துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.7.20

’தப்ப’டும்(Thappad-Hindi movie) தப்பான அடிகளும்


கால மாற்றங்களால் நம் அணுகுமுறைகளும் மாறியிருந்தாலும் ’’புருஷன் பொண்ட்டியை அடிக்கறதிலே என்ன பெரிய தப்பு இருக்கு’’ என்று அந்தச் செயல்,சர்வ சகஜமான- இயல்பான ஒரு நிகழ்வாகவே இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறான ஒரு சமுதாய அமைப்புக்குள் வாழ்ந்து வரும் நம்மால் ’தப்பட்’ போன்ற படங்களின் உள்ளுறையாகப் பொதிந்திருக்கும் பெண் உளவியலைப் புரிந்து கொள்வது கடினம்தான்.
அமு என்னும் அம்ரிதா , தான் காதலித்து மணந்த விக்ரமை,அவன் குடும்பத்தை, மாமியாரை நேசித்து வாழும் துடிப்பும் மகிழ்ச்சியுமான ஒரு பெண். பள்ளிப்பருவக்கனவுகள் கலைந்து போனதைக்கூடப் பொருட்படுத்தாமல் அது குறித்த எந்தப் புகாரும்,ஏக்கமும் இல்லாமல் ஒரு நல்ல இல்லத்தரசியாக மட்டுமே தன்னை உருவாக்கிக்கொள்ள விரும்புபவள். ஒரு சிந்தனாவாதி என்றோ, பெண்ணியவாதி, ’ஆக்டிவிஸ்ட்’ என்றோ எந்த முத்திரைகளும் இல்லாதவள். குரோட்டன்ஸ் இலைகளைச் சீராக வெட்டுவது, தேநீர் போடுவது,கணவனை தினமும் வழியனுப்பி வைப்பது என்று அன்றாட வாழ்வின் இனிமைகளுக்குள் கடமைகளுக்குள் மட்டுமே சந்தோஷ லயிப்போடு கரைந்து போகிற ஒரு சராசரிப் பெண்.
கணவனின் பதவி உயர்வுக்காக நிகழும் பகட்டான விருந்தில் விருந்தினர் முன்னிலையில் அவள் கன்னத்தில் விழும் ஒரே ஒரு அறை அவள் வாழ்வையே புரட்டிப்போடுகிறது. இத்தனைக்கும் - தான்,தன் பதவி வெறி என்று மட்டுமே இருந்தாலும் –அதுவரை அவன் அவளை எந்த வன்முறைக்கும் ஆளாக்கியதில்லை. அந்தக் குறிப்பிட்ட சம்பவத்திலும் அதை அவன் வேண்டுமென்று செய்திருக்கவில்லை; எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்திருக்கவில்லை என்று விருந்து நேரத்தில் கிடைக்கும் செய்தியால் பதட்டமாகி, அது குறித்த வாக்குவாதத்தில் ஈடுபடும் அவனை அந்தப் பேச்சு வார்த்தை தடித்து விடாமல் தடுப்பதற்கு அவள் முயல்கிறாள்; அப்போது தன்னிச்சையாக அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை அறைந்து விடுகிறான் அவன்.
அமுவை அது அதிர வைக்கிறது; அவள் நிலை குலைந்து போகிறாள். உருகி உருகிக்காதலித்தவன்தான் என்றாலும் அதன் பிறகு அவனை அவளால் அன்பு செய்ய முடியாமல் போகிறது. அந்தக் கணத்தோடு மனதின் மெல்லிய, நுட்பமான பிரிய இழை ஒன்று அவளுக்குள் அறுந்து போகிறது. காதல் இல்லாமல் ஒப்புக்காகக் கூடி வாழும் போலி வாழ்க்கையில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியுள்ள உறவும் உலகமும் அதையே அவளிடம் எதிர்பார்க்கிறது. தன் வேலை சார்ந்த பதட்டங்களால் தற்செயலாய் நிகழ்ந்து விட்டஅந்த செயலை அவள் தேவையில்லாமல் ஊதிப்பெருக்குவதாகவே அவனுக்குத் தோன்றுகிறது. அலுவலகத்தோடு ஒன்றிக்கலந்து தன் மூளையையும் உழைப்பையும் மூலதனமாக்கி வேலை செய்தும் அங்கே தனக்கு உரிய மதிப்பில்லை என்றும், அவள் தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திரும்பத் திரும்பச்சொல்கிறானே தவிர அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றுவதே இல்லை; அலுவலகத்தில் அவன் செய்தது போல -அதே மாதிரியில்- குடும்பத்துக்குள் மட்டுமே தன் உணர்வுகளையும் உழைப்பையும் முதலீடு செய்திருக்கும் தனக்குக் கிடைத்திருக்கும் மதிப்பு என்ன என்று அவள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை
அமு தாய் வீட்டுக்குப்போகிறாள். தாய் சகோதரன் என்று உறவு வட்டங்கள் எல்லாமே அதை அவள் அதை மிகைப்படுத்துவதாகவே சொல்லும் நிலையில்…அவள் தந்தை மட்டும் அவள் மனக்காயத்தையும் அதிர்ச்சியையும் உள்ளபடி புரிந்து கொள்கிறார் ஆனாலும் எந்தத் தீர்வையும் ஆலோசனையையும் வழங்காமல்,தன் மனம் சொல்லும் வழியில் அவளாகவே முடிவெடுக்க ஆதவாய் நிற்கிறார்.

