துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.1.26

நினைவுத்திரை- 3

சமூகத்தில் நிலவும் மரபுச் சட்டகங்களின் இறுக்கமான பிடியில் சிக்கித் தங்கள் சுயத்தை முழுமையாகத் தொலைத்து விட்டவர்கள் என்று பொதுவாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் பலரிடமும் கூட  அவர்கள் இன்னும் தங்கள் சுயங்களை முற்றாக இழந்து விடவில்லை என்ற தடயங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. தங்கள் மாற்றுக் குரல்களுக்குச் சாதகமான எந்த எதிர் விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்பதை அறிந்து வைத்திருந்தாலும் - எந்த எதிர்வினையையும் எதிர்பார்க்காமல் அத்தகைய குரல்களை பலவீனமாகவாவது அவர்கள்  எழுப்பிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அப்படிப்பட்ட மாற்றுக் குரல் ஒன்றை ஒலிக்க விட்டவர்களுள் கண்ணகியும் ஒருத்தி என்று சொன்னால் அதை நம்பாமல் புறம் தள்ளவே முதலில் நம் மனம் முந்தும். காரணம், கண்ணகி பற்றித் தமிழ்ச் சமுதாயத்தில் காலங்காலமாக நிலைத்துப்போனபத்தினிஎன்னும் படிமம்.



ஆடல்
மகளிடம் பிரிந்து போன கணவன் திரும்பி வந்த போது, இதோ இந்தச் சிலம்பு மிஞ்சி இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்று வழங்கியவள் அவள். செல்வத்தை எல்லாம் இழந்துவிட்டு அயலூருக்கு வா என்று கணவன் நள்ளிரவில் அழைத்தபோது மறுவார்த்தையின்றி உடன்பட்டு எழுந்தவள் அவள். அப்படிப்பட்ட ஒருத்தியிடமிருந்து எந்த மாற்றுக் குரலோ எதிர்ப் பேச்சோ எழக்கூடும் என்று நினைப்பது கூட தமிழகக் கலாச்சாரப் பின்னணியின் அடிப்படையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

தனக்கு விதிக்கப்பட்ட அக்கினிப் பிரவேசத்தை மறுப்பேதும் சொல்லாமல் வாய் மூடிமௌனமாக ஏற்றுக் கொண்ட சீதை , உடலெல்லாம் அழுகிப் போன கணவனைக்கூடையில் வைத்துப் பரத்தை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோன நளாயினி ஆகியவர்கள் , பெண்களுக்கான சரியான முன் மாதிரி இல்லை என்பதைத் தயக்கமின்றி ஒத்துக் கொள்பவர்களும் கூடக் கண்ணகி என்று வரும்போது மட்டும் சில மனத் தடைகளோடு ஒதுங்கிப் போய் வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டுவிடுவதற்குக் காரணம், கண்ணகியின் பிம்பம், இலட்சியத் தமிழ்ப்பெண் ஒருத்தியின் பிம்பமாகக் காலம் காலமாகத் தமிழ் உள்ளங்களில் மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திருப்பதே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கண்ணகியை வீர பத்தினி, மாபெரும் பத்தினி என்ற ஒரு கோணத்தில் மட்டுமே பார்த்தபடி , பத்தினித்தன்மைக்கான வரையறைகளை அதன் அடிப்படையில் மட்டுமே வகுத்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்து விட்டு உளவியல் மற்றும் சமூகவியல் தருக்கங்களின்அடிப்படையில் அணுகுகையில் இன்னும் கூட சற்று வேறான பார்வைகளுக்கும் முடிவுகளுக்கும் செல்வது சாத்தியமோ என்று தோன்றுகிறது.

