துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.12.14

யாதுமாகி- அணிந்துரை



[யாதுமாகி நாவலுக்கு எழுத்தாளர் காவேரி அவர்கள் எழுதிய அணிந்துரையின் சில பகுதிகள்]
’’முன்னோக்கி ஓடும் கங்கை’’-

எழுத்தாளர்,
புது தில்லி


‘யாதுமாகி’நாவலின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அதன் அமைப்பு.  நேர்கோட்டு எழுத்தைத் தவிர்த்து முன்னும் பின்னுமாய்ச் செல்வதால் கடந்த கால சம்பவங்களைப் புதிய அநுபவ முதிர்ச்சியுடன் பின்பார்வையிட அது உதவுகிறது. 

தேவியின் மகள் சாருவின் மூலம் தற்கூற்றாக சொல்லப்படும் இந்த நாவலில், தாய் பற்றி எழுதும்போது இயற்கையாக வரும் நெருக்கம் ,அதே வேளையில் அவரது வாழ்க்கையை சற்று விலகி நின்றும் பார்வையிடும் திறம் இவை இரண்டும் சேர்ந்து நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன.இதனாலும் தேவியின் உருவ அமைப்பு இன்னும் கூர்மையாகிறது.


'தேவி' என்ற தனித்துவம் கொண்ட பெண் தனக்கான பாதையைத் தானே வகுத்துக்கொண்டு, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார்.அவரது வாழ்வை வரலாறு போல அளிக்கிறார் அவர் மகள் சாரு. ஆசிரியர் எம்.ஏ.சுசீலாவின் 'யாதுமாகி' நாவலில் இது தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது.

ஆங்கில மஹாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரைப்பொறுத்தவரை ’நம் விதியை நிர்ணயிப்பது நம் ஆளுமையே ’ - character is destiny . தற்கால உளவியல் அறிஞர்களும் நம் வாழ்வை சீராக அமைத்துக்கொள்ள நம‌க்கு self-actualization [சுய உருவாக்கம் ] என்னும் ஆரோக்கியமான திறமை மிகவும் தேவைப்படுகிறதென்ற ஆலோசனையை வழங்குகிறார்கள்.இவர்கள் குறிப்பிடும் self-actualization தேவிக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது.வாழ்க்கை என்பது நம் தலைவிதியின்படி அதிருஷ்ட/துரதிருஷ்ட திசைகளில் இட்டுச் செல்லும் என்ற சோம்பேறித்தனமான கருத்தை முற்றிலும் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையும்,துணிவும்,முற்போக்கான மனப்பான்மையும்,ஆளுமையும் கொண்டு செயல்படும் தேவிக்கு வாழ்க்கை பல வாயில்களைத் திறந்து கொடுக்கிறது.தனது ஆழமான இலட்சியங்களைத் தன் கொள்கைகளின்ப‌டி நிறைவேற்றிக்கொள்ள தன்னைச் சுற்றி இயங்கி வரும் அநீதிகள்,அசிங்கங்க நடவடிக்கைகள்,கொடூரங்களைக் கடந்து சகதி படிந்த தடாகத்தில் தூய்மையுடன் மலரும் வெண்தாமரை போல அவள் துலங்குகிறாள்.


நாவலின் மையம் தேவி.நாவலின் முதுகுத் தண்டும் தேவி.நாவலின் பொருள்பரப்பும் தேவியே.கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி மேலே சுழலும் மீன் மீது மட்டுமே கண்களைப் புதைத்த அர்ச்சுனன் போலக் கல்வியே குறியாக தேவி செயல்படுவது நம்மை சிலிர்க்க வைக்கிறது.

