[bookday.in December 25, 2023 இணைய தளம்]
29.12.23
’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ - நூலறிமுகம்
17.12.23
உதயத்தில் ஓர் அஸ்தமனம்-மொழிபெயர்ப்புச் சிறுகதை
உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- மணிப்புரி மூலம் – குரு ஆரிபம் கானப்பிரியா
- ஆங்கிலத்தில் – அகோய்ஜம் தனிதா
- ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா
எங்கள் பகுதிக்கு வாடகை ஜீப்கள் வரத்தொடங்கிய பிறகு தினமும் கல்லூரி செல்வதற்கு அவற்றையே பயன்படுத்த ஆரம்பித்தேன். எங்கள் வீட்டு வாசலிலிருந்துதான் அவை கிளம்பிக் கொண்டிருந்தன என்பதால் பயணம் மிகவும் வசதியாக ஆகிவிட்டது.
குறிப்பிட்ட அந்த நாளன்று வழக்கம் போல் நான் கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். ஜீப் கிளம்பியபோது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தாலும், பயணத்தின் முடிவில் நாலுபேர் மட்டுமே எஞ்சியிருந்தோம். என் வீட்டிலிருந்து கால் கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெண் வண்டியை விட்டு இறங்கிக் கொண்டாள். அதற்குப் பிறகு இருந்த குறுகிய தூரத்தில் என்னோடு பயணம் செய்த ஒரு இளம்பெண் ஏதோ அவசரத்தில் இருப்பதுபோல் காணப்பட்டாள். அவளது உடைகளை வைத்துப் பார்க்கும்போது மணமாகாதவளாக இருக்கலாம் என்று தோன்றியது.
அது யாராக இருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது அதுவும் அந்த வாடகை வண்டிப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில்…! அந்தப் பெண்ணைப் பார்த்தால் உள்ளூர்க்காரி போலவும் தோன்றவில்லை. அவளை ஒரு முறை எறெடுத்துப் பார்த்தேன்; அவள் சரியான மனநிலையில் இருக்கிறாளா என்பது எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. அங்கிருந்த வேறு இரண்டு சக பயணிகளும் கூட அவளைச் சற்றுத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்பட்டது.
அவள் களைத்துப் போனது போலத் தெரிந்தாள். மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கவலை அவள் முகத்தில் கருநிழல் போலப் படர்ந்திருந்தது. அவளது முடியிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தாலும் அவள் அதைக் கழுத்துக்கு மேல் ஒரு கொண்டையாக முடிச்சிட்டு வைத்திருந்தாள். அவளது உடைகளும் ஈரமாகத்தான் இருந்தன. மிகவும் இளமையாகவோ, மிகவும் முதிர்ச்சியாகவோ இல்லாமல் பார்க்க இனிமையாகத் தெரிந்தாள் அவள். பொதுவாக ஒரு பெண்ணுக்கு உரியதாகச் சொல்லப்படும் மென்மையான… நளினமான அழகு அவளிடம் இருந்ததாக சொல்லமுடியாது. மாறாக அவளது வலிமையையும் துணிச்சலையும் அவளிடமிருந்த ஏதோ ஒன்று எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது. முன்னால் தெரிகிற சாலையைக் கூடப் பார்க்காமல் ஏதோ ஓர் ஓரத்தில் ஒண்டிக்கொண்டு அன்று அவள் பயணம் செய்து கொண்டிருந்தது, தனக்குள் ஏதோ ஒரு கதையை ஒளித்து வைத்திருந்தது. அந்தக் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் ஆசைப்பட்டாலும் நானாகப் போய் அதை எப்படிக் கேட்பது ?
ஜீப் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தது. எல்லோரும் கீழே இறங்கினார்கள். ஜீப் டிரைவர், எல்லோரிடமிருந்தும் கட்டண வசூல் செய்ய ஆரம்பித்திருந்தார். நான் திரும்பிப் பார்த்தேன்; அவள் இன்னும் கூட உள்ளேதான் உட்கார்ந்திருந்தாள்.
வீட்டுக் கதவை நான் திறக்கும் போது ‘இபெம்மா!’ (தங்கச்சி) என்று என்னை அழைத்தாள் அவள். நான் நின்றபடி திரும்பிப் பார்த்தேன். ஜீப்பிலிருந்து இறங்கிவந்த அவள்,
‘‘இது உன் வீடா?’’
என்று கேட்டாள்.
