துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
புக்டே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புக்டே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.3.24

’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ நாவல் அறிமுக / விமரிசனம்

எனது அண்மை நாவலான   ’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ நாவல் குறித்துப் பேராசிரியர் திரு விஜயகுமார் அவர்கள் எழுதியுள்ள அறிமுக / விமரிசனக்கட்டுரை

நன்றி.

Bookday

 

https://bookday.in/anjuthingalil-munjuthal-pizhaithum-book-review-by-vijayakumar-p/


பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த்துறையில் முப்பதாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வூக்குப்பின் எழுத்துப் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஏராளமான கதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதிவருகிறார். ரஷ்ய எழுத்தாளர் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும், தண்டனையும்’, ’அசடன்’, ’வெண்இரவுகள்’, உள்ளிட்ட பதினோரு நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புத் திறனுக்காக கனடா இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கும் ஜி.யூ.போப் விருது ஆகியன பெற்றுள்ளார் .‘கண் திறந்திட வேண்டும்’ என்ற இவரின் சிறுகதை பாலு மகேந்திராவின் ‘கதைநேரம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘நான் படிக்கணும்’ என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. சமூகச் செயற்பாட்டாளரான சுசீலா ‘சிறந்த பெண்மணி’ விருது பெற்றுள்ளார். ’யாதுமாகி’ நாவல் ‘Devi the Boundless’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘கனலி’, ’சொல்வனம்’ போன்ற இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

‘யாதுமாகி’, ’தடயங்கள்’ நாவல்களைத் தொடர்ந்து தற்போது ‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ என்ற தனது மூன்றாவது நாவலைக் கொணர்ந்துள்ளார். குறு நாவலாக 130 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூல் குடும்ப உறவுகள் குறித்த ஆழ்ந்த விவாதத்தை மேற்கொள்கிறது. குடும்பம், பொதுவாழ்வு ஆகிய இரு தளங்களும் ஒன்றுக்கொன்று முரணானதா? இரண்டிலும் வெற்றிகரமாகப் பயணிக்க முடியாதா? பொதுவாழ்வில் தீவிரமாகப் பணியாற்றி சமூகம் மெச்சும் நபர்களாக ஆண்களால் வலம்வர முடிகின்ற போதிலும் பெண்களுக்கு அத்தகு வாழ்வு ஏன் சாத்தியப்படுவதில்லை? ஏதேனும் ஒரு துறையில் ஆர்வம், அர்ப்பணிப்பு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் குடும்பத்தையும் தக்கவைத்துக்கொண்டு ஆண்களால் செயல்பட முடிகிறது. ஆனால் ஒரு பெண்ணால் அவ்வாறு செயல்பட முடியாமல் போவது எதனால்? இத்தகு கேள்விகளை எழுப்பும் இந்நாவல் வாசகர்களை விடைகாணத் தூண்டுகிறது. நாவலாசிரியரிடமுள்ள பெண்ணியம் சார்ந்த கருத்துகள் இந்த நாவலில் சற்று வலுவாக வெளிப்படுவதைக் காண முடிகிறது.

ஒரு கவிதைக்கான ஒழுங்கு முறையுடன் மீரா, காயத்ரி எனும் இரண்டு பாகங்களாக இந்த நாவல் விரிந்து செல்கிறது. ஆக்டேவ்(Octave), செஸ்டே(Sestet) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்ட ’சானட்’ (sonnet) என்ற கவிதை வடிவம் ஆங்கில இலக்கியத்தில் உண்டு. ஆக்டேவ் எனும் எட்டு வரிகளைக் கொண்ட முதல் பகுதி பிரச்சனையைச் சொல்லிச் செல்லும். செஸ்டே என்ற ஆறு வரிகளைக் கொண்ட இரண்டாம் பகுதியில் அப்பிரச்சனைக்கான தீர்வைக் காணலாம். அதுபோல் இந்த நாவலில் ’மீரா’ எனும் முதல் பகுதி எழுப்புகின்ற கேள்விக்கான விடையை ‘காயத்ரி’ எனும் இரண்டாம் பகுதி வழங்குகிறது.

மகப்பேறு மருத்துவர் காயத்ரியை சிறந்த மருத்துவராக, மருத்துவ ஆய்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக நாவலின் முதல் பகுதியில் காண்கிறோம். மருத்துவத் தொழிலை பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பார்க்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாகச் செய்து வருகிறார். உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளால் பிள்ளைப் பேறின்றித் தவிக்கும் தம்பதியர்களுக்கு மருத்துவ வழியிலான தீர்வைக் கொண்டு பிள்ளைபெற உதவி வருகிறார். கருவியல்துறையில் (Embryology) தீவிர ஆய்வை மேற்கொள்கிறார்.

