துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.5.21

விமான தளத்தை விற்ற சிறுவன்-மொழிபெயர்ப்புச்சிறுகதை

சொல்வனம் இணைய இதழில் [247 ]வெளியாகியிருக்கும் என் மொழிபெயர்ப்புச்சிறுகதை.

விமான தளத்தை விற்ற சிறுவன்

ஆங்கில மூலம்; டெம்சுலா ஆவ்

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

(டெம்சுலா ஆவ்- இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான ஷில்லாங்கைச் சேர்ந்தவர்.  ஓய்வு பெற்ற ஆங்கிலப்பேராசிரியர். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர், சாகித்திய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். வடகிழக்கு மாநிலங்களுக்கே {அஸ்ஸாம்,நாகாலாந்த், மேகாலயா போன்றவை}உரிய வித்தியாசமான தனிப்பட்ட பிரச்சினைகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துபவை இவரது படைப்புக்கள். சாகித்திய அகாடமி பரிசு பெற்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலிருந்து [LABURNUM FOR MY HEAD] தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையே  விமான தளத்தை விற்ற சிறுவன்)

 

      மிகப் பெரிய போர் நடந்து முடிந்த பின், அதிக நடமாட்டம் இல்லாமல் காலியாய்க் கிடந்த அந்த விமான ஓடுதளத்தில் தற்காலிகக் கூடாரங்களடித்து முகாமிட்டிருந்த அமெரிக்கச் சிப்பாய்களோடு அந்த இளம் சிறுவன் எப்போது வந்து ஒட்டிக் கொண்டான் என்று எவராலும் சொல்ல முடியாது.  இந்தோ-பா்மிய ராணுவப் பிரிவில் போரிட்டவா்கள் இந்த வீரா்கள்.  போருக்குப் பின் எஞ்சிப்போன பொருட்களைக் கப்பலில் ஏற்றி அனுப்பும் வேலையையும், உள்ளுா்  ஒப்பந்தக்காரா்களுடனும் வியாபாரிகளுடனும் கணக்குகளை நோ் செய்யும் பணியையும் தற்போது அவா்கள் மேற்கொண்டிருந்தனா்.  அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஜோர்ஹாட் என்ற இடத்திலிருந்தது அந்த முகாம்.  மாநிலத்தை ஒட்டியிருந்த மலைப் பகுதிகளிலிருந்துதான் அந்தச் சிறுவன் அங்கே வந்து சோ்ந்திருக்க வேண்டும்;  அவன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளுா் ஆளைப் போலத் தெரியவில்லை. 

          வீட்டிலிருந்து ஓடிவந்து விட்ட பழங்குடி இனத்தைச் சோ்ந்த அந்த இளம் சிறுவன், அஸ்ஸாமின் சமவெளிப் பிரதேசங்களிலுள்ள வீடுகளில் பல ஆண்டுகள் எடுபிடிவேலை செய்து வந்தான். 

          மூன்றாவது முறையாக வேலை செய்யும் வீட்டை மாற்றிக் கொண்ட பின், குறிப்பிட்ட ஒரு வீட்டின் வேலைக்காரனாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருந்தான் அவன்.  எட்டு மாதங்களுக்குப் பிறகு அவனைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட அவன் தந்தை, தொடா்ந்து வந்த குளிர்கால சமயத்தில் அவனைத் தேட ஆரம்பித்தார். அவர் கண்டு பிடித்த பிறகோ அவன் அவரோடு திரும்பிச் செல்ல மறுத்தான்.  அவனது தாய் மனமுடைந்து போய் மிகவும் நோய் வாய்ப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்லி அவா் அவனை அழைத்துச் செல்ல முயன்றார் அம்மாவைப் பற்றிக் குறிப்பிட்டதும் கூட அவன் மனதை மாற்றவில்லை.  சண்டைக்காரன் போலக் கோபமாக அப்பாவைப் பார்த்தபடி

‘‘இதுக்கும் கூட அம்மாவை அடிக்கிறதுதானே நீங்கஎன்றான் அவன்.  அவன் எதிர்த்துப் பேசுவதைப் பார்த்துப் பயந்து போன தந்தை ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் அவன் வேலை பார்க்கும் வீட்டை விட்டு வெளியேறினார். தன் வீட்டையும், கிராமத்தையும் விட்டு வந்து முன்பின் தெரியாத வீடுகளில் அந்தச் சின்னப் பையன், ஏன் வேலை பார்க்கிறான் என்பது அந்த வீட்டு எஜமானருக்கு அப்போதுதான் புரிந்தது.

          போக்கன்மாங்க் என்பது அந்தப் பையனின் பெயா்; வீட்டை விட்டு வெளியே வந்தபோது அவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும் கடந்த மூன்று வருடங்களில் சற்று உயரமாக வளா்ந்திருந்த அவன்,  ஒரு நாளைக்கு இரண்டு வேளை நன்றாகச் சாப்பிடுவதற்காகப் பல வீடுகளில் மாறிமாறி எந்த வேலை வேண்டுமானாலும் செய்து கொண்டிருந்தான். அவனது இப்போதைய எஜமானரான ஜிதென்தாஸ் ரயில்வேயில் லைன் மேனாக இருந்தார்.  போக்கன்மாங்கின் தந்தை அங்கே வந்து போன பிறகு, அவன் வீட்டை விட்டு ஓடி வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டு விட்டதால் முன்னை விட அன்போடு அவனை நடத்தி வந்தார் அவர்.  ரயில் தண்டவாளம், சாலைக்கு நடுவே குறுக்கிடும் லெவல் கிராசிங்குக்கு எப்பொழுதாவது ஒரு முறை அவா் அவனை அழைத்துச் செல்வார். ரயில் வரும் நேரத்தில், எல்லாம் சரியாக இருக்கிறது என்று பச்சைக் கொடியை ஆட்டி சமிக்ஞை செய்யவும் அவனை அனுமதிப்பார்.  அந்தப் பையனுக்கு, அந்த அனுபவம் மிகவும் கிளா்ச்சியூட்டுவதாக இருப்பதால் அடிக்கடி அங்கே அழைத்துப் போகச் சொல்லி அவரிடம் கெஞ்சுவான் கொஞ்சம் கொஞ்சமாக, அவா்கள் இருவரின் உறவிலும் சற்று நெருக்கம் ஏற்படத் தொடங்கியிருந்தது.  போக்கன்மாங்க் ஜிதேனை அப்பா என்றே கூப்பிட ஆரம்பித்தான்.  முதல்முறை அவன் அவ்வாறு கூப்பிட்டபோது ஜிதேனோ, வீட்டிலுள்ள மற்றவா்களோ அதைக் கண்டு கொள்ளவில்லை.  ஜிதேனின் மனைவி காதில் அது விழுந்து அவள் அதை எடுத்துச் சொன்ன பிறகுதான் இதுவரை தன்னையோ, தன் மனைவியையோ எந்தக் குறிப்பான வார்த்தையாலும் அந்தச் சிறுவன் இதுவரை அழைத்திருக்கவில்லை என்பதை ஜிதேன் உணா்ந்து கொண்டார்.  தங்களைத் தவிர மற்ற யாரும் தங்கள் தந்தையை அப்படிக் கூப்பிடுவது பிடிக்காததால் ஜிதேனின் இரண்டு குழந்தைகளும் முதலில் அதைப்பற்றி சற்றுக் கோபமாகத்தான் இருந்தனர்.  பெற்றோர் அமைதியாக இருந்ததைத் தொடா்ந்து அவா்களும் அவ்வாறு முணு முணுப்பதை விட்டுவிட்டனா். 