தாய் வீடு தற்காலிகப் புகலாகாமல் பிரிவு நீண்டுகொண்டு செல்லும் நிலையில் தாம்பத்திய உரிமை கோரி வழக்குத் தொடுக்கிறான் விக்ரம். அவளும் நேத்ரா என்ற பெண் வழக்கறிஞரிடம் போகிறாள். நீதிமன்றப் படி ஏறினால் எதிர்ப்பட வேண்டியிருக்கும் கேவலங்களைச் சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட நிகழ்வுகளோடு சமரசம் செய்து கொண்டு கடந்து போவதுதான் குடும்ப வாழ்வில்…நடைமுறைக்கு உகந்தது என்று தொடக்கத்தில் ஆலோசனை கூறும் அந்தப் பெண் வழக்கறிஞரையே பிறகு தன் உறுதியான நிலைப்பாட்டால் மாற்றிப் போட்டு விடுகிறாள் அமு.
’’எனக்கு வாழ்க்கையில் வேண்டியது இரண்டு மட்டும்தான் – ஒண்ணு சுய மதிப்பு, இன்னொனாண்ணு உறுத்தல் இல்லாத சந்தோஷம்.. இதை இப்படியே ஒத்துக்கிட்டு சமரசமாப் போயிட்டா… அப்புறம் என் மேலேயே எனக்கு மதிப்பிருக்காது, மகிழ்ச்சியும் இருக்காது ’’ என்ற சுருக்கமான சொற்களால் அதைத் திடமாக நிராகரித்து விடுகிறாள் அமு. வக்கீல் பரிந்துரைக்கும் குடும்ப வன்முறைக் காரணத்தையோ , ஜீவனாம்சம் கோருவதையோ கூட அவள் உடன்படவில்லை.
சட்டப்போராட்டம் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்க அவள் கருவுற்றிருக்கும் செய்தி கிடைக்கிறது; அவனுக்கும் அதுவரை அவன் எதிர்பார்த்த லண்டன் பதவி உயர்வு கிடைக்கிறது. எல்லாம் சுபம்தானே..’ALL FINE..JUST MOVE ON’ …இதற்கு மேலும் ஏன் இதை வளர்த்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று அவன் உட்பட எல்லாரும் நினைக்க ALL FINE எப்படி ஆகும் என்ற வினாவோடு அவள் உறுதியாய் நிற்கிறாள். வாழ்க்கை இப்போது இனிமைகளைக் கொண்டு வந்தாலும் தனக்கு அன்று நடந்ததை அத்தனை லகுவாய் ஒதுக்கிப்போட்டு விட்டு அன்றாட வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்ள- அது எத்தனை லாபங்களைத் தந்தாலும் கூட- அவளுக்கு விருப்பமில்லை.
அதே வேளையில் அவளது அன்பும் கரிசனமும் அவளைச்சார்ந்த மற்றவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அவள் பிரிந்து வாழ்ந்தாலும் கணவன் அலுவலகம் சென்று விடும் பகல் வேளைகளில் சர்க்கரை நோயாளியான மாமியாரை வந்து கவனித்துக்கொள்கிறாள்; குழந்தைப் பேற்றுக்காக அந்தக்குடும்பம் நடத்தும் பூஜையிலும் கூட!..

