துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.7.14

சில சிறுகதைகள்,சில செய்திகள்

1.‘கன்னிமை’சிறுகதை வங்க மொழியில்

மிகச்சிறந்த வங்கமொழி மொழிபெயர்ப்பாளரான திரு கல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புதுதில்லியில் இருந்தபோது எனக்கு அறிமுகமானவர்; என் மீதும் என் படைப்புக்கள் மற்றும் மொழிபெயர்ப்புக்கள் மீதும் ஒரு தகப்பனைப்போன்ற கரிசனம் காட்டி என்னை ஊக்கப்படுத்துபவர்.அவர் வழியாகவே மகாஸ்வேதா தேவியின் ‘1084இன் அம்மா’ மற்றும் அதீன் பந்த்யோபாத்யாயாவின் ‘நீலகண்டப்பறவை’போன்ற மிகச்சிறந்த வங்க மொழிப் படைப்புக்களின் வாசிப்பனுபவத்தை நான் பெற்றேன். 

தில்லியிலிருந்து வடக்கு வாசல் இலக்கிய இதழ் வந்து கொண்டிருந்தபோது திரு கிருஷ்ணமூர்த்தியின் தன் வரலாற்றுப்படைப்பான ‘நான் கடந்து வந்த பாதை’நூல் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்...
இலக்கிய சிந்தனை பரிசுக்குத் தேர்வாகும் பல தகுதிகள் அந்நூலுக்குத் தானாகவே இருந்தும் அது குறித்து நான் எழுதிய அந்தக்  கட்டுரையே அப்பரிசுக்கு வித்தாயிற்று என்று என்னைப்பார்க்கும்போதெல்லாம்...சொல்லிச்சொல்லி மகிழும் எளிய தற்பெருமை அற்ற குணம் அவருடையது. அவரது பரந்த மொழிபெயர்ப்பு அனுபவத்துக்கு முன்பு, அப்போதுதான் அந்தத் துறையில் கால் பதித்திருந்த என்னைத் தனக்கு நிகராக நடத்தும் பண்பாளரான அவர், ஆண்டுக்கு ஒரு முறை தில்லியில் உள்ள தன் சகோதரி இல்லத்துக்கு வரும்போதெல்லாம் தொலைபேசியில் அழைத்து நேரில் வரச்சொல்லி என்னைச்சந்திக்காமல் போனதில்லை.

இன்று அவர் சென்னையிலும் நான் கோவையிலுமாய் இருக்கும் நிலை; அவரது முதுமை காரணமாய்க் கடும் நோவுகளுக்கு ஆட்பட்டிருக்கும் சூழலிலும் கூட தொலைபேசியில் என்னிடம் நலம் விசாரித்து நீண்ட கடிதங்கள் எழுத அவர் தவறுவதில்லை.அண்மையில் அவரிடமிருந்து வந்த கடிதமும் புத்தகப்பொதியும் என்னை இனம் விளங்காத மகிழ்ச்சிப்பரவசத்திலும், ஆனந்த அதிர்ச்சியிலும் ஆழ்த்தி விட்டன.
வங்க மொழியில் வெளியாகும் ’ரவிவாஸர்’இதழில் என் ‘கன்னிமை’சிறுகதை யை மொழிபெயர்ப்புச்செய்து அந்த இதழின் பிரதியையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார் அவர்.  எப்போதோ...என்னிடம் அவர் சில கதைகளைக்கேட்டிருந்த நினைவு மட்டும்  இருந்ததே தவிர அவர் அதை ஒரு பொருட்டாக எண்ணிச்செயல்படுத்தியும் காட்டியது என்னை மெய்சிலிர்க்கச்செய்து விட்டது.

புத்தகத்தோடு கூடவே அவர் கைப்பட விரிவான ஒரு கடிதம், அதில்,
‘’இதழின் ஆசிரியர் ஒரு தவறு செய்து விட்டார்;கதையின் தலைப்பில் என் பெயரை [கிருஷ்ணமூர்த்தியின் பெயர்] அச்சிட்டு விட்டு அதன் இறுதியில் இது எம்.ஏ.சுசீலாவின் கன்னிமை சிறுகதையின் வங்காள மொழிபெயர்ப்பு என்று அச்சிட்டிருக்கிறார். நான் இந்தத் தவறுக்காக அவரைக் கடிந்து கொண்டேன்’’
என்ற குறிப்புடன்...! இலக்கியத் திருட்டுக்கள் எப்படி எப்படியெல்லாமோ மலிந்து வரும் இந்த நாளில் இவ்வாறான ஒரு மேன்மகன்...

வயதின் தளர்ச்சி தன் இலக்கிய ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் தடையில்லை என்பதை ஒவ்வொரு கணமும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கும் திரு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களே நான் சோர்ந்து போகும் நேரங்களில் எனக்குப்புத்துயிர் ஊட்டி என்னை விழித்துக் கொள்ளச் செய்கிறார்கள். அவர் மொழிபெயர்க்குமளவு என் சிறுகதைக்குத் தகுதி உண்டா என்ற நெருடல் உள்ளத்தின் ஒரு மூலையில் தலைகாட்டினாலும் அந்த எளிய படைப்புக்குத் தாகூரின்  வங்க மாநிலத்தில் நிலையான ஓரிடத்தைத் தன் மொழிபெயர்ப்பால் பெற்றுத் தந்திருக்கும் அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன்பட்டவள் என்பதை உணர்ச்சிப்பெருக்கோடு இங்கே பதிவு செய்கிறேன்.

திரு கிருஷ்ணமூர்த்தி குறித்து மேலும் அறிய எண்ணுபவர்கள் 

திரு ஜெயமோகன் தளத்தில் வெளியாகியிருக்கும் 

சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்

நேற்றைய புதுவெள்ளம்,என்ற இரு கட்டுரைகளை வாசிக்கலாம்..
’உழைப்பின் தன்வரலாறு’என்ற என் கட்டுரை இணைப்பையும் காணலாம்.

2."காலத்தை வென்ற கதைகளில்  'ஊர்மிளை' சிறுகதை 

குங்குமம் தோழி இணைய இதழ் , "காலத்தை வென்ற கதைகள்" என்ற தலைப்பில்  பெண் எழுத்தாளர்களின் சிறுகதை ஆக்கங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நான் எழுதி 'தினமணி கதிர்'இதழில் முன்பு வெளிவந்த 'ஊர்மிளை' சிறுகதை அத்தளத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட சிறுகதையைத் தேர்வு செய்து என் ஒப்புதலோடு வெளியிட. முன் வந்ததுடன் தரமான ஆக்கங்களைத் தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வரும் நண்பர்,குறிப்பிட்ட இணைய இதழ்ப்பகுதியின் பொறுப்பாளர் திரு பாலுசத்யாவுக்கு என் நன்றி.

இணைப்பு

காலத்தை வென்ற கதைகள்-33


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....