பது அவரைப்பொறுத்த வரை ஒரு மிகப்பெரும் தொகை; அத்தனை விலை தந்து அசடனை வாங்கிப்படித்து என் கைபேசி எண்ணையும் முயன்று கண்டு பிடித்து ‘’ஆங்கிலம் அறியாத என்னிடம் அசடனைக் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்’’என்று அவர் நெகிழ்ந்து சொன்ன அந்தக்கணம் என் நெஞ்சில் உறைந்து கிடக்கிறது. வேறெந்த விருதுகளையும் விட மேலான ஆத்மார்த்தமான அந்தச் சொல் போலவே இன்றைய விழாவும் என் நெஞ்சை நிறைத்தபடி நான் வாழ்ந்திருப்பது அர்த்தமுள்ள ஒரு வாழ்வைத்தான் என்று என்னை உணர வைக்கிறது.
அந்த நிறைவையும் மகிழ்வையும் எனக்களித்த இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் பெரு முயற்சி எடுத்து இந்த விழாவை நிகழ்த்திக்காட்டியிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.



5.4.18

பாராட்டு விழா -தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களுக்கு

தமிழ்நாட்டின் சமகால எழுத்தாளுமைகளில் குறிப்பிடத்தவரான மதிப்புக்குரிய எழுத்தாளர்  திரு ஜெயமோகன் அவர்கள்  என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை கவனப்படுத்த சென்னையில் ஒரு விமரிசனக் கூட்டம் நடத்தப்போவதாக பிப்ரவரி மாதம் எனக்கு ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார்.கைபேசியிலும் அழைத்துச்சொன்னார். 
அப்போது கூட அது இத்தனை பெரிய அளவில் நடக்கும் என்றோ -   விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் ருஷ்யக்கலாசார மையமும் இணைந்து நடத்தும் பெருவிழாவாக- மூத்த எழுத்தாளர் திரு இந்திரா பார்த்தசாரதி அவர்களின் தலைமையில் நிகழும் என்றோ  நான் கனவிலும் எண்ணவில்லை. இது என்னை சற்று கூச்சப்படுத்தியபோதும் விஷ்ணுபுரம் நண்பர்களும் திரு ஜெயமோகனும் என் இலக்கியக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குடும்ப நபர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் மூத்த சகோதரிக்கு - மூதன்னைக்கு எடுக்கும் ஒரு விழாவாகவே இதைக்கொண்டு நண்பர்களின் ஆர்வத்திலும் அன்பிலும் நெகிழ்கிறேன். ஒருங்கிணைப்புப்பணிகளிலும்,மொழியாக்கங்களைப் படித்து ஆய்வுரை வழங்குவதிலும் தீவிர முனைப்போடு இயங்கி வரும் நண்பர்களுக்கு என் நன்றி.  

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும், ரஷ்ய அறிவியல் கலாச்சார மையமும் இணைந்து ருஷ்ய மேதையான எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்மொழியாக்கங்களுக்காக எனக்கு நடத்தும்  பாராட்டு  விழா. வரும் ஏப்ரல் ஏழாம் தேதி சனிக்கிழமை சென்னை ருஷ்ய அறிவியல் கலாச்சார நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நிகழ்கிறது.திரு.மிகயீல் கார்ப்பட்டோவ் [தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர்], எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கவிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜகோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றுகிறார்கள்.அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறேன்.

புது தில்லியில் வசித்தபோது
இந்திரா பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் காவேரி லட்சுமி கண்ணனுடன்
2012 ஊட்டி நாராயண குருகுலத்தில் நிகழ்ந்த காவிய முகாமில் ஜெயமோகனுடன்

மதுரை பாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ஏ.சுசீலா, ரஷ்ய இலக்கிய மேதை பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ‘நிலவறைக் குறிப்புகள்’ ஆகிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ரஷ்யாவுக்குப் பயணம்செய்து, கதை நிகழ்ந்த இடங்களையும் பார்த்துவந்திருக்கிறார். தஸ்தயேவ்ஸ்கியின் உலகப் புகழ்பெற்ற இலக்கிய ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலாவுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், சென்னையில் வருகின்ற ஏப்ரல் 7-ல் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, தென்னக ரஷ்யக் கலாச்சார நிலைய துணைத் தலைவர் மிகயீல் கார்ப்பட்டோவ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். எம்.ஏ. சுசீலாவின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி எழுத்தாளர்கள் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், ராஜ கோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோர் பேசுகிறார்கள்.