புகார்க்காண்டத்தில் கண்ணகியின் பேச்சு, மிக மிகக் குறைவாக-ஒற்றைத் தொடராலோ, ஒரு சில சொற்களாலோ ஆனதுதான். காப்பியத்தின்படி கண்ணகியின் முதல் பேச்சு கோவலனிடம் கூட  இல்லை. திருமணமானதும் ‘’மாசறுபொன்னே..’’என்று தொடங்கி அவன் அடுக்கிக்கொண்டு செல்லும் காதல் மொழிகளுக்கு இனிமையான மௌனம் ஒன்றே அவளது மறுமொழியாக அமைந்திருக்கிறது. அந்த இடத்தில்-குறிப்பாக அந்தக் காலச் சூழலில் அதைவிடவும் பொருத்தமான ஓர் எதிர்வினையை எந்த ஒரு கவிஞனாலும் அமைத்து விடமுடியாது. அதன் பிறகு கோவலனோடு அவள் உரையாடுவதாக எந்த ஒரு கட்டமும் இடம் பெறவில்லை. அதற்கான தேவை காப்பியத்தில் இல்லை என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்க இயலுமே தவிர, அதை வைத்துக் கணவன்மனைவிக்குள் உரையாடலே நிகழ்ந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வருவதைப்போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை. கணவனே என்றாலும் ஆடவரிடம் அதிகம் பேசாத சூழல்,கண்ணகி வளர்ந்த காலச் சூழல்வீடே உலகமென வாழ்ந்து பழகிய கண்ணகியால் பரந்து விரிந்த கலையுலகின் பரிமாணங்களை ரசனையோடு காணவும் பருகவும் துடிக்கும் கோவலனின் அலைவரிசையில் உரையாடுவது கடினமாக இருந்திருக்குமென்பதால் அவர்களுக்கு இடையிலான சாதாரணமான உரையாடல் கட்டங்களை விவரித்துக் கதையின் சுவாரசியத்தைக் குறைக்காதவகையில் இளங்கோ அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.காப்பியத்தை அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்திச் செல்லும் பொறுப்பு காவியப்புலவனுக்கு இருந்து கொண்டிருப்பதையும் மறந்து விட முடியாது. இருவருக்கும் மணமாகித் தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட அடுத்த சில வரிகளுக்குள்ளேயே ’’யாண்டு சிலகழிந்தன..’’என்ற தொடரின் வழி ஒரு மிகப்பெரிய கால இடைவெளி காப்பியத்தில் எளிதாகத் தாண்டப்பட்டு விடுகிறது.

கோவலன் மாதவியிடம் பிரிந்து சென்ற பின், தான் கண்ட கனவைத் தன் நெருங்கியதோழி தேவந்தியிடம்  கண்ணகி உரைக்கும்கனாத்திறம் உரைத்த காதையே காப்பியத்தில் முதன்முறையாகக் கண்ணகி சற்று மிகுதியாகப் பேசும்  கட்டம். அதிலும் கூடக் கண்டகனவைச் சொல்லும் விவரணைத் தன்மையே மேலோங்கியிருக்கிறதே தவிர விமரிசனமாக அதில் ஏதுமில்லை; ஏதோ தீமை நடந்து விடுமோ என்னும் கவலை மட்டுமே அந்தத் தொனியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.முன்பின் பழக்கமில்லாத ஒரு புதிய ஊருக்குக் கணவனின் கையைப் பற்றிக்கொண்டு தான் செல்வதாக, அங்கே அவன் மீது தவறானபழி ஒன்று விழுந்து விட்டதாக,தான் சென்று மன்னன் முன் வழக்குரைத்ததாக,அந்த ஊருக்கே கேடு நேர்ந்ததாக, பின்பு கணவனும் தானும் நற்பேறு பெற்றதாக- இவ்வாறு தான் கண்ட தொடர்பற்ற கனவுத் துணுக்குகளைத் தன் தோழி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறாளோ என்றஎச்சரிக்கை உணர்வுடன் அவள் பகிர்ந்து கொள்கிறாள். மதுரையில் கோவலனுக்கு வரப்போகும் தீமைக்குக் கண்ணகியின் கனவு ஒரு முன்னறிவிப்பு என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும்  - தன்னையும் அறியாமல் கண்ணகியின் ஆழ்மனம் அவ்வாறு நடப்பதை  எதிர்பார்த்து அதை ஓரளவு விரும்பியும் இருக்கலாமோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறதுபெண்ணிய ஆய்வுகளும் உளப்பகுப்பாய்வுகளும் வலுப்பெற்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில்  இத்தகைய ஒரு ஊகம் இயல்பாக ஏற்கப்படக் கூடியதுதான். (ஆனால்,25 ஆண்டுகளுக்கு முன்பு  எங்களது தமிழ்த் துறைக் கருத்தரங்கம் ஒன்றில் ஒரு பேராசிரியர் இதே கோணத்தில் கண்ணகி கண்ட கனவைப் பற்றிக் கட்டுரை வாசிக்க , மிகப்பெரும் பத்தினியின் பெயருக்கு அவர் தனது கட்டுரையின் மூலம் இழுக்கு ஏற்படுத்தி விட்டதாகக் குற்றம் சாட்டியபடி சக  பேராசிரியர்கள் பலரும் சீறியெழஆய்வரங்கமே கலவர அரங்கமாக மாறிப்போன அந்தச் சம்பவத்தை என்றும் மறக்க முடியாது. தமிழகத்தில் கண்ணகி குறித்த கற்பிதங்களால் ஏற்பட்டுப் போயிருக்கும் சமூக மனோபாவங்கள் ,அவற்றை மிக இலேசாகச் சீண்டினாலும் கூடக் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதற்கு இதை விடத்தகுந்த வேறு சான்று தேவையில்லை.)

