துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.6.21

பறத்தல்-மொழியாக்கச் சிறுகதை, கனலி

 கனலி இலக்கிய இணைய இதழில்...


பறத்தல்

ஆங்கில மூலம்; டெம்சுலா ஆவ்

 (டெம்சுலா ஆவ்- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான ஷில்லாங்கைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியர். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர், சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். வடகிழக்கு மாநிலங்களுக்கே உரிய தனிப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துபவை இவரது படைப்புக்கள். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து [LABURNUM FOR MY HEAD] தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையே பறத்தல்’)

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

                      பறத்தல்

        முட்டைக்கோஸ் செடிகள் பயிரிடப்பட்டிருந்த விசாலமான திறந்த வயல் வெளியில் என் வாழ்க்கை தொடங்கியது.   அதுவும் கூட வயல்களில் குறுக்கு நெடுக்காக வரிசையாக நடப்பட்டிருந்த செடிகளுக்கு இடையே ஒரு பெரிய இலைக்கு அடிப்பக்கத்திலேதான்.  எங்கும் தங்காமல் பறந்தபடி இருக்கும் ஓர் அன்னை விட்டுச் சென்ற மிகச் சிறிய துகள் போன்ற விதையிலிருந்து நான் படிப்படியாக நீளமாகப் பச்சை வண்ணத்தில் வளர்ந்திருந்தேன்.  நான் ஒட்டிக் கொண்டிருந்த பெரிய இலையோடு அந்த நிறம் மிகவும் பொருந்திப் போயிருந்தது.

          சூரிய ஒளி பிரகாசமாக அடித்துக் கொண்டிருந்த ஒரு நாள் காலையில் ‘கிறீச்சென்று துளைக்கும் ஒரு சத்தம் வயல் முழுவதையும் ஊடுருவிக் கொண்டு போயிற்று.  ‘‘ஏய்…. பாரு கம்பளிப்பூச்சி, கம்பளிப்பூச்சி’’

                    கலவையான பல குரல்களிலிருந்து எழுந்த முணுமுணுப்புக்கள்.  அந்தப் பெண்மணி இன்னும் கூடக் கிறீச்சிட்டுக் கொண்டுதான் இருந்தாள்.  அவள் குரலில் இருந்தது பயமா? வெறுப்பா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.  பிறகு ஒரு சின்னப் பெண் குரல்,

          ‘‘சே… இது ரொம்ப அசிங்கமா இருக்கு’’ என்றது.

          மற்றொரு குரல் இடையே நுழைந்தது.  ‘‘ஐயோ…. அதைப் பாருங்களேன், எவ்வளவு அழகா இருக்கு? அம்மா அதை நான் வச்சுக்கலாமா? அம்மா, தயவுசெஞ்சு அம்மா! நான் என்னோட ரூம்லே ஷூபெட்டியிலே போட்டு வச்சிப்பேன்; அது வேற யாரையுமே தொந்தரவு பண்ணாது, அதுக்கு நான் பொறுப்பு! அது என்னோடடிராகனா இருக்கும்’’

                    எல்லோரும் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்ததுபோல் அப்படி ஓர் அமைதி அங்கே நிலவியது.  நான் கலவரமடைய ஆரம்பித்தேன்.  ஒரு வேளை இதுவே என் கடைசி நாளாகக் கூட இருந்து விடலாம்.

          பிறகு உணர்ச்சிகரமான ஒரு ஆண்குரல் இப்படிப் பேசியது.

          ‘‘சரி ஜானி! நீ அதை வச்சுக்கலாம்.  உன் படுக்கைக்குப் பக்கத்திலே உள்ள டிரஸ்ஸிங் டேபிள் மேலே உன் டிராகன் பாக்ஸை வச்சுக்கோ.  ஆனா இது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  அதனாலே ஏதாவது பாதகம் வந்ததுன்னா அப்புறம் நீதான் அதுக்குப் பொறுப்பேத்துக்கணும்’’

                    ‘‘ஹையா, தாங்க்யூ அப்பா’’ என்று அந்தப் பையன் கத்தினான்.  முட்டைக்கோஸின் அடிப்பக்கத்திலிருந்து யாரோ அந்த இலையைத் துண்டித்து எடுத்துப் பையனிடம் தந்தார்கள்.  அவனும் அதை கவனமாகப் பெற்றுக் கொண்டான்.

          ஜானி, தன் படுக்கையறைக்குச் சென்று என் புது வாழ்க்கைக்கான வித்தியாசமான இடத்தை ஆயத்தம் செய்துகொண்டிருந்தபோது என்னை ஏதோ வேறொரு உலகத்துக்கு கொண்டு சென்று விட்டதைப் போலிருந்தது.  பொருட்களை இரைத்தும் கலைத்தும் போடும் சத்தம் கேட்டது.  கதவுகள் அறைந்து சாத்தப்பட்டன.  இறுதியில் அந்தச் சின்னப் பையன்

          ‘‘இங்கே இருக்கு’’

என்று குரல் கொடுத்தான்.  மென்மையான ஒரு பரப்பின் மீது அவன் என்னைக் கவனமாகக் கிடத்தியபோது அவன் அப்படி எதைக் கண்டுபிடித்தான் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  என் ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் வித்தியாசமான வேறு சில விஷயங்களும் நடந்து கொண்டிருந்தன.  தாள்கள் கிழிக்கப்பட்டு வெட்டப்பட்டும்!

          ‘‘ம்…. இது போறும்’’

கடைசியாகத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் ஜானி.

          திடீரென்று என்னைத் தூக்கி இருட்டான ஒரு இடத்தில் தாழ்வாக வைத்தான் அவன்.  நான் நிமிர்ந்து பார்த்தபோது தன் முகத்தில் விசித்திரமான ஒரு புன்னகையோடு என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜானி,

          ‘‘டிராகன், தூங்கப்போ.  உன்னைக் காலையிலே பார்க்கிறேன்’’

-பிறகு அவன் பெட்டியை மூடிவிட்டதால் உள்ளே முழு இருட்டு கவிந்து கொண்டது.

          அந்தக் கணத்தில், அதுவரை விசாலமான திறந்த வெளிகளோடும், பிரகாசமான சூரிய ஒளியோடும் இருந்த என் பழைய வாழ்க்கை முடிந்துபோயிற்று.  இருளும், ஒளியும் மாறி மாறி வரும் ஒரு புதிய வாழ்க்கை தொடங்கியது.  மூடியைத் திறந்து ஜானி எட்டிப் பார்க்கும்போது வெளிச்சம்; அதை அவன் மூடிவிடும்போது இருட்டு.  இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையிலிருக்கும் நேர ஒழுங்கு ஆரம்பத்தில் சீராகத்தான் இருந்தது.  நாளாக ஆக இடைவெளிகள் கூடிக் கொண்டே வந்தன.  ஒரு நொடி கூட வெளிச்சம் படாத நாட்களும் சில வேளைகளில் இருந்தன.