           இப்போதெல்லாம் போக்கன்மாங்க் முன்னைப் போல ஓரிடத்தில் நிலை கொள்ளமால் அலைந்து கொண்டிருப்பதில்லை.  நிறைய நாட்கள் பயன்படுத்தும் வகையில் அடுப்புக்கான விறகுகளை வெட்டிக் கொண்டு வருவான். தண்ணீா் பிடிக்கும் பாத்திரங்களில் எப்போதும் குறையாமல் தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்வான்.  தோட்டத்தில் களை  பிடுங்குவான், பூச்சி மருந்து தெளிப்பான்.  நாள் முழுவதும் கடினமாக வேலை பார்ப்பான்.  தங்களுக்கு அதிகமாக இருக்கிறதென்று அண்டை அயலார் துாக்கிப் போட்ட பூச்செடிகளைக் கொண்டு வந்து அவா்கள் வீட்டுக்கு முன் நட்டு வைத்து வளா்ப்பான்.  காம்பவுண்ட் முழுவதுமே களைகள் மலிந்து வெறிச்சோடிக் கிடந்தாலும் ஜிதேன் குடியிருந்த மிகச் சிறிய வீடு மட்டும் முன்பு போல் இல்லாமல் மிக இனிமையான ஓா் இடமாகத் தோற்றமளிக்கத் தொடங்கி இருந்தது.  செம்பருத்தி, சாமந்தி, சூரியகாந்தி முதலிய சாதாரணச் செடிகளே முன்பக்கத்துத் தோட்டத்தில் இருந்தாலும், உரிய பருவ காலத்தில் அவை பூத்துச் சொரியும் போது விழாக்காலம் போல அந்த இடம் களைகட்டி இருந்தது.

          போக்கன் மாங்க், அந்த வீட்டுக்குப் போட்டிருந்த மூங்கில் படலாலான  வேலியையும் சரிசெய்தான்.  மண் சுவர்களைச் சீரமைத்தான்.  சுவரில் வெள்ளை அடிக்க சுண்ணாம்பு வாங்கி வருமாறு ஜிதேனிடம் ஓயாமல் நச்சரித்தான்.  முதலில் அவா் அதற்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் போக்கன்மாங்கின் யோசனைக்குக் குழந்தைகளும் ஆதரவளித்ததால் தானும் விட்டுக் கொடுத்து விட்டு ஒரு நாள், ஒரு டின் நிறைய சுண்ணாம்பை வாங்கிக் கொண்டு ரிக்‌ஷாவில் வந்து சோ்ந்தார்.  ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று ஜிதேன், போக்கன்மாங்க் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் நான்கு பேரும் சேர்ந்து சுண்ணாம்பைத் தண்ணீரில் கரைத்து, அதில் துணிக்குப் போடும் நீலச்சாயப் பொடியைக் கொஞ்சம் கலந்து கொண்டு அந்த மந்திரக் கலவையால் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் எல்லா இடங்களிலும் வெள்ளையடிக்க ஆரம்பித்தனா்.  அவா்களின் உற்சாகத்தில் தானும் பங்கு கொண்ட ஜிதேனின் மனைவி செனஹி, அன்றைய தினத்தைக் கொண்டாடுவதற்காக, மதிய உணவாக சோறும் சிக்கன் கறியும் தயாரிக்க முடிவு செய்தாள்.  எல்லோருமே பயங்கரமான ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததால், மதிய சாப்பாட்டு நேரத்துக்குள் வெள்ளையடிக்கும் வேலை முடிந்து விட்டது.  ஒரு குட்டித் துாக்கம் போட்ட பிறகு ஜிதேன் தன் சீருடைக்கு மாறிக்கொள்வதைப் பார்த்த போக்கன்மாங்க் அவரது வழக்கமான தலையசைப்புக்குக்கூடக் காத்துக் கொண்டிருக்காமல் தானும் ஒரு சுத்தமான சட்டையைப் போட்டுக் கொண்டான்.

          “நீ எங்கே கிளம்பிட்டே என்றார்  ஜிதேன்.  போக்கன்மாங்க் புன்னகை செய்தபடி தலைவாரிக்கொண்டான்.

          நீங்க போற அதே இடம்தான் என்று சொல்லிவிட்டு அவரது ஒப்புதலுக்குக் கூடக் காத்திருக்காமல் தீர்மாமான முடிவுடன் நடக்க ஆரம்பித்தான்.  சமீப காலமாக அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் முந்திரிக்கொட்டைத்தனமும் அந்தச் சிறுவனிடம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை ஜிதேன் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.  அதைப் பற்றி அவனுடன் தனிமையில் பேசியாக வேண்டுமென்று மனதுக்குள் முடிவு கட்டிக் கொண்டார்.  அன்று கூட்ஸ் வண்டி வந்து போவதற்காக அவா்கள் காத்திருந்தபோது லெவல் கிராஸிங்கின் மூடிய கதவுக்கு அப்பால் நிறைய வாகனங்கள்  மிக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன.  குறைந்த பட்சம் ஐம்பது லாரிகளாவது இருக்கும்.  அவையனைத்தும் மனிதர்களாலும், பொருள்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.  அவா்கள் எல்லோருமே வெள்ளைக்கார சிப்பாய்கள். சிலா் பாடிக் கொண்டிருந்தார்கள்.  வேறு சிலா் புரியாத ஏதோ ஒரு மொழியில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள் தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுப்புக் கம்பியிலிருந்து மெள்ள நழுவிப்போய் முதல் வாகனத்தின் அருகே சென்றான் போக்கன்மாங்க். சிக்னல் கம்பத்தின் மீதே கவனமாக இருந்ததால் அவன் அங்கே சென்றதை ஜிதேன் பார்க்கவில்லை.  கண்காணிப்புக் கோபுரத்தில் நின்றபடி அந்த  நீளமான ரயில் பார்வையை விட்டு மறையும் வரை பச்சைக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த ஜிதேன், லெவல் கிராசிங்கில் அடைக்கப்பட்டிருந்த கதவுகளில் ஒன்றைத் திறப்பதற்காக போக்கன்மாங்குக்குக் குரல் கொடுத்தார்.  ஆனால் ஒருபக்கத்துக் கதவை அவர் திறந்து விடும் வரை அவன் எங்குமே தென்படவில்லை.  அவனைத் திட்டிக்கொண்டே மூச்சு வாங்க நடந்தபடி மறுபக்கத்துக் கதவையும் திறந்து விட்டார் அவா்.  வெள்ளைக்கார சிப்பாய்கள் நிறைந்திருந்த வரிசையான நீண்ட வாகனங்கள் அவரைத் தாண்டி சீறிக்கொண்டு சென்றன.  அவற்றில் ஒன்றில் அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி இருந்த போக்கன்மாங்கின் முகம் தட்டுப்பட்டது.  அவரிடம் அவன் ஏதோ சொல்ல முயல்வது போலவும் இருந்தது.  ஆனால் அந்த டிரக் சென்ற வேகத்தில் அவருக்கு எதுவும் காதில் விழவில்லை.  வேறு இடத்தை நோக்கி நகர்ந்து விட்ட தன் வேலைக்காரனின் சந்தோஷமான முகம் மட்டுமே அவரது ஞாபத்தில் இருந்தது.  ஒரு காலத்தில் தன்னை  அப்பா என்று கூப்பிட்ட பையனை அவா் கடைசியாகப் பார்த்ததும், பேசியதும் அப்போதுதான்.  திடீரென்று ஒரு நாள் காலையில் அப்பா அப்பா இதில் என்ன எழுதியிருக்கிறது பாருங்களேன் என்று கத்திக் கொண்டே ஒரு செய்தித்தாளை ஆட்டியபடி பபுல் வீட்டுக்குள் வரும் வரை அப்படித்தான்.  ஜிதேன் பத்திரிகையிலிருந்த பெயரைப் படித்தார்.  ஆனால் அன்று லெவல் கிராஸிங்கில் அவசரமாகத் தன்னைக் கடந்து போனபடி, ஒரு மகனை இழந்த துக்கத்தைத் தன்னை உணர வைத்த புன்னகையோடு கூடிய அந்த முகத்தோடு அதை இணைத்துப் பார்க்க அவரால் முடியவில்லை.

