துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.12.17

மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்


மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்
மணல் வீடு இலக்கிய வட்டத்தின் பொறுப்பாளரான திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
சீரிய  எழுத்துச் செயற்பாட்டுக்கான எழுத்தாளர்  ராஜம்  கிருஷ்ணன்  நினைவு  இலக்கியவிருதுக்கு நான் தேர்வாகி இருப்பதாகவும்
ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று விருதை ஏற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

நான் ஆழ்ந்த மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர், அமரர் திருமதி ராஜம் கிருஷ்ணன். அவரது பெயரால் வழங்கப்படும் இந்த விருதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்வதோடு அதற்கு  உரியவளாக என்னை மேலும்  தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும்  எண்ணுகிறேன்.

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெறும் மக்கள் கலை இலக்கிய விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மணல் வீடு இலக்கிய அமைப்புக்கும் களரி தொல்கலை மேம்பாட்டு மையத்துக்கும் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றி.

விருது பெறுவோரின் பட்டியல்,
அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ்
மணல் வீடு இலக்கிய வட்டம், முன்னோடிப் படைப்பாளுமைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருது வழங்கி கவுரவித்துவருகிறது.
அந்த அமைப்பின் சார்பாக வழங்கப்படும் 
அஃக் பரந்தாமன் நினைவு விருதுக்கு 
சௌந்திர சுகன் இதழும், 
கவிஞர் சி.மணி நினைவு விருதுக்கு என்.டி.ராஜ்குமாரும், 
நாவலாசிரியர் ப.சிங் காரம் நினைவு விருதுக்கு நக்கீரனும், 
கு.அழகிரிசாமி நினைவு விருதுக்கு அழகிய பெரியவனும், 
ராஜம் கிருஷ்ணன் நினைவு விருதுக்கு எம்.ஏ. சுசீலாவும், 
ஓவியர் கே.எம். கோபால் நினைவு விருதுக்கு ஓவியர் ஷாராஜும், 
நிகழ்த்துக் கலைஞர்களுக்கான அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருதுக்கு 
கூத்துக்கலைஞர் மட்டம்பட்டி பழனியும் 
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
விருது வழங்கும் விழா ஜனவரி 6-ம் தேதி ஏர்வாடியில் நடக்கவிருக்கிறது. 

மேலும் விருது பெறுபவர்கள்....

மக்கள்  கலை இலக்கிய விழா  -  2018

நிகழ்விடம்  -  ஏர்வாடி  , மேட்டூர்

நாள்  - 06-01-2018

நேரம்  - பிற்பகல்  2.30  மணிக்கு

அமர்வு  - 1 களரி கூட்டல்

மிருதங்கம்-நடராஜன் –அம்மாபேட்டை  
முகவீணை-குமார்-நாகமரை

அமர்வு  2 நூல்  வெளியீடு -  பிற்பகல்  3.00 மணிக்கு

பரிசோதனை  சிறுசஞ்சிகை  - வே . நி . சூர்யா
தொக்கம்  -2  சிறுசஞ்சிகை -    திடவைவேசர்
பிரதியின் நிர்வாணம் - சிறுகதைகள் - லைலா  எக்ஸ்
எழுத்தும்  நடையும்  - சி . மணி  படைப்புகள் - தொகுப்பாக்கம் -காலசுப்ரமணியன்

அமர்வு - 3  இலக்கிய  விருதுகள் - பிற்பகல் 3.30  மணிக்கு

சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு  இலக்கியவிருது -  சௌந்திர  சுகன்

கவிதைக்கான  சி. மணி நினைவு  இலக்கியவிருது  - என். டி  ராஜ்குமார்

நாவலுக்கான   ப. சிங்காரம்  நினைவு  இலக்கியவிருது-  நக்கீரன்  

சிறுகதைக்கான  கு அழகிரிசாமி  நினைவு  இலக்கியவிருது-  அழகிய பெரியவன்

சீரிய  எழுத்து செயற்பாட்டுக்கான எழுத்தாளர்  ராஜம்  கிருஷ்ணன்  நினைவு  இலக்கியவிருது -  எம் .ஏ . சுசிலா
நுண்கலைகளுக்கான  ஓவியர் கே . எம்  கோபால்  நினைவு  விருது-  ஷாராஜ்

நிகழ்வில்

பால் சக்கரியா  பிரம்மராஜன்  ஜீவானந்தம்   நாஞ்சில்நாடன்  பொ.வேலுசாமி இமயம்   ஆதவன்  தீட்சண்யா  சமயவேல்   மோகனரங்கன்  இரா.நடராசன் குலசேகரன்