ஆனாலும் அவள் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அருவருப்பான குற்றச்சாட்டுக்களை அவள் மீது சுமத்தியபடி விக்ரமின் வழக்கறிஞர் கீழிறங்கும்போது அவளும் குடும்ப வன்முறை என்று தன் மனுவில் குறிப்பிட வேண்டியதாகிவிடுகிறது.
பரஸ்பர ஒப்புதலின் பேரில் இருவரும் விவாகரத்து பெறும் அந்தத் தருணத்தில் தன் தவறை மட்டுமல்லாமல் அவள் இல்லாத தன் வாழ்வின் வெறுமையையும் உணர்ந்து தன் வேலையைக்கூடத் துறந்து வரும் அவன், தன் செயலுக்காக இதுவரை அவளிடம் தான் மன்னிப்பு கோரவேயில்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறான்.
’இது நடந்திருக்க வேண்டாம்’ என்று எண்ணியபடி இருவரும் பாரமாய் மனம் கனத்துப்போய்ப் பிரியும் அந்தத் தருணத்தை - ஓடும் ரயிலில் மூச்சிரைக்க வந்து ஒன்று சேர்வதாக.-.மௌன ராகம் போன்ற செயற்கையான நாடகீயக் கணங்களாகக் காட்டாமல் ’’இந்தச்செயலின் விளவு இதுமட்டுமே’’ என்று - அவளது நிலைப்பாட்டுக்கு அழுத்தம் சேர்க்கும் வண்ணம் படத்தை நிறைவு செய்திருப்பதே இதன் உள்ளடக்கத்துக்கு நியாயம் சேர்க்கிறது.
ஒரு முறையோ , பல முறையோ …எப்படியானாலும்…ஒருவரை அடிப்பதற்கு.., அவரது தன்மதிப்பைக் காயப்படுத்துவதற்கு [கணவன் என்றாலும் கூட ] அடுத்தவருக்கு உரிமை இல்லை, வெளிப்பார்வைக்கு மென்மையானவளாக, குடும்பத்தை உயிராக நேசிப்பவளாக இருக்கும் ஒரு பெண்ணும் கூட அப்படி taken for granted ஆக நடத்தப்படும் வேளையில் - தன்னையும் அறியாத ஓர் உந்துதலால் இப்படிப்பட்ட முடிவை நோக்கி நகர்ந்து விடக்கூடும் என்பதை ஓர் எச்சரிக்கையாக DON’T EVER TAKE WOMEN FOR GRANTED! என்று சொல்லியிருக்கிறது தப்பட்.
இது, இந்தத் திரைக்கதையின் மைய இழை என்றபோதும், அதை முன்வைத்து ஒடுக்கப்பட்ட பெண் உணர்வுகளை வேறுபட்ட தர நிலையிலுள்ள பல பெண்கள் வழியாக நுட்பமாகத் தொட்டுக்காட்டிக்கொண்டே போகிறது படம்.
தினந்தோறும் கணவனிடம் அடி வாங்கும் பணிப்பெண், ’சந்தியாஜி’ என்று அமுவின் தந்தை அவள் தாயை மதிப்போடு அழைத்தாலும் அவளுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் ஆசாபாசங்கள், பிரபுத்துவ மனப்பான்மை கொண்ட அமுவின் மாமனாரால் ஒரு அலங்காரப்பொருள் போல,அந்தஸ்தின் சின்னம் போல மட்டுமே நோக்கப்படும் அமுவின் மாமியார், அமுவின் விடாப்பிடியான போர்க்குணத்தால் தன் சுயத்தை மீட்டுக்கொள்ளும் வழக்குரைஞர் நேத்ரா என்று பல பெண் மாதிரிகளுக்கு- அதுவரை தோன்றியே இராத தன்மதிப்பு உணர்வை மீட்டெடுத்துத் தரும் ஒரு முன்னோடியாய் இருந்தபடி ஒரு புதிய பாடத்தையே கற்றுத்தருகிறாள் அமு என்னும் அம்ருதா.
புகுந்த வீட்டாரை இறுதியாகப் பிரியும்போது அமுவும் மாமியாரும் உரையாடும் கட்டம் படத்தின் சிகரம்...!’’ நீங்க என் மேலே அன்பைப் பொழிஞ்சீங்க, ஆனா அந்த விருந்து நடந்த ராத்திரிதான் என்னை அமுவா நெனக்காம விக்ரமோட மனைவியா மட்டுமே நெனச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க எல்லார் மேலேயும் நான் அன்பு செலுத்தினேன்…ஆனா அவர் செஞ்சது தப்புதான்னு நீங்க யாருமே சொல்லலை அதுக்கு உங்களை என்னாலே மன்னிக்கவே முடியாது’’என்று ஆவேசமே காட்டாமல் பாசத்தின் நெகிழ்வோடு மட்டுமே சொல்கிறாள் அமு. அப்போது மாமியாரும் மனம் திறக்கிறார்… ’’நடந்ததுக்கு உன்னைக் குறை சொல்ல முடியாது. ஒரு மனைவி எது நடந்தாலும் ஏத்துக்கிட்டுதான் போகணும்னு சொல்லிக்கொடுக்கிற/நெனக்கிற அம்மாக்கள், மாமியார்கள், பெண்டாட்டியை அடிக்கக்கூடாதுன்னு சொல்லிக்கொடுத்து வளர்க்காத அப்பா அம்மா…தப்பு இவங்க எல்லார் மேலேயும்தான்’ ’என்கிறாள்.
ஆனால் அமுவுக்குக் கிடைத்தது போல் அவளைப் புகுந்த வீட்டுக்குப் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்தாத பெற்றோரும் அவளைப்புரிந்து கொள்ளும் மாமியாரும் பாதிப்புக்குள்ளாகும் எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பது சந்தேகம்தான்.
அழுகையும் புலம்பலும் ஆவேசப்பிரகடனமும் இல்லாமல் ஆழ்ந்த மனக் காயத்தின் கொடுந்துயரை முகத்தில் மட்டும் தேக்கி, மெதுவான குரலிலும் செயலிலும் மட்டுமே உள்ளத் திண்மையை வெளிக் காட்டிக்கொண்டபடி… எல்லோரிடமும் பிரியம் செலுத்தும் பெண்ணாக ’தப்பட்’ படத்தில் அமுவாகவே வாழ்ந்திருக்கிறார் தாப்சி. பிற பாத்திரத் தேர்வுகளும் கச்சிதமானவை. வசனங்கள் ஆழ்ந்த கவனிப்புக்கு உரியவை என்பதோடு தீட்டிய வாள் நுனி போலக் கூர்மையாக இதயத்தில் இறங்குபவை. கருத்துக்களின் அடர்த்தியால், கனத்தால்.. படத்தின் விறுவிறுப்பு குறைந்து விடாமல், அதே வேளையில் பிரச்சாரமாக.. over dramatic melodrama வாகவும் மாற்றி விடாமல் மிகை நடிப்போ மிகைக்காட்சிகளோ பாவனைகளோ இல்லாமல் யதார்த்தமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகப் பெண்ணின் ஒடுக்கப்பட்ட உளவியலை முன் வைத்திருக்கிறது ’தப்பட்’.
குடும்ப அமைப்பில் பெண்ணுக்கு நேரும் சுயகௌரவச் சிதைவு, அவளது தனிப்பட்ட உணர்வுகள்,விருப்பு வெறுப்புக்கள் ஆகியவை புரிந்து கொள்ளப்படாமல் போதல்… ஆகியவற்றின் குறியீடே’தப்பட்’! அதையெல்லாமல் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எல்லாரோடும், எல்லாவற்றோடும் அவள் இணங்கிப்போக வேண்டும் என்று எண்ணும் சமூக எதிர்பார்ப்பின் கன்னத்தில் சுளீரென்று அறை விட்டிருக்கிறது ’தப்பட்’ திரைப்படம்.
’தப்பட்’ என்றாலே அறைவிடுவதுதான் இல்லையா?..
ஒரு பின் குறிப்பு:
இப்படியும் சில ’தப்பட்’கள்..தப்படிகள்!
பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த வேறொரு தமிழ்ச்சிறுகதை ‘அடி’ (அய்க்கண் என்று நினைவு) : நோய்வாய்ப்பட்டுக்கிடக்கும் மனைவியின் உயிர் பிரிந்து போகாமல் இழுத்துக்கொண்டே கிடக்க, ஏதோ நிறைவேறாத ஆசை போலிருக்கிறது என்று ஊரார் முடிவு செய்கிறார்கள். முன்கோபக்காரரான அவள் கணவருக்கு எல்லோரையும் அறைந்தே பழக்கம். திருமணம் ஆகும்போது மனைவியை மட்டும் அடிக்கக்கூடாதென்று அவர் உறுதி எடுத்துக்கொண்டாராம். அவர் தன்னை மட்டும் அடிக்கவில்லையே என்பதுதான் மனைவியின் நிறைவேறாத ஆசை என்றும் அவர் ஒரு அறை விட்டதும் அவள் உயிர் போய் விடுவதாகவும் அந்தக் கதை முடியும்…
’உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் தன்னை அதுவரை இலட்சியம் செய்யாமலிருந்த கணவர் அறை விட்டதும் அதை லேடீஸ்கிளப்பில் அவள் பகிர்ந்து கொள்ள அதுதான் அவர் காட்டும் அன்பின் தொடக்கம் என்று மற்ற பெண்கள் அடியெடுத்துக்கொடுக்க ..அந்த வேடத்தில் வரும் சௌகார் ஜானகி உடனே சிலிர்த்துப்போய்ப் பியானோ வாசித்தபடி அந்த அடிகளை ’அத்தானின் முத்தங்கள்’ என்று பாட ஆரம்பித்து விடுவார்..
2020இல் வந்திருக்கும் ’தப்பட்’தான் இப்படிப்பட்ட தப்புத் தாளங்களை மாற்ற வேண்டும்.