குழந்தைப் பேறின்றித் தவிக்கும் சுமதி-ஈஸ்வரன் தம்பதியினர் டாக்டர் காயத்ரியின் உதவியை நாடி வருகின்றனர். In vitro Fertilization எனும் முறையில் (கருவை வெளியில் சோதனைக் குழாயில் உருவாக்கி பின்னர் அதை தாயின் கருப்பையில் வைத்து பத்து மாதங்கள் கழித்துப் பிள்ளை பெறுகின்ற முறை) குழந்தையைப் பெற்றெடுக்கும் வழிமுறையை தம்பதிகளுக்கு காயத்ரி முன்மொழிகிறார். பல ஆண்டுகளாகப் பிள்ளைப் பேறின்றித் தவித்து வரும் அந்த தம்பதிகள் அதற்குச் சம்மதிக்கின்றனர். டாக்டர் காயத்ரிக்கு அந்த முறையைக் கையாள்வது முதல் அனுபவமாக இருக்கிறது. அதனால் மிகுந்த மெனக்கெடலுடன் கண்ணும் கருத்துமாக இருந்து அவர் அந்த முயற்சியில் வெற்றியடைகிறார். சோதனைக்குட்பட்ட சுமதியின் பொறுமை, அவளுடைய பெற்றோரின் நம்பிக்கை ஆகியவையே வெற்றிக்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன. தங்களுடைய நீண்டநாள் குறைக்குத் தீர்வு தந்த டாக்டர் காயத்ரியின் பெயரைத் தங்கள் மகளுக்கு சூட்டி மகிழும் பெற்றோர் அவளை மீரா எனச் செல்லமாக அழைக்கின்றனர்.


C:\Users\Chandraguru\Desktop\What-are-the-steps-involved-in-IVF-treatment-1024x659.jpg

மீரா என்ற காயத்ரி படித்து மருத்துவராகிறார். மருத்துவர் காயத்ரியின் பெருமைகள் பற்றி அறிந்திருந்த மீரா அவரைச் சந்திக்க விரும்புகிறார். மீரா பிறந்த அந்த மருத்துவமனை இப்போது பாழடைந்து கிடக்கிறது. டாக்டர் காயத்ரியின் இருப்பிடம் அறிய முடியாது கலங்குகிறார் மீரா. பயன்பாடின்றிக் கிடக்கும் அந்த மருத்துவமனையை விலைக்கு வாங்கி, புதுப்பித்து அவ்விடத்தில் காயத்ரியைப் போன்று தன்னலமற்ற மருத்துவராகத் தான் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார். அந்த மனையை வாங்க வேண்டும் என்று அவர் நினைத்த அதே வேளையில், அந்த மனையை விற்பதற்காக அமெரிக்காவிலிருந்து வருகிறார் மருத்துவர் காயத்ரியின் பேத்தி தாரா. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். மருத்துவமனையை மீரா வாங்கிக் கொள்வதும், தாரா விற்பதும் சிரமங்கள் ஏதுமின்றி எளிதாக முடிகிறது. அடுத்ததாக தன் பாட்டி காயத்ரியைப் பார்க்கப் புறப்படும் தாராவுடன் மீராவும் சேர்ந்து கொள்கிறார். தான் போற்றி வரும் மருத்துவர் காயத்ரியைச் சந்திக்கும் வாய்ப்பு தாராவின் மூலம் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார் இளம் மருத்துவரான மீரா என்ற காயத்ரி.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தன்னைக் காணவரும் தாரா மருத்துவர் மீராவையும் உடன் அழைத்து வருவது அந்தப் பாட்டியை ஆச்சரியத்தில், மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அங்கிருந்து துவங்குகிறது நாவலின் ‘காயத்ரி’ எனும் இரண்டாம் பாகம்.

In Vitro Fertilization (IVF) முறையைக் கடைப்பிடித்து தான் அடைந்த வெற்றியின் சாட்சியாக தனக்கு முன்னால் நிற்கும் மீராவைப் பார்த்துப் பரவசம் அடைகிறார் மருத்துவர் காயத்ரி. மீராவின் பெற்றோர் இறந்து போன செய்தி கேட்டு அவர் வருத்தம் கொள்கிறார். அன்று தான் பெற்ற வெற்றிக்கு மீராவின் தாய் சுமதியும், தந்தை ஈஸ்வரனுமே காரணம் என்று சொல்லி தனது மன நிறைவை மீராவிடம் வெளிப்படுத்துகிறார்.

