துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.11.14

குருகும் உண்டு ....

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-11

கடற்கரை மணல் வெளிகளிலும்,தோட்டத்துப் புல் வெளிகளிலும் ஒருவனும்,ஒருத்தியும் ஜோடியாகச் சஞ்சரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது...ஒரு காலம்.

இன்றோ நிலைமை...தலை கீழாக மாறிக் கிடக்கிறது !
இரண்டு பெண்கள்,ஒரு ஆண்-
இரண்டு ஆண்கள் ,ஒரு பெண்-
இப்படிப்பட்ட முக்கூட்டணிகளே தனிமையான இடங்களில் ஏராளமாகப் பெருகிப் போய்க் கிடக்கின்றன.
இவர்களின் நோக்கம் என்ன ?
 நட்பா?காதலா?
நட்பென்றால் தனியிடம் தேடி ஒதுங்கிச் செல்ல வேண்டிய தேவையில்லை.
காதலென்றால் இன்னுமொரு ஆணுக்கோ,பெண்ணுக்கோ அங்கே என்ன வேலை?
உடனிருக்கும் மூன்றாம் நபர்,நெருங்கிய நண்பன் அல்லது தோழியாகவே இருந்தாலும்,அவரவர் மனங்கள் மட்டுமே உணரக்கூடிய
அந்தரங்கத் தூய்மை கொண்ட காதல் பரிமாற்றங்கள்... அடுத்தவர் முன்னிலையில் சாத்தியம்தானா?

குறுந்தொகையின் ஒரு காட்சி கண்முன் நீள்கிறது.
நீண்ட நாட்களாகத் தன்னைப் பார்க்க வராத தலைவனின் நினைவில் ஏக்கமுற்றிருக்கிறாள் ஒரு தலைவி.
மனத்தின் ஒரு மூலையில் அவன் தன்னைக் கை விட்டு விட்டானோ என்ற மிக இலேசான நெருடலும் கூட......
தானும்,அவனும் சந்தித்துக் காதல்மொழி பேசிக் களித்திருந்த அந்தத் தருணத்துக்குச் சாட்சியாக வேறு யாருமே உடனில்லை.
அவனுக்கும்,அவளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு இரகசியக் கணம் அது.
அதை அவன் மறுத்துவிட்டால்,பொய் கூறிப் பிழைத்துவிட்டால் வேறு சாட்சிகளைத் தேடிக் கொண்டு அவள் எங்கே செல்ல முடியும்?
நினைவு அடுக்குகளைத் துழாவிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று அவளுக்கு ஒரு தடயம் கிட்டிவிடுகிறது.

அவர்கள் சந்தித்தது...தனிமையான ஒரு நீர்நிலைக்குப் பக்கத்தில்.
ஆள் அரவங்களே அற்றுப் போயிருந்த அந்த இடத்தில்,
மீன் பிடிக்கும் வேட்கையுடன் ஒரு நாரை(குருகு)மட்டும் தண்ணீருக்குப் பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த காட்சி அவள் நினைவுத் திரையில் படமாய் விரிகிறது.

ஆனால்...அதிலும்  ஒரு ஏமாற்றம்!
அந்தக் குருகும் கூட...ஓடுமீன் ஓட உறுமீன் வருவதையும்,அதைப் பிடிக்கப் போகும் தருணத்தைதயும்தான் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்ததே தவிர அவர்களின் காதல் விளையாட்டுக்கு அது ஒன்றும் சாட்சியாகி விடவில்லை.

தனக்குத் துணைவரச் சாட்சியில்லாமல் போய்விட்டதே  என்ற ஏமாற்றத்தை விடவும்....நல்ல வேளையாக அல்திணைப்(சிந்திக்கும் அறிவற்ற) பொருளாகிய அந்தக் குருகு கூடத் தங்களைப் பார்த்து விடவில்லை என்பதிலேயே பெருத்த நிம்மதி அடைகிறாள் நுட்பமான நாண உணர்வு கொண்டிருக்கும் அந்தச் சங்கத் தலைவி.

’யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’’-குறுந்தொகை25(கபிலர்)

இதே போன்ற செய்தி, ஒரு நற்றிணைப் பாடலிலும் உண்டு.
நாள்தோறும் தலைவியைத் தொடர்ந்து சந்தித்துவரும் தலைவன்,ஒரு நாள் அவளை ஒரு புன்னை மரத்தடியில் சந்திக்க,அவள் நாணத்தோடு அங்கிருந்து நழுவப் பார்க்கிறாள். அதற்குக் காரணம்,அந்தப் புன்னைமரம்,அவளது தாய் நீரூற்றி வளர்த்த மரம்.
‘’இம்மரம் உன் தமக்கையைப் போன்றது ‘’
என்று சொல்லிச் சொல்லியே அவளை வளர்த்திருக்கிறாள் அவள் தாய்.
தமக்கையை அருகில் வைத்துக் கொண்டு காதல் புரிவதைத் தகாத செயலாக நாணிக்கூச்சம் அடைகிறாள் அந்தப் பெண்.

’’நும்மினும் சிறந்தது நுவ்வை(உன் தமக்கை)யாகுமென்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே’’-நற்றிணை172

புனிதமான தங்கள் நேசத்துக்கு உயிரற்ற பொருட்களும்....வாய்பேச முடியாத ஐந்தறிவு உயிர்களும் சாட்சியாவதைக் கூடச் சங்கக்காதலால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
காரணம்.... அந்தரங்கம் புனிதமானது!

இணைப்பு;
சங்கக்காதல்(நற்றிணை)

21.7.14

ஆடிப் பாவை போல

சங்கச் சமூகத்தில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி உட்படப் பெரிதாக எவரும் அலட்டிக் கொள்வதில்லை; பரத்தமைஒழுக்கம் ன்பதாக- ஒழுக்கம் என்ற சொல்லாலேயே அதைக் குறிப்பிடும் அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் .எந்த மனத்தடையும் இன்றி இயல்பாக.ஏற்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாகவே அது இருந்து வந்திருக்கிறது.
இற்பரத்தை..சேரிப் பரத்தை என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் குறிப்புக்கள்,பரத்தையர் வீதி பற்றிய செய்திகள் ஆகியவை இதற்கான சான்றுகள்.

இவையனைத்தும் ஒரு புறமிருக்க...
பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் மன நிலை எப்படி இருந்திருக்கிறது..,
அவளது அந்தரங்கம் இதை எப்படி உள் வாங்கிக் கொண்டிருக்கிறது,
என்னதான் அது ஒரு சமூக வழக்கமாகி நிலைபெற்றுப் போயிருந்தாலும் அவளது ஆன்மத் தவிப்பு எத்தகையதாக இருந்திருக்கிறது..
என்பது குறித்த உணர்வுகளையும் மிக நுட்பமாகச் சில சங்கப் பாடல்கள் தொட்டுச் செல்லாமல் இல்லை.

குறுந்தொகையில் இடம் பெறும் ஆலங்குடி வங்கனார் என்னும் புலவரின் கீழ்க் காணும் பாடல் அத்தகையது.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 
  பழன வாளை கதூஉம் ஊரன் 
  எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
  கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை போல
  மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே
’ 
-ஆலங்குடி வங்கனார் (குறுந்தொகை-8)


’’கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை ’’
இது,மருதத் திணையில் அமையும் பாடல்.
மருதத்தின் உரிப் பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும்.
(நிமித்தம் என்பது,சார்ந்தது-ஊடல் தொடர்பானது என்று பொருள்)
செல்வ வளம் மிகுந்த மருதநிலத்தில் பிற நிலங்களைக் காட்டிலும் பரத்தமை ஒழுக்கம் கூடுதலாக இருந்த காரணத்தாலேயே
(சங்கத்தைத் தொடர்ந்த சிலம்பின் காலத்தில் காவிரிக் கரையின் செழுமையிலேதான் கரை புரண்டு ஓடியிருக்கிறது பரத்தமை)
தலைவியின் ஊடலும் கூடுதலாகிறது.
அதனாலேயே மருத உரிப் பொருளாகவும் அது ஆகிறது.