4.10.18

''பரியேறும் பெருமாள்''-சிவந்தவானில் ஒருவிசுவரூபம்


செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே  விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபம் எடுத்து உலகளந்த பெருமாள் போல் நிற்கிறது பரியேறும் பெருமாள். பெரும்பாலும் நகர்மயமான சூழலுக்கே பழகிப்போன பார்வையாளர்கள் , காட்சி முடிந்த பின் ஓடிவிடாமல் இருக்கையிலிருந்து எழுந்து கைதட்டித் தங்கள் வரவேற்பைத் தந்து விட்டு வெளியேறியதையே பார்த்துக்கொண்டிருந்தேன்… உண்மையான எந்தக்கலையாவது  மனித மனச்சாட்சிக்குள் இம்மியளவு உறுத்தலையேனும் ஏற்படுத்தாமல் இருந்து விட முடியுமா என்ற நெகிழ்ச்சியில் நெஞ்சு பூரித்துப்பொங்கியது.

பரியன், அவன் தாய்- தந்தை , ஜோ மற்றும் அவள் குடும்பம், மேஸ்திரி என சகலரும் நம் கண் முன் உலவும் ரத்தமும் சதையுமான பாத்திரங்கள். அன்றாட நடப்பாகி விட்டிருக்கும் சாதி மேட்டிமையின் இலக்குகள் அல்லது அதன் பிரதிநிதிகள்.
சாதிரீதியான ஒடுக்குதலின் உருவகமாகக் கருப்பி சாகடிக்கப்படும் முதற்காட்சி தொடங்கி சாதி மேலாதிக்கத்தை வாழ்நாள் முழுவதும் தூக்கிப்பிடித்து விட்டு  மனதின் துரத்தல் தாங்க முடியாமல் அதே ரயிலின் முன் பாய்ந்து உயிர் விடும் மேஸ்திரி வரை தோலுரித்துக்காட்டப்படுபவை எத்தனை யதார்த்த உண்மைகள்,? முன்வைக்கப்படும் சமூக விமரிசனங்கள்தான் எத்தனை?

கேள்வி கேட்கக்கூட உரிமையற்ற சமூக அமைப்பிலிருந்து கேள்வி கேட்கும் வழக்கறிஞராகத் தன்னைத் தகுதிப்படுத்தி அதிகாரப்படுத்திக்கொள்வதற்காகவே சட்டக்கல்லூரியில் சேரும் பரியன் எதிர்ப்படும் சிறுமைகள் அனைத்தும் சமூகத்தின் கன்னத்தில் விழும் சவுக்கடிகள். ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும், சட்டம் மருத்துவம் போன்ற உயர்கல்விப்படிப்புக்களுக்குச் செல்லும்போது தமிழ்வழிக்கல்வி பயின்றதாலேயே [நானும் கூட உயர்நிலைப்பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றவள் என்பதால் அதன் வலியும் வேதனையும் இன்று வரையிலும் கூட எனக்கும் மிகவும் அணுக்கமானவை]  உயர்கல்விக்கூடங்களில் எள்ளலுக்கு ஆட்படும் இளம் மாணவர்களின் மனநிலையை நையாண்டி கலந்த மெல்லிய நகைச்சுவையோடு மட்டுமல்லாமல், மனம் கனக்கச்செய்யும் தீவிரத்தோடும் இது வரை வேறெந்தத்  தமிழ்ப்படமும் பதிவு செய்திருப்பதாக எனக்கு நினைவில்லை.

