துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.12.15

’சங்கவை’க்கு விருது


கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை  ஒவ்வொரு ஆண்டும் சிறந்ததமிழ் நாவல்களுக்கு திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் பரிசு வழங்கி சிறப்பித்து வருகிறது.

2015ஆம் ஆண்டுக்கான பரிசு எழுத்தாளரும் சென்னை லயோலா கல்லூரித்  தமிழ்ப்பேராசிரியருமான இ ஜோ ஜெயசாந்தி அவர்களின் ‘சங்கவை’நாவலுக்குக்கிடைத்திருக்கிறது.
[விருட்சம் வெளியீடு]


 900க்கு மேற்பட்டபக்கங்களைக்கொண்ட அந்த நாவல் உள்ளடக்கத்திலும் மிக வலுவானது. உயர் கல்விக்கூடங்களில் மாணவ நிலையிலும் ,ஆய்வுப்பணி மற்றும் ஆசிரியப்பணி மேற்கொண்டிருக்கும் நிலையிலும் பல தரப்பட்ட பல்வேறு வயதுடைய பெண்கள் ஆண்களின் ஆதிக்க அதிகார வெறிக்கும் பாலியல் சுரண்டல்களுக்கும் ஆளாகும் அவலங்களை மிக விரிவாக,நடப்பியல் போக்கில் நாவலுக்குரிய அழகியல் குன்றாமல் எடுத்து வைக்கும் படைப்பு அது,

இவ்வாண்டு தொடக்கத்தில் சங்கவை நாவலின் வெளியீட்டு விழா சென்னையில் நிகழ்ந்தபோது எழுத்தாளர் இமையம் அவர்கள் நாவலைவெளியிட்டு வாழ்த்துரை வழங்க,நாவலை முழுமையாக மதிப்புரை செய்து சொற்பொழிவாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதே இந்த நாவலுக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் காத்திருக்கிறது என்று எனக்குப்பட்டது.அதற்கேற்ப கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை இந்த நாவலைப்பரிசுக்குத் தேர்ந்திருப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.


1983 முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதற்கு முன் பெற்றுள்ள சில எழுத்தாளர்கள் ரசு நல்லபெருமாள்,இ பா., பிரபஞ்சன், நாஞ்சில் நாடன்,நீல பத்மநாபன் போன்றோர். அந்தப்பட்டியலில் சிவசங்கரிக்குப்பின்பு இந்த விருதைப்பெறும் பெண் எழுத்தாளர்  ஜெயசாந்தி என்பதும் ஒரு சிறப்பு.

சகோதரி  ஜெயசாந்தி அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
பரிசளிப்பு
நூலுக்குப் பரிசளித்து உரையாற்றும்
கவிஞர் சிற்பி



ஏற்புரை-ஜெயசாந்தி

17.12.15

’’வைகை பெருகி வர......’’

70களின் இறுதியில் மதுரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நான் எழுதிய ’’வைகை பெருகி வர......’’என்ற இந்தச்சிறுகதை இன்றைய சென்னைச் சூழலில் குடிசைவாசிகள் முதல் கோடீசுவரர் வரை அனைவருக்குமே பொருத்தமாக இருக்கிறது.

அதை இங்கே மறு பிரசுரம் செய்திருக்கிறேன்.

‘’ புள்ளே நீ செய்யறது உனக்கே நியாயமாப் படுதா..? வைகை அணையிலே தண்ணியைத் தொறந்து விடப்போறாங்க…சாயந்திரத்துக்குள்ளே ஊருக்குள்ளே தண்ணி வந்திடும்னு எத்தினி வாட்டி தமுக்கடிச்சு சொல்லிட்டுப் போறாங்க…நீ பாட்டுக்குக் குந்திக்கிட்டிருக்கே..’’
‘’இப்ப என்னை என்னய்யா செய்யணும்ங்கிறே..’’-அவள் கண்களின் தீனமான பார்வை அவனை ஒருகணம் நெகிழ்த்தி விட,கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.


‘’இத பாரு..நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்….சாமான்,சட்டி எல்லாத்தையும் நான் ஒரு சாக்குப்பையிலே தச்சு நம்ம வாத்தியார் வீட்டிலே போட்டுட்டு வந்திட்டேன்.மேலத் தெருப்பள்ளிக்கூடத்திலே தங்கவும்,சாப்பிடவும் வசதி செஞ்சு கொடுக்கிறாங்களாம்….பேசாம புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பு’’
‘’அப்ப..வீட்டை அப்படியே விட்டுட்டுப் போயிடறதா..’’
‘’ஆமாம்..பெரிய வீடு….செமெண்ட்டும் தேக்கும் எளச்சு நீ கட்டின பங்களா பாழாப்போகுதாக்கும்..பாத்துப்பாத்துக் கட்டி வச்சவங்க எல்லாருமே இன்னிக்கு உசிர் பொளச்சாப் போறும்னு ஆலாப்பறக்கிறாங்க..நீ என்னடான்னா இந்த மண்குச்சை நெனச்சு மூக்கைச் சிதிக்கிட்டுக் கெடக்கே..’’


மறு வார்த்தை பேசாமல் முத்தம்மா எழுந்து கொள்கிறாள். தந்தையின் தோளில் ஜம்மென்று ஏறி உட்கார்ந்து கொள்கிறான் மூத்த பயல் ரங்கன். மாற்றுப்புடவையும்,குழந்தை துணிமணிகளும் அடங்கிய ஒரு கித்தான் பையைத் தூக்கிக் கொண்டு,இடுப்பில் கடைக்குட்டி செல்வியை இடுக்கியபடி அவள் புறப்படுகிறாள்.கிளம்புமுன்,தனக்கு இத்தனை நாள் புகலிடம் கொடுத்து அரவணைத்துக் காத்த அந்த மண்குடிசையை அன்போடு,ஆசையோடு..ஏக்கத்தோடு ஒரு முறை பார்க்கிறாள்.
அவளைப்பொறுத்தவரை வெறும் மண்குச்சு மட்டும்தானா அது….? 

அவள் கனவுகளின் சொர்க்கமாய்..சில நனவுகளின் நிஜமுமாய்..அவளுக்கென்று அமைந்த அந்தரங்கமான ஒரு அந்தப்புரமாய்..அவளே தனியொரு ராணியாய் அரசோச்சிய மாளிகையாய்…எல்லாமாய் இருந்த ஒன்றல்லவா அது…..?


கனக்கும் தலைச்சுமையுடன் கழுத்தளவு,இடுப்பளவு நீரில் நனைந்தபடி நிவாரணமுகாமை நோக்கி நடக்கும் கூட்டத்துடன் அவர்களும் சங்கமித்துப் போகிறார்கள்.கால்கள் இயந்திர கதியில் நடந்தாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஒன்றை வலுக்கட்டாயமாகப் பிய்த்தெறிந்து விட்ட சோகம்..திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு வெறிச்சோடிப்போன மனத்தோடு திரும்பும் கையாலாகாத நிர்க்கதித்தன்மை இவையெல்லாம் நிரந்தரமாக அவளைத் தொடர்ந்து வருகின்றன.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’வாடி மருமவளே…வலது காலை எடுத்து வச்சு உள்ளாற வா..’’-புதுப்பொலிவோடு புது மருமகளாய் அவன் கரம் பற்றி அந்த வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த அந்த நாள் நினைவுகளில் அமிழ்ந்து போகிறாள்.
‘’அய்த்தே….நீங்க கொடுத்து வச்சவுகதான்…புது வீட்டுக்குக் குடி போன முகூர்த்தம் வீட்டுக்கு வெளக்கேத்த ஒரு மருமவளையும் கொண்டாந்திட்டீங்களே..’’
‘’மாத்திச் சொல்லாதேடி கூறு கெட்டவளே…! எல்லாம் என் மருமவளை நிச்சயம் பண்ணின வேளைதான்….பொறம்போக்கு நெலத்திலே ஒரு குடிசையாவது போட்டுக்க முடிஞ்சது…அததுக்கு நேரம் காலம் வரணுமில்லே..’’


முத்தம்மா புகுந்த வேளை பொன்னாய்ப்பொழியா விட்டாலும் பொங்கித் தின்னச் சோறும் தங்கியிருக்க நிழலுமாவது நிரந்தரமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ஏழைக்குடும்பம் நிறைவு காண்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ந்தா இந்த ரொட்டியை சாப்பிட்டுப் படுத்துக்க..அப்பறமா கனாக்காணலாம்’’
‘’எனக்கு வேணாம்’’
‘’என்னடா இது பெரிய ரோதனையாப்போச்சு…புள்ளைங்க,நான் எல்லாரும் பக்கத்திலேயே இருக்கோம்.அவங்கவங்க சொந்த ஜனங்களை சாமானங்களப் பறி கொடுத்திட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்காங்க.நமக்கு அந்தக்கவலையும் இல்லை….இதிலே உனக்கு என்ன எளக்காரமாப்போச்சுன்னு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கே நீ..’’
’’ஏன்யா மெய்யாலுமே சொல்லு…அத்தை மட்டும் உசிரோட இருந்தா அந்த வீட்டை முளுக விட்டுட்டு நாம மட்டும் வர்றதுக்கு சம்மதிச்சிருக்குமா..’’