அமர்வு -4-   மாலை  5   மணிக்கு

கலைஞர் பெருமக்களுக்கு விருது -பரிசு-பாராட்டு -கௌரவிப்பு

கூத்துச்செம்மல் விருது பெறுவோர்

பெருமாள்  -  முகவீணைக்கலைஞர்    - ஆலமரத்தூர்
ரத்தினம்  -கூத்துக்கலைஞர்- கொக்கராயன்பேட்டை
செல்வம்  --கூத்துக்கலைஞர்-   எலச்சிபாளையம்
ரமேஷ்   - கூத்துக்கலைஞர் -  முதுகம்பட்டி
சத்தி -கூத்துக்கலைஞர்- முதுகம்பட்டி
முருகன்  - கூத்துக்கலைஞர் - முதுகம்பட்டி
செந்தில்  - கூத்துக்கலைஞர் - முதுகம்பட்டி
மாதேஷ் - கூத்துக்கலைஞர்- கோவிந்தப்பாடி
ஆறுமுகம்  -கூத்துக்கலைஞர்-  வத்தல்பட்டி
ரவி -முகவீணைக்கலைஞர் - பள்ளிப்பட்டி
கொழந்தை  - கூத்துக்கலைஞர் - ஒண்டிக்கடை
ராஜமாணிக்ககம்  - கூத்துக்கலைஞர் - ஆரூர்ப்பட்டி
நல்லதம்பி -கூத்துக்கலைஞர் - சாத்தப்பாடி
அம்பேத்கர் - கூத்துக்கலைஞர் -மோடமங்கலம்
வடிவேல் - கூத்துக்கலைஞர் - திருச்செங்கோடு
கோவிந்தன் -கூத்துக்கலைஞர் - மூலக்காடு
மூர்த்தி - மிருதங்க கலைஞர் - கொங்குப்பட்டி

கலைச்சுடர் விருது பெறுவோர்

இந்து  -கூத்துக்கலைஞர்- தோப்பூர்
தனுஷ் -மிருதங்கக் கலைஞர் - அண்ணாநகர்
விஷவா - மிருதங்கக் கலைஞர்- எளச்சிப்பாளையம்  
மகேஷ் - கூத்துக்கலைஞர் - பருவாச்சி  
அவந்திகா - கூத்துக்கலைஞர் -திருச்செங்கோடு
தனபால் -கூத்துக்கலைஞர் -இருசாகவுண்டன் புதூர்   
மகேந்திரன்  - கூத்துக்கலைஞர் - இருசாகவுண்டன் புதூர்
கார்த்திக் -   கூத்துக்கலைஞர் -திருச்செங்கோடு

கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்

அஸ்வினி  - கூத்துக்கலைஞர்  -  அந்தியூர்
அமரர்  துரைசாமி  வாத்தியார்  நினைவு  விருது

தங்கவேல் - மிருதங்கக்கலைஞர் - செல்லமண்டி
ராஜு - மிருதங்கக்கலைஞர்- பள்ளிப்பட்டி

அமரர்  குரும்பனூர் காளி வாத்தியார்  நினைவு  விருது
அர்ஜுனன்  - கூத்துக்கலைஞர்  - அண்ணாநகர்   .
முனுசாமி   -கூத்துக்கலைஞர் - இலுப்புளி
சின்ன ராசு  - கூத்துக்கலைஞர்- துத்திப்பாளையம்
வீராசாமி  -  கூத்துக்கலைஞர் - எலிமேடு
முனுசாமி   -கூத்துக்கலைஞர் - நல்லூர்

அமரர் சடையன் வாத்தியார்  நினைவு விருது
பழனி - கூத்துக்கலைஞர் – மட்டம்பட்டி

நிகழ்வில்

சுப்ரு வாத்தியார்  மக்குமாணிக்கம்  மாணிக்கக்கம்பட்டி  கணேசன்     செ.ரவீந்திரன் ,
இரா .காமராசு  ந .மம்மது ஹேமநாதன்
மா .சங்கரநாராயணன்  பா. மதிவாணன்   ஜீவகாருண்யன்  ப. கிருஷ்ணஸ்வாமி

நிகழ்வு தொகுப்பு

நறுமுகை - ராதா  கிருஷ்ணன்
நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
அமர்வு-5- மாலை  6 மணிக்கு
மயில் ராவண  சம்ஹாரம்  -தோல்பதுமைக் கூத்து
வழங்குபவர்- கணேசன் -அம்மாபேட்டை
அமர்வு-6 - மாலை 7மணிக்கு
பாஞ்சாலக்குறவஞ்சி  கட்ட பொம்மலாட்டம்
வழங்குவோர் - களரி கூத்துப்பள்ளி   

8 மணிக்கு-இரவு உணவு
அமர்வு-6 - பொன்னர்  சங்கர்  - தெருக்கூத்து
வழங்குவோர்  துத்திப்பாளையம்  பொன்னு  கவுண்டர் நாடக  சபா
நிகழ்த்துவோர்
சுப்பிரமணி - கூலிப்பட்டி
தங்கவேல்  - துத்திப்பாளையம்
செல்லமுத்து -  மோர் பாளையம்
சின்னராசு  - துத்திப்பாளையம்
சுப்பிரமணி - துத்திப்பாளையம்
சீரங்கன் - துத்திப்பாளையம்
சிவராஜ் - எஸ் பாலம்
கனகு - பாச்சாலியூர்
மயில்சாமி - துத்திப்பாளையம்
செங்கோட்டுவேல் - துத்திப்பாளையம்
சீனு - கூட்டப்பள்ளி
சதீஷ் - துத்திப்பாளையம்
அருள் - எலிமேடு
மிருதங்கம்-நடராஜன் –அம்மாபேட்டை , கவின் - எலிமேடு
முகவீணை-குமார்-நாகமரை

சி

நிகழ்விடம்

சேலம் -மேட்டூர் பிரதான சாலையில்
பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது

தொடர்புக்கு

இர.தனபால்
அறங்காவலர்
9677520060
9894605371

நிகழ்ச்சி ஏற்பாடு
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
&
மணல்வீடு இலக்கியவட்டம்
(KALARI HERITAGE&CHARITABLE TRUST)



12.12.17

நிலவறைக்குறிப்புக்கள் -விரைவில்...


''ஒருமனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.. சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாரையும் விட நான் அறிவாளியாக இருப்பதுதான் என் முதல் குற்றம். என் வாழ்நாள் முழுவதும் பிறரிடமிருந்து என் பார்வையை அகற்றியே வைத்திருப்பவன் நான்; மனிதர்களை முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்ப்பதென்பது என்னால் ஒருபோதும்முடியாது’’

உலக அளவில் எழுதப்பட்டிருக்கும் முன்னோடி இருப்பியல்வாத நாவல்களில் முக்கியமானது  ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 
Notes from Underground.

இருப்பியல் வாதம் என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாக,அந்தக் கோட்பாட்டிற்கு ஒரு புனைவு வடிவமாகவே அந்நாவலைத்  தந்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.



நான் செய்திருக்கும் அதன் தமிழ் மொழியாக்கம்
நிலவறைக்குறிப்புக்கள்
என்ற பெயரில்
நற்றிணை பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கிறது.

கபாடபுரம் மின் இதழில் நிலவறைக்குறிப்புக்கள்குறித்து திரு சபரிநாதன் எழுதியிருக்கும் கீழ்க்காணும் செறிவான கூர்மையான கட்டுரையை இத் தருணத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்...

வன்பாற்கண் வற்றல் மரம்-– சபரிநாதன்




21.11.17

செப்பிடு வித்தைகளும் செவிட்டில் அறையும் நிஜங்களும்

''மாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா?
கொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலும் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.?
நாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது''. 


ஆழ்துளைக்கிணறுகளும் அவற்றில் தவறி விழுந்து மீட்க முடியாமல், மீட்கப்படாமல் உயிர் நீத்த சிறார்களின் எண்ணிக்கையும் அன்றாடசெய்தித்தாள்களின் அங்கமாகவே ஆகிக்கொண்டு வரும் நிலையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை மட்டுமே மையமாக வைத்துக்கொண்டு, மீட்புக்காக நிகழும் 24 மணி நேரப் போராட்டத்தையும்,தவிப்பையும் - - களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போன்ற அதே பதட்டத்தோடு பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது அறம். நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே போகும் பரபரப்போடு அந்தச்செய்தி முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அதை மட்டுமே சந்தைப்படுத்திக்கொண்டு வியாபாரமாக்கிக்கொள்ள இந்தப்படம் முனையவில்லை என்பதுதான் மற்ற வணிகப்படங்களிலிருந்து அறத்தை வேறுபடுத்தும் அம்சம். 

நடுப்பாதையில் பழுதாகிப் பாதியில் நிற்கும் தீயணைப்பு வண்டியைப்போல செயற்று நிற்கும் அரசு இயந்திரம், அதல பாதாளத்தில் தரம் தாழ்ந்து கிடக்கும் ஜனநாயக  மதிப்பீடுகள் அரசியல்வாதிகள் என்று பலவற்றின் உருவகமாகவே ஆழ்துளைக்கிணற்றில் வீழ்ந்து கிடக்கும் சிறுமி முன்னிறுத்தப்படுகிறாள்.

விஞ்ஞானத்தின் வெற்றியைக்காட்டி, வல்லரசாக நாட்டை அடையாளப்படுத்தும் ஏவுகணை ஒரு புறம்; அது விண்ணில் உயர்ந்து செல்லும் தளத்துக்கு அருகிலேயே பஞ்சத்தின் ஆழ் மட்டத்தில் வறுமைப் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்கள் மறுபுறம்.. எதிர்எதிரான இந்த இருமைகள் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சமூக மனச்சாட்சியை உலுக்கி எழுப்பிக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ராக்கெட் செலுத்தப்படுவதைத் திருவிழாப் போலக்கொண்டாடி அதற்காகப்பூசை வைத்துப்படையலிடும் மக்களுக்கு அந்த அறிவியல் தொழில்நுட்பத்தால் குறைந்தபட்ச பயன் கிடைப்பதற்கான முயற்சியைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற நடப்பியல் யதார்த்தத்தை ஒவ்வொரு நிகழ்வும் விண்டு வைத்துக்கொண்டே வருகிறது. அறிவியலின் வளர்ச்சி என்பது ஒரு துறையாக அங்கீகரிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில்  அதன் இலக்குகள் விளிம்புநிலை மக்களுக்குப் பயன் தரக்கூடியவையாக இல்லை என்ற கசப்பான உண்மையைத் திரைப்படத்தின் இடையே வரும் தொலைக்காட்சி உரையாடலும் வெளிப்படையாகப்பேசுகிறது



361 நிகழ்வுகளுக்குப்பிறகும் இப்படிப்பட்ட சம்பவங்களை  விபத்துக்களாக மட்டுமே எடுத்துக்கொண்டு சாவுக்கான ஈட்டுப்பணத்தைத் தந்து மூடி மறைக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள்,அவர்கள் தரும் மனரீதியான அழுத்தங்கள்,மிரட்டல்கள், நிர்வாக இயந்திரத்தின் பல்வேறு வசதிக்குறைவுகள் அத்தனைக்கும் நடுவில் கண்ணெதிரே தவித்துக்கொண்டிருக்கும் உயிரை மீட்பது ஒன்றையே மனிதாபிமானம் மிக்க சவாலாக எடுத்துக்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் படத்தின் மையப்புள்ளியாகிறார்.

