துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.12.12

2012 இல்.....

31/12/12 குங்குமம் தமிழ் வார இதழ் வெளியிட்டிருக்கும் 2012 க்கான 10 முக்கியமான நூல்களில் [டாப் டென்] -என் மொழிபெயர்ப்பான ’அசடனு’ம்’ இடம் பெற்றிருக்கிறது.

இலக்கியம்,அரசியல்,பொருளியல் எனப்பல தளங்களிலும் வெளிவந்த முக்கியமான சில நூல்களை எழுத்தாளர் திரு ஜெயமோகன் இப்பட்டியலில் தன் கணிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கும் பட்டியலிலும் அசடன் இடம் பெற்றிருக்கிறது.

மூலநூலாசிரியர் தஸ்தயெவ்ஸ்கியின் மொழியை என் சொற்களில் வைத்தது மட்டுமே நான் செய்தது. இவ்வாண்டில் இம்மொழிபெயர்ப்பைப் பெருமளவில் வரவேற்று வாசித்த இலக்கிய ஆர்வலர்களுக்கும்,விமரிசகர்களுக்கும்-  அளவில் மிகப்பெரியதான இந்த நூலைப் பல வகைச்சிக்கல்களுக்கு நடுவிலும் பிரம்மாண்டமாக வெளியிட்ட மதுரை பாரதி புத்தகநிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கும் என் நன்றி....

2012 இல் என் நூலுக்கும் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்ததை நிறைவுடன் ஏற்று....அடுத்த அடி எடுத்து வைக்க இன்னும் பொறுப்புடன் ஆயத்தமாகிறேன்.

இ பாவின் கண்ணன்


கையில் எடுத்து விட்டால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்போடும்...அதே நேரம் ஆழமான தகவல்களைக்  கூட மெல்லிய கிண்டலோடும்,நகைச்சுவையோடும் சேர்த்துத் தரும் ஒரு நூலை வாசித்துப் பல நாட்களாயிற்று. அந்தக்குறையைப்போக்குவது, இந்திரா பார்த்தசாரதியின் நாவலா..கட்டுரை நூலா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஆக்கமான ’’கிருஷ்ணா..கிருஷ்ணா...’’

இந்துக்கடவுளரில் கண்ணன் மதம் கடந்த பிரியத்துக்கும் நேசத்துக்கும் உரியவன்.பயபக்தியோடு செய்யப்படும் வழிபாட்டை விடவும் ஒரு குழந்தையைச் சீராட்டுவது போன்ற வாஞ்சையே அதில் எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கும். கண்ணனின் பிள்ளைக் குறும்புகளை அதிகம் கேட்டே அவனைக் குழந்தையாக வரித்துக் கொண்டு விட்ட நம் மனங்களில் அந்தச் சித்திரத்தை இன்னும் அழுத்தமாகத் தீட்டியிருக்கிறது பாரதியின் கண்ணன் பாட்டு.

கண்ணன் ஒரு குழந்தையாக நம் மனங்களில் பதிவாகியிருந்தாலும் அவனுக்குப் பல முகங்கள்,பரிமாணங்கள் உண்டு.இராமனைப்போன்ற ஒற்றைப்படைத் தன்மை கொண்டவன் அல்ல அவன். பாகவதத்தில் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத் திரியும் அவன், பாரதத்திலோ அரசியல் விளையாட்டில் முக்கியமான அங்கம் வகிக்கும் மதியூகியாகிறான். கண்ணனைக் கடவுளாகவே ஏற்றிருப்பவர்களுக்கும் கூட அவனது செயல்பாடுகளில் பல கேள்விகளும் ஐயங்களும் தலைநீட்டும் இடங்கள் பாரதம்,பாகவதம் இரண்டிலுமே ஏராளமாக உண்டு.அவற்றுக்கெல்லாம் விடை தேட இந்நூல் மூலம் ஒரு முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இ.பா. அந்த விடைகளை மிக இலகுவான மொழியில்,அவருக்கே உரிய அங்கத நடையில் சொல்லிச் செல்வதால் நூற்றுக்கணக்கான கிளைக்கதைகளும்,தத்துவ விளக்கங்களும் இதில் இடம் பெற்றாலும் கூட அவை துருத்திக் கொண்டோ,எளிதான வாசிப்புக்குத் தடையாக உறுத்திக் கொண்டோ நிற்காமல் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்தோடும் வேகத்தோடும் இந்த நூலைப்படித்து விட முடிகிறது.

‘’உபதேசம் என்று எதுவுமில்லாமல் கவனமாக எழுதியிருக்கிறேன்’’என்கிறார் இ.பா.

கண்ணன் என்னும் அந்த அவதாரத்தின் முடிவு ஜரா என்னும் வேடனால்,அவன் எய்யும் அம்பால்  நேர்கிறது.அந்த இறுதிக்கணத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு விடையாகக் கண்ணன் பல தன்னிலை விளக்கங்கள் அளிக்கிறான்; அதை நாரதர் தனக்கே உரிய பாணியில் விவரிப்பதாக இந்த நூலின் வடிவைக் கட்டமைத்திருக்கிறார் இ.பா.[நாரதரைத் தகவல் கடத்தும் ஒரு நபராக- எல்லாக் காலங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர் வடிவமைத்திருப்பதால் பத்திரிகைக்காரருக்கே உரிய,நையாண்டி,விமரிசனம்,மாடர்னிஸம்,போஸ்ட்மாடர்னிஸம்,எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எனத் தற்காலப்போக்குகளை ஒன்றுகலந்து சொல்வதற்கான வாய்ப்பு இந்தப்படைப்புக்குக் கிடைத்து விடுகிறது]

’700 சுலோகங்களாக விரியும் கீதையைப் போர்முனையில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா....?’- அதற்கு இப்படி விளக்கம் தருகிறது இந்நூல். நாரதர் சொல்கிறார்...’’எதிர்த்தாற்போல் பகைவர்கள் போராடத் தயாராக நின்றுகொண்டிருக்கும்போது கிருஷ்ணன் மணிக்கணக்கில் இவ்வாறு அருச்சுனனிடம் பேசியிருப்பான் என்பது சாத்தியமா என்பது நியாயமான கேள்வி.நானே கிருஷ்ணனிடம் இது பற்றிக்கேட்டேன்.கிருஷ்ணன் சொன்னான்,’நாரதா வார்த்தைகள் உதவியின்றி மனமும் மனமும் வெறும் எண்ண மொழியில் பேசினால் இந்த உரையாடல் நிகழ அதிகபட்சம் ஐந்து நிமிஷங்களாகும் என்று....நீங்கள் இப்போது சொல்லுகிறீர்களே     அதுவேதான் கிருஷ்ணன் சொல்லும் எண்ண மொழி-telepathy’’

போர் முனைக்கு வந்தபோது அர்ச்சுனனுக்கு நேர்வது  ஓர் existentialistic dilemma என்று கூறும் இ.பா.,
‘செய்கைதான் எல்லாவற்றுக்கும் தீர்வு,மனப்போராட்டம் என்பது,காரியம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கான மனச்சமாதானம்’என்பதையே கண்ணன்
கீதையாக உரைப்பதால், அது எந்தக்காலத்துக்கும் பொருந்தி வரும் ஓர் அரசியல் manual ஆவதையும், அதனாலேயே கம்யூனிஸ்ட் தோழர் டாங்கே போன்றவர்களும் கூட அதிலிருந்து மேற்கோள் காட்டுவதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

ஜராசந்தனின் உடல் எப்படிக்கூறு போட்டாலும் ஒட்டிக்கொள்ளும் என்பதால் துரும்பைக்கிள்ளித் தலை கீழாக மாற்றிப்ப்போட்டு சங்கேதம் காட்டியது...., மற்போர் விதிகளுக்கு மாறாக துரியனின் தொடையில் அடிக்குமாறு பீமனைத் தூண்டியது...,கர்ணனின் தேர்ச்சக்கரங்கள் இறங்கி விட்ட நிலையில் அவன் மீது அருச்சுனனை அம்பு தொடுக்கச் செய்தது என தர்மத்துக்கு மாறான பல செயல்களுக்குத் தான் தூண்டுதல் தந்ததற்கான காரணம் பற்றி பீஷ்மர் துரியோதனன் ஆகியோரிடம்
‘’யுத்தம் என்கிறபோது தர்மம் அதர்மம் என்று எதுவுமில்லை;அநியாயத்தை நியாயத்தால் வெல்ல முடியவில்லையென்றால் அநியாயத்தை அநியாயத்தால் வெல்வதில் தவறேதுமில்லை....நீ ஆடும் ஆட்டத்தைப்பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப்புதுப்பித்துக் கொண்டு ஆடுகின்றேன் நான்...இதுதான் என்னுடைய இப்பொழுதைய தர்மம்..உன் தர்ம விதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்மவிதிகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது;இதில் தவறேதுமில்லை...வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம்.நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும்.....இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை....இதைத்தான் நான் போர்த் துவக்கத்தில் அருச்சுனனிடம் சொன்னேன்..’’என்று குறிப்பிடுகிறான் கண்ணன்.

பெண்ணினத்தின் மீது கண்ணன் கொண்ட பெருங்கருணையே அவர்களுக்கு விடுதலையளிக்கும்  ராச லீலையாக மலர்கிறது.
‘’ஒவ்வொரு கோபிகையும் அவரவர் கற்பனையில் விரிந்த இலட்சிய புருஷனை அவளுடன் குழல் இசைத்து நடனமாடிய கிருஷ்ணனிடம் கண்டாள்’’என்று சொல்லும் இ பா.,
‘’அந்தக்காலத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் எத்தனை மனைவிகள் தெரியுமா......ஆண்கள் இப்படியிருக்கும்போது பெண்களுக்குத் தங்கள் விருப்பப்படி கற்பனை செய்து கொள்ளக்கூடவா உரிமையில்லை...? அவர்கள் கற்பனையின் வடிகாலாகத் தன்னை அவர்களுக்கு அர்ப்பணித்தான் கண்ணன்’’என்று அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.