ஆனந்தவிகடன் 11/4/18இல் அறிவிப்பு


மொழியாக்கங்கள் இது வரை...





[அச்சில் உள்ளது]

திரு ஜெயமோகன் அவர்களின் பதிவு
//சுசீலாவின் மொழியாக்கத்தின் சிறப்பம்சம் அவை சீரான வாசிப்புத்தன்மையுடன் மூலத்திற்கு நேர்மையானவையாக அமைந்துள்ளன என்பதுதான். தமிழில் வெளிவரும் மொழியாக்கங்களில் வாசிப்புத்தன்மை என்பது மிக அரிது என்பதே இங்குள்ள நிலை. எந்த மொழியாக்கத்தையும் ஐம்பது பக்கம் வாசிக்காமல் வாங்கக்கூடாது என்பதுதான் வாசகர்களுக்கு நான் கூறும் அறிவுரை. சமீபத்தைய மொழியாக்கங்கள் பல தடிமனாக என் நூலகத்தில் காத்திருக்கின்றன. காகிதப்பலகைகள் என்றுமட்டுமே அவற்றை சொல்லமுடியும். சுசீலாவின் குற்றமும் தண்டனையும் நாவலை வெறும் மூன்றுநாட்களில் வாசித்ததை நினைவுறுகிறேன்.
எம்.ஏ.சுசீலா பருவங்கள் மாறும் (1985), புதிய பிரவேசங்கள் (1994), தடை ஓட்டங்கள் (2001), தேவந்தி (2011) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் யாதுமாகி என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் (1996), பெண் இலக்கியம் – வாசிப்பு (2001), இலக்கிய இலக்குகள் (2004), தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும் (2006), ஆகிய கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இரண்டு தொடக்கங்கள் தேவை என்பது என் எண்ணம். பணி, குடும்பம் என ஒரு வாழ்க்கை. அது ஏறத்தாழ அறுபது வயதில் முடிவடைகிறது. அதன் பின்னர் ஓய்வு என நம் சூழல் சொல்கிறது. ஆனால் இன்று மேலும் இருபதாண்டு முப்பதாண்டு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. மீண்டுமொரு தொடக்கத்தை நிகழ்த்தி அதில் தீவிரமாக செல்லாவிட்டால் வெறுமையே எஞ்சும். பெரும்பாலானவர்கள் அமர்ந்திருக்கும் நரகம் அது.
எம்.ஏ.சுசீலாவின் வாழ்க்கையின் வெற்றிகரமான, மகிழ்வான காலகட்டம் என்பது இந்த இரண்டாவது தொடக்கத்திற்குப் பின்னர்தான். அவரை காலம் நினைவுகொள்ளப்போவது இந்த முகமாகத்தான். முதன்மையாக பேராசிரியராக, பேச்சாளராக அறியப்பட்டவர் இந்த இரண்டாவது காலகட்டத்தில்தான் மொழிபெயர்ப்பாளராக ஆனார். சுசீலாவின் வாழ்க்கை அவ்வகையில் இங்குள்ள அனைவருக்கும் ஒரு பாடம், வழிகாட்டி.
எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் ஏப்ரல் ஏழாம் தேதிசென்னை ருஷ்யக் கலாச்சார நிலையத்தில் மாலை 6 மணிக்கு விழா நிகழ்கிறது. மிகயீல் கார்ப்பட்டோவ் [தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர்]  . இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் எம்.ஏ.சுசீலாவை கௌரவிக்கிறார்கள். யுவன் சந்திரசேகர், ராஜகோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்.
நண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.//
எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறோம்.
நாள்:-ஏப்ரல் – 7 சனிக்கிழமை மாலை
இடம்:- ருஷ்யக் கலாச்சார மையம் 74 கஸ்தூரிரங்கன் சாலை ஆழ்வார்பேட்டை சென்னை
நேரம்:- 530
மிகயீல் கோர்ப்பட்டோவ், இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர், சுரேஷ் பிரதீப், ராஜகோபாலன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். சுசீலா ஏற்புரை வழங்குகிறார். சிறில் அலெக்ஸ் வரவேற்க, கவிதா ரவீந்திரன் தொகுத்துவழங்க அருணாச்சலம் மகராஜன் நன்றி கூறுகிறார்
நண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.