கண்ணகியின் கனவைக் கேட்ட தேவந்தி, கோயில் குளம் சுற்றி நோன்பு நோற்க வேண்டுமென்ற தீர்வை முன்வைக்க, மிக அழுத்தமான தொனியில்’’பீடன்று’’என்ற ஒரே சொல்லில் அதை மறுத்து விடுகிறாள் கண்ணகி. கணவனை மீளக் கொண்டு வரும் திறன் தன்அன்புக்கு இல்லாதபோது அதை நாடித் தெய்வங்களிடம் சிபாரிசுக்குச் செல்ல அவளுக்கு மனமில்லை; அவள் வெறும் சார்புநிலைப்பெண் மட்டுமில்லை என்பதையும் தனித்துவமானதொரு ஆளுமைப் பண்பு அவளுக்குள் ஒளிந்துகொண்டிருப்பதையும் இளங்கோ அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் கட்டம் அது. அந்தக்கால கட்டத்துப் பெண்கள் வாழ நேர்ந்த மரபுகளின் பிடியிலேயே கண்ணகியும் வாழ்ந்தாலும், அவர்கள் கைக்கொண்டிருந்த மதிப்பீடுகளிலிருந்து அவள் சற்றே விலகத் தொடங்கியிருப்பதன் ஆரம்பப் படிநிலை இது.
தகுந்த நேரம் பார்த்து வெளிப்பட மட்டுமே அது அவளுக்குள் உறைந்து கிடக்கிறது. இதை அடுத்தடுத்த கட்டங்களிலும் தொடர்ந்து காண முடியும்.