கௌரவர் அவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியே எந்த தர்ம வரம்பையும் கடந்து தீயதை மாய்க்க வேண்டும் என்னும் உத்வேகத்தைக் கண்ணனுக்கு அளிக்கிறது...! மரணப்படுக்கையில் இருக்கும் பீஷ்மர் ‘நீ நினைத்திருந்தால் இந்தப்போரைத் தடுத்திருக்க முடியாதா’’என்று கேட்கும்போது,
‘’அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் உன்னிடம் நியாயம் கேட்டபோது உன்னால் என்ன செய்ய முடிந்தது.....? இப்பொழுது நினைத்தாலும் அந்தக்காட்சி என் மனத்தை உலுக்குகிறது.பெண்களுக்குக் கொடுமையிழைத்து விட்டு யாராலும் தப்பித்துக் கொள்ள முடியாது;இதைத் தவிர வேறு தர்மம் எனக்குத் தெரியாது’’என்பதே கண்ணன் சொல்லும் விடை.
நூல் முழுவதும் கண்ணன் வருவது பெண்களின் உற்ற தோழனாகவே....

பீஷ்மன்,கர்ணனாகிய ராதேயன் இருவரையும் கிட்டத்தட்ட ஒரே தட்டில் நிறுக்கிறார் இ பா. இருவரும் சூழ்நிலைக் கைதிகளாகித் தங்கள் மனச்சாட்சியின் உட்குரலைக்கடந்து செல்பவர்கள். அநீதியான செயல் என்று உணர்ந்தாலும் அரச நீதியைக் காப்பதற்காகவே பிறந்தவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் பீஷ்மன் அநீதியின் பக்கம் நின்று போராடுகிறான்;அதே போல நட்புக்காக அநியாயத்தின் பக்கம் சேர வேண்டியதாகி விடுகிறது கர்ணனுக்கு.
‘’பீஷ்மன்,ராதேயன் இருவருமே கிரேக்கத் துன்பவியல் நாடகங்களில் வரும் கதாநாயகர்கள் போன்றவர்கள்’’என்னும் இ பாவின் அவதானிப்பு மிகக்கூர்மையானது.

’’கிருஷ்ணன் ஒவ்வொரு காலத்துக்கும் அந்தந்தக் காலத்துக்கேற்ப அர்த்தப்படும்படியான பல பரிமாணங்களையுடைய மஹாபுஷன்.நீ இந்தக் கதையைச் சொல்லும்போது இந்த அர்த்தப்பரிமாணங்கள் கேட்கின்றவர்களுக்குப் புலப்பட்டால்தான் கிருஷ்ணனைப்புரிந்து கொண்டதாக அர்த்தம்..’’என்று ஜரா, நாரதரைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள் இந்த நூலை எழுதும்போது இ.பா.,தனக்குத்தானே வகுத்துக் கொண்ட நியதியாகவே ஒலிக்கிறது.அந்த நியதியை மிகத் துல்லியமாக இப்படைப்பில் செயலாக்கி எல்லாக் காலங்களுக்கும் உரிய நாயகனாகக் கண்ணனை நிலை நிறுத்தியிருக்கிறார் இ பா.

கண்ணனின் கதை ஜராவின் அம்பினால் முடிவதற்கு முன் தன் அன்புக்காதலி ராதாவை இறுதியாகத் தேடிப் போகிறான் கண்ணன்.அங்கே அவன் காண நேர்வது ராதைப் பாட்டியையைத்தான்..இளமைப்பருவத்தில் அவனோடு கொஞ்சி விளையாடி,மழலை பேசி மகிழ்ந்திருந்த அந்த இளைய ராதையை அல்ல...அவனுள் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இளம்பெண்ணைத் தொலைத்துக் கொள்ளவிரும்பாமல் அவளைப்பார்க்காமலே திரும்பி விடுகிறான் கண்ணன். மூப்பு இளமை இவையெல்லாம் சரீரத்துக்குத்தான்..ஆத்மாவுக்கில்லை என்று அர்ச்சுனனுக்கு உபதேசித்த தானே இவ்வாறு நடந்து கொண்டதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும் செய்கிறான். துண்டு துண்டான நிகழ்வுகளும் குட்டிக்கதைகளும் நிறைந்த இந்நூலின் ஒருமுகத்துக்கு உதவி இதற்கு ஒரு  நாவல் வடிவு தர உதவுகிறது இந்த இறுதிக்கட்டம்.

இ.பா.,இயல்பிலேயே ஒரு நல்ல கதை சொல்லி...
எள்ளலும்,எளிமையான கதை மொழிபும் அவரது எழுத்துக்கு வாய்த்த ஒரு வரம்; கூடவே கண்ணனின் கதைகளும் சேர்ந்து கொள்ள சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதபடி விறுவிறுப்புடன் செல்கிறது கிருஷ்ணா கிருஷ்ணா...
க்‌ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழிப்பதுதான் உன் இலக்கா என்கிறாள் காந்தாரி..அதற்கு இவ்வாறு விடை சொல்கிறாணன் இ பாவின் கண்ணன்.
’’பிறவியினால் யாரும் எந்த ஜாதியுமில்லை..குணத்தினால் வருவது ஜாதி..அரசியலில் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் க்‌ஷத்திரியர்கள்; அறிவினாலும் கலாசாரத்தினாலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மை உடையவர்கள் பிராமணர்கள்....எந்த விதமான ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற கலகக்காரன் நான்...’’

‘’எந்தக்கோட்பாடாக இருந்தாலும் சரி அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னைப்புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்’’
என்று நூலின் ஓரிடத்தில் கண்ணன் குறிப்பிடுவது போலவே வழக்கமான காலட்சேப பாணிகளிலிருந்து மாறுபட்ட ஒரு நவீன,பின் நவீன கண்ணனை நமக்குப் படிக்கத் தந்திருக்கிறார் இ பா.

கண்ணனின் கதைகள் முழுவதையும் ஒரே இடத்தில் தொகுத்துப்பார்க்கவும்,சமகாலநோக்கில் அவை மறு ஆக்கம் செய்யப்படுவதை மனதுக்குள் அசை போட்டு உள்வாங்கவும் இந்நூலை விட்டால் வேறு புகல் இல்லை என்ற அளவுக்குக் கண்ணனின் அனைத்துப் பரிமாணங்களின் இண்டு இடுக்குகளுக்குள்ளெல்லாம் பயணப்பட்டிருக்கிறார் இ.பா.

கிருஷ்ணா கிருஷ்ணா இப்போது ஒலிப்புத்தகமாகவும் கிடைக்கிறது.
இதைப் படிக்கவோ..கேட்கவோ தவறினால் இழப்பு நமக்குத்தான்....
‘’

29.12.12

கண்ணீர் விடை!

தில்லி பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் இன்று காலை மரணமடைந்த செய்தி வந்திருக்கிறது.

பொதுவாக இத்தகைய கொடுமைகளுக்கு -அதிலும் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு- ஆளாகும் பெண்கள் மரிக்கவே விரும்புவார்கள்; மாறாக இந்தச் சகோதரி வாழ விரும்பி மன திடத்தோடு போராடியிருக்கிறார். தான் உயிரோடு எழுந்து வந்து குற்றவாளிகளை இனம் காட்டி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றே துடித்திருக்கிறார்; நினைவு வரும் நேரங்களிலெல்லாம் அதையே எழுதி எழுதிக் காட்டியுமிருக்கிறார். அவரது குடும்பமும் கூட இந்தக்கருத்தையே கொண்டிருந்தது வித்தியாசமானது...

அவரது மன உரம் அவரை மீட்டுவிடும் என்னும் நமது நம்பிக்கை பொய்த்துப்போக அவர் இன்று காலை மரணம் எய்தி விட்டார்.கோழையைப் போலக் கண்ணீர் சிந்தியபடி இறக்காமல் நெஞ்சுரத்துடன் வாழத் துடித்த அவருக்கு நேர்ந்திருப்பது நிச்சயமாக வீர மரணம்தான்...

இந்தவாரக் குமுதத்தில் நண்பர் ‘தீம்தரிகிடஞாநி’ அந்தச்சகோதரிக்கு எழுதியிருக்கும் மனம் திறந்த மடலில் குறிப்பிட்டிருப்பது போல அழுகிப்போன இந்தச் சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாம் ஒவ்வொருவருமே இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பானவர்கள்தான்...

‘’இந்த நாட்டில் பிறந்ததற்காக முதன்முதலாக வெட்கப்படுகிறேன்,அவமானம் கொள்கிறேன்..’’
இன்று விடியலில் என் தோழியின் மகளிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி இது..

இந்த நாட்டில் பிறந்ததற்கு நாண வேண்டாம் பெண்ணே! நல்லதொரு நாட்டை மிருகங்கள் உலவும் காடாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்,சமூக அமைப்புக்களுக்காக வெட்கப்படுவோம்...!
மரித்துப்போன அந்த ஆத்மாவிடம் அவர்கள் அனைவர் சார்பிலும் நாணித் தலை குனிந்தபடி பாவ மன்னிப்புக்கோருவோம்..!


28.12.12

ஆணின் பார்வை....


வாய்ச்சொல் அருளாதீர் எனச் சென்ற பதிவில் நான் சொன்னதில் சற்றும் மிகை இல்லை என்பதைத் தொடர்ந்து வரும் செய்திகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பொறுப்பான பதவியும் பாரம்பரியமும் கொண்ட குடியரசுத் தலைவரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி அளித்திருக்கும் பேட்டி இன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
‘’மாணவியர் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அழகான பெண்கள்; அவர்கள் வர்ணம் பூசிக்கொண்டு,பற்களைக்காட்டியபடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்’’- 28.12.12/ தினமணி,தில்லி பதிப்பு

அபிஜித்தின் திருவாயிலிருந்து உதிர்ந்திருக்கும் இந்த முத்தான கருத்தை அவரது சகோதரியும்  குடியரசுத் தலைவரின் மகளுமான சர்மிஷ்டாவே கடுமையாக எதிர்த்திருப்பதோடு அதிர்ச்சியோடு கூடிய தனது வேதனையை வெளிப்படுத்தியிருப்பதும்,அபிஜித்தின் சார்பில் மன்னிப்புக் கோரியிருப்பதும் சற்றே ஆறுதலளித்தாலும்

Sharmishtha said she was highly embarrassed with this remark. "I don't know in what context my brother said that, it's highly insensitive. I'm embarrassed," she said.]

சமூகத்தில் பெண் சார்ந்த ஆணின் கண்ணோட்டங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

என்னதான் நினைக்கிறார் அந்தப் ‘’பெரிய மனிதர்’’?
அழகான பெண்களென்றால் அவர்கள் முட்டாக்குப்போட்டபடி மூலையில் முடங்க வேண்டும்,இப்படி வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாதென்கிறாரா?
தில்லிக் குளிருக்குக் கம்பளி எப்படி அவசியமோ அதுபோலவே ஒரு அவசியப்பொருளாக ஆகிப்போன உதட்டு வண்ணத்தை அவர்கள் பூசியிருப்பது தவறென்கிறாரா?

