துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.12.23

’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ - நூலறிமுகம்

      ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் என்ற பகுதியில் ’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ நாவல் குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் அறிமுகக்கட்டுரை

[bookday.in December 25, 2023 இணைய தளம்]


*ஒரு மருத்துவரின் இலட்சியப்பயணம்*
சங்க இலக்கியத்தில் அலர் தூற்றுதல் தொடர்பாக பல பாடல்கள் உள்ளன. திருக்குறளில் அலர் அறிவுறுத்தல் என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே உள்ளது. அலர் என்னும் சொல்லுக்கு பழித்தல் என்றும் இட்டுக்கட்டிப் பேசுதல் என்றும் வெவ்வேறு பொருள்களுண்டு. அலர் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலிருக்கும் தனிப்பட்ட நெருக்கத்தைப் பெரிதுபடுத்தி பொதுவில் பேசிப்பேசி, அவ்வுறவை அம்பலப்படுத்தி,
சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால், எதார்த்தத்தில் ஒன்றுக்கு எதிராக அல்லது மதிப்பற்றதாக பேசப்படும் சொற்களே அதை மேன்மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துவிடுகிறது. ’ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும் இந்நோய்’ என்பது திருக்குறள்.

காதலர்கள் பழிச்சொல்லைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது இலக்கியக்கூற்றாக இருந்தாலும் நடைமுறையில் பழிச்சொல்லுக்கு அஞ்சி காதலைக் கைவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். பழிச்சொல்லின் வழியாக ஆற்றல் பெற்று வெற்றியை நோக்கி நடக்கும் காதலர்களின் எண்ணிக்கைக்கு நிகராக பழிச்சொல்லால் மனம்சுருங்கி காதலையே கைவிட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. அதுவே
நடைமுறை உண்மை.பழிச்சொல்லால் ஏற்படும் நன்மையும் தீமையும் காதலில்
மட்டுமன்றி பொதுவாழ்விலும் உண்டு.

தம்மைப்பற்றி புனைந்துரைக்கப்படும் பழிச்சொல்லைக் கேட்டு மனம்கசந்து ஒதுங்கிச் செல்கிறவர்களும் உண்டு. அதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் மானுடத்தின்பால் தீராத பற்று கொண்டு தன் இலட்சியப்பாதையில் தொடர்ந்து முன்னேறி வெற்றி கொள்கிறவர்களும் உண்டு.

அந்த உண்மையை மையப்பொருளாகக் கொண்டு ’அஞ்சு திங்களில்முஞ்சுதல் பிழைத்தும்’ என்னும் தலைப்பில் தன் புதிய நாவலை எழுதியிருக்கிறார் எம்.ஏ.சுசிலா. கடந்த சில ஆண்டுகளாக, தஸ்தாவெஸ்கியின் பிரதானமான படைப்புகளை தொடர்ச்சியாக தமிழில் மொழிபெயர்த்தளித்த எம்.ஏ.சுசிலா இந்த நாவல் வழியாக மீண்டும் தன் சொந்தப் படைப்புலகத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

நாவலின் மையப்பாத்திரம் காயத்ரி. மிகப்பெரிய மகப்பேறு மருத்துவர். மருத்துவச்சேவை புரிவதிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருடைய அகத்தையும் புறத்தையும் அடைந்ததையும் இழந்ததையும் ஒருசேரக் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுசிலா.

சில உடற்குறைகளின் காரணமாக நேரிடையான பிள்ளைப்பேறுக்கு வழியில்லாத இணையரின் மனக்குறையைத் தீர்க்கும் விதமாக மருத்துவ அறிவியல் உலகம் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் பரிசோதனைக்குழாய் வழியாக கருத்தரிக்கவைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. எழுபதுகளின் இறுதியிலேயே அது இந்தியாவிலும்

அறிமுகமானது. கணவன், மனைவி இருவருடைய உயிரணுக்களையும் தனித்தனியாகச் சேகரித்து ஒரு பரிசோதனைக்குழாயில் இணைத்து ஆழ் உறைநிலையில் குறிப்பிட்ட காலம் வைத்திருப்பதன் வழியாக உருவாகும் கருவை தாயின் கருப்பைக்குள் மீண்டும் செலுத்தி பாதுகாப்பதன் மூலம் மகப்பேறு அடைவதற்கு அம்முறை வழிவகுத்தது. அதன் விளைவாக ஏராளமானோர் பயனடைந்தனர்.

மகப்பேறு மருத்துவம் படித்து மருத்துவ உலகில் நற்பெயரடைந்து, மகப்பேறு சேவைக்காக மட்டுமேயென ஒரு மருத்துவமனையைத் திறந்து நடத்தி வரும் காயத்ரி என்னும் மருத்துவரின் இறந்தகால வாழ்க்கையையும் நிகழ்கால வாழ்க்கையையும் சுசிலாவின் புதிய நாவல் மாறிமாறி காட்சிப்படுத்தியிருக்கிறது. எங்கோ வட இந்தியாவில் தொடங்கிய பரிசோதனைக்குழாய் முறையை தமிழ்ச்சூழலில்
அறிமுகப்படுத்தி, தாய்மையடையத் தவிக்கும் பெண்களுக்கு உற்ற துணையாக இருக்கவேண்டுமென கனவு காண்கிறார் காயத்ரி. தன் மருத்துவமனையையே ஒரு சோதனைக்களமாக மாற்றி அதில் வெற்றி காண விழைகிறார்.

பல ஆண்டுகள் காத்திருந்து, வெவ்வேறு விதமான சோதனைகளால் மனத்துயரத்துக்கு ஆளாகி வேதனையுடன் காயத்ரியை நாடிவருகிறார்கள் ஓர் இணையர். பரிசோதனைக்குழாயில் உருவான கருவை அவருடைய கருப்பை ஏற்றுக்கொண்டுவிட்டது என்று தெரிந்த நாள்முதலாக அவரை மருத்துவமனையிலேயே பேறுகாலம் வரைக்கும் படுக்கையில் வைத்திருந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்க உதவி செய்கிறார்.

ஆறாத்துயரை ஆற்றி தம் குலக்கொடி தழைத்து வளர உதிவிய
மருத்துவரின் பெயரையே தன் குழந்தைக்கும் சூட்டி மகிழ்கின்றனர் அந்தப்
பெற்றோர்.

தம் சேவையால் பிறருடைய குடும்பத்தின் துயரத்தை ஆற்றும் காயத்ரி தன் சொந்தக் குடும்பச் செயல்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கவில்லை என்று குற்றம் சுமத்துகிறான் அவள் கணவன். அதையே காரணமாக முன்வைத்து, அவன் அவளிடமிருந்தும் குழந்தையிடமிருந்தும் பிரிந்துபோகிறான். தன் தாயின் உதவியோடு குழந்தையை தனித்து வளர்க்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறாள் அவள். அப்போதும் கலங்காமல் மருத்துவத்துகாகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டதுபோல செயலாற்றுகிறாள் அவள்.

3. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மகள் கவர்னர் கையால் விருது பெறும் முக்கியமான நிகழ்ச்சியில் தன் தாய் கலந்துகொள்ளவில்லை என்னும் வருத்தத்தால் மனம் கசந்துபோன மகளும் ஒருநாள் விலகிச் செல்கிறாள். அடுத்தடுத்து துயரங்கள் அவள் வாழ்வில் வந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவச் சேவையிலும் ஆராய்ச்சியிலும் உள்ள அவளுடைய ஈடுபாடு ஒன்றே அவளுக்கு துயரக்கடலைக் கடக்க உதவும் மரக்கலமாக அமைகிறது. அதுவும் அவளுக்கு நீண்ட காலம்
நீடிக்கவில்லை.

நல்லெண்ணத்துடன் அவள் ஆற்றிவரும் சேவையை பணமீட்டும் ஆசையால் செய்வதாக ஊரார் அலர் எழுப்புகின்றனர். அந்தச் செய்தி அவள் காதுவரை எப்படியோ வந்தடைகிறது. தன் மனப்போக்கை இவர்களுக்கெல்லாம் எப்படிப் புரியவைப்பது என தெரியாமல் ஒருசில கணங்கள் அவள் தடுமாறினாலும் உறுதி குன்றாது தன் பாதையில் தொடர்ந்து செல்கிறாள்.

ஆனால் ஒருநாள் அவள் பெற்ற மகளே அந்தப் பழிச்சொல்லைச் சொல்லித் தூற்றுவதை காதுகொடுத்துக் கேட்கும் கரிய தருணமொன்று வந்தமைகிறது. அந்தப் பழிச்சொல்லை அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

உலகம் நம்பாவிட்டாலும் குடும்பம் நம்பும் என இருந்த அவள் மனநிலை சுக்குநூறாக உடைந்துவிடுகிறது. தான் அவ்விதமானவள் அல்ல என்பதை இந்த உலகத்துக்கோ அல்லது அவளுக்கோ எப்படி சொல்லி, எப்படி புரியவைப்பது என தெரியாமல் தடுமாறுகிறாள். காயத்ரி தன்னைப்பற்றி எங்கெங்கும் ஒலிக்கும் பழிச்சொற்களை
கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன்னால் தாய்மையடைந்து மனநிறைவோடு வீடு திரும்பும் தாய்மார்களின் முகங்களை மட்டும் பார்த்து நிறைவோடு தன் இலட்சியப்பாதையில் தொடர்ந்து சென்றிருக்கலாம். அதற்கு மாறாக, காய்த்ரி மருத்துவத்தால் தான் ஈட்டும் பொருள் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை அமைதியாக தன் மகளுக்கும் இந்த உலகத்துக்கும் நிரூபிக்கும் வகையில்
மருத்துவமனையையே மூடிவிட்டு திருச்சி நகரத்தைவிட்டே
வெளியேறிவிடுகிறாள்.

அவளைப்போலவே அந்த இலட்சியப்பாதையில் இயங்கும் வேறொரு இளம் பெண்மருத்துவரோடு இணைந்து கொள்கிறாள். தென்காசிக்கு அருகில் பண்பொழில் என்னும் சிற்றூரில் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் சேவைக்காகவும் அந்த இளம்மருத்துவர் தொடங்கும் ஆசிரமத்தில் அவளும் இணைந்துகொள்கிறாள். ஆறாத ரணமாக அந்தப் பழிச்சொல் அவளை வாட்டியபடியே இருக்கிறது. தன் வழியில் எதிர்காலத்தில் தன் மகளும் மருத்துவம் படித்து இணைந்துகொள்வாள் என நினைத்திருந்த அவள் கனவு கலைந்துவிடுகிறது. ஏதோ ஒரு பட்டப்படிப்பைப் படிக்க,

4. அவள் திருச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத பெங்களூருக்குச் சென்றுவிடுகிறாள். அது ஒரு காலகட்டம். கால் நூற்றாண்டுக்குப் பிறகு இன்னொரு
காலகட்டம் வருகிறது. பெற்ற அம்மாவைத் தூற்றினோம் என எவ்விதமான குற்ற உணர்வுமின்றி மேற்படிப்புக்கு அமெரிக்காவுக்குச் சென்று படித்து முடித்து பட்டம் பெற்று அங்கேயே தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள் காயத்ரியின் மகள். அவளுக்கு ஒரு மகள் பிறந்து அவளும் பெரியவளாகி அவளும் ஏதோ ஒரு துறையில் வலம்வந்தபடி இருக்கிறாள். ஒருவரும் மருத்துவத்தின் திசையில்
திரும்பவில்லை. அக்குடும்பத்தில் அது காயத்ரியிலிருந்து தொடங்கி
காயத்ரியிலேயே முடிவடைந்துவிடுகிறது.

அந்த மனிதக்கணக்கை விதி வேறொரு கணக்காக மாற்றி எழுதுவதுதான் காயத்ரியின் உலகில் நிகழும் திருப்புமுனை. ஊழ் வேறொரு திசையில் நுழைந்து அவளுடைய கனவை சிந்தாமல் சிதறாமல்
ஏந்திக்கொள்கிறது.

நீண்ட காலமாக பூட்டப்பட்டு கிடந்த அந்த மருத்துவமனைக் கட்டடத்தை விற்பனை செய்துவிட திட்டமிடுகிறாள் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவரின் மகள். அந்த விற்பனை வேலையை முடிக்கவும் தென்காசியில் ஆய்வுத்துறையிலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்ட பாட்டியைச் சந்திக்கவும் நினைத்து திருச்சிக்கு வருகிறாள் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பேத்தி. அதே நேரத்தில் மருத்துவர் காயத்ரியின்
முயற்சியால் மகப்பேறடைந்த திருச்சி தம்பதியினரின் மகளான சின்ன
காயத்ரியும் அங்கே வருகிறாள். அவள் மகப்பேறு மருத்துவம் படித்தவள்.

பெரிய காயத்ரியைப்போலவே மருத்துவச்சேவையாற்ற வேண்டும் என ஆசை கொண்டிருக்கிறாள் அவள். வெகுகாலமாக பூட்டியிருக்கும் பெரிய காயத்ரியின் மருத்துவமனைக் கட்டிடத்தை வாங்கி, அவர் ஆற்றி வந்த சேவையை மீண்டும் தொடங்கி ஆற்றவேண்டும் என்பது அவள் எண்ணமாக இருக்கிறது. தன் பாட்டியின் உள்ளார்ந்த அர்ப்பணிப்புணர்வின் விளைவாக உருவாகிப் பிறந்து மருத்துவராக வளர்ந்து நிற்கும் சின்னகாயத்ரியின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் பேத்தி தாரா அந்தக் கட்டிடத்தை அவளுக்கே அளித்துவிடுகிறாள். காயத்ரியின் கொடிவழியாக
அல்லாமல், வேறொரு வழியாக மக்களுக்கான மருத்துவம் தொடர்கிறது.