கண்ணகியின் அடுத்த பேச்சும் ‘சிலம்புள கொண்ம்என்னும் ஒரே வரிமட்டும்தான்மாதவியுடன் கானல்வரி பாடி விட்டுக் கடற்கரையிலிருந்து  கசந்துபோய் வீடு திரும்பும் கணவனிடம் கண்ணகி பேசும் சொற்கள் இவை. மாதவியை வஞ்சகி என்னும் பொருள்பட அவன் பழித்தாலும், தன் குடும்பச்சொத்து முழுவதையும்  அவளுக்குக் கொடுத்ததாலேயே தொலைத்தேன் என்று அவன் கழிவிரக்கம் கொண்டாலும் அவனது உள் மனம் இன்னதென்பதைஅவன் முழுமையாகத் தன்னிடம் மீண்டு விட்டானா இல்லையா என்பதைக் கண்ணகியால் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் வீடு வந்த திகைப்பிலிருந்தே அவள் இன்னும் மீளவில்லை என்பதால் அதைச் சார்ந்தோ மறுத்தோ ஒரு வரியும் பேசாமல்’’சிலம்பிருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்’’என்று மட்டுமே சொல்கிறாள் அவள். பொதுப்புத்தியில் கண்ணகியின் பத்தினித் தன்மைக்குச் சான்றாக இப்பகுதி மூளைச்சலவைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும் கணவனின் நடத்தையால் இறுகிப்போன  அவளுக்குள் நேர்ந்த விரக்தியின் வெளிப்பாடாகவும் இந்தச் சொற்களைக் கொள்ள வழியிருக்கிறது. தேர்ந்த நிர்வாகிக்குரிய கவனத்துடன் சொற்களைஇங்கே ஆள்கிறாள் கண்ணகி.கணவன் திரும்ப மாதவியிடம் போவதாக இருந்தாலும் சிலம்பை எடுத்துக் கொண்டு செல்லலாம்,மனம் மாறி வந்திருந்தாலும் அதைவைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற இரு வாய்ப்புக்களையும் தன் வார்த்தைவழி இங்கே திறந்து வைக்கிறாள் கண்ணகி.கணவனைத் தட்டிக் கேட்க முடியாத சமூக அமைப்பில் வளர்க்கப்பட்ட குறைபாடு என்று இதைக் காண்பது ஒருகோணமென்றால்- தானாகவே மனம் மாறித் தன்னிடம் வராதவரையில் அவன் வரவேண்டுமென யாசிப்பதையோ அதற்காக அவனிடம் போர் தொடுப்பதையோ கூடத்தனது தன்முனைப்புக்கு[ego]இழுக்காகவே நினைக்கிறாள் கண்ணகி. கணவன் மீளவேண்டும் எனக் கடவுளிடம் வேண்டிக்கொள்வதைக் கூடத் தன் சுயமதிப்புக்கு இழுக்கென நினைத்தவள் அவள் என்பது, இந்த வாதத்தைக் கூடுதலாகவே உறுதிப்படுத்துகிறது.

புகார்க்காண்டத்தில் அளந்து பேசிய அவளது பேச்சுக்கள், மதுரைக் காண்டத்தில் மடை திறந்து கொள்கின்றன.


கணவன் இனிமேல் தன்னுடன்தான் இருப்பான் என்னும் உறுதி அவளது உள்ளத்தில் நிலைப்படுவதற்கு அவர்கள் இருவரும் மேற்கொள்ளும் நீண்ட மதுரைப்பயணம்  வாய்ப்பளிக்கிறது. கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியின் துணையுடன் ஆயப் பெண்ணான மாதரியின் வீட்டில் இருவரும் அடைக்கலம் புகுந்தபின்பே அவனுடனான அவளது மறுவாழ்வு தொடங்குகிறது.
அங்கே தனிமையில் அவளோடு மனம் விட்டுப்பேசுகிறான் கோவலன்.
பெற்றோருக்கும் மனைவிக்கும்  செய்தாக வேண்டிய கடமைகளைத்துறந்து-அவை தவறெனக் கூடத் தோன்றாததன்மறதியிலும் மயக்கத்திலும்மூழ்கிக்கிடந்த தன் குற்றத்தை அவன் ஒப்புக்கொள்கிறான். அதை ஒரு குற்றமாகக் கூடக் கருதாமல் , தான் சொன்னதும் மதுரை கிளம்பிய அவளது கற்புத் திறத்தை வழக்கமான தன் உணர்ச்சிவசப்பட்ட பாணியில்
‘’
இரு முதுக் குரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என் செய்தனை
என்னொடு போந்திங்கென் துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங்கோதாய்
நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி’’
என்று பாவமன்னிப்புக் கோரும் பாணியில் அடுக்கிக் கொண்டு போகிறான்.

