- 26.02.2023 அன்று மிசௌரி தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்த இணைய உரையின் காணொளி ,சிலப்பதிகாரத்தில் பெண்மை
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
17.3.23
மிசௌரி தமிழ்ச்சங்கம்- இணைய உரை ,சிலப்பதிகாரத்தில் பெண்மை
23.6.21
இணைய வழி உரை,சிறுகதைகளில் முறைசார் அலுவல் மகளிர் சிக்கல்கள்- சாகித்திய அகாடமி
இணைய வழி உரை,
சிறுகதைகளில் முறைசார் அலுவல் மகளிர் சிக்கல்கள்- சாகித்திய அகாடமி
22/6/21
4.7.20
‘நான் படிக்கணும்’-’கதை நேரம்’ 18 (தினமணி கதிர்- ’கண் திறந்திட வேண்டும்’)
16/04/ 2000 இல் நான் எழுதி தினமணி கதிரில் வெளியான சிறுகதை ’கண் திறந்திட வேண்டும்’.அந்தக்காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான தொடரான ’கதை நேரம்’பகுதியில் இந்தச் சிறுகதையும் 14/6/200 இல் ‘நான் படிக்கணும்’என்ற தலைப்புடன் குறும்படமாக்கப்பட்டு ஒளிபரப்பானது. அதன் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக யூ ட்யூபில்இதைத் தேடிக்கொண்டிருந்தேன். தற்செயலாக இன்று கண்ணில் பட்டது.அந்தக் காணொளியோடு பிரசுரமான என் கதையையும் படித்து ஒப்பிட விரும்புவோருக்காகக் கதையின் இணைப்பும் இத்துடன். http://www.masusila.com/2010/11/blog-post_5383.html#more [காணொளியின் தொடக்கத்தில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் என் ஒப்புதலைக்கேட்காமலேதான் பாலு மகேந்திரா அவர்கள் இந்தக்கதையைப் படமாக்கினார்; இது ஒளிபரப்பாகப்போகும் நாளில்தான் எனக்கு செய்தி அனுப்பினார்; இது குறித்த என் வருத்ததை முன்பே இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
https://m.facebook.com/susila27/posts/1843122282408367
பாலு மகேந்திராவின் பல படங்களுக்கு நான் ரசிகை என்றாலும்,இந்தக்குறும்படம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அது ஒன்று மட்டும் இன்னும் என்னுள் ஒரு நெருடலாகவே...]
https://www.youtube.com/watch?v=41e_ddZGVXc&feature=emb_logo
23.6.20
22.6.20
14.6.20
12.4.18
விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா,இந்திரா பார்த்தசாரதி உரை
சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில் எம்.ஏ.சுசீலா அவர்களை பாராட்டும் முகமாக ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்முகம்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை
எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை
எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்
விஷ்ணுபுர வட்டம்-ரஷ்ய கலாச்சார மைய விழா- ஏற்புரை
ஏற்புரை
அனைவருக்கும் வணக்கம். விழாத்தலைமை ஏற்றிருக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்தஎழுத்தாளர் திரு இ பா அவர்களுக்கும் என் அன்பிற்குரிய நண்பரும்,எழுத்தாளருமான திரு ஜெயமோகன் அவர்களுக்கும் அரங்கில் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை முன் வைத்து ஆய்வுரை நிகழ்த்திய எழுத்தாளத் தோழர்கள் யுவன் சந்திரசேகர்,ராஜகோபாலன் சுரேஷ் பிரதீப் ஆகியோருக்கும் இந்த விழாவை நடத்துவதில் ஒருங்கிணைந்ததோடு இதில் பங்கேற்றுச் சிறப்புச்செய்த தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர் திரு திரு.மிகயீல் கார்ப்பட்டோவ் அவர்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த இனிய நட்புக்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் அவையில் குழுமியிருக்கும் அனைவருக்கும் முதற்கண் என் பணிவான வணக்கங்கள்.
நான் செய்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்களை கவனப்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு விமரிசனக் கூட்டம் நடத்தப்போவதாக பிப்ரவரி மாதம் ஜெயமோகன் எனக்கு ஒரு மின்அஞ்சல் அனுப்பி ,கைபேசியிலும் சொன்ன அந்தத் தருணத்திலும் கூட ருஷ்யக்கலாசார மையத்தோடு இணைந்து இத்தனை பெரிய விழாவாக இது உருப்பெறக்கூடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. நண்பர் சிரில் அலெக்ஸ் அவர்கள் இது குறித்துப்பகிர்ந்தபோதும், தொடர்ந்து ஜெயின் தளத்தில் விரிவான பதிவும் அழைப்பிதழும் வெளியானபோதும் மகிழ்ச்சியோடு கூடவே சிறு தயக்கமும்- கூச்சமும் கூட எனக்கு ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு முதன் முதலாக ஆ மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது அளித்த காலகட்டத்திலிருந்து அந்த இலக்கியக்குடும்பத்தில் ஒருத்தி நான். திரு ஜெயமோகன் உட்பட விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரும் -என்னை நேரில் பார்த்தவர் பாராதவர் என எல்லோருமே- -தங்கள் குடும்பத்தின் ஒரு மூத்த சகோதரியாக, அன்னையாகவே என்னை ஏற்று வேற்றுமை பாராட்டாத உண்மையான அன்பையும் மதிப்பையும் செலுத்தி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு இளையோர் எடுக்கும் விழாவாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டபடி இதற்கு இசைந்தேன்.