’’இத பாரு முத்தம்மா சும்மா அதயே பெனாத்திக்கிட்டுத் திரியாதே.. ஒரு வகையிலே அந்த வீடு இடிஞ்சு போனாக் கூட நமக்கு லாபந்தான்…இந்தக் குச்சுக்கு நாம செலவளிச்சதை விட சாஸ்தியான பணத்தை சர்க்காரு கிட்டேயிருந்து ஈட்டுப்பணமா வாங்கிடலாம்.அதை வச்சு வேற இடத்திலே இன்னும் வசதியா ஒரு வீடு கட்டிக்கலாம்….அதையே நெனச்சு மறுகாம செத்தே படு’’
‘’மச்சான் நீ கூடவா இப்படிப்பேசறே…நம்ம குடும்பத்தோட ஒண்ணா ஒரு கொளந்தை மாதிரி பாத்துப் பாத்து நாம வளத்த அந்த வீட்டை விட இன்னிக்கு வரப்போற ஈட்டுப்பணம் பெரிசாப்போயிடிச்சா உனக்கு..’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வனும் அவளுமாய் வியர்வை நீரூற்றித்தான் அதை வளர்க்கிறார்கள்.அவள் வந்த புதிதில் நான்கு கம்புகளும் உயரமில்லாத தாழ்ந்த மண்சுவருமாய் இருந்த வீடு,அவர்கள் உழைப்பின் ஊக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கிறது.


வீட்டு வேலைகள் முடிந்து ஓய்வாக இருக்கும் வேளையில் அவள் மண் சுமந்து வந்து தர,அவனும் அவளுமாய் சுவரை உயர்த்துகிறார்கள்.ஒரு காற்றடித்தால் பறந்து போய்விடும் ஓலைகளை மாற்றி விட்டு ஓடு வேய்வதற்குத் தன் பிறந்த வீட்டில் போட்ட இரண்டு பவுன் சங்கிலியைக் கொடுத்து அடகு வைக்கச் சொல்கிறாள் அவள்.
‘’மண்ணு வீட்டுக்கு ஓடு போடறதுக்குத் தங்கச் சங்கிலியை வைக்கறதா…ஒங்கிட்டே உள்ளதே இந்த ஒரு நகைதான் நீ போட்டுக்க ஆத்தா..வேண்டாம்’’
அத்தை அவள் செயலைத் தீவிரமாய் மறுக்கிறாள்.
‘’அத்தை நாம எப்படியும் சங்கிலியை மீட்டுக்காம இருக்கப்போறதில்லை….அட..அதுக்காகவாச்சும் இன்னும் கொஞ்சம் ஒடம்பு வணங்கி ஒளைச்சிட்டுப் போறோம்.ஆனா ஓடு போடறதுக்காக அப்படி ஒளைக்க வணங்குமா….இல்லே அப்படி சிறுக சிறுக சேத்து வச்சாதான் செலவளிக்காம ஊறுகா போட்டு வைக்க முடியுமா..’’
எப்படியோ மல்லுக்கு நின்று நினைத்ததைச் சாதித்து விடுகிறாள்.


‘’ஏன் மச்சான் பணக்காரங்க வீட்டுக்குப் பேர் வைக்கிற மாதிரி நாம கூட நம்ம வீட்டுக்குப் பேரு எதினாச்சும் வச்சா என்ன’’
‘’போடி பைத்தியக்காரி…அவங்க பேரு வைக்கிறது தங்களோட அந்தஸ்தைக் காட்டிக்க…நமக்கு அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டிக்கிற மாதிரி என்ன இருக்கு’’

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’ந்தா முத்தம்மா…செல்லி அளுவுது பாரு…அதுக்குப் பாலு கூடக் குடுக்காம என்ன ரோசனை ஒனக்கு’’
-மூலைவீட்டு முனியம்மா பாட்டி முத்தம்மாவைக்கடிந்து கொள்கிறாள்.

சுய உணர்வு பெற்றவளாய்க் குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்க்கிறாள் அவள். எங்கும் முகங்கள்! வாடி இருந்தபோதிலும் உயிர் தப்பிய ஆறுதலைத் தெரிவிக்கிற முகங்கள் !வீட்டை விடத் திருப்தியாக ஒருவேளையாவது சாப்பிட முடிந்ததே என்ற அற்ப சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற சில பிஞ்சு முகங்கள்….நாளைய கவலையை ஒதுக்கி விட்டு இன்றைய இந்தப் பொழுதில் நிம்மதி காணும் முகங்களுக்கிடையே முத்தம்மா மட்டும் வேறுபட்டு நிற்கிறாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டு வேயப்பட்டு உயரமாய் நிற்கும் அந்த வீட்டைப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் அவள்.சுற்றிலும் வேலிக்காத்தான் செடிகள் மதிலாய் வளர்ந்திருக்க படல்கதவு ஒன்றையும் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள்.என்றைக்கோ அத்தை சப்பிப்போட்ட மாங்கொட்டை செடியாகி,மரமாகிப்பூக்க ஆரம்பித்திருக்கிறது.தவிர அவளே கொத்திப்போட்ட கீரைப்பாத்திகள்,கொய்யா மரம்,இன்னும் மல்லிகைப்பந்தல்!

’’சாமர்த்தியக்காரிதாண்டி நீ…தம்மாத்தூண்டுக் குச்சைக் கோபுரமாக்கினதோட தோட்டமெல்லாம் போட்டுத் தோப்புக்கணக்கா ஆக்கி வச்சிருக்கியே...ஹ்ம்…உங்க அத்தை இப்ப இல்லாத்தது ஒண்ணுதான் குறை…’’
‘’செங்கல் சுவரெடுத்துத் தளம் போடணும்னு பாக்கிறேன் முடியலியே ஆயா..’’
‘’தளம் போடாட்டி என்னாடி? அதுதான் சாணம் போட்டுபோட்டுச் சிமிட்டியாட்டம் மொளுகி வச்சிருக்கியே தரையை..’’-முனியம்மா பாட்டி மூக்கில் விரல் வைத்து வியக்கிறாள்.
ஆயாவின் தலை மறைந்ததும் முத்தம்மா ஆத்திரத்துடன் வெடிக்கிறாள்.
‘’மொதல்லே ஒரு பூசனிக்கா வாங்கிட்டு வந்து மூஞ்சி வரைஞ்சு தொங்க விடணும் மச்சான்…அந்தப்பொம்பளையோட பேச்சு ஒண்ணும் சரியில்லை..’’
‘’ஆமா…அவ கண்ணேறு பட்டுதான் ஒன்னோட வசந்த மாளிகை ஆட்டம் கண்டிடப்போகுதாக்கும்’’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முகாமுக்குள் சில பேர் வேகமாக ஓடி வருகிறார்கள்.அரைத் தூக்கத்திலிருந்த முத்தம்மாவின் கணவன் உறக்கம் கலைந்து எழுந்து உட்காருகிறான்.
‘’ஓடைப்பட்டிக் கம்மா ஒடைப்பெடுத்து வாய்க்காத் தண்ணி நம்ம குப்பத்தைச் சுத்திக்கிடிச்சு அண்ணே..நல்ல வேளை நீ பொளுதோட வீட்டைக் காலி பண்ணிக்கிட்டு வந்தே.....நம்ம குப்பன் பய வேலை முடிஞ்சு வாறதுக்குள்ளே வீட்டுக்குள்ளாற தண்ணி புகுந்திடிச்சு…சரித்தான்….உசிரு பொளச்ச மட்டிலே போறுமுன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு இங்கே ஓடியாந்துட்டான்’’
கண்மாய் வெள்ளம் தன் உயிரையே கொள்ளை கொண்டு போவது போன்ற மயக்கத்தில் சரிந்து விழுகிறாள் முத்தம்மா.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

யற்கையின் ஊழித்தாண்டவம் ஒருவழியாகக்கொஞ்சம் ஓய்ந்திருக்கும் அந்தக் காலைப்பொழுதில் ஒரு பிச்சியைப்போலத் தன் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா . நீர்ச் சுழிப்பில் ஒதுங்கிய தென்னை மட்டைகள்,இளநீர்க்குலைகள்,வாழைத்தார்கள் எல்லாவற்றையும் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டு முன்னேறியவள்,அங்கே தன் கனவு மாளிகையின் அஸ்தமனக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
ஓடைத் தண்ணீர் அகழியைப்போல நாலு புறமும் சூழ்ந்திருக்க…நடுவே நான்கு மூங்கில் கழிகள்…,மேலே இன்னும் பறக்காமல் பலங்காட்டி ஒட்டிக்கொண்டிருக்கும் சில ஓடுகள்,மத்தியில் குவிந்து கிடக்கிற உடைந்து போன ஓட்டுத் துண்டுகள்,மரச்சட்டங்கள்!அப்பளமாய் நொறுங்கிப்போக் கிடக்கிற தன் சாம்ராச்சியத்தின் கோர முகம் கண்டு அருவருப்போ வெறுப்போ கொள்ளாமல் அந்த முழங்காலளவு நீரில் அவள் மெள்ள அடியெடுத்து வைத்து வருகிறாள்.சாணமிட்டு மெழுகி அவள் கோலமிடுகிற முற்றம்,பத்து வீடு கேட்கிறாற்போல ரங்கன் பயல் வாய்ப்பாட்டை உருப்போடுகிற அந்த உயரமான திண்ணை,அவள் கணவன் ஆசையோடு வாங்கிப்போட்ட நார்க்கட்டில் கிடக்கிற மூலை,வாய்க்கு ருசியாய் அவள் பலகாரம் சுட்டுப்போடுகிற சமையலறை ஓரம், அத்தை தன் இறுதி மூச்சை விட்ட வீட்டின் கீழண்டைக்கோடி,ரங்கனையும்,செல்லியையும் ஈன்ற களைப்பை ஆற்றிக் கொள்ள அவள் இளைப்பாறியிருந்த வீட்டின் தெற்குப்பார்த்த வாயில்புறம்……இன்னும்,இன்னும்..இன்னும் மறக்க முடியாதபடி அவள் நினைவுச்சுவட்டில் பதிவாகியிருந்த வாழ்வின் சில கணங்கள்,அவற்றோடு பிணைந்த அந்த வீட்டின் பகுதிகள் எல்லாம் அந்தக் கூளத்தினூடே அவள் கண்ணுக்கு மட்டும் தனித்தனியே எழுதி வைத்த ஓவியங்களாய்க்காட்சி தருகின்றன.
‘’வீடுங்கிறது வெறும் உயிரில்லாத ஒருபொருள் மட்டும்தானா..நாம வேணுமானா உயிரில்லாத பொருள்களால அதைக் கட்டியிருக்கலாம்….ஆனா..மனுஷ உணர்வுகளினாலே அதுக்கு உயிரூட்டின பிறகும் சீவனே இல்லாத ஒரு மரக்கட்டையா……மண்ணாலேயும் கல்லாலேயும் ஆன ஒரு வெறும் பொருளா அதைப்பாக்க மனுசங்களாலே எப்படி முடியுது?’
இப்படியெல்லாம் பேசப் படிக்காத முத்தம்மாவின் பாமர மனது ஊமையாய்க் கண்ணீர் வடிக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘’முத்தம்மா! ஒன்னத்தான் புள்ளே ம்…..கெளம்பு கெளம்பு…வெள்ளம் வடிஞ்சாச்சு இன்னும் எத்தினி நாளைக்கு இங்கே வச்சு சோறு போடுவாங்க….வூட்டுக்குப் போகலாம்..பொறப்படு’’