மீரா அங்கிருந்து விடைபெற்றுச் சென்றதும், பாட்டிக்கும், பேத்திக்குமிடையே சுவையான உரையாடல் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் தன் பாட்டியுடன் தங்கும் சுட்டிப் பெண் தாரா பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விடை காண்கிறார். ஒரு திரில்லரைப்போல நாவல் சுவாரசியமாகச் செல்லத் துவங்குகிறது.

தன்னுடைய பழைய மருத்துவமனையை பாழடைய விட்டுவிட்டு குற்றாலம் அருகில் ’பண்பொழிவு’ எனும் இயற்கை அழகு கொழிக்குமிடத்தில் ’இலவச மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மனை’யை மருத்துவர் காயத்ரி கட்டிவந்திருப்பதன் புதிரென்ன என்று புலன்விசாரணை நடத்துகிறார் பத்திரிகையாளரும், பேத்தியுமான தாரா. நாவலின் முதல் பகுதியில் நடந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை இரண்டாம் பகுதியில் வெளிக்கொணர்கிறார் பேத்தி தாரா.

டாக்டர் காயத்ரியின் குடும்ப வாழ்வில் நிகழும் சோகங்கள் படிப்பவர் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. மருத்துவத் தொழிலை மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கிய காயத்ரிக்கு தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏதும் இருந்திடவில்லை. மருத்துவம் பார்ப்பது, மருத்துவத் துறையில் ஆய்வு செய்வது என்று அவரது வாழ்வு தங்குதடையில்லாமலே சென்றது. மருத்துவ தொழில் மீது காயத்ரிக்கு இருந்த அதீத ஆர்வத்தை மருத்துவரான அவரது கணவர் தினகரனாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மனைவியின் அறிவியல் ஆராய்ச்சியை மெச்சிப் புகழ்ந்து ஆதரவளிக்க அவர் ஒன்றும் பியர் கியூரி இல்லையே!. அவர் ஒரு சாதாரண மருத்துவராக மட்டுமே நடந்துகொள்கிறார். அவர்கள் இருவருக்கும் பொதுவான சிநேகிதி சுபா தலையிட்டும் அந்த தம்பதிகளை ஒன்று சேர்த்து வைக்க முடியவில்லை.

தன்னுடைய கனவுகளுக்கு எதிராக இருக்கும் கணவரைவிட்டுப் பிரிகிறார் காயத்ரி. குழந்தை வித்யாவுடன் தனது பெற்றோர்களிடம் அடைக்கலமாகிறார். தன்னுடைய பெற்றோர்கள் வித்யாவைக் கவனித்துக்கொண்ட காரணத்தால் மீண்டும் மருத்துவமனையிலேயே பொழுதும் உழைக்கிறார். அன்பு மகள் வித்யாவிடம் பாசத்தைப் பொழிகிறார். ஆனால் மகள் வித்யாவும் தந்தையைப்போலவே தன் தாயின் கனவுகளைப் புரிந்துகொள்ளவில்லை. அம்மா- மகள் உறவில் விரிசல் ஏற்படுகிறது. அம்மாவால் எந்நேரமும் தன்னுடன் இருக்க முடியவில்லை என்பது குறித்து கோபம் கொள்ளும் வித்யா அம்மா மீது வெறுப்படையத் தொடங்குகிறாள். மகளுக்கும், பேத்திக்கும் இடையிலான விரிசலைச் சரி செய்ய காயத்ரியின் பெற்றோர் எவ்வளவோ முயற்சி செய்தும் உடைந்த மனங்கள் ஒன்று சேர முடியாமலே போகிறது.

”பள்ளிப்படிப்பின் இறுதியில் நிறைய மார்க்குகள் வாங்கி மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றிருந்தபோதிலும் மருத்துவம் படிக்கமாட்டேன் என்று வித்யா உறுதியாகச் சொல்லிவிட்டாள். பெங்களூர் கல்லூரியில் சேர்ந்து கெமிஸ்டிரி படித்தாள். எம்.எஸ்சி முடித்ததும் உன் அம்மா வித்யா திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாள்” என்று பழைய கதையைச் சொல்லிமுடித்த காயத்ரியை ”இதெல்லாம் பத்தாது பாட்டி! கிளினிக்கை மூடியதற்கான சரியான காரணம் இன்னும் உங்களிடமிருந்து வெளிவரவில்லை பாட்டி! அந்த வைட்டல் பாயிண்ட் இன்னும் மிஸ்ஸிங் பாட்டி!”, என்று மடக்குகிறாள் பேத்தி தாரா. கைதேர்ந்த பத்திரிகையாளர் தாராவை வெல்ல முடியாமல் தவித்த பாட்டி மேலும் தொடர்கிறார்.

