துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.2.09

சிறகுலகில் சிறிது நேரம்....பரத்பூர்

























''கானப்பறவை கலகலெனும் ஓசை'' யைப் பாரதியின் பாட்டில் ரசித்ததுண்டு. 'புள் சிலம்பு'வதை....'கீசுகீசென்று ஆனைச்சாத்தான் கலந்து பேசிய பேச்சரவத்தை'ஆண்டாளின் அழகுதமிழில் படித்துச்சொக்கியதுண்டு. ஆனால் நடைமுறை வாழ்வில் இது வரை அதற்காக நேரம் ஒதுக்க வாய்ப்பு கூடி வராமலே காலம் கடந்துபோய்க்கொண்டிருந்தது.'' நிலாப்பார்க்க என்றே நிலாப்பார்த்து வெகு காலமாயிற்று'' என்று வண்ணதாசன்(கல்யாண்ஜி) 'நிலாப்பார்த்தல்' கவிதைத்தொகுப்பில் குறிப்பிடுவது போல பறவைகளுக்காகவே பறவைகளைப்பார்ப்பது இது வரைநிகழவே இல்லை. ஏதோ தற்செயலாக அவற்றை எதிர்ப்படுவதோடு சரி;பதட்டமற்ற மனநிலை கைகூடிய நேரமாக இருந்தால் 'ஹலோ' சொல்வது போல ஒரு செல்லப்பார்வை, அதன் குரலொலி கேட்டு ஒரு மென்னகை...அவ்வளவுதான். வேலை அவசரமும்...விரையும் நடையுமாக இருக்கும்போது அந்த நொடியும் கூடத்தவறிப்போய்விடும். நாடகத்தில் ..காவியத்தில் நிழல் உருவங்களாக அவற்றை தரிசிப்பதோடு, ரசனை உணர்வில் திளைப்பதொடு சரி. நிழல், நிஜமாகிற வாய்ப்பு...., கூட்டம் கூட்டமாய்ப்பல ரகப்பறவைகளையும்,பன்னாட்டுப்பறவைகளையும் நேரில்..கண்டு ஒரு நாளாவது அவற்றோடு மட்டுமே நேரத்தைச்செலவிடும் அரிதான வாய்ப்பு, உலகின் மிகப்பெரிய 'பறவைப்புகலிடங்களில்' ஒன்றாகக்கருதப்படும் பரத்பூர் சென்றபோது அண்மையில் (9,10 ஜன.09) கிட்டியது. வாழ்க்கையில் மிக அபூர்வமாகவே வாய்க்கும் அருமையான ஒரு தருணத்தைத்தவற விட்டு விடாமல் தக்கவைத்துக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அங்கு சென்ற பின்னரே பூரணமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

உ.பி.,ராஜஸ்தான் எல்லையில், தில்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில்,மதுராவிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில்,ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்தான் பரத்பூர்.மதுராவிலிருந்து 35கி.மீ.தொலைவிலும்(தில்லியிலிருந்து 185 கி.மீ.),இந்தியாவின் உலக அதிசயமான தாஜ் மகாலிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இந்தச்சிறிய நகரத்திலேதான் உலகெங்குமுள்ள பறவை ஆர்வலர்களைக்கவர்ந்து தன் வயப்படுத்தும் ''பரத்பூர் பறவைகள் சரணாலயம்''அமைந்திருக்கிறது.ஆண்டு தவறாமல் ஏதோ ஒரு வேண்டுதலைப்போல'ஆராக்காதலுடன் அவர்கள் தேடி வருவது 'பறவைகளின் சொர்க்க'மான இந்த இடத்தை நோக்கித்தான்.
இப்பறவைகள் சரணாலயம், ''கியோலதெவோ தேசீயப்பூங்கா'(Keoladeo NationalPark) என்ற பெயரிலும், '' கானா (Ghana)பறவைப்புகலிடம்'' என்ற பெயரிலும்கூட வழங்கப்பட்டு வருகிறது.சரணாலய வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானின் பெயரே 'கியோலதெவொ'என்ற பெயருக்குக்காரணமாகச்சொல்லப்படுகிறது. ''கானா'' என்னும் சொல் அடர்த்தியைக்குறிப்பது. அடர் காடுகளும்,தாழ்வான நீர்ப்பரப்புக்கொண்ட சதுப்பு நிலப்பகுதிகளும் நிறைந்துள்ள இப்பகுதியைத்தான், தாங்கள்,காதல்செய்து கூடிக்களிப்பதற்கு ஏற்றதொரு இடமாகப்பறவையினங்கள் தேர்ந்துகொண்டிருக்கின்றன.