‘‘ஆமாம்’’
‘‘சரி, வா, உள்ளே போகலாம்’’
அவள் என்னையும் முந்திக் கொண்டு திறந்த கதவின் வழி உள்ளே சென்றாள். நான் குழப்பம் அடைந்தேன். என்ன நடக்கிறது இங்கே?
‘‘உன்னோடு கூடப் பிறந்தவர்கள் எத்தனைபேர்?’’ என்று நாங்கள் சேர்ந்து நடந்து போகும்போது கேட்டாள் அவள்.
‘‘நான் ஒரே ஒரு குழந்தைதான்’’
‘‘உன் தந்தை என்ன செய்கிறார்’’
‘‘அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார்.’’
‘‘இன்னிக்கு ‘இச்சே’ (அக்கா) கொஞ்ச நேரம் உன் வீட்டிலே இருக்கப் போறேன்’’
எனக்குத் தங்கை ஸ்தானத்தைக் கொடுத்து விட்டுத் தமக்கை என்ற இடத்தைத் தான் எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. இன்னதென்று அறியாத ஒரு பயம் என் நெஞ்சுக்குள் ஊர்ந்தது.
‘அவள் யார்’ என்று எனக்குள் மறுபடியும் கேட்டுக் கொண்டேன்.
நேராக என் அறையை நோக்கிச் சென்றேன். அவளும் என்னை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தாள். கல்லூரிக்குக் கொண்டுபோன பையை மேஜை மீது வைத்தேன் அது என் வீடுதான் என்றாலும் கூட அடுத்து என்ன செய்வது என்பது தெரியாத குழப்பத்தில் இருந்தேன் நான். அதை உணர்ந்து கொண்ட அவள்,
‘‘உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாத்தான் இருக்கும். எல்லாத்தையும் உன்கிட்டே சொல்லிடறேன் இப்ப’’ என்றபடி தன் கதையை என்னிடம் சுருக்கமாக சொல்லி முடித்தாள். அவள் பேசியதைக் கேட்டதும் ஆரம்பத்தில் என்னுள் இருந்த வியப்பு விலகி விட்டாலும், இன்னும் கூடக் குழப்பத்துடனேயே இருந்தேன் நான்.
‘‘வீட்டிலே ஃபோன் இருக்கா’’
‘‘இருக்கு’’
‘‘எங்கே இருக்கு? நான் ஒரு ‘கால்’ பண்ணிக்கிறேன்’’
‘‘அடுத்த ரூமிலே இருக்கு. போய்ப் பண்ணிக்கங்க ‘இச்சே’. வீட்டிலே வேற யாரும் இல்லை’’
அவள் பக்கத்து அறையில் இருந்தபோது, வெளியே சென்றிருந்த அம்மா திரும்பி வந்தாள்.
‘‘வீட்டுக்கு வந்திட்டியா ‘இபெம்மா’
‘‘ஆமாம் ‘இமா’ (அம்மா)’’
‘‘அப்ப டிரெஸ் மாத்திட்டு சாப்பிட வேண்டியதுதானே ? ஏன் இப்படி மரம் மாதிரி நிலைகுத்திப் போய் நிக்கிறே ?’’
‘இமா’ வழக்கம் போல் – கொஞ்சம் கூட நிறுத்தாமல் என்னைத் திட்டிக் கொண்டே போனாள். என் உதட்டின் மீது ஆள் காட்டி விரலை வைத்து அவளை அமைதியாக இருக்கச் சொல்லி சைகை செய்தேன். அதைப் பார்த்ததும் தன் பேச்சை இடையிலேயே நிறுத்தி விட்டு என்னைக் கலவரத்தோடு பார்த்தாள் அவள். பக்கத்து அறையில் நடக்கும் தொலைபேசி உரையாடலும் அவள் காதில் இப்போது சட்டென்று விழுந்திருக்கவேண்டும். உள்ளே வேகமாகப் பார்த்து விட்டு என் பக்கம் திரும்பி, சத்தம் வரும் திசையில் தலையை அசைத்தபடி ‘‘யார்?’’ என்று கேட்டாள்.
‘‘ஏதோ போராட்டக் குழுவைச் சேர்ந்தவங்களா இருக்கணும்னு தோணுது’’
என்று கிசுகிசுப்பான குரலில் பதிலளித்தேன்.
‘‘என்னது? அவ எப்படி இங்கே…?’’