ஆழ் கிணற்றுக்காகத் துளையிட்டு விட்டு மூடாமல் அலட்சியம் காட்டிய ஆளும் கட்சிக்கவுன்சிலரைத் துணிச்சலாய்க் கைது செய்வது, ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் தீயணைப்பு வண்டி பழுதாகி நிற்கும்போது அருகிலுள்ள முள்செடிகளை வெட்டி வீழ்த்தி அதை நகர்த்தி விட்டுப் பிற வாகனங்கள் தொடர்ந்து செல்ல வழியமைத்துத் தருவது, பேரிடர் மேலாண்மைக்குப்பொறுப்பான அதிகாரிகளோடு துரித முடிவெடுப்பது, மருத்துவரையும் தீயணைப்பு மேலதிகாரியையும் தொடர்ந்த முயற்சிக்குத் தூண்டுகோல் அளித்துக்கொண்டே இருப்பது, எந்த முயற்சியும் பலனளிக்காதபோது மீட்சிஉதவிக்காகக் கயிறு கட்டி இன்னொரு குழந்தையையும் உள்ளே இறக்க சொந்தப்பொறுப்பில் சம்மதம் தருவது, அத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் உணர்ச்சி வசப்படாமல் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகக்காரர்களுக்கும் விளக்கம் அளிப்பது, கட்சிக்காரர்களை சமாளிப்பது என்று சகலத்தையும் எதிர்கொண்டு குழந்தையை மீட்டு விடவும் செய்கிறார் ஆட்சியர் மதிவதனி. 

மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத மேலிடம், அவரது செயல்களை அதிகார வரம்பு மீறலாகவே எடைபோட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த நிலையில் அவர் முன் நிற்கும் ஒரே வாய்ப்பு அமைச்சரை சந்தித்து விளக்கம் தருவது…கிட்டத்தட்ட ஒரு சமரசச்செய்கை போன்ற அதனைச் செய்வது, தான் மேற்கொண்ட அறத்துக்கு இழுக்கெனக்கருதும் அவர் அதை உறுதியுடன்  நிராகரித்து வேலையை விட்டு விலகி மக்கள் பணியில் இணைய முடிவெடுக்கிறார். மக்கள் பணிக்கு வருவதான ஆர்வத்துடன் ஆட்சிப்பணிக்கு வரும் நேர்மையான அதிகாரிகள் பலரும் ‘பதவியும் கூட அதிகார அரசியலின் ஓர் அங்கம்தான்’ என்ற குரூர நிஜத்தைப்புரிந்து கொள்ளும் கட்டம் இது. தமிழகத்தின் முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமியைப்போல - இன்னும் வெளிமாநிலங்களிலும் கூட இதற்கான முன்னுதாரணங்கள் நம்மிடையே இருந்தாலும் திரைப்படக்காட்சிப்படுத்தலும்
‘’இன்னிக்கு ஒரு பெண் கலெக்டராகிறது கூட சுலபமா இருக்கலாம்.ஆனா 
இத்தனை ஆம்பிளைங்களுக்கு நடுவிலே ஒரு பெண் தன்னோட சுயத்தை இழக்காம வாழறது எத்தனை கஷ்டம்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன்’’
என்பது போன்ற வசனங்களும் அந்தச்செயலுக்கு நியாயம் சேர்த்து வலுவூட்டுபவை


உயர்மட்டப்படிப்பாளிகளின் ஐ ஏ எஸ் கனவுகள் கலைந்து போவது போல. கபடிவீரனாக நீச்சல் வீரனாக உருப்பெறும் எளிய ஆசையும் கூட விளிம்புநிலை மக்களுக்குத் தொலைதூரக்கானலாகக் கரைந்து போவதையும் படம் தொடக்கத்திலேயே கோடி காட்டுகிறது.

கிரேக்க நாடகங்களின் கோரஸ் போலக் காட்டூர் கிராமவாசிகளில் ஓரிருவர் படம் நெடுக நையாண்டி விதைகளைத் தூவிக்கொண்டே வருகின்றனர்.. 