          பிறகு ஒரு நாள் மாலை ஜானி உறங்கிக்கொண்டிருந்த படுக்கையறையை நெருங்கி வந்து கொண்டிருந்த சில காலடி ஓசைகளை என்னால் கேட்க முடிந்தது.  இப்போதெல்லாம் பகலோ, இரவோ பெரும்பாலான நேரங்களில் அவன் தூங்கிக்கொண்டேதான் இருந்தான்.  என் மீது இருந்த ஆர்வத்தை அவன் இழந்துவிட்டானோ என்று கூட எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.  காலடி ஓசைகள் அறைக்குள் கேட்டன.  ஒரு பெண்ணின் ஆடைஒருக்கால் பட்டாடையாக இருக்கலாம் – அது உரசும் ஓசை எனக்குக் கேட்டது.  இதுவரை நான் நுகர்ந்தே இராத வித்தியாசமான மெல்லிய மணத்தை என்னால் உணர முடிந்தது.  ஜானியின் பெற்றோர் இரகசியம் பேசுவது போன்ற குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அவனது அப்பா, பெட்டியின் மூடியைத் திறந்தபோது  அந்தப் பெண்மணியின் கழுத்தைச் சுற்றி ஒளிமயமான நட்சத்திர வரிசை இருப்பதை நான் பார்த்தேன்.

          ‘‘அவனோட டிராகனைப் பாரு’’

என்றார் அவர்.  அவள் இதயத்தைப் பிளக்கும் துயரத்தோடு விம்மினாள்.

          ‘‘ஷ்’’ என்றார் அவர்.

          ‘‘நீ தைரியமா இருக்கணும்.  அவனுக்கு இப்ப வலி எதுவும் தெரியாது’’

                    மூடி மறுபடியும் மூடப்பட்டுவி, இருட்டு மீண்டும் என்னை சுற்றி வளைத்துக் கொண்டது.  காலடிகள் இரவுக்குள் தேய்ந்து கரைந்தன.

          காலம், எனக்கு மங்கலான குழப்பமாகி இருந்தது.  என் உடலுக்குள் வினோதமான புலன் உணர்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.  அடையாளம் கண்டு கொள்ளமுடியாத ஏதோ ஒரு சுமை என்னை அழுத்தித் தடுமாற வைப்பதைப் போலிருந்தது.  வரையறுக்கப்பட்ட ஒரு சிறிய இருட்டு இடத்துக்குள் ஜானி ஆசையோடு சிறைப்பிடித்து வைத்திருந்த அந்த டிராகனாக நான் இப்போது இல்லை.  நான் இருப்புக் கொள்ளாமல் இருந்தேன்; என் பழைய வாழ்க்கையின் திறந்த வெளிகளுக்காக நான் ஏங்கினேன்.

          எனக்குள் நடந்து கொண்டிருந்த இந்தக் குழப்பங்கள் ஒரு புறம் இருக்க, ஒரு நாள் அந்த வீட்டில் மிகவும் கலவரமான ஒரு சூழல் நிலவியது.  மனிதர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும், சத்தம்போட்டுக் கொண்டும் இருந்தார்கள்.

          ‘‘ம் சீக்கிரம்! பார்த்து பத்திரமா! படிக்கட்டு இருக்கு ஞாபகம் இருக்கட்டும்’’

- இதற்கு நடுவே ஜானியின் பலவீனமான குரலும் கேட்டது.

          ‘‘எனக்கு என்னோட டிராகன் வேணும், என் டிராகன் வேணும்’’

                    முரட்டுத்தனமான, பொறுமையிழந்த சில கரங்கள் இருட்டான என் உலகத்தை ஒரு உலுக்கலோடு தூக்கி எடுத்தன.  அதைத் தொடர்ந்து நான் வேறொரு வித்தியாசமான இடத்தில் இருப்பது புரிந்தது.  அந்த அறை,  வேறுவகையான கடும் வாடைகளால் நிரம்பியிருந்தது.  குழந்தைகள் அழுது கொண்டிருந்தது எனக்குக் கேட்டது.  பெரியவர்களும் கூட வலியாலும் வேதனையாலும் முனகிக் கொண்டிருந்தார்கள்.  நாங்கள் அங்கே எவ்வளவு நேரம் இருந்தோம் என்பது எனக்குத் தெரியவில்லை.  ஆனால் ஜானியும் அங்கே இருந்தான் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.  அவன் மூச்சு விடுவதற்கே அன்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் ஒவ்வொரு முறை அவன் பெற்றோர் அறைக்குள் வரும்போதும் மற்ற இடங்களிலிருந்து கேட்கும் முணுமுணுப்பான ஓசைகளை வேதனையான விம்மல்கள் அடக்கிவிடும்.

          பிறகு ஒரு மதிய நேரத்தில், கடுமையான பீதியை வெளிப்படுத்தும் அமானுஷ்யமான ஓர் ஓசை அந்தத் தாயிடமிருந்து எழுந்தது.  காரணம் ஜானி, மூச்சிலிருந்த சலசலப்பான ஓசையும் கூட அப்போது முற்றாக இல்லாமல் போயிருந்தது.  அம்மா விடமிருந்து எழுந்த சத்தத்தின் எதிரொலி என்னை நடுநடுங்கவைத்தது.  அவனுக்கு பயங்கரமாக ஏதோ, ஒன்று நேர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.  பிறகு மீண்டும் புதிதாக ஓர் அமைதி திரும்பியது.  ஜானியின் தொண்டையிலிருந்து பழைய சலசலப்பு கேட்கத் தொடங்கியிருந்ததே அதற்குக் காரணம்.  சிறிது நேரம் சென்றபின்

          ‘‘என் டிராகனைப் பாக்கணும்’’

என்ற ஜானியின் பலவீனமான குரல் கேட்டது.

          அவனது சகோதரி பெட்டியின் மூடியை மென்மையாகத் திறந்தபடி

          ‘‘பாருவண்ணத்துப் பூச்சி! எத்தனை அழகா இருக்கு பாரு அது’’ என்றாள்.  ஜானி மிகுந்த சிரமத்தோடு அருகில் நெருங்கியபடி அவ நம்பிக்கையோடும், வெறுப்போடும் என்னை உற்றுப் பார்த்தபடி அவளை மறுத்தான்.