            அந்த வெளிநாட்டுப் போர் வீரா்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவா்கள்.  விமானங்கள் இயங்காமல் காலியாய்க் கிடந்த அந்த விமான தளத்தில் தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துக் கொண்டு இந்தோபா்மியப் படைப் பிரிவில் எஞ்சியிருந்த மனிதா்களையும், பொருட்களையும் வெளியேற்றுவதை மேற்பார்வை செய்வதற்காக அவா்கள் அங்கே சென்று கொண்டிருந்தார்கள்.  சைகைகள் மூலமாகவும் ஒரு சில ஆங்கிலச் சொற்களை அரைகுறையாக உச்சரித்தபடியும் அவா்களோடு பேசி சமாளித்து, அவா்களுடனேயே பயணித்துக் கொண்டும் இருந்தான் போக்கன்மாங்க். குறிப்பிட்ட இடத்துக்கு அவா்கள் போய்ச் சேர்ந்ததும் தான் என்ன செய்யபோகிறோம் என்பதைப் பற்றி அவன் யோசித்துப் பார்க்கவில்லை.  இந்த வெள்ளைக்காரா்கள் எப்படிப்பட்டவா்கள், அவா்களும் சராசரி மனிதா்களைப் போன்றவா்கள்தானா அல்லது இதுவரை அவனுக்கு அறிமுகமில்லாத வேறு வகையான ஜந்துக்களா என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டுமென்பது மட்டுமே அவன் மனதில் இருந்தது.  தொடக்கத்தில் அவனிடம் இருந்த உற்சாகம் குறைய ஆரம்பித்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது ஜிதேன் குடியிருக்கும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அவனுக்கு வழி தெரியவில்லை. 

சிறிது நேரம் அங்கே சுற்றித் திரிந்து கொண்டிருந்த அவன், இரவைக் கழிப்பதற்காக சில சிப்பாய்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான்.  இரவு நேரத்துக் காவலன் ஒருவன் ஏதோ சத்தம் கேட்டுவிட்டு பயந்து போயிருந்த சிறுவனின் மீது விளக்கு வெளிச்சத்தைப் படரவிட்டான்.  வளைந்து நெளிந்து ஒரு பந்து போல் முடங்கியிருந்த சிறுவன் முனகிக் கொண்டிருந்தான். மறைவிடத்திலிருந்து அவனை வெளியே இழுத்து முகாமுக்குக் கூட்டிச்சென்றான் காவலன்.  பையன் பசியோடு இருப்பதை உணா்ந்து பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி சாண்ட்விச் ஒன்றை அவனுக்காகத் தயாரித்துக் கொடுத்தான். போர்வை ஒன்றை அவன் மேல் வீசி விட்டு வெளியே சென்றான். தன் கையில் தரப்பட்ட வித்தியாசமான அந்த உணவைச் சாப்பிட முதலில் பையனுக்கு மனம் துணியவில்லை.  ஆனால்  பயங்கரப் பசியோடு இருந்ததால் ஒரு சிறிய விள்ளலை மட்டும் ருசித்துப் பார்த்து அது தனக்குப் பிடித்திருக்கிறது என்பதைக் கண்டு பிடித்தான். ஒரே மூச்சில் அதைச் சாப்பிட்டு முடித்து விட்டு வாடையடிக்கும் அந்தப் போர்வையை மேலே சுற்றிக்கொண்டு ஆழ்ந்து உறங்கிப் போனான்.

          மறுநாள் காலை தான் சந்தித்த முதல் சிப்பாயிடம் சாகிப்களுக்கு வேலை செய்யத் தான் விரும்புவதாகத் தெரிவித்தான்.  முகாமின் கமாண்டரிடம் அழைத்துச் செல்லப்பட்ட அவனிடம்

‘‘உன் பெயரென்ன?’’

என்று கேட்டார் அவா்.

‘‘என் பெயா் போக்கன்மாங்க். நான் ஒரு நாகா’’ என்று அவன் பதிலளித்தான்.

‘‘உனக்கு என்ன வேண்டும்?’’

இதற்கு அவனால் எந்த பதிலும் தர முடியவில்லை.

‘‘உனக்கு என்ன வேண்டும் என்று மீண்டும் கேட்ட கமாண்டர் பதில் வராததில் எரிச்சல் அடையத் தொடங்கியிருந்தார்.  அவனைக் காலால் உதைத்து முகாமுக்கு வெளியே தள்ளிவிட வேண்டுமென்ற துாண்டுதலே முதலில் அவருக்கு எழுந்தது.  ஆனால் வித்தியாசமான அந்தப் பையன் ஏதோ ஒன்றைச் சொல்ல முயற்சிப்பதைப் பார்த்து விட்டு 

‘‘உனக்கு என்ன வேண்டும்’’

என்று மீண்டும் கேட்டார்.

அந்த வெள்ளைக்காரரைப் பார்த்துக் கொண்டே லெஃப்ட் ரைட், லெஃப்ட் ரைட் என்று உரக்கக் கத்தியபடி மார்ச் செய்யத் தொடங்கியிருந்தான் அவன்.  கமாண்டருக்கு சிரிப்பு பீறிட்டுச் கொண்டு வந்தது.  தனக்கு அடுத்தாற்போல் உள்ள அதிகாரியை அழைத்து முகாமுக்குத் தேவையான எடுபிடி வேலைகளுக்கு அவனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார் அவா்.