”ஒரு சமயம் கோபத்தின் உச்சத்தில் உன் அம்மா என்னிடம் ‘ஊரெல்லாம் உங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் பணத்தைப் பறிக்கும் டாக்டர் என்றுதானே பேசுகிறது’ என்று கூறியதும் என் பெற்றோரும், நானும் திகைத்துப் போனோம். என்னுடைய மகளே எனது மருத்துவப் பணி மீது சந்தேகம் கொண்டிருக்கிறாள் என்றதும் நான் நிலைகுலைந்து போனேன். தவமாக நினைத்து நான் ஆற்றி வந்த பணியை எனது மகளே ’பிசினஸ்’ எனக் கொச்சைப்படுத்திய கணத்தில்தான் மருத்துவமனையை மூடிவிட்டு இங்கே வந்து சேவையைத் தொடங்குவது என முடிவெடுத்தேன்’ என்று பேத்திக்கு விளக்கம் கூறுகிறார் காயத்ரி பாட்டி.

”ஓவ்வொரு சிருஷ்டியும் ஏதோ ஒரு நோக்கத்துக்காகத்தான் இந்த மண்ணுக்கு வந்து சேருகிறது. அதைச் சரியா அடையாளம் கண்டுக்காம திசைமாறித் தடுமாறிப்போய் இந்தப் பிறவியை வீணடிப்பவர்களே உலகில் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் நீ சரியாகக் கண்டுபிடிச்சிருக்க, உன் பிறவி நோக்கத்திற்கு உண்மையாகவும் இருந்திருக்க. இது லட்சத்தில் ஒரு சிலருக்குத்தான் சாத்தியம்” என்ற என் அம்மாவின் வார்த்தைகளே மனமுடைந்து போயிருந்த எனக்கு ஆறுதலைக் கொடுத்தன என்று பேத்தியிடம் சொல்லி முடிக்கிறார் காயத்ரி.

“உங்க அம்மா சொன்னது கரெக்ட்தான் பாட்டிம்மா. அதைப் புரிஞ்சுக்காமபோன எங்கம்மா சார்பிலே என்னோட ‘அப்பாலஜீஸ்’ என்று சொல்லி பாட்டியைக் கட்டிப்பிடிக்கிறாள் தாரா என்று நாவல் முடிகிறது.

’அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்….’ என்ற நாவலின் தலைப்பு மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் நான்காம் பகுதியான ‘போற்றித் திருஅகவலில்’ இடம் பெற்றுள்ளது. கருவுற்ற நாளிலிருந்து தொடங்கி குழந்தை பிறக்கும்வரை ஒவ்வொரு மாதமும் தாயின் கருப்பைக்குள் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அந்தக் கரு நிகழ்த்துகின்ற போராட்டத்தை வரிசையாக முறைப்படுத்தி பதினாறு வரிகளில் முன்வைத்திருக்கிறார் மாணிக்கவாசகர். அது மானுடப் பிறப்பு எத்தனை அரிதாக வாய்க்கக் கூடியது என்பதைக் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பாடலின் இப்பகுதி முழுவதுமே நவீன மருத்துவம் சொல்லும் கருவியல்(Embryolgy) சார்ந்த அறிவியல் கருத்துகளை ஒட்டி அமைந்திருப்பது வியப்பளிக்கிறது. ‘அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும்’ எனும் வரி ஐந்தாம் மாதத்தில் தாய்க்கு ஏற்படும் உணவு ஒவ்வாமையால் (மசக்கை) மெலிவுற்ற கரு மீண்டு வருவதைக் குறிக்கிறது. அந்தப் பாடலின் பதினாறு வரிகளையும் நாவலின் கதாநாயகியான மருத்துவர் காயத்ரி தன்னுடைய மகப்பேறு மருத்துவமனையில் எழுதிவைத்திருப்பது சாலப் பொருத்தமுடையதாகவே இருக்கிறது.