‘’வூடா அது எங்கே இருக்கு?’’

‘’என்னா நீ..கம்மாத் தண்ணி சுத்திக்கிட்டிருக்குதுன்னு அவங்க சொன்னதைக் கேட்டு பயந்து பூட்டியா..?நல்ல காலம்..மதகுக்கு அப்பால நம்ம சந்து இருக்கிறதால அதிலே உள்ள நம்ம குடிசைங்க மட்டும் பொளைச்சிடிச்சு’’

‘’………………………………………’’

‘’என்னா புள்ளெ அப்படிப் பாக்கிறே….நான் சொல்றது நெசந்தான்..! நீ செஞ்ச புண்ணியம்….எங்க ஆத்தா ஆசை இதெல்லாம் வீணாப்போயிடுமா?’’
வியப்போடு கணவனைப் பார்க்கிற முத்தம்மா..,குழந்தைகளை ஆசையோடு நெஞ்சில் அழுத்தியபடி தன் மண்குச்சை நோக்கி…வெறி பிடித்தவளாய் மாளாத காதலோடு ஓடுகிறாள்.


அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைகை பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.அப்போதைக்கு வேறு இடத்தில் ஒதுங்கிக் கொண்டாலும் வெள்ளம் வடிந்ததும் முத்தம்மா ஓடி வருவது என்னவோ இந்தக் குடிசையை நோக்கித்தான்! அவளுடைய உலகம் ஸ்தாபிதமாகி இருக்கிற இந்த வீடு மீளாத துன்பத்தையே மீண்ண்டும் மீண்டும் தந்தாலும் அவளைப் பொறுத்த வரை அது ஒரு மீண்ட சொர்க்கம்தான்!


16.12.15

பேராழிக்கன்று

நான் தமிழ்ப்பேராசிரியராகப்பணியாற்றிய காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தை முதன்மைப்பாடமாகக்கொண்ட மாணவிகளைப்போலவே-சிலவேளைகளில் அதற்கும் கூடுதலான ஆர்வத்துடன் பொதுத்தமிழ் வகுப்புக்களை நேசித்த ஆங்கிலம்,வேதியியல்,இயற்பியல்,மனையியல்,சமூகவியல் ஆகிய பிற துறை மாணவிகள் -பலரைக்கண்டிருக்கிறேன்.அவர்களில்  உள்ளார்ந்த தாகத்துடன் மரபுத் தமிழையும் நவீனத் தமிழையும் தேடித் தேடி வாசித்தவர்களும் பலர் உண்டு;பின்னாளில் தமிழ்ப்படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிட்ட முத்திரைகளையும் சிலர் பதித்திருக்கிறார்கள்.
‘70களில் ஆங்கில இலக்கிய இளங்கலை மாணவியாக எனக்கு அறிமுகமான  ரங்கநாயகி,ஆங்கிலப்பேராசிரியராக மட்டுமன்றித் தன் தமிழ் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டபடி,  தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவராகவும் உருவானவர். ’சிநேகவனம்’என்னும் தனது அவரது முதல் கவிதைத் தொகுப்பை அடுத்து,
பேராழிக்கன்று’ என்னும் அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இப்போது காவ்யா வெளியீடாக வந்திருக்கிறது.கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தமிழ்ப்பேராசிரியராகப் பழக்கமான என்னைத் தன் நினைவில் இருத்தித்  தன் நூலுக்கு அணிந்துரை எழுதுமாறு  பணித்த ரெங்கநாயகியின் அன்புக்கு நன்றி.

இன்னும் பல சிறந்த கவிதை நூல்கள் அவரிடமிருந்து வெளிப்பட வேண்டும் என்று என் மாணவி ரங்காவை அன்போடு வாழ்த்துகிறேன்.
பேராழிக்கன்று கவிதை நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை கீழே;



‘மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனியாய்’’….
[அணிந்துரை]
எம் ஏ சுசீலா

மானுட வாழ்வின் புறப்போராட்டங்கள், சமுதாயச்சிக்கல்கள் ஆகியவற்றைப் 

பதிவு செய்யும் புற உலகு சார்ந்த கவிதைகளின் உருவ உள்ளடக்கங்களும் 

அவற்றின் பயன்பாடும்  ஒரு வகைப்பாட்டைச் சேர்ந்தவை என்றால், தனிமனித 

உணர்வுக்கொந்தளிப்புகளை,,,, அக உளைச்சல்களை….., தன்னுள் தானே 

அமிழ்ந்தபடி நிகழும் மனிதத்தேடல்களைப் பொருளாகக் கொண்டமையும் 

தன்னுணர்வுக்கவிதைகள் முற்றிலும் வேறொரு தளத்திலானவை. 

முதல்வகைக்கவிதைகளின் இலக்குகள் வேறென்பதால் அவற்றைக் குறை கூற 

இயலாது என்றபோதும், கவிதை என்றொரு மகா அனுபவத்துக்குள் நம்மை 

ஆழ்த்தி, அனுபூதி நிலைக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடிய தகுதி படைத்தவை 

அகமுகக் கவிதைகள் மட்டுமே. ’’அவரவர் தம தம அறி அறி வகை ‘’என்று 

நம்மாழ்வார் குறிப்பிடுவது போல அவரவரின் வாசிப்புக்கும் உணர்வு 

நிலைக்கும் ஏற்றபடி வெவ்வேறான அனுபவங்களையும் தரிசனங்களையும் 

வழங்குபவை இத்தகைய கவிதைகள். கவிதை வாசிப்பை இலகுவான ஒரு 

பொழுதுபோக்காகக் கொள்ளாமல் அதைத் தீவிரமான ஒரு பயிற்சியாக சாதகம் 

செய்வோருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியவை இத் தரிசனங்கள். 

ஊன்றிப் படிப்பதற்கே உழைப்பைக்கோரும் இத்தகைய 

அகநோக்குக்கவிதைகளை உருவாக்குவதென்பது ஒரு வேள்வி ! ‘’வைகல் எண் 

தேர் செய்யும் தச்சன்’’’,  மாதம் முழுவதும் முயன்று உருவாக்கும் ஒரே ஒரு 

தேர்க்காலைப்போல மனமென்னும் தறியில் ஒவ்வொரு இழையாக நெய்வதில் 

தொல்லை இன்பத்து இறுதி காண்போர்க்கே கைவரும் கலை அது. 

அந்தக்கலையில் தேர்ந்திருக்கும் கவிஞர் ரங்கநாயகியின் முழுப்பரிமாணமும் 

வீரியத்தோடு கூடிய எழிலான சொல்வீச்சுக்களோடு அவரது ‘பேராழிக்கன்று’ 

என்ற இந்தத் தொகுப்பின் கவிதைகள் அனைத்திலும் சிறப்பாகப் 

பதிவாகியிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடும், வாசிப்பும், படைப்பிலக்கியப்பயிற்சியும் 

கொண்டிருப்பவர்களுக்கு ஆங்கில இலக்கியப்பின்னணியும் கூடச்சேரும்போது 

அவர்களின் படைப்புக்களில் கூடுதல் ஆழமும் செறிவும் கூடிவிடுவதைப் பல 

படைப்பாளிடமும் காணமுடியும். ரங்கநாயகிக்கும் அந்த வாய்ப்பு 

கிட்டியிருக்கிறது. ஆழ்வார்களின் பிரபந்தத் தமிழிலும் அவர் தோய்ந்து 

கலந்திருப்பதால் அவற்றில் கொழிக்கும் அழகையெல்லாமும் கூட நவீன 

வாசகர்களுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன அவரது கவிதைகள். 