           தனக்குக் கொடுக்கப்படும் எந்த வேலையென்றாலும் அதைத் செய்து கொண்டிருந்தான் போக்கன்மாங்க்.  காலிப்பெட்டிகளில் பொருட்களை நிரப்புவது, பாதையைப் பெருக்குவது, உருளைக்கிழங்கைத் தோல் உரிப்பது, பாத்திரம் கழுவுவது, மேஜை துடைப்பது என்று எது வேண்டுமானாலும் செய்தான்.  எந்த ஒரு விஷயத்தையும் அவனுக்கு இரண்டு முறை சொல்ல வேண்டியதில்லை, தன் உதவி அவா்களுக்குக் கட்டாயம் தேவைப்படுகிறது என்பதை நிரூபிக்க முயற்சி செய்பவனைப் போல அவன் எல்லா வேலைகளும் செய்து கொண்டிருந்தான்.  முதலில் வெவ்வேறு வீடுகளில் வேலை பார்த்தபோதும் அவன் பயன்படுத்தியது இதே தந்திரத்தைத்தான். அவன் ஒரு இடத்தை விட்டு வெளியேறுகிறான் என்றால், அது அவனது சொந்த விருப்பத்தால் மட்டுமேயன்றி அவனை எவரும் வெளியேற்றியதில்லை.  இப்போது வீடு வாசல் இல்லாத அவனுக்கு இந்த வெள்ளைக்காரா்கள் ஒரு புது உலகத்தையே திறந்து காட்டிவிட்டதால் அவா்களோடு தங்கி நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்பட்டான் அவன்.  அன்று மாலையானபோது முகாமிலிருந்து அவனை வெளியே போகச் சொல்ல யாருக்கும் மனமில்லை.  இன்னும் சொல்வதென்றால் சமையற்காரா் அவனைச் சமையலறையின் பின் பக்கமாக அழைத்துச் சென்று ஒரு தட்டு நிறைய மாட்டிறைச்சிக் குழம்பும், ரொட்டியும் தந்தார்.  பிறகு போக்கன்மாங்க், சட்டி பானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருக்க சமையற்காரா் நாற்காலியில் கைகாலை நீட்டிச் சாய்ந்து புகை பிடிக்க ஆரம்பித்திருந்தார்.

           ஒரு சில நாட்களுக்குள் முகாமிலிருந்து அந்தச் சிறுவனை வெளியேற்ற வேண்டும் என்று தான் விரும்பியதே கமாண்டருக்கு மறந்து போய்விட்டது.  அவன் அங்கே மிகமிகத் தவிர்க்க முடியாதவனாகிப் போயிருந்தான்.  ஏவிய வேலை எதுவென்றாலும் போக்கைக் கூப்பிட வேண்டியதுதானே என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிருந்தார்கள் அவனது பெயரை முழுமையாக உச்சரிப்பது அவா்களுக்குக் கஷ்டமாக இருந்ததால் போர்கி என்று அதைச் சுருக்கி விட்டார்கள்.  ஷூக்களுக்குப் பாலீஷ் போட வேண்டுமா, போர்கியைக் கூப்பிடு சீருடைக் கால்சராய்களையும், சட்டைகளையும் துவைக்க வேண்டுமா, போர்கியிடம் சொன்னால் போதும்.  போர்கி இங்கே வா’, ‘அங்கே போ போர்கி’, ‘ஓடு போர்கி’, ‘எங்கே இருக்கே போர்கிஆகிய வார்க்தைகளே முகாம் முழுவதும் ஒலித்தபடி இருந்தன.  ஒரே மாதத்திற்குள் அடிப்படையான சில ஆங்கில வார்த்தைகளை அவன் கற்றுக் கொண்டிருந்தான்.  அவனுக்குப் பிடித்தமான வேறு சில வார்த்தைகளை அவற்றின் உண்மையான பொருள் தெரியாமலே முகாமிலிருப்பவர்களை மகிழ்விக்கும் வகையில் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டும் இருந்தான்.  அவர்களுக்கு இப்போது அவன் ஓர் அதிருஷ்டச் சின்னம் போல ஆகிப்போயிருந்தான்.  தனக்குச் சூட்டப்பட்டிருந்த புதிய பெயருக்கு சீக்கிரத்திலேயே அவன் பழகிப் போயிருந்தாலும் ஏதோ ஒன்று அவனைத் தொந்தரவு செய்த்து.  முகாம் முழுவதும் உள்ள எல்லா வேலைகளையும் தான் ஏன் இப்படி செய்து கொண்டிருக்க வேண்டும் என்று  நினைக்கத் தொடங்கியிருந்தான் அவன்.  அவன் ஏன் அதற்கு சம்பளம் கேட்கக் கூடாது? ஆனால் தான் அப்படிக் கேட்பதற்கு முன்பு ,ஏதாவது ஓரிடத்தில் எப்போதும் தேவைப்படுபவனாக இருக்க வேண்டும், அது ஒழுங்கான ஒரே மாதிரி வேலையாகவும் இருக்க வேண்டும்.

          அதனால் அவன் கமாண்டரின் கூடாரத்தையே சுற்றிவரத் தொடங்கினான்.  அதன் சுற்றுப்புறத்தையெல்லாம் மிக அற்புதமாக சுத்தம் செய்தான்.  முகாமின் பல இடங்களிலிருந்து செங்கற்களைக் கொண்டு வந்து கமாண்டரின் கூடாரத்திலிருந்து நுாறு மீட்டா் தொலைவிலிருக்கும் இராணுவ முகாம் அலுவலகத்துக்கு அவா் செல்வதற்கேற்றபடி சீரான ஒரு சிறிய நடைபாதையையும் அமைத்தான்.  அந்த வேலையை முடித்த பிறகு அக்கம் பக்கத்திலுள்ள தோட்டங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து அங்கு உள்ளது போன்ற செடிகளைக் கூடாரத்தைச்  சுற்றி நட்டு வைத்தான்.  தானாகவே அவன் செய்து வரும் இந்தச் செயல்களால் கமாண்டா் பெரிதும் மகிழ்ந்து போனார்.  தனக்குச் சேவகனாக (‘ஆா்டா்லி) இருப்பவனுக்குத் துணையாக அந்தச் சிறுவனை ஆக்கவும் அவர் முடிவு செய்தார்.  போக்கன்மாங்கின் திட்டம் ஒருவாறு பலித்துவிட்டது.  எவராவது அவனிடமிருந்து வேலை வாங்க நினைத்தால் முதலில் கமாண்டரின் சேவகனிடம் அனுமதி பெற்றாக வேண்டும்.

          போக்கன்மாங்க், எதையும் மிக விரைவாகக் கற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தான்.  கூட வேலை பார்க்கும் பிற மனிதா்களைத் தொடந்து கவனித்துப் பார்த்தபடி கூடாரத்தை சுத்தப்படுத்துவது, கமாண்டர் விரும்பும் வகையில் அவரது ஷூக்களுக்குப் பாலிஷ் போடுவது ஆகியவற்றை அவன் கற்றுக் கொண்டான்.  அந்தப் பெரிய அதிகாரி, எந்த நேரம் ஆணை பிறப்பித்தாலும் அதற்கு ஆயத்தமாக எப்போதும் அவரது கதவருகிலேயே நின்று கொண்டான். முகாமிலிருக்கும் ஒவ்வொருவரையும் அண்டிப் பிழைத்து அவா்கள் ஏவியதையெல்லாம் செய்து கொண்டிருக்காமல் இப்போது அவன் கமாண்டரின் செல்லப் பிள்ளையாக ஆகியிருந்தான்.  தனக்குக் கிடைத்த அந்தஸ்தில் அவன் தான் எப்படிக் குதுாகலித்தான்? தனக்கு முறையான சம்பளம் தரவேண்டும் என்று கேட்கக் கூட நினைத்தான் அவன்.

