துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.1.26

படிக்கட்டு-மொழியாக்கச் சிறுகதை

சொல்வனம் இணைய இதழில்-25.01.26 வெளியாகியிருக்கும் என் மொழியாக்கச் சிறுகதை

படிக்கட்டு
                     


மூலம்
: வங்கமொழியில்- ஆஷாபூர்ணாதேவி
ஆங்கில வழி தமிழாக்கம்- எம் சுசீலா

இது நடந்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும்.
நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த உலகிற்கு மேல்.., ஆகாயத்தின் ஏதோ ஒரு மூலையில் இரண்டாம் உலகப்போரின் கருமேகங்கள் திரளத்தொடங்கி விட்டன என்பது பற்றி எதுவுமே தெரியாதவர்களாய் முழுக்க முழுக்க அமைதியான சூழலில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். கடைகளிலிருந்து அரிசியோ துணியோ வாங்குவது கூட சட்டத்துக்குப் புறம்பானதாக ஆகி விடும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. வாங்கும் சக்தி மட்டும் ஒருவருக்கு இருந்தால் புலிப்பாலை வாங்குவது கூட சாத்தியமே என்பதை மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அடிப்படை மருந்துகளுக்குக் கூடத் தட்டுப்பாடு ஏற்படும் காலம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் எங்களிடம் இல்லை. சாமானிய மக்களின் சொத்து முழுவதும் போர்க் குண்டு வீச்சில் புகையாகி விடப்போகிறது என்று அந்தக்கடவுள்களே சொல்லியிருந்தாலும் நாங்கள் முன்பு அதை நம்பி இருந்திருக்க மாட்டோம். நாட்டு மக்களெல்லாம் கட்டிய துணியோடு மட்டுமே நிற்கப்போகும் ஒரு நாள் வரக்கூடும் என்பதை எங்களில் மிகுந்த கற்பனை வளம் கொண்டவர்களால் கூட அனுமானித்திருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

வசதி படைத்த சமூகத்தினர் சிலர் ,எங்கள் அடிமை நிலை குறித்து வெளிப்படையாகப் புலம்பி அலட்டிக் கொண்டிருந்தபோதும் எங்களைப்போன்ற புத்திசாலிகளுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. மாதம் பிறந்ததும், முதல் தேதியன்று சம்பளக்கவரோடு நான் வீட்டுக்குள் நுழையும் நேரத்தில் இந்த உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் ஒரு பேரரசனைப் போன்ற ஓர் உணர்வே எனக்கு ஏற்படும்.

அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பெசதியும் அவளது தாயும் எங்களை நாடிக் கண்ணீரோடு வந்தது அந்த நாளிலேதான்.

அவர்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பல வருடங்களுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் கட்டியிருந்த வீடுகளில் வாடகைக்குக் குடியிருந்தவர்கள். பிழைப்புத் தேடி கல்கத்தா வரும்படி சூழ்நிலை அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியிருந்தது. அந்த நிலையில் எங்களைத் தவிர அவர்கள் வேறெங்கேதான் போவார்கள்? கிராமத்து வீட்டில் எங்களுக்கென்று எஞ்சியிருந்த மிக மூத்த, நோயுற்ற உறவினர்கள்தான் பெசதியின் தாய்க்கு எங்கள் முகவரியைக் கொடுத்திருந்தார்கள். அதை வைத்துக்கொண்டு எங்களைத் தேடிக் கண்டுபிடிக்க அவள் அரும்பாடு பட வேண்டியதாக இருந்தது.

எங்களுக்குத் தங்கறதுக்கு இடம் மட்டும் எப்படியாவது கொடுத்திடுங்க அக்கா. இல்லேன்னா, உருப்படியில்லாத இந்தப் பெண்ணோட இந்த இடத்திலே இருந்து நான் நகரக்கூட மாட்டேன்என்று என் இளம் மனைவியின் காலில் விழுந்து மன்றாடியபோது மேலே சொன்ன விவரங்களையெல்லாம் விரிவாக விளக்கிச் சொன்னாள் அவள்.