இந்தத் தொகுப்பின் தலைப்பான ’பேராழிக்கன்று’ என்ற மாறுபட்ட 

சொல்லாட்சியே அதை உறுதி செய்கிறது.

‘’இன்று தென்படும் நாளைகளின் 

நம்பிக்கைத் தொலைவுகள்

நாளைகளின் நாளைகளில் நீண்டபடி…’’

என மனித இருப்பின் சலிப்பான கணங்கள், அவற்றினூடே மாயம் காட்டும் 

உருவெளி பிரமைகள், வாழ்வின் முக்கிய கணங்களான பிறப்பும் இறப்பும் 

கிளர்த்தும் முடிவற்ற தேடல்கள் ஆகிய பலவற்றையும் இருப்பியல்வாத, 

சர்ரியலிச,நவீன-,பின் நவீனத்துவ பாணிகளில் கலைநயம் குன்றாமல் 

ரங்கநாயகியின் கவிதைகள் முன்வைத்துக்கொண்டே செல்கின்றன.

யாசித்துப்பெற விரும்பாத அன்பைப் 

‘’பொழிய மறுக்கும் மேகம் கண்டு நனைய மறுத்து முகம் திருப்பிக்கொள்ளும் 

நில’’மாகக் காட்டும் படிமம்,

சிலந்தி வலையைச் சிக்கலுக்குள் வலியச் சிக்கிக்கொள்ளும் மனித மனமாய்க் 

காட்டும் படிமம் என நவீன கவிதை வெளிக்கே உரித்தான வித்தியாசமான பல 

படிமங்கள் இவர் கவிதைகளில் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

‘’மழைக்காலக் கதவிடுக்கில் சிக்கிய கைவிரலாய் நசுங்கிப்போகிறது மனம்’’, 

‘’பேராழி மூன்றும் திரும்பக்

பெற்றுக்கொண்டுவிடுவதான

அபாயத் தொங்கலாய்த் 

தென் இந்திய வரைபடம் போலத் தத்தளிக்கிறது’’

என இரசனைக்குரிய உவமைகளுக்கும் தொகுப்பில் குறைவில்லை.

சுனாமியின் பிணச்சூறாவளி பற்றிய பதிவுகள் குறும்,நெடும் கவிதைகளாகத் 

தொகுப்பில் மலிந்து கிடப்பது, இந்தக் குறிப்பிட்ட தொகுப்பின் மையத்தையே 

அந்த உள்ளடக்கம்தான் முடிவுசெய்திருக்கக்கூடுமோ என்று எண்ண 

வைக்கிறது. அந்த வரிசையில் ‘கன்னியாகுமரி கொண்டுபோய் விட்ட ஸதிக்கு’ 

ஒரு முக்கியமான கவிதை. ஊழிப்பெருவெள்ளத்தில் உலக ஓட்டமே ஓய்ந்து 

போகும் தருணத்தில் ஆலிலையில் மிதந்து வந்து அடுத்த யுகத்தை ஜனிக்க 

வைக்கும் திருமாலின் தொன்மத்தை நினைவூட்டுவது அதே வரிசையிலான 

’பேராழிக்கன்று’.

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறிவதில்லை; அது போலத் தன் 

’’மீதேறி ஓடிப்பிடித்து

விளையாடும் அணிலிரண்டின்

உராய்தல்களில்

சலனமின்றி இருக்கிறது’’ 

ஜன்னல் வழி காட்சியாகும் தூங்குமூஞ்சி மரம். இது ஓர் அற்புதமான 

காட்சிப்படுத்தல்.

தன்னை விட்டு எப்போதைக்குமாய்ப் பிரிந்து போன ஒன்று இப்போது எந்த 

வடிவத்தில் எதுவாக இருக்கிறது..அல்லது அது எல்லா இடத்திலும் யாதுமாகி 

நிறைந்திருக்கிறதா என்று தவித்தபடி 

‘’எதுவாகிப்போனாய் நீ என்பதறிய

பதறுகிறது மனம்’’

என்று தேடும் ‘யாதுமாகி’. நாம் கற்பனை கூடச்செய்து பார்த்திராத 

’‘குளியலறை கரப்பான் விழிகளில்….சாம்பிராணி புகைக்கூண்டில், அரிவாள் 

மணைக்கூரிழை விளிம்பில்’’ என்று இவைகளிலெல்லாம் கூடத் தான் 

தொலைத்ததைக் கண்டடைய ஆதங்கம் கொள்கிறது . பிரிவின் துயரை 

மட்டுமன்றி அதன் பித்து நிலையினையும் அபாரமாகப் பதிவு செய்து இத் 

தொகுப்பின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாக நெஞ்சில் இடம் பிடிக்கிறது 

‘யாதுமாகி’ என்னும் இக்கவிதை.. 

தொகுப்பில் மேலோங்கித் தென்படும் நம்பிக்கை வறட்சிக்குரலுக்கு நடுவே

‘’நண்பகல் காக்கையின் அநாயாச ஒற்றைக்கூவல்…

 புரட்டும் விரல் புத்தக ஓசை

 எங்கோ தொட்டில் ஒன்றின் சிணுங்கல்’’

என ‘’அத்தனையும் இசையாய் இருக்கும்பிரதேச’’த்தையும் சொல்லும் 

‘கமகவெளி’ ஒரு சிறிய ஆறுதல். 

‘சிநேகவனம்’ என்ற முதல் தொகுப்புக்குப் பிறகு வரும் ரங்கநாயகியின் 

இரண்டாம் தொகுப்பு இது. 

‘’சுட்டிப்பெண் போல

மீனாட்சி தங்கத்தேர் ஆடிவீதி பவனி போல’’

என இவர் கவிதைக்குச் சொல்லும் இலட்சணங்கள் பொருந்தி அமைந்து 

சொல்வளமும் அடர்த்தியும் எடுத்துரைப்புத் திறனும் கொண்ட கவிதைகள் 

பலவும் இத் தொகுப்பில் மெருகு கூடிப்பொலிகின்றன. படைப்பாக்கத் 

துறையில் ரங்கநாயகி அவர்கள் மேலும் பல முயற்சிகளை 

மேற்கொள்ளவேண்டுமென்றும், இருண்மையான கவிதைகள் நம் நலிவையும் 

சோர்வையுமே முன் வைப்பவை என்ற மாயையைத் தகர்த்து வாழ்க்கை 

நேசத்துக்குரியது, குதூகலத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் உரியது, 

அனைத்துக்கும் மேலாக நம்பிக்கைக்கு உரியது என்ற உத்வேகமூட்டும் 

கலைப்படைப்புக்களும் இவரிடமிருந்து வெளிப்பட வேண்டுமென நான் 

அன்பின் உரிமையோடு கோருகிறேன்.

என் அன்புக்குரிய முன்னாள் மாணவியும் கவிஞரும் பேராசிரியருமான 

ரங்கநாயகிக்கு என் உச்சிமுகர்ந்த பாராட்டுக்கள். இத்தொகுப்பை அழகுற 

வெளியிட முன் வந்திருக்கும் காவ்யாபதிப்பகத்தார்க்கு என் நன்றி.

22.10.15

காவேரியின் புனைவுலகம்

எழுத்தாளர் ‘காவேரி’ லட்சுமி கண்ணன் அவர்களின்
‘முத்துக்கள் பத்து’ [தேர்ந்தெடுத்த சிறுகதைகள்]
சிறுகதைத் தொகுப்பு அம்ருதா பதிப்பக வெளியீடாக அண்மையில் வந்திருக்கிறது.