காயத்ரி என்னும் பெரிய மருத்துவர் இவ்வாழ்வில் பெற்றதற்கு இணையாக தன் பாதையில் இழந்ததும் அதிகம். தன் பணி பணத்தாசையால் அல்ல என்பதை உணர்த்தும் வேகத்தில் மருத்துவமனையை மூடி மருத்துவச்சேவையிலிருந்து வெளியேறினாளே தவிர, அவள் மருத்துவ ஆராய்ச்சியிலேயே முழுமூச்சாக இறங்கி தன் இலட்சியத்தை அடைந்தாள்.

5. அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் என்று இந்த நாவலுக்குத்
தலைப்பிட்டிருக்கிறார் சுசிலா. திருவாசகத்தின் போற்றித் திரு அகவலில்
இடம்பெற்றிருக்கும் வரி இது. மானுடப்பிறப்பு என்பது எத்தனை அரிதாக வாய்க்கக்கூடியது என்பதையே இவ்வரி உணர்த்துகிறது. கருவியல் சார்ந்த அறிவியல் கருத்துகளையே இந்த அகவல் முன்வைக்கிறது.

தாயின் வயிற்றில் வளரும் கருவுக்கு ஐந்தாம் மாதம் என்பது மிகமுக்கியமான மாதம். அம்மாதத்தில் உருவாகும் உணவு ஒவ்வாமையின் காரணமாக சரியான முறையில் உணவை உட்கொள்ளமுடியாத சூழலுக்கு ஆட்படுகிறாள் தாய். உண்ணாமையின் காரணமாக அவள் உடல் மெலிகிறது.

அவள் மெலிந்தால், கருவும் மெலியும். போதிய வளர்ச்சி இல்லாமல் குன்றும். சிற்சில தருணங்களில் அழிந்துவிடவும் வாய்ப்புண்டு. ஐந்தாவது மாதம் என்பது ஒரு திருப்புமுனையான காலகட்டம். ஒரு குழந்தை உயிர்த்திருப்பதைத் தீர்மானிக்கும் தருணம் அது.

மகப்பேறு சார்ந்த ஒரு வரி என்றபோதும், அவ்வரியின் பொருளை இலட்சியத்தை அடையும் பெரும்பயணத்துக்கும் பொருத்திப் பார்க்கமுடியும். மசக்கை போல இடைவழியில் இலட்சியத்தைக் கைவிட வைக்கும் தருணங்களே இவ்வாழ்வில் அதிகம். அதையெல்லாம் கடந்து இலட்சியத்தை அடைபவனே வெற்றியாளன்.

மகப்பேறு போல அதுவும் ஒரு பேறு. இந்த நாவலின் நாயகியான காயத்ரி அடைந்ததும் அத்தகு ஒரு பேறு.

நூலின் பெயர்: அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் {நாவல்}
ஆசிரியர் : எம்.ஏ.சுசிலா. ஹெர்
வெளியீடு : ஸ்டோரீஸ் வெளியீடு, 15, மகாலட்சுமி அப்பார்ட்மெண்ட்ஸ், 1, ராக்கியப்பா
தெரு, சென்னை – 600 004.
விலை:ரூ.160

17.12.23

உதயத்தில் ஓர் அஸ்தமனம்-மொழிபெயர்ப்புச் சிறுகதை

 

                                   




                      உதயத்தில் ஓர் அஸ்தமனம்

  • மணிப்புரி மூலம் – குரு ஆரிபம் கானப்பிரியா
  • ஆங்கிலத்தில் – அகோய்ஜம் தனிதா
  • ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா


எங்கள் பகுதிக்கு வாடகை ஜீப்கள் வரத்தொடங்கிய பிறகு தினமும் கல்லூரி செல்வதற்கு அவற்றையே பயன்படுத்த ஆரம்பித்தேன்.  எங்கள் வீட்டு வாசலிலிருந்துதான் அவை கிளம்பிக் கொண்டிருந்தன என்பதால் பயணம் மிகவும் வசதியாக ஆகிவிட்டது.

குறிப்பிட்ட அந்த நாளன்று வழக்கம் போல் நான் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.  ஜீப் கிளம்பியபோது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தாலும், பயணத்தின் முடிவில் நாலுபேர் மட்டுமே எஞ்சியிருந்தோம்.  என் வீட்டிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெண் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டாள். அதற்குப் பிறகு இருந்த குறுகிய தூரத்தில் என்னோடு பயணம் செய்த ஒரு இளம்பெண் ஏதோ அவசரத்தில் இருப்பதுபோல் காணப்பட்டாள்.  அவளது உடைகளை வைத்துப் பார்க்கும்போது மணமாகாதவளாக இருக்கலாம் என்று தோன்றியது.

அது யாராக இருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது அதுவும் அந்த வாடகை வண்டிப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில்…!  அந்தப் பெண்ணைப் பார்த்தால் உள்ளூர்க்காரி போலவும் தோன்றவில்லை.  அவளை ஒரு முறை எறெடுத்துப்  பார்த்தேன்; அவள் சரியான மனநிலையில் இருக்கிறாளா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது.  அங்கிருந்த வேறு இரண்டு சக பயணிகளும் கூட அவளைச் சற்றுத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்பட்டது. 

அவள் களைத்துப் போனது போலத் தெரிந்தாள்.  மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது.  கவலை அவள் முகத்தில் கருநிழல் போலப் படர்ந்திருந்தது.  அவளது முடியிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அதைக் கழுத்துக்கு மேல் ஒரு கொண்டையாக முடிச்சிட்டு வைத்திருந்தாள்.  அவளது உடைகளும் ஈரமாகத்தான் இருந்தன.  மிகவும் இளமையாகவோ, மிகவும் முதிர்ச்சியாகவோ இல்லாமல் பார்க்க இனிமையாகத் தெரிந்தாள் அவள்.  பொதுவாக ஒரு பெண்ணுக்கு உரியதாகச் சொல்லப்படும் மென்மையான… நளினமான அழகு அவளிடம் இருந்ததாக சொல்லமுடியாது.  மாறாக அவளது வலிமையையும் துணிச்சலையும் அவளிடமிருந்த ஏதோ ஒன்று எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது.  முன்னால் தெரிகிற சாலையைக் கூடப் பார்க்காமல் ஏதோ ஓர் ஓரத்தில் ஒண்டிக்கொண்டு அன்று அவள் பயணம் செய்து கொண்டிருந்தது, தனக்குள் ஏதோ ஒரு கதையை ஒளித்து வைத்திருந்தது.  அந்தக் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் ஆசைப்பட்டாலும் நானாகப் போய் அதை எப்படிக் கேட்பது ?