பேராசிரியர்களையும்  முதல்வர்களையும் கிண்டலுக்கான பேசுபொருளாக மட்டுமே கொச்சைப்படுத்திக் காட்டிக்கொண்டிருக்கும் வழக்கமான தமிழ்ப்படங்களிலிருந்து மாறுபட்டு மாணவர்களிடம் அவர்கள் காட்டும் கரிசனத்தையும் மனித நேயத்தையும் முன்னுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்தப்படம்

சட்டக்கல்லூரிப்பின்னணி என்றாலும் பிற அரசியல் கலப்புக்களை இலை மறை காயாக மட்டுமே காட்டியபடி மையப்பொருளை மட்டுமே முதன்மைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

வகுப்பறையில் கடைசி வரிசையிலிருந்து முதல் வரிசை நோக்கி நகர்வதற்குள்[அதுவும் ஓர் உருவகமே]  பரியன் அனுபவிக்க நேரும் அவமானங்கள், எந்த உள் நோக்கமும் இல்லாத ஓர் அப்பாவியாக - அழைப்பாளியாகச் செல்லும் உயர்சாதித் திருமணவீட்டில் முகத்தில் தெறிக்க விடப்படும் சிறுநீர், கூத்தில் பெண்வேடம் கட்டும் தகப்பனைத் துகிலுரிந்து நடத்தும் கொக்கரிப்பு என்று படம் முன் வைக்கும் சமூகத்தின் கோர முகங்களின் வெளிப்பாடுகள் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றிப் பிசிறில்லாத தெளிவான கதைப்போக்கோடு போலிப்பாசாங்கோ பாவனையோ புனைந்து கொள்ளாதபடி இயல்பாக வெளிப்பட்டிருப்பது மாரி செல்வராஜ் என்ற இயக்குநர் வரித்துக்கொண்டிருக்கும் உண்மைக்குக் கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி.

காதல் என்ற இயல்பான மென்மையான உணர்வை மிகைக் கற்பனாவாதத்தோடு மட்டுமே காட்டுவது,
கதைக்களத்துக்குத் தேவையற்ற வன்முறையை வேண்டுமென்றே விஸ்தாரப்படுத்திக்கொண்டு போவது,
பெண்ணை நுகர்பொருளாகவும் கவர்ச்சிப்பண்டமாகவுமே அரைகுறை ஆடையுடன்  சித்திரிப்பது
போன்ற சமகாலத் தமிழ்ப்பட இலக்கணங்களை  உடைத்து நொறுக்கிப்போட்டிருப்பதற்காகவே பரியேறும் பெருமாளை உச்சி முகர்ந்து பாராட்டலாம்
[மூத்த மாணவர்களின்  ராகிங் காட்சியில் கூடப் பெண்மாணவிகள் கேலி செய்யப்படுவது தவிர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்]  
பரியன் ஜோவிடம் பாடம் கற்கும் காட்சிகள், கற்றல் என்ற பாவனையில் காதலை வலிந்து திணிக்காதவை; அவன் கண்ணில் தெரிவது கற்றலின் தாகம்.. ஜோவின் கண்ணில் தெரிவது அவனது வெகுளித்தனத்தை ரசிக்கும் பாவம். 
படிப்படியாக அது காதல் என்ற கட்டத்தை எட்டினாலும் ,அது காதல் என்றுகூடத் தோன்றாதபடி மிக நுட்பமாக- மலரினும் மெல்லிதாக- சுண்டு விரல் கூட மேலே படாமல்.-.பட்டாலும் விரசமான எந்த உணர்வும் எழாமல் காட்டிக்கொண்டு போகிறார் இயக்குநர். அங்கும் கூட ஒரு சமூகச்செய்தியே பொதிந்திருக்கிறது… படத்தின் இறுதிக்கட்டத்தில் ஜோவின் தந்தை பரியனிடம் கேட்கிறார்..’’என் பொண்ணு உங்க மேலே அன்பு வைச்சிருக்கா… உங்க கூடவே வாழ ஆசைப்படறா அது தெரியுது....ஆனா அதைப்பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க தெரியலியே’’
பரியன் அதற்குச் சொல்லும் பதில் முக்கியமானது.’’அது என்னன்னு எனக்கே புரியறதுக்குள்ள நீங்கதான் என்னைக் கிழிச்சுத் தொங்க விட்டுட்டீங்களே சார்’’

கடைசி பெஞ்சில் உட்காருவதில் மட்டுமல்ல… …காதலைக் காதல் என்று மனதளவிலும் கூட ஏற்க முடியாத தயக்கத்தை, அச்சத்தை உண்டாக்கும் சாதி அடுக்கின் கீழ்மையை மிகக் கூர்மையாகச் சித்திரிக்கும் கட்டங்களில் இதுவும் ஒன்று

வன்முறையை விரிவான கிழியில் காட்டுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருந்தும், சொல்ல முற்படும்  சமூக நோக்கத்துக்காக மட்டுமே - ஒரு சிலவற்றை - அதுவும் குறிப்பாய்ச் சுட்டிக்காட்டிச்செல்லும் இயக்குநர் எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ள சிறிதும் முற்படவில்லை.  மேஸ்திரி செய்யும் சாதி அடிப்படைக்கொலைகள் எல்லாமே - பேருந்தின் கைப்பிடியில் தொங்கும் இளைஞனைப் பிடி நழுவ விடும் முதற்காட்சி தொடங்கி - மிகச் சுருக்கமான காட்சிகள் வழியாகவும் செய்தித்தாள் பெட்டிச்செய்திகள் வழியாகவும் மட்டுமே விரைவாகக் கடந்து சென்று விடுகின்றன.