உலகின் தலைசிறந்த பறவைச்சரணாலயங்களில் ஒன்றாகப்புகழ் பெற்று விளங்கும் பரத்பூர் சரணாலயம், 29 சதுர கி.மீ.சுற்றளவில் பரந்து,விரிந்து கிடக்கிறது.சாஸ்வதமாகத்தண்ணீர் தேங்கியே கிடக்கும்(1 கி.மீ.,தூரத்திலுள்ள அஜான் அணையிலிருந்து வரும் தண்ணீர்,காப்பகத்தில் வற்றாமல் நீர் நிறைந்திருப்பதற்கும்,அங்குள்ள ஏரியை வற்றிப்போகாமல் பார்த்துக்கொள்வதற்கும் துணை செய்கிறது) சகதி மண்டிய சதுப்பு நிலக்காடுகளும்,புல்வெளிகளும்,அடர்ந்த புதர்களும் -பறவைகள் இனிய சூழலில் காதல் புரிய,இயற்கை நல்கிய இனிய கொடையாக அங்கே அமைந்திருக்கின்றன...அதனால்தான், ''அற்ற குளத்து அறு நீர்ப்பறவைகள்,'' உலகின் எந்தெந்த மூலைகளில் இருந்தெல்லாமோ குறிப்பிட்ட இந்த இடத்தை நாடி ஓடோடி(பறந்து) வந்துகொண்டிருக்கின்றன. குளிர் காலம் அண்மிக்கும் நேரமே,இங்கே பறவைகளின் கூத்தாட்டு தொடங்கும் நேரம்.வட கோளங்களிலிருந்தும், துருவப்பகுதிகளிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இங்கே கூட்டம் கூட்டமாய்ப்பறவைகளின் அணிவகுப்பு நிகழும் இனிய தருணம் அது.தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாய்க்கிடக்கும் தங்கள் இருப்பிடங்களிலிருந்து அவை, இடம்பெயர்ந்து வருவது அப்பொழுதுதான்.மேலை, கீழை நாட்டுப்பறவைகளோடு இந்தியப்பறவைகளும் சங்கமிக்கும் காட்சி...,. சர்வதேச எல்லைக்கோடுகளெல்லாம் அற்ப மானிட ஜாதிக்கு மட்டுமெ உரியதென்பதை நிரூபணம் செய்யும் அற்புதக்காட்சி.