இவையெல்லாம் நடந்தது பத்து வருடங்களுக்கு முன்பு என்பதை முதலிலேயே நான் சொல்லியிருக்கிறேன். அப்போது என் மனைவியின் உடலில் இளமை இருந்தது, இதயத்திலும் இரக்கம் இருந்தது. பிறரிடம் பரிவு காட்டுவது போன்ற நற்பண்புகளெல்லாம் நகைப்புக்குரியது, பைத்தியக்காரத்தனமானது என்றெல்லாம் அவள் நினைக்கவே இல்லை. அதனால் மனம் நிறைந்த அன்போடு அன்று அவள் அவர்களிடம் பேசினாள்.
அதைப்பத்தி என்ன இப்போ?இங்கேயே எங்களோட இருந்திட்டுப் போங்களேன், எங்க கிட்ட வராம வேற யாரைத் தேடிப் போவீங்க நீங்க?”என்றவள் எங்கள் மகனை நோக்கி,
அந்தப்பொண்ணோட முகம் எப்படி வெளிறிக்கிடக்கு பாரு தம்பி..நீ அவளுக்குக் கொஞ்சம் பிஸ்கட்டும் மிட்டாயும் பலகாரமும் கொண்டு வந்து தரலாம் இல்லையாஎன்றாள்.
பெசதிகொஞ்சம் தண்ணி குடிக்கிறியாஎன்று அவளைக்கேட்டாள்.
பிஸ்கட்டுகளையும் பிற தின்பண்டங்களையும் ஆர்வத்தோடு சாப்பிட்டு முடித்து ஒரு செம்பு தண்ணீரையும் அருந்திய பிறகு, பெசதி சிறிதுஆசுவாசம் அடைந்தாள். பிறகு, தனக்குப் புதிதாக அறிமுகமான அந்த அத்தையைக் கண்கொட்டாமல் பார்த்தவள்,
அட..இவங்கதான் எப்படி தேவதை மாதிரி…, வெள்ளைக்காரங்க மாதிரி இருக்காங்கஎன்றாள்.

அதற்குப பின்பு பெசதியின் தாய் எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டாள் என்று சொல்லத் தேவை இல்லை.

அந்தப்பெண்மணி நன்றி உணர்வு இல்லாதவள் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. கல்கத்தாவைச் சேர்ந்த பணிப்பெண்கள் யாருமே இந்த அளவுக்குத் தன்னலம் இல்லாமலும், நன்றியுணர்வோடும் வேலை செய்வார்கள் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. அவள் செய்யும் கடுமையான வேலைகளுக்கு நாங்கள் தரும் சொற்ப ஊதியத்துக்கு இந்த அளவுக்கு நன்றியோடு வேலை செய்வதென்பது எளிமையான கிராமத்து மனிதர்களால் மட்டுமே முடியும்.

சில சமயங்களில் என் மனைவி அவளிடம் இவ்வாறு சொல்லுவதுண்டு.
முழு நேரமும் ஏதாவது ஒரு வேலை செஞ்சுக்கிட்டு, ஏதோ கவலைப்பட்டுக்கிட்டே இருக்கீங்களே அது ஏன் பெசதி அம்மா? இதுக்கு முன்னாலே எங்க கிட்டே வேலை பார்த்த ஆளுக்கு சாப்பாடு, துணிமணி , சம்பளம் இதெல்லாம் கொடுக்காம இருந்தோம்னா நெனக்கிறீங்க? எல்லாத்தையும் கொடுத்தும் அவன் எந்த வேலையையுமே ஒழுங்கா செஞ்சதில்லை

அப்படியெல்லாம் சொல்லாதீங்க அக்கா, நாங்க தங்கறதுக்கு நீங்க இடம் கொடுக்காம இருந்திருந்தா இத்தனை பெரிய ஊரிலே நான் எங்கே போய் எந்த இடத்தைக் கண்டுபிடிச்சிருப்பேன்? இது ஒரு ஊர் மாதிரியே தெரியலை எனக்கு, ஒரு ராட்சசனோட குகை மாதிரியில்லே தெரியுது. இதோட தெருக்களைப் பார்த்தாலே எனக்கு நடுங்குது. இதிலே..என்னோட குழந்தையை நான் எங்கே கூட்டிப் போயிருப்பேன்? எல்லாரும் எங்களை விரட்டித்தான் அடிச்சிருப்பாங்க. நீங்க ரொம்ப இரக்கம் உள்ளவங்க. ரெண்டு வேளை டீ,பலகாரம், தலைக்கு எண்ணெய்இப்படியெல்லாம் வேற யார் தருவாங்கஎன்று உடனே இரக்கப்படும் வகையில் பதில் அளிப்பாள் பெசதியின் தாய்.

