துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.7.11

கார்த்திகேசு சிவத்தம்பி

பேராசிரியர்,முனைவர் திரு கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஈழத் தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தக்க ஓர் இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
கலாநிதி கைலாசபதிஅவர்களும்,சிவத்தம்பி அவர்களும் முன் வைத்த விமரிசன, திறனாய்வு அணுகுமுறைகளை மார்க்ஸியப் பார்வையுடன் இணைந்தவை என்று மட்டும் வகைப்படுத்தி விட முடியாது. 
தமிழ்த் திறனாய்வுத் தளத்தில் மிகப் புதிதான மாற்றங்களும் , வேறுபட்ட நோக்குநிலைகளும் ஏற்படவும்,தமிழாய்வுகளுக்குப் புது இரத்தம் செலுத்தவும்
தோன்றாத் துணையாக அமைந்து,தமிழில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முயற்சிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னகர்ந்து செல்ல அவை அடித்தளம் அமைத்துக் கொடுத்தன என்பது,மறுக்க இயலாத உண்மை.

பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி,நவீன இலக்கியம் வரை திரு சிவத்தம்பி கொண்டிருந்த புலமைக்கு அவரது நூல்கள் என்றென்றும் அழியாத ஆவணங்கள்....

’தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் அவரது திறனாய்வு நூல் , எனது பேராசிரியப் பணிக் காலத்தில் ஒரு வேதப்புத்தகம் போலவே எனக்குப் பயன்பட்டிருக்கிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றை- முற்றிலும் வேறானதொரு கண்ணோட்டத்தில் அணுகிய அவரது 
‘தமிழில் இலக்கிய வரலாறு’
மற்றும்
‘நாவலும் வாழ்க்கையும்’
‘இலக்கியமும் கருத்து நிலையும்’
’தமிழ் இலக்கியத்தில் மதமும் மானிடமும்’
‘இலக்கியத்தில் முற்போக்குவாதம்’
’நவீனத்துவம் பின் நவீனத்துவம
’தற்காலத் தமிழ் இலக்கியத்தில் வறுமையும் சாதியமும்’
ஆகிய அவரது பல ஆய்வுப்படைப்புக்கள் ,காலத்தால் அழிக்க முடியாத அவரது புலமைக்கும்,ஆராய்ச்சித் திறனுக்கும் என்றென்றும் கட்டியம் கூறியபடி தமிழ் இலக்கிய உலகில் அவரது பெயரை என்றும் நிலைபெறச் செய்து கொண்டிருக்கும்.

திரு சிவத்தம்பி அவர்களின் நினைவாக என் எளிய அஞ்சலி!


1 கருத்து :

அப்பாதுரை சொன்னது…

மரணத்தில் தான் சிலரைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். உங்களுடன் நானும் அஞ்சலியில் கலந்து கொள்கிறேன். 'தமிழில் சிறுகதையின் தோற்றம்..' படிக்க வேண்டும் போலிருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....