இன்று, பறவைகளைப்பாசத்துடன் அரவணைத்துப்பாதுகாக்கும் இந்த பூமி, சிறிது காலத்திற்கு முன்பு வரை- அவைகளை இரக்கமில்லாமல் சுட்டு வீழ்த்தும் அரக்க பூமியாக-குறி தவறாத தங்கள்வேட்டைத்திறனை வெளிக்காட்டிக்கொள்ளவென்றே அவற்றின் குருதியைப்பெருக்கெடுத்தோட வைக்கும் அசுர பூமியாக விளங்கியிருக்கிறது என்பது மறைக்க முடியாத ஒரு வரலாற்றுண்மை.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே இப்பூமி',வேட்டைய ராஜா'க்களுக்கு விருந்து படைக்கும் ஒரு களமாக விளங்கி வந்திருக்கிறது.பல சுதேச சமஸ்தான சிற்றரசர்களும்,இளவரசர்களும் தங்கள் வீர, தீர பராக்கிரமங்களை நிரூபிப்பதற்காக, ஆயிரக்கணக்கில் வாயில்லாப்பறவைகளையும்,விலங்குகளையும் கொன்று குவித்து, இங்கே இரத்த ஆறு கரைபுரண்டோடுமாறு செய்தனர்.
பிரிட்டிஷாரின் வருகைக்குப்பிறகும் வேட்டைக்களமாகவே தொடர்ந்த இப்பகுதியில், வேட்டையாடி உல்லாசமாகப்பொழுது போக்குவதற்கென்றே உயர் பதவியிலிருந்த வைஸ்ராய்களும்,கவர்னர்களும்,அவர்களை அண்டிப்பிழைத்த இந்திய சமஸ்தான அரசர்கள் பலரும் இப்பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தனர்..
முக்கியமான ஒவ்வொரு நபரின் வருகையின்போதும் எத்தனை பறவைகள் வீழ்த்தப்பட்டன என்பது பதிவாகியுள்ள ஒரு நினைவுத்தூண், இன்னும் கூடக் காலத்தின் கறை படிந்த ஒரு ஆவணச்சாட்சியாக அந்தக்காப்பகத்தில் நின்றுகொண்டு இருக்கிறது.

டிச.-1902இல்-பிரிட்டிஷார் காலத்தில்- இங்குள்ள பறவைகளை முதன் முதலாக அதிகாரபூர்வமாகச்சுட்டு வீழ்த்தி இச்செயலுக்கு அடித்தளம் இட்ட 'புண்ணியத்தை'க்கட்டிக்கொண்டவர், லார்ட் கர்ஸன்.அதைத்தொடர்ந்து இந்திய நாட்டின் வேட்டை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வேட்டையாடும் களமாக இந்த இடம் உருப்பெறத்தொடங்கியது; வேட்டை ஆர்வலர்கள், இதை நாடி வருவதும் அதிகரித்தது. நவ.1938இல், அப்போதைய வைஸ்ராயாகிய லார்ட் லின்லித்கோவின் விஜயத்தின்போது மட்டும்-அந்த ஒரே நாளில் சுடப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை, 4273 என்றும், அது ஒரு உலக சாதனை என்றும் (சோகத்தோடு?)பறை சாற்றுகிறது, அங்குள்ள ஆவணம். நினைவுத்தூணிலுள்ள புள்ளிவிவரங்களைப்பார்க்கப்பார்க்க நம்மனம் பதைக்கிறது.
'புல் மேய்ந்து பால் சுரக்கும் பசுவோடு வந்த பகைமை என்ன' எனக்கேள்வி தொடுத்த ஆபுத்திரனைப்போல, நம் உள்ளமும் 'புள்ளின் மீது வந்த பகைமை என்ன?' என்று கேட்கத்துடிக்கிறது. பாண்டிச்சேரியில் பெரும்புயல் அடித்துக்கொண்டிருந்த நேரத்தில் மனிதர்களெல்லாம் தத்தளித்துத்தடுமாறி ,ஒடுங்க இடம் தேடி, அலைந்துகொண்டிருந்த அந்தத்தருணத்தில்,மகாகவி பாரதி மட்டும் அங்கே புயலில் மடிந்து வீழ்ந்து கொண்டிருந்த புள்ளினங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான் என்பதும் 'காக்கை குருவி எங்கள்ஜாதி' என்று பாடக்கூடிய தகுதி அதனாலேயே அவனுக்கு வாய்த்ததென்றும் அறிந்ததெல்லாம் நினைவில் எழ,மனம் ஒருகணம்கனத்துப்போகிறது. கூண்டுக்குள் பறவை வளர்த்துப்பார்க்க ஆசைகொண்ட லெனின், அந்தப்பறவைகள் போதிய உணவின்றி, அந்தக்கூட்டுக்குள்ளேயே மடிந்து போகும் காட்சி கண்டு மனம் மாறி,கூண்டுப்பறவைகளைக்காசு கொடுத்து வாங்கிப்பிறகு அவற்றைச்சிறை வீடு செய்தாரென்று படித்த வரலாற்றுச்சம்பவம் நெஞ்சுக்குள் முட்டுகிறது.