காவேரியின் ’’முத்துக்கள் பத்து’’க்கு நான் வழங்கியிருக்கும் முன்னுரை
காவேரியின் புனைவுலகம்
கண நேர மின்னலாய்த் தன்னுள் பளிச்சிடும் உன்னத தரிசனங்கள், சமூகம் மற்றும் தனி மனித இருப்புக் குறித்து எழும் கேள்விகள், தேடல்கள், மானுடத்தின் இலக்காகத்  தான் வரித்துக் கொண்டிருக்கும் அற்புதமான விழுமியங்கள், இவற்றைத் தான் உணர்ந்த அதே அலைவரிசையில் வாசக மனங்களுக்கும் கடத்தும் படைப்பாளிகளின் எழுத்துக்களே காலம் கடந்து நிற்கும் தகுதியைப்பெறக்கூடியவை. ’ஆத்துக்குப் போகணும்’ என்ற நாவல் வழியாகவும் தமது சிறுகதைகள் மூலமும் அத்தகைய காலம் கடந்த நிலைப்பாட்டைத் தனது படைப்புக்களுக்குப்பெற்றுத் தந்திருப்பவர் ‘காவேரி’ என்ற புனைபெயரில் தமிழ்ப்புனைவுகள் பலவற்றை உருவாக்கியிருக்கும் திருமதி ‘காவேரி’லட்சுமி கண்ணன்.
கன்னடத்துக் காவிரியின் மடியில் பிறந்து, அதே காவிரியால் வளம் கொழிக்கும் சோழமண்ணைப் புகுந்த வீடாகக்கொண்ட ’காவேரி’யின் பெயர்ப்பொருத்தத்துக்கு அது மட்டும் காரணமில்லை; ஆற்றொழுக்கைப்போன்ற சீரான நடை, நதிஅலைத் துள்ளல்களாய் ஆங்காங்கே தலை காட்டும் சொற்கோலங்கள், சில்லென்று தெறிக்கும் நீர்த்திவலைகளாய் எதிர்பாராத தருணங்களில் நம்மை நனைத்து விட்டுப்போகும் கவித்துவமான படிமங்கள்....இவற்றையும் கணக்கில் கொள்ளும்போதுதான் அவரது புனைபெயரின் பரிமாணம் மற்றொரு கோணத்திலும் நம்முள் தெளிவாகும்.
கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றதோடு, தொடர்ந்து அதிலேயே முனைவர் பட்டம் பெற்று,அதைக்கற்பித்தும் இருக்கும் ‘காவேரி’யின் படைப்பிலக்கிய வாழ்வும் ஆங்கிலக்கவிதை உருவாக்கத்தோடுதான் முதலில் தொடங்கியது. ஆங்கில இலக்கியப்பயிற்சியோடும், ஆங்கிலக்கல்வியின் பின்புலத்தோடும் தமிழ்ப்படைப்பிலக்கியத்தில் முனைந்து வெற்றி பெற்றிருக்கும் பல எழுத்தாளர்களிடம்  தென்படும் ஆழமும்,அழுத்தமும்,பரிசோதனை முயற்சிகளும் இவரது தமிழ்ப்படைப்புக்களிலும் கைகூடியிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்றே மதிப்பிடலாம். தொடக்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி வந்த ’காவேரி’ ,அதற்கு இணையாகத்   தமிழ் எழுதுகோலையும் ஏந்துவதற்கு இவரது கணவர் மிகப் பெரிய தூண்டுகோலாக அமைந்திருக்கிறார். ‘’தமிழில் எழுதும்படி என்னை ஊக்குவித்த என் கணவர் அருண் கண்ணனை நினைவு கூர்கிறேன்; அவருக்காகவே இந்த என் தமிழ்ப்பற்று’’என்று தன் சிறுகதைத்தொகுப்பொன்றின் முன்னுரையில் கூறும் காவேரி, தனக்கும்  அது உகப்பானது என்றே கருதுகிறார். சொந்தத் தாய்மொழியில் படைப்புக்களை உருவாக்குவதென்பது ,  உள்ளார்ந்த ஒரு வகை நெகிழ்ச்சியைத் தன்னுள் கிளர்த்துவதாகவும், அந்தக் கசிவான மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே தான் தமிழில் படைப்புருவாக்கம் செய்ததாகவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாகப் புதுதில்லியில் வசித்து வரும் ’காவேரி’யைப் போன்ற ஒரு படைப்பாளியின் எழுத்துக்களில் அங்கு நிலவும் பன்னாட்டுப் பல மாநிலக்கலாச்சாரப் பாதிப்புக்கள் இருப்பது இயல்பானதே; அவை ஒரு புறமிருக்க , தில்லியில் வசித்த தி.ஜானகிராமன்,சிட்டி,இந்திரா பார்த்தசாரதி, கி.கஸ்தூரிரங்கன் போன்ற தமிழிலக்கிய ஜாம்பவான்களுடன் இவர் கொண்டிருந்த இலக்கியத் தொடர்பும், நட்பும் தனது தமிழ்ப்படைப்பிலக்கியத் திறனை கூடுதலாகக் கூர்தீட்டிக்கொள்ள இவருக்கு உதவியிருக்கின்றன. நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய நுட்பங்களையும் சூட்சுமங்களையும் அறிந்திருந்ததாலேயே தி.ஜாவின் ’மரப்பசு’, இ .பாவின் ‘திரைகளுக்கு அப்பால்’முதலிய ஆழமான நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது இவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது. இவரது சிறுகதைகள், கி.கஸ்தூரிரங்கன் , அசோகமித்திரன், தி.ஜானகிராமன் ஆகியோர் கௌரவ ஆசிரியர்களாகப் பணி புரிந்தபோது வெளியான ‘கணையாழி’ இதழ்களிலும்.கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’விலும்,அமுதசுரபி,கலைமகள் மற்றும் கோவை ஞானியின் ‘நிகழ்’இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. தனது சிறுகதைக்காக [சவ்யாயாசி சதுக்கம்] ‘இலக்கியச் சிந்தனை’விருதும் பெற்றவர் காவேரி.
காவேரியின் புனைவுலகம் தனித்தன்மை கொண்டதாக இருப்பதற்கான காரணம், வெவ்வேறான ’வகைமாதிரி’[types]களைக் கொண்டதாக அது இருப்பதே.
தான் ஒரு பெண் என்பதால் பெண்களின் சிக்கல்களை மையப்படுத்துவதோடு இவர் நின்று விடுவதில்லை. முதியோரின் தனிமை, மரணம் என்னும் நிகழ்வு மனிதனுக்குள் எழுப்பும் விடை தெரியாத வினாக்கள், வீட்டுப்பணியாளர்களாக,கடைநிலை ஊழியர்களாக,மீன்பிடிப்பவர்களாக வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சினைகள் ஆகிய பலவற்றையும் அவற்றின் அடியாழம் வரை துருவிப்பார்த்தபடி இவரது படைப்புக்கள் பதிவு செய்திருக்கின்றன.வெளிநாடுகள் பலவற்றில் நிகழ்ந்த சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்குகள், உறைவிடத் திட்டங்கள் , பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் எனப்பலவற்றில் பங்குபெற்ற செழுமையான அனுபவம் கொண்டிருக்கும் இவர் மிகவும் வேறுபாடான அந்தச்சூழலில் பெற்ற பல அனுபவங்களையும் கூடச் சிறுகதைகளாக்கியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘இருண்டதெல்லாம் பேய்’ என்னும் சிறுகதைக்கு ஐயோவா நாட்குறிப்பு என்ற பெயரும்  இடம் பெற்றிருப்பது அதனாலேதான்.  
திறந்த மனம் கொண்ட ஒரு படைப்பாளிக்கு அரிதான அனுபவங்கள் மட்டும்தான் வாய்க்க வேண்டுமென்பதில்லை. நடப்பியல் வாழ்வில் அவை எப்போதும் சாத்தியப்படுவதும் இல்லை.  ‘கதை மனம் மட்டும் வாய்த்து விட்டால் காணும் எல்லாக்காட்சிகளுக்குள்ளும் ஒரு கதையைக் கண்டறிந்து விட முடியும், பிறகு பார்வையில் படும் எல்லாமே நெஞ்சில் கதைப்பூக்களாய்ப் பூத்துச் சொரியத் தொடங்கி விடும்’ என்பார் ஜெயகாந்தன். அதே போலக் காவேரியின் எழுத்தும் கூட நம் அன்றாட வாழ்வில் - தெருவில்,கோயிலில், பயணத்தில் என்று...மிகச்சாதாரணமாகச் சிறு சிறு திவலைகளாகத்  தட்டுப்படும் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கூட ஓவியம் போன்ற அற்புதமான பதிவுகளாக்கியிருக்கிறது. குரல் எழ வழியில்லாமல் கோயிலில் தவிக்கும் சிறுவன் [ஓசைகள்],நடைபாதைக்கடையில் கொய்யாப்பழம் விற்பவன்[சிவப்புக்கொய்யா] என்று தான் பார்க்கும் எல்லாவற்றிலுமே ஒரு கதையைக் கண்டடைந்திருக்கிறார் ‘காவேரி’.
பெண் எழுத்தாளர்கள் பலரைப் போலக் ‘காவேரி’யும் ஒரு பெண்ணியவாதியே; ஆனால் அப்படிப்பட்ட  ஒரு பிரகடனத்தை எங்கும் காட்டிக்கொள்ளாத - பாலின சமத்துவத்தை மட்டுமே நாடும் ஒரு நடுநிலைப் பெண்ணியவாதியாகவே தன் படைப்புக்களில் அவர் வெளிப்பட்டிருக்கிறார். ‘முனியக்கா’ போன்ற அடித்தட்டுப்பெண்கள், குடும்ப வாழ்வில் சமத்துவம் கோரும் பத்மினி  போன்ற நடுத்தர வர்க்கத்துப்பெண்கள் [இந்தியா கேட்], அயல்மண்ணுக்குச்சென்று இலக்கியம் படைக்கும் லட்சுமியைப் போன்ற அறிவுஜீவிப்பெண்கள்[‘இருண்டதெல்லாம் பேய்’] ,பரந்த வெளியின் கட்டற்ற விடுதலையை நாடும் ஆன்மீகத் தேடல் கொண்ட காயத்ரிகள்  [ஆத்துக்குப்போகணும்] என்று பல தளங்களிலும், வர்க்கங்களிலும்,அறிவுநிலைகளிலுமான பெண்கள் இவரது படைப்புக்களில் உலவுகிறார்கள்; ஆனால் எந்த மட்டத்தில் இருக்கும் பெண்ணுக்கும் முழுமையான விடுதலை என்பது இன்னும் கூட நிறைவு பெறாத ஒரு வெறுங்கனவாகத்தான் இருக்கிறது என்ற தன் முடிவையே, இந்தப் பாத்திரங்கள் வழி வாசகப்பார்வைக்கும்,சிந்தனைக்கும் அடங்கிய குரலில் முன்  வைக்கிறார் ;காவேரி’.
நோபல்பரிசு பெற்ற இருப்பியல்வாதியான   சால்பெல்லோவின் படைப்புக்களை ஆய்வு செய்தமைக்காக ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற காவேரி’யிடம் இருப்பியல்வாதத்தின்.சாயல்களையும் காண முடியும்;குறிப்பாக  அவரது  ’ஆத்துக்குப்போகணும்’ நாவல்  பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை  எழுப்பியிருப்பது ஆழ்ந்த வாசிப்பின்  அவதானத்துக்குரியது. முதியவர்களைப்பாத்திரங்களாகக்கொண்டிருக்கும் அவரது வேறு சில சிறுகதைகளிலும்[சவ்யாயாசி சதுக்கம்] ‘எக்ஸிஸ்டென்ஷியலிச’த்தின் பாதிப்பைக்காண முடியும். ’நம் சமூக வரலாற்றையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் ஒரு புதிய தெளிவான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான வரலாற்றுத் தேவை’என மார்க்சியம் பற்றிக்கருதும் ‘காவேரி’யின் ஆக்கங்கள் சிலவற்றில்[திருவாலீசுவர நடராசர் முறுவலித்தார்,முகம்]அதன் தாக்கத்தையும் காண முடியும். இவ்வாறு பெண்ணியம்,மார்க்சியம், இருப்பியல்வாதம் எனப் பலவகைப்பட்ட ’இச’ங்களை அவற்றின் ஆக்கபூர்வமான கூறுகளோடு வரவேற்று , அவற்றின் கலை வெளிப்பாடாகத் தன் சிறுகதைகள் சிலவற்றையும் உருவாக்கியிருந்தாலும் குறிப்பிட்ட எந்தக்கோட்பாட்டுச் சிமிழுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்திக்கொள்ளாமல் படைப்பியக்கத்தில் அதன்  பூரண சுதந்திரத்தோடு இயங்குபவராகவே இருக்கிறார் ‘காவேரி’. எந்த உள்ளடக்கத்தை முன் வைத்தாலும் ’குரலை உயர்த்தாமல்,தணிந்த சொல் லாவகத்துடன்,கலைநயம் மிளிர’எழுதுபவர் என்று இவரது தொகுப்பு நூல் ஒன்றின் முன்னுரையில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டிருப்பதற்கு இவர் முற்றிலும் பொருத்தமானவர் என்பதை இவரது புனைவுலகில் பயணிக்கும்போது அறிந்து கொள்ள முடியும்.
அடிப்படையில் ஒரு கவிஞரான ‘காவேரி’யின் சிறுகதைச்  சொல்லாட்சிகளிலும்,வருணனைகளிலும் கூட இவரது கவித்துவம் தன்னையறியாது பீறிட்டு வெளிப்படுகிறது; அங்கதச்சுவையோடு கதை கூறும் பாணியும் இவருக்குக் கை வந்திருக்கிறது.. சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் அம்மன் சிலை ஒன்று தன்னைத்தானே பிரதிஷ்டை செய்து கொண்டு விடுவதாக இவர் படைத்திருக்கும் ’தேவி வந்தாள்’ என்னும் சிறுகதை இவரது சமூக எள்ளலுக்கு சாட்சி பகரும் படைப்பு.
ஆங்கிலம்,தமிழ் என இரு மொழிகளிலும் ஒரே வேளையில் எழுதியபடி தன் தமிழ்க்கதைகளைத் தானே ஆங்கிலத்தில் பெயர்த்து வெளியிட்டிருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் காவேரி. இவர் எழுதும் ஆங்கிலக் கவிதைகளும், பாலின வேறுபாடு, பின் காலனீயம், மொழியாக்க நுட்பங்கள் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்ட இவரது பல ஆய்வுக் கட்டுரைகளும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலிருந்து வெளிவரும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் இப்போதும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
‘’சில சமயம் என் கண் முன் ஏதோ ஒரு ஒளி பளிச்சிடுகிறது...கணநேரம் பளிச்சிட்டு மறையும் அந்த ஒளியை நான் எழுத்தில் சிறைப்பிடிக்க முயல்கிறேன்....மின்னி மறையக்கூடிய அந்த ’ஒன்றை’ மறையாமல் அழியாமல் பதிவு செய்யும் முயற்சியாகவே நான் எழுதுகிறேன்’’ என்று திருமதி ‘காவேரி’லட்சுமி கண்ணன் குறிப்பிடுவது ’உன்னதமான கணங்களை நித்தியத்துவப்படுத்த’த் துடித்த லா ச ராவின் தேடலையே நினைவூட்டுகிறது.தன் உள்ளொளியின் வழிகாட்டுதலில் கவிதை,சிறுகதை,நெடுங்கதை,நாவல்,மொழியாக்கம் என்று தன் நெடிதான  இலக்கியப்பயணத்தைத் தொடர்ந்து வரும் ‘காவேரி’யின்  முத்தான பத்துக் கதைகளைத் தேர்ந்தெடுத்து அமிர்தா பதிப்பகம் வெளியிடுவது அந்தப்படைப்பாளியின் நீண்ட நாள் இலக்கியப்பணிக்குத்  தரப்பட்டிருக்கும்  மிகவும் பொருத்தமான  ஓர் அங்கீகாரம். அத்தகையதொரு வெளியீட்டை முன்னெடுத்திருக்கும் அமிர்தா பதிப்பகத்துக்கும், என் அன்புக்குரிய இலக்கியத் தோழியும் சகோதரியுமான ‘காவேரி’யின் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்புக்கு முன்னுரை வழங்குமாறு அன்போடு என்னைப்பணித்திருக்கும் என் மதிப்புக்குரிய எழுத்தாளரான திருமதி திலகவதி அவர்களுக்கும் என் நெகிழ்வான நன்றிகள்.
எம்.ஏ.சுசீலா