உண்மையில் அந்தச்சிறுமியும் நிறைய வேலை செய்தாள் என்றே சொல்லவேண்டும். எலும்பும் தோலுமாக…,ஒல்லியான தேக வாகு கொண்டிருந்த பெசதி, வசதியான சூழலில் வாழ்ந்திருந்தால் நிச்சயம் இத்தனை வேலைகள் செய்திருக்க மாட்டாள். இங்கோ நாள் முழுவதும் மாற்றி மாற்றி அவள் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தாள். அவளுக்கு எப்படித்தான் இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ என்று நானே ஆச்சரியப்படுவேன். துணி துவைப்பது, படுக்கையை சீர் செய்வது, தேநீர் தயாரிப்பது என்று பலவும் பெசதியின் வேலைகளாகவே ஆகி விட்டிருந்தன.

எங்கள் மகன் ஒரு ராஜகுமாரனைப் போல எடுத்ததெற்கெல்லாம் அவளையே ஏவியபடி இருந்தான்.
முழு நாளும் இப்படி அவளுக்கு வேலை சொல்லிக்கிட்டெ இருக்கியே, அவங்க இங்கே வர்றதுக்கு முன்னாலே என்ன செஞ்சேன்னு யோசிச்சுப்பாரு. என் காதிலே விழறதெல்லாம்பெசதி,பெசதிந்னு நீ ஓயாம கூப்பிடறதுதான்என்று சில சமயம் அவனிடம் நான் சொல்வதுண்டு.

அதுக்கு நான் என்ன செய்யறது? எப்ப பார்த்தாலும் ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருக்கறது அவளுக்குப் பிடிச்சிருக்கு. இல்லேன்னா அடிக்கடி என் கிட்ட வந்துஎன்ன செய்ய என்ன செய்யந்னு அவ ஏன் கேக்கறா? “ என்று அலட்சியமாய்ப் பதில் தருவான் அவன்.

எங்கள் மகன் அவளை விட வயதில் மூத்தவனா என்பதெல்லாம் எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் அந்தஸ்தில் அவனை விடத் தான் தாழ்ந்தவள் என்ற உணர்வு அவளிடம் இருந்ததால், அவனை அண்ணா என்றுதான் குறிப்பிடுவாள். சில நாட்களில் எங்களுக்கும் அது பழகிப் போய்விட்டதால் அது பற்றி வியப்பேதும் ஏற்படவில்லை.

ஆனாலும்..,இவையெல்லாம் நடந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. வருடங்கள் பாட்டுக்கு அவற்றின் போக்கில் உருண்டோடிக் கொண்டிருந்தன. பூமி தினமும் சுழன்று கொண்டிருப்பது பற்றியோ , அன்றாட வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது பற்றியோ பொதுவாக நாம் கண்டுகொள்ளாததது போலவே நாங்களும் எங்களைச் சுற்றி நடப்பதைக் கண்டு கொள்ளாமல்தான் இருந்தோம். பாவாடைக்கு மீறிப் புடவை கட்டும் நங்கையாக பெசதி வளர்ந்து விட்டதையோ, முழுநாளும் பூனைக்குட்டி போல எங்கள் காலடியையே சுற்றிச்சுற்றி வந்தபடி நிறுத்தாமல் ஏதாவது பேசிக்கொண்டே இருந்த முந்தைய நாட்களைப் போல இப்போது அவள் இல்லை என்பதையோ நாங்கள் கவனத்தில் கொள்ளாமலேயே இருந்தோம்.