மேலும் என் மொழியின் வழியாகவும் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கும் இலக்கியப்பேராசான் தஸ்தயெவ்ஸ்கி அவர்களுக்குத் தமிழ் இலக்கிய உலகம் ஒன்று கூடித் தமிழகத் தலைநகரில் எடுக்கும் விழா என்றே இதை நான் கொள்கிறேன். அந்த மாமேதைக்கு என் நன்றியைக்காணிக்கையாக்குகிறேன்.
படைப்பாக்க முயற்சிகளில் மொழியாக்கத்துக்கும் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு என்பதை அறிந்திருந்தாலும் மிகப்பெரும் மொழியாக்க முயற்சி ஒன்றில் நான் நேரடியாக ஈடுபட நேர்ந்தது மிக மிகத் தற்செயலான ஒரு நிகழ்வு.
தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் முதன்முதலாக அறிந்த பிள்ளைப்பிராயம் தொடங்கி எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்ற தீராத ஆர்வம் என்னில் பற்றிக்கொண்டிருந்தது. கிடைத்த நூல்களையெல்லாம் வாசிப்பது மட்டுமல்லாமல் ஏதோ ஒன்றை எழுதிப்பார்க்கும் முயற்சியை நான் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து மேற்கொண்டிருந்தேன். என் நேசத்துக்குரிய பேராசிரியப்பணி பிற பொறுப்புக்களுக்கிடையிலும் கூட வாசிப்பையும் எழுத்தையும் இடையறாது தொடர்ந்து வந்த எனக்குப் படைப்பாளியாகக்கிடைத்த முதல் அங்கீகாரம் 79இல் அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் என் முதல் சிறுகதைக்குக்கிடைத்த முதல் பரிசு. தொடர்ந்து பணி நெருக்குதல்கள்,ஆய்வு இவற்றுக்குஇடையே சில இடைவெளிகளோடு பல கதைகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தாலும் முழுநேர எழுத்து எனக்கு சாத்தியமாகாத நெடும் கனவாக மட்டுமே இருந்து வந்தது. இருந்தாலும் ஆண்டுக்கு 1,2 கதைகளையாவது எழுதிப்பார்த்தபடி அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளால் எழுத்தென்னும் சிற்றகல் என்னுள் முற்றிலுமாய் அவிந்து விடாது காத்தபடி முழுமையான எழுத்துப்பணியில் என்னை மூழ்கடித்துக்கொள்வதற்கான காலம் கனிந்து வரக்காத்திருந்தேன்.
பணிநிறைவு பெற்று குடும்பத்தோடு தில்லி கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருந்த அந்த வேளையிலேதான் மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் துரைப்பாண்டி அவர்கள் வழியாக தஸ்தயெவ்ஸகியின் குற்றமும் தண்டனையும் நாவலைப் பெயர்க்கும் பணி என்னை வந்தடைந்தது. அவர் வழியாக தஸ்தயெவ்ஸகி என்னிடம் வந்து சேர்ந்த ஒரு முகூர்த்த நேரமாகவே அதை என்னால் கொள்ள முடிகிறது. சொந்த மொழி, பழகிய சூழல், நட்புக்கள் என எல்லாவற்றிலிருந்தும் அந்நியப்பட்டிருந்த தில்லி மண்ணில் -படைப்பாக்க மனநிலை எனக்குள் கைகூடாத ஒரு ஒரு காலகட்டத்தில் குற்றமும் தண்டனையும் நாவலைப் படிக்கத் தொடங்கினேன். ஒரு சில பக்கங்களைத் தாண்டுவதற்கு முன்பே தஸ்தயெவ்ஸ்கி எனக்கு மிகவும் நெருக்கமானவர் போலத் தோன்றத் தொடங்கினார். ரஸ்கோல்நிகோவுக்கு அவரது அன்னை கடிதம் எழுதும் கட்டத்தை நெருங்கியபோது எந்த முயற்சியும் செய்யாமலே எவரோ dictation போடுவது போல அதன் தமிழ் வரிகள் என்னுள் ஓடத் தொடங்கியிருந்தன.
தானும் கூட கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ் தஸ்தயெவ்ஸ்கி படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டது போல .மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் எல்லாம் பயணம் செய்து,அதன் இண்டு இடுக்குகளையும் கூடத்துழாவி,அங்கே மண்டிக்கிடக்கும் சபலங்களை,சலனங்களை,அழுக்குகளை,ஆசாபாசங்களை,அன்பை,அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் அவரது எழுத்தை வாசிக்க வாசிக்க அவர் எனக்கு மிகவும் நெருக்கமாகிப்போனார்.அந்த மாமேதையின் வார்த்தைகளுக்குள் – உருகி,உட்கலந்து,கசிந்து.கண்ணீர் மல்கி நான் என்னையே தொலைத்து விட , கூடு விட்டுக்கூடு பாய்வது போல தஸ்தயெவ்ஸ்கியே என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போகிறாரோ என்ற மனமயக்கம் கூட ஒரு கட்டத்தில் என்னுள் ஏற்பட்டிருக்கிறது. .தஸ்தயெவ்ஸ்கி சொல்ல விரும்பிய கதையை,உணர்வுகளைத்தமிழில் முன் வைக்க நானும்,என் எழுத்தும் கருவிகள் மட்டுமே என்ற உண்மையை அப்போது நான் விளங்கிக்கொண்டேன். எட்டு மாதங்களில் அதன் முதல் வரைவை முடிக்கும் அளவுக்கு என்னை ஆட்கொண்டு இயக்கியது அவரது எழுத்து மட்டுமே. 2007இன் இறுதியில் வெளிவந்து இலக்கிய வட்டத்தில் வரவேற்புப் பெற்ற குற்றமும் தண்டனையைத் தொடர்ந்து அசடனைப் பெயர்க்கத் தொடங்கினேன்.