          ‘‘என்னது அழகா இருக்கா? டிராகன், உனக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு அசிங்கமா இருக்கே’’

-இவ்வாறு சொல்லியபடியே பின்னால் சரிந்தவன், அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

          புதிதாக வளர்ந்திருந்த என் சிறகுகளைக் கவனமாக அசைத்துக் கொண்ட நான், புதிதாக முளைத்திருந்த  கால்களைக் கொண்டு ஒரு அடி எடுத்து வைக்கப்பார்த்தேன்.  பிறகு என் இருட்சிறையை விட்டுப் புது வேகத்தோடு வெளியே வந்தேன்.  ஜன்னல் திட்டின் மீது உட்கார்ந்தபடி சுற்றுமுற்றும் பார்த்தேன்.  கசங்கிய துணிக்குவியல்களுக்கிடையே படுத்துக் கிடந்தான் ஜானி.  அவனது தொண்டையிலிருந்து எழுந்த நெடுமூச்சின் ஒலி அந்த நிசப்தமான சூழலில் கடுமையாக ஒலித்தபடி அங்கிருந்த எல்லோரையும் நிலைகுத்திப் போக வைத்திருப்பது போலிருந்தது.  அவன் படுத்திருந்த இடத்துக்கு வெளியேதான் எத்தனை வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும்  இருந்தது?  ஜானியின் சகோதரி என்னைப் பிடிக்க முயல்பவளைப் போல் சற்று முன்னோக்கி வந்தாள்; நான் உடனே சற்று உயரமான ஜன்னல் விளிம்பில் மாறி அமர்ந்து கொண்டேன்ஜானியின் உலகத்திலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்கும் வேறொரு வெளியில் சஞ்சரிக்க நான் ஆயத்தமாகிவிட்டதை அந்தக் கணத்தில் உணர்ந்து கொண்டேன்.

          இறுதியாகப் பறந்து செல்ல நான் சிறகுகளை அசைத்தபோது

          ‘‘கொஞ்சம் இரு.  ஜானியை நினைத்துப் பார்க்க வேண்டாமா?  அவனைத் தனியாக விட்டு விட்டா போகப் போகிறாய்’’

என்று மெலிதான உட்குரல் என்னுள் கேட்டது.  நான் சற்றே தயங்கினாலும், மடிந்து கொண்டிருக்கும் அவனுடைய உலகத்தைவிட்டு நான் விலகி விட வேண்டும் என்பதை அறிந்திருந்தேன்.  வெளிறிப்போய் வருத்தம் தோய்ந்தபடி இருந்த அவன் முகத்தைப் பார்த்தேன்.  ஆனால் அவன் கண்களில் இருந்த கோரிக்கையை விட, என்னுள் இருந்த தீர்மானம் அதிக உறுதியாக இருந்தது.  கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்பட்டது போல என் சிறகுகளை அசைத்தபடி திரும்பிக் கூடப் பார்க்காமல் விரைவாகப் பறந்து கொண்டிருந்தேன் நான்.

          ‘‘பறந்து போ.  நீ இப்போது உனக்கான -  உன்னுடைய உலகத்தில் இருக்கிறாய்.  உன் விதியை நோக்கி நீ பறந்து செல்’’

என்று என்னுள் இருந்த புழு என்னைத் தூண்டிக் கொண்டிருந்தது.

            **************************************************

கனலியில் தங்களின் மொழிபெயர்ப்பில் பறத்தல் சிறுகதையை வாசித்தேன். மிக நல்ல கதை. பெரும்பாலான மொழிபெயர்ப்பு கதை வாசிப்பில் ஏற்படும் தடையேதும் இல்லாத சிறந்த மொழிபெயர்ப்பு. கதையின் கனம் மொழிபெயர்ப்பால் சிறிதும் சிதைவுறவில்லை. கனத்த மனநிலையுடனே கதையை வாசித்து முடித்தேன். உயிருக்கு போராடும் சிறுவன் வாழ்வை விட்டுப் போகப் போகிறான். கம்பளிப் பூச்சியிலிருந்து உருமாற்றம் அடைந்து பறந்துவிடும் பட்டாம் பூச்சியோ விடுதலை பெற்று அதற்கான வாழ்வை நோக்கி பறக்கிறது. தன்னிடம் அக்கறை கொண்டிருக்கும் சிறுவனுக்காக தன் வாழ்வைத் துறக்க முடியாத பட்டாம் பூச்சி நம் எல்லோருள்ளும் படபடத்துக் கொண்டிருக்கிறது.


நன்றி
கிருஷ்ணா

           


23.6.21

இணைய வழி உரை,சிறுகதைகளில் முறைசார் அலுவல் மகளிர் சிக்கல்கள்- சாகித்திய அகாடமி

இணைய வழி உரை,
சிறுகதைகளில் முறைசார் அலுவல் மகளிர் சிக்கல்கள்- சாகித்திய அகாடமி
22/6/21

15.6.21

தீராப் பெரும்பசி- தி ஜானகிராமனின் ‘கொட்டுமேளம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து.

தீராப் பெரும்பசி

-எம்.ஏ. சுசீலா-


மானுடத்தின் ஆதார உணர்வாகி, தூலவடிவத்திலும், சூக்குமமாகவும் மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பசி என்ற பேருணர்ச்சிக்குத்தான் எத்தனை நிறங்கள்? எத்தனை முகங்கள்? பசிகொண்ட மானுடத்தின் பலதரப்பட்ட பக்கங்களையும் வெவ்வேறு கோணங்களில்– வாழ்நாள் முழுவதும் தாம் உருவாக்கிய சிறுகதைகளிலும், நாவல்களிலும் சளைக்காமல் எழுதினாலும், அதில் சற்றும் களைத்துப் போய்விடாத தீராப் பெரும்பசியோடு திரும்பத் திரும்பப் பதிவு செய்துகொண்டேயிருந்தவர் எழுத்தாளர் தி.ஜானகிராமன். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகிய ‘கொட்டுமேளம்’(1954), சோற்றுப் பசி, பொருள் தேட்டத்துக்கான பசி, வாழ்வியல் வெற்றிக்கான பசி, அழகு, அன்பு, பரிவு, காமம் எனக் கசிந்தும், பெருகியும் ஓடும் பல்வேறு உணர்ச்சிகளின் பசி என்று பசியின் பேரிரைச்சல்களால் மட்டுமே நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறது. தன் எழுத்து லாவகத்தால் அந்தச் சத்தத்தைச் சங்கீதமாக்கவும், கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் பசியின் குரல்களை அதனதன் தன்மைக்கேற்ப அடக்கிப் படிய வைக்கவும் முனைந்திருக்கிறது தி.ஜா.வின் எழுதுகோல். அவரது புகழ்பெற்ற நாவல்களான ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ தொடங்கி இறுதிப் படைப்பான ‘நளபாகம்’ வரை, ‘பசியும் பசியாற்றுதலும்’ நேர்ப்பொருளாக மட்டும் நின்றுவிடாமல் உருவகமாக, குறியீடுகளாகத் தொடர்ந்துகொண்டே சென்றதற்கான விதைகள், அவரது முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே அழுத்தமாக ஊன்றப்பட்டுவிட்டன என்றே சொல்லிவிடலாம்.

உலகுக்கெல்லாம் சோறூட்டும் சோழ வள நாட்டிலிருந்து வந்தவர் என்பதோடு, தினுசு தினுசான சாப்பாட்டு வகைகளின் மீது குன்றாத விரும்பம் கொண்டிருக்கும் தஞ்சை, கும்பகோணம் பகுதியைச் சார்ந்தவர் என்பதாலோ என்னவோ, அன்றாடச் சாப்பாட்டுக்கே அலைக்கழிவுபடும் மனிதர்களின்மீது தி.ஜா., எல்லையற்ற இரக்கமும் கருணையும் கொண்டிருக்கிறார்.எந்த வழியிலாவது, எப்படியாவது அந்த வயிற்றுப் பசி தீர்ந்துவிடலாகாதா என்று அந்தப் படைப்புள்ளம் பதைக்கிறது. கதைகளின்வழி அவர் முன்வைக்கும் வயிற்றுப் பசிகளிலேயும்கூட எத்தனை வகைகள்?