’’ஊரு தள்ளி இருக்கிறது ஓட்டு கேக்கும்போது மட்டும் தெரியாது’’
’இந்தியா வல்லரசாயிடிச்சுப்பா…என்னா மாதிரி ஒரு புதுக்கருவி கண்டு பிடிச்சிருக்காங்க பாருங்க குழந்தையை எடுக்க’’ [தாம்புக்கயிற்றைப்பார்த்துச்செய்யும் நக்கல்]
’சொட்டு மருந்து ஊத்தியே தண்ணி இல்லாத தாகத்தைத் தீத்துடுவாங்க’’

என்பது போன்ற அந்தக் குரல்கள், அரசாங்க இயந்திரத்தின் மீதும், அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து வரும் இன்றைய கிராமீய இந்தியாவின் குரல்களாக - ஆள்பவர்களுக்கு அவை அனுப்பும் எச்சரிக்கை மணிகளாகவே ஒலிக்கின்றன…

ஆட்சித் தலைவரே முன்னிருந்து காரியங்களை நடத்திக்கொண்டு போனாலும் கூடப் பல முனைகளிலும் அவர்கள் சந்திக்க நேரும் ஏமாற்றங்கள்…
’’இவங்க காப்பாத்த மாட்டாங்க ! நம்ம கொழந்தையை, நம்ம பொண்டாட்டியை நாமதான் காப்பாத்திக்கணும் ’’ என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தி அமைப்பின் பிடியிலிருந்து அவர்களை விலகி ஓடச் செய்கிறது…

கிராமங்களின் இன்னொரு முகத்தையும் அறத்தில் பார்க்க முடிகிறது..
தண்ணீருக்கு பதிலாகக் குளிர் பானம் , காது டாக்டரிடம் போகக்காசில்லாத நிலையிலும் காமரா, ஒலிப்பதிவுக்கருவி வசதியுடன் ஸ்மார்ட் ஃபோன்..! இந்தியாவின் பின் தங்கிய கிராமம் கூட இன்று இப்படித்தான் இருக்கிறது…தேவையானது கிடைக்காமல் தேவையற்றவை  மலிவாய்க்குவியும் அபத்தங்கள்.. ஆழ்துளைக்கிணற்றில் விழுவோரை  மீட்க ரோபோ கண்டு பிடித்த முகம்தெரியாத மணிகண்டன் என்னும் இளைஞன் முன்னிறுத்தப்படாமலே - அவன் துணை பெறப்படாமலே படம் முடிந்து போவதும் இந்தச்செய்தியையே முன் வைக்கிறது… வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்படும் அவசியமற்ற மனித உயிர்களுக்குத் தேவைப்படும் அவசியமான ஆராய்ச்சிகள் என்றுமே கண்டுகொள்ளப்படுவதில்லை.

பின்னணியில் இருக்கும் காலிக்குடங்களை கவனமாய் மறைத்தபடி வறண்ட வயல்வெளியில் போலியோ சொட்டுமருந்து ஊற்றுவது  அரசுக்கு விளம்பரப்படமாகப்பயன்படுவது, துளைக்கிணற்றில் சிறுமி விழுந்த சம்பவம் தொலைக்காட்சி டி ஆர் பி ரேட்டிங்கைக் கூட்டும் பேசுபொருளாவது; …என்று படம் நெடுகிலும் பல தரப்புக்களின் மீதான விமரிசனம் வந்து கொண்டே இருக்கிறது,

ஆட்சித் தலைவரைத் தவிரப் பிற அனைவரையுமே எதிர்மறை மாதிரிகளாகக்  காட்டிக்கொண்டிருக்காமல் ’’விஷக்கிணறாக இருந்தால் கூட இறங்கி விடுவேன்’’ என்று சொல்லும் தீயணைப்பு அதிகாரியும், முழுநேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் மருத்துவக்குழுவினரும் ஆறுதல் அளிப்பவர்கள்.

சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம் என்ற பாரதி, சந்தி தெருப்பெருக்கும் சாத்திரத்தையும் ஒதுக்காமல் கற்க வேண்டும் என்றே சொன்னான்…ஆனால் இன்றைய அரசியல் அதிகார பொருளியல் அவலங்களோ சமூகத்தின்  ஒருபக்கத்தை  வீங்க வைத்து இன்னொரு பக்கம்  அழுகி நாற்றமடிக்குமாறு  செய்து கொண்டிருக்கின்றன. படத்தின் கதை நிகழும் காலம் [ஒரே நாள்], களம் [ஆழ்துளைக்கிணறு சார்ந்த பொட்டல் வெளி] என்ற எல்லைகள் மிக மிகக்குறுகியவை என்றாலும் கூடப் பல வகையான பரிமாணங்களோடு இவற்றைக் காட்ட முன் வந்ததற்காகவே அறத்தையும் இயக்குநர் கோபிநயினார் மற்றும் அவரது குழுவினரையும்  பாராட்டவேண்டும்.

மிகை நடிப்பாக ஆகி விடாமல் உணர்ச்சியைத் தன்வசப்படுத்தும் அதிகாரியாக வாழ்ந்திருக்கும் நயன்தாரா படத்தின் தயாரிப்பாளரும் கூட என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.. காட்டூர் கிராமத்தில் 2 மணி நேரம் உலவி வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவித்து விடும் நடிகர்கள், காமராக்காரர்கள் என அனைவரின் ஒருமித்த பங்களிப்பும் சேர்ந்ததாகவே அறம் உருப்பெற்றிருக்கிறது.

அண்மையில் மதுரை சென்றுகொண்டிருந்தபோது ஒரு வீடியோ கோச்சில் பாகுபலி படம் போட்டார்கள். ‘’ எத்தனை தரம் பாத்தாதான் என்ன,,அந்தப்படத்தையே  போடுங்க, போடுங்க’’ என்று அதற்கு எழுந்த ஆரவாரக் குரல்கள் என்னை மனம் சலிக்க வைத்தன.