அதை நான் எப்போது கவனித்தேன் தெரியுமா? போர்ச்சூழல் காரணமாக நாங்கள் வெளியேற நேர்ந்தபோதுதான்..!

குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்த பயம் இல்லாத பாதுகாப்பான இடம் தேடி, என் உறவினர்களிடமும், முன்பின் தெரியாதவர்களிடமும், சில நாட்களே பழகியவர்களிடமும், பல காலம் பழகியவர்களிடமும் நீர் மருட்சி கொண்ட ஒரு நோயாளியைப்போல நான் மன்றாடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலேதான் என் மனைவி அவளுக்கிருந்த அந்த பயத்தை என் முன் வைத்தாள்.
நாங்க தலை மறைவா இருக்க எங்கே இடம்கிடைக்கப் போகுதோ தெரியல..நான் என் பையனோட எங்கே வேணும்னாலும் போயிட முடியும்.ஆனா..பெசதி? அந்தப்பொண்ணு இப்ப ரொம்ப வளர்ந்திட்டா. பதினாறு வயசுக்காரி மாதிரி உயரமா இருக்கா. அவளை எங்கே கூட்டிக்கிட்டுப் போறது? நம்மோட சொந்த ரத்தபந்தம்னா அப்ப அது வேற. இவளோ நம்ம கிட்ட வேலை பார்க்கிறவளோட பொண்ணு. அவங்களை நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்களாவே நாம நினைச்சாலும் மத்தவங்களும் அப்படி நினைப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்லியா? “
எனக்கு அவள் கூற்றிலிருந்த உண்மை புரியாமல் இல்லை.

அது கவலை தரும் விஷயம்தான். ஆனாலும் இப்படிப்பட்ட நேரத்தில் அவர்களை அநாதரவாக விடுவதற்கும் என்னிடமிருந்த மனிதாபிமான உணர்வு இடம் தரவில்லை. உதவி தேவைப்படும் வேளையில் அப்படி அவர்களைப் புறக்கணித்து விட முடியாது. ஆனால் அது அத்தனை எளிதான காரியமாக இல்லை. நிலையாக இருக்கும் ஒரு தோட்டத்திலிருந்து களைகளை எடுத்து வீசுவது போல என் மனைவியையும், மகனையும் வேறு யாருடைய குடும்பத்திலாவது நான் வலிந்து திணித்து விடலாம், ஆனால் என்னிடம் வேலை பார்ப்பவளையும், அவள் மகளையும் நான் அப்படி வெளியேற்ற முடியாது. நான் அந்தப்பேச்சை எடுத்ததுமே உறவினர்கள் என்னை எதிரியைப் போலப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

கடைசியில் பல சிக்கல்களுக்கிடையே அவர்களுக்கு ஒரு ஏற்பாடு செய்து முடித்தபோது பெசதியின் தாய் பற்றி இனிமேல் நான் கவலைப்படத் தேவையில்லை என்பது எனக்கு விளங்கியது. தானாகவே ஒரு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள் அவள் . எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மனிதர், தன் குடும்பத்தை கிராமத்துக்கு அனுப்பி விட்டு வீட்டைப்பார்க்க ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒண்டிக்கொள்ள ஒரு கூரை தந்ததற்கு நன்றிக்கடனாக, அவரது வீட்டுப்பராமரிப்பு, சமையல் முதலிய வேலைகளை பெசதியின் தாய் ஏற்றுக்கொண்டாள்.

அவளைப் பற்றிய பொறுப்பு எனக்கும் இருந்ததாக நினைத்ததால் அவளை எதற்கும் எச்சரித்து விடுவது நல்லதென்று ஒரு நாள் இப்படிச் சொன்னேன்.
பெரிய நகரத்திலே இருக்கிற ஜனங்கள் எப்படிப்பட்டவங்கன்னு புரிஞ்சுக்கறது அத்தனை சுலபம் இல்லை. அவங்களோட நிஜமான நோக்கம் என்னன்னு நமக்குத் தெரியாது. நாங்க உனக்கு அடைக்கலம் தர முடியாத நிலையிலே இருக்கிற இந்த நேரத்திலே நீ அநாவசியமா எந்த சிக்கல்லேயும் மாட்டிக்காம இருக்கணும்னு நினைக்கறேன்