நமது அறச்சீற்றம் அளவு மீறுவதற்கு முன், 1956 ஆம் ஆண்டு முதல், மாநில அரசு, இதைப்பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவெடுத்தசெய்தி ,கண்ணில் பட கோபம் சற்றே தணிகிறது.1972 ஆம் ஆண்டுமுதல்,வனவிலங்குப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் எல்லா வகையான வேட்டைகளும் முற்றாகத்தடை செய்யப்பட்டு,இந்தப்பகுதி,'தேசீயப்பூங்கா'வாக அறிவிக்கப்பட்டது.உலகின் மிக முக்கியமான சதுப்புநிலப்பகுதியாக- பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதொரு சூழல் இயல்பாகவே அமைந்திருக்கும் அபூர்வமான இடமாக உலக நாடுகள் , இதை இனம் கண்டபிறகு- சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படத்தொடங்கிய 'பரத்பூர்','பாரம்பரியப்பழமை' வாய்ந்த சிறப்பான இடங்களுள் ஒன்றாக(WorldHeritage Centre) 1985 இல்யுனெஸ்கோவின் அங்கீகாரத்தையும் பெற்றது..


பரந்து விரிந்து கிடக்கும் விசாலமான இந்தப் பறவைக்காப்பகத்தைச்சுற்றிப்பார்க்கப்புகை கக்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை;தொலைநோக்குக்கருவியையும், நவீன தொழில்நுட்ப புகைப்படக்கருவிகளையும் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டோ,வாடகை சைக்கிள் ரிக்க்ஷாக்களில் பயணித்தபடியோ,பறவைக்காதலர்களான உள்நாட்டு, வெளிநாட்டுப்பயணிகள்,புள்ளினங்களின் பால் கொண்ட தீராத ஆர்வத்துடன் புதிய பறவைகளின் தரிசனத்திற்காகச்சுற்றிச்சுற்றி வருகிறார்கள். வெறுமே பொழுதைக்கழிப்பதற்காக வரும் கூட்டம் இங்கே சற்றுக் குறைவுதான். உள்ளார்ந்த தாகத்துடன் பறவைகளை இனம் காண்போரும், அவற்றின் வாழ்க்கை முறையை ஆராயும் நோக்கத்துடன் பல நாட்கள் தொடர்ந்து இங்கே மீண்டும், மீண்டும் வந்து பறவையியல் குறித்த தங்கள் அறிவுப்பசிக்குத்தீனி போடுபவர்களையும் மட்டுமே இங்கு மிகுதியாகக்காண.முடிகிறது..

பறவை இனத்தின் தீராக்காதலரும், சர்வதேச அளவில் புகழ் பெற்றவருமான திரு.சலீம் அலியுடன் நெடு நாட்கள் பழகித்தேர்ந்த ஒரு பறவை ஆர்வலர் எங்களுக்குத்துணையாக,வழிகாட்டியாக வந்தார்; பறவைகளை எங்களுக்கு இனம் காட்டி விளக்குவதை விடவும்- -இன்னும் கூட அவற்றைத் தான் பார்த்து ரசிப்பதிலேயே அவர் கொண்டிருந்த ஆர்வம், அந்த நேரத்தில் சற்று எரிச்சலூட்டினாலும் கூட அவர் பார்த்துத்தீராத பறவைகளும் கூட இன்னும் இருக்கின்றன என்றஉண்மையையை அது புரிய வைத்தது;,அந்தத்துறையின் மேல் அவர் கொண்டுள்ள மெய்யான பிடிப்பையும் ,நேசத்தையும் கூட அது உணர்த்தியது.
அங்கிருந்த சிறிய ஏரிக்குள் படகுப்பயணம் செய்து சுற்றிலும் விரவிக்கிடந்த பலவண்ணப்பறவைகளைப்பார்த்துவிட்டுக்கரையேறும் நேரம்;அப்பொழுது எங்களை மிக விரைவாக வருமாறு அழைத்தார் சலீம் அலிக்கு உதவியாக இருந்த அந்த வழிகாட்டி. திடீரென்று அலைகடல் பொங்கி ஆர்ப்பரிப்பதைப்போல ,இடிமுழக்கம் போன்றதொரு பலத்த ஓசை. அது எங்கிருந்து கேட்கிறது என்பதையும்,எதனால் அந்த ஓசை என்பதையும் நாங்கள் அனுமானித்து முடிப்பதற்குள்,ஒரே நேரத்தில் தங்கள் சிறகுகளைப்படபடத்தபடி பலவகைப்பட்ட ஆயிரமாயிரம் பறவைகள்,வானமண்டலத்தையே மறைப்பதைப்போலக்கூட்டம்கூட்டமாக-ஒன்றாகப்பறந்து சென்றன.இரைக்காகத் தங்களைத்துரத்திவரும் பருந்துவகைப்பறவைகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக நிகழ்ந்த வேகப்பாய்ச்சல் அது என்பதையும், அந்த அபூர்வக்காட்சியை நாங்கள் தவற விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே வழிகாட்டி அத்தனை அவசரமாக அழைத்திருக்கிறார் என்பதையும் பிறகுதான் எங்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது. வாழ்வில் மிக அரிதாகவே கிடைக்கக்கூடியதும்-என்றென்றும் நெஞ்சை விட்டு நீங்காததுமான அற்புதமான காவியக்காட்சி அது.