‘சிலிர்ப்பு’ சிறுகதையில் வரும் பத்து வயதுச் சிறுமி, “மத்தியானச் சாப்பாட்டுக்கே எல்லாருக்கும் காணாத” குடும்பத்தில், நான்கு அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை இவர்களோடு பிறந்தவள். தன் பசியோடு சேர்ந்து குடும்பத்தார் பசியையும் ஆற்றுவதற்காக அறிமுகம் அதிகமில்லாத ஒரு பெண்மணியோடு, முன்பின் தெரியாத கல்கத்தாவுக்குப் பயணப்படுகிறாள் அவள். மூன்றுவருடகாலம் ஒரு ஜட்ஜ் வீட்டில் “கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோச்சு, குழந்தை பார்த்து, தோசைக்கு அரைச்சு” எல்லாம் செய்தாலும், பசி தீராதவளாய்ப் பஞ்சத்தில் அடிபட்டதுபோலக் கண்கள் உள்ளொடுங்கிப் போய், ஒட்டி உலர்ந்து காட்சி தருகிறாள். சுரண்டிக் கறந்து அவளை வேலை வாங்கிய குடும்பம், கடைசியாக அவள் புறப்பட்டுச் செல்லும் வேளையிலும்கூடப் பழைய சோற்றுடன் மட்டுமே வழியனுப்பி வைத்திருக்கிறது.

வாழ்க்கைப்பாட்டின் பற்றாக்குறை கிளர்த்தும் பசி இவ்வாறிருக்க, ‘வேண்டாம் பூசணி’யின் பாட்டியோ, பாசத்தின் பற்றாக்குறையால் வயிறு காய்ந்து கிடக்கிறாள். தான் பெற்ற மூன்று மகன்களுக்கும் இரண்டு பெண்களுக்கும் இடையே வேண்டாத உருப்படியாக அவள் பந்தாடப்படும் அவலமே சிறுகதையில் முதன்மைப்படுத்தப்பட்டாலும் தன் ‘வயிற்றுத் தீ’யைத் தணிப்பதற்காகப் பாட்டி படும் அவதிகளையும் இணையாகவே சொல்லிக்கொண்டு போகிறார் ஆசிரியர். எண்பத்திரண்டு வயது தனி வாழ்க்கையில், பாட்டியால் ‘பாதிநாள் ரசம் அல்லது வெறுங்குழம்பு ஏதாவது ஒன்று” மட்டுமே பண்ணிச் சாப்பிட முடிகிறது. வாய் ருசிக்க தோசை, இட்டிலி, மல்லித் துவையல் சாப்பிட்டதெல்லாம் பழங்கதையாய்ப் போய் முடிய, ‘’ஆறு மாதமாக ராத்திரிப் பலகாரம்கூடக் கிடையாது; மத்தியானம் பன்னிரண்டு மணி சுமாருக்குச் சாப்பிடுவதோடு சரி”. ஒருவகையில் பாட்டிக்கு இவ்வாறு விதிக்கப்பட்ட தனிவாழ்க்கைக்குச் சாப்பாடு என்பதே குரூரமான முகாந்திரமாகவும் ஆகிறது. அவள் இலையில் உட்கார்ந்த நேரம் பார்த்து, “அம்மாடியோவ். ஒண்ணரைப்படி சாதம் சாப்பிடறதே… உங்கம்மாவுக்குச் சாதம் என்னாலே போட முடியாது… இந்த மாதிரி பகாசுரத் தீனி திங்றதைப் பார்த்தா எனக்குப் பயமாயிருக்கு…. குழந்தைகள்ளாம் பயப்படறது” என்று மருமகள் இரைச்சல் போட, வாயில் வைத்த சோற்றுக் கவளத்தை விழுங்க முடியாமல் பாதியிலேயே எழுந்தபடி, ‘தின்கிற ஒரு பிடிச் சோற்றையும்’ அவள் அப்படிச் சொல்லிவிட்டாளே என்று குன்றிப் போகிறாள் பாட்டி.

தனிக்குடித்தனத்தில் தலையில் அடிபட்டுவிட, பாட்டியிடம் மிச்சமிருக்கும் பண்ட,பாத்திரங்களுக்காகவும், நகைகளுக்காகவும் தன்னுடன் கூட்டிச் செல்லும் மகள், “என்னம்மா? நீ சாப்பிட்டா இங்கே ஆயிடப் போறது?” என்று தன்பங்குக்குச் சாப்பாட்டையே குறிவைத்துக் குத்தல் மொழி பேசுகிறாள்.‘அன்பிலாள் இட்ட அமு’தே ஒவ்வொரு கட்டத்திலும் பாட்டிக்கு நஞ்சாகிக் கொண்டு வருவதைப் படிப்படியாகச் சொல்லிக்கொண்டு போகிறது கதை.