படத்தின் கதையை வாசிக்காமலும் அது குறித்த எந்த முன் முடிவோடும் செல்லாமல் அதைக் காணச்சென்றதால் இயக்குநர் அதை எப்படி முடிக்கப் போகிறார் என்ற ஆவலோடு கூடிய எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. திடீர் மாற்றமாகக் கண்ணை உறுத்தும் ஒரு இலட்சியவாதம், அல்லது ஒட்டுமொத்த நம்பிக்கை வறட்சி… அல்லது ’டைட்டில் கார்டு’ போட்டு ஒரு போதனை இந்த மூன்றையுமே படத்தின் முடிவில் தவிர்த்திருப்பது ஓர் ஆச்சரியமூட்டும் அற்புதம். பரியனோடு சமதளத்தில் அமர்ந்து பேசும் அளவுக்கு இறங்கி வந்தாலும் ஜோவின் தந்தை முழுமையாக மாறிவிடவில்லை. ‘பாப்போம்..காலம் எப்படிப்போகுதுன்னு பொறுத்திருந்து பாப்போம்’’ என்று மட்டுமே சொல்கிறார் அவர் .’நீங்களும் நாங்களும் இப்ப இருக்கிற இடத்திலே …இப்படியே இருக்கிற வரை அது சாத்தியமில்லை’’ என்கிறது பரியனின் பதில்.

காலத்தின் தீர்ப்பை சாத்தியப்படுத்தக்கூடியது மனித மனங்களில் விளையும் மாற்றம் ஒன்றே..அதற்கான சிறுபொறியை வீரியமான பொறியாக ஆர்ப்பாட்டமின்றி விதைத்திருக்கும் மாரி செல்வராஜுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

படங்கள் பார்ப்பதும் கூட சலித்துப்போய்…,,அதிலிருந்தும் ஓய்வு பெற்று விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த என்னை மறு பரிசீலனை செய்ய வைத்து என் முடிவை மாற்றியிருக்கிறது அசலான நெல்லை மாவட்ட புளியங்குள நிலவியலையும் வாழ்நிலையையும் திரையில் சித்திரமாய்த் தீட்டியிருக்கும் பரியேறும் பெருமாள். .





21.11.17

செப்பிடு வித்தைகளும் செவிட்டில் அறையும் நிஜங்களும்

''மாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா?
கொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலும் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.?
நாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது''. 


ஆழ்துளைக்கிணறுகளும் அவற்றில் தவறி விழுந்து மீட்க முடியாமல், மீட்கப்படாமல் உயிர் நீத்த சிறார்களின் எண்ணிக்கையும் அன்றாடசெய்தித்தாள்களின் அங்கமாகவே ஆகிக்கொண்டு வரும் நிலையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை மட்டுமே மையமாக வைத்துக்கொண்டு, மீட்புக்காக நிகழும் 24 மணி நேரப் போராட்டத்தையும்,தவிப்பையும் - - களத்தில் நாமும் கூடவே நின்றுகொண்டிருப்பது போன்ற அதே பதட்டத்தோடு பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது அறம். நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே போகும் பரபரப்போடு அந்தச்செய்தி முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அதை மட்டுமே சந்தைப்படுத்திக்கொண்டு வியாபாரமாக்கிக்கொள்ள இந்தப்படம் முனையவில்லை என்பதுதான் மற்ற வணிகப்படங்களிலிருந்து அறத்தை வேறுபடுத்தும் அம்சம். 

நடுப்பாதையில் பழுதாகிப் பாதியில் நிற்கும் தீயணைப்பு வண்டியைப்போல செயற்று நிற்கும் அரசு இயந்திரம், அதல பாதாளத்தில் தரம் தாழ்ந்து கிடக்கும் ஜனநாயக  மதிப்பீடுகள் அரசியல்வாதிகள் என்று பலவற்றின் உருவகமாகவே ஆழ்துளைக்கிணற்றில் வீழ்ந்து கிடக்கும் சிறுமி முன்னிறுத்தப்படுகிறாள்.

விஞ்ஞானத்தின் வெற்றியைக்காட்டி, வல்லரசாக நாட்டை அடையாளப்படுத்தும் ஏவுகணை ஒரு புறம்; அது விண்ணில் உயர்ந்து செல்லும் தளத்துக்கு அருகிலேயே பஞ்சத்தின் ஆழ் மட்டத்தில் வறுமைப் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மக்கள் மறுபுறம்.. எதிர்எதிரான இந்த இருமைகள் படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சமூக மனச்சாட்சியை உலுக்கி எழுப்பிக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ராக்கெட் செலுத்தப்படுவதைத் திருவிழாப் போலக்கொண்டாடி அதற்காகப்பூசை வைத்துப்படையலிடும் மக்களுக்கு அந்த அறிவியல் தொழில்நுட்பத்தால் குறைந்தபட்ச பயன் கிடைப்பதற்கான முயற்சியைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற நடப்பியல் யதார்த்தத்தை ஒவ்வொரு நிகழ்வும் விண்டு வைத்துக்கொண்டே வருகிறது. அறிவியலின் வளர்ச்சி என்பது ஒரு துறையாக அங்கீகரிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில்  அதன் இலக்குகள் விளிம்புநிலை மக்களுக்குப் பயன் தரக்கூடியவையாக இல்லை என்ற கசப்பான உண்மையைத் திரைப்படத்தின் இடையே வரும் தொலைக்காட்சி உரையாடலும் வெளிப்படையாகப்பேசுகிறது



361 நிகழ்வுகளுக்குப்பிறகும் இப்படிப்பட்ட சம்பவங்களை  விபத்துக்களாக மட்டுமே எடுத்துக்கொண்டு சாவுக்கான ஈட்டுப்பணத்தைத் தந்து மூடி மறைக்கப் பார்க்கும் அரசியல்வாதிகள்,அவர்கள் தரும் மனரீதியான அழுத்தங்கள்,மிரட்டல்கள், நிர்வாக இயந்திரத்தின் பல்வேறு வசதிக்குறைவுகள் அத்தனைக்கும் நடுவில் கண்ணெதிரே தவித்துக்கொண்டிருக்கும் உயிரை மீட்பது ஒன்றையே மனிதாபிமானம் மிக்க சவாலாக எடுத்துக்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர் படத்தின் மையப்புள்ளியாகிறார்.

