துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.7.16

'நிலம்பூத்துமலர்ந்தநா'ளின் வெளியீட்டுவிழாவில்...



கே வி ஜெயஸ்ரீ,ஷைலஜா, மனோஜ் குரூர்,சந்தோஷ் இச்சிக்காணம்,
சு வெங்கடேசன் ஆகியோருடன்...

கே வி ஜெயஸ்ரீயுடன்...

திருவண்ணாமலையில் 16 மாலை நிகழ்ந்த ’’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ மொழிபெயர்ப்பு நூலின் வெளியீட்டு விழா, நிறைய ஆச்சரியங்களையும் சொல்லித் தீராத இனிமைகளையும் உள்ளக்கியதாய் இன்னமும் கூடப் பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது..

15 காலை கோவையிலிருந்து கிளம்பிய நொடியில் தொடங்கிய அந்த இனிமையின் கணங்கள் இப்போது இதை எழுதும்வரை விடாமல் தொடர்ந்தபடி…

சனிக்கிழமை மாலை நிகழ்ச்சிக்கு மதியம் 1 மணியளவில் திருவண்ணாமலை போய்ச் சேர்ந்த என்னை ’சுசீலா அம்மா’ என்ற அன்புக்கூவலோடு ஓடி வந்து ஆரத்தழுவியபடி வரவேற்ற கே வி ஜெயஸ்ரீ, அதையே சிறிது நேர இடைவெளிக்குப்பின்பு தானும் வந்து சேர்ந்ததும் தொடர்ந்த கே வி ஷைலஜா..என்று நேசத்தின் பரிமாற்றங்களோடு விழாவுக்கான மனநிலை வெகு இதமாக இலகுவாக வாய்த்தது. 


அடுத்தடுத்து பவா செல்லதுரை, உத்திரகுமாரன், மதுரையிலிருந்து வந்திருந்த இசை அறிஞர் திரு மம்மது,அவரின் மனைவி, மலையாளப்படைப்பாளிகளானதிரு மனோஜ் குரூர் [நாவலின்மூல நாவலாசிரியர்],சந்தோஷ் இச்சிக்காணம் என அனைவருடனும்  மிக எளிதாக உரையாடலில் ஒன்றி விட முடிந்தது…

மதுரையில் முன்னமே என்னை அறிந்திருந்த காவல் கோட்டம் 
சு வெங்கடேசனும், முருகேசபாண்டியனும் நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் என்னோடு நேர்ந்த சந்திப்பில் நெகிழ்ந்துபோய் என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டனர்.பேச்சற்ற மௌனத்தில் நிகழ்ந்த அன்பின் வெளிப்பாடு அது. இளம் வயதில் நான் பார்த்திருந்த அந்த இருவரும் இன்று அவரவர் துறையில் பெரும் ஆளுமைகளாக வளர்ந்திருந்தாலும் என் மீது கொண்ட மதிப்பிலும் அன்பிலும் காட்டிய அந்த எளிமையான தோழமை,நெகிழச்செய்வது. 

வம்சி குடும்பம் என்றுமே விரிவான விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றது…அதிலும் தங்கள் கைகளால் தாங்களே ஆக்கிப்படைக்கும் அறுசுவை உணவால் விருந்தாளிகளை அசர அடிப்பவர்கள் அவர்கள். மிகப்பெரும் ’உண்டாட்டு’ ஒன்று நிகழ்ந்தேற,ஓய்வுக்கு ஒதுங்கும் முன் இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

வம்சி குடும்பத்தைச்சார்ந்த விருந்தினர் குடிலுக்கு எல்லோரையும் அழைத்துச்சென்று…அங்கே முன் பகுதியில் தனித் தனிக்கற்பலகையில் புதிதான சிமிட்டிக்கலவை பரப்பி வைத்து வந்த விருந்தினர்களின் பாதச்சுவடு  பதிக்க வைத்து, அந்தந்தச்சுவடுகளில் அவரவர் பெயர் பொறித்து அதைக் கையெழு[காலெழு]த்தாக்கிக் கொள்ளும் [autograph] புதிய சடங்கொன்றை சமீபத்தில் வம்சியினர் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது இலக்கியவாதிகளுக்கு அவர்கள் அளிக்கும் உயர்வான மதிப்பு ஒரு கணம் பிரமிக்க வைத்தது..