நான் அவள் கதையை அம்மாவிடம் சுருக்கமாகச் சொன்னேன்.
‘‘அவளுக்கு மலேரியா வியாதி வந்திட்டதாலே சிகிச்சை செஞ்சுக்கிறதுக்காக முகாமை விட்டு வெளியே வந்திருக்கா. பக்கத்திலே இருந்த ஒரு வீட்டிலே அடைக்கலம் தேடிக்கிட்டப்ப அவங்கள்ளே மூணு நாலு பேரை சுத்தி வளைச்சிட்டாங்க. வீட்டோட ஒரு மூலையிலே இருந்த குளத்திலே அவ அப்ப குளிச்சிக்கிட்டிருந்ததாலே அதிருஷ்டவசமா தப்பிச்சிட்டா. நடந்த கலாட்டா சத்தத்தைக் கேட்டு சுத்திமுத்திப் பார்க்கறப்ப வீட்டை போலீஸ் வளைச்சிருந்தாங்க’’
‘‘ஆமாம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது. அதுவாதான் இருக்கணும். ஆனா, அவ இங்கே எப்படி வந்தா ?’’
‘‘பக்கத்து வீடுகளுக்குள்ளெல்லாம் புகுந்து நுழைஞ்சு ரோடு வரைக்கும் தப்பிச்சு வந்திட்டா. அப்புறம் நான் வந்த ஜீப்பிலே ஏறியிருக்கா… அப்படித்தான் இங்கே வந்து சேர்ந்தா’’
அந்த நேரத்தில் அந்தப் பெண் அறையை விட்டு வெளியே வந்து அவர்களது பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.
‘‘இமா!’ நீங்கதான் ‘இபெம்மா’ வோட அம்மாவா?’’
‘‘ஆமாம்’’
‘‘நான் ரொம்ப நேரம் இங்கே இருக்கமாட்டேன். சந்தடியெல்லாம் கொஞ்சம் அடங்கிப்போனப்புறம் என்னைக் கூட்டிக்கிட்டுப் போக அவங்க ஆளனுப்பி வச்சிடுவாங்க. ஒரு மூணு நாலு மணிநேரம் நான் உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கும். நீங்க அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.’’
‘‘நாங்க ஏன் அப்படி எடுத்துக்கப்போறோம் ?’’
‘இமா’ அதைப் பெரிதுபடுத்தவில்லை என்றாலும் கூட மிகுந்த கவலையுடனும், பீதியுடனும் அவள் இருப்பதை ‘இச்சே’ அனுமானித்துக் கொண்டாள்.
‘‘ ‘இமா’ தயவு செய்து எதுக்கும் பயப்படாதீங்க. இந்த வீட்டிலே இருக்கிறவங்களை சம்பந்தப்படுத்தற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்’’
இன்னும் கூட ஈரம்படிந்த ஆடைகளுடனேயே அவள் இருப்பது எனக்கு வருத்தமாக இருந்தது, ஒரு மேலாடையும், ‘ஃபேனக்’ * [பாரம்பரிய மணிப்புரி ஆடை- பாவாடை போல உடலில் சுற்றிக்கொள்வது] கும் தந்து அவளை மாற்றிக் கொள்ளச் சொன்னேன். என்ன செய்வதென்றோ என்ன பேசுவதென்றோ தெரியாமல் ஸ்தம்பித்துப் போயிருந்தேன் நான். அவள் இங்கே இருப்பது எனக்கு பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. அவள் அவ்வப்போது ஜன்னல் வழியே வெளிப்பக்கம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்பட்டு அலட்டிக் கொள்வதைப் போல் தோன்றவில்லை.
நான் அங்கிருந்து வெளியேற வழிதேடிக் கொண்டிருந்தேன்.
‘‘ ‘இச்சே… நீங்க வசதியா உட்கார்ந்திருங்க’’ என்று சொன்னபடி அறையை விட்டு வெளியேற முயன்றேன்.’’
‘‘உனக்கு எதுவும் வேலை இருக்கா?’’