பெண்களுக்குக் கல்வி தேவையில்லை என்ற பிற்போக்கான மனப்பான்மையில் தொய்ந்து கிடந்த இருண்ட சகாப்தம் அது.கூடவே பெண்களுக்குக் கல்வி புகட்டினால் அதன் விளைவாக அவர்கள் விதவைகளாகக்கூடும் என்ற பயமும்,மன வக்கிரமும் தமிழ்நாட்டிலும்,வங்காள மாநிலத்திலும் பரவலாக வேரூன்றியிருந்தது.
குடும்பப் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பது தேவையற்றது என்று கருதும் அதே வேளையில் அவளுடைய வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வஞ்சக உறவினர்கள் தயங்கியதில்லை....ஆனால் தேவி புத்தகப்படிப்பில் மட்டும் புத்திசாலியில்லை; இயல்பான உலகியல் ஞானம், அதனால் விளைந்த முன்னெச்சரிக்கை உணர்வு - இவை எல்லாவற்றையும் விட முக்கியமான மனோதிடம் ஆகியவை தன் காலில் நின்றாக வேணாடும் என எண்ணும் அவரது சுதந்திர மனப்பான்மைக்கு வலுவூட்டுகின்றன.


தேவியிடம் பூமியின் மேல்பரப்பில் பாதங்கள் நன்றாகப் பதிந்திருக்கும் ஒரு முதிர்ச்சியைக் காண்கிறோம்.கல்வி மட்டும் போதாது என்ற விவேகம் அவரை ஒரு நிலையான நல்ல வேலையைத் தேடத் தூண்டுகிறது. அதற்கு வேண்டிய அயராத உழைப்பையும் அவரிடம் காண்கிறோம்.அதெல்லாம் தன் வாழ்க்கைக்கு எத்தனை தேவை என்பதை 
‘’நான் வாழ்க்கை பூரா என்னோட அண்ணா தம்பிகளோட இருந்துண்டு சமையல்கட்டே கதின்னு காலம் முழுக்க மாவரைச்சுண்டு இருந்திருப்பேன்…’’என்று ஒரே ஒரு வாக்கியத்தில் நறுக்கென்று சொல்லி முடிக்கிறார்.

தனது உயர்ந்த இலட்சியங்களை செயலாக்குவதற்கு வேண்டிய ஒழுங்கு,தெளிவான சிந்தனைகள் மற்றும் மனோதிடம் எல்லாமே தேவியிடம் தாராளமாக வாய்த்திருக்கின்றன.அவளுக்கு நேர்ந்த வாழ்க்கைப்போராட்டங்களில் பாதிப்பங்கு இன்னொரு பெண்ணுக்கு நேர்ந்திருந்தாலும் கூட அவள் நொறுங்கி மடிந்து போயிருப்பாள்.

கதையில் வரும் பாத்திரங்களைப் பொறுத்தவரை நம் மனத்தில் நிலைத்து நிற்பவர்களில் ஒருவர் இளம் விதவைப்பெண்களுக்கு ஒரு புகலிடமாக ஐஸ் ஹவுஸ் விடுதியைத் திறம்பட நடத்தி வந்த சுப்புலட்சுமி அக்கா.தேசம் பாராட்டிய பெண் திலகம்;விதவைப்பெண்களுக்கு ‘சாவித்திரி பாடம்’கற்பிக்கத் துணிந்த அபூர்வப்பிறவி. 

தன்னை முற்றிலும் ஐஸ் ஹவுஸ் விடுதிக்காகவே சமர்ப்பணம் செய்து கொண்ட இன்னுமொரு அபூர்வப் பெண்மணி சுப்புலட்சுமி அக்காவின் சித்தி வாலாம்பாள்.இளம் வயதில் விதவையாகி மற்ற இளம் விதவைகளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும்  மறுமலர்ச்சியும் தர முன்னிற்பவள்.சுவாரசியமான பேச்சும் நகைச்சுவை உணர்வும் கொண்ட அருமையான ஒரு பாத்திரம் தேவியின் தோழி சில்வியா

மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒருவர் நள்ளிரவில் திடீரென்று கதவைத் தட்டிப் பசியுடன் அடைகளை விழுங்கும் கிட்டு என்ற கிருஷ்ணன்.தேவியை மறுமணம் செய்து கொள்ள ஊக்குவித்த நற்சிந்தனையுடைய உண்மையான நண்பர்.இந்தக்கதாபாத்திரங்கள் அனைவரும் நாவலை வளமாக்குபவர்கள்.