அசடன், குற்றமும் தண்டனையும் போல ஒருமுகத் தன்மை கொண்டதல்ல; பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவையே இடியட்/அசடன். பல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் அதிலுள்ள பிரெஞ்சுத் தொடர்களுக்காகவும் சொல்லாட்சிகளுக்காகவும் ஜே என் யூ பிரெஞ்சுத் துறைக்கு ஒரு மாணவ நிலையில் நான் பல நாள் அலைந்து திரிய நேர்ந்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது எனக்கு ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது.
குற்றமும் தண்டனையும், அசடன் ஆகிய இரு படைப்புக்களையும் என் வழி தமிழில் முதலில் பதிப்பித்து தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கத்தின்பால் என்னை ஆற்றுப்படுத்திய பாரதி புக் ஹவுஸ் துரைப்பாண்டி அவர்களை இந்த நல்ல தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன். சில நெருக்கடிகளால் அவரால் தொடர்ந்து அந்தப்பணியை முன்னெடுக்க இயலாமல் போனநிலையில்- பலருக்கும் பிரதிகள் கிடைக்காமல் போன கட்டத்தில் – இவற்றை செம்பதிப்புக்களாகக்கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி அந்த 2 பெரும் படைப்புக்களைப்பதிப்பிக்க முன் வந்த தோடு[அசடன் செம்பதிப்புஅச்சில்] அவற்றுக்குப்பின் நான் செய்த தஸ்தயெவ்ஸ்கி குறுங்கதைகள், நிலவறைக்குறிப்புக்கள், இப்போது அச்சில் இருக்கும் இரட்டையர் ஆகியவற்றை மிகச்சிறப்பான தரத்தோடு பதிப்பித்து வரும் நற்றிணை பதிப்பகத்தாருக்கு – குறிப்பாக தோழர் யுகனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
மிகப்பிரம்மாண்டமான படைப்புக்களை மொழிபெயர்த்ததை விடக் கடுமையான சவால்களை என் முன் வைத்த சிறிய ஆக்கம் நிலவறைக்குறிப்புக்கள் [Notes From The Underground]. தஸ்தயெவ்ஸ்கியின் பெரிய நாவல்கள் பலவற்றைப்போல எண்ணிக்கையற்ற கதைமாந்தர்களையோ,விறுவிறுப்பான கதைப் பின்னலையோ,மூலக்கதையோடு பிணைந்து வரும் சிறு சிறு கிளைக்கதைகளையோ கொண்டிருக்காமல்எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பலவீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியபடியும் ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. புனைவுகளின் சாத்தியங்களையெல்லாம் தன் படைப்புக்களில் எட்ட முடிந்த ஓர் இலக்கிய மேதை இருப்பியல் வாதம் என்னும் இலக்கிய அணுகுமுறைக்கு அளித்திருக்கும் புனைவு வடிவமே நிலவறைக்குறிப்புக்கள். உள்ளச் சுழல்களின் கொந்தளிப்பும்,இருட்டும் நிரம்பிய பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயலும் படைப்பாளியின் தடத்தைப் பிறழ்வின்றிப் பின் தொடர்ந்த வண்ணம் – வெளிப்படையாகச் சொல்லப்படாத பூடகமான அகச்சுழிப்புக்களோடு கூடிய இந்தப்பிரதிக்குள் பயணம் செய்து அதை என் மொழியில் வைக்க நான் எடுத்துக்கொண்ட கால அவகாசம் அளவில் கூடுதலான முன்னவற்றை விட மிகவும் அதிகமானது என்பதே இதன் செறிவையும் அடர்த்தியையும் இருண்மையையும் சொல்லி விடக்கூடும்…
பெரும் படைப்பாளிகளும் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைந்திருக்கும் இந்த அவையில் தஸ்தயெவ்ஸ்கி.யின் 5 மொழிபெயர்ப்புக்களை செய்து முடித்திருப்பவள் என்னும் ஒரே ஒரு தகுதியுடன் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட ஆர்வமுடன் இருக்கும் இளைய தலைமுறைக்கு என் அனுபவ அடிப்படையில் சுருக்கமாகச்சில செய்திகளை முன் வைத்து என் ஏற்புரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நான் மொழிபெயர்ப்புக்கோட்பாடுகளையோ நெறிமுறைகளையோ முறையாகக் கற்றுக்கொண்டு இந்தத் துறையில் கால் பதித்தவள் இல்லை. அது தேவையும் இல்லை என்பதையே என் அனுபவமும் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் எதிர்வினைகளும் திரும்பத் திரும்ப எனக்கு உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன.