குழந்தைகளோடு கூட சில பெண்கள் வருகிறார்கள்,அவர்கள் மாணவியரா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று வேறு சொல்லியிருக்கிறார்....
இளம் தாய்மார்களாக இருந்தால்தான் என்ன...தில்லியின் இப்போதைய நடுக்கும் குளிரில் தங்கள் ஒருமித்த உணர்வைக்காட்ட அவர்கள் ஒன்றுகூடுகிறார்களே....அதுவே பெரிய விஷயம் இல்லையா..
மாணவியர் நடத்தும் போராட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வதால் என்ன நேர்ந்து விடும் என்று இப்படிப்பதைக்கிறார் இவர்?

அண்மையில் ஒரு நண்பர் கீழ்க்காணும் வாசகங்களை எனக்கு அனுப்பி மொழியாக்கம் செய்யக் கோரியிருந்தார்...
ஏதோ ஒரு சலிப்பிலும் மனச்சோர்விலும்- நம் ஆண்மக்கள் ஒன்றும் இந்த அளவு மோசமானவர்கள் அல்ல என்ற நம்பிக்கையிலும் அதைச் செய்ய அப்போது மனம் வரவில்லை.
அதை இங்கே தந்திருக்கிறேன்.
[ஆனாலும் இப்போதும் கூட மனிதத்தின் மீது...ஆணினத்தின் மீதான நம்பிக்கை என்னுள் எஞ்சியிருக்கவே செய்கிறது...அதைச் சற்று உலுக்கி விடவே இதை இங்கே தந்திருக்கிறேன்]

’’Don't go out alone at night - That encourages men
இரவில் தனியே செல்லவேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்

Don't go out alone at any time - Any situation encourages some men
எந்த நேரமென்றாலும் தனியே செல்லவேண்டாம்-எந்தச் சூழ்நிலையும் ஆணை சபலத்துக்குள்ளாக்கும்

Don't stay at home - Intruders and relatives can both rape
வீட்டில் இருக்க வேண்டாம்-உறவுக்காரர்களும் உள்ளே வருபவர்களும் கூடப்பாலியல் சேட்டைகள் செய்து விடலாம்

Don't go without clothes - That encourages men
சரியாக ஆடை அணியாமல் வெளியே செல்ல வேண்டாம்-அது ஆணைச் சபலப்படுத்தும்

Don't go with clothes - Any clothes encourage some men
ஆடைகளை அழகுற அணிந்தும் செல்ல வேண்டாம்-அதுவும் ஆணைச் சபலப்படுத்தும்

Avoid childhood - Some rapists are turned on by little girls
குழந்தைப்பருவத்தைத் தவிர்த்து விடலாம்-சிலரின் குறி சின்னப்பெண்களின் மீதுதான்


Avoid old age - Some rapists prefer aged women
வயோதிகத்தையும் தவிர்ப்பதே நல்லது-சிலரது கண் வயதான பெண்கள் மீதுதான்


Don't have father, grandfather, uncle or brother - These are the relatives that often rape young women
அப்பா,தாத்தா,மாமா,சித்தப்பா,சகோதரன் என யாருமே வேண்டாம்-இவர்களிலும் கூட இளம் பெண்களைக் குறி பார்ப்பவர்களே அதிகம்


Don't have neighbours - They often rape
அண்டை வீட்டாருடன் பழக வேண்டாம்-அங்கும் ஆபத்து காத்திருக்கிறது


Don't marry - Rape is legal within marriage
திருமணம் வேண்டாம்-அது சட்டஅங்கீகாரமுள்ள பாலியல் குற்றம்


To be quite sure - DON' T EXIST !
எதைச் செய்தால் எதுவும் நடக்காது என்று உறுதியாக இருக்கலாம்?
பேசாமல் ......பெண் என்பவள் இல்லாமலே போய்விடலாம்..அதுதான் நல்லது.’’

இன்னும் ஒன்று....
வாய்ச்சொல் அருளாதீர் பதிவில் நான் சொன்னவற்றை வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுத்து அதிலுள்ள நியாயத்தை ஏற்கத் துணிவின்றிக் கீழ்க்காணும் பின்னூட்டம் ஒன்று ’குலசேகரன்’என்பவரால்
[மேல்விவரம் தெரிந்து கொள்ள முடியாமல் மறைந்து எழுதுபவர்]
எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.அதை அந்தப்பதிவிலேயே வெளியிட்டாலும் அதற்கான மறுமொழியைஎல்லோரும் காணும் வகையில் இங்கு விரிவாக அளிக்க விரும்புகிறேன்.

குலசேகரன் மொழி....
காந்தி சொன்னது, உண்மையான சுதந்திரம் என்பது இரவில் ஒரு பெண் அணிகலன்களோடு தன் வீடு திரும்ப எப்போது முடியுமோ அப்போதுதான். ஆந்திர அமைச்சர் சொன்னது: நள்ளிரவில் பெண்கள் நடமாட வேண்டாம்.
இரண்டையும் நீங்கள் உய்த்துணரவில்லையென்பதே என் அச்சப்பாடு.
காந்தி சொன்னது நாம் ஆகஸ்து 1947 ல அடைந்த சுதந்திரம் வெள்ளைக்காரனிடமிருந்து மட்டும்தான். அது நாட்டுச்சுதந்திரம். மக்கட் சுதந்திரமன்று. என்று நம் நாட்டில் பெண்கள் பயமில்லாமல் வாழ்கிறார்களோ அன்றுதான் நமக்கு உண்மைச்சுதந்திரம்.
இதையே ஆனந்தப்பள்ளு பாடும்போதுபாரதியார் குறிப்பிட்டார். அப்பாட்டில், முதலில் பறையருக்கும் புலையருக்கும் சுதந்திரம். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று கற்பனையாகக் குறிப்ப்ட்டார். அதாவது எப்படிப்பட்ட சுதந்திரம் வரவேண்டும்? தீண்டாமையில்லா ஏற்றத்தாழ்வுகளில்லாச்சுதந்திரமனைவருக்கும். வந்துவிட்டதா? இல்லையென்பதை உங்கள் ஊரே நிருபித்துக்கொண்டு வருகிறது. மொததம் 12 பேர் தேவர் குருபூஜையின் போது மதுரை சிந்தாமணியில் கொல்லப்பட்டார்கள். மூவர் பரமக்குடிக்கருகில் கொல்லப்பட்டார்கள். ஒரு போலீசு ஆய்வாளர் அடித்துக்கொல்லப்பட்டார் சாதிவெறியர்களால். இருவர் என்கவுன்டரில் டிஎஸ்பி வெள்ளைத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வந்ததா பாரதி சொன்ன சுதந்திரம் உங்கள் ஊரில்? இல்லை. அதே போல,
காந்தி சொன்ன அந்தச்சுதந்திரம் இன்று வந்துவிட்டதா? பெண்களுக்குப் பாதுகாப்பு வந்துவிட்டதா? இல்லையென்பதை தில்லிச்சம்பவமட்டுமன்று; நாடோறும் நடக்கும் பல பெண்ணெதிர் வன்கொடுமைகள் நிருபிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாழ வேண்டும் என்கிறார் ஆந்திர அமைச்சர்.
ஐயமேயில்லை. அவர் வாக்குச்சரியே. 
பெண்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும். All other helps from other sources are secondary.

என் மறுமொழி
இதைப்படிக்கநேரும் வாசகர் எவருக்காவது குலசேகரன் சொல்வது,சொல்ல வருவது என்னவென்று புரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்....
நான் சொல்ல வருவதையே தன் வார்த்தைகளில் சொல்லி விட்டுக் கடைசியில் ஆந்திர அமைச்சர் சொன்னது சரி என்கிறாரே....இதை எங்கே போய்ச் சொல்ல?

காந்தியடிகள் விரும்பியது அரசியல் விடுதலை மட்டுமல்ல....

சமூக விடுதலையும்தான்.அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.
சமூக விடுதலை பெறாத நாட்டில் அரசியல் விடுதலைக்கு அர்த்தமில்லை என்பதாலேயே நாடு விடுதலை பெற்ற தருணத்திலே கூட  மதப்பூசல்கள் மலிந்து கிடந்த கொடுமையைப்பார்த்துப்பார்த்து மனம் குமுறிக்கொண்டு தவித்தபடி இருந்தார் அவர்.

நள்ளிரவில் பெண்கள் நடமாடலாகாது எனப் பெண்களின் தனி உரிமையைப் பறித்தவரில்லை காந்தி. நள்ளிரவில் பெண்களும் அச்சமின்றி நடமாடும் வண்ணம் நம் நாடு பக்குவம் பெற வேண்டும் என்பதே அவர் விரும்பியது.


நாடு அரசியல் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும்- 
உயர் அதிகார மையங்களில் இருந்து கொண்டு காந்தியாரின் ஒரு சின்னக்கனவைக் கூட நனவாக்காமல் இருந்து விட்டு....-அதை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்தும் நழுவி விட்டுப் பெண்களுக்குப் புத்திமதி சொல்ல முன் வருகிறார்களே இந்தப்போலி உபதேசிகள்...அதைச் சுட்டிக் காட்ட மட்டுமே நான் நினைத்தேன்;ஏதோ பெண்கள் எச்சரிக்கையாக இருந்து விடால் ஏதுமே நடக்காது என்பது போன்ற பூச்சாண்டித்தனங்களை எவரும் காட்ட வேண்டாம் என்பதற்காகவே மேலே என் நண்பர் அனுப்பிய வாசகங்களையும் தமிழில் தந்திருக்கிறேன்....

குலசேகரனுக்கு மற்றும் ஒன்று..
அந்தப்பெண் சென்றது ஆந்திர அமைச்சர் சொன்னது போல நள்ளிரவில் இல்லை.இரவு ஒன்பதரைக்கு.
//பெண்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்துக்கொண்டு காப்பாற்றிக்கொள்ளட்டும்.//
இதற்குப்பெண்கள் தயார்.....ஆனால் அதற்கான வயது வருவதற்கு முன்பே ஏற்படும் அசம்பாவிதங்களால் செய்தித் தாள்களின் பக்கங்கள் நாளும் நிரம்பிக் கொண்டிருக்கின்றனவே....அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
ஏற்கனவே பச்சைப்புண்ணிலிருந்து குருதி ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது....
அதில் வேல்பாய்ச்சும் வேலையைச் செய்வதை விட்டு விட்டு உருப்ப்படியாக வேறு ஏதாவது இருந்தால் செய்யுங்கள்...