‘‘இல்லையே? அப்படி ஒண்ணும் இல்லை’’
‘‘அப்படீன்னா கொஞ்ச நேரம் என்னோட இங்கே உட்காரு’’
அவளுடைய இயல்பு காரணமா…. அல்லது அப்படிப்பேசுவதற்கு அவள் பழகிப் போயிருந்தாளா… என்று தெரியவில்லை. ஆனால் கண நேரம் அவளுடைய வார்த்தைகள் என்னை மந்திரம் போல் கட்டிப் போட்டுவிட்டன. என்னுடைய அசௌகரியம், இருப்புக்கொள்ளாத பதட்டம் என்று எல்லாமே சட்டென்று மறைந்து போய்விட்டது. இலகுவான மனநிலைக்கு வந்திருந்த நான்
‘‘இச்சே… உங்க வீடு எங்கே இருக்கு?’’ என்று கேட்டேன்.
அவள் அதற்கு உடனே பதிலளிக்கவில்லை மாறாக என்னை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘நான் யாருன்னு உனக்குத் தெரியணும் அப்படித்தானே?’’
நான் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘‘நான் சுதந்திரத்துக்காகப் போராடற ஒரு போராளி’’
‘‘இச்சே…. உங்களாலே ஜெயிச்சிட முடியும்னு நினைக்கிறீங்களா?’’
‘‘யுத்தகளத்திலே இருந்து புறங்காட்டி ஓடிப் போறவங்களுக்குத்தான் தோல்வியெல்லாம். எதுக்கும் பணிய மாட்டேன்னு மறுத்து சாவைத் தழுவறவங்கதான் வெற்றி பெற்ற போராளிகள்’’
பேசும்போது அவள் கண்கள் இரத்தம் போலச் சிவந்திருந்தன. மூச்சு வேகமாக இரைத்தது. தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளப் போராடியபடி
‘‘அதனாலே நான்….’’ என்று தொடர்ந்தாள் அவள்.
அவள் பேச்சை முடிப்பதற்குள் வெளியே ‘ஹாரன்’ ஒலி கேட்டது. உடனே எழுந்து நின்று ஜன்னல் வழியே பார்த்தாள்.
‘‘என்னைத் தேடி அவர்கள் வந்துவிட்டார்கள். நான் இப்போது போயாக வேண்டும். உங்களுக்கு நான் மிகுந்த சிரமம் கொடுத்துவிட்டேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.’’
~oOo~
மறுநாள் காலை சூரிய வழிபாட்டுக்காக நான் வெளியே வந்தபோது அன்றைய செய்தித்தாள் வராந்தாவில் கிடந்தது. அதைக் கடந்துபோக என்னால் முடியவில்லை. வேகவேகமாக அதன் முதல் பக்கத்தில் கண்களை ஓட்டினேன்.
‘புரட்சி இயக்கத்தின் பெண் தலைவியான பேச்சா லிக்லாய் சானு, சி ஆர் பி எப் நடத்திய நேரடி மோதலில் கொல்லப்பட்டார்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி இருந்தது. அதனுடன் கூடவே மிகப் பெரிய ஒரு புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.
‘ஐயோ… இவ்வளவு சீக்கிரமாகவா…? எத்தனை அழகு… எவ்வளவு வலிமை… எவ்வளவு துணிச்சல்? எப்படிப்பட்ட ஒரு இழப்பு?’’
8.12.23
அமெரிக்கன் கல்லூரியில்...
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை உயராய்வு மையத்தில்
மொழியாக்க இலக்கியம்-சிக்கல்களும்,சவால்களும்
என்ற தலைப்பில் முதுகலை தமிழ் மற்றும் ஆய்வு மாணவர்களிடையே உரையாற்றியது ஓர் இனிய அனுபவம்.
9.10.23
என் குழந்தைகளின் புகைப்படங்கள்-மொழிபெயர்ப்புச் சிறுகதை
8 அக்டோபர். 2023 தேதியிட்ட சொல்வனம் இணைய [304 ஆம் ] இதழில் வெளிவந்திருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை.
என் குழந்தைகளின் புகைப்படங்கள்
மணிப்புரி மூலம் : சத்யவதி நிங்கோம்பாம்
ஆங்கிலத்தில்: சபம் ஸ்வீட்டீ
ஆங்கில வழி : தமிழாக்கம்; எம் ஏ சுசீலா
“அம்மா! நான் பெரியவனா வளர்ந்தப்புறம் ஏரோப்பிளேன்லே பறந்து போவேன்தானே?’’
‘‘கட்டாயம் போவே குழந்தை’’
‘‘நான் பெரிய ஆளா ஆனப்புறம் நியூஸ் பேப்பரிலே என்னோட ஃபோட்டோ வரும் இல்லையாம்மா?’’