மதியம் சிறிது ஓய்வுக்குப்பிறகு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச்சென்றால் அந்தப்பள்ளி வளாகத்தின் திறந்த வெளி  அரங்கின் மேடை அமைப்பில் அடுத்த வியப்பு காத்திருந்தது…

திருவண்ணாமையிலுள்ள இயல்பான பாறைகளின் பின்னணியில் மலையாள மண்ணுக்குரிய பாளைகளைப் பாத்திரத்தில் விரித்து வைத்து, மாடுகள்பூட்டப்படாத வண்டி ஒன்றை ஒரு புறம் நிறுத்தி வைத்து….தமிழக கேரள மண் வாசனைகளை மிக இயல்பான எளிமையான அந்தப் பின்புலத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்த அந்த ரசனை எல்லோருக்கும் எளிதாக வாய்த்து விடுவதில்லை. மேடைஅலங்காரத்துக்காகப் பணத்தைப்பகட்டாகப் பணத்தை வாரி இறைக்கும் கூட்டங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அது…

முறையான நிகழ்ச்சிக்கு முன்பு தெருவிலிருந்தே தொடங்கிவிட்ட பாப்பம்பட்டி பறை மேள ஆரவாரத்துடன் எல்லோரையும் கூட்டி வந்து அவையிலும் மேடையிலும் ஒன்றுதிரட்டிய புதுமையும் நிகழ்ந்தது…




 முன்பே அறிமுகமாகி இருந்த விஷ்ணுபுர வட்ட நண்பர்  திரு தண்டபாணிமுருகேசன்,’’ப்ரொஃபசர்’’ என்ற தனது வழக்கமான விளியோடு எங்கிருந்தோ ஓடிவந்து என் கையைப்பற்றிக்கொண்டார்; பல்மருத்துவரான அவரது நண்பரையும் அறிமுகம் செய்தார்;சேலத்திலிருந்து வந்திருந்த விஷ்ணுபுர வட்ட ந்ண்பர் இளைஞர் பிரகாஷும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்…


திறந்த வெளி அரங்கின் அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்கள் காட்டிய ஈடுபாடும் அமைதி காத்த கண்ணியமும் தமிழகத்தில் நிகழும் பல இலக்கியக்கூட்டங்களுக்கும் முன்னோடியாய் இருக்கும் தகுதி பெற்றவை.
பவாசெல்லதுரையின் சிறிய அறிமுகத்துக்குப்பின் கே வி ஷைலஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வெளியீட்டுவிழா தொடங்கியது….
நூலைப்பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்த பொதுவானசெய்திகளை முன் வைத்துத் தலைமை  உரை ஆற்றினார் முருகேச பாண்டியன்; ஓவியர் ராகவ், இசைஅறிஞர் மம்மது ஆகியோரின் சிறிய வாழ்த்துரைகளுக்குப் பின் நான் உரை ஆற்றினேன்..




 மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாளின் நோக்கம் சங்கச்சமூகத்தின் மேன்மையை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப்போற்றுதலுக்கு ஆளாக்குவதோ,மேன்மைப்படுத்துவதோ மட்டும் அல்ல. உள்ளடுக்குகள் நிறைந்த ஓர் ஆழ் பிரதியாக, சங்கச்சமுதாயத்தின் மீது வைக்கப்படும் விமரிசனங்கள் வழி சமகால அரசியல் விமரிசனத்தை நோக்கியும்  வாசகரை வழி கூட்டிச்செல்வதாகவே அது அமைந்திருக்கிறது என்பதையும் அதுவே இந்தப்பிரதியின் தனித் தன்மையும் கூட என்பதையும் என் உரை முன்னிலைப்படுத்தியது.