தொடந்த இலக்கிய வாசிப்பும் தொடர்ந்து ஏதேனும் ஒன்றை எழுதிப்பார்த்தபடி ஏதோ ஒரு வகையில் நம் மொழியைக் கூர் தீட்டிக்கொண்டபடி அது துருப்பிடித்துப்போகாத வகையில் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளும் மட்டுமே நம் மொழி ஆளுமையை உயிர்ப்போடு வைப்பவை படைப்பாக்கங்களுக்கு மட்டுமல்ல, மொழிபெயர்ப்புக்கும் துணை வருபவை அவை மட்டுமே என்பதே அனுபவ வாயிலாக நான் பெற்ற தெளிவு. செவ்விலக்கிய வாசிப்புக்களோடு சமகாலப் புனைவுகளையும் தொடர்ந்து கொண்டிருப்பதே இன்றைய மொழியின் நீரோட்டத்துக்குள் நம்மை இட்டுச்செல்லக்கூடியது; வழக்கிறந்ததாக ஆகி விடாமல் இன்றைய போக்கை ஒட்டியதாக நம் மொழிக்குப் புதுமையும் செழுமையும் சேர்க்கக்கூடியது . இன்றைய காலகட்டத்து இளைஞர்களும் கூட என் மொழியாக்கத்தோடு ஒன்ற முடிகிறதென்றால் என் மொழி நடையோடும் சொற்தேர்வோடும் இணைய முடிந்து அதன் சரளத்துக்காக அதை ஏற்க முடிகிறதென்றால் அதற்கான அடிப்படைக்காரணம் அதுவே.
அது போலவே மொழியாக்கத்தின் கதை ஓட்டத்தை நான் உயிர்ப்போடு தந்திருக்கிறேன் என்று நீங்கள் குறிப்பிடுவதற்கான பின்புலத்தை எனக்கு அமைத்துத் தந்தவை நான் எழுதிப்பார்த்திருக்கும் சிறுகதைகளும் ’யாதுமாகி’ என்ற என் நாவல் முயற்சியுமே. மொழியாக்கம் என்று தோன்றாத வண்ணம் அதை நான் தந்திருந்தால் அதற்கான காரணம், இடை இடையே இவ்வாறு தனிப்பட்ட படைப்பாக்கங்களிலும் நான் ஈடுபட்டு வருவது மட்டுமே..ஒரு மொழியாக்கம் முடிந்ததும் ஒரு சிறு படைப்பாக்கம் என்று என்னை நான் தகவமைத்துக்கொள்கிறேன். படைப்பாக்கத்தால் மொழியாக்கமோ மொழியாக்கத்தால் படைப்புத் திறனோ எந்த வகையிலும் பாதிப்புறுவதில்லை என்பதே நான் கண்டடைந்த முடிபு.
இவற்றுக்கெல்லாம் மேலான முதன்மையான ஒன்று உண்டு. அதுவே மொழியாக்கும் படைப்பின் மீது நாம் கொள்ளும் எல்லை கடந்த நேசம் பற்று. அதுவும் நாமும் வேறில்லை என்று ஒன்றிக்கலக்கும் அபேத நிலை மட்டும் நமக்குக் கை கூடி விட்டால்- மொழி ஆளுமை நம் வசப்பட்டு விட்டால்- மொழிபெயர்ப்புக்காகப் பிறகு எந்தத் தனிப்பயிற்சி வகுப்பும் இலக்கண நெறிகளும் வழிகாட்டுதல்களும் தேவையில்லை என்று துணிந்து இறங்கி விடலாம். நாம் மிகவும் நேசிக்கும் – நம்மைக்கட்டிப்போட்டு பிரமிக்க வைக்கும் விடும் ஒரு பிரதி சார்ந்த மொழிபெயர்ப்பில் முனையும்போது மட்டுமே குறிப்பிட்ட அந்த எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், மூலப்படைப்பாளி பெற்ற அகக்காட்சிகளை -அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை- அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் சாத்தியமாகும்.
என்னைப்பொறுத்த வரை என் அகமனத்தைத் துலக்கவும் அதில் புத்தொளி பாய்ச்சவும் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியாக்கப்பணியில் நான் கழித்த பொழுதுகள் துணை வந்திருக்கின்றன. அவரது ஒவ்வொரு படைப்பைப் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே.
ஒரு சிறிய சம்பவத்தைச் சொல்வதோடு இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்.2011- அசடன் வெளி வந்த நேரம்; அப்போது தில்லியில் வசித்துக்கொண்டிருந்த எனக்கு மதுரை அனுப்பானடிப்பகுதியிலுள்ள அறிமுகமில்லாத தையல் கலைஞர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. 600 ரூபாய் என்பது அவரைப்பொறுத்த வரை ஒரு மிகப்பெரும் தொகை; அத்தனை விலை தந்து அசடனை வாங்கிப்படித்து என் கைபேசி எண்ணையும் முயன்று கண்டு பிடித்து ‘’ஆங்கிலம் அறியாத என்னிடம் அசடனைக் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்’’என்று அவர் நெகிழ்ந்து சொன்ன அந்தக்கணம் என் நெஞ்சில் உறைந்து கிடக்கிறது. வேறெந்த விருதுகளையும் விட மேலான ஆத்மார்த்தமான அந்தச் சொல் போலவே இன்றைய விழாவும் என் நெஞ்சை நிறைத்தபடி நான் வாழ்ந்திருப்பது அர்த்தமுள்ள ஒரு வாழ்வைத்தான் என்று என்னை உணர வைக்கிறது.
அந்த நிறைவையும் மகிழ்வையும் எனக்களித்த இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் பெரு முயற்சி எடுத்து இந்த விழாவை நிகழ்த்திக்காட்டியிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
7.11.17
முகமும் வாயும்...