எம்.ஏ.சுசீலாவின் இந்நாவலை மகப்பேறு மருத்துவர் ஆண்டாள் பாஸ்கரின் அணிந்துரையுடன் Her Stories பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘மருத்துவராக இல்லாவிட்டாலும் மருத்துவத்துறையின் மீதிருந்த அளவுகடந்த ஆர்வத்தால் மகப்பேறு சார்ந்த இந்நூலைத் துல்லியமான விவரங்களோடு சுசீலா எழுதியுள்ளார்’ என்று பாராட்டுகிறார் டாக்டர் ஆண்டாள் பாஸ்கர். நாவலைப் படிக்கும்போது இலட்சியமே வாழ்வாக சமுதாயத்தில் வாழையடி வாழையாக வாழும் மருத்துவர் கூட்டம் இன்னும் வளர்ந்து வரும் எனும் நம்பிக்கை துளிர்க்கிறது என்கிறார் மருத்துவர் ஆண்டாள்.

29.12.23

’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ - நூலறிமுகம்

      ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் என்ற பகுதியில் ’அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும் ‘ நாவல் குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் அறிமுகக்கட்டுரை

[bookday.in December 25, 2023 இணைய தளம்]


*ஒரு மருத்துவரின் இலட்சியப்பயணம்*
சங்க இலக்கியத்தில் அலர் தூற்றுதல் தொடர்பாக பல பாடல்கள் உள்ளன. திருக்குறளில் அலர் அறிவுறுத்தல் என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே உள்ளது. அலர் என்னும் சொல்லுக்கு பழித்தல் என்றும் இட்டுக்கட்டிப் பேசுதல் என்றும் வெவ்வேறு பொருள்களுண்டு. அலர் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலிருக்கும் தனிப்பட்ட நெருக்கத்தைப் பெரிதுபடுத்தி பொதுவில் பேசிப்பேசி, அவ்வுறவை அம்பலப்படுத்தி,
சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால், எதார்த்தத்தில் ஒன்றுக்கு எதிராக அல்லது மதிப்பற்றதாக பேசப்படும் சொற்களே அதை மேன்மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துவிடுகிறது. ’ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும் இந்நோய்’ என்பது திருக்குறள்.

காதலர்கள் பழிச்சொல்லைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது இலக்கியக்கூற்றாக இருந்தாலும் நடைமுறையில் பழிச்சொல்லுக்கு அஞ்சி காதலைக் கைவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். பழிச்சொல்லின் வழியாக ஆற்றல் பெற்று வெற்றியை நோக்கி நடக்கும் காதலர்களின் எண்ணிக்கைக்கு நிகராக பழிச்சொல்லால் மனம்சுருங்கி காதலையே கைவிட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. அதுவே
நடைமுறை உண்மை.பழிச்சொல்லால் ஏற்படும் நன்மையும் தீமையும் காதலில்
மட்டுமன்றி பொதுவாழ்விலும் உண்டு.

தம்மைப்பற்றி புனைந்துரைக்கப்படும் பழிச்சொல்லைக் கேட்டு மனம்கசந்து ஒதுங்கிச் செல்கிறவர்களும் உண்டு. அதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் மானுடத்தின்பால் தீராத பற்று கொண்டு தன் இலட்சியப்பாதையில் தொடர்ந்து முன்னேறி வெற்றி கொள்கிறவர்களும் உண்டு.

அந்த உண்மையை மையப்பொருளாகக் கொண்டு ’அஞ்சு திங்களில்முஞ்சுதல் பிழைத்தும்’ என்னும் தலைப்பில் தன் புதிய நாவலை எழுதியிருக்கிறார் எம்.ஏ.சுசிலா. கடந்த சில ஆண்டுகளாக, தஸ்தாவெஸ்கியின் பிரதானமான படைப்புகளை தொடர்ச்சியாக தமிழில் மொழிபெயர்த்தளித்த எம்.ஏ.சுசிலா இந்த நாவல் வழியாக மீண்டும் தன் சொந்தப் படைப்புலகத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

நாவலின் மையப்பாத்திரம் காயத்ரி. மிகப்பெரிய மகப்பேறு மருத்துவர். மருத்துவச்சேவை புரிவதிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருடைய அகத்தையும் புறத்தையும் அடைந்ததையும் இழந்ததையும் ஒருசேரக் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுசிலா.