ஜீப் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தது.  எல்லோரும் கீழே இறங்கினார்கள்.  ஜீப் டிரைவர், எல்லோரிடமிருந்தும் கட்டண வசூல் செய்ய ஆரம்பித்திருந்தார்.  நான் திரும்பிப் பார்த்தேன்;  அவள் இன்னும் கூட உள்ளேதான் உட்கார்ந்திருந்தாள்.

வீட்டுக் கதவை நான் திறக்கும் போது ‘இபெம்மா!’ (தங்கச்சி) என்று என்னை அழைத்தாள் அவள்.  நான் நின்றபடி திரும்பிப் பார்த்தேன்.  ஜீப்பிலிருந்து இறங்கிவந்த அவள்,

‘‘இது உன் வீடா?’’

என்று கேட்டாள்.

        ‘‘ஆமாம்’’

        ‘‘சரி, வா, உள்ளே போகலாம்’’

        அவள் என்னையும் முந்திக் கொண்டு திறந்த கதவின் வழி உள்ளே சென்றாள்.  நான் குழப்பம் அடைந்தேன்.  என்ன நடக்கிறது இங்கே?

        ‘‘உன்னோடு கூடப் பிறந்தவர்கள் எத்தனைபேர்?’’ என்று நாங்கள் சேர்ந்து நடந்து போகும்போது கேட்டாள் அவள்.

        ‘‘நான் ஒரே ஒரு குழந்தைதான்’’

        ‘‘உன் தந்தை என்ன செய்கிறார்’’

        ‘‘அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார்.’’

        ‘‘இன்னிக்கு ‘இச்சே’ (அக்கா) கொஞ்ச நேரம் உன் வீட்டிலே இருக்கப் போறேன்’’

        எனக்குத் தங்கை ஸ்தானத்தைக் கொடுத்து விட்டுத் தமக்கை என்ற இடத்தைத் தான் எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.  நான் எந்த பதிலும் சொல்லவில்லை.  இன்னதென்று அறியாத ஒரு பயம் என் நெஞ்சுக்குள் ஊர்ந்தது.

        ‘அவள் யார்’ என்று எனக்குள் மறுபடியும் கேட்டுக் கொண்டேன்.

        நேராக என் அறையை நோக்கிச் சென்றேன்.  அவளும் என்னை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தாள்.  கல்லூரிக்குக் கொண்டுபோன பையை மேஜை மீது வைத்தேன் அது என் வீடுதான் என்றாலும் கூட அடுத்து என்ன செய்வது என்பது தெரியாத குழப்பத்தில் இருந்தேன் நான்.  அதை உணர்ந்து கொண்ட அவள்,

        ‘‘உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாத்தான் இருக்கும்.  எல்லாத்தையும் உன்கிட்டே சொல்லிடறேன் இப்ப’’ என்றபடி தன் கதையை என்னிடம் சுருக்கமாக சொல்லி முடித்தாள்.  அவள் பேசியதைக் கேட்டதும் ஆரம்பத்தில் என்னுள் இருந்த வியப்பு விலகி விட்டாலும், இன்னும் கூடக் குழப்பத்துடனேயே இருந்தேன் நான்.

        ‘‘வீட்டிலே  ஃபோன் இருக்கா’’

        ‘‘இருக்கு’’

        ‘‘எங்கே இருக்கு? நான் ஒரு ‘கால்’ பண்ணிக்கிறேன்’’

        ‘‘அடுத்த ரூமிலே இருக்கு. போய்ப் பண்ணிக்கங்க ‘இச்சே’. வீட்டிலே வேற யாரும் இல்லை’’

        அவள் பக்கத்து அறையில் இருந்தபோது, வெளியே சென்றிருந்த அம்மா திரும்பி வந்தாள்.

        ‘‘வீட்டுக்கு வந்திட்டியா ‘இபெம்மா’

        ‘‘ஆமாம் ‘இமா’ (அம்மா)’’

        ‘‘அப்ப டிரெஸ் மாத்திட்டு சாப்பிட வேண்டியதுதானே ? ஏன் இப்படி மரம் மாதிரி நிலைகுத்திப் போய் நிக்கிறே ?’’

        ‘இமா’ வழக்கம் போல் – கொஞ்சம் கூட நிறுத்தாமல் என்னைத் திட்டிக் கொண்டே போனாள்.  என் உதட்டின் மீது ஆள் காட்டி விரலை வைத்து அவளை அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்தேன்.  அதைப் பார்த்ததும் தன் பேச்சை இடையிலேயே நிறுத்தி விட்டு என்னைக் கலவரத்தோடு பார்த்தாள் அவள்.  பக்கத்து அறையில் நடக்கும் தொலைபேசி உரையாடலும் அவள் காதில் இப்போது சட்டென்று விழுந்திருக்கவேண்டும்.  உள்ளே வேகமாகப் பார்த்து விட்டு என் பக்கம் திரும்பி, சத்தம் வரும் திசையில் தலையை அசைத்தபடி ‘‘யார்?’’ என்று கேட்டாள்.

        ‘‘ஏதோ போராட்டக் குழுவைச் சேர்ந்தவங்களா இருக்கணும்னு தோணுது’’

என்று கிசுகிசுப்பான குரலில் பதிலளித்தேன்.

        ‘‘என்னது? அவ எப்படி இங்கே…?’’

        நான் அவள் கதையை அம்மாவிடம் சுருக்கமாகச் சொன்னேன்.

        ‘‘அவளுக்கு மலேரியா வியாதி வந்திட்டதாலே சிகிச்சை செஞ்சுக்கிறதுக்காக முகாமை விட்டு வெளியே வந்திருக்கா.  பக்கத்திலே இருந்த ஒரு வீட்டிலே அடைக்கலம் தேடிக்கிட்டப்ப அவங்கள்ளே மூணு நாலு பேரை சுத்தி வளைச்சிட்டாங்க.  வீட்டோட ஒரு மூலையிலே இருந்த குளத்திலே அவ அப்ப குளிச்சிக்கிட்டிருந்ததாலே அதிருஷ்டவசமா தப்பிச்சிட்டா.  நடந்த கலாட்டா சத்தத்தைக் கேட்டு சுத்திமுத்திப் பார்க்கறப்ப வீட்டை போலீஸ் வளைச்சிருந்தாங்க’’

        ‘‘ஆமாம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது.  அதுவாதான் இருக்கணும்.  ஆனா, அவ இங்கே எப்படி வந்தா ?’’