அண்மையில் முகம் தெரியாத ஒரு நபரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது [எண் மட்டுமே இருந்தது....குறிக்கத் தவறியது நானாகவும்இருக்கலாம்]
உண்மையில் அப்படி ஒரு செய்தி வரும் வரை அதைப்பற்றி நான் நினைத்துப்பார்த்தது கூட இல்லை...
வகுப்பறையில் உவமை என்ற ஒன்றைப்பற்றிப்பேசத் தொடங்கினாலே ’முகம் போன்ற மதி’ என்று தொடங்கி விடுகிறோம்;
உருவகம் என்றால் அதையே மாற்றிப்போட்டு ’முக மதி’ என்று கற்பிக்கிறோம்..
அதெப்படி முகத்துக்கு வேறு சொல் இல்லாமல் போகும் என்ற எண்ணத்தோடுதான் முதலில் யோசிக்க ஆரம்பித்தேன்.
சொல்லுதல் என்ற ஒன்றைக் கம்பன்தான் எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறான்..? நவிலுதல்,புகலுதல்,கூறுதல்,கழறுதல்,உரைத்தல்,சொல்லுதல் என்று நாம் பேசும் முறைக்குத்தான் தமிழில் எத்தனை விதமான மாற்றுச் சொற்கள் ? முகத்துக்குக் கிடைக்காதா என்று தேடிப்பார்த்ததில் ஏமாற்றமே எஞ்சியது..முகத்தைக்குறிக்கும் வதனம் என்ற சொல் சமஸ்கிருதம் என்பது ஏற்கனவே தெரியும்; குறுஞ்செய்தியும் அதைக்குறிப்பிடத் தவறியிருக்கவில்லை. ’68 இல் தமிழ் இலக்கியத்துக்குள் அடியெடுத்து வைத்தது முதல்இன்று வரை கிட்டத்தட்ட 50 ஆண்டுக்காலம் என் நினைவுச்சேகரிப்பாக இருந்த சொல் அகராதிக்குள் குடைந்து குடைந்து ஒருமணி நேரம் போராடியதில் தோல்வியே எஞ்சியது...
[பேச்சுத் தமிழில் மூஞ்சி, மொகரை என்று சில சொற்கள் சஞ்சரித்தாலும் அவற்றின் வேர்ச்சொல் முகம்தானே]
.
இறுதியாக இலக்கியப் பயிற்சியோடும் தேடலோடும் இருக்கும் ஆங்கிலப்பேராசிரியையான என் தோழி ஒருவரிடம் இதைப்பகிர்ந்து கொள்ள, ஆங்கிலத்தோடு கூடவே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் ,அவற்றின் இலக்கியங்களிலும் தேர்ச்சி கொண்டவரும், இருமொழி எழுத்தாளரும்,மொழிபெயர்ப்பாளருமான அவர் சிரித்தபடி ’’முகம் என்பதே சமஸ்கிருதச்சொல்தானே’’ என்றார்...அதற்குப்பின்புதான் அதுவும் எனக்கு உறைத்தது...
தமிழில் முகத்துக்கு சொல் இல்லாதது போல சமஸ்கிருதத்தில் வாய் என்பதைக்குறிப்பதற்குச் சொல் இல்லை. சமஸ்கிருதத்தில் அதரம்- [’அதரம் மதுரம் ’இதழ்] உண்டு.மூக்கு,நாக்கு எல்லாம் உண்டு..ஆனால் வாய் மட்டும் இல்லை..’’தமிழுக்கு முகம் இல்லை,சமஸ்கிருதத்துக்கு வாய் இல்லை’’ என்பது வேடிக்கையான ஒரு சொலவடை - பழமொழி என்று அவர் சொல்லிக்கொண்டே போக ’’அறிதொறும் அறியாமை கண்டற்றால் ’’என்பதுதான் எவ்வளவு மெய்யானது என்ற சிந்தனை என்னை சூழ்ந்து கொண்டது..
’தமிழுக்கு முகம் இல்லை...’ என்று சொல்லளவில் சொல்வதாலேயே தமிழை நேசிப்பதில்லை என்றாகி விடாது..
’’தமிழ் எனக்கும் மூச்சு அதைப்பிறர் மேல் விட மாட்டேன்’’ என்கிறது
ஞானக்கூத்தன் கவிதை
சில மொழிகளில் சிலவற்றுக்கு சொற்கள் இருப்பதில்லை..மொழி என்பது கருத்துப்பரிமாற்றத்துக்குக்கைக்கொள்ளும் கருவி.என்பதால் கொள்ளல் கொடுத்தல் மூலமாக இல்லாத சொற்களை இருக்கும் மொழியிலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.,காலந்தோறும் வெவ்வேறு மொழியிலுள்ள இலக்கியங்கள் செழுமைப்பட்டு வளர்ந்து வந்திருப்பதும் கூட இத்தகைய பரிமாற்றங்களினால் மட்டுமே என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் மொழியியல், இலக்கிய அறிஞர்களும், ஆய்வாளர்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டத்தவறுதில்லை..அதிலும்குறிப்பாகத் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. இரண்டும் நீண்ட இலக்கியப் பாரம்பரியமுடைய இந்திய மொழிகள்.இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருப்பவை. தமிழில் வடமொழிக்கலப்பைப்போல, சமஸ்கிருத மொழியிலும் தமிழ்ச் சொற்கள் பல கலந்து பிணைந்திருக்கின்றன. அது குறித்து டாக்டர் குண்டர்ட், கிட்டல், டாக்டர் கால்டுவெல் போன்ற பலரும் ஆய்வு செய்திருக்கின்றனர்.