''தாய் இரை தின்றபின்பு,
தன் குஞ்சைக்கூட்டிற்கண்டு
வாயினைத்திறக்கும்;குஞ்சு தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கைத்
தாய் அருந்தியதைக்கக்கித்தன் குஞ்சின் குடல்நிரப்பும்
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்
அன்புக்கோர் எடுத்துக்காட்டாம்''என்று பாரதிதாசனின்'அழகின் சிரிப்பி'ல் என்றோ படித்து வியந்த காட்சி -தாய் தன் உணவைக்கக்கிக்குஞ்சுக்கு ஊட்டும் அரிதான காட்சி ஒன்றும் அங்கே உலா வரும் வேளையில் கண்களில் பட்டு இதயத்தை நெகிழ்த்தியது

ஒரு நாளைக்குப் பலபேர் வருகை புரியும் இடமாக அது இருந்த போதும் ,புள்ளினங்களின் கூச்சலைத்தவிர வேறு ஆரவாரமற்ற அமைதியான பூமியாகவே இருக்கிறது அந்த இடம். அது, பறவைகளின் இடம் என்பதையும், தாங்கள் பார்வையாளர்கள் மட்டுமே என்பதையும் புரிந்து வைத்திருக்கும் மனிதர்கள்,பறவைகளின் அந்தரங்கத்துக்கு ஊறு விளைவிக்காமல் தள்ளியிருந்து பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் நயத்தக்க நாகரிகம்,விரைவாகச்செல்லும் தன் தேரின் மணிஓசையால் புதரில் பதுங்கிக்கிடந்து காதல் செய்யும்பறவைகளின் மோனத்தவம் குலைந்து விடக்கூடாதென்பதற்காகவே மணியின் நாக்கை இழுத்துக்கட்டிவிட்டுப்பின் தனது தேர்ப்பயணத்தைத்தொடர்ந்த சங்க வரிகளை(''தாதுண்பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் வினைத்தேரன்'')நினைவுக்குக்கொண்டு வருகிறது.