குறிப்பிட்ட இந்தக் குறுந்தொகைப்பாடல் பரத்தையின் கூற்றாகச் சொல்லப்படுகிறது.
தலைவி தன்னைப் பழித்தாள் என்பதைக் கேட்ட பரத்தை தலைவனை எள்ளிநகையாடுவது போன்ற தொனியில் மறைந்தபடி..தன் ஆற்றாமையைச் சொற்களில் வடிக்கிறாள்.

மருதநில வயல் வரப்புகளில் உள்ள மாமரங்களில் இருந்து தானாய்க் கனிந்து கீழே விழுகிற மாங்கனிகளை,வயல்களின் அருகிலுள்ள பொய்கைகளிலுள்ள வாளை மீன்கள் கவ்வும் ஊரைச் சேர்ந்தவன் தலைவன் என்ற முன் குறிப்புடன் தொடங்குகிறது பாடல்.
’’கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்’’
ஊரன் என்பது மருதநிலத் தலைவனுக்கு அளிக்கப்படும் சுட்டுப் பெயர்.
இந்த வரிகளில் சங்கப் பாடல்களுக்கே உரிய உள்ளுறை பொதிந்து கிடக்கிறது.
வயல் வரப்பு என்பது நெறிப்படுத்தப்பட்ட இல் வாழ்வு.
அதிலிருந்து தானாக விலகி வழுவிப் போகும் தலைவனை- மாம்பழத்தைக் கவ்வும் வாளை மீன்களைப் போலத் தங்கள் பிடிக்குள் இறுக்கிக் கொள்கிறார்கள் பரத்தையர்கள்.
அவர்களாக அவனைத் தேடிச் செல்வதில்லை.
தானாய்க் கனிந்து கீழே உதிரும் பழத்தைப் போல அவனாகவே அவர்களிடம் வசப்படுகிறான் என்கிறது பாடல்.
அடுத்தாற்போல எம்மில்,தம்மில் என்று ஒரு முரணைச் சுட்டுகிறாள் பரத்தை.
எம் இல் என்பது, பரத்தையர் இல்லம்.
தம் இல் என்பது,தலைவன் தன் மனைவியோடு கூடி வாழும் வீடு.
எங்கள் வீட்டில் எங்களோடு கூடியிருக்கையில் தன் வாய் சாதுரியத்தால் எங்களைப் புகழ்ந்து பேசியும் தன்னைப் பற்றிய பெருமிதத்தை வெளிக் காட்டியும் ...
’’எம்மி(ல் )ற் பெருமொழி கூ’’றுபவனாக நடந்து கொள்கிறான் அவன்..
எங்களுடன் இருக்கையில் மேற்படி முகம் காட்டித் தன் ஆண்மையின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் தலைவன் தனது இல்லத்துக்குச் சென்றதும் அடியோடு மாறிப்போய் விடுகிறான்..
தன் மனைவி என்ன சொன்னாலும் அதை உடனடியாகச் செய்து முடிக்க ஆயத்தமாகி விடுகிறான் அவன்..
கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நாம் செய்வதையெல்லாம் செய்வதைப்போல அவள் சொன்னபடியெல்லாம் நடந்து கொண்டு-
அவள் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மையைப் போலவே ஆகி விடுகிறான் அவன்.
இதை,
’’தம்மி( ல்)ற் கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’
என்னும் வரிகளின் மூலம் இகழ்ச்சியாக..முன் வைக்கிறாள் அவள்.
பொதுவாக இப்பாடலை மேற்கோள் காட்டும் கட்டுரைகள்,நூல்கள்(மற்றும் வகுப்பெடுக்கும் பேராசிரியர்களும் கூடத்தான்)இதிலுள்ள நகைச் சுவையைச் சுட்டிக் காட்டுவதோடு வேலை முடிந்து விட்டதாக நினைக்கிறார்களே தவிரப் பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் ஆழ்மனச் சோகமும்,அவளுக்குள் ஏற்பட்டுப் போயிருக்கும் உட்காயமும் இதில் பதிவாகியிருப்பதைப் பற்றி எவரும் அக்கறை கொள்வதில்லை.

இந்தச் சங்கப் பாடலுக்குள்- ’’மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’’என்னும் உச்ச வரிகளுக்குள் தலைமுறை தலைமுறையாய்ச் சொல்லப்படாது போன பெண்ணின் சோகமல்லவா புதையுண்டு கிடக்கிறது?
இப் பாடலில் பரத்தை தலைவனை நையாண்டி செய்கிறாள் என்பது உண்மைதான்..
ஆனாலும் இதிலுள்ள எள்ளல் ஒரு புறம் இருக்க.,.இதன் பின்னணியிலுள்ள ஆற்றாமையே அவளது அடிமன ஆழத்தின் பதிவாக வெளிப்படுகிறது.
தலைவியிடம் கிடைக்காத தோழமையையும்,கலை ஆர்வத்துக்கான வடிகால்களையும் நுகர மட்டும் பரத்தையிடம் சென்றாலும்,தலைவன் தரும் முறையான அங்கீகாரம் தலைவிக்கு மட்டும்தான்!.
அதற்கான காரணம் அவள்,அவனது ’’புதல்வன் தாய்’’என்பதே!. .
அவனுக்குச் சட்ட பூர்வமான வாரிசைப் பெற்றுத் தரும் அவளே அவனுக்கு நிரந்தரமானவள்.
’பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனி ஊரன்’
என மற்றொரு சங்க அகப்பாடலும் தலைவியைக் 
காய்த்த நெல்லாகவும்(குழந்தைப் பேற்றினால்)
பரத்தையைப் பூத்த கரும்பாகவும் சுட்டுவதைக் காண முடியும்.

ஏதோ ஒரு வகையில் இரு பெண்களையும் சுரண்டலுக்கு உள்ளாக்கித்தான் தலைவன் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்றபோதும் 
புதல்வனுக்குத் தாயாகும் பேறும் அதனால் கிடைக்கக் கூடிய சமூக அங்கீகாரமும் தனக்குக் கிடைக்காமல் தவறிப் போய்விடுகிறதே என்ற பரத்தைப் பெண்ணின் அடிமனப் பொருமலே இப் பாடலில் வெளிப்பாடு கொண்டிருக்கிறது.


8.11.12

’’குழவி கொள்பவரின் ஓம்புமதி..’’

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-9 [நவ/2012]

தாயின் அரவணைப்பில் கவலையின்றி ஒண்டிக் கிடக்கும் சேய் போல மன்னனின் பாதுகாவலில் பதைப்பும்,பதட்டமுமின்றி வாழும் மக்கள் குறித்த சங்கப்புலவனின் விழைவும் கனவுமே இப்பாடல் முன் வைக்கும் தரிசனங்கள்.