சில உடற்குறைகளின் காரணமாக நேரிடையான பிள்ளைப்பேறுக்கு வழியில்லாத இணையரின் மனக்குறையைத் தீர்க்கும் விதமாக மருத்துவ அறிவியல் உலகம் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் பரிசோதனைக்குழாய் வழியாக கருத்தரிக்கவைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. எழுபதுகளின் இறுதியிலேயே அது இந்தியாவிலும்

அறிமுகமானது. கணவன், மனைவி இருவருடைய உயிரணுக்களையும் தனித்தனியாகச் சேகரித்து ஒரு பரிசோதனைக்குழாயில் இணைத்து ஆழ் உறைநிலையில் குறிப்பிட்ட காலம் வைத்திருப்பதன் வழியாக உருவாகும் கருவை தாயின் கருப்பைக்குள் மீண்டும் செலுத்தி பாதுகாப்பதன் மூலம் மகப்பேறு அடைவதற்கு அம்முறை வழிவகுத்தது. அதன் விளைவாக ஏராளமானோர் பயனடைந்தனர்.

மகப்பேறு மருத்துவம் படித்து மருத்துவ உலகில் நற்பெயரடைந்து, மகப்பேறு சேவைக்காக மட்டுமேயென ஒரு மருத்துவமனையைத் திறந்து நடத்தி வரும் காயத்ரி என்னும் மருத்துவரின் இறந்தகால வாழ்க்கையையும் நிகழ்கால வாழ்க்கையையும் சுசிலாவின் புதிய நாவல் மாறிமாறி காட்சிப்படுத்தியிருக்கிறது. எங்கோ வட இந்தியாவில் தொடங்கிய பரிசோதனைக்குழாய் முறையை தமிழ்ச்சூழலில்
அறிமுகப்படுத்தி, தாய்மையடையத் தவிக்கும் பெண்களுக்கு உற்ற துணையாக இருக்கவேண்டுமென கனவு காண்கிறார் காயத்ரி. தன் மருத்துவமனையையே ஒரு சோதனைக்களமாக மாற்றி அதில் வெற்றி காண விழைகிறார்.

பல ஆண்டுகள் காத்திருந்து, வெவ்வேறு விதமான சோதனைகளால் மனத்துயரத்துக்கு ஆளாகி வேதனையுடன் காயத்ரியை நாடிவருகிறார்கள் ஓர் இணையர். பரிசோதனைக்குழாயில் உருவான கருவை அவருடைய கருப்பை ஏற்றுக்கொண்டுவிட்டது என்று தெரிந்த நாள்முதலாக அவரை மருத்துவமனையிலேயே பேறுகாலம் வரைக்கும் படுக்கையில் வைத்திருந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்க உதவி செய்கிறார்.

ஆறாத்துயரை ஆற்றி தம் குலக்கொடி தழைத்து வளர உதிவிய
மருத்துவரின் பெயரையே தன் குழந்தைக்கும் சூட்டி மகிழ்கின்றனர் அந்தப்
பெற்றோர்.

தம் சேவையால் பிறருடைய குடும்பத்தின் துயரத்தை ஆற்றும் காயத்ரி தன் சொந்தக் குடும்பச் செயல்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கவில்லை என்று குற்றம் சுமத்துகிறான் அவள் கணவன். அதையே காரணமாக முன்வைத்து, அவன் அவளிடமிருந்தும் குழந்தையிடமிருந்தும் பிரிந்துபோகிறான். தன் தாயின் உதவியோடு குழந்தையை தனித்து வளர்க்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறாள் அவள். அப்போதும் கலங்காமல் மருத்துவத்துகாகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டதுபோல செயலாற்றுகிறாள் அவள்.

3. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மகள் கவர்னர் கையால் விருது பெறும் முக்கியமான நிகழ்ச்சியில் தன் தாய் கலந்துகொள்ளவில்லை என்னும் வருத்தத்தால் மனம் கசந்துபோன மகளும் ஒருநாள் விலகிச் செல்கிறாள். அடுத்தடுத்து துயரங்கள் அவள் வாழ்வில் வந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவச் சேவையிலும் ஆராய்ச்சியிலும் உள்ள அவளுடைய ஈடுபாடு ஒன்றே அவளுக்கு துயரக்கடலைக் கடக்க உதவும் மரக்கலமாக அமைகிறது. அதுவும் அவளுக்கு நீண்ட காலம்
நீடிக்கவில்லை.

நல்லெண்ணத்துடன் அவள் ஆற்றிவரும் சேவையை பணமீட்டும் ஆசையால் செய்வதாக ஊரார் அலர் எழுப்புகின்றனர். அந்தச் செய்தி அவள் காதுவரை எப்படியோ வந்தடைகிறது. தன் மனப்போக்கை இவர்களுக்கெல்லாம் எப்படிப் புரியவைப்பது என தெரியாமல் ஒருசில கணங்கள் அவள் தடுமாறினாலும் உறுதி குன்றாது தன் பாதையில் தொடர்ந்து செல்கிறாள்.