சோறே கிடைக்காதவர்களின் சோற்றுக் கவலை ஒருபுறமென்றால் – எல்லாம் இருந்தும் பசித்துக் கிடந்தாக வேண்டிய சூழ்நிலையும் சிலவேளைகளில் நேர்ந்து விடுகிறது. ‘செத்துப்போய்விடுவார்’ என்ற நினைப்பை ஐந்து முறை பொய்யாக்கிப் பிழைத்துக்கொண்ட வயதான கணக்குப்பிள்ளை மாமா ரேழியில் இழுத்துக்கொண்டே கிடக்க, ‘பிணம் விழுந்தால் சாப்பிட முடியாது’ என்று இரை மட்டுமே குறியான கழுகு போல் சாப்பாட்டுக் கடையைச் சீக்கிரம் முடித்துக்கொள்ள ஊரே பரபரக்கிறது (‘கழுகு’) “…..தாத்தா செத்துப் போகப் போறாங்க. செத்துப் போயிட்டாங்கன்னா பொணம் தூக்கற வரைக்கும் சோறு திங்கக்கூடாது…. அதுவரைக்கும் பட்டினி கிடக்க முடியாதில்லை” என்று மதியம் ஒன்றரை மணிக்குச் சாப்பிட்ட கணவனையும், குழந்தைகளையும் மூன்றரை மணிக்கே சாப்பிட்டு முடிக்குமாறு கட்டாயப்படுத்துகிறாள் அந்தக் குடும்பத் தலைவி. அத்தனை முன்னேற்பாடுகளும் பொய்த்துப்போய்க் கிழவர் பிழைத்துக் கொண்டுவிட, முதலில் பசியில்லாமல் சாப்பிட்ட வயிறுகளுக்கு நள்ளிரவில் மெய்யாகவே பசி எடுக்க, பழையதையும் உறிமோரையும் வைத்து அதைத் தீர்த்துக் கொள்கிறார்கள். சக மனித உயிர் பிரிந்துகொண்டிருக்கும் நிலையிலும் கூடப் பசியிலிருந்து தங்களைப் பத்திரப்படுத்திக்கொள்ளவே மனிதர்கள் முனைகிறார்கள் என்ற ‘கன’மான செய்தியைத் தாங்கியுள்ள கதையை நையாண்டியான எள்ளல் பாணியில் நகைமுரணாக இலகுவாகச் சொல்லிக்கொண்டு போகிறார் தி.ஜா. “முருகன் என்னை அளச்சிக்க மாட்டான்போல இருக்கு” என்று ஒப்புக்காகச் சொல்லிக்கொண்டாலும் வாழ்வில் பசி கொண்ட ‘கழு’காய்க் கிழவரும் பிழைத்துவிடுகிறார். அவர் இறக்கப்போகிறார் என்ற நினைப்பில் ஒப்பாரி வைக்கும் கூட்டத்தைப் பார்த்து, “மாமா என்ன குறைச்சலா வாழ்ந்தாங்களா?” என்று ஆவேசப்படும் மாடி வீட்டுக் காவேரியாத்தா, “கத்தரிக்காய் பச்சடி கொஞ்சமாச் சாப்பிட்டாங்களா? வாளக்காய் வதக்கல் கொஞ்சமாச் சாப்பிட்டாங்களா? அறுபது வயசுவர உறைகுத்தின தயிரும், நத்தத்துக் களத்து மாவடுவும் போட்டுக்கிட்டுப் பளயது சாப்பிட்டுக்கிட்ருந்தாங்க… அது மாதிரி யாருக்குச் சாப்பிட முடியும்? யாருக்குச் சாப்பிடத் தெரியும்? பரமக்குடிலேந்து பாவக்காய் வரவளைச்சு நெய்யிலே வதக்கச் சொல்லிப் பளயதுக்குத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவாங்க. என்ன குறைச்சல் அவங்களுக்கு”என்று அடுக்கியபடி கிழவர் நன்றாக உணவு உண்டு ருசித்து வாழ்ந்திருக்கிறார் என்பதையே அவர் வாழ்ந்ததற்கான அடையாளங்களாக முன்வைக்கிறாள்.

இதற்கு நேரெதிரான தளத்தில், “பத்துவேலி நன் செய், ஆயிரம் மூங்கில் கொத்து, ஆயிரம் தென்னை மரம், இரண்டு ஏக்கர் கறிகாய்க் கொல்லை….. மாட்டுத் தரகு, கமிஷன், வியாபாரம்…” என்று கொழித்தாலும்….“சம்பாதிச்சாப் போறாது ஐயா. சாப்பிடக் கொடுத்துவைக்கணும்” என்று நெஞ்சடைத்துக் கண்ணீர் பெருக்குபவன் ‘இக்கரைப் பச்சை’, ‘அத்துவின் முடிவு’ என்ற இரண்டு கதைகளிலும் கதை நாயகனாக வரும் அத்து என்ற அர்த்தநாரீஸ்வரன். சமையலில் மகா சிக்கனம் காட்டும் அவன் மனைவி, சமையலுக்கு ஆளே வைத்துக்கொண்டாலும் கடுகையும், எண்ணெயையும்கூட அளந்தளந்து கொடுப்பவள். அத்துவுக்குக் கிடைப்பதெல்லாம் “கொத்தவரைக்காய் வதக்கல், அவரை வற்றல் குழம்பு இந்த இரண்டும்தான்… இரவு பட்ஜட் – கொல்லைக் கத்தரிக்காயைச் சுட்டு ஒரு தொகையல், மிளகு ரசம், காய்ச்சின அப்பளம்” மட்டுமே. பால்கோவாவும், பாதுஷாவுமாய்ச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை கொண்ட அத்துவுக்குக் ’குறும்பை வாங்கி’யால் நெய்யை அளந்துபோடுகிறாள் மனைவி. பாலும், தயிரும், போஷாக்கும் சேராத உடம்புக்குச் காசநோய் வந்துவிட, அது முற்றிய நிலையில் தனிப்பண்டபாத்திரங்களைத் தோட்டத்தில் வைத்தபடி உதவியாள் சிங்காரம் காய்ச்சும் கஞ்சியே அத்துவுக்குச் சாப்பாடாகிறது.‘மொட்டை’ சிறுகதை, தனிமனிதப் பாத்திரச் சித்தரிப்பாக மட்டுமே விரிந்துகொண்டு சென்றாலும் – ஊனத்தை வெற்றிகொள்ளப் போராடும் சன்னாசியின் கண் குருடானதற்கான காரணங்களில் ஒன்றாக இறந்துபோன அப்பனுக்காக விரதம் இருக்கும்போது பசி பொறுக்க முடியாமல் அவன் விழுங்கும் ஒரு தூக்குப் புளியங்காயே காட்டப்படுகிறது. பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் வயிற்றுப் பசிக்கு அடுத்தாற்போல, மனிதப் பிறவிகளை ஆட்டிப் படைக்கும் பெரும் பசியாக அழகும் காமமும் ‘கொட்டுமேளம்’ தொகுப்பின் பல கதைகளிலும் முன்னிறுத்தப்படுகின்றன.

பெண் அழகில் லயித்துக் கரைந்து அதை உபாசிக்கவும் செய்யும் மனித மாதிரிகள் வெளிப்படுவது தி.ஜா.வின் நாவல்களில் மட்டுமல்ல; அவரது சிறுகதைகளிலும் கூடத்தான் என்பதையே ‘சண்பகப்பூ’, ‘தவம்’, ’ரசிகரும் ரசிகையும்’ ஆகிய சிறுகதைகள் உறுதிப்படுத்துகின்றன.“அது என்ன பெண்ணா? முகம் நிறைய கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்; உடல் நிறைய இளமை; இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய நெளிவு; நெளிவு நிறைய இளமுறுவல்” என்று அந்தாதிபோல அடுக்கியபடி பெண்மை வனப்பின் மீது மோக வேட்கை கொள்ளும் மனிதர்களுக்கு வயதின் மூப்போ, திருமணம் என்ற தகுதியோகூடத் தடையாவதில்லை. ‘சண்பகப்பூ’வில் வரும் தாத்தாவுக்குத் தன்னோடு ஆடுபுலியாட வரும் பெண்ணின் அழகை ரசிப்பதென்பதே ஒரு தினசரிப் பொழுதுபோக்கு. “அந்தப் புதையலைக் கண்டு வியப்பது அவருக்கு முக்கியமான வேலை; பலனை நோக்கிச் செய்யாத நித்தியக் கடமைபோல அவருக்கு ஆச்சரியப்படுவது தினசரிக்கடமை” என்று விவரிக்கும் கதாசிரியர், அந்தச் செயலை, “வயசான துணிச்சலுடன் கண்ணாரப் பார்த்துப் பூரித்துச்” செய்துகொண்டிருந்தார் என்றும் சொல்லிக்கொண்டு போகிறார்.