ஆசிரியர் சுசீலாவின் மொழி ஆளுமை மிகச்சிறப்பானது.அந்தணக் குடும்பச்சூழல்,அதற்கென்றே தனிப்பட இருக்கும் நிஷ்டூரம் கலந்த வாய்த் துடுக்குகள், எடக்கான அதிகப்பிரசங்கித்தனமான பேச்சுக்கள் ஆகியவற்றை இவரது மொழி அநாயாசமாகச்சித்தரிக்கிறது.அதே போல மற்ற சாதிகளுக்கு ஏற்றபடியும் ஆசிரியர் மொழியை லாவகமாக மாற்றிக்கொள்வது நாவலுக்கு யதார்த்தமான ஒரு தன்மையைத் தருகிறது.


தோட்டம்,செடிகள்,மலர்கள் ஆகியவற்றின் வருணனையில் ஆசிரியரின் அபார அழகுணர்வு மிளிர்வதைக்காண்கிறோம். தேவிக்குள் புதைந்திருக்கும் இலட்சியங்கள்,உயர்ந்த மதிப்பீடுகள் ஆகிய எல்லவற்றையுமே அவர் சொந்தக்குழந்தைகளைப்போல சிரத்தையுடன் பராமரிக்கும் பூந்தோட்டத்திலும் பார்க்கலாம்.அதை ரசிக்கும் பெண் சாருவின் உரைநடை மணம் பரப்புகிறது.தேவி தன் வீட்டைச் சுற்றி அமைத்துக் கொண்ட தழைந்த தோட்டத்தில் சங்குபுஷ்பம்,நந்தியாவரட்டை,செம்பருத்தி,பவழமல்லி,பிறகு அவருக்கு ரொம்பவும் பிடித்தமான ‍இருட்டில் மயக்கமூட்டும் ரகசியம் போல மடலவிழ்க்கும் நைட்க்வீன் எல்லாமே பூத்துக் குலுங்கும்.
நாவலின் இறுதியில் தேவி உயிர் துறந்த வேளையிலும் ''ஒரு பூ உதிர்வதைப்போல அம்மா உதிர்ந்து போனாள்'' என்று சாருவுக்கு ஒரு மலர்தான் நினைவுக்கு வருகிறது.

வாசகர்களான நமக்கு நிர்மலமாக சலசலத்து ஓடும் நதியை நினைவூட்டுகிறாள் தேவி. சில தருணங்களில் இளம்பெண் தேவியின் குன்றாத உற்சாகத்தையும் கல்வித் தாகத்தையும் கவனித்த அவளது அம்மா பிரமித்துப் போகிறாள்.தன் சகோதரன் தேவியின் மாமா சகுனி போல தேவியின் கல்விக்குத் தடை விதித்தாலும் தேவி வேறு சில உபாயங்களைத் தானே தேடிக்கொள்ளும்போது ''கட்டற்று ஓடிக்கொண்டிருக்கும் காவேரி அந்தச் சின்ன வாய்க்கால்களிலும் கூட வெள்ளமாய்ப் பாய்ந்து போய்க்கொண்டிருக்''கும் காட்சி சட்டென்று அன்னத்திற்கு முன்வருகிறது.பிறகு ரிஷிகேசத்தில் சாரு நாவலின் கடைசி வாக்கியத்தை எழுதி முடிக்கும்போது தேவி போன்ற ஒரு ஒப்பற்ற பெண் கங்கையாகிறாள்.
'' திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறாள் கங்கை …..''

நாவலைப்பெற
யாதுமாகி- வம்சி பதிப்பகம்
vamsibooks@yahoo.com
32, Vettavalam Road,
ALC Teacher Training Institute (opp)
Tiruvannamalai,
Tamilnadu - 606601
Phone : 04175 251468



கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....