மன்னன் காட்டும் அன்பையும் அருளையும் மட்டுமே அடித்தளமாகக் கொண்டு வாழ்ந்த முடியாட்சிக் காலம் சங்ககாலம். 
‘’நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’’
என்னும் புறப்பாடல் வரிகள் இது பற்றியதே. மன்னன் மட்டும் கொடுங்கோலனாக அமைந்து விட்டால்  அத்துடன் மக்கள் வாழ்வும் முடிந்தது போலத்தான். பிறகு நாட்டில் யானை கட்டிப்போரடித்து நெல்லைக் குவித்தாலும்,ஆற்று வளமும் அருவி வளமும் பெருகிப்பாய்ந்தாலும் அரசனின் கருணை வற்றிப்போனால் எதைக்கொண்டும் மக்கள் மகிழ்வுற வாய்ப்பில்லை.இதனை மையமாகக் கொண்டு அமைகிறது  நரிவெரூஉத்தலையாரின் கீழ்வரும் புறநானூற்றுப்பாடல்.
’’எருமை யன்ன கருங்கல் இடைதோறு 
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலின் நின்னொன்று மொழிவல்

அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறலருங் குரைத்தே’’

- நரிவெரூஉத்தலையார் [புறநானூறு-5]

நரிவெரூஉத்தலையார் என்னும் வித்தியாசமான பெயரை வைத்து  [நரி கூடக் காண அஞ்சும் தலை] சற்று விகாரமான தோற்றத்துடன் இருந்தவர்  அப்புலவர் என்றும் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னனைப் பார்த்ததுமே அவனது கருணை வாய்ந்த தோற்றப்பொலிவால் அவரது அருவருக்கத்தக்க தோற்றம் மாறியது என்றும் உரையாசிரியர்கள்  விளக்கமளிக்கின்றனர். அக் குறிப்பின் நம்பகத் தன்மை எதுவாயினும் அதைக்காட்டிலும் நம் கருத்தை ஈர்ப்பது பாடலின் மகத்தான உள்ளடக்கமும்,அதை முன் வைக்க அவர் கையாண்டிருக்கும் அற்புதமான உவமையுமே.

பாடலின் பின்புலம் சேர நாடு. அதற்கேற்ப மலை வளத்தையும் அந்த மலைகளின் நடுவே கற்பாறைகளைப்போல ஊர்ந்து செல்லும் யானைக்கூட்டங்களையும் முதலில் சுட்டுகிறார் புலவர்.
கருங்கல் குன்றுகள் எருமை போல் நிறைந்து கிடக்க...அவற்றினூடே ஊர்ந்து பரவிச் செல்லும் யானைக்கூட்டங்கள் எருமைகளுக்கிடையே செல்லும் பசுக்கூட்டங்களைப் போலப் புலவருக்குத் தோன்றுகின்றன.
‘’எருமை யன்ன கருங்கல் இடைதோறு 
ஆனிற் பரக்கும் யானைய ’’
[இங்கே கரிய நிறம் கொண்ட குன்றுகளுக்கும், யானைகளுக்கும் உள்ள வடிவ ஒற்றுமையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர நிற ஒற்றுமையை வைத்துக் கவிதையைப்பார்த்தால் அது பிழையாய் முடியும்]. சேர நாட்டில் பாறைகளும் மிகுதி, யானைகளும் மிகுதி....கரிய பாறைகள் அசைவற்று நிற்க அவற்றிடையே யானைகள் அசைந்து செல்லும் காட்சி, மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைக்கூட்டங்களில் எருமைகள்  அசைவே இல்லாமல் அப்படியே நிற்பதையும்,பசுக்கள் மெல்ல நடை போடுவதையும் புலவருக்கு நினைவுபடுத்தியிருக்கக்கூடும்.

மேற்சொன்ன வளங்களைப் பெற்றிருக்கும் வலிமையான கானக நாடனே [முன்பின் கானக நாடனை ; முன்பின் என்பது- வலிமை] என்று அரசனை அழைக்கும் புலவர் அவனது ஆட்சி சிறப்பாக இருக்க செவிஅறிவுறூஉ என்னும் துறையில் ஓர் அறிவுரை சொல்கிறார்.மன்னன் எத்தனை செல்வாக்கு உடையவனாயினும்  கல்வித் திறன் கொண்ட புலவர்கள்,சான்றோர்களின் பொருளாழம் மிக்க சொற்களைக் கேட்டு அவ்வப்போது அவன் தன்னைப் புதுப்பித்துக் கொள் வதுண்டு என்பதன் அடையாளமே செவிஅறிவுறூஉ என்னும் துறை.

‘’மிகுந்த வளமும் வலிமையும் பெற்றுள்ள நாட்டுக்கு உரியவனாகவும், போற்றக்கூடிய நல்ல குணங்களைப்பெற்றிருப்பவனாகவும் நீ இருப்பதால் உன்னிடம் ஒன்று சொல்ல விழைகிறேன்....
வாழ்வில் அன்பையும் அருளையும் புறக்கணித்து விட்டு,அவற்றைத் துறந்தவர்களாய் நடந்து கொள்பவர்கள் நரகத்தின் பாதையை நோக்கிப் பயணம் போகிறவர்கள் [நிரயம்-நரகம்].
அதிலும் ஒரு நாட்டின் பாதுகாவலனுக்கு ஒருபோதும் இருக்கக்கூடாத இயல்பு அது....எனவே நீ அத்தகைய மனிதர்கள் போல இராதே..
[’’அருளும் அன்பும் நீக்கி நீங்காநிரயங் கொள்பவரோடு ஒன்றாது ’’]
உன் குடிமக்களிடம் பாசத்தைப்பொழி...இரக்கத்தையும்,கருணையையும் மழை போல அவர்களின் மீது வர்ஷித்துக் கொண்டே இரு....எப்படிப்பட்ட கட்டத்திலும், எவ்வாறான சூழ்நிலையிலும் அன்பையும்,அருளையும் மட்டுமே கைவிடாமல் கடைப்பிடித்து வா...’’என்று கூறும் புலவர் அதற்கு மிகப்பொருத்தமான ஒர் உவமையையும் உடன் வைக்கிறார். சங்கப்புலவனால் மட்டுமே சொல்ல முடிகிற அபாரமான உவமையாக அது அமைந்திருக்கிறது.

மனித வாழ்வில் கருணை..இரக்கம் இவற்றைக் கைக்கொள்வதில் தாயன்புக்கு இணை ஏதுமில்லை....அதிலும் அப்போதுதான் பிறந்து....உலக வாசனையையே அந்த நொடியிலேதான் நுகரத் தொடங்கியிருக்கும் ஏதுமறியாத பிஞ்சுக்குழந்தையிடம் தாய் காட்டும் கரிசனம் அலகிலாதது...அளவிடற்கரிய அந்தப் பிரியத்தை கரிசனையை...பத்திர உணர்வை உன் குடிமக்கள் நலனிலும் நீ காட்டு என்பதையே ’’காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி’’என்ற வார்த்தைகளில் முன் வைக்கிறார் கவிஞர். கண்ணாடிப்பாத்திரப்பொதிகளின் முகப்பில்,இதில் கண்ணாடி உள்ளது -கவனமுடன் கையாள்க (glass-handle with care )என்ற வாசகங்கள் இருப்பதைப்பார்த்திருக்கலாம்...அதை விடவும் கூடுதலான கவனம் பச்சிளம் குழந்தையைத் தொட்டுத் தூக்குவதற்கும், ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைமாற்றிக்கொள்ளும்போதும் தேவையாக இருக்கிறது...அத்தகைய அருமையான கவனமும் கண்காணிப்பும்..எச்சரிக்கை உணர்வும் நாடு காவல் பொறுப்பிலும் மன்னனால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறது இந்தப்பாடல். கவனப்பிசகால் குழந்தை கை நழுவிப்போனால் ஏற்படும் இழப்புப் போன்றதே காவல் பிழைப்பதால் நாட்டுக்கு நேரும் துன்பமும். அத்தகைய விழிப்போடு இருக்கும் மன்ன்னின் ஆட்சியில் குடிமக்கள் ஒருபோதும் துன்புற மாட்டார்கள் என மிக நுட்பமான உவமையைக்கொண்டு காட்சிப்படுத்தியிருக்கும் இந்தப்பாடல் கூறும் செய்தி காலம் கடந்து நிற்கும் வல்லமை பெற்றிருப்பதன் காரணம்...அந்த அறிவுரைக்கான தேவை...அன்றைய முடியாட்சியில் மட்டுமில்லை,இன்றைய மக்களாட்சிக்கும் அது மிகவும் தேவையாக இருக்கிறது என்பதால்தான்!