இணைப்புக்கள்

அசடன் வாசிப்பு- சௌந்தர்


அசடன்மொழிபெயர்ப்புஅருணாச்சலம் மகராஜன்










3.4.18

‘யாதுமாகி’-ஒரு மதிப்புரை

எம்.ஏ.சுசீலாவின் ‘யாதுமாகி’

[நன்றி- http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/28623-2015-06-04-03-13-05]



நாவலின் சுருக்கம் :
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார்.
பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன் கல்லூரி படிப்பை முடித்து, ஆசிரியராய் பணியாற்றத் தொடங்குகிறார். மறுமணமும் செய்துக் கொள்கிறார் ஒரு ராணுவ அதிகாரியை. அவருக்கும் இது இரண்டாவது திருமணமே.
அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அதன் பிறகு கணவரின் மரணம், அம்மாவின் மரணம் என்று அடுத்தடுத்து. மகள் படித்து உயர்ந்து கல்லூரியில் பேராசிரியை ஆகிறார். அவளின் திருமணம் இவரைத் தாயாய் மதிக்கும் ஒருவருடன் அமைகிறது. ஆனால் அது வெளிவேஷம் எனப் புரிந்துப் போகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாதால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது.
இப்போது மகள், பேத்தி என இருவரையும் சேர்த்தே சுமக்கும் ஒரு பொறுப்பினை தாங்கி, முன்னோக்கி நகர்கிறார். இதுதான் இந்த நாவலின் அம்சம்.
சுயசரிதை நூல்கள் :
மகள் தன் தாயின் வாழ்க்கையை எழுதியிருக்கும் ஒரு சரிதை, கதை வடிவில் புனையப்பட்டுள்ளது. வாழ்ந்த காலகட்டங்களை நினைவு கூறுதல் மாதிரிபட்ட சுயசரிதை சார்ந்த புனைவுகள் அதிகம் வந்திருக்கிறது ஆங்கிலத்தில். அம்மாவுடைய oral story telling யை வாய்மொழி வழியாய் வருவதை கதைப்படுத்துதல். அப்போது, அதில் இருந்த மனிதர்கள், தேதிகள், அந்த வாழ்வியல் நிகழ்வுகள், காலகட்டங்கள், சேர்த்து தொகுத்தல்.
இப்படி ஒரு biographical கதை எழுதும் போது, எழுதுபவர்கள் ஒரு worksheet மாதிரி தயார் செய்வது வழக்கம். எந்த வருடம் என்ன நடந்தது என்ன நிகழ்வு அது அதை கதையின் களத்திற்குள் கொண்டு வருவது யாரை எதை முதன்மைப்படுத்தி கதையை கொண்டு செல்வது என்பது குறித்த ஒரு அலசல் இருக்கும். அதை இங்கும் கடைபிடித்திருக்கிறார் ஆசிரியர். 
அவர் வைத்திருக்கும் தலைப்புகள் அதைச் சொல்லி செல்கின்றன. சென்னை 1926, திருவையாறு 1935, காரைக்குடி 1948 என்பதாய் இருக்கிறது.
வகைப்படுத்துதல் :
வகைப்படுத்துதலை இரண்டு வகையாக்கியிருக்கிறார்.
ஒன்று, அத்தியாயங்களை ஆண்டுகளின் வரிசையில் வைக்காமல், அத்தியாயங்களின் தன்மையுடன் ஒருங்கிணைத்திருக்கிறார்.
இரண்டாவது, சில அத்தியாயங்கள் படர்க்கை வழக்கிலும், அதாவது அந்த தாயின் பார்வையிலும் சிலவை இந்த நாவலை எழுதியதை அமையும் மகளின் பார்வையிலுமாய் .வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் :
அடுத்ததாய், இந்த மாதிரி சுயசரிதை நாவல்களில், சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