           பெரிய பெரிய டிரக்குகளில் சென்று கொண்டிருந்த முகம் தெரியாத மனிதர்களோடு போக்கன்மாங்க் தன் எதிர்கால அதிருஷ்டத்தை என்று முடிச்சுப் போட்டானோ அன்றிலிருந்து சரியாக ஒரு வருடம்  ஓடிப் போயிருந்தது.  அப்போது முதல் அவா்களது மொழியையும் நடை உடை பாவனைகளையும் அவன் நிறையக் கற்றுக் கொண்டிருந்தான்.  ஹிகுட்மார்னிங்குட்நைட் முதலிய வார்த்தைகளை அவனுக்கு சொல்லத் தெரியும் ஆனால் குட் ஆஃப்டர்நூன் சொல்வதில் மட்டும் அவனுக்கு எப்போதுமே சிக்கல் இருந்தது.  அவனை வசீகரித்த மற்றுமொரு விஷயம், கமாண்டா் தன் கூடாரத்தில் இருந்தபடி பேசுவதற்குப் பயன்படுத்தும் சிறிய இயந்திரம்.  தினமும் அவா் தன் அலுவலகத்துக்குச் சென்ற பிறகு அந்த விநோதமான கருவிக்குள் எது ஒளிந்திருக்கிறது அல்லது  யார் ஒளிந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப் பார்ப்பான் அவன்.

          பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமாண்டா் அதிக நேரம் வெளியே போய்விடுவார்.  அப்போது போக்கன்மாங்கும் முகாமிலிருந்து வெளியே சென்று அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க முயல்வான்.  அப்படி ஒரு நாள் அவன் வெளியே சென்றிருந்தபோது ஒரு மிகச் சிறிய கிராமம் அவன் கண்ணில் பட்டது.  விநோதமான இருபது வீடுகள் மட்டுமே அங்கே இருந்தன.  அவற்றில் சில விவசாயிகள் தங்கள் குடும்பங்களோடு வசித்து வந்தார்கள் முதலில் அந்த கிராமவாசிகள் அவனைப் பார்த்து சந்தேகப்பட்டாலும், விமானதளத்தில் சாகிபுகளுக்காக வேலை செய்பவன் அவன் என்பதை அறிந்த பின் அவா்களது ஆர்வம் கூடுதலாயிற்று, பல வகையான கேள்விகளால் அவா்கள் அவனைத் துளைத்தெடுத்தனர்.  வித்தியாசமான தோற்றம் கொண்ட அந்த வெள்ளைக்காரா்கள் என்ன சாப்பிடுகிறார்கள், அவனை அவா்கள் எப்படி நடத்துகிறார்கள், உண்மையிலேயே அவா்களெல்லாம் மனித ஜீவன்கள்தானா, இப்படிப் பல கேள்விகள்! போக்கன்மாங்க் அந்தக் கேள்விகளைக் கேட்டுவிட்டுச் சிரித்தான்.  சாகிபுகளும் கூட நம்மைப் போன்ற மனிதா்கள்தான் என்றும் தன்னிடத்தில் அவா்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள் என்றும் சொன்னான்.  பெரிய சாகிபுவுக்கு உதவியாளராகத் தான் வேலை பார்ப்பதாகவும், எந்த நேரம் நினைத்தாலும் அவரது கூடாரத்துக்குள் தன்னால் போக முடியுமென்றும் அவா்களிடம் விவரித்தான்.  அந்தச் சிறுவனுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தை - பெரிய சாகிபுகளோடு உடனிருக்கவும், சாப்பிடவும் கிடைத்த அதிருஷ்டத்தைக் கண்டு கிராம மக்கள் வியப்படைந்தார்கள்.  அவனை காவ்பாரோ எனப்படும் கிராமத்தலைவரின் வீட்டுக்கு உடனே அழைத்துச் சென்றார்கள்.  வயதில் மூத்தவா்கள் அவனிடம் மீண்டும் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.  வெள்ளைக்காரா்களின் முகாமுக்கு மிக அருகில் தங்கள் கிராமம் இருந்ததால் கிராமவாசிகள் கவலையோடுதான் வாழ்ந்து வந்தார்கள்.  உலகப் பெரும் போர் முடிந்து விட்டது என்பதெல்லாம் அவா்களுக்குத் தெரியாது.  விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே பக்கத்திலிருக்கும் காடுகளுக்குப் போய்ப் பதுங்கிக் கொள்ளும் அளவுக்கு அவா்கள் மிகவும் நடுக்கத்தோடு இருந்தனா்.  முகாமிலிருந்து மனிதா்களையும் பொருட்களையும் வெளியே கொண்டு செல்வதற்காகவே விமானங்கள் பயன்படுத்தப்படுவதால் இனிமேல் அவ்வாறு பயப்பட வேண்டிய தேவையில்லை என்று அவா்களுக்கு ஆறுதலளித்தான் போக்கன்மாங்க்.  வெகு விரைவிலேயே அந்த முகாமும் கூடக் காலியாகிவிடப் போகிறது என்பதை அவா்களிடம் தெரிவித்தான்.  அவன் கூறியதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவா்கள், அடுத்த ஞாயிற்றுக்கிழமை இன்னும் கூடுதல் தகவல்களோடு வருமாறு அவனைக் கேட்டுக் கொண்டனா்.  கிராமத் தலைவரின் மனைவி அவனுக்கு அருமையாக சமைத்துப் போட்டாள்.  அரிசி, பருப்பு, ஆட்டுக் கறி என்று இப்படிச் சாப்பிட்டு யுகக் கணக்கானது போலிருந்தது அவனுக்கு.  ஒரு நிமிடம் ஜிதேன் வீட்டைப் பற்றிய நினைவும் அவனுக்கு எழுந்தது.  ஆனால் உடனேயே அந்த எண்ணத்தை தூரத் தள்ளி விட்டு தன் எதிர்காலத்தைப் பற்றிஅந்த வெள்ளைக்காரச் சிப்பாய்கள் நாட்டை விட்டுப் போய் விட்டால் தனக்கு என்ன ஆகும் என்பதை யோசிக்க ஆரம்பித்து விட்டான் அவன்.  தான் காலம் தள்ளுவதற்கு மீண்டும் ஏதாவது திட்டம் போட்டாக வேண்டும் என்பதை அவன் உணா்ந்திருந்தான்.

          தொடா்ந்து வந்த வாரம் முழுவதும் தன் எதிர்காலம் பற்றிய கவலையில் தடுமாற்றத்துடனேயே இருந்தான் போக்கன்மாங்க்.  தான் எங்கே இருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாதவனைப் போல அந்த முகாமுக்குள் வளைய வந்து கொண்டிருந்தான்.  இதை கவனித்த கமாண்டர் ஒரு நாள் மாலை நேரத்தில் அவனைத் தன் கூடாரத்துக்குள் அழைத்துக் கேள்வி கேட்கத் தொடங்கினார்.  தன்னால் முடிந்தவரை அவனுக்குப் புரியும் வகையில் அவர் கேள்வி கேட்டாலும் அந்த இளம் சிறுவனுக்கு அதைப் புரிந்துகொண்டு பதிலளிப்பது கஷ்டமாகவே இருந்த்து.  ங்கிலத்தில் ஓரளவு உரையாட அவனால் முடியுமென்றாலும் இப்படிப்பட்ட தீவிரமான ஒரு பேச்சுவார்த்தையில் பயன்படும் பல சொற்கள் அவனுக்குப் புரியத்தான் இல்லை.

          ‘‘என்ன ஆச்சு போர்கி உனக்கு? உடம்பு முடியலியா…? ‘சிக்..’?”