சங்கச்சமூகம், பண்பாடு மற்றும் நாகரிகத்திலும்பொருளியலிலும்,அரசு சூழ்தலிலும் பூத்து மலர்ந்து  பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தப்பூத்தல் என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பைச்  சார்ந்தவர்களுக்கும்  உண்மையான முழுமையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்ததா என்றமிக முக்கியமானவினாவை எழுப்பி அது சார்ந்த தேடலுக்கு இட்டுச்செல்வதையே இந்நாவல் தன்  மையமாகக் கொண்டிருக்கிறது என்ற கருத்தின் அடித்தளத்திலும் கே வி ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பு நுட்பங்கள் நோக்கியும் என் உரையை அமைத்துக்கொண்டேன்..நேரம் குறைவுதான் என்றாலும் சொல்ல வேண்டியதைச்சொல்லி விட்ட நிறைவு என்னுள்; அதற்கேற்ற பார்வையாளர் எதிர்வினைகளும் பின்பு கிடைதததில் மகிழ்ச்சி.

மனோஜ் குரூரும் சந்தோஷ் இச்சிக்காணமும் மலையாள உரை ஆற்றியபோதும் அதை மொழிபெயர்ப்பு செய்தாக வேண்டிய தேவை நிகழவில்லை என்பதும் அவர்களின் அந்த உரை அந்த மொழி அறியாத தமிழ் மனங்களையும் கூட  மிக இயல்பாகச்சென்று தொடக்கூடியதாக இருந்ததென்பதையும் பார்வையாளர் கூட்டத்திலிருந்து எந்தச்சலசலப்பும் எழாததே உணர்த்தி விட்டது…

மனோஜ் குரூர் நாவல் பற்றிப் பேச சந்தோஷ் இச்சிக்காணத்தின் பல வரிகள் கவிதைக்குப்பக்கத்திலிருந்தன. மனதிலுள்ள துர்க்கந்தத்தை நீக்கி சுகந்தத்தை எழுப்பும் வல்லமை இலக்கியத்துக்கு மட்டுமே உண்டு என்பதைக் கவித்துவ மொழியில் கேட்பவர்களிடம் கடத்த அவருக்கு மொழி ஒரு தடையாக இல்லை.

காவல் கோட்டம் சு வெங்கடேசன், தன் வழக்கமான பாணியில் பல ஆழமான ஆராய்ச்சிக்குறிப்புக்களுடன் விரிவாக உரை நிகழ்த்தினார்.
எல்லாரது உரையிலுமான ஒரே செய்தி, முதலில் தமிழில் எழுதப்பட்டு மலையாளத்துக்குச்சென்றிருக்கவேண்டிய இந்தப் படைப்பு ஒரு மாற்றுப்பரிணாமமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து சேர்ந்திருப்பது பற்றியதே…! 
அது குறித்த வெட்கமும் வேதனையும் தமிழ்ப்படைப்பாளிகளுக்குத் தேவை இல்லை என்பதை அதைத் தமிழ் நாவலாகவே மாற்றிக்கொடுத்ததன் வழி போக்கியிருக்கிறார் கே வி ஜெயஸ்ரீ. மனோஜ் குரூர் கண்டடைந்த அத்தனை சங்கப்பாடல்களுக்குள்ளும் பயணித்து, தமிழில் நாவலைத் தருவதற்கேற்ற பொருத்தமான நிகரன்களுக்கான தேடலில் மூழ்கி,..சங்க இசைக்கருவிகளின் நுட்பமானஒலி வேறுபாடுகளைப் பற்றி ஆய்ந்து துருவி அவற்றை உள்வாங்கி…அத்தனை அசுர உழைப்பையும் இந்த மொழியாக்கத்துக்கு அளித்தபடி ஆறேமாதத்தில் இந்த மொழிபெயர்ப்பை முடித்திருக்கும் அவர் மிகுந்த பாராட்டுக்கும் பலப்பல விருதுகளுக்கும் மிகச்சரியான தகுதி கொண்டவராகிறார்… கவித்துவ உச்சத்தைத் தொடும் பலப்பல.வரிகளோடு மூலத்துக்கு மிக உண்மையாய் அணுக்கமாய் சங்கத் தொனி சற்றும் விலகாமல் இந்நூலைத் தமிழுக்குக்கடத்தி வந்து சேர்த்திருக்கும் ஜெயஸ்ரீக்கு அன்று குவிந்த பாராட்டுக்கள் வெறும் முகத்துதிகள் அல்ல; மெய்யானநெகிழ்வின் உண்மையான வெளிப்பாடுகள் அவை…