தாயின் அரவணைப்பில் கவலையின்றி ஒண்டிக் கிடக்கும் சேய் போல மன்னனின் பாதுகாவலில் பதைப்பும்,பதட்டமுமின்றி வாழும் மக்கள் குறித்த சங்கப்புலவனின் விழைவும் கனவுமே இப்பாடல் முன் வைக்கும் தரிசனங்கள்.

9.10.12

’’யாம் துஞ்சலமே..’’

''உண்மையான காதலின் பரிதவிப்போடு..சின்னச்சின்ன ஓலிகளைக் கூடக் கேட்டபடி தூக்கம் தொலைத்தபடி உழன்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தரிசனம்தான் அது....''

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-8

பூப் பூக்கும் ஓசையைக் கேட்கவும்,பூக்கள் பூக்கும் தருணத்தைக் காணவும் நம்நெஞ்சங்கள் விரும்புவதன் வெளிப்பாடே குறிப்பிட்ட வரி கொண்ட அந்தப்பாடல்களின் மீது நமக்குள்ள ஈடுபாடாகவும் மலர்ந்திருக்கிறது.அது இயற்கையானதும் கூடத்தான்...அதே போலப் பூக்கள் மடிந்து விழும் சத்தத்தை..மென்மையான கிளைகளிலிருந்து அவை  கீழே உதிரும் ஓசையைக் கேட்டிருக்கும் தலைவி ஒருத்தியின் சோகம் கலந்த தவிப்பான உணர்வுகளை நமக்குக் காட்சிப்படுத்தி அளிக்கிறது கொல்லன் அழிசியின் குறுந்தொகைப்பாடல் ஒன்று.

16.9.12

’’யாண்டு பலவாக நரையில ...’’

நன்றி;
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-7

பழக்கம் அதிகமின்றிப் பார்த்ததுமே  ஒட்டிக்கொள்ளும் நட்புக்கள் சிலவற்றை உலகியலில் அவ்வப்போது காண முடியும். நம் ரசனையோடும் நம் அலைவரிசையோடும் அவர்கள் ஒத்துப் போகிறார்கள் என்பதை மனம் தானாகவே இனம் கண்டு கொள்வதால் நேர்வதே அது.
மனங்கள் ஒட்டிக் கொள்வதற்கு நெடுநாள் பழக்கம் தேவையில்லை..ஒத்த உணர்வுகள் போதும் என்பதையே‘’புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்’’என்கிறது குறள்.ஒருவரை ஒருவர் பார்க்காத நிலையிலும் கொள்ளும் அபூர்வ நட்புக்கள் உண்டு.அவற்றில் ஒன்று சங்கப்புலவர் பிசிராந்தையாருக்கும் கோப்பெஞ்சோழனுக்கும் இடையிலானது. அவன் வடக்கிருந்து[உண்ணா நோன்பிருந்து] உயிர்விடத் துணிந்திருக்கும் நிலையிலும் அவரைக் காண ஏங்குகிறது அவன் மனம்;

24.8.12

’’வாடல கொல்லோ..’’

நன்றி;'
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-6
இயற்கைச் சமன்பாட்டைப் பேணிக்காத்து,இயல்பாக அமைந்திருக்கும் நிலவியலின் அடிப்படையில்
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
என ஐந்திணைக்கோட்பாட்டை வகுத்தளித்த சங்க இலக்கியம்- காதல் உணர்வுகளை நுண்மையாக முன் வைப்பதில் உலக இலக்கியங்களை விஞ்சும் திறத்தில் அமைந்திருக்கும் சங்க இலக்கியம் - மனித மனத்தின் ஆழங்காண முடியாத நுட்பங்களையும் கூட- இயற்கைப் பொருட்களின் துணை கொண்டு அவற்றின் பின்னணியிலேயே வாசக நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதிக்கிறது.


அவ் வரிசையில் குறிஞ்சிக் கபிலனின் நற்றிணைப் பாடல் ஒன்று....

சங்க காலத்தில் ‘களவு’ என்ற பெயரால் அழைக்கப்பட்ட மனம் ஒன்றிய காதல் வாழ்வில் தலைவனைச் சந்திக்கத் தடை பல கடந்து இரகசியமாக வருகிறாள் ஒரு தலைவி.
அவளுக்குத் தருவதற்காகக் காதற்பரிசு ஒன்றை ஏந்தியபடி காத்து நிற்கிறான் தலைவன்.
கண் கலந்து,மனம் கலந்து...பிரிவுத் துன்பத்தின் வேதனை முழுவதையும் பேச்சால் தொலைத்தபின் மெள்ளத் தன் பரிசை எடுத்து அவளிடம் நீட்டுகிறான் அவன்.
ஆவலோடு நீண்ட அவள் கரங்கள் அந்தப் பரிசைக் கண்டதும் பாம்பைக் கண்டதைப்போலப் பதறிப் பின் வாங்குகின்றன.
காதலனுக்கோ அதைக் கண்டு ஒரே வியப்பு! ஐயம் !
மிகவும் எளிதான இந்தப் பரிசை ஏற்றுக் கொள்வதில் அவளுக்கு அப்படி என்ன தயக்கம்?
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்தக் காதலுக்காகக் காலையில் தளிர்த்து மாலையில் வாடும் தழைகளைத்தானே அவன் ஆடையாக நெய்து வந்திருக்கிறான்!
ஒரு வேளை இதைக் காட்டிலும் விலை மதிப்பில்லாத வேறு ஏதேனும் ஒரு பரிசை அவள் எதிர்பார்த்து ஏமாந்திருக்கக் கூடுமோ?
அவன் தந்ததென்னவோ வெறும் தழையாடைதான்!ஆனாலும் அது சாதாரணமான வெறும் தழை அல்ல!
காதலிக்கு அன்புப் பரிசாகக் கொடுக்கும்போது கண்ணில் பட்ட இலை,தழைகளையெல்லாம் கண்டபடி தொடுத்துத் தர அவன் மனம் ஒப்புமா என்ன?
தனது ஊரிலேயே உயரமான மலைத் தொடர் ஒன்றில் - ஆவேசமாக முட்டி மோதும் மலைஆடுகள் கூடச் சஞ்சரிக்க அஞ்சும் மலைக்காட்டில்..அபூர்வமாக விளைந்த தழைகளையல்லவா அவன் தேடித் தேடி ஆடையாக்கி எடுத்து வந்திருக்கிறான்?
ஆனால்....பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ போன்ற அந்தத் தழையை அவன் தேர்வு செய்ததுதான் சிக்கலுக்கே காரணம் என்பதை உணர்ச்சி வசப்பட்ட அவனது காதல் மனம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறது.