அந்த காலத்தில் மகளுக்கு தன் தாயின் மீதான அனுபவம் மிக குறைவாகவே இருக்கும். நல்ல புரிதலுடன் பேசுவது மிக குறைவே. தாய் சொல்லிக் கேட்டது, தானாய் அறிந்தது மற்றும் அவர் தோழியிடம் கேட்டு தெரிந்தது என்று தொகுத்து, அதைத்தான் புனைவுப்படுத்த முடியும்.
மகளின் பார்வையில், அவள் பள்ளி இறுதி படிக்கும் போது, தன் தாய் எப்படியிருந்தார், கல்லூரி சமயம், மேற்படிப்பு சமயம், கல்லூரியில் வேலை சேர்ந்த சமயம், அவளின் பெண்ணே பெரிய பிள்ளையாகி மேற்படிப்பு செல்லும் போது என்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் தாயின் செயல்களை, தன்னோட பார்வையில், தன் வாழ்க்கையை தாயுடன் இணைத்து கதை உணர்வுகளுடன் மிக நேர்த்தியாக சுயசரிதை என்பதே இல்லாமல், புனைவு செய்யப்பட்டு இருக்கிறது.
கதாப்பாத்திரங்கள் :
தேவியின் அம்மா, தன் மகளின் பால்ய விவாகத்தின் போது வெறும் ஒரு மௌன சாட்சியாக இருக்கிறார். அவர்களின் திருவையாறு வீட்டின் சூழல், அந்த முப்பதுகளில் இருந்த பெண் மதிப்பீடுகள் உறவுகளை மீறாமை எல்லாமே அவளின் தாயிடம் காண முடிகிறது. 
மௌனமான பெண்மணியாக அவரை அடுத்தடுத்த காலகட்டங்களில் கொண்டு செல்கிறார். ஆனால் சிறிது முன்னேற்றத்துடன். தேவி கல்லூரி படிக்க தன் மகன் எடுக்கும் முனைப்பை ஆதரிக்கிறார் மௌனமாகவே
இதை உணரும் தேவியின் மனநிலை அவரின் இறப்பின் போது தேவியின் அழுகை மற்றும் தன் மகளிடம் ‘அவரால் முடிந்ததை அவர் செய்தார்’ என தன் தாயைப் பற்றி சொல்வதிலும் தெரிகிறது.
ஆண் கதாபாத்திரங்கள் மிக குறைவாக இருக்கிறது. அவற்றை subtle characterization என்னும் அமிழ்ந்து போன பாத்திரப் படைப்பே கொடுத்திருக்கிறார்.
முதலில் அவரின் தகப்பனார், அடுத்ததாய் இரண்டாவது கணவர், அடுத்தது அவரின் மருமகன்
தகப்பனார், தன் தாயின் பேச்சைக் கேட்டு தன் மகளுக்கு பால்ய விவாகம் செய்து வைத்துவிடுகிறார். அந்த காலகட்டத்தின் விளைவு அவர் அப்படி நடந்துக் கொள்வது. இத்தனைக்கும் அவர் கல்லூரியில் வேலை பார்க்கிறார். ராஜாராம் மோகன்ராய் போன்றோரின் கூட்டங்களுக்கு சென்றும் வருகிறார். ஆனாலும் அவரால் தன் தாயின் பேச்சை மீற முடியவில்லை. ஆசிரியர் அவர் மேல் குறையோ குற்றச்சாட்டோ வைக்கவில்லை. மருமகன் இறந்துபோன பிறகு, தன் தவறை நினைத்து வருத்தப்பட்டு அவளை படிக்க வைக்கிறார். அதனால் அந்த ஆண்மகனின் மீது நமக்கு ஒரு மரியாதையை உண்டு பண்ணுகிறார் ஆசிரியர்.
அடுத்தது அவரின் இரண்டாவது கணவர். ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். அதிகமாக பேசியதாக காட்டவில்லை. புத்தகங்களுடனே இருக்கிறார். தன் சொந்த மகளிடமே அதிகமாய் பாசம் காட்டுவதில்லை. வந்து சாப்பிட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிடுகிறார். அவரின் மகளை தாய் தான் பேசு என்று அழைத்து செல்கிறார்.