‘‘நிச்சயமா வரும் மகனே’’
‘‘அக்கா பெரியவளா வளர்ந்த பிறகு என்னவா ஆவா?’’
‘‘உன்னோட அக்கா ஒரு பொண்ணு. அவளுக்குக் கல்யாணம் ஆகும். அவங்க, வேறே ஒரு வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.’’
‘‘சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. அவளை அவங்க அப்படிக் கூட்டிக்கிட்டுப்போக எல்லாம் நான் விட மாட்டேன். அக்காவை என்னோட கூடவே பிளேனிலே உட்கார வச்சுக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்து போயிடுவேன். அவ அங்கேயே இருக்கட்டும். அப்படின்னா அவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியிருக்காதுதானே? “
‘‘கிறுக்குப்பையா? அக்காவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?’’
‘‘ஆமாம்!’’
‘‘எவ்வளவு பிடிக்கும்?’’
‘‘இதோ இ…வ்..வ..ள…வு’’ என்று தன் சின்னஞ்சிறு கைகளை முதுகு வரை விரித்து சைகை காட்டினான் அவன்.
‘‘அம்மா அப்பா, அக்கா- எங்க மூணுபேரிலே உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’’
‘‘உங்க மூணு பேரையுமே எனக்குப் பிடிக்கும்தான்’’
‘‘அட…. இந்தக் காலத்துக் குழந்தைகளைப் பாரு! இத்தனூண்டா இருந்துகிட்டு அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைகள்தான் எப்படி இருக்கு?’’
மோமோச்சா, முடிவே இல்லாத கேள்விகள் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருப்பான். அவை அவனது பெற்றோருக்கு மிகவும் பிடிக்கும்; அவர்களைக் களிப்பூட்டும்.
‘திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். ஆணையும் பெண்ணையும் அதில் வலுவாகக் கட்டிப்போட்டிருப்பது தங்களது குழந்தை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்புதான். உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறை இது’ என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
இன்று, இம்பாலில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஓவியப்போட்டியில் அவர்களது பெண் பங்கெடுத்துக் கொள்ள இருக்கிறாள். தன் பள்ளி சார்பாக அவள் இதில் கலந்துகொள்கிறாள் . மோமோச்சாவும் கூடப் போகிறான்.
மதிய உணவை சீக்கிரமே முடித்து விட்டு அம்மா அவர்களுக்கு உடையணிவித்துவிடுகிறாள். தங்கள் வீட்டில் வைத்து வழிபடும் ‘சனமஹி’* (* ‘மைதேயி’ பழங்குடி மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் கடவுள் ‘சனமஹி’) என்ற தெய்வ உருவத்தின் அருகில் அவர்களை அழைத்துச் செல்கிறாள். அதன் பிறகு முற்றத்திலுள்ள துளசிச் செடிக்குக் கீழே எல்லோரும் விழுந்து வணங்குகிறார்கள்.
‘‘ஓவியப் போட்டியிலே நல்லா வரைஞ்சுட்டு வா பொண்ணே’’
‘‘சரிம்மா’’
‘‘இன்னிக்கு க்வைராம்பாண்ட் மார்க்கெட்டுக்கு மோமோச்சோவைக் கூட்டிக் கிட்டுப் போகலாம் நாம’’
‘‘அவனுக்கு ஒரு நல்ல சட்டை வாங்கித் தாங்கப்பா’’
‘‘கட்டாயம் வாங்கித்தரேன், பின்னே என் பையனுக்கு நான் வாங்காமலா?’’
‘‘அக்காவுக்கும்தான்’’
‘‘நிச்சயம் வாங்கறேன்’’
‘‘அம்மாவுக்கும் கூட’’
‘‘சரி, சரி…’’
‘‘அம்மா… பைபை …’’
அவள் வீட்டுவாசலில் நின்றபடி குழந்தைகளின் சின்னக் கையசைப்பை எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு நேரம் பார்த்தபடி நிற்கிறாள். பிறகு தங்கள் அப்பாவை முந்திக் கொண்டு வேகமாக நடை போட்டுப் போய் விடுகிறார்கள் அவர்கள்.
***********************
மாலை மறைந்து இருள் படர ஆரம்பித்துவிட்டது. கணவனும், குழந்தைகளும் திரும்பி வருகிறார்களா என்று பார்ப்பதற்காக வாசற் கதவுப் பக்கம் வந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறாள் மோமோ-மா. வழியைப் பார்த்துப் பார்த்து அவள் கண்கள் பூத்துப் போய் விடுகின்றன.
‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள். எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
தெருவில் வருகிறவர்கள் போகிறவர்கள், அவளுக்கு அறிமுகமானவர்கள் எல்லோரும்
‘‘மோமோ-மா இங்கே என்ன செய்யறே’’ என்று பரிவோடு கேட்கிறார்கள்.
‘‘யாருக்காகக் காத்திருக்கே இபெம்மா? “(தங்கச்சி) என்று விசாரிக்கிறார்கள்.
தான் நெய்த துணிகளை மார்க்கெட்டில் இருக்கும் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காகச் சென்றிருந்த ஒரு நெசவாளிப் பெண், நூல்கண்டுகள் அடங்கிய தன் பெட்டியை இறுகப்பிடித்துக் கொண்டு , அந்த இருளில் தெருவுக்குள் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்கிறாள். அவள் மிரண்டு போயிருக்கிறாள் என்பது, எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.
‘‘இபெம்மா! க்வைராம்பாண்டிலே இன்னிக்குத் துப்பாக்கிச் சூடு நடக்குது. காயப்படாம, செத்துப்போகாம தப்பிச்சது என்னோட நல்லநேரம். பஸ் எதுவுமே வரலை. ஏதோ அதிர்ஷ்டம் இருந்திருக்கு, எப்படியோ சாமி புண்ணியத்திலே தப்பிச்சு வந்திட்டேன். இது ரொம்ப மோசமான நேரம்… போர் நடக்கற நேரம்* (இனக்குழுக்களுக்குள் அடிக்கடி நிகழும் கலவரங்களே போர்ச்சூழலாக இங்கு சித்தரிக்கப்படுகின்றன). கூட்ட நெரிசலான ஒரு மார்க்கெட்டுக்குள்ளே குண்டு வெடிச்சா ஜனங்க கட்டாயம் செத்துத்தான் போவாங்க. வீட்டிலே இருக்கிற எல்லாருக்கும் கவலைதான்’’ என்று போகிற போக்கில் வேகமாகச் சொல்லிக் கொண்டே கடந்துபோகிறாள் அவள்.
மோமோ-மா அதிர்ச்சியால் திக்பிரமை பிடித்தவளாய் வாயடைத்துப்போய் நிற்கிறாள்.அக்கம்பக்கத்திலுள்ளவர்களும், உறவுக்காரர்களும் அவளைத் தேற்றவும் அவள் பயத்தைக் கொஞ்சம் குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.
‘‘வண்டி எதுவும் ஓடாததாலே அப்பாவும், குழந்தைகளும் எங்கேயாவது மாட்டிக்கிட்டிருப்பாங்க.’’
‘‘இதோ பாரும்மா, ராத்திரிக்கு முன்னாடி அவங்க இங்கே வந்து சேர்ந்துடுவாங்க. நீ வேணும்னா பாரு! இம்பால் ஒண்ணும் அவ்வளவு தூரம் இல்லையே?’’
மோமோ-மாவை அண்டை வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குள் கொண்டு போய் விடுகிறார்கள்.
*****************************
காலை விடிந்துவிட்டது. செய்தித்தாள்கள் மட்டும் எப்படி இவ்வளவு சரியாக வந்து சேர்ந்துவிடுகின்றன?
‘‘இறந்தவர்கள்….இறந்தவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்,’’ என்று அந்தச் செய்திகளையே செய்தித்தாள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன.
எல்லோரும் மோமா-மா எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். குறிப்பிட்ட அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் அலசித் தேடினார்கள். சிலர் குளங்களுக்குள் குதித்துப் பார்த்தார்கள் . நெற்குதிர்கள் மீது ஏறியும் பார்த்தார்கள். காலியாய்க் கிடந்த வயல் வெளிகளில், அடர்ந்த காட்டுப் புதர்களிலெல்லாம் அவளைத் தேடிப் பார்த்தார்கள்.
கடைசியில் மூன்று நான்கு ஆண்கள் ஒன்று சேர்ந்து மோமோ-மாவைக் கைத் தாங்கலாய்ப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள். தலை வாராமல், முடிச்சு தளர்ந்திருக்க அவளது அடர்ந்த கூந்தல் , முதுகுப்புறம் அவிழ்ந்து கிடந்தது. மேலாடை தளர்ந்திருந்தது. இறுகப் பிணைத்து வைத்திருந்த அவளது கரங்களை அவர்களால் பிரிக்க முடியவில்லை.