தலைவனது காதல் பரிசைப் பெற்று அதை உடுத்திக் கொள்ளும் ஆசை தலைவிக்கும் இல்லாமல் இல்லை.
ஆனாலும் அதை உடுத்திக் கொண்டு வீடு சென்றால் அவள் அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியதாகிவிடும்.
அந்த இலை..அவள் வீட்டுக் கொல்லையிலோ,தோட்டத்திலோ இயல்பாக வளரக் கூடியதுதான் என்றால் பிரச்சினையில்லை!
சற்றே தள்ளிச் சமதரையில் விளைவதென்றாலும் கூடச் சமாளித்து விடலாம்.
ஆனால்...இதுவோ அவன் மலையைச் சார்ந்த தழை!
ஏறிப் பிடுங்குவதற்கு அரிதான மலை உச்சியில்..அதுவும் இன்னொரு ஊரைச் சார்ந்த மலையில் விளையும் தழை!
பெண்ணின் இயங்குதளம் வீடு மட்டுமே என்று ஆகிப் போயிருந்த ஒரு சமூக அமைப்பில் அயலூரில்...அதுவும் எவரும் எளிதில் செல்லத் துணியாத மலை ஒன்றில் விளைந்த அந்தத் தழையைத் தலைவியோ,அவளது தோழியோ அத்தனை சுலபமாகப் பறித்துவிட முடியாது என்பதை வீட்டிலுள்ளவர்கள்  மிக எளிதாக விளங்கிக் கொண்டுவிடுவார்கள். அதிலும் குறிப்பாக அவள் காதல் வயப்பட்டது முதல் அவளது ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகக் கண்காணித்துவரும் அவளது தாய் அதை மிகவும் இலகுவாக  அனுமானித்து விடுவாள்.
அதை மனதில் கொண்ட தலைவி,
‘இதை உடுத்திச் சென்றால் தாய் என்ன நினைப்பாளோ என அஞ்சுகிறேன் ‘என்ற பொருள்பட,
’உடுப்பின் யாய் அஞ்சுதுமே’’
என்கிறாள்.

உடுத்திக் கொள்ள முடியாத அந்த ஆடையை அவனிடம் உடனே திருப்பித் தந்து விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
அவன் அவள்து நண்பன்..இனிய காதலன்!
அவளுக்காக ஆசையோடு மலை முகடு வரை சென்று அதைக் கொண்டு வந்து தந்திருப்பவன்.
அதை மறுதலித்தால் அவன் முகம் வாடிப் போகும்; அதையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.
‘திருப்பித் தந்தால் அதனால் என் நண்பன் துயர் கொள்வானே’
என்பதை
’கொடுப்பிற் கேளுடைக் கேடு அஞ்சுதுமே’’
என வார்த்தையில் வடிக்கிறாள் அவள்.

இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற இந்த மனப் போராட்டம் தொடர்ந்து கொண்டே போகும் நிலையில்...அந்தத் தழை யாருக்கும் பயன்படாமல் வாடத் தொடங்கி விடுகிறது.
’ஆயிடை வாடல கொல்லோ தாமே’’
என அவன் அரிய முயற்சியால் பேராவலுடன் கொணர்ந்த அந்தத் தழை வாடத் தொடங்குவதைக் காட்டி,இனம் விளங்காத சோக உணர்வொன்றை எதிர்பாராத தருணம் ஒன்றில் நம் இதயத்தில் செருகிய வண்ணம் நிறைவு பெறுகிறது அப் பாடல்.

அடுத்து என்ன ஆகுமோ என்ற பரபரப்பும்,பதட்டமும் நம்மை ஆட்டி வைக்க..பாத்திரங்களின் பதட்டமான மன நிலை நமக்கும் தொற்றிக் கொண்டு விடுமாறு செய்து விடும் இப் பாடல்,
உணர்ச்சிப் போராட்டத்தின் உச்ச கட்ட நிலையாக விரியும் இந்தக் காட்சி....உலகச் சிறுகதைகளின் உயர்ந்த உத்திகளை...உன்னதக் கட்டங்களை நம் சங்க இலக்கியங்கள் என்றோ எட்டிவிட்டிருக்கின்றன என்பற்குச் சாட்சி பகர்கிறது.

’சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
  அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக்
  கன்றுதாய் மருளும் குன்ற நாடன்
  உடுக்கும் தழை தந்தனனே யாமது
  உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பிற்
  கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை
  வாடல கொல்லோ தாமே அவன்மலைப்
  போருடை வருடையும் பாயாச்
  சூருடை அடுக்கத்த கொயற்கரும் தழையே’’-நற்றிணை(கபிலர்)
தலைவி கூற்றாக அமையும் இப் பாடலின் முதற்பகுதி அற்புதமான உள்ளுறைக் கருத்தைச் செறித்திருக்கிறது.
மலைப் பகுதியில்(சிலம்பு-மலை)மேயும் பசு ஒன்று,குலைகுலையாகப் பூத்திருக்கும் காந்தள் மலர்களில் மோதிக்கொள்ள, அந்தப் பூவின் மகரந்தம் ஒட்டியிருக்கும் உடலோடு அது வீடு செல்கிறது;அதைப் பார்த்து அதன் கன்று மருண்டு போகிறது.
இத்தகைய மலை நாட்டின் தலைவனாக இப் பாடல்’குன்ற நாட’னைக் கூறுகிறது.
தலைவனின் மலை நாட்டுக்கு இப்படிப்பட்ட பீடிகை ஏன்?
சங்கக் கவிதைகளில் பொருளற்ற வெற்றுச் சொற்களுக்கோ..வெற்றுக் காட்சிகளுக்கோ இடமே இல்லை.
பசுவின் மீது அறியாமல் படிந்துவிட்ட பூந்துகள் அதன் உருவத்தையே மாற்றிக் காட்டிக் கன்றை மிரள வைப்பது போல் மலைச் சாரலில் தலைவனைச் சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவி வித்தியாசமான ஒரு தழை ஆடையை உடுத்திச் சென்றால் அவளது தாயும் மிரண்டு போவாள்;
அங்கே கன்று...,இங்கே தாய்!
பாடலின் சாரமான உட் பொருளையே இப் புனைவின் வழி உள்ளுறையாக்கி அதன் உயிரோட்டத்தை மேலும் கூர்மைப் படுத்துகிறார் கபிலர் என்ற மாபெரும் கவிஞர்.

காதல் என்ற இயற்கையான...நுண்மையான...அந்தரங்கமான உணர்வைத் திரைப்படங்களும்,பிற ஊடகங்களும்,இன்றைய நவீன வாழ்க்கை முறைகளும் எந்த அளவுக்குக் கொச்சைப் படுத்திக் குலைத்துப் போட்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாப் பார்க்கும்போதுதான், சங்க அகப் பாடல்களின் சிறப்பையும், காதலின் நயத்தக்க நாகரிகத்தை அவை எந்த அளவுக்கு நாசூக்காக உணர்த்தியிருக்கின்றன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
 

19.7.12

’’ஊசியின் விரைந்தன்று .....’’

'நன்றி;
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-5


இலக்கியப் படைப்புக்கள் ,உருவம், உள்ளடக்கம் ,உத்தி என மூன்று கூறுகளாலேயே கட்டமைக்கப்படுவன.இவற்றுள் உருவ அழகு துலங்குவதும் , உள்ளடக்கம் தெளிவாக விளக்கம் பெறுவதும் உத்தியைப் பொறுத்தே அமைகின்றன.
உத்திகளில் உவமைக்கென்று தனியான ஓர் இடம் உண்டு.பக்கம் பக்கமாக மணிக்கணக்கில் விளக்கிக் கொண்டிருந்தாலும் புரியாத செய்திகள் , உவமையின் வாயிலாக எடுத்துக் காட்டப்படும்போது ஒரே நொடியில் விளங்கி விடுகின்றன.
தலைவன் மீது தலைவி கொண்டிருக்கும் அன்பை நேரடியாகக் கூறுவதை விட 
''நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே''
என்று உவமைகளைப் படிபடியாக அடுக்கிக் கூறுகையில் அவளது அன்பின் ஆழம் , படிப்பவர்களின் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது.