இல்லையென்றால் அரசியல்வாதிகளே..அரட்டையாளர்களே....எங்கள் பாட்டை நாங்கள் பார்த்துக்கொள்ள விட்டுவிட்டு வாயையாவது தயவு செய்து மூடிக்கொள்ளுங்கள்...
நாங்கள் வேண்டுவது அது ஒன்றைத்தான்...!




25.12.12

வாய்ச்சொல் அருளாதீர்!

அண்மையில் தில்லியில் நடந்த குரூரமான பாலியல்தாக்குதலும் அது தொடர்பாக நிகழ்ந்து வரும் தொடர் போராட்டங்களும் அனைவரும் அறிந்ததுதான்...அவை எழுப்பி வரும் ஆத்திர அலைகளே அடங்காமலிருக்கையில், ஒரு சில பெரிய மனிதர்கள் திருவாய்மலர்ந்து அருளும் உபதேசங்களும் ஆலோசனைகளும் பெண்களை மட்டுமல்ல....கொஞ்சநஞ்சம் மனச்சாட்சி மீதமுள்ள எவரையுமே கோபப்படுத்துபவை;காயப்படுத்துபவை...

நள்ளிரவில் நம் நாடு சுதந்திரம் பெற்றதென்பதற்காக நள்ளிரவில் பெண்கள் நடமாடலாமா என்று கேட்டிருக்கிறார் ஓர் ஆந்திர அமைச்சர்...

அனைத்து ஆடை ஆபரணங்களுடன் கூடிய-சர்வாலங்கார பூஷிதையான- அழகான இளம்பெண் ஒருத்தி நள்ளிரவில் தனியே நடந்து போகும் நாளே நாம் சுதந்திரம் பெற்ற நாளென்று சொன்ன மகாத்மாவின் வாக்கு...பாவம் அவருக்கு   மறந்து போயிருக்கலாம்....
அல்லது ....மகாத்மாவே யாரென்று கூட அவர் அறியாமலும் இருக்கலாம்..
அறியாமைதானே இன்றைய அரசியலின் அணிகலன்?

முன்பு ஒரு முறை  பெண்கள் வேலைக்குப் போவது தவறென்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிய உதாரணம் கூட நம்மிடம் இருக்கிறது....

நம் வீட்டுப் பெண்களை சொகுசுக்கார்களிலேயே அனுப்பிப் பத்திரப்படுத்திவிட்டோம்...
அயல்நாடுகளுக்கெல்லாம் அனுப்பிப் படிக்கவும் வைத்து விட்டோம்....

நகரப்பேருந்துகளில் போகும் சாமானியர்களைப்பற்றி நமக்கென்ன கவலை?

அது கூட எப்படியும் போய்த் தொலையட்டும்..
அவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகும்போது ஆதங்கமோ அனுதாபமோ கொள்ள வேண்டாம்...
எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டாம்..

கருத்துச் சொல்வதாக இப்படிக் கண்டதையும் உளறாமலாவது இருக்கலாமல்லவா?
நல்லதைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை,பாதகமான கெட்டதைச் செய்யாமலிருந்தாலே போதும் !
’’நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’’
என்று பழந்தமிழ் இலக்கியம் சொல்கிறது.
காந்தி சொன்னதையே தெரிந்து வைத்துக் கொள்ளாதவர்களுக்கு இது எங்கே தெரியப்போகிறது?

தவறு செய்பவர்களைச் சிறையில் அடைத்துப் பூட்டுப்போடுவதோடு இப்படிப்பட்ட ’பெருமக்களின்’வாய்க்குப்  பூட்டுப்போடுவதும்   இப்போது   தேவைதான்! காரணம் சமூகத்தின் பொதுப்புத்தியில் விஷவிதைகளை உடனடியாகத் தூவும் திருப்பணியைச் செய்பவை இப்படிப்பட்ட கருத்துப்பரப்பல்கள்தான்...நல்லவற்றை விடவும் வெகுவேகமாகச் சென்று தைக்கும் நச்சு அம்புகள் இவையே !

நல்ல சமூகப்பணிகளுக்குப் பணம் படைத்தவர்கள்  பொற்குவையாகவும்,காசுகளாகவும் தாருங்கள்...மற்றவர்கள் நன்மொழிகளைத் தாருங்கள் என்ற பொருளில் 
‘வாய்ச்சொல் அருளீர்’
என்றான் பாரதி.
மேலே குறிப்பிட்டிருக்கும் நாகரிகக் கோமாளிகளை நாம் கரம் கூப்பிக் கேட்பதெல்லாம் அவர்கள் தங்கள் வாயிலிருந்து எந்தச்சொல்லும் அருளி விடாமல் இருக்க வேண்டும் என்பது மாத்திரமே...!

பி.கு;
நாளும் செய்தித் தாளில் குளிர்தில்லியின் கொதிப்புக் கண்டு கசியும் நெஞ்சங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கண்டன மனுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்..
முடிந்தால் உங்கள் இணைய தளங்கள்,முகநூல்களில் இணைப்பையும் கீழுள்ள படத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சமூக மாற்றத்துக்கு நம் எழுதுகோல்களும் சிறு நெம்புகோல்களாகட்டும்....











16.12.12

நாஞ்சிலுக்கு இயல்விருது


நாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன். அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன.[சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமானது அந்த நாவலே]

அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’நாவலிலும்,சிறுகதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள்
சதுரங்கக்குதிரை,
என்பிலதனை,
எட்டுத்திக்கும் மதயானை
ஆகியன.
இவரது சிறுகதைகளும் இரு பெரும் பகுதிகளாக- முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.’சூடிய பூ சூடற்க’என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைத் தமது புனைவுகளில் பெரிதும் கையாண்டு வரும் ஜி.சுப்பிரமணியம் என்னும் புனைபெயர் கொண்ட நாஞ்சில் நாடன், கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வருபவர்; சங்க இலக்கியத்திலும், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர். விரைவில் வெளிவரவிருக்கும் இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்கான உரையாடல்களையும் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012ஆம் ஆண்டுக்கான இயல் விருது, நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படவிருக்கிறது. கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்ட இந்த விருது, சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாஞ்சில் நாடனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!

இணைப்புக்கள்;

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3)  

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)



10.12.12

பாரதி பிறந்த திருநாளில்

என் எழுத்தின் ஆதர்சம்...,என் தமிழின் ஆதர்சம்..,என் ஆளுமையின் ஆதர்சம் மகாகவி பாரதி. பாரதி பிறந்த இந்தத் திருநாளில் அவன் சார்ந்த ஒரு நூல்,ஒரு ஓவியம்,ஒரு பாடல்...ஒரு காணொளி...இங்கே பகிர்வுக்கு..

வலைச்சரப்பதிவுகள்


வலைச்சரம் இணைய இதழில் -ஒரு வார காலம் 3/12 முதல் 9/12 வரை- சில வலைப்பதிவுகளையும்,தளங்களையும் பகிர்ந்து கொள்ள நண்பர் சீனா அழைப்பு விடுத்திருந்தார்.அங்கே நான் இட்ட பதிவுகள் இங்கே பார்வைக்கு....

7.12.12

தில்லிகை-டிச.நிகழ்வு



தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

கலை
இலக்கியச் சந்திப்பு: 2012/10

27.11.12

ஒரு பாலைப்பயணம்-3


புல் பூண்டுகள் கூட அற்ற - வெறுமையும்,முழுமையுமான மணல்வெளிப்பரப்பைக் காண ஏற்றதாக ஜெய்சால்மர் நகருக்கு அண்மையில் அமைந்திருக்கும் இடமே சாம் மணல் மேடுகள்.  தார் பாலைவனத்தின் முகப்புக்களில் ஒன்றாகவும் இந்த இடத்தைக் கொள்ளலாம். நகரிலிருந்து அந்த மணல்மேடுகளை நோக்கிச் செல்லும் வழியெங்கும் பாலைக்குள்ளேயே தங்கியிருக்க வசதி செய்து தரும் பாலைவன ரிசார்ட்டுகள்...மற்றும் ஆங்காங்கே அவை அமைத்திருக்கும் கூடாரங்கள்.
கோட்டை வடிவில் ஒரு தங்கும் விடுதி

பாலைக்கூடாரங்கள்...
படிப்படியாக எங்கள் ஆர்வம் கூடிக்கொண்டே செல்ல....சாலையின் இரு பக்கங்களிலும் தாவரங்களின் பரவல் படிப்படியாகக்குறைந்து மணல் மேடுகள் கண்ணுக்குத் தென்படத் தொடங்கியிருந்தன.குறிப்பிட்ட ஒரு இடத்தோடு அங்கிருந்த காவலர்கள் வாகனத்தை நிறுத்தி விட.....அங்கே பார்த்தால் தேர்த் திருவிழா போன்ற மக்கள் கூட்டமும் வாகனக் குவியல்களும்....! சற்று தூரத்தில் பெரிய மணல் மேடுகளும் அங்கே ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் சவாரி செய்யும் மனிதர்களும்...!

பாலையின் ஏகாந்தத்தையும்....தனிமையான சூழலையும் கற்பனை செய்து கொண்டு வந்திருந்த எனக்கு வித்தியாசமான இந்தக் காட்சி சிறிது அதிர்ச்சி ஊட்டியபோதும் ‘பாலையைக்காணும் ஆர்வம் எல்லோருக்கும்தானே  இருக்கும்’என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.....ஆனாலும் அந்தக் கூட்டத்துக்குள் இருந்தபடி பாலைமணல்வெளியின் அழகைப்பருகுவதென்பது....அத்தனை எளிதானதாக இல்லை.ஒட்டகங்களிலும்,ஒட்டக வண்டிகளிலும் ஏறிச் சவாரி செய்யுமாறு நம்மைக் கையைப்பிடித்து இழுக்காத குறையாக வற்புறுத்தும் ஒட்டகக்காரர்கள் ஒரு புறம்....மனிதர்களைச் சுமந்தபடி நம் மீது மோதி விடுவது போல ஓடி வரும் ஒட்டகங்கள் இன்னொரு புறம்....பாலை மணலுக்குள் இருந்தபடி தன் பாட்டையும் நடனத்தையும் ரசிக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்த பெண்கள் மறுபுறம்... [’பத்தே பத்து ரூபாதான்....ஒரே ஒரு பாட்டு..ஒரே ஒரு நடனம் மண்ணுக்குள்ள உக்காந்து பாருங்க தீதி...உங்க வம்சமே நல்லா இருக்கும்..’’’  -  இதைத்தான் இந்தியில் சொல்லியிருப்பார்கள் என்பது என் புரிதல்!?].