        ‘‘பக்கத்து வீடுகளுக்குள்ளெல்லாம் புகுந்து நுழைஞ்சு ரோடு வரைக்கும் தப்பிச்சு வந்திட்டா.  அப்புறம் நான் வந்த ஜீப்பிலே ஏறியிருக்கா… அப்படித்தான் இங்கே வந்து சேர்ந்தா’’

        அந்த நேரத்தில் அந்தப் பெண் அறையை விட்டு வெளியே வந்து அவர்களது பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.

        ‘‘இமா!’ நீங்கதான் ‘இபெம்மா’ வோட அம்மாவா?’’

        ‘‘ஆமாம்’’

        ‘‘நான் ரொம்ப நேரம் இங்கே இருக்கமாட்டேன்.  சந்தடியெல்லாம் கொஞ்சம் அடங்கிப்போனப்புறம் என்னைக் கூட்டிக்கிட்டுப் போக அவங்க ஆளனுப்பி வச்சிடுவாங்க.  ஒரு மூணு நாலு மணிநேரம் நான்  உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கும்.  நீங்க அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.’’

        ‘‘நாங்க ஏன் அப்படி எடுத்துக்கப்போறோம் ?’’

        ‘இமா’ அதைப் பெரிதுபடுத்தவில்லை என்றாலும் கூட மிகுந்த கவலையுடனும், பீதியுடனும் அவள் இருப்பதை ‘இச்சே’ அனுமானித்துக் கொண்டாள்.

        ‘‘ ‘இமா’ தயவு செய்து எதுக்கும் பயப்படாதீங்க.  இந்த வீட்டிலே இருக்கிறவங்களை சம்பந்தப்படுத்தற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்’’

        இன்னும் கூட ஈரம்படிந்த ஆடைகளுடனேயே அவள் இருப்பது எனக்கு வருத்தமாக இருந்தது, ஒரு மேலாடையும், ‘ஃபேனக்’ * [பாரம்பரிய மணிப்புரி ஆடை- பாவாடை போல உடலில் சுற்றிக்கொள்வது] கும் தந்து அவளை மாற்றிக் கொள்ளச் சொன்னேன்.  என்ன செய்வதென்றோ என்ன பேசுவதென்றோ தெரியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தேன் நான்.  அவள் இங்கே இருப்பது எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது.  அவள் அவ்வப்போது ஜன்னல் வழியே வெளிப்பக்கம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்பட்டு அலட்டிக் கொள்வதைப் போல் தோன்றவில்லை.

        நான் அங்கிருந்து வெளியேற வழிதேடிக் கொண்டிருந்தேன்.

        ‘‘ ‘இச்சே… நீங்க வசதியா உட்கார்ந்திருங்க’’ என்று சொன்னபடி அறையை விட்டு வெளியேற முயன்றேன்.’’

        ‘‘உனக்கு எதுவும் வேலை இருக்கா?’’

        ‘‘இல்லையே? அப்படி ஒண்ணும் இல்லை’’

        ‘‘அப்படீன்னா கொஞ்ச நேரம் என்னோட இங்கே உட்காரு’’

        அவளுடைய இயல்பு காரணமா…. அல்லது அப்படிப்பேசுவதற்கு அவள் பழகிப் போயிருந்தாளா… என்று தெரியவில்லை.  ஆனால் கண நேரம் அவளுடைய வார்த்தைகள் என்னை மந்திரம் போல் கட்டிப் போட்டுவிட்டன.  என்னுடைய அசௌகரியம், இருப்புக்கொள்ளாத பதட்டம் என்று எல்லாமே சட்டென்று மறைந்து போய்விட்டது.  இலகுவான மனநிலைக்கு வந்திருந்த நான்

        ‘‘இச்சே… உங்க வீடு எங்கே இருக்கு?’’ என்று கேட்டேன்.

        அவள் அதற்கு உடனே பதிலளிக்கவில்லை மாறாக என்னை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

        ‘‘நான் யாருன்னு உனக்குத் தெரியணும் அப்படித்தானே?’’

        நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

        ‘‘நான் சுதந்திரத்துக்காகப் போராடற ஒரு போராளி’’

        ‘‘இச்சே…. உங்களாலே ஜெயிச்சிட முடியும்னு நினைக்கிறீங்களா?’’

        ‘‘யுத்தகளத்திலே இருந்து புறங்காட்டி ஓடிப் போறவங்களுக்குத்தான் தோல்வியெல்லாம்.  எதுக்கும் பணிய மாட்டேன்னு மறுத்து சாவைத் தழுவறவங்கதான் வெற்றி பெற்ற போராளிகள்’’

        பேசும்போது அவள் கண்கள் இரத்தம் போலச் சிவந்திருந்தன.  மூச்சு வேகமாக இரைத்தது.  தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளப் போராடியபடி

        ‘‘அதனாலே நான்….’’ என்று தொடர்ந்தாள் அவள்.

        அவள் பேச்சை முடிப்பதற்குள் வெளியே ‘ஹாரன்’ ஒலி கேட்டது. உடனே எழுந்து நின்று ஜன்னல் வழியே பார்த்தாள்.

        ‘‘என்னைத் தேடி அவர்கள் வந்துவிட்டார்கள்.  நான் இப்போது போயாக வேண்டும்.  உங்களுக்கு நான் மிகுந்த சிரமம் கொடுத்துவிட்டேன்.  கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.’’

~oOo~

        மறுநாள் காலை சூரிய வழிபாட்டுக்காக நான் வெளியே வந்தபோது அன்றைய செய்தித்தாள் வராந்தாவில் கிடந்தது.  அதைக் கடந்துபோக என்னால் முடியவில்லை.   வேகவேகமாக அதன் முதல் பக்கத்தில் கண்களை ஓட்டினேன்.

        ‘புரட்சி இயக்கத்தின் பெண் தலைவியான பேச்சா லிக்லாய் சானு, சி ஆர் பி எப் நடத்திய நேரடி மோதலில் கொல்லப்பட்டார்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி இருந்தது.  அதனுடன் கூடவே மிகப் பெரிய ஒரு புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

        ‘ஐயோ… இவ்வளவு சீக்கிரமாகவா…? எத்தனை அழகு… எவ்வளவு வலிமை… எவ்வளவு துணிச்சல்? எப்படிப்பட்ட ஒரு இழப்பு?’’

8.12.23

அமெரிக்கன் கல்லூரியில்...