சங்க இலக்கியத்தை உவமை இலக்கியம் என்றே கூறிவிடும் அளவுக்கு அதில் உவமத்தின் பலவகை நுட்பங்களைக் காண முடிகிறது. உலக நடப்பில் இல்லாத ஒன்றை மிகைபட மொழியாமல் நடப்பியல் வாழ்வைக் கூர்த்த பார்வையோடு ஊன்றி நோக்கி உவமையாக்கியவன் சங்கப் புலவன்.சான்றுக்கு ஒரு புறநானூற்றுப் பாடல் !

சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் , மற்போரில் தனக்கு நிகர் எவருமில்லை என்று தோள் தட்டி வரும் ஆமூர் மல்லனுக்கும் இடையே கடுமையான மல்யுத்தப் போட்டி நடக்கிறது. சோழ மண்ணின் மானம் காக்க முயலும் நற்கிள்ளி , மல்யுத்தத்தின் நுணுக்கங்கள் பல காட்டி ஆமூர் மல்லனை வளைக்கிறான் ; ஒடிக்கிறான்.
அந்தக் காட்சி , இயற்கையோடு இயைந்து போய் அதிலேயே ஊறித் திளைத்திருக்கும் சங்கப் புலவருக்கு ,ஒரு பசி கொண்ட மத யானை ,மூங்கில் மரத்தை வளைப்பதையும் , ஒடிப்பதையும் நினைவுபடுத்துகிறது.

''பசித்துப் பணை (மூங்கில்) முயலும் யானை போல''
என்று அன்றாடம் தான் கண்டிருக்கும் காட்சியை இதே சூழலுக்கு உவமையாக்கி அழகு செய்கிறார் அவர்.


போரின் நேர்முக வருணனை ஒருபுறமிருக்க , அந்தப் போரின் இறுதி வெற்றி யாருக்கு , அந்தப் போர் நிகழ்ந்த நேரம் எவ்வளவு என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன. குறைவான கால அவகாசத்திற்குள் நிறைவான சாதனைகளைச் செய்து முடிக்கும் திறமைசாலியாக....அற்புதமான ஒரு போராளியாக நற்கிள்ளியை வினோதமான ஒரு உவமை வழியாகத் தனது புறப்பாடலில் காட்டி விடுகிறார் சாத்தந்தையார்.

ஒரு சிற்றூர் . அங்கே கையில் ஊசி ஒன்றைப் பிடித்தபடி கட்டில்பின்னும் ஒரு தொழிலாளி.
ஊரில் திருவிழா நடந்து கொண்டிருக்க எங்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.
அவனது மனைவி நிறை மாத கருப்பிணி . 
எந்த நேரமும் அவளுக்குக் குழந்தை பிறந்து விடலாமென்ற நெருக்கடியான சூழல் .
நேரம் ஒரு மழைக் காலத்தின் மாலைப் பொழுது.
இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு இடையே அந்தத் தொழிலாளியின் கையிலுள்ள ஊசி எத்துணை விரைவாக இயங்கியாகவேண்டும்? செயற்கை விளக்குகள் புழக்கத்திற்கு வந்திராத அந்தக் காலகட்டத்தில் ,இருட்டுப் படருவதற்குள் நுணுக்கமான தன் கை வேலையை அவன் முடித்தாக வேண்டும். திருவிழா சமயத்தில் கூடும் கூட்டத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு விழாச் சந்தையில் அதை விற்றுக்காசாக்கினால்தான் மனைவியின் குழந்தைப் பேற்றுக்குப் பொருள் திரட்டுவது அவனால் முடியும் . இவ்வளவு நெருக்குதல்களும் , அழுத்தங்களும் இருப்பதாலேயே அவன் கை ஊசி மிக வேகமாகச் செயல்படுகிறது. பொருள் தேடியே ஆக வேண்டும் என்ற ஊக்கம் , அவனது முயற்சிக்கு உந்துதல் அளிக்க அந்த நெருக்கடியான சூழலிலும் தான் எடுத்த செயலை விரைவாக முடிக்கிறான் அவன்.

ஆமூர் மல்லனோடு நலங்கிள்ளி செய்த போரும் கூட ஒரு வகையில் அப்படிப்பட்டதுதான்.
கட்டில் பின்னும் தொழிலாளிக்குப் பணப் பிரச்சினை என்றால் , நலங்கிள்ளிக்கு மானப் பிரச்சினை.
இந்த இரண்டு சிக்கல்களையும் உவமை என்ற புள்ளியின் வழியாக ஒருங்கிணைத்து , மல்லனோடு நற்கிள்ளி நிகழ்த்திய போர் , கட்டில் பின்னும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசியின் வேகத்தோடு -அத்தனை விரைவாக முடிந்தது என்பதையும் தன் மற்போரின் திறமையை வைத்து அந்த ஊரையே தனக்கு அடிமையாக்கி விடலாம் என்ற எண்ணத்துடன் வந்த ஆமூர் மல்லனோடு சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி நிகழ்த்திய போர் , எவ்வாறு துரித கதியில் நிகழ்ந்து முடிந்தது என்பதையும் 
’’போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று ’’என்ற உவமையில் மிகச் சுருக்கமாகக் கூறி... மற்போரின் துரிதமான கதியை , இயக்கத்தை வெகு எளிதாக விளக்கி விடுகிறார் கவிஞர்...
''சாறு தலைக் கொண்டெனப் பெண் ஈற்று உற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனொடு
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே..’’
-சாத்தந்தையார்,புறநானூறு,82.
[சாறு-விழா; பெண் ஈற்று உறல்-கருவுறல்; பட்ட மாரி-மழைக்காலம்; ஞான்ற ஞாயிறு-சூரியன் மறைந்த மாலைப்பொழுது;போழ்தூண்டு ஊசி- கட்டில் நாரைத் துளைபோட்டுத் தைக்கும் ஊசி]

மேலோட்டமான பார்வைக்குச் சம்பந்தமே இல்லாததுபோலத் தோன்றும் வேறுபட்ட இரு செய்திகள் உவமை என்ற கண்ணியால் இணைவதே இப் பாடலின் அற்புதம்.

2.7.12

’’இரு பேராண்மை செய்த பூசல்..’’

'நன்றி;பயணம் இதழ்-கட்டுரைத் தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-4

''....எதிர்பாராத கணத்தில் நல்ல பாம்பு தீண்டியதைப் போல- தலைவியைத் துணுக்குற வைக்கிறது''







இணைமனம் கொண்ட காதலரிடையே நேரும் தற்காலிகப் பிரிவும் கூடப் பெருந்துன்பத்தின் நிலைக்களனாகி அவர்களை ஆறாத் துயரில் ஆழ்த்தி விடுகிறது. ’’பூ இடைப்படினும்’’ ஆண்டு பல கழிந்தது போல- பல்லாண்டு பிரிந்திருந்தது போல உள்ளத்தை உலுக்கி உன்மத்தம் பிடித்தாற்போல ஆட்டுவிக்கும் உத்வேகம் கொண்ட வினோதமான உணர்ச்சி அது. அதைச் சொல்லால் விளக்குவது கடினம்தான் என்றபோதும் காதல் வாழ்வில் நேரும் பிரிவுத் துயரின் தகிப்பைக் காட்ட ஒவ்வொரு காலகட்டத்துப் படைப்பாளிகளுமே முயன்றபடிதான் இருக்கிறார்கள். ‘’தூண்டிற்புழுவைப் போல் வெளியே சுடர் விளக்கினைப் போல்’’ பிரிவுத் துன்பத்தில் துடிக்கிறாள் பாரதியின் தலைவி.