ஆனால் ஒருநாள் அவள் பெற்ற மகளே அந்தப் பழிச்சொல்லைச் சொல்லித் தூற்றுவதை காதுகொடுத்துக் கேட்கும் கரிய தருணமொன்று வந்தமைகிறது. அந்தப் பழிச்சொல்லை அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

உலகம் நம்பாவிட்டாலும் குடும்பம் நம்பும் என இருந்த அவள் மனநிலை சுக்குநூறாக உடைந்துவிடுகிறது. தான் அவ்விதமானவள் அல்ல என்பதை இந்த உலகத்துக்கோ அல்லது அவளுக்கோ எப்படி சொல்லி, எப்படி புரியவைப்பது என தெரியாமல் தடுமாறுகிறாள். காயத்ரி தன்னைப்பற்றி எங்கெங்கும் ஒலிக்கும் பழிச்சொற்களை
கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன்னால் தாய்மையடைந்து மனநிறைவோடு வீடு திரும்பும் தாய்மார்களின் முகங்களை மட்டும் பார்த்து நிறைவோடு தன் இலட்சியப்பாதையில் தொடர்ந்து சென்றிருக்கலாம். அதற்கு மாறாக, காய்த்ரி மருத்துவத்தால் தான் ஈட்டும் பொருள் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை அமைதியாக தன் மகளுக்கும் இந்த உலகத்துக்கும் நிரூபிக்கும் வகையில்
மருத்துவமனையையே மூடிவிட்டு திருச்சி நகரத்தைவிட்டே
வெளியேறிவிடுகிறாள்.

அவளைப்போலவே அந்த இலட்சியப்பாதையில் இயங்கும் வேறொரு இளம் பெண்மருத்துவரோடு இணைந்து கொள்கிறாள். தென்காசிக்கு அருகில் பண்பொழில் என்னும் சிற்றூரில் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் சேவைக்காகவும் அந்த இளம்மருத்துவர் தொடங்கும் ஆசிரமத்தில் அவளும் இணைந்துகொள்கிறாள். ஆறாத ரணமாக அந்தப் பழிச்சொல் அவளை வாட்டியபடியே இருக்கிறது. தன் வழியில் எதிர்காலத்தில் தன் மகளும் மருத்துவம் படித்து இணைந்துகொள்வாள் என நினைத்திருந்த அவள் கனவு கலைந்துவிடுகிறது. ஏதோ ஒரு பட்டப்படிப்பைப் படிக்க,

4. அவள் திருச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத பெங்களூருக்குச் சென்றுவிடுகிறாள். அது ஒரு காலகட்டம். கால் நூற்றாண்டுக்குப் பிறகு இன்னொரு
காலகட்டம் வருகிறது. பெற்ற அம்மாவைத் தூற்றினோம் என எவ்விதமான குற்ற உணர்வுமின்றி மேற்படிப்புக்கு அமெரிக்காவுக்குச் சென்று படித்து முடித்து பட்டம் பெற்று அங்கேயே தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள் காயத்ரியின் மகள். அவளுக்கு ஒரு மகள் பிறந்து அவளும் பெரியவளாகி அவளும் ஏதோ ஒரு துறையில் வலம்வந்தபடி இருக்கிறாள். ஒருவரும் மருத்துவத்தின் திசையில்
திரும்பவில்லை. அக்குடும்பத்தில் அது காயத்ரியிலிருந்து தொடங்கி
காயத்ரியிலேயே முடிவடைந்துவிடுகிறது.

அந்த மனிதக்கணக்கை விதி வேறொரு கணக்காக மாற்றி எழுதுவதுதான் காயத்ரியின் உலகில் நிகழும் திருப்புமுனை. ஊழ் வேறொரு திசையில் நுழைந்து அவளுடைய கனவை சிந்தாமல் சிதறாமல்
ஏந்திக்கொள்கிறது.

நீண்ட காலமாக பூட்டப்பட்டு கிடந்த அந்த மருத்துவமனைக் கட்டடத்தை விற்பனை செய்துவிட திட்டமிடுகிறாள் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவரின் மகள். அந்த விற்பனை வேலையை முடிக்கவும் தென்காசியில் ஆய்வுத்துறையிலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்ட பாட்டியைச் சந்திக்கவும் நினைத்து திருச்சிக்கு வருகிறாள் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பேத்தி. அதே நேரத்தில் மருத்துவர் காயத்ரியின்
முயற்சியால் மகப்பேறடைந்த திருச்சி தம்பதியினரின் மகளான சின்ன
காயத்ரியும் அங்கே வருகிறாள். அவள் மகப்பேறு மருத்துவம் படித்தவள்.