 


மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை உயராய்வு மையத்தில் 

மொழியாக்க இலக்கியம்-சிக்கல்களும்,சவால்களும் 

என்ற தலைப்பில் முதுகலை தமிழ் மற்றும் ஆய்வு மாணவர்களிடையே உரையாற்றியது ஓர் இனிய அனுபவம். 









ஓய்வு பெற்று 17 ஆண்டுகளானாலும் மீண்டும் கல்லூரிச்சூழலில், மாணவக்கூட்டத்தோடும் ஆசிரியர்களோடும் கலந்திருப்பது மகிழ்ச்சியும் புத்துணர்வும் அளிப்பதுதான்..

9.10.23

என் குழந்தைகளின் புகைப்படங்கள்-மொழிபெயர்ப்புச் சிறுகதை

 அக்டோபர். 2023  தேதியிட்ட சொல்வனம் இணைய [304 ஆம் ] இதழில் வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை.

என் குழந்தைகளின் புகைப்படங்கள்

மணிப்புரி மூலம் : சத்யவதி நிங்கோம்பாம்
ஆங்கிலத்தில்: சபம் ஸ்வீட்டீ
 ஆங்கில வழி : தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

“அம்மா! நான் பெரியவனா வளர்ந்தப்புறம் ஏரோப்பிளேன்லே பறந்து போவேன்தானே?’’


‘‘கட்டாயம் போவே குழந்தை’’


‘‘நான் பெரிய ஆளா ஆனப்புறம் நியூஸ் பேப்பரிலே என்னோட ஃபோட்டோ வரும் இல்லையாம்மா?’’


‘‘நிச்சயமா வரும் மகனே’’


‘‘அக்கா பெரியவளா வளர்ந்த பிறகு என்னவா ஆவா?’’


‘‘உன்னோட அக்கா ஒரு பொண்ணு.  அவளுக்குக் கல்யாணம் ஆகும்.  அவங்க, வேறே ஒரு வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.’’


‘‘சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது.  அவளை அவங்க அப்படிக் கூட்டிக்கிட்டுப்போக எல்லாம் நான் விட மாட்டேன். அக்காவை என்னோட கூடவே பிளேனிலே உட்கார வச்சுக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்து போயிடுவேன்.  அவ அங்கேயே இருக்கட்டும்.  அப்படின்னா அவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியிருக்காதுதானே? “


‘‘கிறுக்குப்பையா? அக்காவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?’’


‘‘ஆமாம்!’’


‘‘எவ்வளவு பிடிக்கும்?’’


‘‘இதோ இ…வ்..வ..ள…வு’’ என்று தன் சின்னஞ்சிறு கைகளை முதுகு வரை விரித்து சைகை காட்டினான் அவன்.


‘‘அம்மா அப்பா, அக்கா- எங்க மூணுபேரிலே உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’’


‘‘உங்க மூணு பேரையுமே எனக்குப் பிடிக்கும்தான்’’


‘‘அட…. இந்தக் காலத்துக் குழந்தைகளைப் பாரு! இத்தனூண்டா இருந்துகிட்டு அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைகள்தான் எப்படி இருக்கு?’’


மோமோச்சா, முடிவே இல்லாத கேள்விகள் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருப்பான்.  அவை அவனது பெற்றோருக்கு மிகவும் பிடிக்கும்; அவர்களைக் களிப்பூட்டும்.
‘திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.  ஆணையும் பெண்ணையும் அதில் வலுவாகக் கட்டிப்போட்டிருப்பது தங்களது குழந்தை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்புதான்.  உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறை இது’ என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

இன்று, இம்பாலில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஓவியப்போட்டியில் அவர்களது பெண் பங்கெடுத்துக் கொள்ள இருக்கிறாள்.  தன் பள்ளி சார்பாக அவள் இதில் கலந்துகொள்கிறாள் . மோமோச்சாவும் கூடப் போகிறான்.  

மதிய உணவை சீக்கிரமே முடித்து விட்டு அம்மா அவர்களுக்கு உடையணிவித்துவிடுகிறாள்.  தங்கள் வீட்டில் வைத்து வழிபடும் ‘சனமஹி’* (* ‘மைதேயி’ பழங்குடி மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் கடவுள் ‘சனமஹி’) என்ற தெய்வ உருவத்தின் அருகில் அவர்களை அழைத்துச் செல்கிறாள்.  அதன் பிறகு முற்றத்திலுள்ள துளசிச் செடிக்குக் கீழே எல்லோரும் விழுந்து வணங்குகிறார்கள்.


‘‘ஓவியப் போட்டியிலே நல்லா வரைஞ்சுட்டு வா பொண்ணே’’


‘‘சரிம்மா’’

‘‘இன்னிக்கு க்வைராம்பாண்ட் மார்க்கெட்டுக்கு மோமோச்சோவைக் கூட்டிக் கிட்டுப் போகலாம் நாம’’


‘‘அவனுக்கு ஒரு நல்ல சட்டை வாங்கித் தாங்கப்பா’’


‘‘கட்டாயம் வாங்கித்தரேன், பின்னே என் பையனுக்கு நான் வாங்காமலா?’’


‘‘அக்காவுக்கும்தான்’’


‘‘நிச்சயம் வாங்கறேன்’’


‘‘அம்மாவுக்கும் கூட’’


‘‘சரி, சரி…’’


‘‘அம்மா… பைபை …’’

அவள் வீட்டுவாசலில் நின்றபடி குழந்தைகளின் சின்னக் கையசைப்பை எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு நேரம் பார்த்தபடி நிற்கிறாள்.  பிறகு தங்கள் அப்பாவை முந்திக் கொண்டு வேகமாக நடை போட்டுப் போய் விடுகிறார்கள் அவர்கள்.

                                            ***********************

மாலை மறைந்து இருள் படர ஆரம்பித்துவிட்டது.  கணவனும், குழந்தைகளும் திரும்பி வருகிறார்களா என்று பார்ப்பதற்காக வாசற் கதவுப் பக்கம் வந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறாள் மோமோ-மா.  வழியைப் பார்த்துப் பார்த்து அவள் கண்கள் பூத்துப் போய் விடுகின்றன.


‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில் வருகிறவர்கள் போகிறவர்கள், அவளுக்கு அறிமுகமானவர்கள் எல்லோரும்
‘‘மோமோ-மா இங்கே என்ன செய்யறே’’ என்று பரிவோடு கேட்கிறார்கள்.
‘‘யாருக்காகக் காத்திருக்கே இபெம்மா? “(தங்கச்சி) என்று விசாரிக்கிறார்கள்.

 தான் நெய்த துணிகளை மார்க்கெட்டில் இருக்கும் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காகச் சென்றிருந்த ஒரு நெசவாளிப் பெண், நூல்கண்டுகள் அடங்கிய தன் பெட்டியை இறுகப்பிடித்துக் கொண்டு , அந்த இருளில் தெருவுக்குள் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்கிறாள்.  அவள் மிரண்டு போயிருக்கிறாள் என்பது, எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.