அவளோஅதையெல்லாம் பத்திக் கவலைப்படாதீங்க அண்ணா. அந்த வீட்டிலே இருக்கிற மனுஷர் ரொம்ப கௌவரமானவராத்தான் இருக்கார்என்று புன்னகையோடு சொன்னபடி நான் கொண்டிருந்த பயங்களையெல்லாம் ஒரே நிமிடத்தில் புறந்தள்ளி விட்டாள்.
அவரது கௌரவம்மதிப்பு இவை பற்றியெல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது, அவற்றை அவள் எப்படிக்கண்டு பிடித்தாள் என்பது பற்றி எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இனிமேல் அது என் கவலையில்லை என்பது உறுதிப்பட்டு விட்டதால், குளிர் ஒடுக்கும் ஒரு மாலை நேரத்தில், நரிகளும் பாம்புகளும் வெற்றிடங்களும் நிறைந்த ஒரு தொலைதூரக்கிராமத்தில் என் மனைவியையும்,மகனையும் விட்டு விட்டு நான் மட்டும் நகரத்துக்குத் திரும்பினேன். நான் தங்குவதற்கு ஓர் உணவகத்தில் இடம் தேடிக்கொண்டேன். அதுவரை நாங்கள் வசித்த வீடு என் சொந்த வீடுதான் என்றாலும் நான் மட்டுமே அதில் தனியாகத் தங்கியிருக்க முடியாதில்லையா?

அதற்குப்பிறகு நடந்ததையெல்லாம் இங்கே விவரித்துக்கொண்டு போவது தேவையற்றது.

செய்தித்தாள்கள், அரசாங்க அறிக்கைகள்,பொய்யான வதந்திகள் ஆகியவை உண்மையான போர் நடப்புகள் பற்றித்தரும் விதம் விதமான தகவல்களால் ஒவ்வொரு குடும்பமும் எப்படிப்பட்ட குழப்ப நிலையில் இருந்தது என்பது இப்போதும் கூட எல்லோருக்கும் நினைவிருக்கும். உயிர் வாழ்வதற்காக உயிரையே பணயம் வைத்துக்கொண்டு இருந்தபின், தனியாக மடிந்து போவதை விடக் குடும்பத்தோடு சேர்ந்து செத்துப்போவதே மேல் என்பது உணர்வில் உறைத்தபின்.., எங்களுக்குப் பரிச்சயமான சூழ்நிலையில் வாழ்வதற்காக என் குடும்பத்தை ஒரு வழியாக நகரத்துக்குக் கூட்டி வந்தேன். கைவிடப்பட்டது போல், புறக்கணிப்புக்கு ஆளானது போல் இருந்த நகரம், மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. வெள்ளப் பெருக்கைப்போல மனிதக்கூட்டம் பெருகி வந்து நகரத்துக்குள் திரும்ப வந்து சேர்ந்தது.

எங்கள் அக்கம்பக்கத்தில் , இதுவரை எங்களுக்கு அறிமுகமான …,தெரிந்த குடும்பங்களை விட, பழக்கமில்லாத முகங்களே அதிகம் தென்பட்டன.

பெட்டியிலிருந்து பொருட்களைப் பிரிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே.
அனோங்கோ பாபு வீட்டுக்குப் போய் நாங்க திரும்பி வந்து விட்டோம்னு பெசதி அம்மா கிட்டே சொல்லுங்கஎன்றாள் என் மனைவி. ஒருவேளை அவளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டிருக்கலாம். ஒன்றரை ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்திருக்கும்போது சீர்குலைந்து கிடந்திருந்த வீட்டை ஒழுங்கு செய்வது அவ்வளவு சுலபமில்லைதான். அப்படி நாம் கூப்பிட்ட உடனேயே அவள் வந்து விடுவாளா என்ற சந்தேகத்தை நான் கிளப்பியபோது,
வருவாளோ மாட்டாளோன்னு ஏன் சொல்றீங்க? நாம இப்படி இந்த இடத்தை விட்டு போக வேண்டி வந்திடுச்சேன்னு அன்னிக்கு அவ எப்படி அழுதா தெரியுமா?”