இந்தக் கூட்ட நெரிசலில் என் அழகியல் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய்க் கழன்று கொள்ள...அங்கிருந்து தப்பித்து வெளியேறினால் போதும் என்னும் மனநிலைக்குக் கூடத் தள்ளப்பட்டிருந்தேன் நான். இருந்தாலும் அத்தனை தொலைவு பயணப்பட்டு வந்து விட்டு வெறுமே போக முடியுமா என்ன..? பாவப்பட்ட ஒட்டகம் ஒன்று எனக்காகவே காத்துக்கொண்டிருக்க அதன் முதுகை முறிக்கும் இறுதித் துரும்பாக...நானும் பேத்தியும் அதில் ஏறிக்கொண்டோம்; மகள்,மருமகன்,பேரன் இன்னொரு ஒட்டகத்தில். 

அங்கே ஒட்டகச்சவாரி செய்கிறவர்களெல்லாம் ஆனந்தக் கிளர்ச்சியிலோ...அச்சத்தை மறைப்பதற்கோ ...கண்டபடி கூச்சலிட்டுக்கொண்டு வந்தபோதும்....எனக்கென்னவோ அந்த ஒட்டகச்சவாரி எந்த வகை அச்சத்தையும்,.கிளர்ச்சியையும் ஊட்டவில்லை என்பதே உண்மை.... !

சுற்றுப்புறத்தில் காண்பவைகளை முடிந்தவரை மனதுக்குள்ளும்,புகைப்படக்கருவி மூலமும்[ ’ஒட்டகத்தின் மேலிருந்து விழுந்து அதன் காலுக்கு இரையாகித் தொலையப் போகிறீர்கள்’ என்று கத்திக் கொண்டே வந்த மகளின் எச்சரிக்கையையும் மீறி] தொடர்ந்து பதிந்து கொண்டே வருவதில் மட்டுமே என் கவனம் லயித்துக் கிடந்தது.



மங்கிவரும் கதிரவனின் பொன்னொளியில் ’’தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி’’யதைப்போல [நன்றி;பாரதிதாசன்] மின்னும் மணல் பரப்பு...பல்வேறு உயரங்களில் தாழ்ந்தும் உயர்ந்தும் நிற்கும் மணல் மேடுகள்....இடையே சமவெளியாகவும்,உட்குழிந்தும் இருக்கும் மணல் வெளிகள் என்று காட்சியெல்லாம் மணலாகவே நிறைந்து துளும்ப .....என் பேரன் விளையாடித் தூற்றிய மணல் துகளும் என்னில் வந்து அப்பிக் கொண்டது.... 



ஒட்டகச் சவாரி ஐந்தே நிமிடங்களில் முடிந்து விட....மாலைச் சூரியன் மறையும் காட்சியைக்காண மணல் திட்டுக்களில் மக்கள் குவியத் தொடங்கியிருந்தனர்... 



மலை...கடல்...பாலை என எல்லா நிலப்பரப்புக்களிலுமே அஸ்தமனக்காட்சி அழகானதுதான்.
இரவுக்கூடாரங்களுக்கு மேல்
முழுகும் சூரியன்...


‘’செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை’’
என்று அழகின் சிரிப்பில் பாரதிதாசன் சொல்லும் வருணனையை முழுவதும் உணர முடியும் சந்தர்ப்பங்கள் இவ்வாறானவையே......

மாலை மறையத் தொடங்கியதுமே மக்கள் கூட்டமும் கலையத் தொடங்க  வாகனநிறுத்தத்திற்கருகே தேநீர் குளிர்பானம் தண்ணீர் விற்பனைக்கடைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன...

சாம் மணல் திட்டுக்களிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் பாதையில் குல்தரா என்னும் கைவிடப்பட்ட கிராமம்[abandoned village] ஒன்றும் பார்க்கத் தகுந்த சுற்றுலா இடமாக இருப்பதை எங்கள் விடுதிக்காப்பாளர் கூறியிருந்தது நினைவுக்கு வந்ததால்...இரவு படர்வதற்குள் அதையும் காணும் ஆவலில் அப்போதைக்கு அந்தப்பாலை மண்ணிலிருந்து விடை பெற்றோம்...

[பயணம் தொடரும்]

இணைப்புக்கள்;
ஒரு பாலைப்பயணம்-1
ஒரு பாலைப்பயணம்-2

ஒரு பாலைப்பயணம்-2



கோட்டை
பத்வா ஹவேலி

ஜெய்சால்மர் நகரின் பிரதானக் கவர்ச்சியாகச் சொல்லப்படுபவை கோட்டையை ஒட்டி ஆங்காங்கே காணப்படும் கலையழகு மிளிரும் பிரம்மாண்டமான மாளிகைகள். ஹவேலி என்ற சொல்லால் வழங்கப்படும் அவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; ஜைன மதத்தைச் சேர்ந்த பத்வாக்கள் எனப்படும் மிகப்பெரிய தனவணிகர்களுக்குச் சொந்தமாக இருந்தவை.ராஜஸ்தானத்தில் இயல்பாகவே மிகுதியாகக்கிடைக்கும் மணல்கற்களையும் -sandstones-[மணல்மேடுகளும்,குன்றுகளுமே காலப்போக்கில் இறுகி மணல்கற்களாக,சலவைக்கற்களாக மாறுகின்றன] சலவைக்கற்களையும் கொண்டு இழைக்கப்பட்டிருக்கும் வசந்த மாளிகைகள் அவை .

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெய்சால்மர் நகரில் தங்கள் வர்த்தகத்தைத் தொடர முடியாத சிக்கல் ஏற்பட்டுத் தவிக்கும் நிலை பத்வாக்களுக்கு நேர்ந்தபோது அங்கிருந்த சமண ஆலயத்தில் பூசை செய்யும் குரு ஒருவரின் அறிவுரைப்படி அவர்கள் அந்நகரை விட்டு வெளியேறியதாகவும் ,பிறகு வெள்ளி,சரிகை,ஓபியம்[கஞ்சா போன்ற ஒருவகை போதைப்பொருள்] ஆகிய வணிகங்களின் வழியாகவும்,நிதிநிறுவனங்களை நடத்துவதன்  மூலமும் பெரும்செல்வந்தர்களாக உயர்நிலை அடைந்தபின் ஜெய்சால்மர் நகரின் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதற்கென்றே அவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதாகவும் செய்திகள் வழங்கி வருகின்றன.

குறிப்பிட்ட காலகட்டம் வரை ஜெய்சால்மர் நகரம் முழுவதுமே கோட்டைக்குள் உள்ளடங்கியதாகத்தான் இருந்திருக்கிறது. பத்வாக்களில் மூத்தவரான குமன் சந்த் பத்வா[Ghuman Chand Patwa], தன் ஐந்து மகன்களுக்கும் மாளிகை -ஹவேலி- கட்ட முடிவு செய்தபோது கோட்டைக்குள் இடம் போதாது என்பதால், கோட்டைக்குக் கீழ்,கோட்டையை நோக்கியதாக அவற்றை அமைத்தார்.காலப்போக்கில் பல கைகள் மாறிப்போன அந்த மாளிகைகள் பழைய கலாசாரத்தைப் பறைசாற்றும்  எச்சங்களாக,சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அருங்காட்சியகங்களாக மட்டுமே தற்போது விளங்கி வருகின்றன.

நாங்கள் சென்றது...அவ்வாறான ஹவேலிகளில் ஒன்றான 
பட்வோன்-கி-ஹவேலி. ஜெய்சால்மர் மாளிகைகளில் மிகப் பெரியதென்றும், மிகச் சிறப்பு வாய்ந்த‌ விரிவுபடுத்தப்பட்ட மாளிகை என்றும் சொல்லப்படும் இதன் அழகுபடுத்தப்பட்ட ஐந்து-மாடி வளாகத்தை முடிக்க ஐம்பது வருடங்கள் தேவைப்பட்டதாகக்கருதப்படுகிறது.

குறுகலான சந்துப்பகுதியில் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு முன் கலைப்பொருள்களையும்,ராஜஸ்தானிப்பாணியிலான தலைப்பா குல்லாய்,பைகள்,உடைகள் ஆகியவற்றை விற்கும் அங்காடிகள்...சுற்றுலா இடங்களுக்கே உரிய உள்நாட்டு,வெளிநாட்டுப்பயணிகளின் நெரிசல்....
உள்ளே செல்லவும்,படம் எடுக்கவும்  நுழைவுச்சீட்டுகள். ஜெய்ப்பூர் அரண்மனை போலவே இவைகளும் கூட அரசின் அல்லது தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டில் இன்னும் வந்திராததால் தனியார் நிர்வாகத்தில் அவர்கள் வைத்ததே சட்டம் என்பதோடு...மட்டுமல்லாமல்...பயணிகளை உள்ளே சீராக அனுப்புவதிலும்,வெளியேற்றுவதிலும் கூடக்குழப்பம்தான்....!


நான்கு கைத் தாழ்வாரம் வைத்த பழங்கால வீடுகள் போலச் சதுரம் சதுரமாக அடுக்கடுக்கான 5 தளங்களோடு ஒடுக்கமாகவும்,உயரமாகவும் அமைந்திருந்தது அந்த ஹவேலி. 

பத்வாக்கள் வாழ்ந்த ராஜபோக வாழ்க்கைக்கு அடையாளமாக அவர்கள் உடுத்த ஆடை அணிகலன்கள்,பயன்படுத்திய சமையல் சாதனங்கள், 


போர்க்கருவிகள்,தளவாடங்கள்,சேகரித்திருக்கும் ஓவியங்கள்,படங்கள்,
பாலை மணலூடே குழலூதும் இசைக்கலைஞர்

மிகப்பெரிய ஹுக்கா குழல்
சிற்பங்கள்,வீட்டுக்குள்ளேயே கோயில்கள் என ஒவ்வொரு தளமும் ஒரு அருங்காட்சியகத்தின் பாணியிலேயே அமைந்திருந்தது....