எங்கெங்கோ உருவான மனித இனங்கள் பல வேறுபாடுகளுக்கிடையே பின்னிப்பிணைந்திருப்பதைப்போலத்தான் மொழிகளுக்கிடையிலான பிணைப்பும்...வேற்றுமையும் என்று நினைத்தால் எல்லா மொழிகளையும் நேசிக்கத்தான் முடியுமே தவிர காழ்ப்புணர்வு கொள்ள முடியாது..
அண்மையில் இது தொடர்பாக படித்த, பார்த்த இரு செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்..
ஒன்று..
தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் கலாரசிகன் என்ற பெயரில் எழுதி வரும் தொடரில் இந்த வாரம் எழுதியிருக்கும் கீழ்க்காணும் குறிப்பு .
மற்றொன்று...
சென்னையில் நீண்ட காலமாக இயங்கி வரும் குப்புசாமி சாஸ்திரி சமஸ்கிருத ஆய்வு மையம் [THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE (KSRI) பற்றிய காணொளி. இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் முதலாவதாகக்கருதப்படும் இந்த சமஸ்கிருத ஆய்வு மையம் பற்றிய விரிவான அறிமுகத்தில் பழந்தமிழ் இலக்கண நூல்கள் தொடங்கி ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்துப்பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ வே சா வரை -ஒப்பீட்டு முறையில் - இரு மொழிகள் பற்றிய உண்மையான பெருமிதத்துடனும், இரண்டிலும் தோய்ந்து தெளிந்த பயிற்சி தந்த திடத்துடனும் ஆற்றொழுக்குப் போன்ற அநாயாச நடையில் சொல்லிக்கொண்டே போகிறார் இயக்குநர் முனைவர் காமேஸ்வரி அவர்கள். இங்கே சேகரம் செய்யப்பட்டிருக்கும் 60000 நூல்களிலும்,ஓலைச்சுவடிகளிலும் தமிழ் நூல்களுக்கும் அவற்றின் மொழியாக்கங்களுக்கும் இடம் இருக்கிறது.
பிரதேச எல்லைகளால் மனதைக்குறுக்கிக்கொண்டு விடாமல் பல மொழிகளிலிருந்தும் வந்து சேரும் அறிவுச் சேமிப்பை மட்டுமே கொண்டாட வேண்டும் என்பதற்குப் பாடம் சொல்கிறது இந்தக்காணொளி
Head of India's Top Sanskrit Research Center in Conversation with Rajiv Malhotra
29.6.16
’’காதல் சிறகை ....!''
வளர் இளமைப்பருவம் தொட்டு என் நேசத்துக்குரியது அபிநயசரஸ்வதி..கன்னடத்துப்பைங்கிளி பி சரோஜா தேவியின் நடிப்பு; இன்று படிப்பும் எழுத்தும் சிந்தனையும் [வயதும் கூடத்தான்.!..] கூடிப்போனநிலையிலும் அதில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை
இளமையில் நம்மை ஈர்த்துக்கட்டிப்போட்டு விடும் ஒரு சில ரசனைகள் [அறிவின் பாற்பட்டதாக அல்லாமல் கலைகளின் வயப்பட்டதாக இருந்தால்] அந்த ரசனைக்கு எந்த வயதிலும் தடை இல்லைதானே!.
என் நினைவு மலரத் தொடங்கியபோது என் நெஞ்சில் பதிந்த முதல் படம் .கல்யாணப்பரிசு என்பதாலோ என்னவோ, அதில்... மாடியிலிருக்கும் ஜெமினிக்கு ஒரு சங்கேதமாய் ’’அம்மா போயிட்டு வரேன்’’என்று கல்லூரிக்குக்கிளம்பும்போது குரல் கொடுத்தபடி குறும்புக்காரச் சுட்டிப்பெண்ணாய்,,வலம் வந்த சரோஜா தேவி இன்றுவரை நான் பார்க்கும் தொலைக்காட்சிப்பாடல்களில் எப்போதும் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்.
எம் ஜி ஆர் படங்கள் பலவற்றில் வணிகக் காரணங்களுக்காக அவரது நடிப்புத் திறன் வீணடிக்கப்பட்டு விட்ட போதும் அவற்றிலும் கூட வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் அவரது நடிப்புத் திறமை கீற்றுக்களாகவேனும் தெறிக்காமல் போனதில்ல, உ- ம்,அரச கட்டளை, நாடோடி., தொட்டால் பூ மலரும் பாடலில் மின்னும் போட்டிபோட்டுக்குறும்பு காட்டும் முக பாவனைகள்..,!!
//அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற சில படங்கள் எம்.ஜி.ஆருக்காக மட்டுமின்றி சரோஜா தேவிக்காகவும் பார்க்கப்பட்டவை..
பணத்தோட்டம் படத்தில் வரும்,’’ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை’’ என்ற பாடல் காட்சியில் அவர் மட்டுமே நடித்திருப்பார். எத்தனை பாவங்கள். அருமையாக இருக்கும்.//
என்று எழுத்தாளர் தமிழ்மகன் தனிப்பட்ட உரையாடலொன்றில் சரோஜா தேவியின் நடிப்பைப்பற்றி என்னுடன்பகிர்ந்து கொண்டதுண்டு...