‘‘மார்க்கெட்டிலிருந்து வந்தவங்ககிட்டே இருந்து செய்தித்தாள்களைப் பிடுங்கிக்கிட்டா அவ’’ என்று யாரோ சொன்னார்கள்.
‘‘ஒருவேளை பைத்தியம் பிடிச்சுத் தெருவிலே அலையப்போறாளோ அவ?”
‘‘ஹி ஹி ஹி!!’’ என்று வெறிபிடித்தாற் போலச் சிரித்தாள் அவள். கசங்கிப்போன அந்த செய்தித்தாளை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். பிறகு அதைத் தன் உதட்டருகே கொண்டுவந்து முத்தமிட்டபடி
‘‘ஆஹா.. இன்னிக்கு என் குழந்தைங்களோட படம் பேப்பர்களிலே வந்தாச்சு’’ என்று சந்தோஷமாகக் கூச்சலிட்டாள்.
&**********************&
1992இல் மணிப்புரி மொழியில் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட (Ichagi Photo) இந்தச் சிறுகதையின் ஆசிரியர் சத்யவதி நிங்கோம்பாம்.
(Source CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR
EDITOR , THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)
6.10.23
“அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்” ...-நாவல் வெளியீடு
இன்று ,
‘’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்”
25.9.23
தினமலர் நேர்காணல்
24.09.2023 தினமலர் ஞாயிறு சிறப்புப்பகுதியில் என் நேர்காணல்
இது மொழியாக்கத்தின் பொற்காலம்: எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா .
https://m.dinamalar.com/detail.php?id=3439620
11.9.23
ஒலி வடிவில் என் சிறுகதைகள் சில
நிழல் சொரியும் இனிய மரத்தடிகள் கதை சொல்லவும் கேட்கவும் உகந்த இடமாக நம் மரபில் காலம் காலமாக விளங்கி வருகின்றன. இன்றைய நவீன தொழில் நுட்ப யுகத்துக்கேற்ப
Under The Tree
என்பதையே தலைப்பாக்கி அரிய பல தமிழ்ச்சிறுகதைகளையும் ஆன்மீக புராணக்கதைகளையும் அரிய பல தகவல்களையும் பல சமூக ஊடகங்கள் வழியே [வாட்ஸ்அப், பாட்காஸ்ட் போன்ற டிஜிட்டல் தளங்களில் ] வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்து வருபவர் திருமதி ரம்யா வாசுதேவன். ஏதோ சில காரணங்களால் அச்சு ஊடகத்தில் வாசிக்க முடியாதவர்களுக்கும், வாசிக்கும்போதே சிலவற்றைத் தவற விட்டவர்களுக்கும் அவர் செய்யும் இந்த அரும் பணி மிகவும் பயனளித்து வருகிறது.
’’கற்றலில் கேட்டலே நன்று..’’என்பது பழமொழி நானூறில் இடம் பெறும் வாசகம். ’’கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதே சொல்’’ என்று குறள் கூறுவதைப் போல ரம்யா சொல்லும் கதைகள், இது வரை கேளாதோரைக் கேட்கத் தூண்டுபவை மட்டுமல்ல, அந்தக் கதைகளை இதுவரை வாசிக்காமல் இருப்பவர்களை வாசிக்கவும் தூண்டி விடுகிறது அவரது குரல். அதில் ததும்பும் உணர்ச்சி பாவங்களும் தகுந்தபடி அமையும் ஏற்ற இறக்கங்களும்...கதைகளை வெறுமே வாசித்து விட்டுப்போகாமல் அவற்றில் ஒன்றிக்கலந்து குறிப்பிட்ட படைப்பின் சுருக்கத்தை..அதன் சாரத்தைத் தன் மொழியில் தன் நடையில் சுவாரசியமாகச் சொல்வதும் அவரது தனித்துவம்.
ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதைசொல்லி ரம்யா வாசுதேவன்!
திருமதி ரம்யா வாசுதேவனின் குரலில் பதிவாகி வெளிவந்திருக்கும் என் சிறுகதைகளும் அவற்றுக்கான இணைப்புக்களும் கீழே;
https://open.spotify.com/episode/6hDZlJqMueFrxlvBtBmeR8