14.8.15

எழுத்தென்னும் சிற்றகல்...


நான் செய்து வரும் தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு வரிசையில்

                                                குற்றமும் தண்டனையும்,


                                                               அசடன்

என்னும் இரு பெரும் நாவல்கள் முன்பு வெளிவந்தன.

தற்போது  மூன்றாவதாக 
‘’'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'’’
என்னும் குறுங்கதை மொழியாக்கத் தொகுப்பு நற்றிணை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

அதற்கு நான் எழுதியுள்ள முன்னுரை......

எழுத்தென்னும் சிற்றகல்...

மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. 

தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே. தனது மிகப்பெரிய நாவல்களில் மட்டுமன்றி சிறுகதைகள்,குறுநாவல்கள் ஆகியவற்றின் வழியாகவும் கூட சாமானியர்களின் வாழ்விலிருந்து நாம் பெறக்கூடிய மாபெரும் தரிசனங்களை அவர் நமக்குக்காட்சிப்படுத்தி விட்டுப்போயிருக்கிறார். அத்தகைய சில படைப்புக்களை என் ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பில் தொகுப்பாக்கி வெளியிடுவதில் குறிப்பான ஆர்வம் காட்டி என்னையும் அச்செயலில் விரைவாக முனைவதற்குத் தூண்டிய நண்பர் திரு யுகன் அவர்களுக்கும் இந்நூலை சிறப்பாக வெளியிடும் அவரது நற்றிணை பதிப்பகத்தார்க்கும் என் நன்றி

13.8.15

'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'-புதிய நூல்




நான் ஆங்கில வழி மொழியாக்கம் செய்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் குறும் படைப்புக்கள் சிலவற்றை
'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'என்னும் தலைப்பில் நூலாகத் தொகுத்து சென்னையிலுள்ள நற்றிணை பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வாண்டு வெளியாகி இருக்கும் என் புதிய நூல் இது.

நூலில் தஸ்தயெவ்ஸ்கியின் 
HONEST THIEF,
GENTLE CREATURE,
CHRISTMAS TREE AND A WEDDING
ஆகிய மூன்று கதைகளின் மொழியாக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் இரண்டும் கிட்டத்தட்ட குறு நாவல்கள்,
மூன்றாவது படைப்பு சிறுகதை

அதன் இணைப்பு
கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்
http://www.masusila.com/2012/03/1_21.html
http://www.masusila.com/2012/03/2_21.html

30.7.15

பாத்திமாவின் சாகுந்தலம்

பாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின்                                                           சிற்பி இவர்...


மதுரை பாத்திமாக் கல்லூரியின் முதல் முதல்வராய்ப் பெண்கல்விக்குப் பெரும் பணியாற்றிய பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள் 29/7/15 காலையில் தான் மிகவும் நேசித்த மதுரை மண்ணிலேயே இயற்கை எய்தி விட்டார்கள். அவர் ஏற்றிய தீபங்களாய் உலகெங்கும் பரவிக்கிடக்கும் மாணவச்செல்வங்களோடும் சக ஆசிரியைகளோடும் இத் துயரச்செய்தியைக்கண்ணீர் மல்கப்பகிர்ந்தபடி அவர்களுக்கு என் நெகிழ்வான அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்....

பேராசிரியை செல்வி சகுந்தலா 

பெண்கல்வி தலைதூக்கித் தழைக்கத் தொடங்கியிருந்த இந்திய விடுதலையை அடுத்த காலகட்டம். பெண்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வது இயல்பான நடப்பாக மாறிப்போகத் தொடங்கியிருந்தாலும் சுற்றிலும் கிராமங்கள் மொய்த்துக்கிடந்த மதுரையைப்போன்ற ஓரிடத்தில் வாழ்ந்த பெண்கள் பலருக்கும் உயர்கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. அந்தக்காலகட்டத்தில் மிஷினரிகளான வெளிநாட்டுப்பெண் துறவிகளின் பணி இத் துறையில் மகத்தான பங்களிப்பைச்செய்தது. குறிப்பாகப் புனித வளனாரின் லியான்ஸ் பிரிவைச்சேர்ந்த அன்னை ரோஸ் அவர்களும் அவருக்குத் துணை நின்ற அயல்நாட்டு, மற்றும் இந்தியப்பெண் கத்தோலிக்கத் துறவிகளும் மதுரையிலும் மதுரை சார்ந்த பகுதிகளிலும் பெண்கல்வியைப் பரவலாக்குவதில் தங்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக அரும்பணி ஆற்றியபடி இருந்தனர், மதுரை வீதிகளில் கால்நடையாக…..வீடு வீடாகச்சென்று பெண்களைக் கல்வி பயில அனுப்புமாறு தூண்டுதல் தந்து கொண்டிருந்தார் அன்னை ரோஸ்.
அன்னை ரோஸ்
 அந்த முயற்சியின் முதல் படியாக உருவான புனித வளனார் உயர்நிலைப்பள்ளியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் தொலை நோக்குடன் அவர் கண்ட கனவால் அயரா உழைப்பால் பிறந்ததே இன்று மதுரையின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனமாகப்பெயர் பெற்று மதுரை மாநகரின் ஓர் அடையாளமாகவே விளங்கும் பாத்திமா கல்லூரி. 