          ‘‘இல்லை சாகிப்!” என்றவன் தன் உடம்பைத் தொட்டுக் காட்டி ‘‘இங்கே நோ சிக்என்றான்.  பிறகு தன் தலையைப் பிடித்துக் கொண்டு

          ‘‘ஆனா இங்கே சிக்’ ” என்றான்.

          ‘‘அது ஏன் போர்கி

          ‘‘யூ கோ., ஆல் கோ போர்கி நோ கோ…” என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே போனான்.

          ‘‘போர்கிக்கு வீடுன்னு எதுவுமில்லை, ஊரில்லை.  அம்மா அப்பா இல்லை.  ஜிதேன் பாபாவுக்கு அப்புறம் யூ மை டேடிஆனா ஜிதேன் அப்பா கோபப்படுவார்.  போர்கி ஓடி வந்திட்டான்.  போர்கி ஒரு கிறுக்கு… ‘மேட்’ ”

-காயப்பட்ட மிருகத்தைப் போல முனகத் தொடங்கினான் அவன்.

          விஷயம் இப்படித் திசை திரும்பி விட்டதில் அந்த வெள்ளைக்கார அதிகாரி குழப்பமடைந்தார்.  தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கக் கூடிய திறமை போர்கிக்கு இருக்கக்கூடுமென்று அவர் ஒரு போதும் எண்ணிப் பார்த்ததில்லை.  அவனை அவருக்குப் பிடித்திருந்தது உண்மைதான். முகாமில் ஏவிய வேலைகளுக்கெல்லாம் அவன் வளைய வந்து கொண்டிருந்தது எல்லோருக்கும் வசதியாவும் இருந்தது.  ஆனால் அதைத் தாண்டி, இந்த முகாமில் ஓா் அங்கமாகவே ஆகி விட்ட இந்தப் பையனைப் பற்றிக் கண நேரம் கூட அவர் யோசித்துப் பார்த்திருக்கவில்லை.  எவ்வளவு முயற்சி செய்தாலும் கலங்கிப்போயிருந்த அந்த சிறுவனுக்கு ஆறுதல் சொல்லப் போதிய வார்த்தைகள் அவருக்குக் கிடைக்கவில்லை.  அவனை வெறுமே தட்டிக்கொடுத்த அவா்,

‘‘நாளைக்குப் பேசுவோம் போர்கி, குட்நைட் என்றார். ‘குட் நைட் என்பது அவனை வெளியேறச் சொல்வதற்கான சமிக்ஞை என்பதை போர்கி அறிந்திருந்தான்.  அவருக்குத் தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தி விட்டு அந்தக் கூடாரத்தை விட்டு வெளியேறிப் பணியாளர்களோடு சேர்த்துத் தனக்கும் ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றான்.

ஒவ்வொரு நாள் மாலையும் கமாண்டரிடமிருந்து தனக்கு அழைப்பு வரக் கூடும் என்று வீணே காத்திருந்தான்.  வராததால் ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில் அவனே கமாண்டரின் இருப்பிடத்துக்குச் சென்று கதவைத் தட்டினான்.

‘‘கம் இன்

என்று முரட்டுக் குரலில் சொன்ன கமாண்டா் போர்கியைப் பார்த்தும் வியப்படைந்தார்.  அங்கேயுள்ள ஸ்டூல் ஒன்றில் உட்காருமாறு அவனைப் பணித்து விட்டுத் தொடா்ந்து ஏதோ எழுதிக் கொண்டே இருந்தார்.  போர்கி மணிக்கணக்கில் அப்படியே காத்துக் கொண்டிருந்தான்.  இறுதியில் அவன் பக்கம் திரும்பியபடி பேசத் தொடங்கினார் அவா்.

’’இதோ பார் போர்கி, இன்னும் மூன்று நாட்களில் நாங்களெல்லாம் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போவதாக இருக்கிறோம்.  ஆனால் உன்னை எங்களோடு கூட்டிக் கொண்டுபோக முடியாது.  அதாவது பையா! ‘போர்கி நோ கோ வித் சாகிப் புரியுதா?” என்றார்.  அவன் தலையசைத்தான் அவா் சொன்னதையெல்லாம் அத்தனை நேரமும் ஏதோ மிரட்சியில் இருப்பவன் போலக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

          கமாண்டா் பேச்சைத் தொடர்ந்தார்.

இதோ பார்! நாங்கள் இங்கே நல்ல நிலையில் விட்டு விட்டுப் போகப் போகும் துணிமணிகள், ஷூக்கள், பாத்திரங்கள், மரச்சாமான்கள், உணவுப் பொருட்கள், கூடாரங்கள், டயா்கள் என்று எல்லாமே உனக்குரியவை என்று இதில் எழுதிவைத்திருக்கிறேன்.  நல்லபடி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீப் கூட உன்னுடையதுதான் புரிகிறதா? ஆனா போர்கி நோ கோ வித் அமெரிக்கன்ஸ் ”– எங்களோட நீ அமெரிக்காவுக்கு வர முடியாது,சரியா’’

          போர்கி இம்முறை சம்தித்துத் தலையசைத்தபோது அவன் கண்களில் புதிய பிரகாசம் தெரிந்தது.  பிறகு அவனை அருகில் அழைத்த கமாண்டர், பண நோட்டுக்களை ஒரு கட்டாக அவனிடம் தந்தார்.  அவையெல்லாம் இந்திய ரூபாய்கள், அங்கே போன பிறகு அவற்றால் அவா்களுக்குப் பயனில்லை இப்போது அவனுக்கு உண்மையிலேயே சிலிர்ப்பாக இருந்தது.   மற்ற சிப்பாய்கள் சல்யூட் வைப்பதைப் பார்த்திருந்ததால் தானும் அதைப் போலவே வைக்க அவன் முயற்சித்தான்.  போர்கியை ஒரு வழியாக சந்தோஷப்படுத்த முடிந்ததிலும், ஓரளவுக்குத் தன் மனச் சாட்சியையும் சமாதானப்படுத்த முடிந்ததிலும் வெள்ளைக்காரா் திருப்தியடைந்தவராய்த் தோன்றினார்.  முகாமோடு ஒட்டிக்கொண்டு தொங்கி வேலைபார்ப்பவன் என்ற போக்கன்மாங்கின் பணித் தகுதியை அவன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய துண்டுத்தாள் நீக்கிவிட்டிருந்தது. மாறாககிட்டத்தட்ட இயங்காத நிலையிருக்கும் ஒரு விமான தளத்தில் கைவிடப்பட்ட ஒரு முகாமுக்குச் சொந்தக்காரனாகவும் அவனை அது ஆக்கி விட்டிருந்தது.