‘ரசிகரும் ரசிகையும்’ கதையில் வரும் சங்கீத வித்வானுக்கோ – ஒரு பொது இடமான ரயில்வே பிளாட்பாரத்தில் கணவனோடு சேர்ந்து நிற்கும் பெண் என்பதுகூட, அந்த அழகை ரசிக்கத் தடையாக இருப்பதில்லை. “இந்த அழகைப் பார்க்காத கண்ணு இருந்தா என்ன, அவிஞ்சா என்ன? அழகைப்பார்த்து ரசிக்க எல்லாருக்கும் பாத்யமுண்டுய்யா, அப்படிச் சொன்னா படைச்சானே பிரம்மா அவனைத்தான் குறைகூறணும்”என்று தன் ரசனையை நியாயப்படுத்திக்கொள்பவர் அவர்.“வெண்தாழை முகம், பாதம், கை, முதுகில் தளர்ந்து புரளும் சிற்றலையோடும் கூந்தல்; அரக்குவர்ணப் புடவை; வலது கையில் பூஜைத் தட்டு; இடது கையில் முன்றானை; வாளிப்பும் வர்ணமும் ஒன்றி வடிந்த அழ’’காகத் தன் “அந்தரங்கத்தை நிறைத்து நின்ற வனப்பு வடிவ”த்தோடு ஒரே ஒரு நாள் செலவிடுவதற்காகப் பத்து வருடம் சிங்கப்பூரில் ஓடாய் உழைத்து வயிற்றைக் குறுக்கிப் பணம் சேர்க்கிறான் ‘தவம்’ சிறுகதையின் கோவிந்தவன்னி.

மேற்குறித்த மூன்று சிறுகதைகளுமே இயற்கையோடும், தெய்வீகத்தோடும், இசையோடும்… இன்னும் எதையெல்லாம் உயர்வாகவும் உன்னதமாகவும் மனிதன் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அவை எல்லாவற்றோடும் பெண்ணழகை ஒப்பிட்டுப் பார்த்து மாய்ந்து மாய்ந்து போற்றித் துதி பாடினாலும் மனநிறைவு பெற முடியாமல் தவிக்கும் மானுடத்தின் தீராத அழகுப் பசியையே பல கோணங்களில் விவரித்துக்கொண்டு செல்கின்றன. பெண்ணின் எழில் மீது எழும் பசி, அவளை ஆள வேண்டும் என்ற காமப் பசியாக, கனலும் வேட்கையாக ஆணுள்ளத்தில் பரிணாமம் கொள்ளும்போது, முறையானது, முறை பிறழ்ந்தது என்ற பாகுபாடுகளும்கூட அந்த மோக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடுவதைப் பார்க்க முடிகிறது. பெண்ணழகு ஆணுக்குத் திகிலூட்டும் அதேநேரம், அதைத் தனக்கு உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற பெருவிருப்பையும் ஒருசேரக் கிளர்த்துகிறது .“மனுஷப் பிறவி இவ்வளவு அழகா இருக்கமுடியுமா?..ஏதோ மோகினியா இருக்குமோன்னுகூட அச்சமாயிருந்திச்சு. பூ அழகாயிருந்தா அதுசகஜம்.. ஆனா மனுசப் பிறவி இப்படி இருந்தா?” என்று ஒருபக்கம் அதிசயித்துப்போனாலும் செல்லூர்ச் சொர்ணாம்பாளோடு ஒருநாள் வாழ்ந்தால்கூடப் போதும், “அப்புறம் உசிர் வாழணும்னுதான் என்னமுடை?” என்ற நினைப்போடு மட்டுமே இயங்கும் கோவிந்தவன்னி ,குடும்பத்துக்குக்கூடப் பணம் சேர்க்காமல், கண்காணாத சீமையில் ஒண்டியாக நாளை ஓட்டுகிறான்.

‘சண்பகப்பூ’வில் வரும் கிழவரும்கூட, “மண்ணில் பிறந்த பெண்ணும், ஆணும் முயங்கி வடித்த மனுஷ்யப் படைப்பா அது?”…“இந்த முழுமையைத் தனது என்று சொல்லிக்கொள்ளக் கொடுத்துவைத்தவன் இருக்கிறானா?... புருஷன் என்று சொல்லிக் கொண்டு வருகிறவனுக்கு இதைத் தொட்டு ஆள மனம் வருமா…. ரோஜாப் பூவை அரைத்துக் குல்கந்து தின்கிற நாசகார உலகத்தில் ஒருவன் இவளை வந்து தொட்டு ஆண்டு, தாயாக்கி, பாட்டியாக்கி எல்லாரையும்போல மனுஷியாக்கத்தான் போகிறான்..”என்றெல்லாம் அந்த அதிமானுட அழகைத் தனி உடைமையாக்கும் தகுதி அற்ப மானுடர்க்கில்லை என்றும், ரத்தப்பூவான அவளை முகர்ந்ததாலேயே அவள் கணவன் அகாலமாய் இறக்க நேரிட்டது என்றும் அங்கலாய்த்துக்கொள்கிறார்; இவையெல்லாம் வெளிப்பேச்சுகள் மட்டுமே என்பதையும் அபூர்வமான அந்த அழகு, தனக்குக் கிட்டாமல் போனதன் வெளிப்பாடுகளே அவை என்பதையும் சிறுகதையில் பூடகமாகவும் வெளிப்படையாகவும் தி ஜா., உணர்த்திக்கொண்டே போகிறார்.