எத்தனை நந்தி விருதுகளையும் தேசிய விருதுகளையும் அள்ளிக்குவித்தாலும் இந்தியாவின் உண்மையான முகமாக பாகுபலியை நிறுத்தி விட முடியுமா என்ன?

ஏழ்மை இந்தியாவைக்காட்டி நாட்டை ஏளனம் செய்வதான வசைகள் பதேர்பாஞ்சாலி காலத்திலிருந்து திரைமேதை சத்யஜித் ரே மீது எழுந்தவைதான்…

அறம் மீதும் அத்தகைய கணைகள் பாயக்கூடும்.

மாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா?
கொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலும் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.?
நாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. 
  

8.11.17

எளிமையின் மேலாண்மை




ளிமையான மனிதராக வாழ்ந்து அடித்தட்டு மக்களின் குரலை வலிமையாக,உண்மையாக ஒலித்தவர்களில் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறக்க முடியாதவர்.

துரை நாட்களில் தொடங்கிய அவரோடான  அறிமுகம்  தில்லியில் சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் வந்தது முதல் நீண்டு சென்றிருப்பதை அவர் காலமான இத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

நான் பணிபுரிந்த பாத்திமாக் கல்லூரிக்கு எப்போது அழைத்தாலும்- அது முத்தமிழ் விழாவோ..சிறிய குழுவுக்கு இடையிலான கலந்துரையாடலோ - எதுவானபோதும் உடன் சம்மதம் அளிப்பது மட்டுமன்றி போக்குவரத்து வசதி செய்து தந்தால்தான் வருவேன் என்றெல்லாம் பிகு செய்து கொண்டிருக்காமல் பொதுப் பேருந்தில் வந்திறங்கிக் கையில் பிடித்திருக்கும் மஞ்சள் பையுடன் முகப்பு  வாயிலில் இருந்து  அவர்நடந்து வரும் காட்சி என் கண்ணுக்குள்  விரிகிறது.

பொன்னுச்சாமி அவர்களின் நாவல்களை விடவும் நறுக்குத் தெறித்தாற்போன்ற   சொற்சிக்கனத்தோடு எழுதப்பட்டிருக்கும் அவரது பல  சிறுகதைகளும், மதுரை வட்டார கிராமீய மணம் கமழும் மொழிநடையை அவற்றில் அவர் கையாண்டிருக்கும் பாணியுமே என்னை வசீகரப்படுத்தியவை.

என் எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கி நான் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் செம்மலர் இதழின் ஆசிரியராகவும் இருந்த அவர் என் சிறுகதைகள் சிலவற்றை அதிலும் வெளியிட்டிருக்கிறார்.
புதிய பிரவேசங்கள் என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தருமாறு கேட்டபோது அதைத் தனக்குத் தரப்பட்ட கௌரவம் என்றே குறிப்பிட்டு எனக்குக் கடிதம் எழுதினாலும்.. நட்பு வேறு, இலக்கிய விமரிசனம் வேறு என்று பிரித்துப்பார்க்கும் தெளிவு கொண்ட அவர், வெறும் முகத்துதியாக அமைத்து விடாமல் கறாரான விமரிசனப்பார்வையோடு கூடிய ஒரு அணிந்துரையையே எனக்கு எழுதி அளித்தார். நான் விரும்பியதும் அதுவே.

பின்னாட்களில்  பெண் எழுத்தைப்பற்றிக் கூட்டங்களில் பேசிய சில சந்தர்ப்பங்களில் அதற்கு உதாரணங்களாக என்  தடை ஓட்டங்கள்,  விட்டு விடுதலையாகி ஆகிய சிறுகதைகளை   எடுத்துக்காட்டி அவர் பேசியிருக்கிறர் என்பதை சில நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டபோது, அவர் நினைவில் பதியும் வகையில் என் கதைகள் சில இருந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

ஜெயகாந்தனின் 60 ஆம் வயது நிறைவுக்கான மணிவிழா  மதுரையில் நடந்தபோது, மதுரை மீனாட்சி புத்தக நிலையம் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில்   நாங்கள் இருவரும் ஒன்றாய்க்கலந்து கொண்டு அதில் உரையாற்றியது ., முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முதன்மையானவராக இருந்த அவர் எங்கள் ஆசிரியர் இயக்கமான மூட்டா நிகழ்வுகளிலும் பங்கு கொண்டது என்று அவர் சார்ந்த பல நிகழ்வுகள் நினைவுக்குள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

 தன் மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2007ஆம் ஆண்டுக்கான  சாகித்திய அகாதமி பரிசு பெற அவர் தில்லி வந்திருந்தபோது அப்போது அங்கு வசித்து வந்த  நான், தில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த நூலைப்பற்றிப் பேசும் வாய்ப்பைப்பெற்றேன்...
அதுவே அவரை நான் பார்க்கும் இறுதிமுறையாக இருக்கக்கூடும் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

மதுரை மற்றும்...மதுரை சார்ந்த எளிய உழைக்கும் மக்களின் வாழ்வை எழுத்துச் சித்திரங்களாக்கியிருக்கும் எளிய பண்பாளரான திரு மேலாண்மை பொன்னுசாமி அவற்றின் வழி என்றும் வாழ்வார்.
அவருக்கு என் அஞ்சலி.