4,5 தளங்களுக்கு மேலேறிப்பார்த்தபோது கோட்டையின் காட்சி மிகத் தெளிவாகப்புலப்பட்டது.கோட்டையில் மியூசியமாக்கப்பட்டிருக்கும் ஒரு சில பகுதிகளைத் தவிரப் பிற பகுதிகளில் அரசுக்குடியிருப்புக்களும்,தனியார் குடியிருப்புக்களும் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் தற்போது உள்ளதாகக் கூடவந்த எங்கள் விருந்தினர் விடுதியின் காப்பாளர் கூறினார்.அது உண்மைதான் என்பதைக் கோட்டையை ஒட்டிய  கீழே உள்ள வீடுகளில் உலர்ந்து கொண்டிருந்த துணிகள் மெய்ப்பித்துக்கொண்டும் இருந்தன.தொல்பொருள்துறை இதில் ஏன் கருத்துச் செலுத்திக் காக்கத் தவறியது என்னும் கேள்விக்கு மட்டும் எங்குமே விடை கிடைக்கவில்லை.

பத்வா ஹவேலி மேல்தள உச்சியிலிருந்து....
தில்லி வந்தது முதல் கடந்த 6,7 ஆண்டுகளாக இது போன்ற அரண்மனைகள்,அருங்காட்சியகங்கள் போன்றவற்றையே மிகுதியாகப் பார்த்துப்பார்த்து அலுத்துப்போயிருந்த குழந்தைகள் இயற்கையான மணல் மேட்டுக்குப்போவது எப்போது என நச்சரிக்கத் தொடங்க....பாலைமணலிலிருந்து சூரிய அஸ்தமனம் காணும் அரிய காட்சியைத் தவற விட்டுவிடக்கூடாதே என்ற பதைப்பும் கூடவே சேர்ந்து கொள்ள.....ஜெய்சால்மரிலிருந்து கிட்டத்தட்ட 42 கி.மீ தொலைவில் இருப்பதும் தாவரங்கள் சிறிதும் அற்ற தார்ப்பாலை மணல்குன்றுகளுமான
சாம் மணல் திட்டுக்களை நோக்கி விரைந்தோம்.
சாம் மணல் திட்டு[நான் எடுத்த படம்]

[பயணம் தொடரும்..]

இணைப்பு;
ஒரு பாலைப்பயணம்-1




26.11.12

ஒரு பாலைப்பயணம்-1

பாலைப் பெருவெளியில் 
பேரனுடன்....


தமிழ் நாட்டில் காணக் கிடைக்காதது பாலைநிலம்.பாலை என்றதுமே நம் மனதில் இயல்பாக வந்தமரும் ராஜஸ்தானின் தார் பாலைவனம்,அரேபியப்பாலை வனங்கள் போன்ற  நிலச்சித்திரங்கள்,காட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை.இங்கு நாம் காண்பதெல்லாம் வற்றிப்போன தாவரங்களும்,வளம் இழந்து வறண்டு போய் மொட்டையாய்க்காட்சியளிக்கும் மலைகளும் மட்டுமே.அவற்றையே பாலையென்று குறிப்பிடுகிறோம் நாம்.

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நானிலப் பாகுபாடுகள் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் பாலையை ‘நடுவணது’ என்ற சொல்லாலேயே குறிக்கிறார்.தமிழகத்தைப்பொறுத்தவரை பாலை என்பது ஒரு தனிநிலமாக இல்லை என்பதையும் காட்டுநிலமாகிய முல்லையும்,மலை சார்ந்த குறிஞ்சியும் தங்கள் வளம் குன்றிப்போகும்போது வெறுமையும் வறட்சியுமாய்ப் பாலையாய்த் திரிபடைகின்றன என்றும் அவர் அறிந்து வைத்திருந்ததே அதற்கான அடிப்படை.
பழந்தமிழ் இலக்கியங்கள் பாலை என்ற பெயரில் சுட்டுவதும் அவ்வாறான நிலப்பகுதிகளையே.
முல்லையென்ற காட்டு நிலமும் ,குறிஞ்சி என்னும் மலைநிலமுமே படிப்படியே பாலையாகத் திரிந்துபோகின்றன என்ற
தொல்காப்பியத்தின் கருத்தை
‘’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்’’
என்னும் வரிகளில் மேலும் விளக்கமாகவும்,நுணுக்கமாகவும் விவரிக்கிறது சிலப்பதிகாரம்.

பாலைப்பெருமணல் வெளியைத் திரைப்படக்காட்சிகளிலும் புகைப்படங்களிலும் மட்டுமே அதுவரை கண்டிருந்த நான் இம்மாத நடுவில் எங்கள் ஜெய்சால்மர் பயணம் உறுதியான பிறகு  புதிதான ஒரு நிலவியல் காட்சியைக்காணப்போகும் பரவசத்தில் கனவு காணத் தொடங்கியதோடு, இணையத்தில் அது சார்ந்த செய்திகளையும் திரட்டத் தொடங்கினேன்.

முழுமையும் காரிலேயே செல்வதான எங்கள் பயணத் திட்டம்,அலுவலக,பள்ளி வேலை நாட்களால் நான்கு நாட்கள் என்று மட்டுமே எல்லை கட்டப்பட்டிருந்தது ; செல்ல வேண்டிய தொலைவோ  மிகவும் கூடுதலாக - கிட்டத்தட்ட 900கி.மீ வரை நீள்வது [சென்று திரும்பும் தூரம் கிட்டத்தட்ட 1800 கி.மீ] என்பதால் வழியிலிருந்த ஜெய்பூர்,ஜோத்பூர் ஆகிய இடங்களில் இரவுநேரத் தங்கல் மட்டுமே சாத்தியமாயிற்று.மேலும் ஜெய்ப்பூர் முன்பே இரு முறை பார்த்த இடம்;ஜோத்பூர் பார்க்கலாம் என்று ஒரு சபலம் இருந்தபோதும் ஜெய்பூர்-ஜோத்பூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், பயணத்தைப் பல மணி நேரம் தாமதப்படுத்த இம்முறை ஜெய்சால்மரை மட்டுமே ஒற்றை இலக்காக வைத்துக் கொண்டு அதற்கு முதன்மை தர முடிவெடுத்தோம். பாலைப்பகுதிகளுக்குச் செல்வதற்குக்  குளிர் இலேசாகத் தொடங்கி வெயில் மட்டுப்பட்டிருந்த இந்தப்பருவநிலையே உகந்தது என்பதால் இம்முறை நழுவவிட்டால்  அங்கே திரும்பச்செல்வது கடினம் என்பதும் அதற்கு ஒரு காரணம்.

வெள்ளி மாலை கிளம்பி இரவு ஜெய்பூர்;சனிக் கிழமை முழுவதும் பயணித்து இரவில் ஜோத்பூர் ;மறுநாள் விடியற்காலை ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மரை நோக்கி என்று எங்கள் பயணம் ஒன்றரை நாட்களுக்கும் மேலாக நீண்டு கொண்டே சென்றது.

பயணப்பாதையில் ஆர்வமூட்டும் சுவாரசியங்களைக் கொண்டிருந்தது ஜோத்பூரிலிருந்து ஜெய்சால்மர் செல்லும் சாலைதான்.சமகாலத்து அதிவிரைவு நெடுஞ்சாலைகள் போல இல்லாவிட்டாலும் கூட மிக விரைவாகப் பயணிக்க முடிந்ததும் அந்தச் சாலையிலேதான்.

ஜோத்பூரிலிருந்து சிறிது தூரம் சென்றதுமே வெள்ளிய மணல் பரப்பையும், ஒரு சில வறண்ட தாவரங்களையும் இருபுறமும் கொண்டிருப்பதும், நம்மை ஜெய்சால்மர் நோக்கி இட்டுச் செல்வதுமான அந்த மிக நீண்ட பாதை வந்து விடுகிறது...அப்புறம்...திருப்பங்களோ வளைவுகளோ அதிகம் இல்லாமல் நீ.....ண்....டு சென்று கொண்டே இருக்கிறது அந்த சாதாரணத் தார்ச் சாலை.






சாலையின் இருபுறமும்
மணல் மேடுகள்..பாலைத் தாவரங்கள்
வறண்டு வெளுத்த மணல் வெளிகளுக்குள் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்த அந்தச் சாலை, கொல்லென்று வெளுத்துப் போன ஒரு மூதாட்டியின் நரைமுடிக்கு நடுவே சீராகப் பராமரிக்கப்பட்டுச் சமமாக வகிரப்பட்டிருக்கும் வகிடு போல நீண்டு போவதாக எனக்குத் தோன்றியது.


ஒரு கட்டத்தில் இது முடிவே அற்றதோ என்னும் மன மயக்கத்தைக் கூட ஏற்படுத்தி விடும் அந்த நீண்ட சாலையின் குறுக்கே அவ்வப்போது மயில்களும்,மான்களும் வந்து ஜாலம் காட்டி விட்டுச் செல்கின்றன.அத்கமான போக்குவரத்து அற்ற சாலை என்பதால் அதிவேகமாக விரையும் வாகங்களின் அடியே பரிதாபமாக நசுங்கிச் சாகும் ஜீவன்களையும் பார்க்க முடிந்தது.
மர நிழல்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்பாரம் சுமக்காத ஒட்டகங்கள் 
குறிப்பிட்ட இந்தச் சாலையில்தான் குறுக்கிடுகிறது இந்தியா அணுஆயுத சோதனையை நிகழ்த்திப் பார்த்த பாலை நிலமான போக்ரான்.
போக்ரான் அருகே....
அதற்கான அடையாளங்கள் நினைவுச்சின்னங்கள் என எதுவும் அந்தச் சாலை வழியில் இல்லாமல் [ஒருக்கால் சற்று விலகி இருக்கக்கூடும்] சின்னதொரு நகரமாக சுற்றுலாப்பயணிகளின் சோர்வு தீர்க்கும் உணவகங்கள்,தாபாக்கள் நிறைந்ததாக இருக்கும் போக்ரானில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.இம்முறை ராஜஸ்தான் பயணத்தில் வயிற்றுக்குத் தொந்தரவு தராத போஹா [நம்மூர் அவல் உப்புமா] பல இடங்களிலும் மிகச் சுவையாகக் கிடைத்ததால் வயிற்றுப்பிரச்சினையின்றிப்பயணம் செய்ய முடிந்தது.