அபிநயசரஸ்வதியின் அபார நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தவை பெரும்பாலும் சிவாஜியுடன் அவர் பங்கேற்ற கறுப்பு வெள்ளைப்படங்களே.
குறிப்பாக பாலும் பழமும், ஆலயமணி, இருவர் உள்ளம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
‘’கொஞ்சம் அசந்தா இந்த சரோஜா நம்மளத் தூக்கி சாப்பிட்டிறுவா’’ என்று சிவாஜியே ’பாலும் பழமும்’ வேளையில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.தன் கணவன் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாமல் மருத்துவத் தாதியாக வேலைசெய்து அங்கிருந்தும் வெளியேற்றப்பட்ட நிலையில்... தான் ஏற்றியாகவேண்டிய இஞ்செக்ஷன் ஊசியை வாயில் கவ்விப் பிடித்தபடி கொட்டும் மழையில் வீட்டின் பின்புறச்சுவரில் அவர் ஏறும் அந்தக்காட்சி கூட ஒருவேளை சிவாஜியை அப்படிசொல்ல வைத்திருக்கலாம்.
காமரா கோணங்களில் ,மிகவும் நெருக்கமாக முகங்கள் மட்டுமே காட்டப்படும்போது [in tight close up] நொடிக்கு நொடி மாறும் பாவனைகளுக்கு அவரிடம் பாடம் பயில வேண்டும்... ’காதல் சிறகை’ பாடலின் காணொளியில் அதை மிகத் தெளிவாகப்பார்க்கலாம். வினாடிக்கு வினாடி பாடல் தொடரத் தொடர மாறிக்கொண்டே போகும் கோணங்களில்.... தவிப்பு , ஏக்கம், எதிர்பார்ப்பு, காதல், விரக தாபம், பாசம் , ஆற்றாமை என அந்த முகத்தில் மாறி மாறி மின்னலடிக்கும்பாவ பேதங்கள்தான் எத்தனை எத்தனை?
பொதுவாக இருவர் மட்டுமே நடிக்கும் காட்சியில், உடன் நடிப்பவரின் நடிப்புக்கு ஏற்றபடி ஈடு கொடுத்து வெளிப்படுத்தியாக வேண்டிய எதிர்வினை நடிப்புக்கும் கூட,[reaction] அதே அளவு முக்கியத்துவமும் வல்லமையும் உண்டு. நடிப்பில் திறமைசாலிகளும் கூடத் தோற்றுப்போவது இதிலேதான்....! ஆனால் அந்தக்கலையும் கூட சரோஜா தேவிக்கு வசப்பட்டிருப்பதைக்காட்டும் காணொளி , ஆலயமணியில் இடம் பெற்றிருக்கும் ’பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடல்..
விபத்தில் கால் முடங்கிப்போன கதாநாயகனைச் சக்கர நாற்காலியில் தள்ளியபடி,தோட்டம் சுற்றி நடந்தாக வேண்டும்...அவருடைய வேலை அது மட்டும்தான்...பாடல் பாடுவதும் அதற்கேற்ப முகபாவம் காட்டுவதும் கதாநாயகனின் வேலை மட்டுமே என்று எடுத்துக்கொண்டு எளிதாக ஒதுங்கி விட முடியும்..! இப்போதெல்லாம் பலரும் செய்வது அதை மட்டும்தான்.
ஆனால் வண்டியை நகர்த்திச்செல்லும் அந்தப்பேதைப்பெண் தரும் அற்புதமான அந்த REACTIONS...!!
சொல்லுக்கெட்டாத பரவசம் கிளர்த்துபவை அவை....!
வறுமையில் தொலைந்து போன தன் முன்னாள் காதலுக்கான வருத்தத்தை உள்ளே அடக்கிக்கொண்டு... அதை வலிந்து துடைத்தெறியும் முயற்சி,
புத்தம் புதிதாய் இப்போது வர்ஷிக்கும் பாசப்பெருக்கை ஏற்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல், அதற்குமே கூட விபத்தின் காரணமாக நேர்ந்து விட்ட எதிர்பாராத சோகத்தை அளவற்ற கருணையுடன் எதிர்கொள்ளல் ,நாயகனை இரக்கமும் அன்புமாய்நோக்கியபடி அவனை அந்தத் துன்பவேளையில் மீட்டெடுத்தல் என்று அடுக்கடுக்காகத் தொடர்ந்து கொட்டும் அந்த எதிர்வினைகள் ..., .REACTIONS.உணர்த்தும் செய்திகள்தான் எத்தனை எத்தனை....? SIMPLY SUBLIME!!
வண்ணப்படங்கள் வந்தபின்பு அவரை ரசித்ததை விட என் மனம் அவரது பழைய கறுப்பு வெள்ளைப்படங்களில்மட்டுமே லயித்துக்கிடக்கிறது...
ஒரே ஒரு விதி விலக்காகப்..’புதிய பறவை’.
ஓர் இளம் கல்லூரி மாணவியாய்க் கவலைகள் ஏதுமற்ற கட்டற்ற சுதந்திரத்துடன் நான் சிறகடித்துக்கொண்டிருந்த ‘60களின் பின்பகுதியில் என் ’புதிய பறவை’ விவரிப்புக்களை..., குறிப்பாய் சரோஜா தேவியின் ஒவ்வொரு அசைவையும் நான் விஸ்தாரமாய் விவரிப்பதைக்கேட்பதற்கென்றே சக தோழியர் பலரும் எனக்கே ரசிகர் பட்டாளமாகித்தொடர்ந்து துரத்தி வந்த அந்தநாட்களின் இனிமைகளை நினவுத் தளத்தின் மேலடுக்கில் கொண்டு வந்து என்னுள் களிக்கிறேன்.