ஆழ் கிணற்றுக்காகத் துளையிட்டு விட்டு மூடாமல் அலட்சியம் காட்டிய ஆளும் கட்சிக்கவுன்சிலரைத் துணிச்சலாய்க் கைது செய்வது, ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் தீயணைப்பு வண்டி பழுதாகி நிற்கும்போது அருகிலுள்ள முள்செடிகளை வெட்டி வீழ்த்தி அதை நகர்த்தி விட்டுப் பிற வாகனங்கள் தொடர்ந்து செல்ல வழியமைத்துத் தருவது, பேரிடர் மேலாண்மைக்குப்பொறுப்பான அதிகாரிகளோடு துரித முடிவெடுப்பது, மருத்துவரையும் தீயணைப்பு மேலதிகாரியையும் தொடர்ந்த முயற்சிக்குத் தூண்டுகோல் அளித்துக்கொண்டே இருப்பது, எந்த முயற்சியும் பலனளிக்காதபோது மீட்சிஉதவிக்காகக் கயிறு கட்டி இன்னொரு குழந்தையையும் உள்ளே இறக்க சொந்தப்பொறுப்பில் சம்மதம் தருவது, அத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் உணர்ச்சி வசப்படாமல் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகக்காரர்களுக்கும் விளக்கம் அளிப்பது, கட்சிக்காரர்களை சமாளிப்பது என்று சகலத்தையும் எதிர்கொண்டு குழந்தையை மீட்டு விடவும் செய்கிறார் ஆட்சியர் மதிவதனி. 

மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத மேலிடம், அவரது செயல்களை அதிகார வரம்பு மீறலாகவே எடைபோட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த நிலையில் அவர் முன் நிற்கும் ஒரே வாய்ப்பு அமைச்சரை சந்தித்து விளக்கம் தருவது…கிட்டத்தட்ட ஒரு சமரசச்செய்கை போன்ற அதனைச் செய்வது, தான் மேற்கொண்ட அறத்துக்கு இழுக்கெனக்கருதும் அவர் அதை உறுதியுடன்  நிராகரித்து வேலையை விட்டு விலகி மக்கள் பணியில் இணைய முடிவெடுக்கிறார். மக்கள் பணிக்கு வருவதான ஆர்வத்துடன் ஆட்சிப்பணிக்கு வரும் நேர்மையான அதிகாரிகள் பலரும் ‘பதவியும் கூட அதிகார அரசியலின் ஓர் அங்கம்தான்’ என்ற குரூர நிஜத்தைப்புரிந்து கொள்ளும் கட்டம் இது. தமிழகத்தின் முன்னாள் ஆட்சித் தலைவர் சிவகாமியைப்போல - இன்னும் வெளிமாநிலங்களிலும் கூட இதற்கான முன்னுதாரணங்கள் நம்மிடையே இருந்தாலும் திரைப்படக்காட்சிப்படுத்தலும்
‘’இன்னிக்கு ஒரு பெண் கலெக்டராகிறது கூட சுலபமா இருக்கலாம்.ஆனா 
இத்தனை ஆம்பிளைங்களுக்கு நடுவிலே ஒரு பெண் தன்னோட சுயத்தை இழக்காம வாழறது எத்தனை கஷ்டம்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன்’’
என்பது போன்ற வசனங்களும் அந்தச்செயலுக்கு நியாயம் சேர்த்து வலுவூட்டுபவை


உயர்மட்டப்படிப்பாளிகளின் ஐ ஏ எஸ் கனவுகள் கலைந்து போவது போல. கபடிவீரனாக நீச்சல் வீரனாக உருப்பெறும் எளிய ஆசையும் கூட விளிம்புநிலை மக்களுக்குத் தொலைதூரக்கானலாகக் கரைந்து போவதையும் படம் தொடக்கத்திலேயே கோடி காட்டுகிறது.

கிரேக்க நாடகங்களின் கோரஸ் போலக் காட்டூர் கிராமவாசிகளில் ஓரிருவர் படம் நெடுக நையாண்டி விதைகளைத் தூவிக்கொண்டே வருகின்றனர்.. 

’’ஊரு தள்ளி இருக்கிறது ஓட்டு கேக்கும்போது மட்டும் தெரியாது’’
’இந்தியா வல்லரசாயிடிச்சுப்பா…என்னா மாதிரி ஒரு புதுக்கருவி கண்டு பிடிச்சிருக்காங்க பாருங்க குழந்தையை எடுக்க’’ [தாம்புக்கயிற்றைப்பார்த்துச்செய்யும் நக்கல்]
’சொட்டு மருந்து ஊத்தியே தண்ணி இல்லாத தாகத்தைத் தீத்துடுவாங்க’’

என்பது போன்ற அந்தக் குரல்கள், அரசாங்க இயந்திரத்தின் மீதும், அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து வரும் இன்றைய கிராமீய இந்தியாவின் குரல்களாக - ஆள்பவர்களுக்கு அவை அனுப்பும் எச்சரிக்கை மணிகளாகவே ஒலிக்கின்றன…

ஆட்சித் தலைவரே முன்னிருந்து காரியங்களை நடத்திக்கொண்டு போனாலும் கூடப் பல முனைகளிலும் அவர்கள் சந்திக்க நேரும் ஏமாற்றங்கள்…
’’இவங்க காப்பாத்த மாட்டாங்க ! நம்ம கொழந்தையை, நம்ம பொண்டாட்டியை நாமதான் காப்பாத்திக்கணும் ’’ என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தி அமைப்பின் பிடியிலிருந்து அவர்களை விலகி ஓடச் செய்கிறது…