அந்த பாத்திரப் படைப்பு ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. அவர் குழந்தையே அவரிடம் வரும் போது எப்படா அப்பா நம்மை கீழே போய் விளையாட சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்து நிற்கும். கல்யாணி பாட்டி அந்த காலகட்டத்து துறை சார்ந்த பணியில் இருப்பவர்களின் கம்பீரம் அது. அதை அருமையாய் கோடிட்டுவிட்டார் இதில். அவரின் ஒரு குணம் - பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து, தேவியை வேலைக்கு போக அனுமதித்தது,  அவங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றது. மௌனமாய் ஒரு மனிதர் சாதனைவாதியாக தோன்றுகிறார்.,
மூன்றாவது ஒரு கதாபாத்திரம், அவரின் மருமகன். அவனை மிகவும் நம்புகிறார் முதலில், தன் பெண்ணை கட்டுவதற்கு தான் இவ்வளவும் செய்கிறான் என்பது தெரியாமல், தன்னை தாயாய் பாவிக்கிறானே என்னும் எண்ணத்தில் அவனை உதவிகள் செய்ய அனுமதிக்கிறார். மேலும் அவன் தன் மகளை திருமணம் செய்ய கேட்கும் போது தன் பெண்ணை சரி சொல்ல கேட்கிறார். மகள் மறுக்கவே, விட்டுவிடுகிறார். அதன் பிறகு திருமணமும் ஆகி, அவரையே அவன் கேவலப்படுத்தி பேசும்போது மகள் உடைந்து அவனை தன் வாழ்க்கையை விட்டு விலக்குகிறார்.
மூன்றாவதாய் காண்பித்த இந்த ஆணின் கதாபாத்திரம் ஏற்கனவே காட்டிய இருவரை விட வித்தியாசப்பட்டு, ஒரு காலத்தில் அவரை சுற்றியிருந்த fringes உறவுகளில் இருந்த ஆண்களின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது. அப்போ வாழ்ந்த ஆண்களின் மனநிலையை தன் மரும்கனிடமும் காண்கிறார்.
சிறப்புகள்  :
எதையும் பெரிதாய் மனதிற்குள் கொண்டு செல்லாமல், தன் மகள், பேத்தி ஆகியோரை உயர்த்த முன்நோக்கியே பார்த்து வாழ்கையை கொண்டு செல்கிறார்.
அடுத்து என்னவென்று பார்க்க வைக்கிறார். இந்த கதையின் கருவே அதுதான் அடுத்ததை நோக்கி வாழ்க்கையை செலுத்துதல். பழைய நினைவுகளிலேயே தங்கிவிடாமல், அடுத்ததை நோக்கி பயணிப்பது.
அப்போதுதான் நாமும் நிமிர்ந்து நம்மை சுற்றி, நம்ம நம்பி இருப்பவர்களையும் தூக்க முடியும். நூலின் முடிவில் கூட திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறாள் கங்கை என்ற வார்த்தைகள் புது உலகத்தை காட்டும். அந்த வார்த்தைகளுக்கு இருக்கும் அழுத்தம் இந்த கதையில் நான் உணர்ந்தேன்.
யாதுமாகி, என்னும் சொல்லில் அந்த பெண்மணி இந்த கதை முழுவதும் யாதுமாகி நிற்கிறாள்.
இன்னும் ஒரு அருமையான விஷயம் புகைப்படங்கள். மிகவும் செம்மையான கோணத்தில் கதையைக் கொண்டு செல்ல உதவுகின்றன.
ஆசிரியரின் பலமே அவரின் மென்மையான எழுத்துகள்தான். எங்கும் அவர் சமூகத்தைக் குறை சொல்லவோ குற்றம் சாட்டவோ இல்லை. காலபோக்கில் நடக்கும் மேம்பாடுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் இந்த சுய சரிதையில். பெண்ணின் மனதிடம் உறுதியாக இருக்கவேண்டும் என்பதையும், எங்கும் பின்தங்காமல், தேங்கி நின்றுவிடாமல் கடமையைச் செய்து முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் சுசீலம்மா.
இந்த சுயசரிதை அவரின் தாயைப் பற்றியது. இதை சுயசரிதையாக மட்டும் அளிக்காமல் புனைவுகள் அதிகம் செய்து, சமூகத்திற்கு தேவையான ஒரு உந்துசக்தியாய் படைத்துள்ளார்.
படிப்பதற்கும் பொக்கிஷபடுத்துவதற்கும் சிறந்த நூல்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....