முற்பகல் 11 மணியளவில் ஜெய்சால்மர் நகரை வந்தடைந்தோம்;ஜெய்ப்பூர் நகரம் இளம் சிவப்பு வண்ணத்தைத் தன் அடையாளமாகத் தரித்துக் கொண்டு’பிங்க் சிடி’என்று பெயர் பெற்றிருப்பதைப்போலச் சூரிய ஒளியில் பொலியும் பொன்மணல் நிறத்தில்- இளம் மஞ்சள் வண்ணக் கட்டிடங்களையும் வீடுகளையும் கொண்டதாக-பொன் நகரம் எனப்பெயர் பெற்றிருப்பது ஜெய்சால்மர்.

நகரத்தின் சாலைகளைப்பிரிக்கும் தடுப்புக்களும்,

வங்கிக் கட்டிடங்களும் கூட ராஜஸ்தானியக் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்திருப்பது புராதன மரபுகளைப் பேணிப் போற்றிக் கொண்டாடும் அந்த மக்களின் மனோபாவத்துக்கு ஒரு சான்று.

நெடுந்தூரப் பயணக்களைப்புத் தீர ஒரு குளியல் போட்டு விட்டு உடன் கிளம்ப ஆயத்தமானோம்.ஜெய்சால்மர் கோட்டையை ஒட்டியிருந்த ராஜஸ்தானிய உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டோம்; சௌகிதானி என்று அதைச் சொல்கிறார்கள்;அந்த மண்ணின் பாரம்பரிய ஆடல் பாடல் கைவினைப்பொருட்கள்,வீடுகளோடு - அந்த மண்ணின் மணத்தோடு சுற்றுலாப்பயணிகளைக் கவர அங்கே கடைப்பிடிக்கப்படும் உத்திகளில் இதுவும் ஒன்று.

அங்குள்ள கோட்டை கொத்தளங்களைப் பார்ப்பதை விடவும் மணல் வெளியைக் காண வேண்டுமென்பதிலும், பாலைப்பெருநிலத்துக்கு எப்போது செல்லப்போகிறோம் என்பதிலுமே எங்கள் அனைவரின் கவனமும் குவிந்திருந்தாலும் மாலை நான்கு மணிக்குப் பிறகு அங்கே செல்வதே இனிமையாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் நானும் குழந்தைகளும் ஜெய்சால்மர் ஊருக்குள் இருந்த பத்வா ஹவேலிக்குள் விரைவாகச் சென்று கண்டு வந்தோம்....
[பயணம் தொடரும்..]



15.11.12

வைகை பெருகி வர…


‘’ புள்ளே நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா..? வைகை அணையிலே தண்ணியைத் தொறந்து விடப்போறாங்க…சாயந்திரத்துக்குள்ளே ஊருக்குள்ளே தண்ணி வந்திடும்னு எத்தினி வாட்டி தமுக்கடிச்சு சொல்லிட்டுப் போறாங்க…நீ பாட்டுக்குக் குந்திக்கிட்டிருக்கே..’’
‘’இப்ப என்னை என்னய்யா செய்யணும்ங்கிறே..’’-அவள் கண்களின் தீனமான பார்வை அவனை ஒருகணம் நெகிழ்த்தி விட,கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.


‘’இத பாரு..நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்….சாமான்,சட்டி எல்லாத்தையும் நான் ஒரு சாக்குப்பையிலே தச்சு நம்ம வாத்தியார் வீட்டிலே போட்டுட்டு வந்திட்டேன்.மேலத் தெருப்பள்ளிக்கூடத்திலே தங்கவும்,சாப்பிடவும் வசதி செஞ்சு கொடுக்கிறாங்களாம்….பேசாம புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு’’
‘’அப்ப..வீட்டை அப்படியே விட்டுட்டுப் போயிடறதா..’’
‘’ஆமாம்..பெரிய வீடு….செமெண்ட்டும் தேக்கும் எளச்சு நீ கட்டின பங்களா பாழாப்போகுதாக்கும்..பாத்துப்பாத்துக் கட்டி வச்சவங்க எல்லாருமே இன்னிக்கு உசிர் பொளச்சாப் போறும்னு ஆலாப்பறக்கிறாங்க..நீ என்னடான்னா இந்த மண்குச்சை நெனச்சு மூக்கைச் சிதிக்கிட்டுக் கெடக்கே..’’


மறு வார்த்தை பேசாமல் முத்தம்மா எழுந்து கொள்கிறாள். தந்தையின் தோளில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து கொள்கிறான் மூத்த பயல் ரங்கன். மாற்றுப்புடவையும்,குழந்தை துணிமணிகளும் அடங்கிய ஒரு கித்தான் பையைத் தூக்கிக் கொண்டு,இடுப்பில் கடைக்குட்டி செல்வியை இடுக்கியபடி அவள் புறப்படுகிறாள்.கிளம்புமுன்,தனக்கு இத்தனை நாள் புகலிடம் கொடுத்து அரவணைத்துக் காத்த அந்த மண்குடிசையை அன்போடு,ஆசையோடு..ஏக்கத்தோடு ஒரு முறை பார்க்கிறாள்.
அவளைப்பொறுத்தவரை வெறும் மண்குச்சு மட்டும்தானா அது….? 

அவள் கனவுகளின் சொர்க்கமாய்..சில நனவுகளின் நிஜமுமாய்..அவளுக்கென்று அமைந்த அந்தரங்கமான ஒரு அந்தப்புரமாய்..அவளே தனியொரு ராணியாய் அரசோச்சிய மாளிகையாய்…எல்லாமாய் இருந்த ஒன்றல்லவா அது…..?


கனக்கும் தலைச்சுமையுடன் கழுத்தளவு,இடுப்பளவு நீரில் நனைந்தபடி நிவாரணமுகாமை நோக்கி நடக்கும் கூட்டத்துடன் அவர்களும் சங்கமித்துப் போகிறார்கள்.கால்கள் இயந்திர கதியில் நடந்தாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஒன்றை வலுக்கட்டாயமாகப் பிய்த்தெறிந்து விட்ட சோகம்..திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு வெறிச்சோடிப்போன மனத்தோடு திரும்பும் கையாலாகாத நிர்க்கதித்தன்மை இவையெல்லாம் நிரந்தரமாக அவளைத் தொடர்ந்து வருகின்றன.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’வாடி மருமவளே…வலது காலை எடுத்து வச்சு உள்ளாற வா..’’-புதுப்பொலிவோடு புது மருமகளாய் அவன் கரம் பற்றி அந்த வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த அந்த நாள் நினைவுகளில் அமிழ்ந்து போகிறாள்.
‘’அய்த்தே….நீங்க கொடுத்து வச்சவுகதான்…புது வீட்டுக்குக் குடி போன முகூர்த்தம் வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு மருமவளையும் கொண்டாந்திட்டீங்களே..’’
‘’மாத்திச் சொல்லாதேடி கூறு கெட்டவளே…! எல்லாம் என் மருமவளை நிச்சயம் பண்ணின வேளைதான்….பொறம்போக்கு நெலத்திலே ஒரு குடிசையாவது போட்டுக்க முடிஞ்சது…அததுக்கு நேரம் காலம் வரணுமில்லே..’’


முத்தம்மா புகுந்த வேளை பொன்னாய்ப்பொழியா விட்டாலும் பொங்கித் தின்னச் சோறும் தங்கியிருக்க நிழலுமாவது நிரந்தரமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஏழைக்குடும்பம் நிறைவு காண்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ந்தா இந்த ரொட்டியை சாப்பிட்டுப் படுத்துக்க..அப்பறமா கனாக்காணலாம்’’
‘’எனக்கு வேணாம்’’
‘’என்னடா இது பெரிய ரோதனையாப்போச்சு…புள்ளைங்க,நான் எல்லாரும் பக்கத்திலேயே இருக்கோம்.அவங்கவங்க சொந்த ஜனங்களை சாமானங்களப் பறி கொடுத்திட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்காங்க.நமக்கு அந்தக்கவலையும் இல்லை….இதிலே உனக்கு என்ன எளக்காரமாப்போச்சுன்னு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கே நீ..’’
’’ஏன்யா மெய்யாலுமே சொல்லு…அத்தை மட்டும் உசிரோட இருந்தா அந்த வீட்டை முளுக விட்டுட்டு நாம மட்டும் வர்றதுக்கு சம்மதிச்சிருக்குமா..’’


’’இத பாரு முத்தம்மா சும்மா அதயே பெனாத்திக்கிட்டுத் திரியாதே.. ஒரு வகையிலே அந்த வீடு இடிஞ்சு போனாக் கூட நமக்கு லாபந்தான்…இந்தக் குச்சுக்கு நாம செலவளிச்சதை விட சாஸ்தியான பணத்தை சர்க்காரு கிட்டேயிருந்து ஈட்டுப்பணமா வாங்கிடலாம்.அதை வச்சு வேற இடத்திலே இன்னும் வசதியா ஒரு வீடு கட்டிக்கலாம்….அதையே நெனச்சு மறுகாம செத்தே படு’’
‘’மச்சான் நீ கூடவா இப்படிப்பேசறே…நம்ம குடும்பத்தோட ஒண்ணா ஒரு கொளந்தை மாதிரி பாத்துப் பாத்து நாம வளத்த அந்த வீட்டை விட இன்னிக்கு வரப்போற ஈட்டுப்பணம் பெரிசாப்போயிடிச்சா உனக்கு..’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வனும் அவளுமாய் வியர்வை நீரூற்றித்தான் அதை வளர்க்கிறார்கள்.அவள் வந்த புதிதில் நான்கு கம்புகளும் உயரமில்லாத தாழ்ந்த மண்சுவருமாய் இருந்த வீடு,அவர்கள் உழைப்பின் ஊக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கிறது.


வீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாக இருக்கும் வேளையில் அவள் மண் சுமந்து வந்து தர,அவனும் அவளுமாய் சுவரை உயர்த்துகிறார்கள்.ஒரு காற்றடித்தால் பறந்து போய்விடும் ஓலைகளை மாற்றி விட்டு ஓடு வேய்வதற்குத் தன் பிறந்த வீட்டில் போட்ட இரண்டு பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைக்கச் சொல்கிறாள் அவள்.
‘’மண்ணு வீட்டுக்கு ஓடு போடறதுக்குத் தங்கச் சங்கிலியை வைக்கறதா…ஒங்கிட்டே உள்ளதே இந்த ஒரு நகைதான் நீ போட்டுக்க ஆத்தா..வேண்டாம்’’
அத்தை அவள் செயலைத் தீவிரமாய் மறுக்கிறாள்.
‘’அத்தை நாம எப்படியும் சங்கிலியை மீட்டுக்காம இருக்கப்போறதில்லை….அட..அதுக்காகவாச்சும் இன்னும் கொஞ்சம் ஒடம்பு வணங்கி ஒளைச்சிட்டுப் போறோம்.ஆனா ஓடு போடறதுக்காக அப்படி ஒளைக்க வணங்குமா….இல்லே அப்படி சிறுக சிறுக சேத்து வச்சாதான் செலவளிக்காம ஊறுகா போட்டு வைக்க முடியுமா..’’
எப்படியோ மல்லுக்கு நின்று நினைத்ததைச் சாதித்து விடுகிறாள்.