பெரிய காயத்ரியைப்போலவே மருத்துவச்சேவையாற்ற வேண்டும் என ஆசை கொண்டிருக்கிறாள் அவள். வெகுகாலமாக பூட்டியிருக்கும் பெரிய காயத்ரியின் மருத்துவமனைக் கட்டிடத்தை வாங்கி, அவர் ஆற்றி வந்த சேவையை மீண்டும் தொடங்கி ஆற்றவேண்டும் என்பது அவள் எண்ணமாக இருக்கிறது. தன் பாட்டியின் உள்ளார்ந்த அர்ப்பணிப்புணர்வின் விளைவாக உருவாகிப் பிறந்து மருத்துவராக வளர்ந்து நிற்கும் சின்னகாயத்ரியின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் பேத்தி தாரா அந்தக் கட்டிடத்தை அவளுக்கே அளித்துவிடுகிறாள். காயத்ரியின் கொடிவழியாக
அல்லாமல், வேறொரு வழியாக மக்களுக்கான மருத்துவம் தொடர்கிறது.

காயத்ரி என்னும் பெரிய மருத்துவர் இவ்வாழ்வில் பெற்றதற்கு இணையாக தன் பாதையில் இழந்ததும் அதிகம். தன் பணி பணத்தாசையால் அல்ல என்பதை உணர்த்தும் வேகத்தில் மருத்துவமனையை மூடி மருத்துவச்சேவையிலிருந்து வெளியேறினாளே தவிர, அவள் மருத்துவ ஆராய்ச்சியிலேயே முழுமூச்சாக இறங்கி தன் இலட்சியத்தை அடைந்தாள்.

5. அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் என்று இந்த நாவலுக்குத்
தலைப்பிட்டிருக்கிறார் சுசிலா. திருவாசகத்தின் போற்றித் திரு அகவலில்
இடம்பெற்றிருக்கும் வரி இது. மானுடப்பிறப்பு என்பது எத்தனை அரிதாக வாய்க்கக்கூடியது என்பதையே இவ்வரி உணர்த்துகிறது. கருவியல் சார்ந்த அறிவியல் கருத்துகளையே இந்த அகவல் முன்வைக்கிறது.

தாயின் வயிற்றில் வளரும் கருவுக்கு ஐந்தாம் மாதம் என்பது மிகமுக்கியமான மாதம். அம்மாதத்தில் உருவாகும் உணவு ஒவ்வாமையின் காரணமாக சரியான முறையில் உணவை உட்கொள்ளமுடியாத சூழலுக்கு ஆட்படுகிறாள் தாய். உண்ணாமையின் காரணமாக அவள் உடல் மெலிகிறது.

அவள் மெலிந்தால், கருவும் மெலியும். போதிய வளர்ச்சி இல்லாமல் குன்றும். சிற்சில தருணங்களில் அழிந்துவிடவும் வாய்ப்புண்டு. ஐந்தாவது மாதம் என்பது ஒரு திருப்புமுனையான காலகட்டம். ஒரு குழந்தை உயிர்த்திருப்பதைத் தீர்மானிக்கும் தருணம் அது.

மகப்பேறு சார்ந்த ஒரு வரி என்றபோதும், அவ்வரியின் பொருளை இலட்சியத்தை அடையும் பெரும்பயணத்துக்கும் பொருத்திப் பார்க்கமுடியும். மசக்கை போல இடைவழியில் இலட்சியத்தைக் கைவிட வைக்கும் தருணங்களே இவ்வாழ்வில் அதிகம். அதையெல்லாம் கடந்து இலட்சியத்தை அடைபவனே வெற்றியாளன்.

மகப்பேறு போல அதுவும் ஒரு பேறு. இந்த நாவலின் நாயகியான காயத்ரி அடைந்ததும் அத்தகு ஒரு பேறு.

நூலின் பெயர்: அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் {நாவல்}
ஆசிரியர் : எம்.ஏ.சுசிலா. ஹெர்
வெளியீடு : ஸ்டோரீஸ் வெளியீடு, 15, மகாலட்சுமி அப்பார்ட்மெண்ட்ஸ், 1, ராக்கியப்பா
தெரு, சென்னை – 600 004.
விலை:ரூ.160

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....