துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.10.09

18நாட்கள்,10நாடுகள்..(5)

நாட்கள்2,3,4-பிரான்ஸ்-பாரீஸ்

ஸ்றீலங்கன் விமானம்-UL563 ,கொழும்பை விட்டுப் பாரீஸுக்குக் கிளம்புகையில் நள்ளிரவு 2.45 மணிக்கு மேல் ஆகியிருந்தது.
சற்று உறங்கினால்தான் மறுநாளைய காட்சிகளை நன்றாக ரசிக்க முடியும் என்பதால் எப்பொழுது உறங்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன் நான்.ஆனால்,விமானத்திற்குள் ஜகஜ்ஜோதியாய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கப் பழரசங்களும்,வேறு பலரக உற்சாக பானங்களும் நிதானமாகப் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.அதற்குப் பிறகு சாவதானமாக இரவு உணவு என்றால் உறங்குவது எப்படி?கொழும்புஓட்டலின் தயிர் சோறு மட்டுமே போதும் என்று முடிவுகட்டிக் கொண்ட நான் ஆரஞ்சுப்பழச் சாற்றை மட்டும் குடித்து விட்டு,அடுத்த உணவு வகைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல்,கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனேன்.
4,5 மணி நேர உறக்கத்துக்குப் பிறகு,நான் கண் விழித்தபோது,என்னைத் தவிர எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதும்,இந்திய நேரத்திலிருந்து பின் தங்கிப் போய்விட்டதால் இன்னும் பொழுது விடியவில்லை என்பதும் எனக்குப் புரிந்தது.
காலையில்கண் விழித்ததும் காப்பியைத் தேடியே பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு நேரக்குழப்பத்தின் காரணமாக,அது தாமதமாகிக் கொண்டே போனது பெரிதும் மனச்சோர்வை அளித்தது.

ஜன்னல் அருகிலுள்ள இருக்கை வேண்டும் என்று குறிப்பாகக் கேட்டுக் கொண்டும் அது கிடைக்காமல் போனதால் ஒரே வரிசையின்மூன்று பிரிவுகளில்,நடுவிலுள்ள இருக்கையில் மாட்டிக்கொண்டிருந்தேன் நான்.
கூட்டம் அதிகமில்லை என்பதால் என் அறைத்தோழி, 3 இருக்கைகளை ஆக்கிரமித்தபடி ஆனந்த சயனத்தில் ஆழ்ந்திருந்தார்.
எனக்குத் தூக்கம் முற்றாகக் கலைந்து விட்டிருந்தது.
வேறு காட்சிகளைப் பார்க்க வழியில்லாததால் உடன் கொண்டு சென்ற புத்தகங்களைப் படித்துப் பொழுதை ஓட்டினேன்.
இருக்கைக்கு மேலே உள்ள காட்சித்திரையில் விமானத்தின் பாதை,அதுகடந்து செல்லும்-(மற்றும் அருகிலுள்ள) நகரங்கள்,கடல்கள்,மகாசமுத்திரங்கள் முதலிய விவரங்கள் வரைபடமாக விரிந்து கொண்டே வந்தது எனக்குச் சுவாரசியமூட்டுவதாக இருந்தது.பன்னாட்டு விமானப் பயணங்களில் வாய்க்கும் இந்த அனுபவம் ,மிகவும் ருசிகரமானது..
கரீபியக் கடல்,கருங்கடல்,மத்தியதரைக் கடல்...ஆகிய பல கடல்களும் , கராச்சி,பாக்தாத்,இஸ்தான்புல்,புடாபெஸ்ட்,ஏதன்ஸ்,பிராங்பர்ட்,வியன்னா,பிரேக் முதலிய நகரங்கள் பலவும் மாறி மாறி வரைபடத்தில் வந்துகொண்டே இருக்க அவற்றின் அருகாமையில்..அண்மையில் சென்று கொண்டிருப்பதான உணர்வு மனச் சிலிர்ப்பூட்டியது.
ரஷிய இலக்கியங்களின் பால் ஈர்ப்புக்கொண்ட எனக்கு,அந்த வரைபடத்தில் மாஸ்கோவும்,பீட்டர்ஸ்பர்க்கும் கூட அந்த வரைபடத்தில் சற்றுத் தொலைவில் சுட்டப்பட்டிருந்தது...ஏதோ நாம் அங்கிருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறோம் என்பது போன்ற பேரானந்தத்தை அளித்தது.

விமானத்துக்குள் வரைபடத்திரை

இந்திய நேரப்படி 11 மணியளவில் ஒரு வழியாக சிற்றுண்டி என்ற பெயரில் ஏதோ ரொட்டியும்,தேநீரும் வந்து சேர்ந்தது. சைவ உணவைக் கேட்டுப்பெறுவதற்குள் பெரும்பாடுதான்.