‘தாரித்திரியத்தை அநாதையாக விட்டுவிட்டுப் போகிறோமோ’ என்று இறக்கும் வேளையில் புலம்பிய சாருதத்தனை நினைவுகூர்ந்தபடி ஐந்து ரூபாய் நன்கொடை தருவதற்குக்கூட ஆயிரம்முறை யோசிக்க வேண்டிருப்பவன் (’நானும் எம்டனும்’), “முப்பத்தாறு ரூபாய் சம்பளத்தில் பால் பணம், மோர்ப்பணம், வீட்டு வாடகை, மளிகைப் பற்று எல்லாம்போக மீதியிருந்த மூன்று ரூபாயை” வைத்து எந்தக் கடனை அடைப்பதென்று தெரியாமல், ஏக்கர் கணக்கில் நிலம் சேர்க்கும் அடுத்தவீட்டுப் பச்சையைப் பார்த்து நெடுமூச்செறிபவன் (’இக்கரைப் பச்சை’) என்று பொருள் இல்லாதவர்கள் படுகிற பசி, மருத்துவப் பட்டம் பெற்று டாக்டர் தொழிலே செய்தாலும் அடுக்கடுக்கான தோல்விகளையும், ஏமாற்றங்களையுமே சந்தித்தபடி-வாய்ப்புக்கள் தவறிப்போனதாலோ, அவற்றைத் தவற விட்டதாலோ வெற்றிக்கோட்டை எட்டும் பசியோடு இருப்பவன் (’கொட்டுமேளம்’), தற்செயலாக ஏற்பட்டுப்போன கண்பார்வைக் குறைபாட்டை மூர்க்கமான மனஉடல் உரத்தால் வெற்றிகொள்ளும் பசியோடு அலையும் ‘மொட்டை’என்று வேறுவகையான பசிகளையும்கூடக் ‘கொட்டுமேளம்’ தொகுப்பிலுள்ள கதைகள் சுட்டிக்காட்டினாலும், வயிற்றுப் பசியும், அழகு/காமப் பசியுமே அதிகமான உள்ளடக்கங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மானுடத்தின் நியாயமான பசிகளை ஆற்றாமல் அப்படியே விட்டுவிடவும் தி ஜா வுக்கு மனமில்லை. ‘சிலிர்ப்பு’ கதையில் வேலை தேடிச் செல்லும் சிறுமியின் நிலை கண்டு கசியும் கதைசொல்லியின் சிறுவயது மகன், கதையின் தொடக்கத்திலிருந்து எந்த ஆரஞ்சுப் பழத்துக்காக விடாமல் நச்சரித்து வந்தானோ, எந்தப் பழத்தை அம்மா உரித்துத்தந்து சாப்பிட வேண்டுமென்று பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டு வந்தானோ அந்தப் பழத்தைக் கதை முடியும் தருவாயில் அந்தச் சிறுமிக்குத் தர முன்வருகிறான்; ஆரஞ்சுப் பழம், இங்கே பசியாற்றும் குறியீடாக மட்டுமல்லாமல், அன்புக்கும், நேசத்துக்குமான பசியாற்றும் பருப்பொருள் வெளிப்பாடாகவும் ஆகிறது; அகிலத்தையே அன்பால் அரவணைக்கும் செயலாக அந்தத் தந்தைக்கு அது சிலிர்ப்பூட்டுவது அதனாலேதான்.

தோல்விகளையே அடுக்கடுக்காய் சந்தித்து, எளிதாக ஏமாறக்கூடியவர் என்ற பெயரையும் எடுத்துவிட்ட ’கொட்டுமேளம்’ மருத்துவர் இலவச வைத்தியசாலை ஒன்றை அமைப்பதன் வழி தன் தோல்விகளையே வெற்றியாக மாற்றிக்கொண்டபடி வாய்ப்புக்கான பசியைப் புறத்தில் தேடிக்கொண்டிருக்காமல் தானாகவே அதை ஆற்றிக்கொண்டு விடுகிறார்.
பாதை பிறழ்நது வரும் பசிகளை (’தவம்’, ’ரசிகரும் ரசிகையும்’) இந்தத்தொகுப்பின் கதைகள் ஆற்ற முனைவதில்லை; கண்டிக்கவே செய்கின்றன. அதே வகையான பிறழ்வு, கடும்பசியாக இல்லாமல் கணநேரச் சலனமாக மட்டும் ஆகும்போது, அது ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுகிறது; மடைமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறது. காது கேட்காத கணவனால் மனத்துக்குள் எழும் இலேசான அதிருப்தி, அடுத்த வீட்டு மிலிட்டரி பையன் மீதான ஆர்வமாக மேலெழும்ப, நைவேத்தியப் பாத்திரத்தைத் தந்தபடி “ரொம்ப நாழி பண்ணிவிட்டேனோ? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்கு” என்ற பரிவும் கனிவுமான கணவனின் சொற்களாலும், நிர்மலமான அவனது பார்வையாலும் மாறிவிட, “அவளுக்கு எல்லாப் பசியும்” அதோடு “தீர்ந்துவிட்டது” என்கிறது ‘பசி ஆறிற்று’ சிறுகதை.
‘கொட்டுமேளம்’ தொகுப்பின் சிறுகதைகளில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள், பின்னாளில் உருவாக்கம் பெற்ற அவரது நாவல்களின் பெண்களை ஒத்தவர்களாக – அவர்களின் சுருங்கிய பதிப்புப் போலவே இருப்பதில் வியப்பேதுமில்லை. ஆட்கொள்ள முடியாத பிரமிக்க வைக்கும் பேரழகு கொண்டவர்களாக- காமத்துக்கான நுகர்பொருளாக ஆராதிக்கப்படுபவர்கள் என்ற வகைப்பாட்டிலேயே தன் பெரும்பான்மைப் பெண் படைப்புகளைப் புனையும் தனித்துவத்தைத் தி.ஜா. கைக்கொண்டிருக்கும்போது, அந்தப் பொதுப்போக்கிலிருந்து அவரது சிறுகதைகள் மட்டும் விலக்குப் பெற்றவையாய் இருக்க வழியில்லை. ‘கொட்டுமேளம்’ தொகுப்பைப் பொறுத்தவரை, மேற்குறித்த பெண்மாதிரிகளே மிகுதியாக வந்தாலும், அவர்களுக்கு நேர் எதிர்ப் பேரெல்லையாகக் கொடூரமே வடிவான சில பெண்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எச்சில் இலையை மாமியார் தலையில் தூக்கி எறிந்து அவமானப்படுத்துபவர்கள் (’வேண்டாம் பூசணி’), கணவனை அடித்துத் துவைத்து அரைப்பட்டினிபோட்டுவிட்டு, வீட்டிலிருக்கும் குழந்தைகள்கூடச் சாப்பிட முடியாதபடி ‘’ஒரு பானைச் சோற்றிலும் சாணியைக் கரைத்து” ஊற்றுபவர்கள் (’இக்கரைப் பச்சை’). இத்தகைய இரு ‘மாதிரி’களுக்கும் இடைப்பட்டவர்களாய் வரும் பெண்கள் தனித்துவம் ஏதுமற்ற சராசரி ஜீவிகள். இந்தப் போக்குகளிலிருந்து வேறுபட்டு ஆக்கபூர்வமான தனித்தன்மையும், துணிச்சலும், சுய சிந்தனையும் கொண்ட பெண்களாகக் ‘கொட்டுமேளம்’ தொகுப்பில் வெளிப்பட்டிருக்கும் இருவருமே விலைமகளிர் என்பது ஆழ்ந்த அவதானிப்புக்குரியது.