‘‘இபெம்மா! க்வைராம்பாண்டிலே இன்னிக்குத் துப்பாக்கிச் சூடு நடக்குது.  காயப்படாம, செத்துப்போகாம தப்பிச்சது என்னோட நல்லநேரம்.  பஸ் எதுவுமே வரலை.  ஏதோ அதிர்ஷ்டம் இருந்திருக்கு, எப்படியோ சாமி புண்ணியத்திலே தப்பிச்சு வந்திட்டேன். இது ரொம்ப மோசமான நேரம்… போர் நடக்கற நேரம்* (இனக்குழுக்களுக்குள் அடிக்கடி நிகழும் கலவரங்களே போர்ச்சூழலாக இங்கு சித்தரிக்கப்படுகின்றன). கூட்ட நெரிசலான ஒரு மார்க்கெட்டுக்குள்ளே குண்டு வெடிச்சா ஜனங்க கட்டாயம் செத்துத்தான் போவாங்க.  வீட்டிலே இருக்கிற எல்லாருக்கும் கவலைதான்’’ என்று போகிற போக்கில் வேகமாகச் சொல்லிக் கொண்டே கடந்துபோகிறாள் அவள்.

மோமோ-மா அதிர்ச்சியால் திக்பிரமை பிடித்தவளாய் வாயடைத்துப்போய் நிற்கிறாள்.அக்கம்பக்கத்திலுள்ளவர்களும், உறவுக்காரர்களும் அவளைத் தேற்றவும் அவள் பயத்தைக் கொஞ்சம் குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

‘‘வண்டி எதுவும் ஓடாததாலே அப்பாவும், குழந்தைகளும் எங்கேயாவது மாட்டிக்கிட்டிருப்பாங்க.’’

‘‘இதோ பாரும்மா, ராத்திரிக்கு முன்னாடி அவங்க இங்கே வந்து சேர்ந்துடுவாங்க. நீ வேணும்னா பாரு! இம்பால் ஒண்ணும் அவ்வளவு தூரம் இல்லையே?’’

மோமோ-மாவை அண்டை வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குள் கொண்டு போய் விடுகிறார்கள்.

                                       *****************************

காலை விடிந்துவிட்டது.  செய்தித்தாள்கள் மட்டும் எப்படி இவ்வளவு சரியாக வந்து சேர்ந்துவிடுகின்றன?

‘‘இறந்தவர்கள்….இறந்தவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்,’’ என்று அந்தச் செய்திகளையே செய்தித்தாள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன.

எல்லோரும் மோமா-மா எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.  குறிப்பிட்ட அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் அலசித் தேடினார்கள்.  சிலர் குளங்களுக்குள் குதித்துப் பார்த்தார்கள் . நெற்குதிர்கள் மீது ஏறியும் பார்த்தார்கள்.  காலியாய்க் கிடந்த வயல் வெளிகளில், அடர்ந்த காட்டுப் புதர்களிலெல்லாம் அவளைத் தேடிப் பார்த்தார்கள்.  

கடைசியில் மூன்று நான்கு ஆண்கள் ஒன்று சேர்ந்து மோமோ-மாவைக் கைத் தாங்கலாய்ப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.  தலை வாராமல், முடிச்சு தளர்ந்திருக்க அவளது அடர்ந்த கூந்தல் , முதுகுப்புறம் அவிழ்ந்து கிடந்தது.  மேலாடை தளர்ந்திருந்தது.  இறுகப் பிணைத்து வைத்திருந்த அவளது கரங்களை அவர்களால் பிரிக்க முடியவில்லை.

‘‘மார்க்கெட்டிலிருந்து வந்தவங்ககிட்டே இருந்து செய்தித்தாள்களைப் பிடுங்கிக்கிட்டா அவ’’ என்று யாரோ சொன்னார்கள்.
‘‘ஒருவேளை பைத்தியம் பிடிச்சுத் தெருவிலே அலையப்போறாளோ அவ?”

‘‘ஹி ஹி ஹி!!’’ என்று வெறிபிடித்தாற் போலச் சிரித்தாள் அவள்.  கசங்கிப்போன அந்த செய்தித்தாளை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  பிறகு அதைத் தன் உதட்டருகே கொண்டுவந்து முத்தமிட்டபடி
‘‘ஆஹா.. இன்னிக்கு என் குழந்தைங்களோட படம் பேப்பர்களிலே வந்தாச்சு’’ என்று சந்தோஷமாகக் கூச்சலிட்டாள்.

                                                &**********************&

1992இல் மணிப்புரி மொழியில் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட (Ichagi Photo) இந்தச் சிறுகதையின் ஆசிரியர் சத்யவதி நிங்கோம்பாம்.

(Source CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR
EDITOR , THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)

6.10.23

“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” ...-நாவல் வெளியீடு

 இன்று ,

‘’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்”

என்னும் என் மூன்றாவது நாவல் வெளிவரவிருக்கிறது.




சென்னை ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார் தங்கள் வேறு வெளியீடுகளுடன் சேர்த்துக் கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் என் நாவலையும் வெளியிடுகிறார்கள்.( என் அன்புக்குரிய மாணவி தேனம்மை லக்‌ஷ்மணனின் நூல் ஒன்றும் இந்தப்பட்டிலில் இடம் பெற்றிருப்பதில் ஓர் ஆசிரியராகவும் பெருமிதம் கொள்கிறேன்)