பத்தினிஎன்ற பட்டம் பெற விரும்பும் அல்லது அந்தப் பட்டத்தைத்தாங்கியிருக்கும் எந்த ஒரு பெண்ணும் நெகிழ்ந்து உருகிப் போகக்கூடிய ஒரு கட்டம் அது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், அந்தப் புகழ்ச்சிக்கு ஆட்படாமல்,அந்தச் சொற்களில் கரைந்து போய்விடாமல்-  திடமும்,உரமும் வாய்க்கப் பெற்றவளாய்இதுநாள்வரை மௌனியாகத் தான் பொறுத்து வந்த துயரங்களையும்,தாங்கி வந்தஅவலங்களையும் அவனிடம் துணிவாகப் பட்டியலிடுகிறாள் கண்ணகி
கணவன் வேற்றவளிடம் செல்லும்போது அவனது உடனிருப்பையும் அன்பையும் மட்டும் மனைவி இழப்பதில்லை. அவனுடன் கூடியிருந்தால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விருந்தோம்பல் வாய்ப்புக்களையும் அவள் இழக்கிறாள். மகனின் பொறுப்பற்ற போக்கைக் கண்டு மாமனும் மாமியும் வருந்தியிருக்கையில் தானும் அவர்களிடம் தன் குறைகளைச் சொல்லிக்கொண்டு புலம்பாமல் வறட்சியான புன்னகை ஒன்றை உதட்டில் தவழவிட்டபடி அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பும் அவளுக்கு உரியதாகி விடுகிறது. இத்தனையும் செய்து முடிக்க வேண்டுமெனில் அவள் எந்த ஒரு சிறு சபலத்துக்கோ சலனத்துக்கோ ஆட்படாதவளாக -‘’மாற்றா உள்ள வாழ்க்கை’’யளாக இருந்தாக வேண்டும். அப்படிப்பட்ட உரமான உள்ளம் கொண்டவளாய்த் தான் இருந்ததைப்
 ‘’
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றெழுந்தனன் யான்..’’
என்று பெருமிதத்தோடு பிரகடனப்படுத்துகிறாள் கண்ணகி. கற்புக்கோட்பாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி மாறுபடுகிறது என்பதையும், தானும் அவனைப் போல் நடந்திருந்தால் - அந்தக்காலகட்ட மதிப்பீட்டின்படி- குடும்ப அமைப்பின் கட்டுக்கோப்பு என்ன ஆகியிருக்கும் என்பதையும் முகத்தில் அறைந்தாற்போலச்சொல்லும் இந்தச்சொற்கள்
ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பு அழிந்திடாதோ?
நாணமற்ற வார்த்தை அன்றோ!
வீட்டைச் சுட்டால் தலமான கூரையுந்தான் எரிந்திடாதோ?”
என்ற பாரதியின் கவிதை வரிகளையே நினைவூட்டுகின்றன