தன்னைத் தேடிவரும் மனிதர்கள் பலர் இருக்க – ஒரு சங்கீத வித்துவானின் தனித்திறமைக்காக, தானாகவே அவரைக் கூப்பிட்டு அனுப்புகிறாள் ’ரசிகரும் ரசிகையும்’ சிறுகதையில் வரும் ரசிகையான விலைமகள் .“என் காதை ரொப்பறதுதான் பாட்டு… என மனசை ரொப்பணும், என் பிராணனைப் போய்க் கவ்வணும், இந்த தேகம், உயிர் எல்லாம் மறந்துபோகணும்… இந்த வீட்டுக்கு அப்படிப் பாடற ஆத்மாவை நான் வரவளைக்கணும்” என்று ஆசைப்பட்டுத் தியாகப் பிரம்ம ஆராதனைக்கு வந்த மார்க்கண்டத்தை வீட்டுக்கு வரவழைக்கிறாள். “போன வருஷத்திலேயிருந்துதான் நீங்க நெஜம்மாப் பாட ஆரம்பிச்சிருக்கீங்க. அதுக்கு முன்னாடி சும்மாச் சத்தம் போட்டுக்கிட்டிருந்தீங்க” என்று துணிவாக அவரது சங்கீதத்தையே விமரிசிப்பதோடு, அவரை உபசரிக்கவும் செய்கிறாள். மோகக்கிறக்கத்தில், அவள் தன்னை அழைத்திருப்பதற்கான அடிப்படையையே மறந்துவிட்டு – ஒரு பாவனைப் பேச்சாக அவளைத் தியாகய்யரோடும், அவரைவிடக்கூட உயர்வாகவும் தூக்கிவைத்துப் புகழத் தொடங்கிவிடும் வித்துவானின் பேச்சால், ஒருநொடியில் அவளது உள்ளத்திலிருந்து சரிந்துவிடுகிறார் அவர். “மனுஷப் பூச்சியெல்லாம் அரித்த இந்த உடம்பைத் தியாகையர் பாட்டோடு சரிக்கட்ட வேண்டாம்” என்று அவள் சொல்லச்சொல்ல, அவரது பைத்தியம் முற்றிக்கொண்டே போகும் நிலையில், “தாசியாப் பொறந்திட்டா இந்த மாதிரி முட்டாத்தனத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டுக் கிடக்கணும்னு மொடையில்லே… போய்யா எளுந்திரிச்சு” என்று அவரை விரட்டியும் விடுகிறாள்.
‘தவம்’ சிறுகதையின் விலைமகள் சொர்ணாம்பாளும்கூடத் தன்னோடு உடன் இருக்கப் பத்து வருடக் காலம் உழைப்புத் தவம் இருந்துவிட்டு வரும் கோவிந்தவன்னியின் தவத்தை மேன்மைப்படுத்துவதில்லை. ‘மோகமுள்’ யமுனாவின் ‘’இதுக்குத்தானா?’ என்ற புகழ் பெற்ற வார்த்தையையே வேறுவகையாகச் செயல்படுத்திக் காட்டுகிறாள் அவள்.“தவங் கிடக்கிறதுக்கு முறை உண்டு. கண்டதுக்கெல்லாம் தவம் கிடந்தா மனசுதான் ஒடியும், தண்டனைதான் கிடைக்கும். இப்படிவா” என்று அவனைத் தழுவி முத்தமிடுகிறாள்.“ நான் தாசி… ஒரு வருஷம். எனக்குப் பத்து வருஷம்… பார்த்த பேரெல்லாம் மடங்கி மடங்கி நெருப்பிலே விழுகிற மாதிரி விழுந்தாங்க. நெருப்பு எரிய எரியக் குப்பையும் அதிகமாத்தானே இருக்கும்” என்று பேசி அவனை அதிரவைக்கிறாள் அவள்.
சராசரிப் பெண்களிடம் காணக்கிடைக்காத இத்தகைய தனித்துவத்தை விலைமகளிருக்கு அளித்திருப்பவை இசை, நடனம், கல்வி என்று அவர்கள் பெற்றிருக்கும் துறைசார் தனித்தகுதிகளும், பொருளாதாரத் தற்சார்புமே என்பதையே தஞ்சைப் பின்புலம் சார்ந்தவரான தி.ஜா., இச்சித்தரிப்புக்களின் வழிகூர்மையாய், நுட்பமாய்ப் பதிவுசெய்திருக்கிறார்.
தி.ஜா.வின் நாவல்களைவிட, அவரது ஆழ்மனமும், கலையழகும், மனித மன நேர்த்திகளும், விகாரங்களும், மானுடத்தின் மீதான அவரது காருண்யமும் அதிகம் வெளிப்படுவது அவரது சிறுகதைப் படைப்புகளிலேதான் என்று சில தேர்ந்த எழுத்தாளர்களும், விமரிசகர்களும் தொடர்ந்து கூறிவந்தபோதும் அறுபதுகளுக்குப் பின் எழுந்த அவரது பெரிய நாவல்களின் சிறுசிறு தீப்பொறிகளை, கங்குகளையே அவரது ஆரம்பகாலச் சிறுகதைகளிலும் காணமுடிகிறது. சிறுகதைக்குத் தேவைப்படும் ஒருமைப்பாட்டின் நிமித்தம், அதற்குள் அடங்கி வாசித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதைச் சிறுகதை வடிவம் பற்றிய தன் கட்டுரை ஒன்றில் தி.ஜா.வே குறிப்பிட்டிருந்தாலும், தான் எண்ணியதில் ஒரு தெறிப்பை மட்டுமே காட்ட…., தன் எழுத்தின் வெளிச்சம் ஒரு புள்ளியை நோக்கியதாக மட்டுமே அமைய அவர் பெரிதும் பிரயத்தனம் மேற்கொண்டிருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. சிறுகதையின் வடிவ ஒழுங்கையும், கட்டுக்கோப்புகளையும் பொங்கிவரும் புதுவெள்ளக் காவிரியாய் உடைத்துத் தகர்த்தபடி, தோற்றத்தாலும் குணநலன்களாலும் மனிதர்களையும் - காட்சிப்படுத்தல்களால் பின்புலங்களையும் விரிவான ஆலாபனைகளால் அவர் விஸ்தரித்துக் கொண்டே செல்லுவதைக் காணும்போது, சிறுகதை எழுதும்போதும்கூட நாவலுக்கான மன அமைப்பே தி.ஜா.வுக்குள் கூடுதலாய்க் கூடி இருந்திருக்க வேண்டும் என்றே அனுமானிக்க முடிகிறது.
மானுடத்தின் உன்னதங்களோடு, மனித மனக் கோணல்களையும், வக்கிரங்களையும், உடல்/ உள்ளம் சார்ந்த பலவகைப் பிறழ்வுநிலைகளையும் – தன் நாவல்களைப் போலவே சிறுகதைகளிலும் கருப்பொருளாக்கியிருக்கும் தி.ஜா., அவற்றைப் புறநிலையிலிருந்து மட்டுமே காட்டிவிட்டு விலகிவிடுகிறார் என்பது உண்மைதான். ஒருசில கதைகளில் அவற்றின் குறைபாட்டைக் குறிப்பாகவோ மறை பொருளாகவோ சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. ஆனாலும் பலவீனங்களின் குரூர அழகு, விரிந்துகொண்டே செல்லும்போது, சாமர்த்தியமான ஜாலங்கள் காட்டும் தி.ஜா.வின் மொழி அழகாலும், கதைக்கூற்று முறையில் அவர் கையாளும் சுவாரசியங்களாலும், லாகிரியூட்டும் வருணனைகளாலும் தன்வசமிழந்து போய்விடும் வாசகன், அவர் உணர்த்த நினைக்கும் இறுதிப் புள்ளியைக் கோட்டை விட்டுவிட்டு ‘அவை மட்டுமே அவர்’ என்று எண்ணிவிடுவதே தி.ஜா.வின் பலமும் பலவீனமுமாகிறது.
****……………………………………………………………………………………………***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....