இரவு 10 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற மீண்டும் ஓர் உண்டாட்டுடன் உறங்கி, மறுநாள் ஞாயிறு மதியம் கபிலர்குன்றுசெல்லும் திட்டத்துடன் கிளம்பி வழியில் சில மாற்றங்களால் அதியமான் குறித்த கல்வெட்டு இருக்கும் சில பாறை மலைகளை ஞாயிறு மதியம் வந்தடைந்தோம்….

கி பி ஒன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழமையான அந்த ஜம்பைக்கல்வெட்டு பற்றிய விளக்கம் இந்தப்படத்தில்….

கல்வெட்டுக்குன்றின் முன்புறத் தோற்றம்
அதன் முன்பகுதி வழி செல்வது கடினம் என்று அங்கிருந்த சாமியாடி ஒருவர் அன்புடன் வேண்டிக்கொண்டு எங்களை வழிப்படுத்த அரை மணி நேரப் பயணத்துக்குப்பின் மலையின் பின்புறம் வந்தடைந்தோம்..


                குகைக்குச்செல்லும் பின்புறம் 

குகைக்குச் செல்லும் வழி பிடித்து ஏறுவது என் வயதுக்குக்கடினம் என்பதால் நண்பர்கள் அன்புடன் தடுத்து நிறுதி விட முருகேச பாண்டியனும் சு வெங்கடேசனும் மலை ஏறும் காட்சியை ஏக்கத்தோடு பார்த்தபடி நண்பர்களிடம் விடை பெற்றுக் கோவை நோக்கிய என் பயணத்தைத் தொடங்கினேன்…

ஆனாலும்….நினைவில் பாரியும் அதியனும் அவ்வையும் கபிலரும் இன்னுமும் கூட ஊடாடிக்கொண்டிருக்கிறார்கள்….


15.3.15

’என் பவரும்’,எம்பவர்மெண்டும்-பெண்கள் தினம்

சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்ளாமல் என் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகள் கழிந்ததே இல்லை.

இம்முறை கோவை பேரூர் அருகில் பச்சாபாளையம் -இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிப் பேராசிரியையிடமிருந்து மார்ச் 5ஆம் தேதி நிகழ்ச்சிக்கான [8 ஞாயிறு என்பதால்] அழைப்பு ஃபிப்ரவரி  மாத நடுவிலேயே வந்து விட்டது.



மிகப்பெரியதும் அழகியதுமான கல்லூரி. ஊக்கமும் உயிர்த்துடிப்புமான ஆசிரியர்கள்,பொறியியல் மாணவிகள்.ஆனாலும் அரங்கில் மாணவிகளை மட்டுமே பார்த்தபோது எனக்கு ஏமாற்றம்தான்.பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தை ஆண்களும் புரிந்து கொள்ளும்போதுதானே பெண்ணை சக ஜீவியாக நினைக்கும் சம உரிமைச்சிந்தனை அவர்களிடமும் அரும்ப முடியும்? இல்லையென்றால் அதிகம் படிப்பறிவில்லாத நிர்பயா வழக்கின் முகேஷ் சிங்கைப் போலவோ , அதே வழக்கின் மெத்தப்படித்த மேதாவிகளான சில வழக்குரைஞர்களைப் போலவோ ‘வீட்டுக்குள் பெண்ணைப்பூட்டி வைப்பதே சரியானது’என்ற வெட்டி வாதம்தான் பேச முடியும் என்று
நான் கூறிய கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.