ஆனால் பெசதியின் தாயைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அனோங்கோ பாபுவின் உறவினர் ஒருவரது குடும்பம் கலகத்தாவுக்குத் திரும்பி வந்ததும், அவர்களிடம் அவள் வேலைக்குச் சேர்ந்து விட்டாள் என்று கேள்விப்பட்டேன். இனிமேல் அவள் இல்லையே என்று வருத்தப்படுவதைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை. நாங்கள் வீட்டை விட்டுப் போக நேர்ந்ததாலேயே துரதிருஷ்டம் பிடித்த அவள் வேறெங்கோ போய்த் தொலைந்து விட்டாள்.

வீட்டில் குவிந்து கிடந்த ஏராளமான வேலைகள் எங்கள் முதுகை ஒடித்தன. தினமும் மாலை வேளைகளில் அன்றாடம் செய்தாக வேண்டிய பல வேலைகளையும் பட்டியல் போடும் என் மனைவி, பெசதி அம்மாவின் நல்ல குணங்களையெல்லாம் புகழத் தொடங்கி விடுவாள். முடிவில்,
இப்ப மட்டும் அவளோட அட்ரஸ் இருந்தா,,,? “ என்று வருத்தத்தோடு முடிப்பாள்.
நான் ஒரு வேளை சரியான இடங்களில் தேடிப்பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் அப்போது அவள் முக பாவனையில் வெளிப்படும்.

ஆனால் இத்தனை பெரிய நகரத்தில் அவளை எங்கே என்று நான் தேட முடியும்?

மனமார வேண்டிக்கொண்டால் கடவுள் வரம் கொடுக்கும், நேரில் கூட வரும் என்று சொல்வதைப் போல.. எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு நாள் பெசதியின் அம்மா திரும்பி வந்தாள்.

ஒரு மாலை நேரத்தில் நான் வீடு திரும்பியபோது,
இன்னிக்கு பெசதியோட அம்மா என்னைப் பார்க்க வந்திருந்தாஎன்றாள் மனைவி.

அடஅவ இங்கே வந்தாளா? கடைசியா கடவுள் கண் திறந்து பார்த்திட்டார் போல இருக்கு. சம்பளத்தைக் கொஞ்சம் அதிகமா கூட்டித்தரேன்னு நீ கட்டாயம் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன். பழைய ரேட்டெல்லாம் இப்போ மாறிப் போச்சு

உங்களோட சௌகரியத்தைத் தவிர வேற எதையுமே யோசிக்க மாட்டீங்களா நீங்க? அவ இங்கே வேலை செஞ்சாநீங்க சொன்னபடி சம்பளம் அதிகமாத் தரலாம்னுதான் நானும் நெனச்சேன். ஆனா இனிமே எல்லாம் அவ வீடு பெருக்க மாட்டா, சமையல் கூட செய்யறதில்லையாம். வீடு மேற்பார்வை மட்டும்தானாம். அவ பார்க்கிற வேலை எவ்வளவு சுலபமானதுன்னு நான் சொன்னா நீங்க ஆச்சரியப்படுவீங்க. அவ எப்படி நல்லா உடுத்தியிருக்கா தெரியுமா? வெள்ளை வெளேர்னு முழுக்கைச் சட்டை, அழகான பூப்போட்ட நல்லரகப் புடவை…! அப்புறம் பெசதி? இங்கே நாம பார்க்கிற பள்ளிக்கூடத்துப் பசங்களை விடப் பிரமாதமா இருக்கா. கோடு போட்ட புடவை, பூப்போட்ட சட்டை..கை நிறைய வளையல்…, இன்னும் கேளுங்க , குதிகால் உயரமான செருப்பு..! ஒரு காலத்திலே நமக்குத் தெரிஞ்சவளா இருந்த அதே பெசதிதான். ஆனா முன்னே மாதிரி இப்ப பேசக்கூட இல்லை. அவ வேலை பார்க்கிற வீட்டுக்காரரே பெசதி பள்ளிக்கூடம் போறதுக்குப் பணம் கட்டிடறாராம். அது தவிர குரலுக்கு வேற அவ ஏதோ பயிற்சி எடுத்துக்கறா போல இருக்கு, உண்மையாவே அவளோட குரல் இப்போ எப்படி இனிமையா இருக்கு தெரியுமா? என்னிக்காவது ஒரு நாள் அவளுக்கு ரேடியோவிலே கூட சான்ஸ் கிடைக்கும் பாருங்க