தான் விரும்பிய நிறுவனத்தைத் தொடங்கியதோடு தன் கனவு மெய்ப்பட்டு விட்டதாக அமைதியுறாத அன்னை ரோஸ் அதை மேலும் மேலும் அர்ப்பணிப்போடு வளர்த்துச்செல்லும் சீரிய தலைமைக்கும் தகுந்த ஒரு நபரைத் தேர்ந்து தெளிந்தார். அவர் கண்டெடுத்த நல்முத்தாக….வாராது வந்த மாமணியாக மதுரைக்கு வாய்த்தவரே பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்கள். கத்தோலிக்க நிறுவனம் ஒன்றில் ஓர் இந்துவை முதல்வராக்குவதில் அன்னைக்கோ பிற அருட்சகோதரிகளுக்கோ அன்று எந்த விதமான மனத் தடையும் இல்லை; இன்று பாத்திமாக்கல்லூரி எட்டியிருக்கும் உயரங்களுக்குக் காரணம்  மதம் கடந்த அந்தச் சமூக இலக்கு மட்டுமே.

அன்னை ரோஸ் கண்ட கனவுகளுக்காகவே தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவராய், அவரது நோக்கங்களின் நிறைவேற்றங்களை மட்டுமே தன் வாழ்நாளின் ஒரே இலட்சியமாய்க்கொண்டவராய் அந்த நொடி முதல் பாத்திமாக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மட்டுமே தன் வாழ்வைத் தத்தம் செய்து கொண்டார் பேராசிரியை செல்வி சகுந்தலா . தனக்கென ஒரு வாழ்க்கை, தனக்கெனக் குழந்தைகள் என எந்த வகையான சொந்தத் தேடல்களும் பந்தங்களும் அற்றவராய்ப் பாத்திமா பூமியையும் அங்கே சஞ்சரிக்கும் மாணவிகள்,ஆசிரியைகள்,அருட்சகோதரிகள் ,பணியாளர்கள்,ஆகியோரை மட்டுமே தன் சுற்றமாக்கிக்கொண்டார். 1953இல் தொடங்கிய அந்தத் தியாக வேள்வி 1983 வரை-  அவர் பணி நிறைவு பெறும்வரை 30 ஆண்டுக்காலம் அயராது ஓய்வின்றித் தொடர்ந்தது.

அந்தக் காலகட்டத்தில் பதின்மூன்று ஆண்டுகள் அந்த அரிய முதல்வரோடு நெருக்கமாய்ப்பழகவும், அவரால் பயிற்சியளிக்கப்படவும் நான் பேறு பெற்றிருந்தேன் என்பதைக் கண்கள் பனிக்க எண்ணியபடி அவர்கள் இறைவனோடு ஒன்றிக்கலந்து விட்ட இந்தத் தருணத்தில் அவர்களோடான  என் எண்ண அலைகளை.....நெகிழ்ச்சி,துயரம்,பெருமிதம் எனக்கலவையான பல உணர்வுகளோடு என் உள்நெஞ்சிலிருந்து மீட்டெடுக்கிறேன்…

நான் பணியாற்றியதுதான் பாத்திமாவிலேயே தவிர நான் அந்தக்கல்லூரி மாணவி இல்லை.என்றாலும் என்னை நானாகச்செதுக்கி வடிவமைத்து ஒரு முழுமை பெற்ற தன்னுணர்வு கொண்ட பெண்ணாக ஆக்கியது பாத்திமா மண்ணும் அதன் முதல்வர் பேராசிரியை செல்வி சகுந்தலா அவர்களும் மட்டுமே என்பதை பாரதி போல நான் நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்...  

1970இல் இளம் தமிழ் விரிவுரையாளராக நான் பாத்திமாக் கல்லூரியில் அடியெடுத்து வைத்தேன் . அப்போது கிராமமாகவோ  நகரமாகவோ இல்லாத சிற்றூராக மட்டுமே இருந்த காரைக்குடியில் முதுகலைத் தமிழ்க்கல்வி முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்திருந்த என்னை....பள்ளிக்கல்வியைத் தமிழ்வழிக்கல்வியாகக் கற்றிருந்த என்னை மதுரையே ஒரு பேரூராக மிரட்டிக்கொண்டிருந்தது.

முதுகலைத் தமிழில் மிக நல்ல மதிப்பெண்ணோடு பல்கலைக்கழக மூன்றாமிடத்தைப் பெற்றவளாக இருந்தாலும்  உலக அநுபவம்,வாழ்க்கைக்கல்வி ஆகியவற்றை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத முதிர்ச்சியற்ற 21வயதுப்பெண்ணாக ....மனதளவில் அதை விடவும் இளையவளாக....பலரும் கலந்து பழகும் இடத்திலிருந்து கூச்சம் கொண்டு விலகிச் செல்பவளாக மட்டுமே அப்போது நான் இருந்தேன்...
தமிழ்வழிக்கல்வி பயின்றாலும் என் அம்மா தலைமை ஆசிரியை என்பதால் வீட்டில் என் ஆங்கிலப்பின்னணி வலுவாகவே இருந்தது,ஆனாலும் கூடப் பேச்சு மொழியாக  ஆங்கிலத்தைக் கையாளுவதில் எனக்கிருந்த இனம் புரியாத கூச்சமே என்னைப் பிறரிடமிருந்து ஒதுங்கிப்போகச் செய்து கொண்டிருந்தது. 

ஆசிரியப்பணியில் அளவு கடந்த ஆர்வம்...தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட கரை காணாக்காதல்...அதை மாணவரிடையே முழு வீச்சோடு கொண்டு  சேர்க்கும் துடிப்பு,ஏதோ கொஞ்சம் சொற்பொழிவாற்றும் சக்தி இவை மட்டுமே அப்போதைய என் தகுதிகள்;  பாத்திமாவின் படிகளில் கால்வைக்கும் வரை அவை தவிர வேறு எந்த ஆளுமைத் திறனும் அற்றவளாக மட்டுமே இருந்த என்னை உருவாக்கிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா அவர்கள்..

அப்போது புகுமுக வகுப்பு எனப்படும் பி யூ சி மாணவர்கள் பலரும் தமிழ்வழி படித்தவர்களாக இருப்பார்கள் என்பதால் ஆங்கிலத்துக்குப்பாலம் போடுவது போல முதல் ஒரு மாதம் அடிப்படை ஆங்கிலம்,ஆங்கில இலக்கணம் ஆகியவற்றை ஆங்கில ஆசிரியர்கள் மட்டுமன்றி வேறுதுறை ஆசிரியர்களும் கூட நடத்துவதுண்டு[BRIDGE COURSE] ;அப்படி ஒரு வகுப்பை எடுக்க என்னையும் என் தமிழ்த்துறைத் தோழி இன்னொருவரையும் பணித்தார் முதல்வர்.என் தோழியாவது சென்னையில் பயின்றவர்,ஆங்கிலத்தில் சரளமாகப்பேசுபவர்..ஆங்கிலம் பேசவே அஞ்சிக்கொண்டிருந்த நான் எப்படி...? அழுத கண்ணீரோடு முதல்வர் முன் நின்ற என்னை’எனக்குத் தெரியாது,உனக்கு இந்த வேலை தரப்பட்டிருக்கிறது நீதான் செய்தாக வேண்டும்’என்ற கட்டளை பிறந்தது. அதை முனைந்து செய்து சிறப்பாகவும் முடித்ததும் என் மீதே எனக்கு நம்பிக்கை பிறக்க நான் புதிதாய்ப்பிறந்தேன்....
இது பதச்சோறான ஒரு உதாரணம்மட்டுமே..
நீச்சல் கற்க அஞ்சுபவனை நீர்நிலைக்குள் தூக்கிப்போடுவது போல எந்த வேலைக்கெல்லாம் அச்சம் வருமோ அந்தப்பணியில் முதல் ஆளாய்த் தூக்கிப்போட்டுப் பழக்கி விடுவது அவருக்கே கை வந்த அருங்கலை. 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்குக் கொடுக்க மதுரைப் பழ மண்டியில் போய் மொத்தமாய் ஆப்பிள் வாங்குவது முதல் ஆசிரியர்களுக்கான உணவகத்துக்கு அன்றாட மெனு தந்து நிர்வகிப்பது வரை.-.