இதுவரை கலைக்கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது போல பொறியியல் போன்ற தொழிற்கல்லூரி நிகழ்வுகளில் நான் அதிகம் கலந்து கொண்டதில்லை. தமிழ் மொழியில் பேசுவதையே - பேசுவதைக்கேட்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில் இருந்த மாணவிகள் இந்த நிகழ்ச்சியை ஒரு வரவேற்கத்தக்க மாறுதலாகக்கொண்டாடி விட்டனர்.

பெண்ணை அதிகாரப்படுத்துதல்-அதன் வழி மனித சமூகத்தை அதிகாரப்படுத்துதல் என்பதே இந்த ஆண்டுக்குரிய மையப்பொருள்.
'என் power' உணர்ந்த பின் வருவதே 'empowerment'.
முதலில் தன் ‘பவரை’ [power], தன்னிடம் உள்ள சக்தியைப் பெண் உணர்ந்தால்தான்   'empowerment'.  என்ற பேரிலக்கு  சாத்தியம் என்பதை முன் வைத்து நான் பேசினேன்.

'empowerment' என்பது, உறுதியான முடிவுகளும் தீர்மானங்களும் கொண்டவர்களாலேயே கைக்கொள்ளப்படுகிறது என்பதால்
 ’நான் சக்தி மிக்கவள் நான் ஆற்றல் கொண்டவள்,என்னால் தனியாக சிந்தித்து முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுக்க முடியும்,அதற்கு நான் எவரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை,எவர் சம்மதத்தையும் நான் எதிர்நோக்க வேண்டியதும் இல்லை ’என்று ஒரு பெண் பிரக்ஞை பூர்வமாகத் தானே உணர்ந்து தெளியும் வரை எத்தனை உயர்ந்த படிப்புக்குப்போனாலும் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் அமர்ந்தாலும் அது உண்மையான அதிகாரப்படுத்தலுக்கு இட்டுச்செல்லாது என்றேன் நான்; ’நாணம்,அச்சம்,மடம்,பயிர்ப்பு எனப் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட இயல்புகள் எல்லாமே  பெண்ணின் தனித்த இயக்கத்தையும் தன்னிச்சையான முடிவுகளையும் கட்டுப்படுத்தும் உள்நோக்குடன் புனையப்பட்டவையே என்றும் ’’நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’’என பாரதி முழங்கியது அது பற்றியே என்றும் சான்றுகளுடன் நான் விளக்கியதை அரங்கிலுள்ளோர் அமைதியான ஒப்புதலுடன் கேட்டுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.

என் உரைக்குப்பிறகு மாணவியர் பங்கு கொள்ளும் பேச்சரங்கம் ஒன்று நிகழ்ந்தது.

பெண்ணின் தலைமைப்பண்புகள் சிறப்பாக வெளிப்படும் இடம் இல்லமா,பணியிடமா என்ற தலைப்பில் மாணவிகள் இரு அணியாகப்பிரிந்து வாதிட்டனர்.முதிர்ச்சியான உரைகளாக அவை இல்லையென்றபோதும் வழக்கமான பட்டிமன்றக்கொச்சையாக இல்லாமல் அனுபவத் தோய்வுடன் கூடிய சுருக்கத்தோடு அவர்களது உரைகள் அமைந்திருந்தன. வீடு வெளி இந்த இரண்டும்  தலைமைப்பண்புகளின் பயிலிடங்களே,இரண்டு இடங்களில் பெறும் பயிற்சிகளும் ஒன்றுக்கு மற்றொன்று உதவக்கூடியவையே, வீட்டில் உறவினரின் பலவகைத் தேவைகளை சமாளிக்கும்  பயிற்சி பணியிடத்திலும்,பணியிடத்தில் சிக்கல்களைக்கையாண்டு ,கீழுள்ளோரை நிர்வகித்து,நிகழ்ச்சிகளை நடத்துவதில் கிடைக்கும் பயிற்சி இல்ல நிர்வாகத்திலும் உதவுகிறது என்றும் என் இறுதி உரையை நிறைவு செய்தேன்.