’என்னை விட்டுப் பிரியவே மாட்டேன் என்று கூறுவதானால் தொடர்ந்து என்னிடம் பேசுங்கள்…, அவ்வாறு இல்லாமல் போய் விட்டு உடனே திரும்பி விடுவேன் என்றெல்லாம் சொல்வதாக இருந்தால்..நீங்கள்  திரும்பி வருகையில் உயிர் வாழும் திடம் யாருக்கு இருக்கிறதோ அவளிடம் அதைச் சொல்லுங்கள்’’ என்றபடி அவன் பிரியும்போதே தன் உயிரும் பிரிந்து விடும் என்பதை,
‘’செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை’’
என்று குறிப்பாக உணர்த்துகிறாள் வள்ளுவத்தின் காமத்துப்பால் தலைவி.
ஔவையாரின் குறுந்தொகைப்பாடல் ஒன்று தலைவன் தலைவியரின் பிரிவின்போது நேரும் மனப் போராட்டத்தைச் சுருக்கமான செறிவான சொற்களில் சித்திரமாக்கி அளிக்கிறது.
‘’செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இரு பேராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவியாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே’’-
குறுந்தொகை-43,ஔவை
இரு வேறான ஆளுமைகளின் தனிப்பட்ட எண்ண ஓட்டங்களில் நேரும் சிறியதொரு முரண்பாட்டால் நேரும் பூசலைச் சித்திரிக்கும் அற்புதமான கவிதை இது.

தலைவன் பொருள் தேடவோ தொழில் நிமித்தமாகவோ தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். ஆனால் அதைச் சொன்னால் அவள் எந்த அளவு ஏற்பாள் என்பதும் அந்தப் பிரிவைப் பொறுக்கும் மனத் திட்பம் அவளிடம் உள்ளதா என்பதும் தெரியாத காரணத்தால் ஓர் ஊசலாட்டத்தில் இருந்தபடி அதை அவளிடம் சொல்லாமல் ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறான் அவன்...

தலைவனுக்குப் பிற கடமைகளும் உண்டு என்பதும் அவற்றின் பொருட்டு அவன் தன்னைப் பிரிந்தே ஆக வேண்டியிருக்கும் என்பதும் தலைவிக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் ஏதோ ஒரு மாயப் பிரமையில் அவன் அப்படித் தன்னை விட்டுச் சென்றுவிட மாட்டான் என்று எண்ணியவளாகத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் தலைவி.
வீட்டுக்குள் ஒரு மௌன நாடகம் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.
அவன் எங்கோ கிளம்ப ஆயத்தமாகிறான் என்பது உணர்வுக்குத் தட்டுப்பட்டும் ’அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது’ என்று தன்னுள் தலையெடுத்த உணர்வைச் சட்டென்று புறமொதுக்கிவிடுகிறாள் தலைவி. அவளிடம் எப்படிச் சொல்வதென்ற தயக்கத்தில் தலைவனும் அந்தச் செய்தியைச் சொல்லாமல் ஒதுக்கிவிடுகிறான். இவ்வாறு தங்கள் ஆழ்மனம் ஏற்கத் தயங்கும் பிரிவு பற்றிய அச்சம் இருவர் வாய்ச்சொற்களையும் கட்டிப்போட்டு விடுகிறது.
இதையே
’செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே’’என்னும் கவித்துவமான வார்த்தைகளில் சிறைப்பிடிக்கிறார் ஔவையார்.

’இகழ்தல்’ என்னும் சொல் மரபார்ந்த-வழக்கமான பொருளில் இங்கே பயன்படுத்தப்படவில்லை என்பதும் சொல்வதற்குத் தயக்கமான அல்லது சொல்லப்பிடிக்காதவற்றைச் சொல்லாமல் ஒத்திப் போடுதல் என்னும் பொருளிலேயே அது இங்கே ஆளப்பட்டிருக்கிறது என்பதும் கவிதையின் மொத்தப் பொருளுக்குள் நுழையும்போது தன்னால் புலப்பட்டு விடுகிறது.
சிக்கலான இந்த உணர்வுப் போராட்டத்துக்கு இடையே சூழலின் கைதியாகி வெளியே சென்றே ஆக வேண்டிய நிலையில் இருக்கும் தலைவன் அவளிடம் சொல்லாமலேயே சட்டென்று ஒரு கணத்தில் கிளம்பிச் சென்று விடுகிறான். அந்தச் செயல் எதிர்பாராத கணத்தில் நல்ல பாம்பு தீண்டியதைப் போல- தலைவியைத் துணுக்குற வைக்கிறது. அவன் செல்ல மாட்டான் என்ற தன் நினைப்பு, தன்னிடம் பிரிவைச் சொல்லத் தயங்கிய அவன் மனஓட்டம் இவை இரண்டுக்கும் இடையிலான போராட்டம்……தன்னிடம் விடை பெற்றுக் கொள்வதிலிருந்து அவனைத் தடுத்து விட்டதே என்று அலைக்கழிவு பட்டு ஆறாத் துன்பம் கொண்டவளாய் அலமலக்குறுகிறாள் அவள். ஒருக்கால் அவ்வாறான ஒரு சூழல் வாய்த்து அவன் தன்னிடம் விடை பெற்றிருந்தால் தன் அன்பும் முயற்சியும் சேர்ந்து அவன் பிரிவைக் கூடத் தடுத்திருக்குமோ என எண்ணுகையில் அவள் துயர் பல்கிப் பெருகுகிறது..மனம் விரும்பாததை மனம் விட்டுப் பேசத் தவறியதால் மனம் விரும்பாத நிகழ்வு ஒன்று நடைபெறத்  தானே காரணமாகி விட்டோமே என்ற சோகம் அவளைப் பாம்புக் கடியாய் வதைக்கிறது.

தலைவன் தலைவி இருவரின் வேறுபட்ட ஆளுமைக் குணங்களையே ‘இரு பேராண்மை செய்த பூசல்’ என்னும் தொடரால் குறிப்பிடுகிறார் கவிஞர். (இது தனி மனித ஆளுமைப் பண்பேயன்றி ஆடவருக்குரிய ஆண்மையைக் குறிப்பதல்ல). தலைவியின் ஆளுமை ,தன்னை மீறி அவன் சென்றுவிட மாட்டான் என்னும் துணிவு.., தலைவனின் ஆளுமையோ அவளிடம் சொல்லத் துணிவின்றிச் செயலை மட்டும் முடித்துக் கொண்டு விடும் ஆளுமை…இவ்விரு ஆளுமைக் குணங்களின் மோதல் ஔவையிடமிருந்து எளிமையும் இனிமையும் கொண்ட அழகான சங்கப் பாடல் ஒன்றை உருவெடுக்க வைத்திருக்கிறது.

2.5.12

’’தலைநாள் போன்ற விருப்பினன்…..’’



நட்பு,காதல்,திருமண பந்தம் என எந்த ஒரு உறவானாலும்…,நாம் ஆர்வம் கொண்டு ஈடுபடும் எந்தச் செயலானாலும்.….முதல் நாள் கொண்ட ஆர்வமே வற்றாமல் தொடர்வதென்பது …,’தலை நாள் போன்ற விருப்பமே’ நாளும் தழைத்துச் செழிப்பதென்பதுஎத்தனை பெரிய வரம்?

காதலுக்கும் வீரத்துக்கும் சிறப்புத் தரும் சங்கப் பாடல்கள் கொடைக்கும் அதே உயர்நிலை அளிப்பவை. சங்கத்தின் இருமை நிலைகளாகிய அகம்-புறம் ஆகிய இரண்டில் புறம் என்னும் சொல் வீரத்தோடு கூடவே கொடையையும் உள்ளடக்கியிருக்கிறது. வீரத்தை விரிவாகவும் ஆழமாகவும் பாடிய சங்கப் புலவர்கள் அதே வீச்சுடன் கொடையையும் பாடிப் போற்றியிருக்கிறார்கள். பிழைப்புக்காக வேறு தொழில் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமோ, உப்புக்கும் புளிக்குமான நெருக்குதல்களோ இல்லாதபடி - எழுத்தையும்  பாட்டையும் மட்டுமே வாழ்வாகக் கொண்டு  பாணர்களும் புலவர்களும் சங்கச் சமுதாயத்தில் சுதந்திரச் சிறகடித்துப் பறந்து திரிந்திருக்கிறார்கள் என்றால்..அதில்  அக்கால மன்னர்களின் வற்றாத கொடைவளம் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. அந்தக் கொடையிலும் கூட அவர்கள் காட்டிய நுட்பம்..கண்ணியம் ஆகியவை நினைந்து நினைந்து வியக்கத்தக்க வகையில் பல சங்கப் பாடல்களில் பதிவாகியிருக்கின்றன.

அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் குறுநில மன்னனின் புகழ் போற்றும் ஔவையின் கீழ்க்காணும் பாடல் அத்தகைய கொடைக் கணம் ஒன்றின் அற்புதச் சித்தரிப்பாக விரிகிறது.
‘’ஒரு நாட் செல்லலம் இரு நாட்செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாட்போன்ற விருப்பினன் மாதோ
அணி பூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாதாயினும் யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத்ததுவே பொய்யாகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே’’
 -ஔவை,புறநானூறு-101
அதியமானுக்கும் ஔவைக்கும் நிலவிய நட்பு, கொடுப்பவர் வாங்குபவர் என்ற சராசரி நிலையிலிருந்து உயர்ந்தது;அரிதும்,அபூர்வமுமான மேம்பட்ட தளத்திலானது. அதியனிடம் எல்லை கடந்த உரிமை பாராட்டிய ஔவை, அவனிடமிருந்து நெல்லிக் கனி பெற்றவள். 
அவனுக்காகப் போர்த்தூது சென்றவள்; அவனோடு பிணங்கியபடி தோள் பையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அவனது அவையிலிருந்து வெளிநடப்பும் செய்பவள்; அவனோடு எதையும் துணிவாகப் பேசும் திடம் படைத்தவள்; அவன் இறந்தபோது கையறுநிலைப்பாடல்கள் பாடிக் கதறியவள். அதியனின் ஆளுமையை அணு அணுவாக அறிந்து வைத்திருக்கும் ஔவை அவனது கொடைத் திறன் குறித்து வழங்கும் நற்சான்றிதழாகவே இப் பாடல் விரிகிறது.

பொதுவாக விருந்தினர் வீட்டுக்கு வந்தால் முதல்நாள் உபசரிப்பு கொடிகட்டிப் பறக்கும்அடுத்த நாள் சற்றே குறைந்து.., பின்பு படிப்படியாகச் சரிந்து - வந்த விருந்தாளிகளே எப்போது கிளம்பலாம் என்ற தருமசங்கடத்தில் நாணிக் கூசிப்போகிற நிலை கூட நேரும். ’‘முதல்நாள் வாழை இலை,இரண்டாம் நாள் தையல் இலை,மூன்றாம் நாள் கையிலே..’’என்னும் பழமொழியும் கூட அதைப் பற்றியதுதான்அதை மாற்றிப் புதிய இலக்கணம் ஒன்றைப் படைக்கிறான் அதியமான்.
‘’ஒரு நாட் செல்லலம் இரு நாட்செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாட்போன்ற விருப்பினன் மாதோ’’
என்னும் முதல் மூன்று வரிகள் சுட்டுவது அதைத்தான்.

விருந்தினர் தங்குவது ஒரு நாள் இரண்டு நாள் இல்லைபலநாள் தங்கல்; அதிலும் பலரையும் உடன் சேர்த்துக் கொண்டு தங்கல்ஆனாலும் கூட முதன் முதலாக விருந்தினரைக் கண்டபோது அவர்களை வரவேற்றபோது எவ்வாறான மலர்ச்சியோடு இருந்தானோ அதே மலர்ச்சியும் உபசரிப்பும் மாதக்கணக்கில் அவர்கள் தங்கினாலும் அவனிடமிருந்து அவர்களுக்குக் கிட்டும் என்கிறார் ஔவை. இது இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபின்னும் சங்க இலக்கியம் நமக்குப் புகட்டி வரும் அற்புதமானதொரு பண்பாட்டுப் பாடம்

தன்னைத் தேடி வந்த வந்த பாணரும் புலவரும் அவ்வாறு மாதக் கணக்கில் தங்குவதற்கும் கூட அவர்களின் இசையை..கவியைப் பிரியத் துணியாத அவனது கலைத்தாகமே காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு எளிதில் விடை கொடுத்து அனுப்ப மனம் வராமல் அவன் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பதற்கு அதுவே காரணம்; ஆனால்.. அதனாலேயே தங்களுக்குப் பரிசு கிடைக்குமா கிடைக்காதா  என்ற  ஐயமும் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது; அதையும் தெளிவுபடுத்துகிறாள் ஔவை.

அதியனிடம் பரிசு பெறும் காலம் ஒரு வேளை சற்றுத் தள்ளிக் கொண்டே போகலாம்உடனடியாகப்  பரிசைக் கொடுத்து அவர்களை வழியனுப்பி விடமனமில்லாமல்  அவனும் அந்தக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருக்கலாம்..ஆனாலும் யானை தன் கொம்புகளுக்கு நடுவே துதிக்கையில் வைத்திருக்கிற சோற்றுக் கவளம் அதன் வாய்க்குத்தான் போய்ச் சேரும் என்பது எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவு உறுதியானது அவனிடமிருந்து கிடைக்கும் பரிசும் என்பதை அடுத்த அடிகளில்..
’’அணி பூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாதாயினும் யானை தன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத்ததுவே பொய்யாகாதே’’
என்கிறாள் ஔவை. சோற்றுக் கவளத்தை யானை ஏந்தி விட்டால் அது அதன் வாய்க்குத்தான் போய்ச் சேரும்; அது எவ்வாறு உறுதியோ அது போல அதியனிடம் அடைக்கலமாக வந்து விட்டால் அவனிடமிருந்து பரிசு பெறுவதும் பொய்த்துப் போகாது என்பதை உறுதிப்படுத்துகிறாள் ஔவை. அதனால் அதை விரைவில் துய்க்க வேண்டும் என ஏக்கமுறும் (ஏமாந்த-ஏக்கமுற்ற)நெஞ்சங்களேவருந்த வேண்டாம்..அவன் தாளை வாழ்த்துங்கள் போதும் என முடிக்கிறாள்.

’’தலை நாட்போன்ற விருப்பினன்’’என்ற  தொடர், குறிப்பிட்ட இந்தப் பாடலின் சூழலில் கொடையைச் சுட்டுவதாக இருக்கலாம்.;ஆனால்..நட்பு,காதல்,திருமண பந்தம் என எந்த ஒரு உறவானாலும்…,நாம் ஆர்வம் கொண்டு ஈடுபடும் எந்தச் செயலானாலும்.….முதல் நாள் கொண்ட ஆர்வமே வற்றாமல் தொடர்வதென்பது …,’தலை நாள் போன்ற விருப்பமேநாளும் தழைத்துச் செழிப்பதென்பதுஎத்தனை பெரிய வரம்?அதனாலேயேயாதும் ஊரே..யாவரும் கேளிர்’,’ தீதும் நன்றும் பிறர் தர வாரா,’ ‘பெரியோரை வியத்தலும் இலமேஆகிய பிற புறநானூறுத் தொடர்களைப் போலவே  ’’தலை நாட்போன்ற விருப்பினன்’’ என்ற  இந்தத் தொடரும் என்றும் நம் நெஞ்சுக்குள் அடைகாத்து முணுமுணுக்கும் ஒரு மந்திரத் தொடராக மாறிப்போகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....