இந்தியாவிற்குள்ளிருந்தும், எங்கோ பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள தொலை தூர நாடுகளிலிருந்தும் ஒவ்வொருஆண்டும் தடம் பிசகாமல்- வழி மாறாமல் வந்து செல்லும் பறவைகளின்
மதிநுட்பம் மலைப்பூட்டுகிறது. பனி உறைந்துபோயிருக்கும் சைபீரியாவிலிருந்தும் கூட கொக்குகளும் நாரைகளும் இங்கே -குறிப்பிட்ட இந்தப்பருவத்தில்(அக்.இறுதி முதல், மார்ச் இறுதி வரை)வருவதுண்டு; இப்போது அவற்றின் வருகை சற்றே குறைந்திருப்பதாகச்சொல்லப்பட்டதைக்கேட்கும்போது, இலேசான வருத்தம் தலையெடுக்கிறது.பலவண்ண நாரைகள்,கொக்குகள்,வாத்துக்கள்,இன்னும் கணக்கிலடங்காத பலரகப்பறவைகள்........அவற்றின் பெயர் இன்னதென சுட்டிக்காட்டி மகிழும் பறவை ஆர்வலர்கள்.(Bird watchers)....என்று தனி ஒரு உலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்தப்பறவை சாம்ராஜ்ஜியத்திற்குள் செல்வதற்கு அங்குள்ள பறவைகளின் பெயர்கள், கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமோ, அவற்றின் வாழ்முறை பற்றிய ஞானமோ கூட அவசியமில்லை.கண்ணையும், செவியையும் ,மனதையும் சற்றே விரியத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால்......என்றும் மறக்க இயலாத அதிசய, அபூர்வக்காட்சிகள் அற்புத தரிசனங்களாக நமக்குச்சித்திக்கும்.

பறவைகளுக்குப்பிரியாவிடை கொடுத்தபடி அங்கிருந்து கிளம்பி,மிக அருகிலுள்ள அக்பரின் பதேபூர் சிக்ரியைச்சுற்றிப்பார்த்துவிட்டு, ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கு நேர்பின்னால் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்,இரவு தங்கியபோது-அன்றைய முழுநிலவின் ஒளியில் மேகம் போர்த்திய தாஜ் மஹால் மங்கலாகப்புலப்பட்டுக்கொண்டிருக்க,அதில் கவனம் நிலைக்காதபடி... மனம் முழுவதையும் பரத்பூர் மட்டுமே நிறைத்திருந்ததது.

The Birds sighted in BARATHPUR;
White breasted kingfisher,Painted stark,Rosy pelicons,Crimson breasted barbets(immature)known as copersmith,Open bill starks,Blacknecked starks,Darters(snake bird),Large egrets(comparatively uncommon),Little egret,Purple Heron,Grey Heron,Darters(snake bird),Large egrets(comparatively uncommon),Little egret,Purple Heron,Grey Heron,PondHeron,Spoonbills,Bar headed Gheese,Stone curlew on the nest,Collared scorps owl,Baya Weaver bird,Golden backed woodpecker
வாசக எதிர்வினைகள்;
வணக்கம்.பறவைகளைப் பற்றிய இடுகை அருமை.படித்தவுடன் பரத்பூர் பறவைகள் சரணாலத்திற்கு நேரிலே சென்றது போன்ற உணர்வினைக்கொடுத்தது.நிழற்படங்கள் அனைத்தும் உயிரோவியங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்தது..முனைவர் சே.கல்பனா. http://www.kalpanase.blogspot.com
உங்கள் எழுத்தை முதல் முறையாகப் படிக்கிறேன். (ஜெயமோகன் அவர்களின் அறிமுகம் வழியாக).
அருமை, அழகான தமிழ்!
வாழ்த்துக்கள்!
வெற்றிமகள்.






















































































































3 கருத்துகள் :

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

அம்மா அவர்களுக்கு வணக்கம் பறவைகளைப் பற்றிய இடுகை அருமை.படித்தவுடன் பரத்பூர் பறவைகள் சரணாலத்திற்கு நேரிலே சென்றது போன்ற உணர்வுனைக் கொடுத்தது.நிழற்படங்கள் அனைத்தும் உயிரோவியங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

Vetirmagal சொன்னது…

உங்கள் எழுத்தை முதல் முறையாகப் படிக்கிறேன். (ஜெயமோகன் அவர்களின் அறிமுகம் வழியாக).

அருமை, அழகான தமிழ்!

வாழ்த்துக்கள்!

கலையரசன் சொன்னது…

பயனுள்ள பதிவு.. நன்றி!!
தொடரட்டும் உங்கள் சேவை..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....