இரு அணிகளிலும் சிறப்பாகப்பேசிய மாணவியருக்குப்பதக்கம் அணிவித்தது  மகிழ்வான பணி.

மொத்தத்தில் அது ஒரு நிறைவான மகளிர் நாள்..
கல்லூரி மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் என்னை உலவ விட்டு  என் பணிக்காலத்தை நினைத்துப்பார்க்கச் செய்த மகிழ்ச்சியான நாள்.


24.12.14

’யாதுமாகி’- நாவல் வெளியீடு

வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் 
என் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா
அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.


யாதுமாகி நூல் வெளியீட்டின் நிகழ்ச்சிக்குறிப்பு

நாள்;27.12.2014

மாலை 5 30

இடம்;ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் அரங்கம் , ஆர் எஸ் புரம் , கோவை
[மதுரை ஐ ஃபௌண்டேஷனுக்கு எதிரில்]

நூல்;’ நாவல்- ‘யாதுமாகி’

வரவேற்பு; திரு கோவை சுரேஷ்

பாரதி பாடல்- வானதிஶ்ரீ

நூல் வெளியீடு 

திரு பாவண்ணன் வெளியிட திரு ஜெயமோகன் முதல்பிரதியைப்பெற்றுக்கொள்கிறார்.
வாழ்த்துரை
 1.திரு ஜெயமோகன் 
2.திரு பாவண்ணன் 
3.திருமதி கே வி ஷைலஜா-எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்[வம்சி பதிப்பகம்]
விமரிசன உரை- 
1.திரு ராஜகோபாலன்-எழுத்தாளர்,விமர்சகர்
2.திருமதி பாத்திமா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
3.திருமதி நா அனுராதா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
ஏற்புரை
எம்.ஏ.சுசீலா
நிகழ்ச்சித் தொகுப்பும் நன்றியுரையும்-
மீனு பிரமோத் இ வ ப,
கூடுதல் ஆணையர்,கலால் மற்றும் சுங்கவரித்துறை,கோவை

14.1.14

தாயகம்கடந்த தமிழ் -அனைத்துலகமாநாடு கோவையில்...


தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில் ஓர் அனைத்துலக மாநாடு கோவையில், ஜனவரி 20, 21, 22 ஆகிய நாள்களில் நிகழவிருக்கிறது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டின் துவக்க விழா காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் NGP கலை அறிவியல் கல்லூரியில் 20ம் தேதி மாலையும் கருத்தரங்க அமர்வுகள் 21. 22 ஆகிய நாள்களில் KMCH மருத்துவ மனையில் உள்ள கருத்தரங்க அறையிலும் நடைபெறவுள்ளன.
[எழுத்தாளர் மாலன் அவர்களிடமிருந்து வந்திருக்கும் அழைப்பும் செய்தியும்....]





9.11.12

தில்லிகை-நவம்பர் நிகழ்வு

தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்
இலக்கியச் சந்திப்பு: 2012/9
பயணம்

தமிழ் இலக்கியத்தில் பயணம் 
அழகு சுப்பையா, இள முனைவர் பட்ட ஆய்வாளர்

பயணங்களால் புதுப்பித்துக் கொள்ளுதல்
கயல்விழி முத்துலெட்சுமி , இணையப் பதிவர்

கைலாசம்: சிவனைத் தேடிச் சீனப் பயணம் 
எம்.ஸ்ரீதரன், இந்திய வெளியுறவுப் பணி  



10 நவம்பர் 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு
பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்
அனுமதி இலவசம். இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!


12.10.12

தில்லிகை-அக்டோபர் நிகழ்வு



                                                  தில்லிகை
தில்லி இலக்கிய வட்டம்
மற்றும்
தில்லித் தமிழ்ச் சங்கம்

தமிழும் திரையும்
இலக்கியச் சந்திப்பு: 2012/8

பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும்
முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி.

வசனங்களில் உருவான நாயகத்துவம்
முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....