வடக்கு வாசல் இதழில் வெளிவந்த அவரது தொகுப்பு குறித்த
என்  கட்டுரை கீழே  மறு வெளியீடாக;


மேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ'


உண்மையான மன எழுச்சியுடன் - தான் உணர்ந்த சத்தியமான தரிசனங்களை - சமூகத்திற்கு ஆற்றும் தார்மீகக் கடமையாக, அறச் சீற்றத்துடன் முன்வைக்கும் படைப்புக்களைக் காலம் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை என்பது, மேலாண்மை பொன்னுச்சாமிக்கு அளிக்கப்பட்டுள்ள சாகித்திய அகாதமி விருதின் வழி நிரூபணமாகியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் வசித்தபடி, ஒரு புன்செய்க்காட்டு விவசாயியாக - சிறுகடை வியாபாரியாக வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் திரு.பொன்னுச்சாமி, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் தாண்டியதில்லை என்பது, பலருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்; ஆனால், ஆத்மாவின் ஆழங்களிலிருந்து தானாய் ஊற்றெடுத்துக் காட்டாறாய்ப் பெருக்கெடுக்கும் படைப்புக்கலை, படிப்போடு தொடர்பு கொண்டதில்லை என்பது ஏற்கனவே பல படைப்பாளிகளின் விஷயத்திலும் உறுதியாக்கப்பட்டிருக்கும் ஒன்றுதான்.
தான் சார்ந்துள்ள இடதுசாரி (முற்போக்கு இலக்கிய) நிலைப்பாட்டிற்கு ஏற்றகோட்பாடுகளைத் தான் அறிந்து பழகியுள்ள எளிமையான வாழ்க்கைக் களத்தோடு பொருத்தி, சிறுகதை, நாவல் இலக்கிய வடிவங்களாக்கித் தமிழுலகிற்கு அளித்திருப்பவர் மேலாண்மை பொன்னுச்சாமி.
தான் மிக நன்றாக அறிந்து ஆழங்கால் பட்ட ஒன்றை, தனது மூச்சு முழுவதும் நிரம்பி உட்கலந்து போன ஒன்றை - ஒரு படைப்பாளி, தன் படைப்புக்களில் முன் வைக்கும்போது, அங்கே செயற்கையான - போலித்தனமான எழுத்து ஜாலங்களும், சாகசங்களும் மறைந்து, யதார்த்தமான நிஜம் மட்டுமே மேலோங்கி நிற்பதைக் காண முடியும். இவரது எழுத்துக்களில் நாம் உணர முடிவதும் அந்த யதார்த்தத்தையும், பாசாங்குகளற்ற உண்மையான வாழ்க்கையையும் மட்டும்தான்!
பொதுவாகத் தொடர்ந்த இலக்கியப் பங்களிப்பையும், இலக்கியக் களத்தில் பல்லாண்டுக் காலம் இடையறாது இயங்கி வருவதையும் விருதுகள் கருத்தில் கொண்டிருந்தாலும் கூட - ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு படைப்பே விருதிற்குரியதாகத் தேர்வு செய்யப்படுகிறது. அவ்வகையில் இவரது விருது பெற்றபடைப்பாகிய 'மின்சாரப் பூ', ஒன்பது சிறுகதைகளையும், ஒரு குறுநாவலளவுக்கு நீண்டு செல்லும் பெரியதொரு சிறுகதையையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது; அச்சிறுகதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது.
இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இடம் பெறும் மையப் பாத்திரங்கள் - பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் வாழும் அடித்தட்டு மக்கள்; விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். வறண்டு போன நிலப்பரப்பில் விவசாயம் கடினமாய்ப் போனதாலோ அல்லது, தங்கள் நிலங்களை ஆதிக்க வர்க்கத்தினரிடம் பறிகொடுத்து விட்டதாலோ மாற்றுத் தொழிலைச் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சிலரும் இவரது கதைகளில் உண்டு. வறுமையே வாழ்வாக அமைந்தபோதும், வாழ்வியல் அறங்களை முற்றாகத் தொலைத்து விடாதவர்கள் இவர்கள் என்பதையே பெரும்பான்மையான இவரது கதைகள் மையச் செய்தியாக முன்னிறுத்துகின்றன.
இத்தொகுப்பின் மிகப் பெரிய கதையாகிய 'மின்சாரப் பூ'வின் முதன்மைப் பாத்திரம் செந்தட்டி, சாதி அடுக்கில், தன்னை விடச் சற்று உயர்ந்த நிலையிலிருக்கும் வீரபாண்டியுடன் நெருங்கிய நட்புக் கொண்டவன். செந்தட்டியின் தந்தை மின்சாரம் தாக்கி இறந்து போகப் படிக்க வழியின்றி ஆடுமேய்க்கும் தொழிலைச் செய்துவரும் அவனுடன், ஒரு கட்டத்தில் வீரபாண்டியும் இணைந்து கொள்கிறான். வயதில் மூத்தவர்கள், சாதிப் பிரிவினைகளை அழுத்தமாக முன்வைத்தபோதும் சிறுவனான செந்தட்டிக்குள் அது அதிர்ச்சிகரமான உண்மைகளை உட்செலுத்திய போதும் - அவற்றாலெல்லாம் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் நட்புத் தொடர்கிறது. ஆனாலும் தன் சாதியைச் சேர்ந்த