          போரில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுப் படைவீரர்களெல்லாம் தங்கள் வெற்றிப் பெருமிதத்தையும் புகழையும் மட்டும் சுமந்தபடி போரில் பயன்படுத்தப்பட்டுப் பழையதாகி விட்டிருந்த ஒரு விமானத்தில் ஏறிச் சென்று விட, அவர்களால் கைவிடப்பட்ட வெறிச்சோடிப்போன அந்த முகாமில் ஒரு துண்டுச்சீட்டை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு திகைத்துப் போய் நின்றிருந்தான் அந்தச் சிறுவன்.  அந்தக் காலி இடத்திற்கும் அதில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளுக்கும் அவனே சொந்தக்காரன், எஜமானன் என்று அந்த வெற்றியாளர்கள் அதில் முத்திரையிட்டு சாசனம் செய்து தந்திருந்தார்கள்.  இரண்டு நாட்கள் அந்த முகாமை முழுமையாக சுற்றி வருவதற்கு மட்டுமே செலவிட்டான் போக்கன்மாங்க்.  கிராமத்தவர்களைப் பார்க்க அப்போது அவன் செல்லவில்லை.  தன்னிடம் இருந்த துண்டுத் தாளில் இருக்கும் கிறுக்கல் என்ன சொல்கிறது என்று வெறித்துக் கொண்டே இருந்தான்.  அவர்கள் அவனுக்கு விட்டுச் சென்றிருக்கும் அன்பளிப்புக்களையும், கெட்டுப்போன சாப்பாட்டுப் பொருட்களையும் அவன் பொருட்படுத்தவில்லை.  திடீரென்று அந்த முகாமில் கூட்டம் கூட்டமாக எறும்புகள் மொய்க்கத் தொடங்கின.  எலிகள் வெள்ளமாகப் பெருகிவந்தன.  எங்கிருந்து வந்தன என்றே கண்டுபிடிக்க முடியாமல் காக்கைகள் சூழ்ந்து கரைந்தன.  சிப்பாய்களிடமிருந்த துப்பாக்கி வெடிச்சத்தத்துக்குப் பயந்து இதுவரை விலகியிருந்த ஓநாய்கள், மாலை வேளையில் மிக அமைதியாக இருந்த முகாமுக்குள் சுதந்திரமாக தைரியமாக நடமாடத் தொடங்கியிருந்தன.

          மூன்றாவது நாள் ஒரு புதிய தீர்மானத்தோடு கண் விழித்தான் போக்கன்மாங்க்.  ‘காவ்பாரோ’வைப் போய்ப் பார்த்து கிராமவாசிகளோடு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும்; அமெரிக்கர்கள் விட்டுவிட்டுப் போயிருக்கும் சாமான்களையெல்லாம் அவர்களுக்கு விற்றுவிடவேண்டும்.  ஆனால் அதற்கு அவர்களை சம்மதிக்க செய்ய வேண்டுமென்றால் வலுவான ஏதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தினால்தான் முடியும் முகாமின் புதிய சொந்தக்காரனான அவனிடமிருந்து  அவற்றை அவர்கள் வாங்குவதற்கு ஒரு தகுந்த காரணம் வேண்டும்.  அதனால் அவன் முகாமை அலசி ஆராய்ந்து பார்த்து அதிலிருக்கும் விலை மதிப்புள்ள பொருட்களை மனதுக்குள் கணக்கெடுக்கத் தொடங்கினான்.  அங்கிருந்த படுக்கைகள், நாற்காலி மேஜைகள், அடுப்படிப் பாத்திரங்கள் முதலியவை எவ்வளவு இருக்கின்றன என்று எண்ணிப்பார்த்தான்.  அடுத்தாற்போலக் காலணிகள், பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள போர்வைகள், சட்டைகள், ஸ்வெட்டர்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்தான்.  உதிரி உதிரியாகக் கிடந்த புகைப்படச் சட்டங்கள், கண்ணாடிகள், பத்திரிகைகள், பைகள், வெவ்வேறு அளவிலும், வடிவத்திலும் இருந்த சூட்கேஸ்கள் என்று எதையுமே அவன் விட்டுவைக்கவில்லை.  இவை எல்லாமே கிராமவாசிகளுக்குக் கணநேர ஆர்வத்தை மட்டுமே தூண்டக்கூடியவை என்பதை அவன் அறிந்திருந்தான்.  பிறகு அவன் அந்த ஜீப்பைப் பற்றி யோசித்துப் பார்த்தான், இப்போது கிராமத்தில் ‘ரிப்பேர்’ வேலை செய்யும் ஒருவன், முன்பு டிரக் ஓட்டுபவனாக இருந்திருப்பது அவனுக்குத் தெரியும்.  அந்த வாகனத்தை வாங்க அவன் ஒரு வேளை ஆர்வம் காட்டக்கூடும்.

          தான் கண்டுபிடித்த பொருட்களையெல்லாம் மனதுக்குள் கூட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவனுக்குள் ஒரு சந்தேகமும் முளைவிட்டது.  யாரோ முகம் தெரியாத சில அந்நியர்கள் விட்டுவிட்டுச் சென்றிருக்கும் பழைய சாமான் பொதியில் கிராமவாசிகளுக்கு ஆர்வம் இருக்குமா என்கிற ஐயம்தான் அது.  அவன் முன்வைக்கும் அந்த யோசனையை அவர்கள் முற்றாகவே நிராகரித்துவிடக் கூட வாய்ப்பிருக்கிறது.  இப்படி ஒரு விஷயத்தை நினைத்துப் பார்த்த பிறகு அவன் மனம் பெரிதும் அலைக்கழியத் தொடங்கியது.   ஆனால் அவன் தன் முயற்சியைக் கைவிட மட்டும் விரும்பவில்லை.  அமெரிக்கர்களிடமிருந்து தனக்குக் கிடைத்திருக்கும் இந்த அளவு சாமான்களிலிருந்து தனக்கான மூலதனத்தை ஈட்ட அவன் ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

          ஒரு சராசரி விவசாயிக்கு எந்த விஷயம் மிகவும் மதிப்புள்ளதாகத் தோன்றும் என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.  ‘நிலம்’ என்ற பதில் உடனடியாக அவனுக்குள் தோன்றியது.  விவசாயம் செய்வதற்கு இன்னும் அதிகமான நிலம் வேண்டும் என்று தன் தந்தை எப்படிக் கனவு கண்டு கொண்டிருந்தார் என்பதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் என்பதும் இப்போது அவனுக்கு நினைவு வந்தது.  நிறைவேறாத அந்த எரிச்சல்தான் அவரது குணத்தையே கெடுத்துவிட்டது.  ஒரு நிலப்பரப்பு இத்தனை சுலபமாகக் கிடைக்கும்போது எந்த ஒரு விவசாயியும் அதை அப்படி ஏளனமாக உதறிவிட மாட்டான் என்று போக்கன்மாங்க் நம்பினான்.  அதனால் அதைத் துருப்புச் சீட்டாக வைத்து விளையாடத் தீர்மானித்தான் அவன்.  அந்த நிலம் முழுவதையுமே அவன் அவர்களுக்கு விற்றுவிடுவான்; அதோடு கூடுதல் போனஸாக அதிலிருக்கும் ஜீப் உள்ளிட்ட எல்லாப் பொருட்களையும் கூடக் கொடுத்துவிடுவான்.  அது கிராமவாசிகளை மிக அதிகமாக ஈர்த்துவிடும்.  அவன் இப்போது மகிழ்ச்சியடைந்திருந்தான்.  அவர்களை இணங்க வைக்க மிகச் சரியான ஒரு விஷயம் கிடைத்துவிட்டதாக நம்பினான்.  அதற்குப்பிறகு நேரத்தை வீணாக்காமல் குளித்து முடித்து, ‘டின்’களிலிருந்த சில உணவுப் பொருட்களைக் கலந்து சாப்பிட்டு முடித்துவிட்டு கிராமத்தை நோக்கிச் சென்றான்.  அப்போது கிட்டத்தட்ட மாலைப்பொழுதாகிவிட்டிருந்தாலும் அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

