துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.3.15

’என் பவரும்’,எம்பவர்மெண்டும்-பெண்கள் தினம்

சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்ளாமல் என் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகள் கழிந்ததே இல்லை.

இம்முறை கோவை பேரூர் அருகில் பச்சாபாளையம் -இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிப் பேராசிரியையிடமிருந்து மார்ச் 5ஆம் தேதி நிகழ்ச்சிக்கான [8 ஞாயிறு என்பதால்] அழைப்பு ஃபிப்ரவரி  மாத நடுவிலேயே வந்து விட்டது.



மிகப்பெரியதும் அழகியதுமான கல்லூரி. ஊக்கமும் உயிர்த்துடிப்புமான ஆசிரியர்கள்,பொறியியல் மாணவிகள்.ஆனாலும் அரங்கில் மாணவிகளை மட்டுமே பார்த்தபோது எனக்கு ஏமாற்றம்தான்.பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தை ஆண்களும் புரிந்து கொள்ளும்போதுதானே பெண்ணை சக ஜீவியாக நினைக்கும் சம உரிமைச்சிந்தனை அவர்களிடமும் அரும்ப முடியும்? இல்லையென்றால் அதிகம் படிப்பறிவில்லாத நிர்பயா வழக்கின் முகேஷ் சிங்கைப் போலவோ , அதே வழக்கின் மெத்தப்படித்த மேதாவிகளான சில வழக்குரைஞர்களைப் போலவோ ‘வீட்டுக்குள் பெண்ணைப்பூட்டி வைப்பதே சரியானது’என்ற வெட்டி வாதம்தான் பேச முடியும் என்று
நான் கூறிய கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.

இதுவரை கலைக்கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது போல பொறியியல் போன்ற தொழிற்கல்லூரி நிகழ்வுகளில் நான் அதிகம் கலந்து கொண்டதில்லை. தமிழ் மொழியில் பேசுவதையே - பேசுவதைக்கேட்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில் இருந்த மாணவிகள் இந்த நிகழ்ச்சியை ஒரு வரவேற்கத்தக்க மாறுதலாகக்கொண்டாடி விட்டனர்.

பெண்ணை அதிகாரப்படுத்துதல்-அதன் வழி மனித சமூகத்தை அதிகாரப்படுத்துதல் என்பதே இந்த ஆண்டுக்குரிய மையப்பொருள்.
'என் power' உணர்ந்த பின் வருவதே 'empowerment'.
முதலில் தன் ‘பவரை’ [power], தன்னிடம் உள்ள சக்தியைப் பெண் உணர்ந்தால்தான்   'empowerment'.  என்ற பேரிலக்கு  சாத்தியம் என்பதை முன் வைத்து நான் பேசினேன்.

'empowerment' என்பது, உறுதியான முடிவுகளும் தீர்மானங்களும் கொண்டவர்களாலேயே கைக்கொள்ளப்படுகிறது என்பதால்
 ’நான் சக்தி மிக்கவள் நான் ஆற்றல் கொண்டவள்,என்னால் தனியாக சிந்தித்து முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுக்க முடியும்,அதற்கு நான் எவரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை,எவர் சம்மதத்தையும் நான் எதிர்நோக்க வேண்டியதும் இல்லை ’என்று ஒரு பெண் பிரக்ஞை பூர்வமாகத் தானே உணர்ந்து தெளியும் வரை எத்தனை உயர்ந்த படிப்புக்குப்போனாலும் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் அமர்ந்தாலும் அது உண்மையான அதிகாரப்படுத்தலுக்கு இட்டுச்செல்லாது என்றேன் நான்; ’நாணம்,அச்சம்,மடம்,பயிர்ப்பு எனப் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட இயல்புகள் எல்லாமே  பெண்ணின் தனித்த இயக்கத்தையும் தன்னிச்சையான முடிவுகளையும் கட்டுப்படுத்தும் உள்நோக்குடன் புனையப்பட்டவையே என்றும் ’’நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’’என பாரதி முழங்கியது அது பற்றியே என்றும் சான்றுகளுடன் நான் விளக்கியதை அரங்கிலுள்ளோர் அமைதியான ஒப்புதலுடன் கேட்டுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.

என் உரைக்குப்பிறகு மாணவியர் பங்கு கொள்ளும் பேச்சரங்கம் ஒன்று நிகழ்ந்தது.

பெண்ணின் தலைமைப்பண்புகள் சிறப்பாக வெளிப்படும் இடம் இல்லமா,பணியிடமா என்ற தலைப்பில் மாணவிகள் இரு அணியாகப்பிரிந்து வாதிட்டனர்.முதிர்ச்சியான உரைகளாக அவை இல்லையென்றபோதும் வழக்கமான பட்டிமன்றக்கொச்சையாக இல்லாமல் அனுபவத் தோய்வுடன் கூடிய சுருக்கத்தோடு அவர்களது உரைகள் அமைந்திருந்தன. வீடு வெளி இந்த இரண்டும்  தலைமைப்பண்புகளின் பயிலிடங்களே,இரண்டு இடங்களில் பெறும் பயிற்சிகளும் ஒன்றுக்கு மற்றொன்று உதவக்கூடியவையே, வீட்டில் உறவினரின் பலவகைத் தேவைகளை சமாளிக்கும்  பயிற்சி பணியிடத்திலும்,பணியிடத்தில் சிக்கல்களைக்கையாண்டு ,கீழுள்ளோரை நிர்வகித்து,நிகழ்ச்சிகளை நடத்துவதில் கிடைக்கும் பயிற்சி இல்ல நிர்வாகத்திலும் உதவுகிறது என்றும் என் இறுதி உரையை நிறைவு செய்தேன்.

இரு அணிகளிலும் சிறப்பாகப்பேசிய மாணவியருக்குப்பதக்கம் அணிவித்தது  மகிழ்வான பணி.

மொத்தத்தில் அது ஒரு நிறைவான மகளிர் நாள்..
கல்லூரி மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் என்னை உலவ விட்டு  என் பணிக்காலத்தை நினைத்துப்பார்க்கச் செய்த மகிழ்ச்சியான நாள்.


2 கருத்துகள் :

முனைவர் அ.கோவிந்தராஜூ சொன்னது…

அம்மையீர்,
நல்ல சிந்தனை விதைகளை இளம்பெண்களின் உள்ளங்களில் விதைத்துள்ளீர்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க நன்றி நண்பரே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....