பிரான்ஸ் நேரப்படி காலை 10.05க்குப்பாரீஸின் சார்லஸ் டிகால் விமான நிலையத்தை வந்தடைந்தோம் நாங்கள்.கோலாலம்பூர்,சிங்கப்பூர் போன்ற நாடுகளின் விமான நிலையங்களில் காணப்படும் அட்டகாசமான தோற்றம் எதுவுமின்றி அமைதியான அழகுடன் -கச்சிதமான நேர்த்தியுடன் சுத்தமாகக் காட்சியளித்தது பாரீஸ் விமான நிலையம்.அநாவசியமான கெடுபிடிகள் ,அலட்டல்கள் அங்கே எதுவுமில்லை;அதே வேளையில் நவீன கருவிகளின் துணையுடன்,பயணிகளுக்கு நேரடியாகத் தெரியாத வகையில் ஒரு புறம் அவர்களின் பொருள்களும்,உடைமைகளும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன.

பாரீஸ் விமான நிலையத்திற்குள்.....

இங்கும் எங்களுக்குச் சற்றுத் தவிர்க்க முடியாத தாமதங்கள்தான்.
பாரீஸிலிருந்துதொடங்கி,ஐரோப்பா முழுவதையும்,சாலைவழியே சென்று பார்ப்பதற்கான ஏற்பாடு ,லண்டனிலுள்ள மற்றொரு சுற்றுலாக் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்ததால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து சாலை நெரிசல்களில் மாட்டிக் கொண்டு லண்டனிலிருந்து வந்து சேர... அந்த ஊர் நேரப்படி பகல்
12 மணிக்கு மேலாகி விட்டது.

மும்பையைச் சேர்ந்தவரும்,தற்போது லண்டனில் இருப்பவருமான ஷெரீன் என்ற பெண்,அந்தப் பேருந்துடன் வந்து பாரீஸின் முதல் இரண்டு நாட்களும் எங்களுக்கு வழிகாட்டி உதவினார்.

பாரீஸுக்குள் கால்வைப்பதற்கு முன்பே மதிய உணவு நேரம் வந்து விட்டதால்,எங்களை அவர் முதலில்கூட்டிச் சென்ற இடம் தமிழர்கள் நடத்தும் ஒரு உணவு விடுதி.
பாரீஸ் ரயில்நிலையத்துக்கு மிக நெருக்கமாக இருந்த அந்தப்பகுதியின் பெயர் ‘லிட்டில் இந்தியா’(சிங்கப்பூர்,மலேசிய நாடுகளிலும் இந்தியர்கள்-குறிப்பாகத் தமிழர்கள் வாழும் பகுதிக்கு இவ்வாறுதான் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது).

உணவு விடுதிக்குச் செல்லும் வழி நெடுகிலும்,ஈழத் தமிழர்கள் நடத்தும் கடைகள் பலவும் இருப்பதால்....கடைப்பெயர் தாங்கிய பலகைகளும் தமிழில் இருப்பதைப் பார்த்துப் பாரீஸின் தமிழ்முழக்கத்தில் மகிழ்ந்து கொண்டே வந்தேன் நான்.
கடைப்பெயர் தாங்கிய பலகைகள் தமிழில்....


அப்போது அங்கிருந்த ஒரு சில கடைகளில், பிரபாகரனின் புகைப்படமும் அதற்குக்கீழே எழுதப்பட்டிருந்த பின் வரும் வாசகமும் கண்ணில் பட ஒரு கணம் அப்படியே உறைந்துபோய் நின்றேன் நான்.

‘’எம் தேசத்தின் ஒளியை யாராலும் அழிக்க முடியாது..
காலத்தின் நேரத்தில் எம் கரிகாலன் தோன்றுவார்’’




கொழும்பில் பார்த்த கொய்யாப்பழக்காரரும் சரி ,பாரீஸிலிருக்கும் பல்பொருள் அங்காடிக்காரரும் சரி....உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் பலரும் இந்த விஷயத்தைப்பொறுத்தவரை பெரும்பாலும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள் என்பது....,குறிப்பிட்ட ஒரு நபரின் ஆளுமை அவர்களிடம் ஏற்படுத்திவிட்டிருந்த நம்பிக்கை எத்தனை அழுத்தமானது என்பதைப் புரிய வைத்தது.(பிற்பாடு நாங்கள் வெனிஸ் நகரத்தில் சந்தித்த ஒரு தமிழ்க் குடும்பத்தினரிடமிருந்தும் கூட-அவர்கள் வெரோனாவிலிருந்து வெனிஸச்சுற்றிப் பார்க்க வந்தவர்கள்- இதே போன்ற எதிர்வினைதான் எங்களுக்குக்கிடைத்தது.)

இலங்கையைத் தாண்டி வெகு தொலைவு வந்து விட்டாலும் கூட இந்தப்பயணத்தின் பல இடங்களிலும்,இலங்கைத் தமிழ் மணம் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேதான் இருந்தது.

இணைப்பு;
18நாட்கள்,10நாடுகள்..(1,2,3,4)

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....