          அவன் கிராமத்தை அடைந்தபோது அந்த கிராமவாசிகள் அப்போதுதான் தங்கள் வயல் வேலைகளிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள்.  சம்பிரதாயமான முகமன் சொல்லி முடித்த பின் ‘காவ்பாரோ’வின் வீட்டுக்குச் சென்றான் அவன்  தன்னிடம் கமாண்டரால் தரப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் போன்ற ஆவணத்தைப் பிரித்துக் காட்டித் தன் மனதிலிருப்பதைக் கிராமத்து ஆட்களிடம் விளக்கமாகச் சொன்னான் அவன்.  முதலில் அவர்கள் அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை.  அந்தத் துண்டுச் சீட்டில் தனக்கு சொந்தமானவையாக ‘அவை எழுதப்பட்டிருக்கின்றன என்று போக்கன்மாங்க் கூறுவதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கும் என்று கூட அவர்களில் சிலர் சந்தேகப்பட ஆரம்பித்திருந்தனர்.  ஆனால் அந்தக் கூட்டத்தில் ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த ‘காவ்பாரோ’வி’ன் மகனும் இருந்ததால், அந்தச் சீட்டை வாசித்துப் பார்த்து அதிலுள்ளதைத் தங்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.  அவன் ஆங்கிலத்தில் அந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றவனில்லை என்றாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.  அதனால் ‘ஏர்ஃபீல்ட்’ (விமானதளம்) என்ற வார்த்தையை மட்டும் அதில் தேடிப்பார்த்தான்.  தன் மொழிபெயர்ப்புக்கு அதுவே நம்பகத்தன்மை சேர்க்குமென்பது அவனது எண்ணம். ஆவணத்தின் மூன்று இடங்களில் அந்தப் பெயர் இருப்பதைக் கண்ட அவன் மகிழ்ச்சியடைந்தான்.  போக்கன்மாங்க் கூறுவது உண்மைதான் என்று அவன் விவசாயிகளிடம் சொல்லிவிட, போக்கன்மாங்கும் நிம்மதிப்பெருமூச்சவிட்டான்.

          இப்போது தீவிரமாக முண்டியடிக்கத் தொடங்கிய கிராமவாசிகள், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அந்த விமான தளத்தைக் கூட்டாக வாங்கிக் கொள்ளலாமென்றும், பிற்பாடு அதைப் பிரித்துக் கொள்ளலாமென்றும் முடிவு செய்தனர்.  நிலத்திலுள்ள மற்ற பொருட்கள் மீது அவர்களுக்கு நாட்டமில்லையென்றாலும் அவற்றையும் அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று மட்டும் சொல்லி அப்படியே விட்டுவிட்டான் போக்கன்மாங்க்.  நிலத்தின் விலை குறித்த அவர்களது விவாதம் இரவு வரை நீண்டு கொண்டே போயிற்று.  போகன்மாங்க் எதிர்பார்க்கும் தொகை, மிக அதிகம் என்றார் ‘காவ்பாரோ’. அந்த விமான தளம் அவர்களது கிராமத்துக்குப் பக்கத்திலும் நெடுஞ்சாலைக்கு அருகிலும் இருப்பதால் அதை வாங்குவது அவர்களுக்கு லாபம்தான் என்று பதிலளித்தான் அவன்.  முன்கூட்டியே திட்டமிடாவிட்டாலும் அவர்களுக்கான இரவு உணவை ‘காவ்பாரோ’வின் மனைவி தயாரித்துவிட, உணவை உண்டபடியும், எண்ணற்ற கோப்பைகள் கறுப்புத் தேநீர் அருந்தியும் அவர்கள் தொடர்ந்து விவாதித்துக் கொண்டே போனார்கள்.  முதல் கோழி கூவிய அந்த அதிகாலைப் பொழுதில் ‘காவ்பாரோ’ முடிவாக ஒரு தொகையைச் சொல்ல, போக்கன்மாங்கும் சற்றுத் தயக்கம் காட்டுவது போல பாவனை செய்தபடி அதற்கு ஒத்துக் கொண்டான்.  உண்மையில் தனக்குச் சொந்தமே இல்லாத ஒரு நிலத்துக்கு - இனிமேல் ஒரு போதும் பார்க்கவே போவதில்லை என்று அவன் நம்பும் ஒரு இடத்துக்கு ஐநூறு ரூபாய் கிடைக்கப்போவதை நினைத்தால் உள்ளுர அவனுக்குமே பெருமிதமாகத்தான் இருந்தது.  பிறகு ஒரு சில மணிநேரம் அந்தக் கூட்டத்தினர் அப்படியே உறங்கிப் போயினர்.  பொழுது நன்றாக விடிந்து மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்ற பிறகு கிராம நிதியிலிருந்து பணத்தை எடுத்து வந்து எண்ணிக் கொடுத்தார் ‘காவ்பாரோ’.  அவலும் வெல்லமும் கலந்த அருமையான சிற்றுண்டியையும், பாலும், சீனியும் சேர்த்த ஆவிபறக்கும் தேநீரையும் போக்கன்மாங்க்குக்குப் பரிமாறினார்கள்.  பணத்தைப் பையில் போட்டுக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய அவன், மீண்டும் முன்போலவே அறிமுகமில்லாத ஏதோ ஓர் இடத்தை நோக்கிக் கிளம்பினான்.

          கிராமவாசிகள், நிலத்தைத் தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்ளவும், அதைத் தோண்டவும் முற்பட்டபோதுதான் சிக்கல் தொடங்கியது.  முதல் ஒரு வாரம் அவர்கள் என்ன செய்கிறார்களென்பதை யாரும் கவனித்திருக்கவில்லை.  திடீரென்று ஒரு நாள், அதிகாரி போலத் தோற்றமளித்த ஒருவர் ‘காவ்பாரோ’வின் வீட்டுக்கு வந்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.  முகாமின் கமாண்டர் எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டை அவரிடம் காட்டிய அவர்கள் போக்கன்மாங்க் என்ற பெயர் கொண்ட சிறுவனிடமிருந்து அந்த விமானதளத்தை விலைக்கு வாங்கியதாகக் கூறினர்.

          ‘‘அவன் எங்கே”

என்று அவர் கேட்டபோது எவரிடமும் அதற்கான பதில் இல்லை.  அந்தச் சிறுவன் எங்கிருந்து வந்தான் என்றோ, எங்கே போய்க் கொண்டிருக்கிறான் என்றோ கேட்க வேண்டுமென்று யாருக்குமே தோன்றவில்லை.  அந்த ஆவணத்தைப் படித்த அதிகாரி சிரிக்கத் தொடங்கிவிட்டார்.  அந்த கிராமவாசிகள் எல்லோருமே உண்மையில் முட்டாள்கள்தான்.  காரணம் விமானதளம், அதை விற்றவனுக்கு ஒருபோதும் சொந்தமானதாக இல்லையென்பதை அவர் தெளிவுபடுத்தினார்.  வெட்கத்தோடும், துக்கத்தோடும் தலையைத் தொங்கவிட்டபடி, தங்களிடம் அந்த விமானதளத்தை விற்றுவிட்டுப் போன சிறுவனை சபிப்பதைத் தவிர அந்த கிராமத்தவரால் செய்ய முடிந்து வேறதுவுமில்லை.

            ……………………………………………………………………..

 

 

 

 

 

 

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....