தலைவன் பரத்தையிடம் பிரிவதென்பதுசங்க காலத்தில் ஒரு வாழ்க்கைமுறையாக,அன்றாட நடப்பாகவே ஏற்கப்பட்டு வந்த ஒன்று. அதற்கு மாற்றாக - இலைமறை காயாகக் குறிப்புப் பொருள் தரும் சில சொற்களைப் பேசுவது தவிரத் தலைவி அதிகம்பேசுவதில்லை.அதை உடன்பட்டு ஏற்க வேண்டுமென்பதே அவளுக்கு வகுக்கப்பட்டிருந்த நியதி. சங்கத்தின் தொடர்ச்சியாக எழுந்த சிலம்பிலும் அதிக மாற்றங்கள் நேர்ந்து விடவில்லை என்றபோதும் காப்பியத்தின் இறுதிக்கட்டத்திலாவது தன் உள்ள உரத்தின் மேன்மையைக் கம்பீரத்தோடு கண்ணகி முன்வைப்பதை அந்தக் காலகட்டத்தைப்பொறுத்தவரை புதுமையானதென்றே சொல்ல வேண்டும். தவறான ஒழுக்கத்தை  ஆண்  எத்தனை இயல்பாகக் கைக்கொண்டு விடுகிறான்என்பதையும் அதையே ஒரு பெண் கைக் கொள்ள நேர்ந்தால் சமூக நியதி என்னவாகும் என்பதையும் ஆண் மூளையில் அழுத்தமாகப் பதிய வைக்க   ஒரு சிறுபரிசோதனை முயற்சியாகவே கண்ணகியை இந்தக் கட்டத்தில் இளங்கோ பேசவிட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தானே மனம் திருந்தி மன்னிப்புக் கேட்க முன் வரும் ஒருவனிடம் இவ்வாறானசொற்களைப் பேசுவதென்பது பொதுவான உலக நடப்பில் சற்று ரசக் குறைவாகப்பட்டுக் கண்ணகியின் பத்தினித் தன்மைக்கு அதனால் பழுது நேர்ந்து விடுமோ என்றெல்லாம் அஞ்சிக் கொண்டிருக்காமல் அவளது உணர்வுகளுக்கு ஒரு வடிகாலளிக்க இளங்கோ துணிந்து முன் வந்திருப்பது இந்தக் காட்சியின் சிறப்பு.

கதை ஓட்டத்தில் அவன் அடுத்துக் கொலையாகும்போதுஇறக்கப்போகிறவனிடம்போய் இப்படியெல்லாம் பேச விட்டிருக்கிறாரேஎன்று மரபார்ந்த உள்ளங்கள் அங்கலாய்க்கலாம். இதையும் கூடத் தவிர்த்திருந்தால் பத்தினிப்பட்டம் மிகக் கச்சிதமாகக் கண்ணகிக்குக் கிடைக்கக் கூடும் என்றும் கூட மதிப்பிடலாம்.ஆனால் அதுவே சரியான தருணம் என்பதையும் அதை விட்டு விட்டால் பின்பு கண்ணகிக்குப்பேச வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை என்பதையும் படைப்பாளியே நன்கு அறிவான் . கண்ணகி மாபெரும் பத்தினி என்பது அவன் குறைகளைத் தாங்கியதால் மட்டுமில்லை,“மாற்றா உள்ள வாழ்க்கையளாய்வாழ்ந்தது மட்டுமே அந்தத் தகுதிக்கு அவளை ஆளாக்கியது என்று தன்முனைப்புடன் கூடிய விம்மிதத்தோடும்,செருக்கோடும் கவிஞன் அவளைப் பேச வைத்த தருணம் அது.

கணவன் பொய்ப் பழிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டபோது அவளிடமிருந்து பீறிட்டுப் பெருக்கெடுக்கும் வீரம் - மதுரை நகரையே தீக்கிரையாக்க முனையும் அவளதுஉக்கிரம் ஆகியவை,அவளது வாழ்வின் தொடக்க நிலையில் அவளுள் புதையுண்டுபோன உணர்ச்சிகளின் வடிகால் என்றும் அதுவே 'கொங்கைத் தீ' யாக வெளிப்பாடு கொண்டது என்றும் தன் நாடகத்தில் உளப்பகுப்பாய்வு செய்கிறார் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.

கோவலன் கொலைப்பட்டபின் வாழ்க்கை பறிபோன ஆவேசத்தில் வஞ்சினமாலை,துன்பமாலை,ஊர்சூழ்வரி,வழக்குரைகாதை எனப்பல கட்டங்களில்கண்ணகியின் பேச்சு தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தாலும்கோவலன் கொலைப்படும் முன் அவனிடம் அவள் பேசும் இறுதிச் சொற்கள் பெண்ணியப் புரட்சிக்காரியாக இல்லாவிட்டாலும் கூடத் தனித்துவமுள்ள ஒரு பெண் ஆளுமையாகக் கண்ணகியை முன்னிறுத்தி விடுகின்றன.

                        ****************************

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....