‘’ஏன் மச்சான் பணக்காரங்க வீட்டுக்குப் பேர் வைக்கிற மாதிரி நாம கூட நம்ம வீட்டுக்குப் பேரு எதினாச்சும் வச்சா என்ன’’
‘’போடி பைத்தியக்காரி…அவங்க பேரு வைக்கிறது தங்களோட அந்தஸ்தைக் காட்டிக்க…நமக்கு அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டிக்கிற மாதிரி என்ன இருக்கு’’

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’ந்தா முத்தம்மா…செல்லி அளுவுது பாரு…அதுக்குப் பாலு கூடக் குடுக்காம என்ன ரோசனை ஒனக்கு’’
-மூலைவீட்டு முனியம்மா பாட்டி முத்தம்மாவைக்கடிந்து கொள்கிறாள்.

சுய உணர்வு பெற்றவளாய்க் குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்க்கிறாள் அவள். எங்கும் முகங்கள்! வாடி இருந்தபோதிலும் உயிர் தப்பிய ஆறுதலைத் தெரிவிக்கிற முகங்கள் !வீட்டை விடத் திருப்தியாக ஒருவேளையாவது சாப்பிட முடிந்ததே என்ற அற்ப சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற சில பிஞ்சு முகங்கள்….நாளைய கவலையை ஒதுக்கி விட்டு இன்றைய இந்தப் பொழுதில் நிம்மதி காணும் முகங்களுக்கிடையே முத்தம்மா மட்டும் வேறுபட்டு நிற்கிறாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டு வேயப்பட்டு உயரமாய் நிற்கும் அந்த வீட்டைப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் அவள்.சுற்றிலும் வேலிக்காத்தான் செடிகள் மதிலாய் வளர்ந்திருக்க படல்கதவு ஒன்றையும் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.என்றைக்கோ அத்தை சப்பிப்போட்ட மாங்கொட்டை செடியாகி,மரமாகிப்பூக்க ஆரம்பித்திருக்கிறது.தவிர அவளே கொத்திப்போட்ட கீரைப்பாத்திகள்,கொய்யா மரம்,இன்னும் மல்லிகைப்பந்தல்!

’’சாமர்த்தியக்காரிதாண்டி நீ…தம்மாத்தூண்டுக் குச்சைக் கோபுரமாக்கினதோட தோட்டமெல்லாம் போட்டுத் தோப்புக்கணக்கா ஆக்கி வச்சிருக்கியே...ஹ்ம்…உங்க அத்தை இப்ப இல்லாத்தது ஒண்ணுதான் குறை…’’
‘’செங்கல் சுவரெடுத்துத் தளம் போடணும்னு பாக்கிறேன் முடியலியே ஆயா..’’
‘’தளம் போடாட்டி என்னாடி? அதுதான் சாணம் போட்டுபோட்டுச் சிமிட்டியாட்டம் மொளுகி வச்சிருக்கியே தரையை..’’-முனியம்மா பாட்டி மூக்கில் விரல் வைத்து வியக்கிறாள்.
ஆயாவின் தலை மறைந்ததும் முத்தம்மா ஆத்திரத்துடன் வெடிக்கிறாள்.
‘’மொதல்லே ஒரு பூசனிக்கா வாங்கிட்டு வந்து மூஞ்சி வரைஞ்சு தொங்க விடணும் மச்சான்…அந்தப்பொம்பளையோட பேச்சு ஒண்ணும் சரியில்லை..’’
‘’ஆமா…அவ கண்ணேறு பட்டுதான் ஒன்னோட வசந்த மாளிகை ஆட்டம் கண்டிடப்போகுதாக்கும்’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகாமுக்குள் சில பேர் வேகமாக ஓடி வருகிறார்கள்.அரைத் தூக்கத்திலிருந்த முத்தம்மாவின் கணவன் உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறான்.
‘’ஓடைப்பட்டிக் கம்மா ஒடைப்பெடுத்து வாய்க்காத் தண்ணி நம்ம குப்பத்தைச் சுத்திக்கிடிச்சு அண்ணே..நல்ல வேளை நீ பொளுதோட வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு வந்தே.....நம்ம குப்பன் பய வேலை முடிஞ்சு வாறதுக்குள்ளே வீட்டுக்குள்ளாற தண்ணி புகுந்திடிச்சு…சரித்தான்….உசிரு பொளச்ச மட்டிலே போறுமுன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு இங்கே ஓடியாந்துட்டான்’’
கண்மாய் வெள்ளம் தன் உயிரையே கொள்ளை கொண்டு போவது போன்ற மயக்கத்தில் சரிந்து விழுகிறாள் முத்தம்மா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யற்கையின் ஊழித்தாண்டவம் ஒருவழியாகக்கொஞ்சம் ஓய்ந்திருக்கும் அந்தக் காலைப்பொழுதில் ஒரு பிச்சியைப்போலத் தன் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா . நீர்ச் சுழிப்பில் ஒதுங்கிய தென்னை மட்டைகள்,இளநீர்க்குலைகள்,வாழைத்தார்கள் எல்லாவற்றையும் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறியவள்,அங்கே தன் கனவு மாளிகையின் அஸ்தமனக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
ஓடைத் தண்ணீர் அகழியைப்போல நாலு புறமும் சூழ்ந்திருக்க…நடுவே நான்கு மூங்கில் கழிகள்…,மேலே இன்னும் பறக்காமல் பலங்காட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் சில ஓடுகள்,மத்தியில் குவிந்து கிடக்கிற உடைந்து போன ஓட்டுத் துண்டுகள்,மரச்சட்டங்கள்!அப்பளமாய் நொறுங்கிப்போக் கிடக்கிற தன் சாம்ராச்சியத்தின் கோர முகம் கண்டு அருவருப்போ வெறுப்போ கொள்ளாமல் அந்த முழங்காலளவு நீரில் அவள் மெள்ள அடியெடுத்து வைத்து வருகிறாள்.சாணமிட்டு மெழுகி அவள் கோலமிடுகிற முற்றம்,பத்து வீடு கேட்கிறாற்போல ரங்கன் பயல் வாய்ப்பாட்டை உருப்போடுகிற அந்த உயரமான திண்ணை,அவள் கணவன் ஆசையோடு வாங்கிப்போட்ட நார்க்கட்டில் கிடக்கிற மூலை,வாய்க்கு ருசியாய் அவள் பலகாரம் சுட்டுப்போடுகிற சமையலறை ஓரம், அத்தை தன் இறுதி மூச்சை விட்ட வீட்டின் கீழண்டைக்கோடி,ரங்கனையும்,செல்லியையும் ஈன்ற களைப்பை ஆற்றிக் கொள்ள அவள் இளைப்பாறியிருந்த வீட்டின் தெற்குப்பார்த்த வாயில்புறம்……இன்னும்,இன்னும்..இன்னும் மறக்க முடியாதபடி அவள் நினைவுச்சுவட்டில் பதிவாகியிருந்த வாழ்வின் சில கணங்கள்,அவற்றோடு பிணைந்த அந்த வீட்டின் பகுதிகள் எல்லாம் அந்தக் கூளத்தினூடே அவள் கண்ணுக்கு மட்டும் தனித்தனியே எழுதி வைத்த ஓவியங்களாய்க்காட்சி தருகின்றன.
‘’வீடுங்கிறது வெறும் உயிரில்லாத ஒருபொருள் மட்டும்தானா..நாம வேணுமானா உயிரில்லாத பொருள்களால அதைக் கட்டியிருக்கலாம்….ஆனா..மனுஷ உணர்வுகளினாலே அதுக்கு உயிரூட்டின பிறகும் சீவனே இல்லாத ஒரு மரக்கட்டையா……மண்ணாலேயும் கல்லாலேயும் ஆன ஒரு வெறும் பொருளா அதைப்பாக்க மனுசங்களாலே எப்படி முடியுது?’
இப்படியெல்லாம் பேசப் படிக்காத முத்தம்மாவின் பாமர மனது ஊமையாய்க் கண்ணீர் வடிக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’முத்தம்மா! ஒன்னத்தான் புள்ளே ம்…..கெளம்பு கெளம்பு…வெள்ளம் வடிஞ்சாச்சு இன்னும் எத்தினி நாளைக்கு இங்கே வச்சு சோறு போடுவாங்க….வூட்டுக்குப் போகலாம்..பொறப்படு’’

‘’வூடா அது எங்கே இருக்கு?’’

‘’என்னா நீ..கம்மாத் தண்ணி சுத்திக்கிட்டிருக்குதுன்னு அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து பூட்டியா..?நல்ல காலம்..மதகுக்கு அப்பால நம்ம சந்து இருக்கிறதால அதிலே உள்ள நம்ம குடிசைங்க மட்டும் பொளைச்சிடிச்சு’’

‘’………………………………………’’

‘’என்னா புள்ளெ அப்படிப் பாக்கிறே….நான் சொல்றது நெசந்தான்..! நீ செஞ்ச புண்ணியம்….எங்க ஆத்தா ஆசை இதெல்லாம் வீணாப்போயிடுமா?’’
வியப்போடு கணவனைப் பார்க்கிற முத்தம்மா..,குழந்தைகளை ஆசையோடு நெஞ்சில் அழுத்தியபடி தன் மண்குச்சை நோக்கி…வெறி பிடித்தவளாய் மாளாத காதலோடு ஓடுகிறாள்.


அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அப்போதைக்கு வேறு இடத்தில் ஒதுங்கிக் கொண்டாலும் வெள்ளம் வடிந்ததும் முத்தம்மா ஓடி வருவது என்னவோ இந்தக் குடிசையை நோக்கித்தான்! அவளுடைய உலகம் ஸ்தாபிதமாகி இருக்கிற இந்த வீடு மீளாத துன்பத்தையே மீண்ண்டும் மீண்டும் தந்தாலும் அவளைப் பொறுத்த வரை அது ஒரு மீண்ட சொர்க்கம்தான்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....