துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.7.14

ஆடிப் பாவை போல

சங்கச் சமூகத்தில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி உட்படப் பெரிதாக எவரும் அலட்டிக் கொள்வதில்லை; பரத்தமைஒழுக்கம் ன்பதாக- ஒழுக்கம் என்ற சொல்லாலேயே அதைக் குறிப்பிடும் அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் .எந்த மனத்தடையும் இன்றி இயல்பாக.ஏற்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாகவே அது இருந்து வந்திருக்கிறது.
இற்பரத்தை..சேரிப் பரத்தை என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் குறிப்புக்கள்,பரத்தையர் வீதி பற்றிய செய்திகள் ஆகியவை இதற்கான சான்றுகள்.

இவையனைத்தும் ஒரு புறமிருக்க...
பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் மன நிலை எப்படி இருந்திருக்கிறது..,
அவளது அந்தரங்கம் இதை எப்படி உள் வாங்கிக் கொண்டிருக்கிறது,
என்னதான் அது ஒரு சமூக வழக்கமாகி நிலைபெற்றுப் போயிருந்தாலும் அவளது ஆன்மத் தவிப்பு எத்தகையதாக இருந்திருக்கிறது..
என்பது குறித்த உணர்வுகளையும் மிக நுட்பமாகச் சில சங்கப் பாடல்கள் தொட்டுச் செல்லாமல் இல்லை.

குறுந்தொகையில் இடம் பெறும் ஆலங்குடி வங்கனார் என்னும் புலவரின் கீழ்க் காணும் பாடல் அத்தகையது.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 
  பழன வாளை கதூஉம் ஊரன் 
  எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
  கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை போல
  மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே
’ 
-ஆலங்குடி வங்கனார் (குறுந்தொகை-8)


’’கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை ’’
இது,மருதத் திணையில் அமையும் பாடல்.
மருதத்தின் உரிப் பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும்.
(நிமித்தம் என்பது,சார்ந்தது-ஊடல் தொடர்பானது என்று பொருள்)
செல்வ வளம் மிகுந்த மருதநிலத்தில் பிற நிலங்களைக் காட்டிலும் பரத்தமை ஒழுக்கம் கூடுதலாக இருந்த காரணத்தாலேயே
(சங்கத்தைத் தொடர்ந்த சிலம்பின் காலத்தில் காவிரிக் கரையின் செழுமையிலேதான் கரை புரண்டு ஓடியிருக்கிறது பரத்தமை)
தலைவியின் ஊடலும் கூடுதலாகிறது.
அதனாலேயே மருத உரிப் பொருளாகவும் அது ஆகிறது.

குறிப்பிட்ட இந்தக் குறுந்தொகைப்பாடல் பரத்தையின் கூற்றாகச் சொல்லப்படுகிறது.
தலைவி தன்னைப் பழித்தாள் என்பதைக் கேட்ட பரத்தை தலைவனை எள்ளிநகையாடுவது போன்ற தொனியில் மறைந்தபடி..தன் ஆற்றாமையைச் சொற்களில் வடிக்கிறாள்.