நாவலிலிருந்து…( தலைப்புக்கும் இது விளக்கமாகலாம்)
//“அற்புதம் டாக்டர்! ‘மானுடப்பிறப்பில் மாதா உதரத்தில் ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்னு ஆரம்பிச்சு… ‘ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்… அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்… ஏழுதிங்களில் தாழ் புவி பிழைத்தும்’னு ஒவ்வொரு மாசமும் கருவோட வளர்ச்சியையும் அது படற அவஸ்தையையும் போராட்டத்தையும் காட்டற மாதிரியே பொருத்தமான வரிகள், அப்படியே அசந்து போயிட்டேன்’’
“அது திருவாசகத்திலே போற்றித் திரு அகவல்ங்கிற பகுதியிலே இருக்கிற வரிகள் சுமதி. ‘புல்லாகிப் புழுவாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’னு சொல்ற மாணிக்கவாசகர் மனுஷப் பிறப்பு எடுக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குங்கிறதை அந்தப் பத்து பன்னிரண்டு வரிகளிலே சொல்றார். ஒவ்வொரு மாசமும் என்ன பாடு..? எல்லாமே சர்வைவலுக்கான யுத்தம்தான்கிறதை கைனகாலஜிஸ்டோட நிலையிலே இருந்து ஒரு ஆன்மீகவாதி எப்படிசொல்லியிருக்கார் பாரு. ஆனா பரமபத ஏணி மாதிரி இத்தனை படிகளிலே தப்பித் தப்பிப் பிழைச்சு வந்து அருமையாக் கிடைக்கிற மனிதப் பிறவியை நாம ஒழுங்காப் பயன்படுத்திக்கிறோமா, பல வழிகளிலே விரயமாக்கித் தொலைச்சுக்கறோமாங்கிறதுதான் அவர் எழுப்பற அடுத்த கேள்வி” //
என்னுரையிலிருந்து…
“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” என்ற இந்த நாவலும் கூட ஒரு யுக சந்தியின் கதைதான். சென்ற தலைமுறை மரபுச்சட்டகங்கள் பெண்கல்வியின் பாதையை மறித்ததென்றால், அதன் அடுத்த பரிமாணமாய்த் தனக்கென்ற சுயதேடல் ஒன்றை சுமந்தபடி,தன் தனிப்பட்ட ஆர்வத்தையும் கனவுகளையும் - குடும்பம் என்ற எல்லை தாண்டி நிறைவேற்றும் பெண், தனது அடுத்த தலைமுறையாலேயே குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டு விடுவதை இந்த நாவல் வழி எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். தொழில் நுட்ப வளர்ச்சியில், நடை, உடை ,நாகரிக பாணிகளில் அடுத்த நூற்றாண்டுக்கே கூடத் தாவிச் செல்லத் தயாராக இருக்கும் இன்றைய இளைய தலைமுறை,மரபு வழி மனப்போக்குகளில் சற்றுப் பின்னோக்கி நகர்ந்தபடி - தாய் என்னும்பங்கு நிலை ( role) ஒன்றை மட்டுமே பெண்ணிடமிருந்து எதிர்பார்க்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்த நாவலின்காயத்ரியைப்போலத் தங்களைக் கொண்டு செலுத்திக் கொண்டிருப்பதும், இரவும் பகலுமாக ஆட்டிப்படைப்பதுமான அகத்தேடலை இறக்கி வைக்க வழியின்றித் தங்கள் கனவுகளை மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக் கொள்ளும் பெண்கள், குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் சார்ந்தவர்கள் அல்ல, வெளி உலகத்தில்…, புறப்பணிகளில் ஈடுபடாமல் வீட்டளவில்,குடும்பத் தளத்தில் மட்டுமே இயங்கும் பெண்களும் அவர்களில் உண்டு.
வீட்டு வாழ்க்கை,வெளி வாழ்க்கை என்ற பங்கு நிலைப் போராட்டத்தில் வெற்றியும் தோல்வியுமாய் ஊடாடிக்கொண்டிருக்கும் அனைத்து அன்னையருக்கும் இது சமர்ப்பணம்.
இதை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியதோடு மிக விரைவாகவும் வெளியிட்டிருக்கும் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தார்க்கு என் நன்றி.

25.9.23

தினமலர் நேர்காணல்

 

        

24.09.2023 தினமலர் ஞாயிறு சிறப்புப்பகுதியில் என் நேர்காணல்

இது மொழியாக்கத்தின் பொற்காலம்: எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா .
 https://m.dinamalar.com/detail.php?id=3439620

11.9.23

ஒலி வடிவில் என் சிறுகதைகள் சில

நிழல் சொரியும் இனிய மரத்தடிகள் கதை சொல்லவும் கேட்கவும் உகந்த இடமாக நம் மரபில் காலம் காலமாக விளங்கி வருகின்றன. இன்றைய நவீன தொழில் நுட்ப யுகத்துக்கேற்ப 

Under The Tree  

என்பதையே தலைப்பாக்கி அரிய பல தமிழ்ச்சிறுகதைகளையும் ஆன்மீக புராணக்கதைகளையும் அரிய பல தகவல்களையும் பல சமூக ஊடகங்கள் வழியே [வாட்ஸ்அப், பாட்காஸ்ட் போன்ற டிஜிட்டல் தளங்களில் ] வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்து வருபவர் திருமதி ரம்யா வாசுதேவன். ஏதோ சில காரணங்களால் அச்சு ஊடகத்தில் வாசிக்க முடியாதவர்களுக்கும், வாசிக்கும்போதே சிலவற்றைத் தவற விட்டவர்களுக்கும் அவர் செய்யும் இந்த அரும் பணி மிகவும் பயனளித்து வருகிறது. 


’’கற்றலில் கேட்டலே நன்று..’’என்பது பழமொழி நானூறில் இடம் பெறும் வாசகம். ’’கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதே சொல்’’ என்று குறள் கூறுவதைப் போல  ரம்யா சொல்லும் கதைகள், இது வரை கேளாதோரைக் கேட்கத் தூண்டுபவை மட்டுமல்ல, அந்தக் கதைகளை இதுவரை வாசிக்காமல் இருப்பவர்களை வாசிக்கவும் தூண்டி விடுகிறது அவரது குரல். அதில் ததும்பும் உணர்ச்சி பாவங்களும் தகுந்தபடி அமையும் ஏற்ற இறக்கங்களும்...கதைகளை வெறுமே வாசித்து விட்டுப்போகாமல் அவற்றில் ஒன்றிக்கலந்து குறிப்பிட்ட படைப்பின்  சுருக்கத்தை..அதன் சாரத்தைத் தன் மொழியில் தன் நடையில் சுவாரசியமாகச் சொல்வதும் அவரது தனித்துவம்.

’’இப்போது மூன்று வருடங்களாக தொடர்ந்து தினமும் காலை 8.30 மணிக்கு ஒரு கதை வெளியாகிவிடும். இன்றுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் என் கதையைக் கேட்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் 11 குழுக்கள் அமைத்து அதில் தினமும் இலவசமாக எல்லோருக்கும் கதை சொல்லி வருகிறேன்” என்று பெருமை பொங்கச் சொல்லும் ரம்யாவுக்கு, கடந்த ஆண்டு சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில் நாடன் விருதுகளில், ‘ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி’ எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி ரம்யா வாசுதேவன்!



திருமதி ரம்யா வாசுதேவனின்  குரலில் பதிவாகி வெளிவந்திருக்கும் என் சிறுகதைகளும் அவற்றுக்கான இணைப்புக்களும் கீழே;

ஊர்மிளை

https://open.spotify.com/episode/6hDZlJqMueFrxlvBtBmeR8

தேவந்தி

https://open.spotify.com/episode/6LIEsl2txwD1s1fq5zpP6A

பொம்பள வண்டி

https://open.spotify.com/episode/3cVUEeG02Du0TOQYEn2d1M

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....