துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.12.14

யாதுமாகி- மேலும் சில பதிவுகள்

 பாவண்ணன்
மரிக்கொழுந்துகளையும் மலர்களையும் மாற்றி மாற்றி வைத்துக் கட்டிவைத்த பூமாலைபோல, செறிவான மைய அனுபவங்களை முன்னும் பின்னுமாக இணைத்திருப்பதால் இறந்த காலமும் நிகழ்காலமும் தனித்தனி அத்தியாயங்களாக இணைந்துகொள்கின்றன. கல்வியும் விவேகமும் ஒருவருடைய வாழ்க்கையின் தரத்தையும் தகுதியையும் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மாற்றி வைத்துவிடும் தன்மை கொண்டவை. சிக்கலான சூழல்களில், அவற்றை அவர் அடைந்த விதத்தில் பெருங்கதை விரிகிறது.யாதுமாகிநின்றாய் காளிஎன்பது பாரதியின்வரி. காளி ஆளுமையாக நிற்பதற்குக் காரணம், அவள் யாதுமாக நிற்பதுதான்.

தேவி என்னும் சிறுமி ஓர் ஆளுமையாக உருவாகி நிலைகொள்ளும் விதத்தை படிப்பவர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும் விதமாக தீட்டியுள்ள கோட்டுச் சித்திரத்தை என்னால் முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. வழக்கமாக இத்தகு ஆளுமைகளை நிஜ வாழ்வில் காணும்போது மிகவும் நெகிழ்ந்து, தெய்வத்தைப் பார்க்கும் பக்தனைப்போல கெளரவமாக தள்ளியிருந்து பார்த்துவிட்டுச் செல்வேன். எனக்குத் தெரிந்த பலரிடமும் அந்த ஆளுமையைப் பற்றிப் பகிர்ந்துகொள்வேன். ‘யாதுமாகி’ விவரிக்கும் அன்னை ஆளுமையை எழுத்தின் வழியாக என்னால் முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.
 பாவண்ணன்
ஜெயமோகன்
ஜெயகாந்தனின் யுகசந்தியை இக்கதை நினைவூட்டுகிறது. அக்கதையின் மிக முக்கியமான படைப்பம்சம் ஜெயகாந்தன் அதற்குச்சூட்டிய தலைப்பு. யுகசந்திப்புப் புள்ளியின் பிரச்சினைகள் அவை என அவர் கண்டடைந்த தரிசனம் முக்கியமானது. ஒரு காலகட்டம் சென்று மறைய இன்னொன்று உருவாகி வரும் பொழுது. அதன் இடுக்கில் மாட்டிக்கொண்ட மானுட உயிர்களின் வலியும் தனிமையும். இந்நாவலில் மூன்று தலைமுறைகள் வழியாக காட்டப்படுவது அந்த யுகசந்திதான். அதன் முதல் களப்பலி தேவி. அடுத்து அவள் மகள்.மூன்றாம் தலைமுறை அவ்விரு தலைமுறையின் துயரை உண்டு, அவர்களை மிதித்துத் தாண்டிவிடுகிறது

இந்நாவலில் அவர்களுக்கு நிகழ்பவற்றை ஆணாதிக்கச் சமூகத்தின் கொடுமைகள் என்றோ ஆண்திமிரின் விளைவுகள் என்றோ சொல்லிவிடலாம். ஆனால் அவை சென்றயுகத்தின் எடை என்ற புரிதலே மேலும் வலுவான சித்திரத்தை அளிப்பது. 

அந்த எடையை இப்பெண்கள் எதிர்கொள்ளும் விதம் மகத்தானது. கரும்பாறையை மெல்ல மெல்ல தளிரும் வேரும் கொண்டு பிளந்து உடைக்கும் செடிபோல. நட்பு வேராகவும் கல்வி இலைகளாகவும் இருக்கிறதெனப்படுகிறது. 

ஆஷாபூர்ணாதேவியின் மூன்று தொடர்நாவல்கள் இந்திய இலக்கியத்தில் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றன. பிரதமபிரதிசுருதி, சுபர்ணலதா பகுள் கி ககானி. அவை இதேபோல நூற்றாண்டின் எடையை தாங்கி மீண்ட மூன்றுதலைமுறைப்பெண்களின் கதைகளைச் சொல்கின்றன. இந்நாவல் இன்னும் விரிந்திருக்கலாம். இன்னும் ஆழ்ந்தும் சென்றிருக்கலாம். ஆனால் இந்த நேர்மை மிதத்தன்மை காரணமாகவே நாம் வாசித்துள்ள பிறநாவல்களுடன் இணைந்து விரியும் தன்மை கொண்டிருக்கிறது.
ஜெயமோகன்


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....