எளிய பெண்ணொருத்தியின் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்குத் தனது நண்பனே காரணமாக இருந்திருக்கக் கூடுமோ என்று அவனுள் ஏற்படும் ஐயம், நண்பனுக்காக விரிக்கப்படும் மின்சாரப் பொறி பற்றி அவனிடம் எச்சரிக்க விடாதபடி தடுத்து விடுகிறது. அவனது தந்தையைப் போலவே நண்பனும் மின்சாரப் பூவுக்கு இரையான பிறகுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சீர்குலைவுக்கு நண்பன் காரணமில்லை என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. குற்ற உணர்வின் குமைச்சலால் மனநிலைப் பிறழ்வுக்கு ஆளாகி விடுகிறான் அவன். சாதிமுரண், வர்க்க முரண், பெண்மீதான சுரண்டல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து முன்வைக்கிறது இப்படைப்பு.
புறஉலகின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும், உள்மனச்சாட்சியின் உறுத்தலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் சாமானிய மனிதனின் போராட்டம் 'நீரில்லா மீன்' என்றகதையில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மண்ணைப் பொன்னாக்கி உலகத்திற்கே சோறுபோடும் ஒரு சம்சாரி (விவசாயி) - மண்ணைத் தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாத ஒரு சம்சாரி, ஆட்டுச் சந்தைக்கு வந்து விட்டு ஆடுகளை விற்க வழிதெரியாமல் மலைத்து நிற்கிறான். வியாபார சூட்சுமம் தெரியாமல் திகைத்து நிற்கும் அவனுக்கு - ஒரு காலத்தில் சம்சாரியாக இருந்துவிட்டுப் பிறகு மாற்றுத் தொழிலான தரகுத் தொழிலைத் தேர்ந்து கொண்டவன் உதவி செய்கிறான். அந்த உதவிக்குப் பதிலாக அவனுக்கு நானூறு ரூபாய் லாபமாகக் கிடைத்தாலும் - 'விதையில்லாமல் நடந்த அந்த விளைச்சல்', 'வலையில்லாமல் வந்தமீன்' அவன் மனதில் முள்ளாய் உறுத்துகிறது. ஆனாலும் புறஉலகின் யதார்த்த வாழ்க்கைப் போராட்டம் - மூர்க்கமான அதன் தாக்கம், அவளது உள்ளக் காயத்தைத் தழும்பாக்கி விடுவதை அற்புதமாகப் பதிவு செய்கிறார் படைப்பாளி.
நல்ல சிறுகதை என்பது, தேர்ந்த முரணை உள்ளடக்கியிருப்பது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'சிதைவுலகம்', அத்தகைய முரணான சூழலொன்றை முன்வைக்கிறது. தன் மனைவியின் சகோதரியிடம் பணத்தைக் கடனாக வாங்கிக் கொண்டு சைக்கிளில் வரும் நொடித்துப்போன ஒரு விவசாயி, சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, போதையில் தன்னிலை இழந்து கிடக்கும் ஒருவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறான். மறுநாள் இவனைத் தேடி வரும் அந்த மனிதன், நன்றி சொல்வதற்கு மாறாகத் தன் சட்டைப் பையிலிருந்த பணத்தை அவன்தான் எடுத்திருக்கக் கூடுமென்று பழி சுமத்துகிறான். "இரக்கப்பட்டு நெருங்கியவனுக்கு, எடுத்துச் சுமந்தவனுக்கு இந்தத் தண்டனையா...'' என்று அந்தப் பாத்திரம் ஒரு கணம் நினைத்தாலும் கூட - ஆசிரியர், தன் கதைகளில் தொடர்ந்து பரிந்துரைப்பது, மனித நேயத்தையும், இரக்கத்தையும் மட்டும்தான்!
சாதி, வர்க்க பேதங்களற்ற சமூக அமைப்பும், மானுட அன்பில் தோய்ந்த வாழ்வுமே அவர் வலியுறுத்த எண்ணுபவை.
முற்போக்கு இலக்கியத்தின் முகங்களில் ஒருவராக அறியப்படும் மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்துக்கள் அவை சொல்லும் செய்திகளைச் சற்று உரத்துச் சொல்லுவதாக விமரிசிக்கப்பட்டபோதும், அவை மனிதகுலத்திற்கு அடிப்படைத் தேவைகளான அன்பையும், அறத்தையும், தனிமனித ஒழுங்கையும், சமத்துவ சமூகத்தையும் எடுத்துரைக்கும் பயனுள்ள செய்திகள். சமூக ஒழுங்கைக் குலைத்துப் போடும் நச்சு எழுத்துக்களாக அவை ஒருபோதும் இருந்ததில்லை.
"நாம பேசறபேச்சும் துணிமணி உடுத்தியிருக்கணும்டா'' என்கிறது இத்தொகுப்பின் கதையொன்றில் இடம்பெறும் பாத்திரம். அந்தக் கண்ணியம் இந்நூலிலுள்ள கதைகள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.

'மின்சாரப் பூ'
மேலாண்மை பொன்னுச்சாமி
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு
தியாகராயநகர், சென்னை-600 017.
விலை ரூ.70/-
நன்றி: 'வடக்கு வாசல்'-மார்ச்'09


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....