விடுதியில் இருக்கும்போது விடுமுறை நாட்களில்  ஊருக்குக்கூடச்செல்லாமல் சித்திர குப்தன் பதிவேடு என்று எங்களால் செல்லமாய்ச்சொல்லப்படும் பதிவேட்டில் மொத்தக்கல்லூரி மாணவிகளின் மதிப்பெண்களையும்  பதிந்து வைப்பது முதல் தேசிய சேவைத் திட்டம் , வயது வந்தோர் கல்வித் திட்டம் ஆகிய பலவற்றின் பொறுப்பாளராக நிர்வாகம் செய்வது வரை  ஆசிரியர்களான எங்களுக்கு முதல்வர் அளிக்காத பயிற்சி இல்லை.

கல்லூரி வாயிலில் காரை நிறுத்திக்கொண்டு என்னையும் இன்னொரு பேராசிரியையும் அழைப்பார்;கார் நகர்ந்த பின்பே ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைத்துச்செல்கிறார் என்பது தெரியும்..தலைப்பும் கூட அப்போதுதான் தரப்படும்..
இது எப்படி சாத்தியம் என்றால்....உன்னால் முடியும் என்பார்..அது பலிதமாகவும் செய்யும்...அதுதான் அவர்...அதுதான் பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!

என்னிடம் ஏட்டுச்சுரைக்காயாய் மட்டுமே இருந்த கல்வி பட்டை தீட்டப்பட்டு என்னைப் பற்றியும் என்னுள் உறைந்து கிடக்கும் வேறு பல திறன்களைப்பற்றியும் நானே உள்ளபடி அறியவும் என் ஆளுமைமுழுமை பெறவும் உதவியவராய் என்னை இன்றைய நானாகச் செதுக்கிய சிற்பி பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!


நான் கதை எழுதத் தொடங்கி என் முதல் சிறுகதை 1979இல் ’அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டி’யில் முதல் பரிசு பெற்ற காலத்தில் என்னைக்கொண்டாடி வரவேற்றது தொடங்கி என் அண்மைய நாவலான ‘யாதுமாகி’வரை என் முதன்மையான  வாசகராக இருந்தவர்  என் நேசத்துக்குரிய பேராசிரியை முதல்வர் சகுந்தலா !!
’80களில் பல தமிழ் வார இதழ்களிலும் என் சிறுகதைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தபோது அவை பற்றி நான் அறியும் முன்பேஅவர் படித்து முடித்து விட்டு அன்றைய காலையை அது பற்றிய அவரது விமரிசனங்களோடு தொடங்கிய இனியநாட்கள் பல என்னுள்சேமிக்கப்பட்டிருக்கின்றன. சென்ற மாதம் அவர் இறுதிப்படுக்கையில் இருந்தபோது மதுரையில் அவரைக்காணச் சென்றஎன்னிடம் ‘சுசீலா’என்று கூட பெயர் சொல்லி அழைக்காது’யாதுமாகி’என என் நாவல் பெயர்சொல்லி நெகிழ்ந்தபடி என்னை ஆரத் தழுவிய கரங்கள் அவருடையவை.

அறிவியல் பேராசிரியராக அவர் இருந்தாலும் தமிழ்மீது அவர் கொண்டிருந்த பற்று அளப்பரியது.எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாக்களில் அவர் காட்டிய முனைப்பும், கி வா ஜ தொடங்கி குமரி அனந்தன்,கண்ணதாசன், ஜெயகாந்தன்,லா ச ரா எனப் புகழ் பெற்ற தமிழ் ஆளுமைகளைக்கல்லூரிக்கு வருவித்து அவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில் காட்டிய முனைப்பும் மாணவர்களின் பல்துறை வளர்ச்சியில் அவர் காட்டிய கரிசனத்தின் அடையாளங்கள்.

மாணவர் நலனும் உயர்வும் மட்டுமே அவரது உயிர்மூச்சாய் அவரின் சுவாசமாய் இருந்து வந்தது கண்டு நான் வியந்து பணிந்திருக்கிறேன்....கல்விக்கூடத்தில் கழிக்கும் நாட்களில் மாணவியர் உச்ச பட்ச அறிவைப் பெற்று விட வேண்டுமென்ற துடிப்போடு  ஆசிரியர்களையும் அது நோக்கி அவர் உந்தியபடி இருந்தபோது கடுமையின் தெறிப்புக்கள் அதில் இருந்திருக்கலாம்....ஆனால் தான் ஊட்டும் உணவின் முழுப்பயனும் தன் மகவை அடைந்தேஆக வேண்டும் என்ற தாய்மையின் ஆவேசம் அது என்பதைப்புரிந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அவர் மீது புகார் ஏதும் இருக்க முடியாது.

ஆயிரக்கணக்கில் இருக்கும் மாணவிகளின் பெயரை மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்து உரையாடும் அவரது ஆளுமைத் திறன் அந்தப்பொறுப்பில் இருப்போர் பயின்றாக வேண்டிய ஒன்று.[தலைமை ஆசிரியையாய் இருந்த என் தாய்க்கும் இதே பண்பு இருந்திருக்கிறது..அதில் மட்டும் நான் என்னவோ சற்று ஞாபக மறதிப் பேர்வழிதான்]

கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஒரு அறையில் தங்கியிருந்த அவர் காலை 7 மணிக்கெல்லாம் கல்லூரி அலுவலகம் வந்துசேர்ந்து விடுவார்...இரவு 7 மணி..சில நேரங்களில் 9 மணி வரை அவரது இருப்பு அங்கே நீளுவதுண்டு.சோர்வோ களைப்போ சற்றும் இன்றி ....நறுவிசாக அணிந்து வந்த உடையிலோ,கூந்தல் முடிப்பிலோ எந்த ஒரு சிறு நலுங்கலும் இல்லாமல் புதுமலர் போல அவர் பொலிவதைக் காணும்போது மனதுக்குப்பிடித்ததைஉற்சாகமாக மனமொன்றிச்செய்யும் தவமுனிவராக அவர் தீட்சண்யத்தோடு துலங்குவதாய்த் தோன்றும்.

கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர்களைப்பொதுவாக இன்றைய மாணவ உலகம் விரும்புவதில்லை; ஆனால் எந்த அளவு கண்டிப்பாக இருந்தாரோ அதற்குப்பல மடங்கு மேலாகத் தன் மாணவச்செல்வங்களால் நேசிக்கப்படுபவராகவும் இருந்திருக்கிறார் முதல்வர் சகுந்தலா .இது அவரது அணுகு முறையை உள்ளபடி விளங்கிக்கொண்டதால் அவரது மாணவியர்  அவருக்களித்த வரம்.

எம் ஃபில் பி எச்டி என்று உயராய்வு மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உந்துசக்தியாக விளங்கினாரே தவிர  தனக்கென வாழாப்பெருந்தகையான அவர் எம் எஸ்சிக்குப்பிறகு தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒருபோதும் நினைக்கவே  இல்லை....அவரது மூச்சும் முனைப்பும் பாத்திமாவை மேம்படுத்துவது மட்டுமே....

சகுந்தலா அவர்களின் கலை அழகியல் ரசனைகளைச் சொல்லிக்கொண்டே போக முடியும்.கல்லூரி விழாக்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது முதல் மாக்கோலம் போடுவது வரை அவரது பார்வை எல்லைக்குள்ளேதான் நடக்கும்; ...இனிய உணவு...இனிய இசை நல்ல கலைகள் இவற்றை ரசித்துத் தோயும் அவர் அந்த வேளைகளில் சிறு பிள்ளையாகி விடுவதும் உண்டு.

இன்னும் சொல்லநினைப்பது ஏராளம்....
சொற்கள் மயங்கித் தயங்கி நிற்கின்றன...
நான் அறியாத பல நுணுக்கமான பல செய்திகள் அவரது நேரடியான மாணவியருக்கு இன்னும் கூடத் தெரிந்திருக்கக்கூடும்...
ஆனாலும் நானும் கூட அவரதுமாணவியாக என்னை எப்போதும் கருதிக்கொள்பவள் மட்டுமே...

பாத்திமாவில் பணி நிறைவுக்குப்பின் திருச்சி காவேரி கலைக்கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராய்ப்பணியாற்றிப்பிறகு சமூகப்பணிகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அவர்.

எங்கள் கல்லூரிப்பொன்விழாவின்போது எடுத்த ஒரு குறும்படத்துக்காக அவரை நேர்காணச்சென்றபோது அவரது வாழ்க்கையையே ’சாகுந்தலம்’என்ற தலைப்பில் குறும்படமாக எடுக்க வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் வெளியிட்டேன்;அதை நிறைவேற்றுவதற்கு முன் காலம் அவரைக்கவர்ந்து சென்று விட்டது.

பாரதத்தின் சிற்பி மேதகு அப்துல் கலாம் என்றால் எங்கள் பாத்திமாவின் சிற்பி இவர்...இருவருமே இளைஞர் நலனை உயிரெனக் கொண்ட தன்னலம் துறந்த பெருந்தகையாளர்கள்.......இருவரது இறப்பும் ஒருசேரத் தாக்க உறைந்து நிற்கிறேன்...

காவியங்களுக்கு என்றும் எப்போதும் அழிவில்லை,
எங்கள் பாத்திமாவின் சாகுந்தலமும் அவர் ஏற்றி வைத்த சுடர்களாய் ஒளிரும் மாணவச்செல்வங்கள் வழி தொடர்ந்து அவரது பணியை முன்னெடுத்துச்சென்று பாத்திமாவின் புகழைப்பாரெங்கும் கொண்டு செல்லும்... .

எங்கள் இனிய சாகுந்தலம் இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.
என் கை கூப்புக்களும் அஞ்சலியும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....