கிராமங்களின் இன்னொரு முகத்தையும் அறத்தில் பார்க்க முடிகிறது..
தண்ணீருக்கு பதிலாகக் குளிர் பானம் , காது டாக்டரிடம் போகக்காசில்லாத நிலையிலும் காமரா, ஒலிப்பதிவுக்கருவி வசதியுடன் ஸ்மார்ட் ஃபோன்..! இந்தியாவின் பின் தங்கிய கிராமம் கூட இன்று இப்படித்தான் இருக்கிறது…தேவையானது கிடைக்காமல் தேவையற்றவை  மலிவாய்க்குவியும் அபத்தங்கள்.. ஆழ்துளைக்கிணற்றில் விழுவோரை  மீட்க ரோபோ கண்டு பிடித்த முகம்தெரியாத மணிகண்டன் என்னும் இளைஞன் முன்னிறுத்தப்படாமலே - அவன் துணை பெறப்படாமலே படம் முடிந்து போவதும் இந்தச்செய்தியையே முன் வைக்கிறது… வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்படும் அவசியமற்ற மனித உயிர்களுக்குத் தேவைப்படும் அவசியமான ஆராய்ச்சிகள் என்றுமே கண்டுகொள்ளப்படுவதில்லை.

பின்னணியில் இருக்கும் காலிக்குடங்களை கவனமாய் மறைத்தபடி வறண்ட வயல்வெளியில் போலியோ சொட்டுமருந்து ஊற்றுவது  அரசுக்கு விளம்பரப்படமாகப்பயன்படுவது, துளைக்கிணற்றில் சிறுமி விழுந்த சம்பவம் தொலைக்காட்சி டி ஆர் பி ரேட்டிங்கைக் கூட்டும் பேசுபொருளாவது; …என்று படம் நெடுகிலும் பல தரப்புக்களின் மீதான விமரிசனம் வந்து கொண்டே இருக்கிறது,

ஆட்சித் தலைவரைத் தவிரப் பிற அனைவரையுமே எதிர்மறை மாதிரிகளாகக்  காட்டிக்கொண்டிருக்காமல் ’’விஷக்கிணறாக இருந்தால் கூட இறங்கி விடுவேன்’’ என்று சொல்லும் தீயணைப்பு அதிகாரியும், முழுநேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் மருத்துவக்குழுவினரும் ஆறுதல் அளிப்பவர்கள்.

சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம் என்ற பாரதி, சந்தி தெருப்பெருக்கும் சாத்திரத்தையும் ஒதுக்காமல் கற்க வேண்டும் என்றே சொன்னான்…ஆனால் இன்றைய அரசியல் அதிகார பொருளியல் அவலங்களோ சமூகத்தின்  ஒருபக்கத்தை  வீங்க வைத்து இன்னொரு பக்கம்  அழுகி நாற்றமடிக்குமாறு  செய்து கொண்டிருக்கின்றன. படத்தின் கதை நிகழும் காலம் [ஒரே நாள்], களம் [ஆழ்துளைக்கிணறு சார்ந்த பொட்டல் வெளி] என்ற எல்லைகள் மிக மிகக்குறுகியவை என்றாலும் கூடப் பல வகையான பரிமாணங்களோடு இவற்றைக் காட்ட முன் வந்ததற்காகவே அறத்தையும் இயக்குநர் கோபிநயினார் மற்றும் அவரது குழுவினரையும்  பாராட்டவேண்டும்.

மிகை நடிப்பாக ஆகி விடாமல் உணர்ச்சியைத் தன்வசப்படுத்தும் அதிகாரியாக வாழ்ந்திருக்கும் நயன்தாரா படத்தின் தயாரிப்பாளரும் கூட என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.. காட்டூர் கிராமத்தில் 2 மணி நேரம் உலவி வந்தது போன்ற உணர்வைத் தோற்றுவித்து விடும் நடிகர்கள், காமராக்காரர்கள் என அனைவரின் ஒருமித்த பங்களிப்பும் சேர்ந்ததாகவே அறம் உருப்பெற்றிருக்கிறது.

அண்மையில் மதுரை சென்றுகொண்டிருந்தபோது ஒரு வீடியோ கோச்சில் பாகுபலி படம் போட்டார்கள். ‘’ எத்தனை தரம் பாத்தாதான் என்ன,,அந்தப்படத்தையே  போடுங்க, போடுங்க’’ என்று அதற்கு எழுந்த ஆரவாரக் குரல்கள் என்னை மனம் சலிக்க வைத்தன.

எத்தனை நந்தி விருதுகளையும் தேசிய விருதுகளையும் அள்ளிக்குவித்தாலும் இந்தியாவின் உண்மையான முகமாக பாகுபலியை நிறுத்தி விட முடியுமா என்ன?

ஏழ்மை இந்தியாவைக்காட்டி நாட்டை ஏளனம் செய்வதான வசைகள் பதேர்பாஞ்சாலி காலத்திலிருந்து திரைமேதை சத்யஜித் ரே மீது எழுந்தவைதான்…

அறம் மீதும் அத்தகைய கணைகள் பாயக்கூடும்.

மாயாஜால கிராஃபிக்ஸ் வழி செப்பிடு வித்தை காட்டும் பாகுபலிகளா?
கொஞ்சம் பிரச்சார நெடி வீசினாலும் செவிட்டில் அறைவது போலக் கசப்பான நிஜத்தைப்பேசும் அறம் போன்ற படங்களா.?
நாம் முடிவு செய்ய வேண்டிய நேரம் இது. 
  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....