மருதநில வயல் வரப்புகளில் உள்ள மாமரங்களில் இருந்து தானாய்க் கனிந்து கீழே விழுகிற மாங்கனிகளை,வயல்களின் அருகிலுள்ள பொய்கைகளிலுள்ள வாளை மீன்கள் கவ்வும் ஊரைச் சேர்ந்தவன் தலைவன் என்ற முன் குறிப்புடன் தொடங்குகிறது பாடல்.
’’கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்’’
ஊரன் என்பது மருதநிலத் தலைவனுக்கு அளிக்கப்படும் சுட்டுப் பெயர்.
இந்த வரிகளில் சங்கப் பாடல்களுக்கே உரிய உள்ளுறை பொதிந்து கிடக்கிறது.
வயல் வரப்பு என்பது நெறிப்படுத்தப்பட்ட இல் வாழ்வு.
அதிலிருந்து தானாக விலகி வழுவிப் போகும் தலைவனை- மாம்பழத்தைக் கவ்வும் வாளை மீன்களைப் போலத் தங்கள் பிடிக்குள் இறுக்கிக் கொள்கிறார்கள் பரத்தையர்கள்.
அவர்களாக அவனைத் தேடிச் செல்வதில்லை.
தானாய்க் கனிந்து கீழே உதிரும் பழத்தைப் போல அவனாகவே அவர்களிடம் வசப்படுகிறான் என்கிறது பாடல்.
அடுத்தாற்போல எம்மில்,தம்மில் என்று ஒரு முரணைச் சுட்டுகிறாள் பரத்தை.
எம் இல் என்பது, பரத்தையர் இல்லம்.
தம் இல் என்பது,தலைவன் தன் மனைவியோடு கூடி வாழும் வீடு.
எங்கள் வீட்டில் எங்களோடு கூடியிருக்கையில் தன் வாய் சாதுரியத்தால் எங்களைப் புகழ்ந்து பேசியும் தன்னைப் பற்றிய பெருமிதத்தை வெளிக் காட்டியும் ...
’’எம்மி(ல் )ற் பெருமொழி கூ’’றுபவனாக நடந்து கொள்கிறான் அவன்..
எங்களுடன் இருக்கையில் மேற்படி முகம் காட்டித் தன் ஆண்மையின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் தலைவன் தனது இல்லத்துக்குச் சென்றதும் அடியோடு மாறிப்போய் விடுகிறான்..
தன் மனைவி என்ன சொன்னாலும் அதை உடனடியாகச் செய்து முடிக்க ஆயத்தமாகி விடுகிறான் அவன்..
கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நாம் செய்வதையெல்லாம் செய்வதைப்போல அவள் சொன்னபடியெல்லாம் நடந்து கொண்டு-
அவள் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மையைப் போலவே ஆகி விடுகிறான் அவன்.
இதை,
’’தம்மி( ல்)ற் கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’
என்னும் வரிகளின் மூலம் இகழ்ச்சியாக..முன் வைக்கிறாள் அவள்.
பொதுவாக இப்பாடலை மேற்கோள் காட்டும் கட்டுரைகள்,நூல்கள்(மற்றும் வகுப்பெடுக்கும் பேராசிரியர்களும் கூடத்தான்)இதிலுள்ள நகைச் சுவையைச் சுட்டிக் காட்டுவதோடு வேலை முடிந்து விட்டதாக நினைக்கிறார்களே தவிரப் பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் ஆழ்மனச் சோகமும்,அவளுக்குள் ஏற்பட்டுப் போயிருக்கும் உட்காயமும் இதில் பதிவாகியிருப்பதைப் பற்றி எவரும் அக்கறை கொள்வதில்லை.

இந்தச் சங்கப் பாடலுக்குள்- ’’மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’’என்னும் உச்ச வரிகளுக்குள் தலைமுறை தலைமுறையாய்ச் சொல்லப்படாது போன பெண்ணின் சோகமல்லவா புதையுண்டு கிடக்கிறது?
இப் பாடலில் பரத்தை தலைவனை நையாண்டி செய்கிறாள் என்பது உண்மைதான்..
ஆனாலும் இதிலுள்ள எள்ளல் ஒரு புறம் இருக்க.,.இதன் பின்னணியிலுள்ள ஆற்றாமையே அவளது அடிமன ஆழத்தின் பதிவாக வெளிப்படுகிறது.
தலைவியிடம் கிடைக்காத தோழமையையும்,கலை ஆர்வத்துக்கான வடிகால்களையும் நுகர மட்டும் பரத்தையிடம் சென்றாலும்,தலைவன் தரும் முறையான அங்கீகாரம் தலைவிக்கு மட்டும்தான்!.
அதற்கான காரணம் அவள்,அவனது ’’புதல்வன் தாய்’’என்பதே!. .
அவனுக்குச் சட்ட பூர்வமான வாரிசைப் பெற்றுத் தரும் அவளே அவனுக்கு நிரந்தரமானவள்.
’பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனி ஊரன்’
என மற்றொரு சங்க அகப்பாடலும் தலைவியைக் 
காய்த்த நெல்லாகவும்(குழந்தைப் பேற்றினால்)
பரத்தையைப் பூத்த கரும்பாகவும் சுட்டுவதைக் காண முடியும்.

ஏதோ ஒரு வகையில் இரு பெண்களையும் சுரண்டலுக்கு உள்ளாக்கித்தான் தலைவன் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்றபோதும் 
புதல்வனுக்குத் தாயாகும் பேறும் அதனால் கிடைக்கக் கூடிய சமூக அங்கீகாரமும் தனக்குக் கிடைக்காமல் தவறிப் போய்விடுகிறதே என்ற பரத்தைப் பெண்ணின் அடிமனப் பொருமலே இப் பாடலில் வெளிப்பாடு கொண்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....