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
போரால் நேர்ந்த பல சலசலப்புகளும் மாற்றங்களும்தான் அவர்களின் அதிருஷ்டத்தை இப்படிப் புரட்டிப் போட்டிருக்க வேண்டும்.

ஆனால்..இது நடந்தும் பல நாட்கள் ஓடி விட்டன.

எங்கள் வாழ்க்கையிலும் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. நாங்கள் நினைத்தது போல எங்கள் மகனை உருவாக்க முடியவில்லை. பள்ளிப்படிப்பை இடையே இரண்டாண்டுகள் விட நேர்ந்ததால் தொடர்ந்து அவனால் சரியாகப் படிக்க முடியவில்லை. கஷப்பட்டுப் படிப்பதைப் போல சில நாட்கள் வீட்டில் பாவனை காட்டியவன் பிறகு அடியோடு அதை விட்டு விட்டான். வீட்டில் வைத்துப் பயிற்சி கொடுக்க ஆசிரியர்களை ஏற்பாடு செய்தும் அதுவும் உதவவில்லை. இந்தச்சின்ன வயதில் குறுக்கு வழியில் வெற்றி பெற ஆசைப்பட்டு அதைத்தேடத் தொடங்கி விட்டான் அவன்.

அவனது அம்மாவின் உடல் நலமும் இப்போது முன்னைப் போல் இல்லை. நானும் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தேன்.

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறெங்கோ திசை மாறிப் போய்க்கொண்டிருந்தாலும் இது நிச்சயமாக என் கதை அல்ல.
இது பெசதி, மற்றும் அவள் அம்மாவின் கதைதான்

இப்பொழுது நிகழ்காலத்துக்கு வருவோம்.

எந்த வேலையும் இல்லையென்றால் மதிய உணவுக்குப்பிறகு சிறிது நேரம் தூங்குவது என் வழக்கம். இன்று தூங்கும்போது பரிச்சயமான குரல்கள் கேட்டு சட்டென்று விழிக்துக்கொண்டேன். ஜன்னல் வழியே பார்த்தபோது என் ஊகம் சரிதான் என்பது தெரிந்தது. முன்பொரு நாள் பெசதியின் அம்மா கண்ணீரோடு எந்த வாசல் முற்றத்தில் எங்கள் காலடியில் வந்து விழுந்தாளோ அதே இடத்தில் இப்போது தாயும்,மகளும் உட்கார்ந்திருந்தனர்.

பெசதியின் அம்மா, வெள்ளை நிற முழுக்கை சட்டையும் சின்னக்கறுப்புக் கரையோடு கூடிய புடவையையும் அணிந்திருந்தாள். அவளது பெண் என்ன உடுத்தியிருந்தாள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அவள் வைத்திருந்த கைப்பை மிகவும் விலை உயர்ந்தது என்பது மட்டும் கண்ணில் பட்டது.

என் மனைவி சொன்ன ஏதோ ஒரு விஷயத்துக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாள் பெசதியின் அம்மா.
நீங்க இவ்வளவு கஷ்டத்திலும் நெருக்கடியிலும் இருக்கீங்கங்கறதைக் கேக்க எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு. ஒரு தடவை என்னை வந்து பார்க்கச்சொல்லி அண்ணன் கிட்டே சொல்லுங்க, என்னாலே ஒருவேளை ஏதாவது உதவி செய்ய முடியுதான்னு பார்க்கிறேன். சினிமா உலகத்திலே இருக்கிற எல்லாருக்கும் என்னோட மண்டாலிகா மேலே நல்ல மதிப்பு இருக்கு. அவ சொன்னா மேனேஜர் காது கொடுத்துக் கேப்பார். அவளோட பேரும் ஃபோட்டோவும்தான் இப்ப எல்லா பேப்பர்லேயும் வருதே, நீங்க பார்க்கலியா? ம்ம்ம். என்ன சொல்றீங்கநீங்க சினிமாவே பார்க்கறதில்லியா..? ஆமாமாம், இந்த நிலையிலே அது உங்களாலே எப்படி முடியும்? நான் வேணும்னா பாஸ் வாங்கித் தரேன், ஒரு நாள் போயிட்டு வாங்க. ஆமாம்..உன்னோட புதுப்படத்தோட பேரு என்ன பெசதிஇல்லே இல்லேமண்டாலிகா? “