இயக்குநர் படங்களாகவே உருவான ‘குலவிளக்கு’- [கே எஸ் கோபால கிருஷ்ணன்] , ‘தாமரை நெஞ்சம்’ -[கே பாலச்சந்தர்].. இவையெல்லாம் சரோஜா தேவியின் நடிப்புத் திறனைப்புரிந்து,கொண்டதால் அவரின் குணசித்திர நடிப்பை வெளிக்கொணர்வதற்கென்றே பிரத்தியேகமாக உருவானவை...
ஆனாலும் கூட ‘60களில் என்னைக்கட்டிப்போட்ட, அந்தச்சுட்டிப்பெண் சரோஜா தேவியின் பிம்பம் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கும் ’’நான் பேசநினைப்பதெல்லாம்’’ பாடலோடும் ‘காதல் சிறகோ’டும் என்றென்றும் என்னை வசீகரித்தபடி இருக்கிறது.
.
‘
21.4.13
’பரதேசி’-விமரிசனக்காணொளி
இந்த ஆண்டு 2013இல் நான் இதுவரை பார்த்த தமிழ்த் திரைப்படங்களில் நெஞ்சைப்பிழிந்து உலுக்கிப்போட்ட படம் பாலாவின் பரதேசி.
‘ரெட் டீ’ என்னும் நாவலின் தூண்டுதலால் இப்படம் உருவானதாக பாலா சொன்னபோதும் படம் முழுவதும் வெளிப்படிருப்பது அவரது உழைப்பும், தனித்துவமான ஆளுமையுமே. சேது, நந்தா,பிதாமகன்,நான்கடவுள் ஆகிய தன் படங்கள் வழியே தமிழ்த் திரையை அதற்குப் பரிச்சயமில்லாத ஒரு தளத்துக்கு முன்னகர்த்திச் சென்ற பாலா ‘அவன் - இவ’னில் சற்றே சறுக்கி விட்டதில் வருத்தம் கொண்டிருந்த நான்
’’பாலா காட்டும் நல்லுணர்வுகள் அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்க வைக்கின்றன.வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’’என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது அந்த நல்ல நாளின் உதயத்தில்...
தன் ‘பரதேசி’யின் மூலம் தமிழ்த் திரைக்கு அவர் புதிய பரிமாணம் சேர்த்திருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.
தில்லியில் அது வெளியிடப்பட்ட முதல்நாளே அதைப்பார்த்து மனம் கசிந்து, அதில் வசனப் பங்களிப்பாற்றிய எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடனுடன் தொடர்பு கொண்டு என் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு பாராட்டும் தெரிவித்தேன்.விரிவான விமரிசனத்தை உடன் எழுத முடியாமல் வேறு ஏதேதோ வேலைகள். நான் அதை எழுத முனைவதற்குள் பல விமரிசனங்கள் இணையத்தில் குவிந்து விட்டதால் கூறியது கூறலைத் தவிர்க்க எண்ணி எழுதாமலிருந்து விட்டேன்.
தற்போது பாலாவின் ‘பரதேசி’ பற்றி மதுரை நிஜநாடக இயக்க நிறுவனரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாடகத் துறைப்பேராசிரியருமான மதிப்பிற்குரிய திரு மு.ராமசுவாமி அவர்களது உரையடங்கிய காணொளியை என் தளத்தில் பகிர விரும்பி அவரிடம் ஒப்புதல் கேட்டபோது மகிழ்வோடு அனுமதியளித்த திரு மு.ரா.,வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
காணொளிக்கான இணைப்பு;
குறிப்பு;
பேராசிரியர் முனைவர் திரு மு.ராமசுவாமி அவர்கள், தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் தன் நிஜ நாடக ஆக்கங்களின் வழி கணிசமான பங்காற்றியிருப்பவர்.
குறிப்பு;
பேராசிரியர் முனைவர் திரு மு.ராமசுவாமி அவர்கள், தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் தன் நிஜ நாடக ஆக்கங்களின் வழி கணிசமான பங்காற்றியிருப்பவர்.
dramaswamy.com யில் தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் ராமசுவாமி, கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பிதாமகன்,பருத்தி வீரன்,சண்டைக்கோழி,கன்னத்தில் முத்தமிட்டால் முதலிய சில திரைப்படங்களிலும் நண்பர் மு ராவை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.
அண்மையில் தன் திரை அனுபவங்களைத் தொகுத்து
‘திரை வளர்த்தநான்,நான் வளர்த்த திரை’ என்ற பெயரில் நூலாக்கியுள்ள திரு மு ரா , மிகச்சிறந்த திரை விமரிசகரும் கூட.
அவரது வழக்குஎண் 18/9 பற்றிய ஒரு விமரிசனக் காணொளியை இந்தத் தளத்தில் முன்பு பகிர்ந்திருக்கிறேன்.
இணைப்புகள்;
ஏழாம் உலகமும் நான்கடவுளும்
1.5.12
மதுரைக்கு அரசி
மங்கலம் அருளும் மதுரைக்கு அரசி அன்னை மீனாட்சியின் மணவிழா இன்று...
அதை ஒட்டிய சீர்காழியின் இனிய பாடலின் காணொளி
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)