மண்டாலிகா என்ற பெசதி…,தன் கைக்குட்டையில் இருந்த முகப்பவுடரைக் கழுத்தில் ஒற்றியபடியே,
“ ‘போருக்குப் போ..’ அதுதான் பேருஎன்றாள்.

ஆமாமாம், அதுவேதான். என்ன செய்யறது? இந்தமாதிரிப்பேரெல்லாம் என்னாலே ஞாபகம் வச்சுக்க முடியறதில்லை. ஒரு நாள் ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு இவ என்னையும் கூட்டிக்கிட்டுப் போனா. அப்பா…! எத்தனை அற்புதமான இடமா இருந்தது அது? இவளை எல்லாரும் எத்தனை ஆர்வமா பார்த்தாங்க தெரியுமா? என்ன இருந்தாலும் இவ கதாநாயகி இல்லியா? மேனேஜர் கிட்ட அவ ஒரு வார்த்தை சொன்னாப் போதும், அஞ்சு பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திடுவா. உங்க பையனுக்கு சரியான வேலை அமையலைன்னு சொன்னீங்க.., அவன் விருப்பப்பட்டா டிக்கெட் விக்க வேணும்னா போகலாம்.
ஆமாம்இதெல்லாம் என்னம்மா கொண்டு வந்திருக்கீங்க ? ஐயையோ ,டீயெல்லாம் நான் இந்த நேரத்திலே குடிக்கிறதில்லையே. இனிப்புக்களும் வேண்டாம், எனக்கு வயத்துக்கு ஒத்துக்கறதில்லை, நெஞ்செரிச்சல், வாயுக்குத்து இதெல்லாம் இருக்கு. என்னது..மண்டாலிகாவுக்கா? ஐயோ..? அவ இப்போ எல்லாம் இனிப்பையே தொடறதில்லை. ஸ்வீட் சாப்பிட்டா அவளோட குரல் கெட்டுப் போயிடும்னு அவளோட வாத்தியார் சொன்ன நாளிலே இருந்து அவ இனிப்பையே தொடறதில்லை. என்னது..டீயா? அவ இந்த மாதிரி டீயெல்லாம் இப்போ குடிக்கிறதில்லை. உள்ளதிலேயே உசந்த ரகம் மட்டும்தான் குடிக்கிறா. பாவம் நீங்க…! எதுக்குதான் தேவையில்லாம இதையெல்லாம் செஞ்சீங்களோ? சரி, நாங்க கிளம்பறோம், அப்புறமா ஒரு தடவை வரோம்மா. ஸ்டூடியோவிலே இருந்து எங்களுக்கு இப்ப கார் வந்திடும் . நாங்க வந்தோம்னு அண்ணன் கிட்ட சொல்லிடுங்க. மண்டாலிகா, நம்ம வீட்டு அட்ரஸை இவங்க கிட்டே கொடுத்திட்டியா? என்ன செய்ய, உங்களை இப்படி ஒரு நிலைமையிலே பார்க்க எனக்கு வருத்தமாதான் இருக்கு. என்ன இருந்தாலும் என்னோட சொந்த கிராமத்து ஜனங்களாச்சே நீங்க ! “

நான் திகைத்துப் போயிருந்தது போலவே என் மனைவியும் வியப்பில் வாயடைத்துப் போய் ஊமையாகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால்அவள் பேசிய ஒரு வார்த்தையாவது என் காதில் விழுந்திருக்காதா என்ன?

***********************************

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....